ஒரு தொகை வெளிநாட்டு நாணயத்தாள்களை இந்தியாவிற்கு கடத்த முயற்சித்த நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டு நாணயத்தாள்கள் 6.6 மில்லியன் பெறுமதியுடையது என சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்த 45 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரஜையின் பொதியிலிருந்து அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர் ஒரு இலட்சம் அபராத பணம் செலுத்தியதை அடுத்து அவரை விடுதலை செய்துள்ளதாக சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் படி மார்ச் மாதம் புதிய உள்நாட்டு விமானம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை விமானப்படை, ஹோட்டல் தொழிற்துறை , பயண முகவர்கள் மற்றும் ஏனைய தனியார்துறை பங்குதாரர்கள் உள்ளிட்ட ஒரு பொது தனியார் கூட்டு ஒப்பந்தம் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் நாடாளுமன்றத்தில் இடம் பெற்ற 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாசிப்பின் போதே நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த திட்டத்திற்காக ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் விமான போக்குவரத்து மையமாக நிலைநிறுத்திக் கொள்ள சாத்தியம் உள்ளதாகவும், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
விஜய் தனது மகன் சஞ்சய்யை வேலாயுதம் படத்தின் அறிமுக பாடலின் இறுதியில் சிறிது நேரம் நடனம் ஆட வைத்திருந்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஜெயம் ரவியும் தனது மகனை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகிறார். ஜெயம் ரவி தற்போது நடிக்கவிருக்கும் ‘டிக் டிக் டிக்’ படத்தில்தான் ஜெயம் ரவியின் மூத்த மகன் ஆரவ் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
இப்படத்தை ‘மிருதன்’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இயக்குகிறார். இப்படத்தின் நாயகியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. விண்வெளி சம்பந்தப்பட்ட கதையை மையமாக வைத்து இப்படத்தை எடுக்கவிருக்கிறார்கள்.
இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். ‘மிருதன்’ படத்திற்கு பிறகு அதேகூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன் தொலைந்த தனது திருமண மோதிரத்தினை தன் தோட்டத்தில் அறுவடைச் செய்த கரட்டில் கண்டுபிடித்துள்ளார்.
ஜேர்மனியில் வசிக்கும் 82 வயது நிரம்பிய நபரின் திருமண மோதிரம் கடந்த 3 வருடங்களுக்கு முன் தோட்டத்தில் வைத்து தொலைந்து போனது.
காணாமல் போன தன்னுடைய திருமண மோதிரத்தினை குறித்த நபர் பல முறை தேடியும் கிடைக்கவில்லை.
திருமண மோதிரம் தொலைந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையில் கடந்த வாரம் தன்னுடைய தோட்டத்தில் பயிரிட்டிருந்த கரட்களை அறுவடை செய்த குறித்த நபரிற்கு தான் தொலைத்த மோதிரம் கிடைத்துள்ளது.
குறித்த மோதிரம் மண்ணினுள் புதைந்துள்ள நிலையில் அதன் மேல் பயிரிடப்பட்ட கரட் குறித்த மோதிரத்துடன் இணைந்து முளைத்துள்ளது.
மீண்டும் கிடைக்காது என தான் நினைத்த குறித்த மோதிரம் தனக்கு கிடைத்தமையால் தான் மிகவும் அதிஷ்டசாலி என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா லண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ள புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
நியுஸிலாந்து அணிக்கெதிரான போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து இவர் அறுவை சிகிச்சை செய்துக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இவர் எதிர்வரும் மூன்று மாதங்கள் வரை போட்டிகளில் கலந்துக்கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்தது எனவும், உங்கள் அனைவரினதும் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலையொன்றில் தரம் 2 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரை ஒரு மாத காலமாக பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த வாகன சாரதியை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டார்.
ஹொரதல் பிரடிகே சுகுமல் குமாரசிங்க என்ற 32 வயதுடைய திருமணமான நபரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார். சந்தேக நபரை நீர்கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி கட்டுநாயக்காவிலிருந்து நீர்கொழும்பிலுள்ள சர்வதேச பாடசாலைக்கு பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் செல்லும் சந்தேக நபரின் வாகனத்தில் பாடசாலைக்கு சென்று வந்துள்ளார். அந்த வாகனத்தில் பயணிக்கும் ஏனைய மாணவர்கள் பாடசாலையருகில் இறங்கிய பின்னர் குறித்த மாணவியை வாகனத்தில் வைத்து சந்தேக நபர் கடந்த ஒரு மாத காலமாக பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியிடம் கூறியுள்ளதை தொடர்ந்து சிறுமியின் பாட்டி நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்து பொலிஸார் மன்றில் ஆஜர் செய்த போது எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவதான் உத்தரவிட்டார்.
நீர் கட்டணம் டிசம்பர் முதலாம் திகதிமுதல் 30 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நீர் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே பாலம் அமைப்பதற்கு இந்தியா தயாராகவே இருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் சம்மதம் தெரிவித்தால் பாரதி கண்ட கனவு நிறைவேறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராமேஸ்வரத்தில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்ட வீதியொன்றைப் பார்வையிட சென்றிருந்தபோதே அவர் இதனைக் கூறியதாக த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
புதுடில்லியில் நடைபெற்ற மீனவர்கள் தொடர்பான பேச்சுவார்த்தையின்போது, தமிழக – இலங்கை மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண்பதற்கு இணக்கம் காணப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதன் ஒரு கட்டமாக அடுத்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி இரு நாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டத்திலான கலந்துரையாடல் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலின்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 115 படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் ஒலெய்யாவிலுள்ள நலன்புரி நிலையத்தில் உயிரிழந்த பழனியாண்டி கற்பகவள்ளியின் பூதவுடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை சவுதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் மேற்கொண்டு வருகிறது.
மஸ்கெலியா – சாமிமலை பகுதியிலிருந்து தொழிலுக்காக கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சவுதி அரேபியாவிற்குச் சென்றிருந்த குறித்த பணிப்பெண், கடந்த 31 ஆம் திகதி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின.
கற்பகவள்ளி உளநலம் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்ததாக ரியாத்திலுள்ள இலங்கை தூதரகத்தை மேற்கோள்காட்டி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்களுடன் பூதவுடல் இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ளதாக பணியகத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் உப்புல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
பணிப்பெண்ணின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் கருதினால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராகவே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சவுதி அரேபியாவின் சட்டத்திற்குப் புறம்பாக சேவையில் ஈடுபட்டு, பிரச்சினைகளை எதிர்நோக்கும் பணிப்பெண்களுக்காகவே ஒலெய்யாவில் நலன்புரி நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் சுட்டிக்காட்டியது.
இந்த நிலையத்தில் ஆயிரக்கணக்கான பணிப்பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களை மறுத்துள்ள தூதரகம் தற்போது 82 இலங்கை பணிப்பெண்கள் மாத்திரமே அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரபல நடிகையும் சின்னத்திரை தொகுப்பாளினியுமான சபர்ணா மரணமடைந்துள்ளார்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி, பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த இவருக்கு பின்னர் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன.
அவர் மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் இன்று அவரது உடல் அழுகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தற்கொலைக்கான முழுக்காரணம் என்னவென்று தெரியவில்லை. கோவையைச் சேர்ந்த சபர்ணா படிக்காதவன், காளை, பூஜை போன்ற படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலரியே வெற்றி பெறுவார் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி வாகை சூடியுள்ள டிரம்புக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்புக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவுடன் ஆரோக்கியமாக பணி செய்வதை தவிர்த்து தனிமைப்படுத்தல், அடுத்த நாடுகளின் விவகாரங்களில் தலையிடல் போன்றவற்றில் ஈடுபடக் கூடாது என்று சீனா தெரிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கா தான் முதலில் முக்கியம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஒருதலைப்பட்ச வெளியுறவுக் கொள்கை டிரம்ப் தனது பிரச்சாரத்தின் போது வலியுறுத்தி வந்தார்.
மேலும், தனது பிரச்சாரத்தின் போது சீனா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை டிரம்ப் கூறி வந்தார். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பின்மைக்கு சீனா தான் காரணம் என்றும் சாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக 500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது எப்படியெல்லாம் எதிர்விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவம், மராட்டிய மாநிலத்தின் கலாசார தலைநகரம் என்ற பெருமைக்குரிய புனே நகரில் நடந்திருக்கிறது.
புனே மாநகராட்சியில் குப்பைகளை சேகரிக்கிற பணியில் ஈடுபட்டுள்ளவர், பெண் தொழிலாளி சாந்தா ஓவ்ஹல்.
இவர் நேற்று அங்குள்ள கல்லூரி சாலையில் குப்பைகளை சேகரித்தபோது ஒரு பிளாஸ்டிக் பையை கண்டெடுத்தார். அதை அவர் திறந்து பார்த்தபோது அதில், ‘செல்லாது’ என அறிவிக்கப்பட்ட 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தனது மேலதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். மேலதிகாரி பொலிஸூக்கு தகவல் கொடுத்தார். பொலிஸார் அதை கைப்பற்றி சென்றனர்.
அந்தப் பையில் மொத்தம் ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதுபற்றி விசாரணை நடப்பதாக புனே டெக்கான் ஜிம்கானா பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவித்தார்.
வரவு செலவு திட்ட வரி திருத்தங்களுக்கு அமைய சில வாகனங்களின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரஞ்சிகே இதுபற்றி தெரிவிக்கையில், இயந்திர சிலின்டர் கொள்ளளவு 1000 சி.சி. வரையான மோட்டர் வாகன அலகு ஒன்றுக்கான வரி 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதன்படி மெரிட் வகையான மோட்டார் வாகனமொன்று 2 லட்சம் ரூபாவினால் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார்.
எச்.எஸ். 1800-2000 ரகத்திற்குட்பட்ட ஹயிபிரிட் வாகனங்கள் தொடர்பில் அலகொன்றுக்கான வரி 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாகனமொன்றின் விலை 9 லட்சம் ரூபா தொடக்கம் அதிகரிக்கப்படும்.
இதன்படி எக்செல் வகையான வாகனங்கள் 10 லட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக இந்திக சம்பத் மெரஞ்சித் தெரிவித்தார்.
மின்சாரத்தில் இயங்கும் ´லீப்´ (Leaf) வகையான வாகனங்களுக்கு 3 லட்சம் தொடக்கம் 4 லட்சம் ரூபா வரை விலை குறைக்கப்பட்டு்ள்ளது.
இரட்டை பாவனை வாகனங்களுக்காக வரி சதவீதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறான வாகனங்களுக்கு 45 லட்சம் என்ற கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹய்எஸ் வகையான வாகனங்களின் விலைகள் 45 லட்சமாக நிலவும்.
முச்சக்கரவண்டிகளுக்கான வரி விதிப்பு அலகொன்றுக்கு 250 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. (தீர்வை அதிகரிப்பு – ரூபா. 50,000.00)
1800 சி.சி.க்கு மேலான கொள்ளளவைக் கொண்ட வாகனங்களுக்கு தீர்வை வரி விதிப்பு இல்லை.
சில வானங்களின் தீர்வை வரி விதிப்பு பின்வருமாறு
BMW X5 தீர்வை வரி விதிப்பு ரூ.900,000.00 Nissan X-Trail தீர்வை வரி விதிப்பு ரூ.995,000.00 Mitsubishi Outlander தீர்வை வரி விதிப்பு ரூ.995,000.00
1000CC தீர்வை வரி விதிப்பு சிலிண்டர் கொள்ளளவு அலகொன்றுக்கு ரூ. 250.00
800cc வாகனங்களின் விலை ரூ. 200,000 ஆல் அதிகரிக்கப்படுகிறது.
வவுனியா லக்சபான வீதியில் 11.11.2016 இன்று மதியம் 12.30மணியளவில் இலத்திரனியல் உபகரணம் ஒன்றில் மறைத்து வைக்கபட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள இலத்திரனியல் உபகரணங்கள் திருத்தும் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் பழைய பொருட்கள் விற்பனை செய்யும் நபர் ஒருவரிடமிருந்து சிறிய ரக ஒலிச்சாதனம் ( music box) ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
அதனை இன்று (11.11.2016) திருத்துவதற்காக கழற்றிய போது அதனுள் கைக்குண்டு இருந்தமையினை அவதானித்த உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனிய பொலிஸார் முன்னெடுத்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா மாதர் பணிக்கர் மகிழங்குளம் க.உ. வித்தியாலயத்தின் புதிய கட்டட திறப்பு விழா 09.11.2016 புதன்கிழமையன்று பாடசாலையின் அதிபர் திரு . கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்றது .
மேற்படி புதிய கட்டிட தொகுதியை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் வவுனியா வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு .வை.ஸ்ரீஸ்கந்தராஜாவும் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர் .
மேலும் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் 2016 ஆண்டு பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து பாண்ட வாத்திய கருவியும் வட மாகாண சபை உறுப்பினர்களான தியாகராஜா , இந்திரராஜா ஆகியோரது நிதியிலிருந்து தளபாடங்களும் மின் இணைப்புக்கான காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது.
மேற்படி நிகழ்வில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் .சிவசக்தி ஆனந்தன் வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா ,இ.இந்திரராஜா வவுனியா வடக்கு வலய பணிப்பாளர் திரு .வை.ஸ்ரீஸ்கந்தராஜா திட்டமிடல்பணிப்பாளர் திருமதி தே.உமாதேவன் மற்றும் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளின் அதிபர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Room to read நிறுவனத்தின் எழுத்தறிவூட்டல்நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பாடசாலைகளில் முன் டுத்துவரும் சமூக வாசிப்பு நிகழ்வு கணேசபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் அதிபர் திருமதி.ம.திருவருள் நேசன் தலைமையில் நேற்று10-11-2016 சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாகRoom to read நிறுவன. தொழில்நுட்பநிகழ்ச்சித்திட்ட அதிகாரி திரு.அ.அன்பழகன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு கல்விவலய விஞ்ஞானபாட உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு. இந்திரலிங்கம் , தமிழ்ப் பாடஉதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.கி. உதயகுமார், ஆசிரிய ஆலோசகர் திரு.திருவருள்நேசன் ஆகியோரும்,கௌரவ விருந்தினர்களாக Room to read நிறுவனத்தின் எழுத்தறிவூட்டல் சாத்தியமாக்குனர் திரு.ச. கோகுலவதனன், நூலக முகாமைத்துவ சாத்தியமாக்குனர் ஜனாப் எவ்.எம்.முப்லிக் அவர்களும் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் திரு.சுப்பிரணியம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.