அமலா பால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என வரிசையாக விவாகரத்து செய்திகளாகவே கோலிவுட்வ ட்டாரத்திலிருந்து வந்தவண்ணம் உள்ளது. அது ஒரு புறம் இருக்க, வதந்திகளும் அடிக்கடி பரவுகின்றன.
பிரபல பாடகரும், நடிகருமான விஜய் ஏசுதாஸ் தன் மனைவி தர்ஷனாவை விவாகரத்து செய்யவுள்ளதாக நேற்று செய்தி வந்தது.
ஆனால் அது முற்றிலும் வதந்தி என தற்போது தர்ஷனா விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று குளத்தில் கவிழ்ந்த விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் இருந்து சிதாமார்கி என்ற இடத்துக்கு தனியாருக்கு சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று நேற்று காலையில் புறப்பட்டு சென்றது. பேருந்தில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
இந்த பேருந்து பாசிதா கிராமத்துக்கு அருகே சென்ற போது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதி ஓரத்தில் 25 அடி ஆழம் உள்ள குளத்தில் கவிழ்ந்தது. ஆழமான குளம் என்பதால் பேருந்து முழுவதுமாக தண்ணீரில் மூழ்கியது.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் இந்த கோர விபத்தில் 35 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.
சட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச்செல்ல முற்பட்ட போது ஆற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவிசாவெல-குடகம பிரதேசத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
34 வயதான செல்வராஜ் ரவீந்திரன் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக விசாவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலிஸார் குறித்த ஆற்றுப் பகுதியில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது பொலிஸாரிடம் தப்பித்துக் கொள்வதற்காக குறித்த நபர் ஆற்றில் பாய்ந்துள்ளதாகவும், இதன்போதேஉயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது புதல்வர் யோசித்த ராஜபக்ஸ வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்வதற்காகவே வெளிநாடு செல்ல அனுமதித்தருமாறு யோசித்த, தனது சட்டத்தரணி ஊடாக இன்று நீமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த கோரிக்கை தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆர் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார். சீ.எஸ்.என் தொலைகாட்சி நிறுவனத்தில் இடம் பெற்ற மோசடி காரணமாக யோசித்தவின் கடவுச்சீட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யோசித்த இந்த வருடம் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு மார்ச் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
யாழில் நடைபெறும் மாகாணமட்ட தடகள போட்டிகளில் நேற்று (19.09.2016) இடம்பெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த தடகள வீரர் நவநீதன்15 நிமிடங்கள் 15 செக்கன்கள் 05 மில்லிசெக்கன்களில் ஓடிமுடித்து புதிய சாதனை ஒன்றை படைத்து தங்கப்பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
வட்டுகோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் நேற்று (19.09.2016) இடம்பெற்ற ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட நவநீதன் மேற்படி சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
2013இல் யாழ்மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்ட ரி.தேவராசா 16 நிமிடங்கள் 19 செக்கன்கள் 08 மில்லிசெக்கன்களில் இலக்கை அடைந்து படைத்திருந்த சாதனையை வவுனியா வீரர் நவநீதன் நேற்றைய தினம் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நேற்றையபோட்டியில் முல்லைதீவு மாவட்டத்தை சேர்ந்த பி .ஜெயந்தன் வெள்ளிப் பதக்கத்தையும் கிளிநொச்சி மாவட்ட வீரர் எஸ்.விதுர்சன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுகொண்டனர்.
15 வயதான சிறுமியுடன் சட்டபூர்வமற்ற முறையில் ஏழு மாதங்கள் குடும்பம் நடத்தி அவரை கர்ப்பிணியாக்கிய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாதம்பை – மஹபத்தேகம பகுதியைச் சேர்ந்த, 20 வயதான குறித்த சந்தேகநபரை சிலாபம் பொலிஸின் மகளிருக்கான அலுவலகம் கைதுசெய்துள்ளது.
சிலாபம் பொலிஸாரின் மகளிர் விவகார பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, வாடகை வீடொன்றில் சிறுமியுடன் தங்கியிருந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இளைஞருடன் ஏற்பட்ட காதல் காரணமாக, கடந்த பெப்ரவரி மாதம் முதல் குறித்த வீட்டில், கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாக சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதன் பிரதிபலனாக தான் இரண்டு மாதங்கள் கர்ப்பிணியாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சிறுமி தங்கியிருந்த வீடு மாதம்பை பகுதியிலுள்ளதால், குறித்த வழங்கு விசாரணைகள் மாதம்பை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மேலும் சிறுமி வைத்தியப் பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா செட்டிகுளம் பிரதான வீதியிலுள்ள வீரபுரம் ஸ்ரீ முத்துமாரியம்மன் சிலைகள் விஷமிகள் சிலரால் நேற்று(19.09.2016) நள்ளிரவில் சேதமாக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7.30 மணியளவில் பிரதேச மக்கள் சிலைகள் உடைக்கப்பட்டிருப்பதை அவதானித்தது பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விஷமிகளால் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீகா வைரஸ் காய்ச்சல், இதுவரை இலங்கையில் எவருக்கும் தொற்றவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பீ.ஜி.மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிலாபம் – நல்லரசன்கட்டு பகுதியில் உயிரிழந்த இருவரும் ஒருவகை வைரஸ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுகாதாரக் கல்விப் பணிமனையில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார், தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
‘வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்களாலேயே, நாட்டுக்குள் சீகா வைரஸ் பரவக்கூடிய அபாயம் உள்ளது. சிலாபத்தில் உயிரிழந்தவர்கள் சீகா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கவில்லை.
மாறாக, அவர்கள் யாத்திரைக்கென இந்தியாவின் புதுடெல்லிக்குச் சென்றிருந்தபோது, வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இன்புளுவன்சா ‘ஏ’ வைரஸ் காய்ச்சலானது, நாட்டில் 3 பேருக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், இன்புளுவன்சா ‘பீ’ வைரஸ் காய்ச்சலினால் 37 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், சீகா வைரஸ் காய்ச்சல் காரணமாக எமது நாட்டில் நோயாளர்கள் இன்னமும் இனங்காணப்படவில்லை.
குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, பிரேஸில் போன்ற நாடுகளிலும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருவோர் தொடர்பில், அவதானமாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் விமான நிலையங்களிலும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் சுவாதி, ராம்குமார் ஆகிய பெயர்களுக்கு அடுத்தபடியாக அதிகமாக அடிபட்ட பெயர் தமிழச்சி.
இயற்பெயர், யுமா. புதுச்சேரியைச் சேர்ந்தவர். சுவாதி கொலை வழக்கு பற்றி பல தகவல்களை முகநூலில் வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியவர்.
பிரான்ஸில் வசிக்கும் இவர், சுவாதி குறித்து பேஸ்புக்கில் வெளியிட்ட கருத்துகள் எல்லாம் பகீர் ரகம். ராம்குமாரை சிறையில் காவல்துறை கொலைசெய்துவிட்டது என்று கூறி இப்போதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார், தமிழச்சி.
பிரான்ஸில் உள்ள அவர் வீடியோ அழைப்பு மூலம் ஜூனியர் விகடனுக்கு வழங்கியுள்ள பேட்டி வருமாறு!
ராம்குமார் கொலைசெய்யப்பட்டார் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்?
ராம்குமாருக்கு ஜாமீன் கிடைக்க அதிக வாய்ப்பு இருந்தது. ராம்குமாரை ஜாமீனில் எடுக்கவும், வெளியே வந்தால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கவும் 150 பேரைத் தயார்செய்து வைத்திருந்தோம். ராம்குமார் வெளியே வந்திருந்தால் ‘போலீஸும், கருப்பு முருகானந்தம் ஆட்களும்தான் என் கழுத்தை அறுத்தார்கள்’ என்று சொல்லியிருப்பார். அதனால்தான் சிறையிலேயே அவரை போலீஸ் கொலை செய்துவிட்டது. டி.எஸ்.பி விஷ்ணு ப்ரியாவின் மரணமே ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. அரசியல்வாதிகளின் கட்டாயத்தாலும், அரசின் தூண்டுதலிலும்தான் இந்தக் கொலை நடத்தப்பட்டுள்ளது.
தற்கொலை என்று போலீஸ் சொல்கிறதே?
நிச்சயமாக இருக்காது. ‘நான் இந்தக் குற்றத்தைச் செய்யவில்லை’ என்பவர் ஏன் சாகவேண்டும்? 19-ம் தேதி ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் நிலையில், ஒரு நாள் முன்னதாக அவர் இறக்க வேண்டிய அவசியம் என்ன? ராம்குமாரை அவரது அப்பாவும், அம்மாவும் பார்க்கச் சென்றனர். அப்போது, ‘அம்மா என்னை எப்படியாவது இங்கிருந்து கூட்டிட்டுப் போயிடுங்க…’ என்று காலைப்பிடித்து கெஞ்சியிருக்கிறார். அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பே இல்லை. சிறையில் மின்சார ஒயர்கள் எல்லாம் எட்டிப்பிடிக்கும் இடத்தில் இருக்காது என்பது சாமானியனுக்குக்கூட தெரியும். போலீஸ் நன்றாகத் திரைக்கதை எழுதியிருக்கிறது.
சுவாதி கொலைக்கும், ராம்குமாருக்கும் தொடர்பு இல்லை என்கிறீர்களா?
ராம்குமாரும், சுவாதியும் பேஸ்புக்கில் நண்பர்களாக இருந்தனர் என்றும், அதனால் காதல் வந்தது என்றும் சொன்னார்கள். ஆனால், ராம்குமாரின் பேஸ்புக்கில் அவரது நண்பர்கள் பட்டியலில் சுவாதி இல்லை. ப்ரண்ட் ரிக்வெஸ்ட் கூட அவர் கொடுக்கவில்லை. அப்படி இருக்க, எப்படி இருவருக்கும் தொடர்பு இருக்கும்?
சுவாதி வழக்கில் உங்களது சந்தேகம்தான் என்ன?
சுவாதி ஏற்கனவே திருமணம் செய்திருப்பதுதான் கொலைக்குக் காரணம். பெங்களூருவில் அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை வெளியிட மறுக்கிறார்கள். சுவாதி இஸ்லாம் மதத்துக்கு மாற முயற்சி செய்துள்ளார். சுவாதி கொலையின் பின்னணி அவரது குடும்பத்தினருக்கு நிச்சயம் தெரியும். ‘சுவாதி உடற்கூறு பரிசோதனை நடந்த பிறகு, இதில் அதிர்ச்சியான தகவல்கள் இருக்கின்றன. அதை வெளியே சொல்ல முடியாது’ என்று சொன்னார்கள். அது என்ன அதிர்ச்சி? அதைச் சொல்லுங்கள். ‘ஒருதலைக் காதல்’ என ஜோடித்து, குக்கிராமத்தில் இருந்த ஒருவனைக் கைதுசெய்து, அவரது கழுத்தை அறுத்து பேச முடியாமல் செய்தார்கள். ஜாமீனில் வெளியே வந்து உண்மைகளைச் சொன்னால் ஆபத்து என நினைத்துக் கொலையை அரங்கேற்றி உள்ளனர். சுவாதி கொலை, ஒரு ஆணவக்கொலை.
இதை, ஒரு யூகத்தில் சொல்கிறீர்கள் என எடுத்துக்கொள்ளலாமா?
யூகங்கள் இல்லை. ராம்குமார்தான் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர், பிலாலிடம் 10 மணி நேரம் போலீஸார் ஏன் விசாரணை நடத்த வேண்டும்? கொலை நடந்த ஓரிரு தினங்களில் ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர், ‘பிலால்தான் காரணம்’ என்று எப்படி சொன்னார்கள். பிலால் யார் என அவர்களுக்கு எப்படித் தெரியும்? பிலாலுக்கும் சுவாதிக்கும் என்ன தொடர்பு? அதை ஏன் மறைக்க வேண்டும்? தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு சினிமா காட்சியை சில மாதங்களுக்கு முன்பு சுவாதி பதிவிட்டிருந்தார். அதில் ஹீரோயின் சரிதா, இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஹீரோ ஒரு கிறிஸ்தவர். இதை சுவாதி பதிவுசெய்ததன் நோக்கம் என்ன? இஸ்லாம் மதத்துக்கு மாற சுவாதி திட்டமிட்டார் என்ற தகவலை எளிதாகக் கடந்துசெல்ல முடியவில்லை.
உங்களுக்கு இந்தத் தகவல்கள் எப்படி கிடைத்தன?
சமூகம் சார்ந்து நிறைய எழுதிக்கொண்டு இருக்கிறேன். முகம் காட்ட முடியாத சமூக நலன் விரும்பிகள் எனக்குத் தகவல்களை அனுப்புகிறார்கள். இந்த வழக்கில் தற்கொலைகள் எனும் பெயரில் இன்னும் சில கொலைகள் நடக்கும். ராம்குமாரின் அப்பா உள்ளிட்டோருக்கு ஆபத்து இருக்கிறது. ஏன், நான்கூட கொல்லப்படலாம். அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. இந்த வழக்கின் உண்மையை நான் தொடர்ச்சியாக வெளிப்படுத்துவேன்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆங்கில விரிவுரையாளராக கடமையாற்றும் கலாநிதி மகேஸ்வர குருக்கள் சரவணபவ ஐயர் மற்றும் அவரது குழுவினர் குழந்தைகளுக்கான கார் ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.
மூன்று மாதங்களில் பகுதி நேரமாக உருவாக்கப்பட்ட குறித்த காருக்கு, 30 ஆயிரம் ரூபா வரை செலவுசெய்யப்பட்டுள்ளது.
கழிவுப்பொருட்கள் மற்றும் கம்பிகள் போன்றவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மாதிரிக் காரில் ஒரு குழந்தை மாத்திரம் பயணம் செய்ய முடியும்.
இதேவேளை, மின்கலம் (பற்றரி) மூலம் இயங்கும் இக் கார், குறுகிய மற்றும் நீண்ட தூரம் பயணிக்கும் வல்லமையுடையது.
சுவாதி கொலை தொடர்பிலும் கைது செய்யப்பட்ட ராம்குமார் தொடர்பிலும் பல்வேறுபட்ட முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் சிறையில் மரணமடைந்தார்.
இது தற்கொலை எனக் கூறப்பட்டது எனினும் இது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என ராம்குமார் சார்பில் ஆஜராகி இருந்த சட்டத்தரணி ராம்ராஜ் இன்று தெரிவித்தார்.
பல்வேறுபட்ட குழப்பங்களில் உள்ள ராம்குமாரின் மரணம் தொடர்பில் சட்டத்தரணி ராம்ராஜிடம் லங்காசிறி கருத்து வினவிய போதே அவர் இதனை கூறினார்.
மேலும் சுவாதி கொலை தொடர்பில் காணப்பட்டு வந்த மர்மங்களுக்கும், ராம் குமார் மரணத்திற்கு காரணம் யார் என்பதனையும், யார் யார்? இதன் பின்னணியில் இருக்கின்றார்கள்? சுவாதி யார் அவரது பின்னணி என்ன? எவ்வாறு கொலை செய்யப்பட்டார்? என்ற பல்வேறு வகையான அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
சீனாவில் இளம் பெண் ஒருவர் விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் பீஜிங் விமான நிலையத்தில் விறுவிறுவென வந்த ஜோடி ஒன்று குறிப்பிட்ட எண் விமானத்தில் செல்ல வேண்டும், தங்களை அனுமதிக்க வேண்டும் என அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் குறிப்பிட்ட விமானம் புறப்பட தயாரான நிலையிலும், அவர்கள் உரிய நேரத்திற்கும் மிகவும் தாமதமாக வந்திருப்பதாலும், அந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை உள்ளே செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.
இதனிடையே பாதுகாப்பு அதிகாரிகளை கடந்து சென்ற அந்த ஜோடி விமான ஓடுதளத்தில் இருந்த அதிகாரிகளுடன் வாதிட்டுள்ளது. மட்டுமின்றி புறப்படவிருந்த விமானத்தை உடனடியாக நிறுத்தி தங்களை அந்த விமானத்தில் செல்ல அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனிடையே அந்த இருவரும் திடீரென்று விமான ஓடுதளத்தில் பாய்ந்து விமானத்தை நிறுத்த முயன்றுள்ளனர். இதில் குறிப்பிட்ட பெண் புறப்படத்தயாரான நிலையில் இருந்த விமானத்தின் மிக அருகே சென்று விமானத்தை நிறுத்த முற்பட்டுள்ளார்.
இந்த களேபரங்களுக்கு இடையே விரைந்து வந்த பொலிசார் அந்த பெண்மணியையும் அவரது கணவனையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி பின்னர் கைது செய்துள்ளனர்.
ஷாங்காய் செல்லும் அந்த விமானம் இச்சம்பவத்தினால் 20 நிமிடங்கள் தாமதமாக பீஜிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது.
விமான ஓடுதளத்தில் புகுந்து அச்சுறுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட அந்த ஜோடியை பொலிசார் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் பலமுறையாக 12 பாம்புகள் கடித்தும் நபர் ஒருவர் உயிர் பிழைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் விஜயபுரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் 20 வயதான லிங்கராஜு. இவரை கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நான்கு முறை பாம்பு கடித்துள்ளது. இதில் இரண்டு முறை ராஜநாகம் கடித்துள்ளது.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த லிங்கராஜு தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.
சோலாப்பூர் பகுதியில் இவர்களது குடும்பம் குடியிருந்து வந்த காலகட்டத்தில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் இவரை 7 முறை பாம்பு கடித்துள்ளது. இதில் கவலை அடைந்த குடும்பத்தினர் இவரை மருத்துவர் ஒருவரிடம் காண்பித்துள்ளனர். அவர் இவருக்கு ஆறு மாத கால சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளார்.
சுமார் 40,000 ரூபாய் மருத்துவ செலவானதால் இருப்பதையெல்லம் விற்று கடனை அடைத்துவிட்டு அங்கிருந்து விஜயபுரா பகுதிக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளனர்.
காரணம் முன்னர் குடியிருந்த பகுதியில் ஏதேனும் சாபம் இருக்கலாம் அதனாலையே தமது மகனுக்கு தொடர்ந்து பாம்பு கடிப்பதாக அந்த குடும்பத்தினர் கருதியுள்ளனர்.
ஆனால் அவர்களது நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில் கடந்த மாதம் மட்டும் 4 முறை இவரை பாம்பு கடித்துள்ளது. இதனால் பெரும் கவலையடைந்த குடும்பத்தினர் தற்போது லிங்கராஜுவை வேலைக்கு கூட வெளியே விடாமல் வீட்டுக்குள்ளேயே தங்கும்படி கூறியுள்ளனர்.
லிங்கராஜுவுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர்களால் குறித்த காரணத்தை இதுவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இதனாலையே அவரது குடும்பத்தினர் இதை சாபம் என்று நம்புகின்றனர்.
மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கல்குடா கடலில் நீராடச் சென்ற சமயம் கடலில் மூழ்கி காணாமல் போன இரு சகோதரர்களின் சடலங்களும் நேற்றுக் காலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நீராடச் சென்று காணாமல் போனவர்களில் சண்முகம் சதீஷ்குமார் (21) என்பவரதும் இவரின் இளைய சகோதரரான சுரேஷ்குமார் (18) என்பவரதும் சடலங்களே நேற்று மீட்கப்பட்டன.
இதேவேளை, தங்களது பிள்ளைகள் கடலில் மூழ்கி இறந்துள்ள தகவலை அறிந்து அவர்களின் பெற்றோரான கல்குடா பட்டியடிச்சேனை கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சண்முகம் (49) கணபதிப்பிள்ளை யோகலெட்சுமி (46) ஆகியோர் வீட்டு முற்றத்திலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டனர்.
தூக்கில் தொங்கி மரணமடைந்த வேலுப்பிள்ளை சண்முகம் தம்பதியினருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளுமாக நான்கு பிள்ளைகள். அதில் ஒரு பெண் பிள்ளை நான்கு வருடங்களுக்கு முன் மரணமடைந்திருந்தார்.
கல்குடா விஷ்ணுகோயில் குறுக்கு வீதி பட்டியடியைச் சேர்ந்த மேற்படி இரு சகோதரர்களும் மற்றும் மூன்று நண்பர்களுமாக ஐவர் பிறந்த தினத்தை கடற்கரையில் கொண்டாடுவதற்காக பாசிக்குடா கடலுக்குச் சென்று அவர்களில் நால்வர் நீராடிக் கொண்டிருந்த சமயம் சுரேஷ்குமார் என்பவர் கடலலையால் அள்ளுண்டு கொண்டு செல்லப்பட, சகோதரனான சதீஷ்குமார் அவரைக் காப்பாற்ற முயற்சித்துள்ளார்.
அவ்வேளையில் இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதன் பின்னர் மற்றைய இரு நண்பர்களும் நீரில் மூழ்கிய நிலையில் மீனவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
கடலில் மூழ்கி காப்பாற்றப்பட்ட மாணவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை, காணாமல் போன தனது சகோதரர்களில் ஒருவரின் சடலம் கடற்கரையில் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த சகோதரி மயங்கி வீழ்ந்த நிலையில் உறவினர்களால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
குழந்தைகள் உறிஞ்சுவதற்காக வழங்கப்படும் டீட்டரை வாயில் வைத்துக்கொண்டு நீண்ட தூரம் துப்பும் போட்டியொன்று ஜேர்மனியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
பிராங்பர்ட் நகருக்கு அருகிலுள்ள நைடெரோ எனும் இடத்தில் நடைபெற்ற இப்போட்டியில் குழந்தைகள் அல்லாமல் பெரியோர்களே பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் பிரிவில் பிலிப் ஷீபெல்பினும் பெண்கள் பிரிவில் நட்டேலி புக்லிஸிம் முதலிடம் பெற்றனர்.
ஜப்பானிய ரயில் ஒன்றின் சாரதி, ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக ரயில் பாதையிலேயே சிறுநீர் கழித்தமைக்காக ஜப்பானிய ரயில் சேவை நிறுவனமொன்று மன்னிப்புக் கோரி யுள்ளது.
டோக்கியோவுக்கு தென் கிழக்கிலுள்ள சிபுபா நகரின் ரயில் நிலையமொன்றில் கடந்த திங்கட்கிழமை ரயில் ஒன்று நிறுத்தப்பட்டபோது அதன் சாரதி, ரயில் என்ஜினின் கதவை திறந்து வைத்துவிட்டு தண்டவாளத்திலேயே சிறுநீர் கழித்தார்.
50:60 வயதான மேற்படி சாரதியிடம் இது தொடர்பாக விசாரித்தபோது, கழிவறைக்குச் சென்றால் ரயிலை உரிய நேரத்துக்குப் புறப்படச் செய்வதில் தாமதம் ஏற்படலாம் என்பதால், அவசரமாக தண்டவாளத்தில் சிறுநீர் கழித்ததாக அவர் கூறினார்.
இச் சம்பவம் தொடர்பாக மேற்படி ரயில் சேவையை நடத்தும் ஜப்பான் ரயில்வே குழும நிறுவனத்தின் ஓர் அங்கமான ஜே.ஆர். ஈஸ்ட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
இயற்கை உபாதைகளை தீர்ப்பதற்கு கழிவறையை பயன்படுத்துமாறு அச் சாரதி அறிவுறுத்தப்பட்டுள்ளார் என ஜே.ஆர்.ஈஸ்ட் நிறுவனம் நேற்று தெரிவித் துள்ளது. இச் சாரதி தண்டிக்கப்படுவாரா என்பது குறித்து அந் நிறுவனம் எதுவும் தெரிவிக்கவில்லை.