சேர் அண்ணா கிருமிநாசினையை அருந்திவிட்டான் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் அண்ணாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்யுங்கள், என கேட்டபோது உன் அண்ணன் விசம் குடித்து இறந்தால் எனக்கு என்ன? என்ற பதிலை தெரிவித்ததுடன் அங்கிருந்து கேட்கச் சென்ற மாணவனை விரட்டியுள்ளார் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியா கனகராயன்குளத்தில் கடந்த புதன்கிழமை அன்று விசமருந்தி தற்கொலை செய்த மாணவனான தர்மராசா ஜனார்த்தனனின் இறுதி நிகழ்வுகள் அவருடைய கிராமமான அம்பாள்நகர், குறிசுட்டான்குளத்தில் நேற்று (02.06) நடைபெற்றது. இறந்த மாணவனின் சக மாணவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் சிரமாதானம் ஒன்றின்போது இரண்டுமாணவர்களுக்கு ஏற்பட்ட பிணக்கின் காரணமாக உயர்தரம் படித்துவந்த மாணவனை சக மாணவர்கள் முன்னிலையில் அடித்த காரணத்தால் அவமானம் தாங்காது மனமுடைந்த நிலையில் வீட்டிற்குச் சென்ற மாணவன் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டான். எங்கள் சக மாணவனை ஆசிரியர் தண்டித்தவிதமே அவனை அவ்வாறான முடிவை எடுக்க தூண்டியது.
குறிப்பிட்ட ஆசிரியர் ஏற்கனவே ஒரு மாணவனை கன்னத்தில் அறைந்த காரணத்தினால் அவனது செவிப்பறை கிழிந்து காது கேட்காத நிலைமை காணப்படுகிறது. எங்களது பாடசாலை அதிபர் முன்னிலையில் வேறு ஒரு மாணவனுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டபோதும் அதிபர் காத்திரமான நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்ட மாணவர்கள் எங்கள் சக மாணவனின் மரணத்திற்கு காரணமான ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டவேண்டும் என்பதுடன் வேறு எந்த பாடசாலையிலும் பணியாற்ற அனுமதிக்க கூடாது காரணம் அங்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையே காணப்படும் எனத் தெரிவித்தனர்.
எமது மாணவத்தலைவனை தாக்கிய ஆசிரியர் அவனை பழிவாங்கும் நோக்கத்திலேயே தாக்குதலை மேற்கொண்டுள்ளார். என்ன காரணம் என்பதுதான் எங்களுக்க தெரியவில்லை. ஏனென்றால் ஜனார்த்தனன் கிருமிநாசினையை அருந்திய நிலையில் அவனது தம்பி அயலிலுள்ள ஆசிரியரின் வீட்டிற்கு ஓடிச்சென்று சேர் அண்ணா கிருமிநாசினையை அருந்திவிட்டான் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் அண்ணாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்யுங்கள் என கேட்டபோது உன் அண்ணன் விசம் குடித்து இறந்தால் எனக்கு என்ன? என்ற பதிலை தெரிவித்ததுடன் அவனை அங்கிருந்து விரட்டியுள்ளார். ஆகவே இந்த ஆசிரியருக்கு ஜனார்த்தனனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் இருந்துள்ளது என கருத வேண்டியுள்ளது எனத் தெரிவித்தனர்.































































