சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்மப் பெட்டியால் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதியில் பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் புறப்பாடு பகுதி பார்வையாளர் 3-வது நுழைவு வாயில் அருகே நேற்று மாலை அட்டை பெட்டி ஒன்று நீண்ட நேரமாக கேட்பாரற்று கிடந்தது.
இதைக்கண்ட மத்திய தொழிற்படை போலீசார், அந்த பெட்டி யாருடையது? என்று விசாரித்தனர். ஆனால் அதற்கு யாரும் சொந்தம் கொண்டாட முன்வரவில்லை.
இதனால் மர்ம அட்டை பெட்டியில் வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது. உடனடியாக மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர்.
அட்டை பெட்டியை சுற்றிலும் யாரும் செல்லாதபடி தடுப்பு அமைக்கப்பட்டது.இதைக் கண்டு விமான நிலையத்துக்கு வந்த பயணிகளும், பார்வையாளர் பகுதிக்கு வந்தவர்களும் அலறி அடித்து ஓடினார்கள்.
இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த மர்ம பெட்டியை சோதனை செய்தபோது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.பின்னர் அந்த அட்டை பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ரொட்டி தயாரிக்கும் கருவி இருந்தது.
பயணிகள் யாராவது அந்த பெட்டியை மறந்து போய் தவற விட்டு சென்று இருக்கலாம் என்று தெரிகிறது.
இதையடுத்து அந்த அட்டை பெட்டி, விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சர்வதேச அளவில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய அணி வீரர் அஸ்வின்.
கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது இந்தியாவுக்கு 500வது டெஸ்ட் போட்டியாகும், நேற்றைய போட்டியில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன்மூலம் சர்வதேச அளவில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
அதாவது 37 போட்டிகளில் 200 விக்கெட் எடுத்துள்ளார், ஏற்கனவே பாகிஸ்தானின் வாக்கர் யூனூஸ், அவுஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி ஆகியோர் 38 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை முறியடித்துள்ளார்.
அஸ்வினுக்கு முன்பாக அவுஸ்திரேலியாவின் கிரிம்மேட் 36 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
ஆசியா அளவில் பார்க்கும் போது அஸ்வின் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் சிபு பகுதியைச் சேர்ந்த சியா ஜி ஹெர்ங்கின் உடல் பருமனை கண்டு பலர் திகைத்து போய் உள்ளனர்.
குறித்த நபர் கடந்த 10 ஆண்டு காலமாக ஒவ்வொரு நாளும் 10.5 கிலோ (30 பவுல்ஸ்) நூடுல்ஸை சாப்பிட்ட பிறகு 12 க்கும் மேற்பட்ட மில்க்ஷேக்ஸ் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிட்டு வந்துள்ளார்.
இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு தொடர்பினை மேற்கொண்டு உள்ளார். இதன்போது அங்கு வந்த மீட்பு குழுவினர் 250kg உடல் பருமன் கொண்ட இவரினை கண்டு திகைத்து போய் உள்ளனர்.
இது தொடர்பாக மீட்பு மற்றும் தீயணைப்புத்துறைகள் உதவிப்பணியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. அழைப்பு வந்து ஒரு மணி நேரத்தில் ஹெர்ங் வசிக்கும் இடத்திற்கு சென்றதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாங்கள், 30 நிமிட போராட்டத்திற்கு பின்னர் இவரை அந்த அறையினுள் இருந்து வெளியில் கொண்டு வந்தோம்.
எனினும் இவருடைய நிலையில் ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றமுடியவில்லை, இதற்காக பாரம் தூக்கும் லொறி ஒன்றை பயன்படுத்தி மருத்துவமனைக்கு அழைத்து வந்துடன் மருத்துவனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார். இது தொடர்பாக சியாவின் தாய் கூறுகையில்,
அதிகமாக சாப்பிடுவதால் இது போன்ற பிரச்சினை வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு முன்பாக ஸ்டிக் உதவியுடன் மெல்ல மெல்ல நடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், சியா ஜி ஹெர்ங்கின் உடல் நிலை கடந்த மூன்று நான்கு வருடங்களாக மோசமடைந்து வந்துள்ளதால்அதிக நேரம் படுக்கையில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, சியா ஜி ஹெர்ங்கின் நண்பர் ஒருவர் அவருக்கு படங்கள் பார்ப்பது, விளையாட்டு நிகழ்வுகள் பார்ப்பது தான் அதிகம் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உறவினர்கள் யாரும் வராததால் தாயின் சடலத்தை நான்கு மகள்கள் சுமந்து சென்று அடக்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம், கலாஹான்டி மாவட்டத்தை சேர்ந்தவர் கன சதாபதி (75) .தொழு நோயாளியான இவரின் கணவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
வயது முதிர்ந்த பெண்மணியான கன சதாபதி தன்னுடய நான்கு மகள்கள் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார். கணவர் அவரை பிரிந்து சென்றதலிருந்தே அவர் உறவினர்களும், ஊர் மக்களும் அவர் குடும்பத்துடன் பேசாமல் ஒதுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென கன சதாபதி காலமானார். உறவினர்கள் வருவார்கள் அவர்கள் உதவியுடன் தங்கள் தாயின் சடலத்தை அடக்கம் செய்யலாம் என காத்திருந்த நான்கு மகள்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
அவர்கள் யாரும் உதவிக்கு வராத நிலையில் அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து தங்கள் தாயின் சடலத்தை தூக்கி கொண்டு சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் மனைவி சடலத்தை எடுத்து செல்ல மருத்துவமனை ஆம்புலன்ஸ் வழங்காததால் கணவன் சடலத்தை தோளில் தூக்கி சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் பிடிபட்ட மலைப் பாம்புடன் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் அப்பாம்பால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் அரவல்லி ரேன்ச் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை மலைப்பாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் அனுப்பப்பட்டது.
இதனால் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மலைப்பாம்மை உயிருடன் பிடித்து மற்றொரு இடத்தில் விடுவதற்காக கொண்டு சென்றனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மவுண்ட் அபு என்ற இளைஞன் பிடிபட்ட மலைப்பாம்புடன் செல்பி எடுக்க முற்பட்டு, பாம்பின் அருகே சென்ற போது, திடீரென பாம்பு அவரை கடிக்க முற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அது அவரது தோள்பட்டையை தாக்கியது.
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பன்சிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுகளைத் தவிர ஆர்.பீ.ஜி.51 குண்டுகள், எம்.பீ.எம்.ஜீ குண்டுகள் 1600 உள்ளிட்டவை இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற இரட்டை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் 137 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய மகளிர் அணி அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் அணியுடனான இரட்டைத் தொடர்களை 4 –0 என அவுஸ்திரேலிய மகளிர் அணி வெற்றிகொண்டது.
இந்தத் தொடரானது இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு தொடராகவும் சர்வதேச கிரிக்கெட் பேரவை மகளிர் வல்லவர் தொடராகவும் நடத்தப்பட்டது.
கெத்தாராம ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற கடைசி சர்வதேச ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 268 ஓட்டங்களைக் குவித்தது.
மிகத் திறமையாக துடுப்பெடுத்தாடிய ஆரம்ப வீராங்கனை நிக்கலி போல்டன் (113), எலிஸ் பெரி (77) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 140 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலிய மகளிர் அணியை வலுப்படுத்தினர். அணித் தலைவி மெக் லனிங் 43 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சமரி அத்தப்பத்து 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 45.5 ஓவர்களில் 131 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.
வடக்கிலுள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்பட மாட்டாது என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மிகத் தீவிரமான கோரிக்கைகளுக்கு பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ரன்தம்பேயில் நேற்று (25.09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள சந்தர்ப்பத்தில் அதனை குழப்பும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தலைமையில் நேற்று முந்தினம் (24) மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் வடபகுதி மக்களின் மனோநிலையை தேவையற்ற விதத்தில் குழப்பும் வகையில் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் வடக்கு பகுதி பிரதிநிதிகளின் தீவிர கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் இவ்வாறான கோரிக்கைகளை அரசாங்கம் கருத்திற் கொள்ளாது எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து கட்டணத்தை குறைந்தபட்சம் 05 தொடக்கம் 10 வீதத்தால் அதிகரிப்பதற்கு மாவட்ட பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மாவட்ட பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் உறுப்பினர்களின் கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் என்.எம்.கே.ஹரிஸ்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டண திருத்தங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு பலத்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றங்களை ஏற்படுத்த தயாரில்லை என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் குறிப்பிட்டுள்ளது.
33 அடி மிக நீளமான அனகொன்டா பாம்பொன்று வடக்கு பிரேசிலில் ஒரு கட்டிடம் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அது சுமார் 400 கிலோகிராம் எடையுடைய என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அல்டாமிரா பாரா பகுதியில் அமைந்திருந்த ஒரு குகையினை வெடி வைத்து தகர்த்திய பின் குறித்த பாம்பினை கட்டுமான தொழிலாளர்கள் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் செல்வநகர் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபகரமாக முறையில் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் நேற்று (25.09.2016) பகல் 11.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
சம்பவ இடத்திலேயே இரண்டு சிறுவர்களும் உயிர் இழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் கூறியுள்ளார். மேலும், இந்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,
ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று சிறுவர்கள் பயணித்ததில் இருவர் உயிர் இழந்துள்ளதுடன் ஒருவர் தப்பித்துள்ளதோடு தப்பித்த சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை, சம்பவத்தின் போது உயிர் இழந்தவவர்கள் பீ.சியாம் (15) ,ஏ.நிப்றாஸ் (15) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் உயிர் இழந்த இரு சிறுவர்களினதும் சடலம் மூதூர் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காரில் சென்றுக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரரொருவரை தாக்கி அவர் வசமிருந்த 43 ஆயிரத்து 750 ரூபா பணத்துடன் குறித்த வாகனத்தையும் கடத்திச் சென்ற இராணுவ வீரர்கள் இருவரை வெலிமடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கடத்தல் சம்பவம் அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புதளை பகுதியிலிருந்து வெலிமடை நோக்கி வந்துக்கொண்டிருந்த குறித்த காரினை பொரலந்தை ஹின்னாரங்கொல்ல பகுதியில் வைத்து வழிமறித்து தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கர வண்டியொன்றையும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவத்தில் தாக்கப்பட்டவர் பொலிஸ் அவசர அழைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து விரைந்த பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை, சம்பவம் நடந்து குறுகிய நேரத்தில் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைதானவர்கள் தியத்தலாவை இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் 31,39 வயதுடைய இராணுவ வீரர்கள் என பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.வெலிமடை பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிகரெட்டுக்களின் விலை 11 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் 15 சதவீதம் வற் வரி சேர்க்கப்பட்டள்ளதால் சிகரெட் ஒன்றிற்கான விலை 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டது.
இந்நிலையில் 35 ரூபாவாக இருந்த சிகரெட் தற்போது 40 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இவ்விலை மேலும் 11 ரூபாவாக அதிகரிக்ககூடும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் காலங்களில் 46 ரூபா முதல் 50 ரூபா வரையில் சிகரெட் ஒன்றின் விலை நிர்ணயிக்கப்படலாம் என தெரியவருகின்றது.
மேலும் சிகரெட்டின் விலையை 5 ரூபாவால் அதிகரித்து அதற்கு 15 வீத வற் வரியினை சுமத்துவது தொடர்பான யோசனை எதிர்வரும் இரு வாரங்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கடந்த வாரத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் புகையிலை தீர்வையை அதிகரிக்க அடுத்தவாரம் அமைச்சரவை பத்திரம் அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒருவரின் தனித்துவம் மற்றும் தன்மையை வரையறுப்பதே அவர்களின் பெயர் தான். சில நேரங்களில் அவரவர்களின் விதியை பிரதிபலிக்கும் விதமாகவும் பெயர் உள்ளது.
அப்படிப்பட்ட பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு அவர்கள் எப்படிபட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ளல்லாம்.
பெயரின் முதல் எழுத்து A to Z:
A: உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.
B: உங்கள் பெயர் B என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் உணர்சிபூர்வமானவர்களாக இருப்பீர்கள். நீங்கள் தைரியசாலியாகவும், அன்பு உள்ளவராகவும் இருப்பீர்கள். உங்கள் காதலரின் அன்பின் வெளிப்பாடாக கிடைக்கும் பரிசுகளை சந்தோஷத்துடன் பெற்றுக் கொள்வீர்கள். உங்களை மற்றவர்கள் செல்லம் கொஞ்ச வேண்டும் என நினைப்பீர்கள். அதே போல் உங்கள் துணையை எப்படி கொஞ்சுவது என்பதும் உங்களுக்கு தெரிந்திருக்கும்.
C: உங்கள் பெயர் எழுத்து C-யில் தொடங்கினால், பல்துறை அறிவு வாய்ந்த, தகுதி வாய்ந்த, திறமைசாலியாக இருப்பீர்கள். மென்மையானவராக இருந்தாலும், பணத்தை தண்ணீராக செலவழிப்பீர்கள். இயற்கை மற்றும் பிறவி பேச்சாளாராக இருக்கும் நீங்கள், சொல்வன்மை பேச்சாற்றலுடன் விளங்குவீர்கள்.
D: உங்கள் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால், அளவுக்கு அதிகமான மனத் திண்மை, வணிகம் புரியும் அறிவு, ஆளுமை போன்ற குணங்களை கொண்டிருப்பீர்கள். தொழில் புரிய பிறந்தவர் நீங்கள். சுத்தத்தின் மீது அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். நம்பிக்கை மிக்கவராக விளங்கும் நீங்கள் பிறருக்கு உதவிடும் குணத்தை கொண்டிருப்பீர்கள்.
E: உங்கள் பெயர் E என்ற எழுத்தில் தொடங்கினால், பிறரிடம் தொடர்பு கொள்வதில் வலிமை மிக்கவராக இருப்பீர்கள். மென்மை மிக்கவரான நீங்கள் உங்கள் சுதந்திரத்தை விரும்புவீர்கள். காந்த பெர்சனாலிட்டியை கொண்டவரான நீங்கள் நண்பர்களை சுலபமாக பெறுவீர்கள். காதல் என்று வரும் போது நீங்கள் அவ்வளவு உண்மையாக இருப்பதில்லை.
F: உங்கள் பெயர் F என்ற எழுத்தில் தொடங்கினால், திட்டமிடுவதில் நீங்கள் சிறந்தவராகவும், நம்பிக்கை மிக்கவராகும் விளங்குவீர்கள். பிறரின் மீது அக்கறை கொள்வதிலும், உங்களை சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதிலும், நீங்கள் வல்லவராக இருப்பீர்கள். நன்னம்பிக்கையாளரான நீங்கள் சிறந்த நகைச்சுவை உணர்வுடன் விளங்குவீர்கள்.
G: நோக்கத்துடனான நபராக இருப்பீர்கள் நீங்கள். புதுமை, இயல்பு மற்றும் தத்துவம் மிக்கவராக இருப்பீர்கள். வரலாற்றை படிக்கவும், பயணம் செய்யவும் விரும்புவீர்கள். மதத்தின் மீது அதிக ஈர்ப்புடன் இருப்பீர்கள். உங்கள் போக்கில் வாழவே விரும்புவீர்கள். உங்கள் விஷயத்தில் அடுத்தவர்களின் அறிவுரைகள் மற்றும் தலையீட்டை நீங்கள் விரும்ப மாட்டீர்கள்.
H: H என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் பணத்தை சேர்ப்பவராக இருப்பீர்கள். புதுமையான சக்தியை குறிக்கும் இந்த எழுத்து. சுயமாக ஊக்குவித்து பிறரை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவீர்கள்.
I: நல்லது எதுவோ அதற்காக வாழ்பவர் நீங்கள். மேலும் தைரியசாலியாக திகழ்வீர்கள். அழகு மற்றும் நேர்த்தியுடன் இருப்பீர்கள். ஃபேஷன் துறையில் மற்றும் இதர புதுமையான துறையில் சிறந்த எதிர்காலம் அமையும்.
J: J என்ற எழுத்து மிகப்பெரிய லட்சியத்தை குறிக்கும். உங்கள் பெயர் J என்ற எழுத்தில் தொடங்கினால், உங்களுக்கு தேவையானவற்றை அடையும் வரை எதற்காகவும் விட்டு கொடுக்காமல், அதை அடைய ஓடுவீர்கள். உங்களுக்கு ஏற்ற வகையிலான அல்லது உங்களை விட ஒசத்தியான ஒரு வாழ்க்கை துணையை தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்.
K: ஒளிவு மறைவுடன் வெட்கப்படும் குணத்தை கொண்டவர் நீங்கள். நீங்கள் திடமானவராக இருந்தாலும், உணர்ச்சிபூர்வமானவராக இருப்பீர்கள். சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுய உறுதி கூறும் நபராகவும், பொறுப்பை கையில் எடுக்கும் நபராகவும் விளங்குவீர்கள். வாழ்க்கையில் அர்த்தமுள்ளதாக எதையாவது செய்ய வேண்டும் என நினைப்பீர்கள். நீங்கள் விரும்பியவர்களை அன்புடன் பார்த்துக் கொள்வீர்கள்.
L: வாழ்க்கையில் நிலை கொள்ள அதிகமாக துடிப்பீர்கள். அடிக்கடி உறவுகளை மாற்றும் நீங்கள் யாருடனும் ஆழமான காதலை கொண்டிருக்க மாட்டீர்கள். தொழில் ரீதியாக அதிகமாக சம்பாதிக்கும் உங்களுக்கு நல்ல விதமான தொழில் அமையும்.
M: M என்ற எழுத்து தைரியம், அறிவு மற்றும் கடின உழைப்பை குறிக்கும். உண்மையான நட்பை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. M என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால் நீங்கள் உண்மையுள்ள நண்பனாக இருப்பீர்கள். அறிவுரை வழங்குவதில் வல்லவராக இருக்கும் உங்களுக்கு நம்பத்தகுந்த துணை கிடைக்கும். உறவுமுறையில் ஈடுபடும் போது, தன்னை முழுவதுமாக அதில் அர்பணித்துக் கொள்வார்கள்.
N: N என்ற எழுத்து ஓவிய திறனை குறிக்கும். துடிப்பு மற்றும் முயற்சி வேட்கையுடைய பண்பை கொண்டவரான உங்களை பிறரிடம் இருந்து விலக்கியே வைக்கும். அனைத்திலும் முழுமையை எதிர்ப்பார்க்கும் நீங்கள், உங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மிகவும் அக்கறை கொள்வீர்கள்.
O: O என்ற எழுத்து அனைத்தையும் விட அறிவு மற்றும் கல்விக்கே முக்கியத்துவம் அளிப்பீர்கள். உங்கள் பெயர் O என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் ஆசிரியராகவோ, எழுத்தாளராகவோ வருவீர்கள். ஒழுக்கத்துடன் இருக்கும் நீங்கள் எது நல்லதோ, அதன் பக்கமே நிற்பீர்கள். உங்கள் துணையிடமும் அதே குணங்களை தான் எதிர்ப்பார்ப்பீர்கள்.
P: உங்கள் பெயர் P என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் திறமைசாலியாக, அறிவுக் கூர்மை மிக்கவராக, புதுமை மிக்கவராக இருப்பீர்கள். படபடவென பேசும் உங்களுக்கு எப்படி குதூகலமாக இருப்பது என்பது தெரியும். உடல் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள், நல்ல அழகான துணையை தான் தேடுவீர்கள்.
Q: Q என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் நல்ல எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் இருப்பீர்கள். பலரும் நாடக ஆசிரியர்களாகவும், இசையமைப்பாளாராகவும், நடிகர்களாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு திடமான கருத்துகள் இருக்கும். அவர்களுக்கு தனித்துவமான பெர்சனாலிட்டி இருக்கும். ட்ரெண்டை பின்பற்றாமல் புதிதாக உருவாக்குவார்கள்
R: உண்மையான, கருணையான மற்றும் அன்புமிக்க மனிதராக இருப்பீர்கள். சவால்கள் என்றால் உங்களுக்கு பிடிக்கும். அதே போல் அனைத்தையும் சுலபமாக எடுத்துக் கொள்வீர்கள். அமைதியுடன் வாழ விரும்பும் நீங்கள், உங்களுக்கேற்ற நல்ல துணையை தேடுவீர்கள்.
S: S என்பது பாலுணர்வு, கவர்ச்சி மற்றும் கொடை உணர்வை குறிக்கும். உங்களுக்கு கவர்ச்சி என்றால் பிடிக்கும். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கவே விரும்புவீர்கள். புதிய ஐடியாக்கள், நிகழ்வுகள் போன்றவைகளை உருவாக்கி, அதனை வெற்றி பெற வைக்க கடினமாக உழைப்பீர்கள். இந்திரிய சம்பந்தமான, கனவு காணும் நபராக, நேர்மையாக, மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவீர்கள். அதே போல் காதலில் விழாமலும் இருக்க முடியாது. சிறந்த அரசியல்வாதி, நடிகன் அல்லது மாடலாகலாம்.
T: எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சில நேரம் அளவு கடந்த சுறுசுறுப்பால் உங்களால் உறவுகளை பராமரிக்க முடியாது. உங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பும் உங்களுக்கு, நினைத்தபடி வேலை நடைபெறவில்லை என்றால் மன வலி உண்டாகும். மனதளவில் திடமானவராக விளங்கும் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.
U: அறிவுமிக்க தனித்துவமான இந்த நபர்கள் சிறந்த ஓவியர்கள் மற்றும் எழுத்தாளர்களாக விளங்குவார்கள். எதையும் ஒழுங்கற்ற முறையில் பராமரிக்காமல் செயல்படுவார்கள். அதனால் இவர்களுடன் வாழ்வது சற்று கடினமாக விளங்கும். ஒருத்தரை திருமணம் செய்வதற்கு பதில் பல பேருடன் உறவில் ஈடுபடும் அனுபவம் கிட்டும்.
V: V என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்கினால், நீங்கள் ஒரு நடைமுறைவாதியாக திகழ்வீர்கள். உண்மையுள்ள, காதல் உள்ளம் கொண்ட, மென்மையான இதயம் உள்ளவராக விளங்குவீர்கள். ஆற்றல் வாய்ந்த குணத்துடன் இருப்பதால், வாழ்க்கையில் பலவற்றை சாதிப்பீர்கள். இருப்பினும் காதல் என்று வந்து விட்டால், மிகவும் பொஸசிவ் குணம் உடையவாராக இருப்பீர்கள்.
W: W என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் கொடை உள்ளத்துடன் இருப்பீர்கள். ஃபேஷனுடன், பாசமிக்க, சிறந்த காதல் உள்ளம் கொண்டவாராக இருப்பீர்கள். அவர்களை புரிந்து கொள்வது கடினமாக இருந்தாலும், தெரிந்து கொள்வது உத்தமமாகும். வாழ்க்கையின் எந்த ரகசியத்தையும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளலாம். மனதில் பட்டதை பேசும் அவர்கள் தெரிந்தே எதையும் மறைப்பதில்லை.
X: சொகுசை விரும்பும் உங்களை சுலபமாக வழி நடத்தலாம். ஆனால் ஒப்பிய பொறுப்பில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். வாழ்க்கையில் சொகுசையும், சுகத்தையும் எதிர்ப்பார்ப்பீர்கள். இயற்கையாகவே வலிய போய் எதிர் பாலினரிடம் அதிகமாக வலிவீர்கள்.
Y: சுதந்திரத்தை குறிக்கும் Y என்ற எழுத்து. Y என்ற எழுத்தில் பெயர் தொடங்கினால் நீங்கள் ஒரு துணிச்சல் மிக்க தொழிலதிபராக இருப்பீர்கள். எந்த ஒரு இடர்பாட்டை எடுக்கவும் தயங்க மாட்டீர்கள். செயல்திட்ட முன்னேற்றமுடைய யோசிப்பாளரான நீங்கள் பிறரை ஈர்ப்பீர்கள். சுத்தரிக்கப்பட்ட இவர்கள், வாழ்க்கையில் நடக்கும் நல்லதை பார்த்து மகிழ்வார்கள்.
Z: இந்த எழுத்தை உடைய பெயரை பார்ப்பது அரிது. இவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும். இவர்கள் ஒரு சிறந்த கவுன்செலராக இருப்பார்கள். பிறரை பற்றி நன்கு புரிந்து கொள்வார்கள்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நடாத்தும் 28வது தேசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் பதுளை வின்சன் டயஸ் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றனர்.
இவ் விளையாட்டுப் போட்டியில் இன்று (25.09.2016) காலை இடம்பெற்ற 20 வயதிற்கு உட்பட்ட 5000 மீற்றர் வேகநடைப் போட்டியில் வவுனியா பூம்புகாரைச் சேர்ந்த கே.குகனேஸ்வரி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
மேலும் 20 வயதிற்கு மேற்பட்ட 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா சுந்தரபுரத்தைச் சேர்ந்த ஆர்.சாளினி மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
இதேவேளை கடந்த 23ம் திகதி இடம்பெற்ற 10000 மீட்டர் ஓட்டத்தில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த கே.நவநீதன் இரண்டாமிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.