பிரித்தானிய நாட்டில் புற்றுநோயால் உயிரிழந்த 14 வயது சிறுமியின் இறுதி வேண்டுகோளை நிறைவேற்றும் வகையில் அந்நாட்டு நீதிமன்றம் முதன் முதலாக ஒரு வரலாற்று தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் பெயர் வெளியிடப்படாத 14 வயது சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சிறுமிக்கு புற்றுநோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த ஓராண்டு காலமாக சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அவரை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால், 14 வயது சிறுமியான அவர் உயிரிழக்க விரும்பவில்லை. இந்நோயில் இருந்து குணமாகி மீண்டும் உயிர் பிழைக்க என்ன வழி என இணையத்தளங்களில் தேடியுள்ளார்.
அப்போது, இறந்த உடல்களை கடுமையான குளிர் சூழப்பட்ட நிலையில் பதனிடும் முறையை சிறுமி அறிந்துள்ளார்.
‘நான் இறந்த பின்னரும் எனது உடலை இதுபோல் குளிரூட்டப்பட்ட நிலையில் பாதுகாக்கப்பட்டால் என்றாவது ஒருநாள் நான் நிச்சயம் உயிர் பிழைத்து எழுவேன்’ என அந்த சிறுமி நம்பியுள்ளார்.
இதனை தனது பெற்றோருடன் தெரிவித்தபோது அவரது தந்தை இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
எனினும், தனது முயற்சியை கைவிடாத அச்சிறுமி நீதிமன்றத்தில் தனது இறுதி வேண்டுகோளை கூறி தான் இறந்த பின்னர் உடலை எனது தாயார் பதனப்படுத்த நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரித்தானிய நாட்டு வரலாற்றில் இதுபோன்ற வழக்கு பதியப்படுவது இதுவே முதல் முறையாகும்.
வழக்கு பதிவு செய்த சிறுமி கடந்த மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும், சிறுமி இறக்கும் நேரத்தில் இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. சிறுமியின் உருக்கமான கோரிக்கையை ஏற்ற நீதிபதி அவரது விருப்பப்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாரு உத்தரவிட்டுள்ளார்.
இதன் பின்னர், சிறுமி உயிரிழந்ததும் அவரது உடலை அமெரிக்க கொண்டு சென்ற அவரது தாயார் அதனை தற்போது குளிரூட்டப்பட்ட நிலையில் பதப்படுத்தி பாதுகாத்து வருகிறார்.
கடந்த ஒரு மாத காலமாக நிகழ்ந்து வரும் இச்சம்பவம் தொடர்பான ரகசிய தகவல்கள் நேற்று தான் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
சிறுமியின் விருப்பம் நிறைவேறி அவர் மீண்டும் உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கையில் அவரது தாயார் காத்திருப்பது பிரித்தானிய பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
VFS Globalஇன் புதிய விசா விண்ணப்ப நிலையம் நேற்று புதிய இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புதிய நிலைத்தை இலங்கைக்கான அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கொழும்பில் நேற்று திறந்து வைத்தார்.
புதிய விசா விண்ணப்ப நிலையம் தற்போது அர்னல்ட் ரத்நாயக்க மாவத்தையில் செயற்படத் தொடங்கியுள்ளது.
இந்த அலுவலகம் வாடிக்கையாளர்களுக்கு அவுஸ்திரேலியா மற்றும் பிரித்தானியாவுக்காக இலகுவாகவும் விரைவாகவும் விசா பெற்றுக் கொள்ள உதவுகின்றது. விசா விண்ணப்ப நிலையம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 2.00 மணி வரை திறந்து திறந்திருக்கும்
பிரித்தானியவிற்கான வருகை விசாவுக்கான விண்ணப்பங்களின் அதிகரிப்பு காரணமாக உள்ளூர் பங்குதாரரான VFS Global இந்த புதிய விசா விண்ணப்ப நிலையத்தை திறந்துள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் James Dauris தெரிவித்துள்ளார்.
விசா சேவை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு விரைவான மற்றும் எளிமையான புதிய வருகை விசா விண்ணப்ப படிவத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வாடிக்கையாளர்கள் ஒழுங்காக தங்கள் விசா விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்துக் கொள்வதற்காக தமிழ் மற்றும் சிங்கள மொழியிலும் விசா விண்ணப்ப படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து அவுஸ்ரேலியாவிற்கு புகலிடம் கோரிய அஜிதன் யுவராஜன் என்ற இளைஞர் திடீர் மரணமடைந்துள்ளார்.
சிட்னியில் வசித்து வந்த இவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாகவும் இதனால் அவர் நேற்று திடீர் மரணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அஜிதன் இயற்கை மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அஜிதனின் உறவினர்கள் யாரும் அவுஸ்ரேலியாவில் இல்லாத நிலையில் இஅவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுசெல்வதா அல்லது அவரது உறவினர்களை இங்கு வரவழைப்பதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிடப்படுகிறது.
‘மெராக்’ கப்பல் மூலம் இ 2013 ஆம் ஆண்டு அஜிதன் அவுஸ்ரேலியாவில் புகலிடம் கோரியமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மகாறம்பைக்குளத்தில் நேற்றைய தினம் (17.11.2016) இரவு 8 மணியளவில் நடந்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
தனது வீட்டில் இருந்து சுய தேவைக்காக கடைக்குச் சென்று திரும்பிய நபரான சுப்பையா தயாகரன்(27) என்பவர் மீதே வாள் வீச்சு இடம்பெற்றுள்ளது. இவ் வாள்வீச்சில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இவ் வாள்வெட்டு சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலை காரணமாக கடும் மழை மற்றும் பனி மூட்டத்துடனான கால நிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு, சப்ரகமுவ, மத்திய, மேல், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் கடும் இடியுடனான மழை பெய்வதற்கான அதிக சாத்தியம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பிரதேசங்களில் 100 மி.மீ மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாக கூடும். அத்தோடு கிழக்கு மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. கடற்சார்ந்த பகுதிகளிலும் நாடு பூராகவுமுள்ள சில பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதற்கான சூழ்நிலை காணப்படுகின்றது. இதனால் தெற்கு, கிழக்கு, மற்றும் வடக்கு கடற்பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். குறித்த காலநிலை சில நாட்கள் தொடருவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன.
மேலும் தற்காலிகமாக நிலைக்கொண்டுள்ள காற்றலுத்தம் பலத்த காற்றாக மாறுவதற்கான சூழல் காணப்படுகின்றது. இதனால் கடும் மின்னலும் ஏற்படலாம் எனவே மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட்டு பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் தினைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழையுடனான காலநிலையால் அதிவேக வீதிகளில் பனிமூட்டம் சூழ்ந்து காணப்படுவதால் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். தெற்கு அதிவேக வீதியின் தொடாங்கொடையில் இருந்து, கெலனிகம வரையிலும், கஹதுடுவை மற்றும் கொட்டாவை மாற்றல்களிலும் அதிக பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அதிவேக வீதிகளில் பயணிக்கும் போது மணிக்கு 60 கிலோமீற்றர் என்ற வேகத்தில் பயணிக்குமாறும், வாகனத்தின் முன் – பின் விளக்குகளை ஒளிரவிடுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மழை பாங்கான பகுதிகளில் வாழும் மக்கள் தொடர் மழை பெய்யும் பட்சத்தில் மண்சரிவு குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனமான அரியாசனத்தில் அமர்ந்த பாராளுமன்றத்தில் பொறியியலாளராக பணியாற்றும் அதிகாரி தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த 16ம் திகதி புதன்கிழமை சபையமர்வு நிறைவடைந்ததன் பின்னர் குறித்த நபர் சபாநாயகரின் அரியாசனத்தில் அமர்ந்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹார சபாநாயகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன்படி இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்ந்து பார்க்குமாறு சபாநாயகரினால் பாராளுமன்ற செயலாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரியில் கடந்த 2006.11.18 அன்று இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 5மாணவர்களின் 10ம் ஆண்டு நினைவு தினம் வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரியில் இன்று (18.11.2016) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
வெளிக்களப் பயிற்சியில் மாணவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை கிளைமோர் தாக்குதல் இடம்பெற்றது. இதனையடுத்து மாணவர்கள் சிலர் நிலத்தில் படுத்தபோது. நிலத்தில் படுத்த மாணவர்கள் இராணுவத்தினர் தம்வசம் வருமாறு அழைத்து அவர்களை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
இச் சம்பவத்தில் களவாஞ்சிக்குடியைச் சேர்ந்த இராமச்சந்திரன் அச்சுதன் (வயது 25) , சுந்தரலிங்கம் ஐங்கரன் (வயது 21), திருமலையை சேர்ந்த சித்திரவேல் கோபிநாத் (வயது 22), மட்டக்களப்பு ஏறாவூரைச் சேர்ந்த சித்திக் அசான் நிஹான் மொகமட் ( வயது 22) , வவுனியாவைச் சேர்ந்த திருநாவுக்கரசு சிந்துஜன் (வயது 21) ஆகிய மாணவர்களே படுகொலை செய்யப்பட்டவர்களாவர்.
இவர்களின் நினைவுதினம் இன்று விவசாயக் கல்லூரியில் அனுஸ்டிக்கப்பட்டதுடன் இரத்ததான நிகழ்வு, தாக சாந்தியும் இடம்பெற்றது.
10 வருடங்கள் கடந்தும் இது வரை இவர்களுக்கான நீதி கிடைக்கப்பெறவில்லை என மாணவர்கள் தங்களது ஆதகங்களை வெளியிட்டனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வவுனியா வளாகத்தின் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (18.11.2016) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய நடைபவனியானது சிந்தாமணிப்பிள்ளையார் கோவிலூடாக கண்டி வீதி சென்று பஸார் வீதி ஊடாக ஹொறவப்பொத்தான வீதிவழியாக மன்னார் வீதி சென்று பூங்கா வீதியிலிருக்கும் பல்கலைக்கழக வளாகத்திற்கு நடைபவனி சென்றடைந்தது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வடமாகாண இணைக்கப்பட்ட பல்கலைக்கழக கல்லூரியாக 1991ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1997ம் ஆண்டு வவுனியா வளாகமாக தரம் உயர்த்தப்பட்டு பிரயோக விஞ்ஞான பீடம் மற்றும் வியாபார கற்கைகள் பீடத்தையும் உருவாக்கி 900 பட்டதாரிகள் பட்டக்கீழ்ப்படிப்பு மாணவர்களை உள்ளடக்கியதான உன்னதமான ஓர் உயர் கல்வி நிறுவனமாக சேவையாற்றி வருகின்றது.
தேசிய அளவில் வினைத்திறன்மிகு பட்டதாரிகளை உருவாக்கி தேசிய அபிவிருத்தியில் ஓர் உன்னதமான பங்களிப்பை வழங்குகின்ற ஓர் கல்வி நிறுவனமாக இனங்காணப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கல்வியாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பொது அமைப்புக்கள்,பல்கலைக்கழக மாணவர்கள், பழைய மாணவர்கள், பல்கலைக்கழக உத்தியோகர்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மனிதாபிமானம் தற்போது செத்து விட்டது, உலகம் அழிவை நோக்கி பயணிக்கின்றது என்பதனை நிரூபிக்கும் வகையில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நேற்று நைஜீரிய நாட்டின் ஒரு நகரத்தில் இடம்பெற்றுள்ளது.
7 வயது சிறுவன் ஒருவன், உணவகம் ஒன்றில் திருட முயன்ற குற்றத்திற்காக அதி பயங்கரமாக அடித்து, உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் ஊடாக பரவிவருகின்றது.
கெறி எனப்படும் ஆப்பிரிக்காவில் பிரபலமான வடை வகை உணவை திருட முயன்ற குற்றத்திற்காக, இத்தகைய கொடூர தண்டனை பொது மக்கள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடித்த மாயா திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கொழும்பு ரீகல் திரையரங்கிற்கு சென்றுள்ளார்.
ஜனாதிபதி இந்த படத்தை பார்ப்பதற்கு தனது பாரியாரையும் அழைத்து சென்றுள்ளார்.
மாயா திரைப்படத்தை பார்ப்பதற்காக அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, பைஸர் முஸ்தப்பா, மஹிந்த அமரவீர, பாலித தேவரபெரும, தலதா அத்துகோரல, அனோமா கமகே ஆகியோரும் சென்றுள்ளனர்.
தென்னிந்தியாவில் வெளியான காஞ்சனா என்ற திரைப்படத்தினை மொழிமாற்றம் செய்யப்பட்டு மாயா திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் ரஞ்சன் ராமநாயக்க பெண் வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையர்கள் இந்தியா செல்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்வது நல்லது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்கள் செல்லாது என்றும், அதனை மார்கழி மாதம் 30ம் திகதிக்கு முன்னர் மாற்றிக் கொள்ளலாம் என்றும் அதிரடியாக அறிவித்தல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா முழுவதும், இப்பொழுது பணப்பரிமாற்றத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதுடன், அங்குள்ள மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டுவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்தியாவில் பணப்பிரச்சினை ஓரளவிற்கு தீரும் வரை சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை தவிர்த்துக் கொள்வதானது அவர்களின் பயணத்திற்கு நன்மையை ஏற்படுத்தும்.
ஏனெனில் இந்தியர்களே தற்பொழுது தங்களிடம் இருக்கும் பணத்தினை மாற்றிக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் துவண்டு போயிருக்கின்றனர்.
குறிப்பாக இந்திய பணத்தினை மாற்றுவதற்கு வங்கிகளிலும், தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர்.
தவிர பணத்தினை மாற்றுவதற்கு பல்வேறு நடைமுறைச்சிக்கல்களும் இப்பொழுது ஏற்பட்டிருக்கின்றது. ஆதார் அட்டை, பான் கார்ட் போன்றன ஆதாரமாக வங்கிகளில் காண்பிக்கப்பட வேண்டும் என மத்திய அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்திருக்கின்றது.
இதனால் சுற்றுலாவாக வருவோர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிவருகின்றனர். மேலும் இந்தியாவில் பெரும்பாலான ஏடிஎம் மெசின்களும் தற்பொழுது இயங்காத நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் தான் இவ்வாறு அறிவுறுத்தல் வெளிவந்துள்ளது.
முன்னதாக இந்தியா சென்றுள்ள இலங்கையர்கள் அங்கு பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்து.
குறிப்பாக புனித யாத்திரை சென்றுள்ள சுமார் 500ற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர் என்று குறித்த ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் இது குறித்து இந்திய துணைத்தூதரகம் உத்தியோகபூர்வமாக எந்தச் செய்திகளையும் இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவின் அரசு மருத்துவமனையில் நடந்த அடுத்த அவலம் இது. அங்கு அரசு மருத்துவமனையில் அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரை முதல் தளத்தில் அட்மிட் செய்ய வீல்சேரோ,ஸ்ட்ரச்சரோ இல்லை.
இதனால் அந்த 45 வயது மதிக்கத்தக்கவரை அவரது மனைவியே தரையில் இழுத்து செல்லும் கொடுமையான காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், ஒடிசாவில் தனது மனைவியைச் சுமந்து சென்ற கணவரைத் தொடர்ந்து பல அவலக் காட்சிகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளன. எப்போது மாறும் இந்த காட்சி?
வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காலி கோட்டை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது நேற்று முன்தினம் இரவு நபர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்துள்ளார்.
பெண் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்குள் பிரவேசித்த நபர், அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயற்சித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் ஹோட்டல் உரியைமாளரின் நண்பர் எனவும் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
34 வயதான அவுஸ்திரேலிய பெண் கொழும்பில் உள்ள நண்பர் ஒருவருடன் ஹோட்டலில் இரண்டு அறைகளில் தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
யாரோ ஒருவர் இருட்டில் தமது ஆடைகளை களைவதனை உணர்ந்த பெண் கூச்சலிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நண்பர், ஹோட்டல் பணியாளர்கள், முகாமையாளர் மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த நபர் ஆகியோர் வந்து இதனை மேற்கொண்டவரை தேடியுள்ளனர்.
பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபரே, இந்த குற்றச் செயலை மேற்கொண்டவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் மறுநாள் காலை சீ.சீ.ரீ.வி கமரா காட்சிகளை கண்காணித்த போது சந்தேக நபர் பிடிபட்டுள்ளார். சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு சில ஆண்டுகளாக மலையாள திரைப்பட உலகை சேர்ந்தவர்கள் ஏசியா விஷன் விருது என்ற பெயரில் சினிமா விருதுகள் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி 18ம் திகதி ஷார்ஜாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்பட உலகை சேர்ந்த பல கலைஞர்கள் விருது பெறவிருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவுக்கான விருது பிரிவில் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படத்திற்கு 5 விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த படமாக ‘தர்மதுரை’ தெரிவு செய்யப்பட, இவ்விருதை தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் பெற்றுக் கொள்கிறார்.
சிறந்த இயக்குநராக சீனுராமசாமி, சிறந்த நடிகராக விஜய்சேதுபதி, சிறந்த நடிகையாக தமன்னா மற்றும் சிறந்த ஒளிப்பதிவாளராக ஷாஜி ஆகியோர் ‘தர்மதுரை’க்காக விருதுகள் பெறவிருக்கின்றனர்.
‘ஐ’ மற்றும் ‘தெறி’யில் நடித்த எமி ஜாக்சனுக்கு சிறப்பு விருது, ‘தெறி’யில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனாவின் மகள் நைனிகா ஆகியோரும் விருது பெறவிருக்கிறார்கள்.
மலையாள திரையுலகை சேர்ந்த மோகன்லால், நிவின் பாலி, மஞ்சு வாரியர், பொலிவூட்டைச் சேர்ந்த சோனம் கபூர், ராதிகா ஆப்தே, தெலுங்கு பட உலகைச் சேர்ந்த ராம்சரண் உட்பட பல பிரபலங்கள் இவ்விழாவில் விருது பெறவிருக்கிறார்கள்.
மாலைதீவுக்கு பாலியல் தொழிலாளிகளாக இலங்கையிலிருந்து பெண்களை ஏற்றுமதி செய்து வந்த மிகப்பெரிய வர்த்தக வலையமைப்புடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கடுவலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த ஒன்றரை மாத நடவடிக்கையின் விளைவாக இச்சந்தேக நபர்கள் இருவரும் கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சந்தேக நபர்களினால் பத்தரமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த விடுதியொன்றில் இருந்து, இதுவரையில் பாலியல் தொழிலாளிகளாக அனுப்பப்பட்ட பெண்களின் புகைப்படங்களும் இனிவரும் காலங்களில் அனுப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த பெண்கள் சிலரின் புகைப்படங்களுடன் கடவுச்சீட்டுகள் பலவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
இச்சந்தேக நபர்கள் பெண் ஒருவருக்கு மாதமொன்றுக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை கொடுப்பனவாக வழங்கி இலங்கையை சேர்ந்த பெண்களை இவ்வாறு மாலைதீவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அத்துடன் 100க்கும் அதிகமான இலங்கை பெண்கள் இவ்வாறு சந்தேக நபர்களால் மாலைதீவுக்கு பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பங்களாதேஷ் பிரஜையொருவரை கைது செய்வதற்காக பணியகத்தினர் விசேட விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.