யாழ்.மாவட்டத்தில் பகல் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 பேரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 21 பவுண் நகைகள், ஒரு மடிகணனி, டிஜிட்டல் கமரா ஆகியவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ். நகரை அண்டிய பகுதிகளில் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகயன் தலைமையில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி 9 இலட்சம் ரூபா என கூறப்படுகின்றது. இதேபோல் கைது செய்யபட்டவர்கள் மேலும் 6 திருட்டு சம்பவங்களில் தொடர்பு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் கைது செய்யப்பட்ட 4 சந்தேக நபர்களும் நேற்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய மேலும் மூவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் சிம்பாபே அணி மோதவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சிம்பாபே இந்த வாய்ப்பை பெற்றுள்ளது.
இப் போட்டியில் டக்வத் லூயிஸ் அடிப்படையில் சிம்பாபே அணி 05 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாபே அணி 8 விக்கட்ட இழப்பிற்கு 218 ஓட்டங்களை பெற்றது.
இதனையடுத்து டக்வத் லூயிஸ் அடிப்படையில் 130 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களைப் பெற்று தோல்வியடைந்தது.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களால் சிங்கள மொழி பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மதிக்க தக்க மாணவன் ஒருவன் கடுமையாக தாக்கப்பட்டு லிந்துலை வைத்தியசாலையில் 25.11.2016 அன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 23ம் திகதி திங்கட்கிழமை அன்று வழமையாக குறித்த மாணவன் பாடசாலையில் இருந்து தனது வீட்டுக்கு செல்லும் போது இனந் தெரியாத நபர்கள் இவரை தாக்கியுள்ளனர்.
இதன்போது குறித்த மாணவன் மயக்கமடைந்து சில நிமிடங்களுக்கு பின் தனது வீட்டுக்கு சென்றதாக மாணவன் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். தாக்கிய நபர்கள் குறித்த மாணவனின் வலதுகரத்தில் “தமிழ்” என எழுதிவிட்டு சென்றதாக மாணவன் பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவனை மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக லிந்துலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வவுனியாவில் கடந்த 17.11.2016 அன்று வடமாணங்களில் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 4பேரை கைது செய்து பொலிசார் அவர்களிடம் மேற்கொண்டமேலதிக விசாரணைகளின் போது அவர்களிடமிருந்து பல்வேறு ஆயுதங்களை மீட்டனர்.
நீதிமன்ற அனுமதியுடன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த குறித்த சந்தேக நபர்கள் நால்வரும் நேற்று (25.11.2016) உத்தியோகப்பற்ற்ற பதில் நீதவான் ப.அன்ரன் புனிதநாயகம் அவர்களின் அலுவலகத்தில் பொலிஸார் ஆயர்படுத்தினர்.
நால்வரையும் 2016.12.09ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு பதில் நீதவான் ப.அன்ரன் புனிதநாயகம் தீர்ப்பளித்தார்.
இதன் போது செய்தி சேகரித்துக்கொண்டிருந்த செய்தியாளர்களை சந்தேகநபர்கள் தகாத வார்ததையினால் பேசியமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள மெக்டொனால்டு உணவகத்தில் வைத்து கல்லூரி மாணவி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டரில் உள்ள சல்போர்டில் கிரசன்ட் கிளை மெக்டொனால்டு உணவகத்திலே இத்தாக்குதல் நடந்துள்ளது.
இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட 18 வயதான Megan Westlotorn என்ற பெண் சம்பவம் குறித்து கூறியதாவது, சம்பவத்தின் போது எனது உணவை வாங்க நான் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது, நபர் ஒருவர் அங்கிருந்த மக்களிடம் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தேன்.
அந்த நபர் உடனே என்னை எங்கிருந்து வருகிறாய் என கேட்டார். நான் லண்டனில் இருந்து வருகிறேன் என கூறினேன்.
இதனையடுத்து அந்த நபர் கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்க தொடங்கினார். நான் லண்டன் வாசிகளை வெறுப்பவன் என கூறினார்.
திடீரென எதிர்பாராதவிதமாக எனது முகத்தில் குத்தினார். கண்விழித்து பார்த்தபோது நான் தரையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தேன்.
இச்சம்பவம் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது, என்ன நடந்தது என தெரியவில்லை. இதை நான் எதிர்ப்பார்க்கவே இல்லை என தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலை தொடர்ந்து லண்டனில் உள்ள மாணவர்களை ஜாக்கிரதையாக இருக்கும் படியும் Megan Westlotorn கோரியுள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் மான்செஸ்டர் பொலிசார். வெள்ளையாக சுமார் 5 அடி 4 அங்குலம் உள்ள நபரை தேடி வருகின்றனர்.
மேலும், தகவல் அறிந்தவர்கள் பொலிசாரை தொடர்பு கொள்ளும் படி அறிவித்துள்ளனர்.
கனடாவில் 5 ஆண்களை திருமணம் செய்து அவர்களில் 3 பேரை கொடூரமாக கொலை செய்துள்ள பெண்ணை பற்றிய தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் Nova Scotia மாகாணத்தை சேர்ந்த Melissa Ann Shepard(81) என்ற பெண் தான் தன்னுடைய வாழ்நாளில் இவ்வளவு கொடூரமான குற்றங்களை புரிந்துள்ளார்.
கணவர் 1
முதன் முதலாக மெலிசா Russel Shepard என்பவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், இருவரில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று கணவர் பிரிந்து சென்று விட்டார். மெலிசாவின் கொலைப்பட்டியலில் சேராத அதிர்ஷ்டக்கார முன்னாள் கணவர் இவர் தான்.
கணவர் 2
முதல் கணவரிடம் விவாகரத்து பெற்ற மெலிசா கடந்த 1992-ம் ஆண்டு Gordon Stewart என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.
ஒரு நாள் தனது கணவருக்கு அளவுக்கு அதிகமான போதை மருந்து கொடுத்து அவர் மீது கொடூரமாக கார் ஏற்றி கொலை செய்துள்ளார். இந்த குற்றத்திற்காக மெலிசாவிற்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது.
கணவர் 3
தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த மெலிசா 8 ஆண்டுகளுக்கு பிறகு Robert Friedrich என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்தார்.
ராபர்ட்டின் சொத்தில் பாதிக்கு மேல் தனது மனைவியான மெலிசா மீது எழுதி வைத்த பிறகு அவரை விஷம் வைத்து மெலிசா கொன்றதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த வழக்கில் மெலிசா மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை.
கணவர் 4
இச்சம்பவத்திற்கு பிறகு கனடாவை விட்டு வெளியேறிய மெலிசா அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் குடியேறினார். இங்கு ஒருவரை நான்காவதாக திருமணம் செய்து வசித்து வந்துள்ளார்.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவருக்கு தினமும் கண்டுபிடிக்கமுடியாத விஷம் கொடுத்து அவரை இறுதியில் கொலை செய்துள்ளார்.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், மெலிசாவிற்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
கணவர் 5
சிறையில் தண்டனை காலம் முடிந்து வெளியே வந்த மெலிசா 2012ம் ஆண்டு Fred Weeks என்பவரை திருமணம் செய்துள்ளார். முன்னாள் கணவர்களுக்கு செய்த அதே சதி திட்டத்தை இவருக்கும் மெலிசா செய்துள்ளார்.
கணவரின் தேநீரில் விஷம் கலந்து கொடுத்தபோது மருத்துவர்களால் அது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், கொலை முயற்சி வழக்கில் கைதான மெலிசாவிற்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
திருமணம் செய்த 3 கணவர்களையும் கொடூரமாக கொன்ற மெலிசா தற்போது தண்டனை காலம் முடிவடைந்து பொலிசார் விதித்த சில கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஹேலிபேக்ஸ் நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வருகிறார்.
சென்னையில் கமிஷனர் அலுவலகத்தில் கழுத்து அறுபட்டு ரத்தம் சொட்டிக் கொண்டிருந்த நிலையில் இளைஞனும் , அவரது தாயாரும் ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பெரியமேடு பகுதி நேவல் மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் பரத்(22). இவர் நேற்று மாலை கழுத்து அறுபட்டு ரத்தக் காயத்துடன் கமிஷனர் அலுவலகம் முன்பு தனது தாயாருடன் ஒரு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த கோரிக்கையில் சரஸ்வதி கூறியதாவது, எனது மகன் பரத் மீது பெரியமேடு பொலிசார் அடிக்கடி பொய் வழக்கு போட்டு காவல்நிலையம் அழைத்துச் செல்கின்றனர்.
இன்றுக் கூட (நேற்று) பெரியமேடு பொலிசார் பரத்தை விசாரணை நடத்த வேண்டும் என அழைத்துச் சென்றனர்.
இதனால் மனமுடைந்த எனது மகன் பரத் பெரியமேடு பொலிஸ் நிலையம் அருகே கழுத்தை பிளேடால் அறுத்து தற்கொலை செய்ய முயன்றதாக தெரிவித்துள்ளார்.
மேலும் உயர் பொலிஸ் அதிகாரிகள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரஸ்வதி கோரிக்கை வைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து விளக்கத்தைக் கேட்டறிந்த கமிஷனர் அலுவலக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி சரஸ்வதியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், கழுத்து அறுபட்டு காயத்துடன் இருந்த பரத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்கு நேற்று(24.11.2016) இரவு தீ வைக்கப்பட்டுள்ளது.
இனம் தெரியாத நபர்களால் திணைக்கள வளாகத்தில் குறித்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மூன்று லட்சம் பெறுமதியிலான மோட்டார் சைக்கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்தி விட்டு விடுதியில் நித்திரையில் இருந்த வேளையில் நள்ளிரவில் வந்த இனம் தெரியாத நபர்கள் காவோலைகளை மோட்டார் சைக்கிளின் மேல் போட்டு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் திணைக்கள அதிகாரிகளால் முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறையிட்டதினை தொடர்ந்து விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் அண்மைக்காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய் ,நாயாறு போன்ற பிரதேசங்களில் உள்ள களப்புக்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களோடு கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் முல்லை மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது
பம்பலப்பிடிய பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் தீடீர் என தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக குறித்த வாகனம் முற்றாக தீக்கிரையாகியுள்ளது.
முச்சக்கரவண்டியில் தீப்பரவல் ஏற்படும் போது அதனுள் குழந்தையொன்றும் மற்றும் பெண்ணொருவரும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் எந்தவித ஆபத்து ஏற்படும் முன் விரைவாக செயற்பட்ட அவர்கள் முச்சக்கரவண்டியில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் , தீயினை அணைப்பதற்கு அருகில் இருந்தவர்கள் முயற்சி செய்த போதும் அது முடியாமல் போயுள்ளது.
தீப்பரவலுக்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாளை வவுனியா வைரவப்புளியங்குளம் மைதானத்தில் படைத்தரப்பினரால் நடாத்தப்படவிருந்த களியாட்ட நிகழ்வு இன்று பிற்பகல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் உயிர்நீத்த பொதுமக்களுக்கும் மாவீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் மாவீரர் தினம் இடம்பெறவுள்ள நிலையில் படைத்தரப்பினரால் வவுனியாவில் மேற்கொள்ளப்படவிருந்த களியாட்ட நிகழ்வுகள் பொதுமக்களின் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு தினங்களாக இரவு பகலாக களியாட்ட நிகழ்வுகளை நடாத்துவதற்கு படைத்தரப்பினர் மேடை அலங்கார வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளதுடன், பொலிசார் இரவு பகல் காவல் பணிகளையும் மேற்கொண்டிருந்தனர்.
தற்போது மக்களின் எதிர்ப்பு காரணமாக அமைக்கப்பட்ட மேடைகளை சற்று முன்னர் அகற்றிக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா சேமமடு பகுதி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஒமந்தை பொலிஸ் பொறுப்பதிகாரி சுரேஸ் இந்திக்க சில்வா தலமையிலான குழுவினர் இன்று (25.11.2016) காலை 10.05 மணிக்கு சேமமடு அலகல்ல பகுதியில் 9 முதிரைக்குற்றிகளை வாகனத்துடன் சாரதியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.
பல நாட்களாக குறித்த நபர் சட்டவிரேதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் கைப்பற்றப்பட்ட இரண்டரை லட்சம் பெறுமதியான 9 முதிரைக் குற்றிகளையும் நாளை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா பிரபல பாடசாலையில் நேற்று முன்தினம் தரம் இரண்டு மாணவன் மீது ஆசிரியரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் கருத்துத் தெரிவிக்கையில்..
இச்சம்பவம் இடம்பெற்ற பாடசாலை தேசிய பாடசாலையாகும் எனவே நாம் நேரடியாக நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. இச்சம்பவம் தொடர்பாக மறுநாள் அப்பாடசாலையின் அதிபருடன் தொடர்பு கொண்டபோது அதிபர் உட்பட ஆசிரியர்களும் பாடசாலை மாணவர் மீது ஆசிரியர் தாக்குதல் நடத்தியது தவறு என்றே தெரிவித்துள்ளனர்.
பாடசாலை சார்ந்த வியடம் என்பதால் பொலிஸ் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டாம் என்று பாடசாலை சமூகத்தினால் தெரிவிக்கப்பட்டதையடுத்து தாக்கிய சம்பவம் சமரசத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இருந்தும் அந்த ஆசிரியர் மீது உள்ளக விசாரணைகள் மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்று வவுனியா தெற்கு வலயக் கல்விப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மஹரகம நகரில் ஆறுமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரின் பிருஷ்டத்தை பிளேட் ஒன்றினால் வெட்டியதாக கூறப்படும் நபரொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தர விடப்பட்டுள்ளது.
மகரகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இச் சந்தேக நபர் நேற்று நுகேகொடை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் டிசம்பர் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இச் சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு, காயமடைந்த பகுதியில் எட்டு தையல்கள் இடப் பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மஹரகம நகரிலுள்ள பஸ் நிலையத்தில் இக்கர்ப்பிணிப் பெண் பஸ்ஸொன்றில் ஏறிய போது அவரின் பின்னால் வந்த குறித்த சந்தேக நபர் பிளேடினால் அவரது பின்பகுதியை வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தமக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கமைய மஹரகம – தெஹிவளை வீதியில் வைத்து சந்தேகநரை கைது செய்ததாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி – கலவான பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான நபராவார். இதற்கு முன்னரும் மஹரகமவில் வைத்து சட்டக் கல்லூரி மாணவி மற்றும் வானொலி அறிவிப்பாளரொருவரினதும் பிருஷ்டங்களை வெட்டியவரும் இவரே என பொலிஸார் இனங்கண்டுள்ளனர்.
பரீட்சையின் போது வினாக்களுக்கு விடைகளை எழுதிக் கொண்டிருந்த மாணவர்களின் தலை முடியை ஆசிரியர் ஒருவர் கத்தரித்து அந்த முடிகளை அம் மாணவர்களின் சேர்ட் பைக்குள் திணித்த சம்பவம் பதுளை பிரதேச பாடசாலை ஒன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.
மேற்படி பாடசாலையில் ஆண்டு 9க்கான தவணைப் பரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர்களில் சிலர் தலை முடியை வளர்த்திருந்ததனால் பரீட்சையின் மேற்பார்வை கடமைகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவரே இவ்வாறு அவர்களின் தலைமுடியை கத்தரித்து, அவர்களின் மேலாடைப் பைக்குள் திணித்துள்ளார்.
இவ்வாறு ஆசிரியர் நடந்து கொண்டதால் தங்களது மனநிலை பாதிக்கப்பட்டு பரீட்சையில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு விடைகளை எழுத முடியாமல் போய்விட்டதாக அம் மாணவர்கள் தெரிவித்தனர்.
இதுபற்றி மாகாண கல்வித் திணைக்கள அதிகாரி ஒருவரிடம் வினவியபோது, முறைப்பாட்டு எழுத்து மூலமாக, சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் குறிப்பிட்ட ஆசிரியருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
நூர் தகாவ்ரி டிவி செய்தியாளர். இருபத்திரண்டு வயதான லிபியா வம்சாவளியைச் சேர்ந்தவர். படித்தது வளர்ந்தது அமெரிக்காவில். ஹிஜாபுடன் அமெரிக்க டிவியில் பேட்டி தரும் முதல் இஸ்லாமியப் பெண்மணி என்ற பெயர் எடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வளர்ந்தவர்.
ரேடியோ ஜாக்கியாக, டிவி செய்தியாளராக மாறிய நூர், இஸ்லாமிய மரபுப்படி முகம் மட்டும் தெரியும்படி உடை உடுத்திவருகிறார்.
பல விஐபிகளுடன் நூர் இஸ்லாமிய உடையில் நடத்திய பேட்டி, சனல்களில் ஒளிபரப்பாகி, நூரும் பிரபலமாகவே.. இதர செய்தியாளர்கள் நூரைப் பேட்டி எடுத்தனர். “பிளேபாய்´ பத்திரிகையும் நூரை அணுகியது. பிளேபாய் பத்திரிகைக்கு முழுக்க முழுக்க உடல் மறைத்து பேட்டி தந்த முதல் பெண்மணி என்று நூர் பெயர் பெற்றிருக்கிறார். இந்தப் பத்திரிகைக்கு பேட்டி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.
பொதுவாக இஸ்லாமிய பெண்களின் மத்தியில் ஹிஜாப் அணிந்து கூந்தலை மறைப்பதும், புர்கா அல்லது புர்கினி (பெரிய கவுன் மாதிரியான உடை) தரித்து உடலை மூடுவதும் பெருகி வருகிறது. துபாய் நீங்கலாக வளைகுடா நாடுகளில் ஹிஜாப், புர்கினி அணிவது கட்டாயம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இந்த ஹிஜாப், புர்கா அணிதல் விமர்சனத்திற்கு உள்ளாகிவருகிறது.
பிரான்ஸ் நாட்டில் புர்கா, ஹிஜாப் அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. ரியோ ஒலிம்பிக்சில் எகிப்து நாட்டு இளம் பெண்கள் ஹிஜாப் அணிந்ததுடன் முகம் தவிர்த்து உடல் மறைக்கும் ஆடை அணிந்து பீச் வாலிபால் ஆடினர். அதே சமயம் எதிர் அணியில், டூ பீஸ் பிகினி அணிந்து இதர பெண்கள் அணியினர் விளையாடினார்கள். எகிப்தியப் பெண்களை அனைத்து செய்தி ஊடகங்களும் ஹைலைட் செய்திருந்தன.
ரஹப் காதிப். முப்பத்திரண்டு வயதாகும் இவர் ஓர் அமெரிக்க இஸ்லாமியர். மூன்று குழந்தைகளுக்குத் தாயானாலும் காதிப் ஆறு முறை ஓடியிருக்கும் மாரத்தான் வீராங்கனை. காதிப்பை அங்கீகரிக்கும் விதமாக ‛Womens Running’ என்ற பெண்களுக்கான பிரபல ஃபிட்னெஸ் பத்திரிகை, காதிப் படத்தை அட்டையில் பிரசுரித்து கெளரவித்துள்ளது.
சர்வதேச அளவில் ஆடைகள் விற்பனையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ‛H & M’ நிறுவனம், ஹிஜாப் உடையை பிரபலப்படுத்த முதல் தடவையாக இஸ்லாமிய பெண்ணான மரியா இட்ரிஸ்ஸியை மொடலாக்கி விளம்பரம் செய்தது.
பிரபல ஆடை வடிவமைப்பாளர்களான டொமினிகோ டோல்ஸ், ஸ்டெபானோ காபன்னா போன்றோர் ஹிஜாப், புர்கினி உடைகளை வடிவமைத்து விற்பனைக்கு விட ஆரம்பித்து விட்டனர். டாமி ஹில்பிஜெர், DKNY, மேங்கோ போன்ற ஆயத்த ஆடை நிறுவனங்களும் ஹிஜாப், புர்கினி விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டனர். ஒரு பக்கம் ஹிஜாப், புர்கினி குறித்து விமர்சனங்கள் எழுந்தாலும், வர்த்தக ரீதியாக ஹிஜாப், புர்கினியை வடிவமைத்து விற்பனை செய்வதில் பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் ஆர்வம் காட்டிவருவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
நியூயார்க்கில் சென்ற மாதம் நடந்த அழகிகளின் அணிவகுப்பில், ஹிஜாப், புர்கினி அணிந்த பெண்கள் கலந்து கொண்டு அசத்தினர். தாம்சன் ராய்ட்டர் நிறுவனத்தின் கணக்கெடுப்பு, இஸ்லாமியர்கள் தங்கள் பாரம்பரிய உடைகள் மற்றும் காலணிக்காக ஓர் ஆண்டில் சுமார் 266 பில்லியன் டாலர்கள் (17,555 பில்லியன் ரூபாய்) செலவு செய்கிறார்களாம். அது 2019 -ஆம் ஆண்டில் 488 பில்லியனாக உயரும் என்று கணித்திருக்கிறார்கள். இந்த டிரென்டைப் பயன்படுத்தி ஹிஜாப், புர்கினி உடைகளை விற்று கல்லா கட்ட வணிக நிறுவனங்கள் முடிவு செய்திருக்கின்றன.
வணிகர்கள் வியாபாரத்தில் மத உணர்வுகளை பார்ப்பதில்லை. வியாபாரம்… விற்பனையை அதிகரித்தல் என்பது மட்டுமே அவர்களின் நோக்கம். ஹிஜாப், புர்கினிக்கு ஆங்காங்கே எதிர்ப்பு, தடை விமர்சனங்கள் இருந்தாலும், பல நாடுகளில் வணிகம் காரணமாக ஹிஜாப் புர்கினிக்கு அங்கீகாரம் தருகிறார்களோ இல்லையோ ஹிஜாப் புர்கினி விற்பனைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்து விட்டார்கள்.
தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் 10 வருடங்களுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஜெனிலியா. இவருக்கும் இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்குக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நிறைய வாய்ப்புகள் வந்தும் ஏற்கவில்லை.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெனிலியா தற்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். இந்தியில் போர்ஸ்-2 என்ற படத்தில் கெளரவ வேடத்தில் தோன்றினார். தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்கவும் கதை கேட்டு வருகிறார். குழந்தை பெற்ற பிறகு முன்பு போல் உங்களுக்கு சினிமாவில் வரவேற்பு இருக்குமா என்று ஜெனிலியாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது..
திருமணமான நடிகை, குழந்தை பெற்ற நடிகை என்றெல்லாம் ஒதுக்க கூடாது. அவர்களாலும் மற்றவர்களைப்போல் சிறப்பாக நடிக்க முடியும். என்னப்பொறுத்தவரை வயதான பிறகுதான் நடிகர்களுக்கு திறமை வருகிறது. இளமையான காலத்தில் நடித்ததை விட நன்றாக நடிக்கிறார்கள். நான் திருமணத்துக்கு முன்பு நடித்ததை விட இப்போது சிறப்பாக நடிப்பதாக உணர்கிறேன்.
காரணம் திருமணத்துக்கு பிறகு நிறைய அனுபவங்கள் கிடைத்து இருக்கிறது. திருமணம், குழந்தைகள் என்பது எல்லோரது வாழ்க்கையிலும் அவசியமானது. அது வாழ்க்கையின் ஒரு அங்கம். அந்தந்த காலத்தில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் குழந்தைகள் பெற்றுவிட்டதால் சினிமாவில் பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கவில்லை. திறமையாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை முன்பை விட அதிகமாகி இருக்கிறது.
திருமணமாகி குழந்தை பெற்ற பிறகு நிறைய நடிகைகள் சினிமாவில் சாதித்து இருக்கிறார்கள். ஐஸ்வர்யாராய் குழந்தை பெற்ற பிறகும் நிறைய படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். கொங்கனா சென்னும் திருமணத்துக்கு பிறகு சாதித்தார் என்று ஜெனிலியா தெரிவித்தார்.