பாகிஸ்தானை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சுந்தஸ்கோரின். இவர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அந்த பூனைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.
அங்குள்ள கால்நடை வைத்தியரிடம் காண்பித்தார். அவர் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. நோய் மேலும் அதிகரித்தது. இதனால் பூனையை வேறு வைத்தியரிடம் கொண்டு சென்றார்.
அதற்குள் பூனை இறந்து விட்டது. ஏற்கனவே சிகிச்சை அளித்த வைத்தியர் தவறுதலாக சிகிச்சை அளித்ததால் பூனை இறந்து விட்டதாக கூறி அவர் மீது ரூ. 2½ கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் இந்த வருடத்தில் மாத்திரம் 1700 க்கும் அதிகமான முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக பெண்களுக்கான தேசிய குழு தெரிவித்தது.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் பொலிஸ், சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கும் முறைப்பாடுகள் கிடைப்பதாக பெண்களுக்கான தேசிய குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அநுலா இந்திராணி தெரிவித்தார்.
வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்காக பல பிரிவுகளூடாகவும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அதனடிப்படையில், பிரதேச செயலக மட்டங்களிலும் வேலைத்தளங்களை மையமாகக் கொண்டும் தோட்டப்புற பிரதேசங்களிலும் தெளிவூட்டல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அநுலா இந்திராணி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் சர்வதேச தினம் இன்றாகும்.
ஐக்கிய நாடுகள் சபை 1999 நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இந்த தினத்தை சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தியதோடு, அதற்கான பட்டயத்தில் 1996 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
1960 ஆம் ஆண்டு டொமினிக் குடியரசில் அரசியற்காரணங்களுக்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரிகள் கொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து இந்த தினத்துக்கான பின்புலம் உருவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மதவாச்சி பகுதியில் வெடிப்பொருட்கள் உட்பட இராணுவ உபகரணங்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இசின்பெஸ்கல பிரதேசத்தில் கற்குழியில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்துள்ளர்.
பூனெவ இராணுவ முகாமிற்கு கிடைத்த புலனாய்வு தகவல்களுக்கமைய நேற்று மாலை மாதவாச்சி பொலிஸார், கெபித்திகொல்லேவ பொலிஸார் மற்றும் அநுராதபுரம் வெடிப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் கூட்டாக இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இந்த வெடிப்பொருட்கள் உட்பட இராணுவ உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளது.
இசென்பெஸ்பல பிரதேசத்தில் உள்ள கற்குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 2634 ஜெலட்நைட் குச்சிகள், 1922 மின்சார டெட்டநேட்டர்கள் , மின்சாரமற்ற 50 டெட்டநேட்டர்கள், 6580 மீற்றர் சேவை நூல் வகைகள், 45 கிலோ கறுப்பு வெடி மருந்து உட்பட மேலும் பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒரு குழந்தைக்கு தேவையான அறிவும், அரவணைப்பும் தங்களது பெற்றோரிடம் இருந்தே அதிகமாக கிடைக்கின்றன.
தந்தை அறிவை போதித்தால், தாய் அன்பை போதிக்கிறாள். இப்படி நாம் குழந்தையாய் இருக்கும்போதே பெற்றோரிடம் இருந்து கிடைக்க வேண்டிய அன்பும் அரவணைப்பும் சரியான முறையில் கிடைத்தால், எதிர்காலத்தில் வெற்றிபெற்ற நபராக இந்த சமுதாயத்தில் திகழ்வோம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால், இளம் வயது குழந்தைகளே, பெற்றோர்கள் ஆனால் வாழ்க்கை என்ன ஆவது?
இதோ உலகின் இளம் வயது அம்மாக்கள்
Alfie Patten & Chantelle Stedman
Alfie Patten என்ற 13 வயது சிறுவனுக்கும், இவரது காதலியான 15 வயது Chantelle- க்கும் குழந்தை பிறந்துள்ளது. April Webster and Nathan Fishbourne
இளம் வயது பெற்றோர்களின் வரிசையில் April Webster மற்றும் Nathan Fishbourne ஆகிய இருவரும் இணைந்துள்ளனர். இருவருக்குமே 14 வயது தான். இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. Ionel Stanescu and Rifca Stanescu
11 வயதான Rifca Stanescu தனது காதலனான Ionel- ஐ திருமணம் செய்தார். திருமணமாகி ஒரு வருடத்திற்குள் இவருக்கு மரியா என்ற பெண் குழந்தை பிறந்தது.
மரியாவுக்கு 15 வயது சிறுவன் Ion என்பவனுடன் திருமணம் நடந்தது. இதனால் இளம் வயதிலேயே Rifca பாட்டியாகியுள்ளார். Lina Medina
பெரு நாட்டை சேர்ந்த Lina Medina 5 வயதில் தாயாகியுள்ளார் என்பது அதிர்ச்சியான செய்தி. இச்சிறுமிக்கு 6 பவுண்ட் எடையில் ஆண் குழந்தை பிறந்தது. இச்சிறுமிதான் உலகிலேயே மிகவும் இளம்வயது தாய் ஆவார். Tressa Middleton
பிரித்தானியாவைச் சேர்ந்த இந்த மாணவிக்கு வயது 11. இவரது சகோதரனால் பலாத்காரம் செய்யப்பட்ட இச்சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.
இந்த உலகில் மானுடனாய் பிறந்துவிட்டால், அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள எந்த அளவுக்கு உரிமை உண்டோ, அதே போன்று தாங்கள் விரும்பிய நேரத்தில் உயிரை மாய்த்துக்கொள்ளவும் செய்கிறார்கள்.
இன்பம், துன்பம் ஆகிய இரண்டும் கலந்ததுதான் வாழ்க்கை. இன்பங்கள் மட்டுமே நிறைந்ததுதான் வாழ்க்கை என்றால் அதில் சுவாரசியம் இருக்காது.
நாம் அன்றாடம் சமைத்து சாப்பிடும் உணவில் கூட காரம், உப்பு சரியான அளவில் இல்லையென்றால் அதனை உதாசீனப்படுத்தும் நீங்கள், இன்பம் மட்டுமே நிறைந்த ஒரு சேர வாழ்க்கையை விரும்புவது ஏன்?
வாழ்க்கை என்பது வாழ்வதற்காகத்தானே தவிர, கோழையாக வாழ்க்கை முடித்துக்கொள்வதற்காக அல்ல.
வெளி உலகில் வீராப்பு பேசும் எத்தனையோ நபர்கள் தன் சொந்த வாழ்வில் ஒரு பிரச்சினை வந்துவிட்டால் உள்ளங்கள் உடைந்து கதறி கண்ணீர் சிந்தி நம்மால் இந்த பிரச்சினையை தீர்க்கவே முடியாது என்றெண்ணி தன்னுயிரை தானே மாய்த்துக் கொள்ள துணிந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் ஒரே காரணம் நம்முடைய மனதுதான். ஒரு நிமிடம் யோசித்து தற்கொலை முடிவை எடுக்கும் நீங்கள், அந்த ஒரு நிமிடத்தை, ஏன் வாழ்வில் வெற்றி பெறும் நிமிடமாக மாற்றக்கூடாது.
தற்கொலை செய்வதற்கு முழுக்க முழுக்கமே நாம் மற்றுமே காரணம் தானே தவிர, இதில் மற்றவர்கள் காரணமாக இருக்க முடியாது. ஏனெனில் நம்மை பிறர் தற்கொலைக்கு தூண்டினாலும், அதனை தவிடுபொடியாக்கி வாழ்வில் பெறும் மனப்பக்குவம் நமக்கும் இருக்க வேண்டும்.
தற்கொலை செய்துகொள்வதற்கு கவலை, மன அழுத்தம், காதல் தோல்வி என பல காரணங்கள் கூறப்பட்டாலும், மிக முக்கிய காரணங்கள் பற்றி பார்ப்போம்,
மன அழுத்தம்
அதிக அளவு தற்கொலை நிகழ்வதற்கு முதல் காரணம் மன அழுத்தம். நம்மை சுற்றி பல்வேறு காரணிகள் நம்மை அழுத்தும்போது, அதனை செய்ய முடியாமலும், சமாளிக்கமுடியாமலும் திணறுகிறோம்.
ஒரு கட்டத்தில் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு நாம் தகுதி இல்லாதவர்கள். நம்முடைய பெற்றோர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறோம் என்று எண்ணத்தோன்றுகிறது. இந்த எண்ணமே, நாம் நமது பெற்றோர்களுக்கு மட்டுமின்றி இந்த பூமிக்கும் பாரமாக இருக்கிறோம். இப்படி மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் வாழ்க்கை நமக்கு தேவையில்லை என கருதி தற்கொலை என்ற முடிவை தேடிக்கொள்கின்றனர்.
நம்பிக்கை இழத்தல்
இந்த உலகில் மற்றவர்கள் நம்மீது வைக்கும் நம்பிக்கையை விட, நாம் நம்மீது நம்பிக்கை வைக்கவேண்டும். எந்த ஒரு செயலையும் செய்ய தொடங்கும்முன் அதனை நம்பிக்கையோடு செய்யத்தொடங்கினால் வெற்றி நிச்சயம்.
ஆனால், அதைவிட்டு இன்றைய மனிதர்கள் கடவுளின் மீதும் மற்றவர்கள் மீதும் நம்பிக்கையை வைத்து செயல்படத்தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் இங்கு நம்பிக்கையற்ற நிலை ஏற்படும் போது, நம்மை எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள்.
நாம் ஒரு கோழை. நம்மால் எந்தவொரு செயலையும் செய்யமுடியாது என நம்பிக்கை இழந்து இறுதியில் தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறார்கள்,
இழப்பு
பல்வேறு தோல்விகளை சந்தித்த ஒரு மனிதனால் மட்டுமே வெற்றிக்கனியை சுவைக்க முடியும். வெற்றியை மட்டுமே உங்கள் வாழ்வில் சந்தித்துக்கொண்டிருந்தீர்கள் என்றால் ள் வாழ்வில் சரியான பாதையில் நீங்கள் பயணிக்கவில்லை என்று அர்த்தம்.
ஏனெனில் இந்த தோல்வி மட்டுமே உங்களுக்கு வாழ்வில் பல்வேறு அனுபவங்களை கற்றுத்தரும். ஆனால் இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் சிலர் தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனம். பொருளாதார இழப்பு, காதல் தோல்வி, வாழ்க்கையில் தோல்வி போன்ற காரணங்களை முன்வைத்து தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றனர்.
பயம்
இந்த உலகத்தில் பயம் என்பது அர்த்தமற்ற வார்த்தை. சொல்லப்போனால் மனிதர்கள் தேவையில்லாமல் உருவாக்கிகொள்ளும் ஒன்றுதான் பயம். எங்கே நமக்கு பிடித்தமானவர்களை இழந்துவிடுமோ? நம்மை மற்றவர்கள் அவமானப்படுத்துவார்களோ? என்று நடக்காதவற்றை நாமாக யோசித்துக்கொண்டிருக்கும்போது பயம் நம்மை ஆட்கொள்கிறது. அளவுக்கு அதிகமான பயம் அவர்களை ஆட்கொள்ளும் போது இறுதியில் தற்கொலை செய்துகொள்கிறோம்.
வாழ்க்கையில் வருத்தம்
வாழ்க்கையில் வருத்தம் என்பது ஒரு பாதி மட்டுமே. எனவே இதனை பார்ஷல் செய்து ஒரு ஓரமாக வைத்துவிடுங்கள். இந்த உலகில் வருத்தங்கள் இல்லாத ஒரு மனிதனை பார்க்க இயலாது. அப்படி வருத்தங்கள் உள்ள அனைவருமே தற்கொலை செய்துகொள்ள வேண்டுமென்றால், இந்த உலகம் மனிதர்களற்ற மாயான பூமியாத்தான் இருக்கும்.
வாழ்வில் வருத்தங்கள் ஏற்படுவதற்கு ஒரு பாதை இருந்தால், அதற்கு தீர்வு கண்டுபிடிப்பதற்கும் மற்றொரு பாதை இருக்கும். எனவே ஒரு பாதையை மட்டுமே எதிர்பார்த்து காத்திருந்து உங்கள் வாழ்க்கை கதவை மூடிக்கொள்ளாதீர்கள்.
வேலைவாய்ப்பின்மை
இன்றைய உலகை ஆட்டிப்படைக்கும் ஒன்றுதான் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை. அப்படி வேலை இல்லாத கட்டத்தில், உங்களுக்கான வேலையை உருவாக்க கற்றுக்கொள்ளுங்கள்.
மேலே வானம், கீழே பூமி இடையில் மனிதர்களாய் பார்த்து கட்டியது தான் வீடுகள். அப்படி நாம் வாழ்வதற்கு தேவையான ஒரு வீட்டினை கட்டிய நாம், அந்த வாழ்வினை சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஒரு தொழிலையும் நீங்களாகவே முன்வந்து செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
அதனை விட்டு, வேலை கிடைக்கவில்லை, அதனால் நாம் எப்படி சாப்பிடுவது , எப்படி வாழ்வது என்று கவலைகொண்டு தற்கொலை செய்யாதீர்கள்.
ஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருப்பது மின்கலத்தின் சார்ஜ் ஆனது விரைவாக குறைவடைவதாகும்.
இதேவேளை அம் மின்கலங்களை மீண்டும் சார்ஜ் செய்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.
இப் பிரச்சினைக்கு தீர்வு தரும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது மின்கலங்களுக்கு பதிலாக சூப்பர்கொள்ளளவி (Super Capacitors) எனும் இலத்திரனியல் சாதனத்தை பயன்படுத்துவதாகும்.
இதுவரை உள்ள கொள்ளளவிகள் அதிக அளவில் மின் சக்தியை சேமித்து வைத்திருப்பதில்லை. ஆனாலும் அதிக வினைத்திறனுடன் மின்சக்திய வெளிவிடக்கூடியன.
எனினும் புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அதிகளவு மின் சக்தியை சேமித்து வைத்திருக்கக்கூடிய சூப்பர் கொள்ளளவிகளை உருவாக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஓரிரு செக்கன்களில் அக் கொள்ளவிகளை சார்ஜ் செய்ய முடிவதுடன், ஒரு வார காலத்திற்கு தொடர்ச்சியாக பாவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இத் தகவலை Central Florida பல்கலைக்கழக ஆராய்ச்யாளரான Nitin Choudhary என்பவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் இடிபாடுகளுக்கு மத்தியில் ரத்தம் வடிந்த நிலையில் உயிருக்கு போராடிய சிறுவனை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ள சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
சிரியாவில் போராளிகள் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை கைப்பற்றுவதற்காக சிரியா அரசுடன் அமெரிக்க மற்றும் ரஷ்யா படைகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக சிரியாவின் முக்கிய நகரமான அலெப்போ மாகாணத்தின் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டு விட்டதாக ரஷ்யா தரப்பில் கூறப்படுகிறது.
அது ஒரு புறம் இருந்தாலும், அதன் விளைவாக ஏராளமான பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர். ரஷ்யா நடத்திய தாக்குதலால் ஏராளமான வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவை தரைமட்டமாகின. இது தொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தரைமட்டமான இடிபாடுகளுக்கு மத்தியில் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் முகம் முழுவதும் ரத்தம் வழிந்த நிலையில் தன்னை காப்பாற்றுமாறு கத்தியுள்ளார்.
இதை அறிந்த சிரிய பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை இடிபாடுகளுக்கு மத்தியில் இருந்து மீட்டு அதன் பின்னர் முகத்தில் இருந்த ரத்தங்களை துடைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதே போன்று இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கியுள்ள சிறுமி ஒருவரை பாதுகாப்பு படையினர் மீட்பதும், அதன் பின்னர் வான்வழி தாக்குதலின் விளைவாக சிறுவர் ஒருவர் இறந்த நிலையில் கிடப்பதும் போன்ற புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த தாக்குதலால் ஏராளமான பொதுமக்கள் அதிக அளவு பட்டினி கிடந்து வருவதாகவும், இதுவரை ஐ.நா சார்பில் 275,000 பேருக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல்கள் தொடர்பாக ரஷ்யா மற்றும் சிரியா அரசு நல்லதொரு முடிவை எடுக்கவேண்டும் என்றும் ஆனால் ரஷ்யா தரப்பில் இன்று இதற்கு நேர்மறையான பதில் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ஏ.டி.எம் வரிசையில் நின்று கொண்டிருந்த முன்னாள் காதலனை, காதலி ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின், நாசிக் பகுதியில் உள்ள ஏ.டி.எம்மில் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் பலரும் வரிசையில் நின்று உள்ளனர்.
அப்போது 27 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் திடீரென்று அவ்வரிசையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை கண்மூடித்தனமாக தாக்கத் தொடங்கியுள்ளார்.
ஆத்திரம் தீராத அப்பெண் தன் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பலரை போனில் தொடர்பு கொண்டு அப்பகுதிக்கு வரவழைத்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் இளைஞனை கண்டவுடன் கடும் ஆக்ரோஷமாக தாக்கியுள்ளனர்.
இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த பொலிசார் அவர்களை இடைமறித்து தடுத்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து இளைஞனை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமத்தித்துள்ளனர். மருத்துவமனையில் இளைஞருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்துகையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பொலிசாரிடம் அப்பெண் கூறுகையில், தானும், குறித்த இளைஞனும் காதலித்து வந்ததாகவும், அதன் பின் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் வரைக்கும் சென்றதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் திடீரென்று திருமணம் நெருங்கி வரும் வேலையில் அவர் தலைமறைவாகிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
அதன் பின் அவரைக் கண்டு நான்கு ஆண்டுகள் சென்று விட்டது. தற்போது திடீரென்று அவரை ஏ.டி.எம். வாசலில் கண்டதால் ஆத்திரம் தாங்க முடியாமல் தாக்கியதாக கூறியுள்ளார். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
ஹங்குராங்கெத்தை பிரதேசத்தில் அரிய வகை மலர் ஒன்று மலர்ந்துள்ளது. Kidaram என அழைக்கப்படும் அரிய வகை மலர் மலர்வது ஒரு அரிய விடயமாகும்.
Kidaram மலரின் கிழங்கு உணவிற்கு பெற்றுக் கொள்ளப்படும். இதனால் இதில் மலர் மலர்வதனை பார்ப்பதென்பது மிக அரிய காட்சியாகும்.
தற்போது இந்த மலர் ஹங்குராங்கெத்தை பிரதேசத்தில் மலர்ந்துள்ளது. குறித்த மலரினை பார்வையிடுவதற்கு ஏராளமான பொது மக்கள் அங்கு செல்லவதாக தெரிய வருகிறது.
இந்த மலர் நறுமணம் வீசுவதற்கு பதிலாக துர்நாற்றம் வீசுவது சிறப்பம்சம். குறித்த மலரில் உள்ள கிழங்கு வகை உள்நாட்டு மருத்துவ தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 800 கருக்கலைப்புச் சம்பவங்கள் பதிவாகின்றது என தென் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
தென் மாகாண தொற்றா நோய்ப் பிரிவின் பொறுப்பதிகாரி நலின் விஜேசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் நாள் ஒன்றுக்கு 1100 முதல் 1200 பிறப்புக்கள் பதிவாகின்றன. அதே போன்று நாள் ஒன்றுக்கு 700 முதல் 800 வரையில் கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன.
பிறக்கும் சிசுக்களின் எண்ணிக்கைக்கு நிகரான அளவில் கருக்கலைப்புக்கள் இடம்பெறுகின்றன. யார் என்ன சொன்னாலும் கருக்கலைப்பு என்பது ஓர் கொலையாகும். அது சட்டவிரோதமான செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் புதுமண தம்பதியினர் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பிரதமர் மோடியின் பழைய 500, 1000 ரூபாய் திட்டத்தால் பொதுமக்கள் கையில் பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.
இதனால் திருமணம் நிகழ்ச்சிகளும் தள்ளிபோடப்பட்டுள்ளது. அதையும் தாண்டி நடக்கும் திருமணங்களும் கையில் பணம் இல்லாத நேரத்தில் நன்றாக திட்டமிட்டே நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வட மாநிலம் ஒன்றில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் வரவேற்பில் ஸ்வைப் மெஷினுடன் அமர்ந்திருப்பது போன்ற ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
இதனை இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின்படி,சிம் கார்ட் ஒன்றுக்கு அரசு 200 ரூபா அறவிடுவதன் மூலம் வருடம் ஒன்றுக்கு அரசுக்கு 36 கோடி ரூபா இலாபம் கிடைக்கும் என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இது அப்பாவி மக்களிடம் இருந்து அரசு மேற்கொள்ளும் பகல் கொள்ளையாகும் எனவும் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்
“சிம் கார்ட் ஒன்றைப் பெறும்போது அதற்கு 200 ரூபா அறவிடப்படவுள்ளது. மாதம் ஒன்றுக்கு ஒன்றரை இலட்சம் சிம் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ஆகவே 2017ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தின்படி, மாதம் ஒன்றுக்கு அரசுக்கு மூன்று கோடி ரூபா கிடைக்கின்றது. வருடம் ஒன்றுக்கு 36 கோடி ரூபாவை அரசு பெற்றுக்கொள்ளும்.
இந்தப் பணம் அப்பாவி மக்களிடமிருந்துதான் பெறப்படவுள்ளது. அதுமட்டுமல்லாது வங்கியில் தங்களது பணத்தை மக்கள் மீளப் பெறும்போதும் பணம் அறவிடப்படுகின்றது.
10 ஆயிரம் ரூபா எடுத்தால் 5 ரூபா அறவிடப்படுகின்றது. தங்களது பணத்தை மீளப் பெறுவதற்கும் பணம் கொடுக்க வேண்டிய மோசமான நிலைக்கு இந்த நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆனால் 10 ஆயிரத்துக்கு 5 ரூபா என்றுதான் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்கள் சென்றதும் அது அதிகரிக்கப்படும்.
நெத்தலிக் கருவாடு 100 கிராமுக்கு 50 சதமும், சீனி ஒரு கிலோவுக்கு 2 ரூபாவும் குறைத்து மறுபுறம், வேறு வழியாக மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது.
இந்த அரசால் ஒன்றுமே முடியாது என்பதற்கு ஆதாரமாகத்தான் இந்த வரவு – செலவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உண்மையில், இது ஒரு வரவு-செலவு திட்டமே கிடையாது” என தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மும்பையில் குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றில் 10 மாத பெண் குழந்தையை அங்கு பணியாற்றும் பெண் ஒருவர் பந்தை தூக்கிவீசுவது போன்று வீசி கொடூரமாக தாக்கிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த 21 ஆம் திகதியன்று மும்பையில் உள்ள இந்த பள்ளியில் பணியாற்றும் அப்சனா என்று பராமரிப்பாளர், 10 மாத குழந்தையை காலால் மிதித்தும், பந்தை வீசுவது போன்று தரையில் குழந்தையை வீசியுள்ளார்.
இதில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தையின் தலையில் காயம் இருப்பதை கண்ட பெற்றோர் அன்று மாலை பொலிசில் புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பள்ளியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கமெரா பதிவை ஆய்வு செய்த மேற்கூறப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
தற்போது இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இப்பள்ளி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தான் திறக்கப்பட்டது என்றம் அப்சனா என்ற கடந்த மாதம் தான் பணியில் சேர்ந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறையில் உள்ள நளினியை முதல்வர் விடுதலை செய்வார் என நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள் கூறினார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யயப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் நளினியும் ஒருவர்.
அந்த கொலையின் பின்னணி பற்றியும், வழக்கு விசாரணை குறித்தும், வேலூர் சிறையில் நடைபெற்ற நளினி-பிரியங்கா காந்தி சந்திப்பு குறித்தும் பரபரப்பான தகவல்கள் அடங்கிய நளினியின் சுயசரிதை புத்தகம் “ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும்; பிரியங்கா, நளினி சந்திப்பும்” என்ற தலைப்பில் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன் தொகுத்துள்ள இந்த புத்தகத்தில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
யாழ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னை வடபழனியில் நடந்தது.
புத்தகத்தை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட, அதன் முதல் பிரதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
இந்த வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஓய்வு பெற்ற நீதிபதி அரிபரந்தாமன், ஓவியர் வீரசந்தானம், தியாகு, திருச்சி வேலுச்சாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் பேசிய நளினியின் தாயார் பத்மாவதி அம்மாள், கடந்த 26 ஆண்டுகளாக எனது மகள் நளினி சிறையில் கஷ்டத்தை அனுபவித்து வருகிறார்.
என் மகள் நளினியை முதல்வர் விடுவிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
ஒரு மாதத்தில் ஒரு தடவை மட்டுமே குளிக்கும் அமைச்சரொருவரின் பெயரை அறிந்து கொள்வதற்கு ஜனாதிபதி, அமைச்சர்கள் மட்டுமன்றி அவையே காத்திருந்த போதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், அந்த அமைச்சரின் பெயரைக் கூறாமலேயே, தனதுரையை நிறைவு செய்துகொண்டார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, கமத்தொழில், பெருந்தோட்டக் கைத்தொழில், மகாவலி மற்றும் சுற்றாடல் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றது.
அந்த விவாதத்தில் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதனும், உரையாற்றினார்.
மகாவலி அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், அவையிலிருந்து விவாதத்தை அவதானித்துக் கொண்டிருந்தார். உரையைத் தொடர்ந்த சார்ள்ஸ் எம்.பி,
ஜனாதிபதி அவர்களே மன்னார் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்ப்பட்ட குளங்கள் புனரமைக்கப்படாது, அழிவடைந்து செல்கின்றன. இவற்றைப் புனரமைக்குமாறு, எத்தனையோ முறை கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
ஆனால் அமைச்சர் ஒருவர், மன்னார் – தாராபுரம் குளத்தை, 150 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைத்து விட்டு, ஒரு மாதத்தில் அதுவும் ஒரு தடவை மட்டுமே அக்குளத்தில் குளிக்கின்றார் என்றார்.
அப்போது எழுந்த நீர்ப்பாசன மற்றும் நீரகவள முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, “ஒரு மாதத்தில் ஒரு தடவை மட்டுமே குளிக்கும் அமைச்சர் யார் என்பதை அறிவதற்கு, நான் ஆவலாக இருக்கின்றேன்.
ஏனெனில், நான் கைகளால் தண்ணீரை அள்ளித்தான் குளிப்பேன். 150 மில்லியன் ரூபாய் செலவில் குளத்தைக் கட்டிக் நான் குளிக்கமாட்டேன்” என்றார்.
தனதுரையைத் தொடர்ந்த சார்ள்ஸ் எம்.பி, “அமைச்சரே, அது நீங்கள் அல்லர் என்று அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் தெரிவித்ததுடன், “அது வேறோர் அமைச்சர்” என்றும் குறிப்பிட்டார்.
சரி… சரி… ஒருமாதத்தில் அதுவும் ஒரேயொரு தடவை மட்டுமே குளிக்கும் அமைச்சர் யாரென்று கூறுங்களேன் என்று, அமைச்சர் விஜித் விஜயமுனி கெஞ்சும் வகையில் கேட்டபோது, ஜனாதிபதியும் சிரித்துவிட்டார்.
அவையிலிருந்த இன்னும் சில அமைச்சர்களும் சிரித்துவிட்டனர். சிரிப்பை அடக்கிக்கொண்ட சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி, அது எமது மாவட்ட அமைச்சர் எனக்கூறி, உரையைத் தொடர்ந்தார்.