அண்ணா விஷம் குடித்துவிட்டார் காப்பாற்றுங்கள் என கேட்டபோதும் ஆசிரியர் காப்பாற்ற முன்வரவில்லை!!

சேர் அண்ணா கிருமிநாசினையை அருந்திவிட்டான் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் அண்ணாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்யுங்கள், என கேட்டபோது உன் அண்ணன் விசம் குடித்து இறந்தால் எனக்கு என்ன? என்ற பதிலை தெரிவித்ததுடன் அங்கிருந்து கேட்கச் சென்ற மாணவனை விரட்டியுள்ளார் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா கனகராயன்குளத்தில் கடந்த புதன்கிழமை அன்று விசமருந்தி தற்கொலை செய்த மாணவனான தர்மராசா ஜனார்த்தனனின் இறுதி நிகழ்வுகள் அவருடைய கிராமமான அம்பாள்நகர், குறிசுட்டான்குளத்தில் நேற்று (02.06) நடைபெற்றது. இறந்த மாணவனின் சக மாணவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

வவுனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் சிரமாதானம் ஒன்றின்போது இரண்டுமாணவர்களுக்கு ஏற்பட்ட பிணக்கின் காரணமாக உயர்தரம் படித்துவந்த மாணவனை சக மாணவர்கள் முன்னிலையில் அடித்த காரணத்தால் அவமானம் தாங்காது மனமுடைந்த நிலையில் வீட்டிற்குச் சென்ற மாணவன் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டான். எங்கள் சக மாணவனை ஆசிரியர் தண்டித்தவிதமே அவனை அவ்வாறான முடிவை எடுக்க தூண்டியது.

குறிப்பிட்ட ஆசிரியர் ஏற்கனவே ஒரு மாணவனை கன்னத்தில் அறைந்த காரணத்தினால் அவனது செவிப்பறை கிழிந்து காது கேட்காத நிலைமை காணப்படுகிறது. எங்களது பாடசாலை அதிபர் முன்னிலையில் வேறு ஒரு மாணவனுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டபோதும் அதிபர் காத்திரமான நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்ட மாணவர்கள் எங்கள் சக மாணவனின் மரணத்திற்கு காரணமான ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டவேண்டும் என்பதுடன் வேறு எந்த பாடசாலையிலும் பணியாற்ற அனுமதிக்க கூடாது காரணம் அங்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையே காணப்படும் எனத் தெரிவித்தனர்.

எமது மாணவத்தலைவனை தாக்கிய ஆசிரியர் அவனை பழிவாங்கும் நோக்கத்திலேயே தாக்குதலை மேற்கொண்டுள்ளார். என்ன காரணம் என்பதுதான் எங்களுக்க தெரியவில்லை. ஏனென்றால் ஜனார்த்தனன் கிருமிநாசினையை அருந்திய நிலையில் அவனது தம்பி அயலிலுள்ள ஆசிரியரின் வீட்டிற்கு ஓடிச்சென்று சேர் அண்ணா கிருமிநாசினையை அருந்திவிட்டான் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் அண்ணாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்யுங்கள் என கேட்டபோது உன் அண்ணன் விசம் குடித்து இறந்தால் எனக்கு என்ன? என்ற பதிலை தெரிவித்ததுடன் அவனை அங்கிருந்து விரட்டியுள்ளார். ஆகவே இந்த ஆசிரியருக்கு ஜனார்த்தனனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் இருந்துள்ளது என கருத வேண்டியுள்ளது எனத் தெரிவித்தனர்.

வவுனியாவில் நீண்டநாட்கள் வேயப்படாத வீட்டில் தாயும் மகளும்!!

 
வவுனியா தோணிக்கல் வள்ளுவர் வீதியில் நீண்ட நாட்கள் வேயப்படாது நீலத்தரப்பால் மூலம் மூடப்பட்ட நிலையில் இருந்த மழைகாலங்களில் நீர் ஒழுக்கினால் பாதிக்கப்பட்ட வீட்டில் 84 வயது தாயும் 58 வயது திருமணம் செய்யாத மகளும் வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் அண்மையில் தமது வீட்டை மேய்ந்து தர உதவிசெய்யுமாறு வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இவர்களது நிலையை நேரில் சென்று கண்டறிந்து உதவியைப் பெறுவதற்காக எமது முகப்புத்தகம் மூலம் உதவும் உள்ளங்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதனைக் கண்ட கனடா புன்னகை அமைப்பினர் வழமைபோல் தமது கொடையாளர்களின் கவனத்திற்கு இதனைக்கொண்டு வந்து உதவி பெற்றுத்தந்தனர்.

நேற்று (02.06.2017) வெள்ளிக்கிழமை குறித்த வீட்டிற்குச் சென்று பிலிப்பையா இராஜபூபதி என்ற அந்த அம்மாவிற்கு வீடு மேய்வதற்கான ஒரு தொகை பணம் கையளிக்கப்பட்டது.

இவர்கள் வளவில் விளையும் பொருட்களை விற்று சீவியம் நடத்தி வருகின்றனர். சிற்றுண்டிகள் செய்து விற்றல் நிறுவனங்களில் சமையல் உதவியாளராக பணியாற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வசந்தன் இலங்கை புன்னகை அமைப்பின் தலைவர் க.சர்மிலன் ஆகியோர் நேரில் சென்று உதவியுள்ளனர்.

எங்கள் நண்பன் இறந்ததற்கு காரணமான ஆசிரியரை பணியிலிருந்து நீக்குங்கள் : மாணவர்கள் கொந்தளிப்பு!!

வவுனியா கனகராயன்குளத்தில் (31.05.2017) அன்று விசமருந்தி தற்கொலை செய்த மாணவனான தர்மராசா ஜனார்த்தனனின் (17) இறுதி நிகழ்வுகள் அவருடைய கிராமமான அம்பாள்நகர், குறிசுட்டான்குளத்தில் இன்று (02.06) நடைபெற்றது. இறந்த மாணவனின் சக மாணவர்கள் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

வவனியா கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் சிரமாதானம் ஒன்றின்போது இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக சாதாரண உயர்தரம் படித்துவந்த மாணவனை சக மாணவர்கள் முன்னிலையில் அடித்த காரணத்தால் அவமானம் தாங்காது மனமுடைந்த நிலையில் வீட்டிற்குச் சென்ற மாணவன் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டான். எங்கள் சக மாணவனை ஆசிரியர் தண்டித்தவிதமே அவனை அவ்வாறான முடிவை எடுக்க தூண்டியது.

குறிப்பிட்ட ஆசிரியர் ஏற்கனவே ஒரு மாணவனை கன்னத்தில் அறைந்த காரணத்தினால் அவனது செவிப்பறை கிழிந்து காது கேட்காத நிலைமை காணப்படுகிறது. எங்களது பாடசாலை அதிபர் முன்னிலையில் வேறு ஒரு மாணவனுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டபோதும் அதிபர் காத்திரமான நடவடிக்கை மேற்கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்ட மாணவர்கள் எங்கள் சக மாணவனின் மரணத்திற்கு காரணமான ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டவேண்டும் என்பதுடன் வேறு எந்த பாடசாலையிலும் பணியாற்ற அனுமதிக்க கூடாது, காரணம் அங்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமையே காணப்படும் எனத் தெரிவித்தனர்.

எமது மாணவத்தலைவனை தாக்கிய ஆசிரியர் அவனை பழிவாங்கும் நோக்கத்திலேயே தாக்குதலை மேற்கொண்டுள்ளார். என்ன காரணம் என்பதுதான் எங்களுக்க தெரியவில்லை. ஏனென்றால் ஜனார்த்தனன் கிருமிநாசினையை அருந்திய நிலையில் அவனது தம்பி அயலிலுள்ள ஆசிரியரின் வீட்டிற்கு ஓடிச்சென்று சேர் அண்ணா கிருமிநாசினையை அருந்திவிட்டான் நீங்கள் உங்கள் மோட்டார் சைக்கிளில் அண்ணாவை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல உதவி செய்யுங்கள் என கேட்டபோது உன் அண்ணன் விசம் குடித்து இறந்தால் எனக்கு என்ன? என்ற பதிலை தெரிவித்ததுடன் அவனை அங்கிருந்து விரட்டியுள்ளார். ஆகவே இந்த ஆசிரியருக்கு ஜனார்த்தனனை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் அடிமனதில் இருந்துள்ளது என கருத வேண்டியுள்ளது என தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பெயர்குறிப்பிட விரும்பாத ஆசிரியர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், மாணவன் விசம் குடித்ததுக்கும் ஆசிரியர் அடித்ததுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதுடன் குறிப்பிட்ட மாணவன் கடிதம் எதுவும் எழுதி வைத்திருக்கவில்லையே! நாங்களும் அடி வாங்கித்தான் படித்தோம்.

அத்துடன் மாணவர்களுக்கு அடிக்காமல் விட்டால் அவர்கள் படிக்க மாட்டார்கள் அத்துடன் கனகராயன்குளம் பாடசாலை இப்போதுதான் கல்வியில் உயர்ந்து வருகின்றது. பத்திரிகையாளராகிய நீங்கள் கண்டதையும் எழுதப்போய் மாணவர்கள் இன்னும் கெட்டுப்போய் விடுவார்கள் பாடசாலையின் பெயரை கெடுத்துவிடாதீர்கள் எனத் தெரிவித்தார்.

நேற்று (01.06.2017) நெடுங்கேணி கலாசார மண்டப திறப்பு விழாவுக்கு வருகை தந்திருந்த வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்கையில்,

குறிப்பிட்ட ஆசிரியர் மீது துறைசார் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதுடன் வடக்கு மாகாணசபை மாணவர்களை சரீர ரீதியில் ஆசிரியர்கள் தண்டனை வழங்கக் கூடாது என பிரேரணை நிறைவேற்றியுள்ளதுடன் வடக்கு பகுதியைச் சேர்ந்த 14 ஆயிரம் ஆசிரியர்கள் பிரேரணையை ஏற்றுக்கொண்டு கையொப்பம் இட்டுள்ளனர் என சுட்டிக்காட்டினார்.

வவுனியாவில் தற்கொலை செய்த மாணவனின் தந்தையின் கதறல் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

யுத்தகாலத்தில் பதுங்குகுழியில் வைத்து காப்பாற்றிய எனது மகனை அநியாயமாக பலி கொடுத்துவிட்டேன் என வவுனியாவில் தற்கொலை செய்துகொண்ட மாணவனின் தந்தை கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

வவுனியா கனகராயன்குளத்தில் (31.05.2017) அன்று விசமருந்தி தற்கொலை செய்த மாணவனான தர்மராசா ஜனார்த்தனனின் (17) இறுதி நிகழ்வுகள் அவருடைய கிராமமான அம்பாள்நகர், குறிசுட்டான்குளத்தில் இன்று (02.06) நடைபெற்றது. இறந்த மாணவனின் தந்தையான எஸ்.தர்மராசா ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்விகற்றுவந்த எனது மகனை பல மாணவர்கள் பார்த்திருக்க அவர்கள் முன்னிலையில் ஆசிரியர் ஒருவர் அடித்ததால் மனமுடைந்த எனது மகன் கிருமிநாசினையை அருந்தி உயிரிழந்துள்ளார்.

பாடசாலையில் சிரமதானம் செய்துகொண்டிருந்தபோது எனது மகனுக்கும் இன்னொரு மாணவனுக்கும் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகவே ஆசிரியர் எனது மகனை மாத்திரம் குறிவைத்து தாக்கியுள்ளார்.

சம்பவம் நடந்த அன்றைய தினம் வீட்டுக்கு வந்த எனது மகன் எவருடனும் கதைக்கவில்லை சாப்பிட்டு விட்டு பாடசாலை உடையை கழுவுவதற்கு சென்ற வேளையில் பாடசாலையில் நடந்த சம்பவம் நினைவிற்கு வந்த காரணத்தினால் தோட்டத்திற்கு தெளிப்பதற்காக வைத்திருந்த கிருமி நாசினியை தேடி எடுத்து அருந்தியுள்ளார்.

காலையில் 9 மணிக்கு பாடசாலையில் நடைபெற்ற சம்பவம் எனது மகனின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

எங்கள் கிராமமான கனகராயன் குளத்தைச்சேர்ந்த மக்கள் இறுதியுத்தத்தின்போது முள்ளிவாய்க்கால் வரை இடம்பெயர்ந்திருந்தோம். யுத்ததம் நடைபெற்ற காலங்களில் பதுங்குகுழிகளில் வைத்து காப்பாற்றி கொண்டு வந்த எனது மகனை அநியாயமாக பலிகொடுத்துவிட்டேன். இந்த இழப்பை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

நாங்கள் கூலி வேலைசெய்யும் ஏழை விவசாயிகள். எனது மகனுக்கு நடந்த சோகம் இன்னொரு மாணவனுக்கு ஏற்படக் கூடாது. எமது பிள்ளைகளை பாடசாலைக்கு ஆசிரியர்களை நம்பித்தான் அனுப்புபுகிறோம். இன்று ஆசிரியர்களே எமது குழந்தைகளுக்கு எமனாக மறியுள்ளனர். எனது மகனின் மரணத்தை பாடசாலை சமூகம் மறைப்பதாலோ அல்லது நீர்த்துபோகச் செய்வதாலோ மாணவ சமூகத்துக்கு நீதி கிடைக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

வவுனியா மாணவன் தற்கொலை தொடர்பில் கைதாகிய ஆசிரியர் பிணையில் விடுதலை!!

வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்ற மாணவன் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் கைதாகிய குறித்த பாடசாலை ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

கடந்த புதன்கிழமை குறித்த பாடசாலையில் இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதான பணியின் போது தரம் 10 மாணவர்களுக்கும், உயர்தர மாணவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து உயர்தர மாணவன் ஒருவன் மீது ஆசிரியர் ஒருவர் கன்னத்தில் தாக்கியிருந்தார்.

இதனால் விரக்தியடைந்த மாணவத் தலைவனான உயர்தர மாணவன் வீட்டிற்கு சென்ற பின் தனது ஆடைகளை மாற்றிவிட்டு குறித்த ஆசிரியரின் வீட்டிற்கு சென்று தன்னிலும் கீழ்மட்ட மாணவர்களுக்கு மத்தியில் ஏன் அடித்தீர்கள் எனக் கேட்டுவிட்டு வீடடிற்கு சென்று நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்தான்.

த.ஜனார்த்தனன் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட கனகராயன்குளம் பொலிசார் மாணவன் மீது தாக்கியதாக கனகராயன்குளம் பாடசாலை ஆசிரியரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆசிரியர் வவுனியா நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டிருந்தார்.

நீதிமன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் பின் குறித்த ஆசிரியர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

வவுனியாவில் பாடசாலை மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைப்பு!!

 
மாவட்ட சமூகசேவை அலுவலகத்தினூடாக இலண்டனில் இயங்கிவரும் V3 அமைப்பு (V3 Fundation) மூலம் இன்று (02.06.2017) வெள்ளிக்கிழiமை வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் கல்லூரியில் கல்வி கற்கும் வசிகரன் சர்மிதா என்ற மாணவிக்கு துவிச்சக்கர வண்டி வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை ஆசிரியர் திரு.பாலச்ச்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீனிவாசன், சமூகசேவை அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.வசந்தரூபன், பிரதி அதிபர் ஆ.வரதராஜன், உளவளத்துணை வழிகாட்டி ஆசிரியர் திருமதி வா.கனகசபாபதி மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

செல்வி வசிகரன் சர்மிதாவின் தந்தை நோய் வாய்ப்பட்டு வேலைகள் செய்ய முடியாத நிலையில் உள்ள அதேவேளை தாயார் கமலாதேவி பாக்கு வெட்டி விற்று தனது மூன்று பிள்ளைகளைப் படிப்பித்து வருகிறார். வீடு பாதுகாப்பு அற்றதாக இருப்பதால் அயல் வீட்டில் சென்றே இரவில் உறங்குகிறார்கள்.

இந்நிலையில் படிப்பில் ஆர்வமுள்ள சர்மிதாவுக்கு கொக்குவிலைச் சேர்ந்த லண்டன் வாழ் உதவுமுள்ளம் வில்வராஜா விமல்ராஜ் சர்மிதாவின் தாயாரான திருமதி கமலாதேவி தொடர்பான வேண்டுகோளை முகப்புத்தகம் ஊடாக கண்டு இவருக்கு தனது பங்கிற்கு துவிச்சக்கர வண்டியை வழங்க முன்வந்தார். V3 அமைப்பின் லண்டன் வாழ் அன்பர் பாலசிங்கம் தில்லைராஜன் இந்த ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார்.

கூமாங்குளம் சித்திவிநாயகர் பாடசாலை மிகவும் பின்தங்கிய குடும்பங்களிலுள்ள பிள்ளைகளை அதிகம் கொண்டுள்ளது. எனினும் பாடசாலை சுற்றுப்புறச்சூழல் மிகவும் சூழலுடன் இயைந்த வகையில் சுத்தமாக பேணப்பட்டு வருவதுடன் உதவி தேவைப்படும் மாணவர்களின் பட்டியல் இங்கு சரியான முறையில் பேணப்பட்டு வருவதும், சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வருடாவருடம் இப்பாடசாலை மாணவர்கள் பல பரிசுகளை வென்று வருவதையும் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் பாராட்டிப் பேசினார்.

இப்பாடசாலைக்கு பல்வேறு பௌதீக வளத்தேவைகள் இருப்பதால் உதவுமுள்ளங்கள் எதிர்காலத்தில் போதிய உதவிகளை வழங்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

சுற்றாடலுக்கு பொறுப்பான ஆசிரியை திருமதி சாந்தி பரமேஸ்வரன் சுற்றாடல் செயற்பாடுகள் பலர் பாராட்டும்படி அமைந்திருப்பதை அதிபர் சுட்டிக்காட்டி சுற்றாடல் செயற்பாடுகளுக்கும் உதவும்படி வேண்டுகோள் விடுத்தார்.

வவுனியா பூவரசங்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா!!

 
வவுனியா பூவரசங்குளம் ஸ்ரீ பாலமுருகன் ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா 29.05.2017 அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற்று 04.06.2017 அன்று வேட்டை திருவிழாவும், 05.06.2017 அன்று சப்பரதிருவிழாவும், 06.06.2017அன்று தேர் திருவிழாவும்,

07.06.2017 அன்று தீர்த்ததிருவிழாவுடன் கொடி இறக்கம் இடம்பெற்று கலைநிகழ்வுகள் இடம்பெறும். தொடர்ந்து 08.06.2017 அன்று பூங்காவனத் திருவிழாவுடன் மகோற்சவம் நிறைவு பெறுகின்றது.

வவுனியா கனகராயன்குளத்தில் தற்கொலை செய்த மாணவனின் இறுதி அஞ்சலி!!

 
வவுனியா கனகராயன்குளத்தில் விசமருந்தி தற்கொலை செய்த மாணவன் தர்மராசா ஜனார்த்தனனின் இறுதி நிகழ்வுகள் இன்று (02.06.2017) நடைபெற்று வருகிறது.

வவுனியா கனகராயன்குளம் குறிசுட்டான் பகுதியில் வசித்துவரும் உயர்தர மாணவன் தர்மராசா ஜனர்த்தன் ( வயது 17) வழமை போன்று கடந்த (31.05.2017) காலை 7.30 மணிக்கு கனகராயன்குளத்தில் உள்ள பிரபல பாடசாலைக்கு சென்றுள்ளார்.

பாடசாலை நேரத்தில் ஆசிரியர் சக மாணவிகள் முன்பாக குறித்த மாணவன் மீது தாக்கியதில் மனமுடைந்த பாடசாலை மாணவன் கடந்த 31.05.2017 மாலை வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த கிருமிநாசினி மருந்தினை அருந்தியுள்ளார்.

இதனை அவதானித்த பெற்றோர்கள் மாணவனை புளியங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு முச்சகரவண்டியில் அழைத்துச்சென்றுள்ளனர். எனினும் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டியில் அழைத்து சென்ற சமயத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியரை கைது செய்த பொலிஸார் நேற்றையதினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு முன்பாக கறுப்புகொடிகள் கட்டப்பட்டுள்ளதுடன் மாணவனுக்கு இரங்கல் தெரிவித்து பதாதைகள் கட்டப்பட்டுள்ளது.

இன்று (02.06.2017) மதியம் 2.30 மணிக்கு சடலம் குறிசுட்டான் பகுதியில் உள்ள மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ​கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!!

 
வவுனியா செட்டிகுளத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை வெட்டுக்காயங்களுடன் சடலமாக இன்று(02.06.2017) காலை மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்குட்ப்பட்ட சின்னக்குளத்தில் வசித்த 40 வயதுடைய முத்துலிங்கம் கனகராஜா என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே செட்டிகுளம் சண்முகபுரம் கிராமத்தில் வீதியோரத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 5 மணிக்கு வவுனியா நகர்பகுதிக்கு சென்றதாக கூறி பேரூந்தில் சென்ற இவர் இரவு சுமார் 9 மணியளவில் தனது மனைவிக்கு தொலைபேசியில் அழைத்து தனது கடையின் முன்னால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது முச்சக்கர வண்டியை எடுத்து விடும்படியும் தான் வீட்டுக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கூறி தொலைபேசி அழைப்பைத் துண்டித்துள்ளார்.

நீண்டநேரமாகியும் தனது கணவன் வீட்டுக்கு வராத காரணத்தினால் இரவு 10 மணியளவில் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டபோது தொலைபேசி இயங்கவில்லை என உறவினர்கள் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று காலை செட்டிகுளம் – பூவரசங்குளம் வீதியில் உள்ள சண்முகபுரம் கிராமத்தில் சென்றவர்கள் வீதியோரத்தில் சடலம் கிடப்பதை கண்டு செட்டிகுளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தனர்.

இந் நிலையில் சம்பவ இடத்துக்குச் சென்ற செட்டிகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா வர்த்தக சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி!!

 
நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக வவுனியா வர்த்தகர் சங்கம் கடந்த இரண்டு தினங்களாக வர்த்தக நிலைய உரிமையாளர்களிடம் சேகரிக்கப்பட்ட ஒரு தொகுதி உதவிப் பொருட்களை நேற்று வவுனியா மாவட்ட செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

இதில் வர்த்தக சங்கத் தலைவர், பொருளாலர், செயலாளர் மற்றும் மத்திய உறுப்பினர்கள் கலந்து கொண்டு வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகளிடம் உணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டது.

இன்று வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து விஷேட குழுவினர் வவுனியா மாவட்ட செயலகத்தினால் சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவுள்ளதாக மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மூன்று முறிப்பு பாடசாலையின் பழைய மாணவர்களுக்கான ஒன்றுகூடல்!!

வவுனியா மூன்று முறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாக சபை கூட்டம் எதிர்வரும் 04.06.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எனவே அனைத்து பழைய மாணவர் உறுப்பினர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் அதிபர்

வவுனியா மூன்று முறிப்பு அ.த.க பாடசாலை

இலங்கையிலிருந்து 16 கிலோ தங்கம் கடத்தல் : இருவர் கைது!!

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி செல்லப்பட்ட 16 கிலோ தங்கத்தை ராமநாதபுரம் அருகே வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இன்று ராமேஸ்வரம் அருகே உள்ள குந்துக்கால் கடற்கரை பகுதிக்கு, தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவான் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு விரைந்த அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த இருவரை விசாரணை நடத்தி போது 16 கிலோ தங்கத்துடன் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்ட அதிகாரிகள், இலங்கையில் இருந்து இந்த தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பதாகவும், அவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே ரூ.6 கோடி மதிப்பிலான 16.32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த தங்கம், ரகசியமாக படகில் கடத்தி வரப்பட்டது என தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் கடும் வறட்சி: 121 000 பே ர் பாதிப்பு!!

இலங்கையின் தெற்கு, மேற்குப் பகுதிகளில் கடுமையான மழையினால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் கடும் வறட்சி நீடிப்பதாக இடர் முகாமைத்துவ மைய நிலையம் அறிவித்துள்ளது.

வடக்கில் ஒரு இலட்சத்து 30 ஆயிரத்து 243 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து 40 ஆயிரத்து 531 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 20 பேரும், யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 57 பேரும், கடும் வறட்சியால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வவுனியா, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களிலும் வறட்சியால் பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள முசலி பிரதேச செயலர் பிரிவில் 14 ஆயிரத்து 748 பேர் வறட்சியால் பாதிப்பை எதிர்கொண்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக ஒரு இலட்சத்து 21 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பான மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் கிடைக்கவேண்டிய மழை வீழ்ச்சியும் போதியளவு கிடைக்கவில்லை. இதனால் கடந்த வருடத்திலிருந்து எமது மாவட்டம் வறட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை, வேலணை, காரைநகர், மருதங்கேணி போன்ற பகுதிகள் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. இவ்வாறு பாதிப்படைந்த தீவகப் பகுதிகளுக்குக் குடிதண்ணீர் விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றோம்.

பாதிப்படைந்த பகுதிகளின் குடிதண்ணீர் விநியோகத்துக்கு கொழும்பு இடர் முகாமைத்துவ அமைச்சின் உதவியுடன் 6 பவுசர்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றின் ஊடாகப் பொதுமக்களுக்கான குடிதண்ணீர் விநியோகம் இடம்பெற்று வருகின்றது.

அத்துடன் குடிதண்ணீர் பவுசர்களுக்கான எரிபொருள் செலவுகள், சாரதிகளுக்கான கொடுப்பனவுகள் போன்றவற்றையும் கொழும்பு இடர் முகாமைத்துவ அமைச்சே பொறுப்பேற்றுள்ளது” – என்றார்.

இந்தப் பழக்கங்கள் தான் நீங்கள் குண்டாவதற்கு காரணம்!!

நீங்கள் குண்டாவதற்கு, சாப்பிடும் உணவு மட்டும் காரணம் அல்ல. குறைவாகத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும் குண்டாகிறோமே என நீங்கள் யோசித்திருந்தால் காரணங்கள் வேறாக இருக்கலாம். அந்த காரணங்களையும் என்னவென்று பார்க்கலாம்.

மென்று முழுங்காமல் அவசர அவசரமக உணவை முழுங்குவதால் உங்கள் ஜீரணத் தன்மை பாதிக்கும். இதனால் கொழுப்புகள் சரியாக ஜீரணிக்காமல் உடலிலேயே தங்கும்போது உடல் பருமன் உண்டாகும். அதனால்தான் அந்த காலத்தில் சொன்னார்கள். நொறுங்கத் தின்னால் நூறு வயது.
முடிந்த அளவு ஹோட்டல், கையேந்தி பவன், துரித உணவகம் போன்ற இடங்களில் சாப்பிடுவதை தவிருங்கள். அவற்றில் உபயோகப்படுத்தும் எண்ணெய்கள் மோசமான கொழுப்பை அதிகரிக்கச் செய்யும்.

நேரமில்லை என்று சாக்கு சொல்லாமல், புத்தியை தீட்டி, வீட்டிலேயே நேரத்தை குறைக்கும் எளிய உணவுகளை செய்ய பழகிக் கொள்ளுங்கள். இவை உங்கள் ஆரோக்கியத்தை இருமடங்காக்கும்.

இரவு 7 மணி ரெண்டுங்கெட்டான் நேரம். பெரும்பாலோனோருக்கு அந்த சமயத்தில்தான் பசி எடுக்கும். இரவு டின்னரையும் முடிக்க மனதில்லாமல் ஸ்நேக்ஸ் மீது நாட்டம் போகும்.

ஆனால் அது உடல் பருமனை அதிகப்படுத்த மிக முக்கியமான காரணமாகும். ஆகவே அந்த சமயத்தில் பழங்கள் அல்லது சூப் சாப்பிட்டு 8 மணி வரை பொறுமை காத்தால் உங்களுக்கு வெற்றி.

மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது கோபத்தில் இருக்கும்போது சாப்பிடுவது மிகவும் தவறாகும். இது உடல் பருமனை மட்டுமல்லாது ஜீரண மண்டலத்தையும் பாதித்து பிரச்சனைகளை உண்டு பண்ணும்.

தெரிந்தோ தெரியாமலோ சமைக்கும் பழக்கம் கூட உடல் பருமனுக்கு காரணமாகிவிடுகிறது. ஒரே எண்ணெயை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, ஆவியில் வேக வைக்காமல் ருசிக்காக பொரித்து சாப்பிடுவது, காய்கறிகளுக்கு பதிலாக கார்போ உணவுகளை அதிகம் சேர்ப்பது, ஒரே சத்துக்கள் கொண்ட உணவுகளையே திரும்ப திரும்ப உண்ணுவது போன்றவைகள் உடல் பருமனை அதிகரிக்கச் செய்யும்.

இன்றும் அடைமழை தொடரும் வாய்ப்பு : மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுரை!!

இலங்கையின் தென் மாகாணத்தை நிலை குலையச் செய்த அனர்த்த நிலை தற்போது வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுகிறது. எனினும் கடந்த நாட்களில் ஏற்பட்டிருந்த வெள்ளம் தற்போது குறைவடைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் காணாமல் போனோரை தேடு நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, மத்திய நிலையத்தின் உதவி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் நாட்களில் அடைமழை பெய்ய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேனை, சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் 203 பேர் உயிரிழந்துள்ளதுடன், 96 பேர் காணாமல் போயுள்ளனர்.

15 மாவட்டங்களை சேர்ந்த 630080 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

100 மீற்றர் ஓட்டப் போட்டியில் மின்னல் வேகத்தில் கடந்து புதிய சாதனை படைத்த இலங்கை வீரர்!!

இலங்கையில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியில் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கை வீரர் வினோஜ் சுரன்ஜய புதிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தால் நடத்தப்படும் தடகளப் போட்டி தியகம மகிந்த ராஜபக்ச அரங்கில் நடைபெற்று வருகின்றது.

இதில், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துக்கொண்ட வினோஜ் சுரன்ஜய 10.30 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்துள்ளார்.

இதன் மூலம் இலங்கை மைதானங்களில் நடந்த 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் மிக வேகமாக பந்தய தூரத்தை கடந்த இலங்கை வீரர் என்ற புதிய சாதனையை வினோஜ் சுரன்ஜய படைத்துள்ளார்.

எனினும் 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் இலங்கையின் ஹிமாஷா இஷான் 2016ல் இந்திய மைதானத்தில் 10.26 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருப்பது குறிப்பிடத்தக்கது.