ஆந்திராவில் கர்ப்பமாக இருந்த பெண்ணின் வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று ஜோதிடர் கூறியதால், அவரது மாமியார் மற்றும் நாத்தனார் சேர்ந்து அசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரில் கிரிஜா(27) என்ற பெண்ணுக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது, இந்நிலையில் கிரிஜா மீண்டும் கர்ப்பமானார்.
அவர் வயிற்றில் வளர்வது பெண் குழந்தை தான் என ஜோதிடர் கணித்துள்ளார், இதனால் கோபமடைந்த கிரிஜாவின் மாமியாரும், நாத்தனாரும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
கொலை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அசிட் வாங்கி அவளது வயிற்றில் ஊற்றியுள்ளனர். எரிச்சல் தாங்க முடியாமல் கதறிய கிரிஜாவை, அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 19 ஆம் திகதி நிகழ்ந்த இந்த சம்பவம், 26 ஆம் திகதி தான் பொலிசாரின் கவனத்திற்கு வந்துள்ளது. தகவலறிந்த பொலிசார் உடனடியாக கொலை முயற்சி செய்ததாக வழக்கு பதிவு செய்து, கிரிஜாவின் கணவர் மற்றும் மாமனாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து மூத்த பொலிஸ் அதிகாரி கூறுகையில், நாங்கள் கெமிக்கல் ஆய்வாளர்கள் அறிக்கைக்காக காத்திருக்கிறோம்.
அவர்கள் மண்ணெண்ணையில் கெமிக்கல் கலந்து உள்ளனர் என்று தோன்றுகிறது, இதுதொடர்பாக விசாரணை முடிந்துவிட்ட நிலையில் கிரிஜாவின் மாமியாரை தேடிவருவதாக தெரிவித்துள்ளார்.
திருகோணமலை கந்தளாயில் கொள்கலன் வாகனமொன்று வீதியின் நடுவே திடீரென தீப்பிடித்ததால் சாரதியும், அதன் உதவியாளரும் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு அத்தியாவசிய உணவுப் பண்டங்களை ஏற்றிச் செல்லும் கொள்கலனே மா மூடைகளை ஏற்றிச் சென்ற போது இவ்வாறு திடீரென தீப்பற்றியுள்ளது.
திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு சென்ற போதே கந்தளாய், பொட்டகாடு, எரிக்கிளம் காட்டுப்பகுதியில் வைத்து கொள்கலன் பெட்டி வாய்க்காலுக்குள் தலை கீழாக குடைசாய்ந்ததோடு ,கொள்கலன் தீப்பற்றியது. உடனே அப்பிரதேச பொதுமக்கள் கந்தளாய் பொலிஸாருக்கும், பொலிஸ் அவசர பிரிவினருக்கும் தகவல் வழங்கியதுடன் தீப்பிடித்தலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இயந்திரக் கோளாறு வாகனம் காரணமாகவே இவ்வாறு தீப்பிடித்திருக்கலாம் எனவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாய் ஒருவர் தான் கர்ப்பம் தரித்த நாளில் இருந்து சகல நேரத்தையும் தனது அன்பான குழந்தைக்காகவே செலவிடுவார். எனினும் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர், பெற்ற தாய் மற்றும் தந்தையை அனாதரவாக விட்டுச் செல்லும் சம்பவங்கள் உலகில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.
இப்படியான சம்பவம் ஒன்று அனுராதபுரம் மிகிந்தலை பிரதேசத்தில் நடந்துள்ளது.
15 பிள்ளைகளை பெற்ற தாய் ஒருவரை அவர் பெற்று வளர்த்து ஆளாக்கிய பிள்ளைகள் தாயை எவரும் இல்லாத அனாதை போல் அனாதரவாக விட்டுச் சென்றுள்ளனர்.
மிகிந்தலை கல்லன்சின பிரதேசத்தில் கோனேவ என்ற கிராமத்தில் 80 வயதான இந்த தாய் வாழ்ந்து வருகிறார்.
இந்த தாய் மூலம் உலகத்தை கண்ட 15 பிள்ளைகளில் 11 பேர் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
வயதான இந்த தாயை பிள்ளைகள் எவரும் கவனிப்பதில்லை. தாய் வசிப்பதற்கு வீடொன்றும் இல்லாத நிலையில் கூடாரம் ஒன்றில் வசித்து வருகிறார்.
கிராம மக்கள் வழங்கும் உணவை உண்டே இந்த தாய் உயிர் வாழ்ந்து வருகிறார்.
பிள்ளைகளின் அரவணைப்பு தேவைப்படும் வயதில் இருந்து வயதான இந்த தாய் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதாக கிராம மக்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க ஸ்பேஸ்.எக்ஸ் கம்பனியால் பரீட்சார்த்தமாக ஏவப்படவிருந்த ஏவுகணையொன்று வெடித்துச் சிதறியதில் பல மைல் தொலைவு வரையுள்ள கட்டடங்கள் அதிர்ந்துள்ளன.
புளோரிடா மாநிலத்திலுள்ள கேப் கனாவெரல் பிராந்தியத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.
குறித்த ஏவுகணைக்கு எரிபொருளை ஏற்றிய வேளையிலேயே மேற்படி அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
அதேசமயம் இந்த சம்பவத்தில் குறித்த ஏவுகணையால் நாளை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்படவிருந்த பேஸ்புக் சமூகவலைத்தளத்திற்காக இஸ்ரேலில் 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான செலவில் நிர்மாணிக்கப்பட்ட அமொஸ் – 6 தொடர்பாடல் செய்மதி அழிவடைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீன திரைப்பட நடிகர் ஜாக்கிச்சானுக்கு (Jackie Chan) ஒஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹொங்காங்கில் பிறந்த 62 வயதான ஜாக்கிச்சான், சீன திரைப்படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.
அதன் மூலம் ஹொலிவுட் திரைப்படங்களில் காலடி வைத்து ரஷ் ஹவர், கராத்தே கிட் போன்ற திரைப்படங்களால் புகழ்பெற்றவர்.
30 திரைப்படங்களை இயக்கியுள்ள ஜாக்கிச்சானுக்கு திரைத்துறையில் அவரது பங்களிப்பை பாராட்டி ஒஸ்கர் விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை THE ACADEMY OF MOTION PICTURE ARTS AND SCIENCE அமைப்பு அறிவித்துள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் லொஸ் ஏஞ்செல்ஸ் நகரில் ஜாக்கிச்சானுக்கு ஒஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது.
பாகிஸ்தானின் வட பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் மர்டன் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தினுள் நுழைந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய பின்னர், உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளையும் வெடிக்கச் செய்துள்ளனர்.
இந்த இரட்டைத் தாக்குதலில் சட்டத்தரணிகள், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என 12 பேர் பலியாகினர். காயமடைந்த 50 இற்கும் அதிகமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு ஜமாத்-உர்-அஹ்ரார் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இரண்டு கோடி ரூபா கப்பம் கேட்டு கடத்தி கொலை செய்யப்பட்ட பம்பலபிடியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமானின் கடத்தல் சம்பவம் தொடர்பான் தகவல்கள் வௌியாகியுள்ளன.
குறித்த வர்த்தகர் அவருடைய வியாபார நிலையத்தின் பண கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கு நம்பிக்கையின் நிமித்தம் அருகில் வைத்திருந்த பாகிர் அஸ்லம் மொஹமட் என்பவர் மூலமே இந்த கடத்தல் சம்பவம் திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிர் அஸ்லம் மொஹமட் என்பவர் 08 ஆண்டுகளாக வர்த்தகர் ஷாகிப் சுலைமானிடம் வேலை பார்ப்பதனால், நம்பிக்கையின் நிமித்தம் பண கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை கவனிக்கும் பணியில் அவரை ஈடுபடுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களை தௌிவூட்டு வகையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இவ்வாறு கூறினார்.
இந்நிலையில் பாரிய அளவான நிதி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதை அறிந்த பாகிர் அஸ்லம் மொஹமட் என்பவர் இவ்வாறு கப்பம் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இதனுடன் சம்பந்தப்பட்ட 08 பேரை கைது செய்துள்ளதாகவும் அஜித் ரோஹன கூறினார்.
அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பாகிர் அஸ்லம் மொஹமட் என்பவரின் வீட்டை திருத்தும் நடவடிக்கைக்கு, வர்த்தகர் ஷாகிப் சுலைமான் 05 இலட்சம் ரூபா நிதி வழங்கியுள்ளதுடன், அவரின் மனைவியும் 50,000 ரூபா பணம் வழங்கியுள்ளார்.
வர்த்தகரை கடத்துவதற்கு ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் திட்டமிட்டுள்ளதுடன், அதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் இரண்டு தினங்களுக்கு முன்னர் 43,000 பணம் செலுத்தி வாடகைக்கு பெறப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவரின் மனைவியுடைய தங்க ஆபரணம் ஒன்றை அடகு வைத்து வாகனத்திற்கான பணம் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடத்தல்காரர்களின் நோக்கம் இரண்டு கோடி ரூபா கப்பம் பெறுவது என்பதுடன், தட்டையான தடி ஒன்றினால் தாக்கப்பட்டதனால் ஷாகிப் சுலைமான் உயிரிழந்ததை கடத்தல்காரர்கள் அறிந்திருக்கவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வௌிநாடு சென்றிருந்த ஷாகிப் சுலைமானின் தந்தை மறுநாள் நாடு திரும்பியதால், மகனை காப்பாற்றுவதற்காக குறித்த பணத்தொகையை வழங்குவார் என்ற எதிர்பார்ப்புடன், ஷாகிப் சுலைமான் கடத்தப்பட்ட மறு தினமே பிரதான சந்தேக நபர் வழமை போன்று வர்த்தக நிலையத்திற்கு சென்றுள்ளார்.
பொலிஸார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போதிலும் ஒரு சில தினங்களில் சந்தேகநபர்களை கைது செய்ய முடிந்துள்ளதாகவும், சந்தேகநபர்களை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மேலும் கூறினார்.
தான் இறந்துவிட்டதாக வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
பட்டிமன்ற நடுவரும், தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பின்வருமாறு தெரிவித்தார்..
கடந்த மாதம் 27ம் திகதியில் இருந்து என்னை பற்றி வட்ஸ் அப் மூலம் தவறான வதந்தியை பரப்புகிறார்கள். நான் விபத்தில் இறந்து விட்டதாக வட்ஸ் அப் மூலம் தகவல் வெளியிடுகிறார்கள். எனது நண்பர்கள், குடும்பத்தினர் உட்பட ஏராளமானோர் தொலைபேசி மூலம் இதுபற்றி விசாரிக்கிறார்கள். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.
அவினாசி தொகுதியில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் நான் பேசிவிட்டு வந்த பின்னர்தான் என்னைப்பற்றி இதுபோல் வதந்தி பரப்புகிறார்கள். இவ்வாறு வதந்தி பரப்புபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் மனுவில் தெரிவித்துள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் இன்று (02.09.2016) மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தி்ல் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் வைரவப்புளியங்குளத்திலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆயதங்கள், திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,
வவுனியா மற்றும் கிளிநோச்சி பகுதிகளிலுள்ள வீடுகளில் சி.ஐ.டி எனக் கூறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த வவுனியா பட்டானிச்சூரை சேர்ந்த அப்துல் ரதீப் முகமட் முஸம்மில், மற்றும் முஸ்தபா ஹாஜ்தீன் ஆகியோர் உட்பட 5 பேரை கைதுசெய்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து அங்கிருந்த ஒருவரை காயப்படுத்திவிட்டு 35 பவுண் நகைகள் கடந்த மாதம் 13 ஆம் திகதி கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸிரகுமார, உதவி பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெனாந்து, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரட்ன விஜயமுனி ஆகியோரின் வழிகாட்டலில் வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமிந்த செனரத் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணைகளில் கிளிநொச்சியைச் சேர்ந்த மனோகரன் சீலன் நிசாந்தன், வவுனியாவின் பூந்தோட்டம், பட்டக்காடு, பட்டாணிச்சூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மதியரட்ணம் திலீப், ஆறுமுகம் விஜயகுமார், அப்துல் ரதீப் முகமட் முஸம்மில், முஸ்தபா ஹாஜ்தீன் ஆகிய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உடந்தையாக திருடப்பட்ட நகைகளை விற்பனை செய்ய உதவிய ஒருவரும், வவுனியா நகைக்கடை உரிமையாளர் ஒருவரும் மேலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தமையும் இவர்கள் கிளிநொச்சி, மகாறம்பைக்குளம், கனகராயன்குளம், வேப்பங்குளம் ஆகிய பகுதிகளில் கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவர்களிடம் இருந்து 28 பவுண் தங்க நகை, இரண்டு கைக்குண்டுகள், உள்ளூர் துப்பாக்கி, வாள், இரண்டு கத்திகள், தொலைக்காட்சிப்பெட்டி, தளபாட வேலைகளுக்கு பயன்படுத்தும் 8 இலத்திரனியில் பொருட்கள், இரு நவீனரக மோட்டார் சைக்கிள்கள், போலிக் கைத்துப்பாக்கி, பெண்களின் ஆடைகள், எரிவாயு சிலிண்டர், உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஒரு இலட்சத்து நாற்பத்தெட்டாயிரத்து 550 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளது.
இவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் வைக்கப்பட்டுள்ளது.
கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், அனுராதபுரத்தில் புதிய புத்தர் சிலையொன்றைப் பெற்று அதனை எடுத்துச் சென்று அங்கு பிரதிஸ்டை செய்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் தெரிவித்துள்ளார்.
இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பினரே கனகராயன்குளம் புத்தர் சிலையை உடைத்ததாக அறம்பொல ரத்தனசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, இவாஞ்சலிக் ஈழ விடுதலை அமைப்பு என்ற அமைப்பைச் சேர்ந்த ஒருவர் தனக்கு உயிரச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அகில இலங்கை இந்து சம்மேளனம் என்ற அமைப்பின் தலைவர் என்.அருண்காந்த் தெரிவித்துள்ளார்.
உடைக்கப்பட்ட புத்தர் சிலையை மீள நிறுவுவதற்கோ அல்லது இந்து பௌத்த மதங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கோ முயற்சித்தால் தனக்கு துப்பாக்கிச் சூடு விழும் என்று அந்த நபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அருண்காந்த் கூறியுள்ளார்.
கனகராயன்குளம் குறிசுட்டகுளம் அம்மன் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையே உடைக்கப்பட்டிருந்தது.
அந்த அம்மன் கோயில் பூசாரி உள்ளிட்ட அந்தப் பிரதேசத்து மக்கள், புதிய புத்தர் சிலையை பிரதிஸ்டை செய்வதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கியிருந்ததாகவும் அறம்பொல ரத்தனசார தேரர் தெரிவித்துள்ளார்.
புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கனராயன்குளம் பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். எனினும் எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை.
பொகவந்தலாவ ரானிகாடு தோட்டத்தில் 14 வயது பாடசாலை சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்து சென்ற மாமனாரும், குறித்த சிறுமியும் தலைமறைவாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் நேற்று (01) வியாழகிழமை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று வியாழகிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
குறித்த மாணவி நேற்று காலை 07.45 மணி அளவில் முச்சக்கர வண்டி ஒன்றில் ஏறி சென்றுள்ளதை மற்றொரு மாணவி கண்டிருப்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் தெரிய வந்துள்ளது.
சிறுமியின் மாமனார் கண்டி கலகா பகுதியை சேர்ந்தவர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த மாணவி பொகவந்தலாவயில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09ல் கல்வி கற்று வருவதாக தெரிவிக்கபடுகிறது.
சம்பவம் தொடர்பில் சிறுமியின் மாமனாரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பம்பலப்பிட்டி பகுதியில் கோடீஸ்வர இளம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் 25 மற்றும் 30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உயிரிழந்த வர்த்தகரை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் கொழும்பு குற்றப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பம்பலபிடியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமான், கடந்த 21ம் திகதி இரவு 9.15 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
தமிழ் மாமன்றம் நடாத்தும் தமிழ் மாருதம் 2016 கலை இலக்கியப் பெருவிழாவானது வரும் சனி – ஞாயிறு தினங்களில் (செப்டெம்பர் 3,4) ஆகிய தினங்களில் வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுடன் இணைந்ததாக, கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையினர் புத்தககக் கண்காட்சியையும் மலிவு விற்பனையையும் நடாத்தவுள்ளனர்.
தமிழ் மொழி, இலக்கிய நூல்கள், நாவல்கள், கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள் என அனைத்துப் பிரிவுகளிலும் இந்திய, இலங்கை எழுத்தாளர்களின் படைப்புக்கள் காட்சிப்படுத்தவுள்ளன.
நீண்டகாலத்திற்குப் பின்னர் வவுனியாவிலே நடாத்தப்படும் இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பொதுமக்கள், மாணவர்கள், புத்தக ஆர்வலர்கள் முறையாகப் பயன்படுத்தி, தமிழ் மாருதம் 2016 நிகழ்வுகளையும் கண்டுகளித்து விழாவைப் பூரணப்படுத்துமாறு தமிழ் மாமன்றத்தினர் அழைக்கின்றார்கள்.
வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் நேற்று முன்தினம் 01.09.2016 வியாழக்கிழமை தீர்த்த திருவிழா இடம்பெற்றது .
அதிகாலை தீர்த்த கிரியைகள் மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர சிவாச்சாரியார் தலைமையில் ஆரம்பமாகி காலை 9.00 மணியளவில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து தீர்த்த கேணிக்கு எழுந்தருளிய விநாயகபெருமானுக்கு தீர்தோற்சவம் இடம்பெற்றது .
தீர்த்தோற்சவ நிகழ்வில் பிரதேசவாசிகள் மாணவர்கள் ஆசிரியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.