கர்நாடகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய இடத்தில் நிலம் வாங்கியுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடக அரசு தலைமைச்செயலாளர் அரவிந்த் ஜாதவின் தாயார் தாராபாய் மாருதிராவ் ஜாதவ் சட்டவிரோதமாக நிலம் வாங்கி பணம் சம்பாதித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரை விசாரணை நடத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலத்தில் சர்வே எண் 80-இல் 0.813 ஏக்கர் பரப்பளவு உடைய 2 வீட்டுமனைகளை வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவர் வாங்கிய 2 வீட்டுமனைகளுக்கான கிரைய பத்திரம் 1997 ஆக.11-ஆம் திகதி பதிவுசெய்யப்பட்டுள்ளது. பத்திரத்தில் வாங்கியவரின் பெயர் சிவாஜிராவ் கேய்க்வாட் (எ)ரஜினிகாந்த் தபெ ரானோஜிராவ் என்றும், முகவரி: போயஸ்கார்டன், சென்னை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 0.45 ஏக்கர் பரப்பளவு கொண்ட முதல் வீட்டுமனை ரூ.3.25 லட்சத்திற்கும் 0.35 ஏக்கர் பரப்பளவு கொண்ட 2-வது வீட்டுமனை ரூ.2.25 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிகளின் போது 560 அடி அகலம் கொண்ட சுவரில் வரையப்பட்ட ஓவியம் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
‘எட்னியாஸ்’ என்று அழைக்கப்படும் இந்த ஓவியம், ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள ஒலிம்பிக் நெடுஞ்சாலையில் உள்ள கை விடப்பட்ட நிலையில் உள்ள ஒரு கிடங்கின் சுவர் மீது வரையப்பட்டது. இந்த ஓவியத்தை வரைய பிரேசில் நாட்டைச் சேர்ந்த எட்வர்டோ கோப்ரா தலைமையிலான குழுவினர் 45 நாட்கள் எடுத்துக்கொண்டனர்.
ஒலிம்பிக் சின்னத்தில் உள்ள 5 வளையங்களைக் குறிக்கும் வகையில், பல்வேறு கண்டங்களைச் சேர்ந்த 5 பழங்குடியின மக்களின் முகங்களை பிரதிபலிக்கும் வகையில் ஸ்பிரே பெயின்ட் மூலம் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
குறிப்பாக, நியூகினியாவின் ஹுலி, எத்தியோப்பியாவின் முர்சி, தாய்லாந்தின் கயின், ஐரோப்பிய யூனியனின் சுபி மற்றும் அமெரிக்காவின் தபஜோஸ் ஆகிய 5 இனத்தவர்களின் ஓவியம்தான் சுவரில் வரையப்பட்டுள்ளன.
51 அடி உயரம் 560 அடி அகலம் கொண்ட சுவரில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் 3 கி.மீ. தூரம் வரை நீள்கிறது. இந்த ஓவியத்தை வரைய, 180 பக்கெட் அக்ரிலிக் பெயின்ட், 2,800 ஸ்பிரே பெயின்ட் கேன்கள் மற்றும் 7 ஹைட்ராலிக் லிப்ட்கள் பயன்படுத்தப்பட்டன.
ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஐன் தமீர் என்ற கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த 5 பயங்கரவாதிகள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக சுட்டனர். வெடிகுண்டுகள் வீசியும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தற்கொலைப் குண்டுதாரி ஒருவர், தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளான். துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலில் மொத்தமாக 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த பாதுகாப்பு படையினர், 4 பயங்கரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அப்பகுதி முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் டிக்கோயா தரவளை பகுதியில், 13 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் 5 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சிறுவர்கள், குறித்த சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய காட்சிகளை கமராக்களில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவர்களிடமிருந்த கமராவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த சிறுவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுமி துஷ்பிரயோகம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரில் 3 பேர் விடுதலை
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்திருந்த 5 சிறுவர்களில் 3 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட டிக்கோயா தரவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
13 வயதுடைய பாடசாலை செல்லும் சிறுமியை 13, 14 வயதுடைய சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்து அதை கமராவில் பதிவு செய்து வைத்துள்ளனர்.
சிறுமியின் பெற்றோர்களினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதை தொடர்ந்து, நேற்று இரவு குறித்த சிறுவர்கள் 5 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளதுடன் கமராவையும் மீட்டுள்ளனர்.
இதில் 2 சிறுவர்கள் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 3 சிறுவர்களை பொலிஸார் விசாரணையின் பின்னர் விடுதலை செய்துள்ளனர்.
குறித்த சிறுமியை டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜபடுத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலக மக்கள் தொகை பணியகம் நடத்திய ஆய்வில் 2050 ஆம் ஆண்டில் உலகத்தின் மக்கள் தொகை 1000 கோடியை தொடும் எனவும், இதில் இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உலக மக்கள் தொகை தற்போது 740 கோடியாக உள்ள நிலையில் 2050 ஆம் ஆண்டில் இது 1000 கோடியை எட்டும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 2050 ஆம் ஆண்டின்போது, ஆபிரிக்க நாடுகளின் மக்கள்தொகை 250 கோடியாகவும், அமெரிக்காவின் மக்கள் தொகை 120 கோடியாகவும் இருக்கும்.
ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு 72 கோடியாகவும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளின் பங்களிப்பு 6.6 கோடியாகும் இருக்கும் என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த மக்கள் தொகை வளர்ச்சியில் அதிகபட்சமாக இந்தியா சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்களிப்பு இருக்கும் என கூறப்படுகிறது. இதன் வளர்ச்சி 530 கோடியாக இருக்கும். இந்தியா உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியின் கருவலகஸ்வெவ பகுதியில் கடந்த சனிக்கிழமை (27.08) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த யானையை தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யானைக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் யானை தேடப்பட்டு வருவதாக, புத்தளம் மாவட்ட வனவிலங்கு திணைக்களம் குறிப்பிட்டது.
புத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியின் கருவலகஸ்வெவ பகுதியில், 11 பேருடன் பயணித்த வேன், யானை மீது மோதியதையடுத்து யானை வேனைத் தாக்கிய சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை பதிவாகியிருந்தது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த யானைக்கு சிகிச்சையளிப்பதற்காக, புத்தளம் மாவட்ட வன விலங்கு அதிகாரிகள் குறித்த யானையை தேடும் நடவடிக்கையை நேற்று மாலை முதல் முன்னெடுத்துள்ளனர்.
யானை இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் யானையை தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக வனவிலங்கு அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து விமான நிலையம் நோக்கி, 11 பேருடன் பயணித்த வேன் மீது, புத்தளம் – அநுராதபுரம் வீதியின் ஏழாம் கட்டை பகுதியில் வைத்து யானை தாக்கியது.
நேற்று முன்தினம் அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஐந்து வயது சிறுவனொருவனும், யாழ்.பருத்தித்துறையை சேர்ந்த 39 வயதான நிமல்ராஜ் என்பவரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பேருந்து நிறுவனத்தை சேர்ந்த கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரைச் சொகுசு பேருந்து ஒன்று இருக்கைகளுக்கு மேலதிகமாக வவுனியாவில் வைத்து கடந்த 26.08.2016 வெள்ளிகிழமையன்று மாலை 6.30 மணியளவில் ஐம்பதுக்கு மேற்பட்ட பயணிகளை ஆடுமாடுகளைப் போல் ஏற்றி பிரயாணம் செய்துள்ளது.
மேற்படி பேருந்தில் ஏறிய பயணிகளிடம் கட்டணம் தொடர்பாக எதுவித அறிவித்தலையும் வழங்காது சிங்களத்தில் மட்டுமே உரையாடிய தமிழ் நடத்துனர் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு கட்டணங்களை அறவிட்டதுடன் அதற்கான அந்த தனியார் பேருந்து நிறுவனத்துக்கு சொந்தமான பயண பற்றுச் சீட்டினை வழங்காமல் பேருந்தின் இலக்கமற்ற பயண பற்றுச் சீட்டினை வழங்கியதுடன் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றியதும் கட்டணம் தொடர்பாகவும் தட்டிகேட்ட பயணிகளுடன் தனிச் சிங்களத்தில் மட்டுமே உரையாடியுள்ளார்.
நின்ற நிலையில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்ட பயணிகளிடம் 275 ரூபாவும், வவுனியா கிளிநொச்சி நோக்கி நின்று பயணத்தினை கொண்ட பயணிகளிடம் 175 ரூபாவும் அறவிட்டுள்ளார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் ரூபாய் 1000 செலுத்தி நின்றநிலையில் பயணம் மேற்கொண்டுள்ளனர். இருந்தபோதும் இளைஞர் குழு ஒன்று நடத்துனரிடம் ஒருவழியாக தங்களது மேலதிகமாக அறவிடப்பட்ட பணத்த்தை மீளப்பெற்ற பின்னர்தான் இறங்கிச் சென்றுள்ளனர்.
சின்னத்திரயில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர் ரம்யா. இவர் மணிரத்னம் இயக்கத்தில் ஓகே கண்மணி படத்தில் நடித்திருந்தார்.
இவரின் டுவிட்டர் ஐடியை கடந்த 10 மணி நேரம் யாரோ ஹாக் செய்துவிட்டார்கள், அதிலிருந்து ஒரு சில டுவிட் மற்ற பிரபலங்களுக்கு சென்றுள்ளது.(கொஞ்சம் தவறான வார்த்தைகளுடன்)
இதனால், மிகவும் வருத்தத்தில் ஒரு சில கருத்துக்களை இன்று அவரே வெளியிட்டுள்ளார்.
மனநலக் குறைபாடுடைய இரு பெண்களை கொலை செய்ததாக ஒருவரை சீனாவின் வட மேற்கு பகுதியிலுள்ள காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர். இது என்ன பெரிய விடயம் என்று கேட்கிறீர்களா?
“ஆவி திருமணங்கள்” என்று கூறப்படும் சடங்கிற்கு அந்தப் பெண்களின் சடலங்களை விற்பதற்காக கொலைகளைச் செய்திருப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுதான் இதில் உள்ள சுவாரஸ்யமே.
திருமணம் செய்யாமல் இறந்து விடுவோருக்கு வாழ்க்கைத் துணையை ஏற்பாடு செய்கின்ற நோக்கத்தில், இப்போதும் சீனாவின் சில பகுதிகளில் வழக்கத்தில் இருந்து வரும் முற்கால நிழல் சடங்கு முறையை இந்த வழக்கு வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
ஷாஅன்ஸி மாகாண காவல் துறையினரின் கூற்றுப்படி, மூன்று பேர் வந்த வாகனத்திற்குள் பெண்ணொருவரின் உடல் இருந்ததை போக்குவரத்து காவல் துறையினர் கண்டுபிடித்த ஏப்ரல் மாதமே இந்த வழக்கு தொடங்கிவிட்டது..
அவர்களைப் பற்றிய புலனாய்வுதான் படுபயங்கரமான தொடர் நிகழ்வுகளின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கத் துணைபுரிந்துள்ளது.
கைதாகியிருக்கும் அந்த நபர், இறந்தவருக்கு மணப்பெண்களை பார்த்துத் தருவதாக உறுதி அளித்திருக்கிறார்.
இறந்தோரின் உடலை விற்று பணம் சம்பாதிப்பதற்காக அந்த பெண்களை கொன்றுவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
திருமணமாகாமல் இறந்து விடுவோர் தங்களின் உலக வாழ்க்கைக்குப் பின்னர் தனியாக இல்லை என்பதை இந்த ஆவி திருமணம் உறுதிப்படுத்துவதாக 3000 ஆண்டுகளாக இந்த வழக்கத்தை கடைபிடித்துவரும் பாரம்பரிய நம்பிக்கையாளர்கள் இதுபற்றித் தெரிவிக்கின்றனர்.
தொடக்கத்தில் திருமணம் செய்யாமல் இறந்துபோனோருக்காக மட்டுமே இத்தகைய ஆவி திருமணங்கள் நடைபெற்றன.
அதாவது, பூமியில் வாழ்கின்ற ஒருவர், திருமணமாகாமல் இறந்துபோன தனித்தனி நபர்கள் இருவருக்கு செய்து வைக்கிற சடங்காக இந்த ஆவி திருமணம் முதலில் இருந்தது.
ஆனால் சமீபகாலமாக, பூமியில் வாழ்கின்ற ஒருவரை, இறந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைப்பதில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆவி திருமணத்தில், `மணமகளின்´ குடும்பத்தினர், மணமகளுக்கான கட்டணம் கோருவதோடு, அணிகலன், வேலைக்காரர்கள், வீடு ஆகியவற்றை உள்ளடக்கிய, வரதட்சணை வழங்கப்படுவதும் இந்த சடங்கில் உள்ளது. ஆனால் அனைத்தும் காகித வடிவத்தில்தான்.
பாரம்பரியத் திருமணங்களில் உள்ளதைப்போல, வயது, குடும்பப் பின்னணி அம்சங்களும் இந்த ஆவி திருமணத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன.
அதனால், இறந்தோரை வைத்து ஜோடிகளை உருவாக்குவதற்காக, குடும்பங்கள் ஜாதகப் பொருத்தம் பார்க்கும் ஜோதிடர்களையும் நாடுகிறார்கள்.
ஆவி மணமகன் மற்றும் ஆவி மணமகளின் இறுதிச் சடங்கிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் இந்த திருமண சடங்கில் வைக்கப்படுவதோடு, விருந்தும் நடைபெறுகிறது.
ஆவி மணமகளின் கல்லறையில் இருந்து எலும்பைத் தோண்டி எடுத்து, ஆவி மணமகனின் கல்லறையில் வைப்பது தான் இந்த சடங்கில் மிகவும் முக்கியமான பகுதியாகும்.
சீனாவின் சில பகுதிகளில், இந்த சடங்கு முறைகள் மாற்றம் பெற்றுள்ளதற்கு பல ஆண்டுகளாக சான்றுகள் உள்ளன.
ரகசியமாக நடைபெறும் சடங்குகளில், உயிரோடு வாழ்கின்ற மனிதருக்கும் இறந்தவருக்கும் திருமணம் நடைபெற்ற நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.
ஆனால், இதையொட்டி பெரிய அளவிலான மனித உடல் திருட்டு, கொலை உள்ளிட்ட குற்றங்கள் நடைபெறத் துவங்கியதை எச்சரிக்கின்ற பல அறிக்கைகளும் உள்ளன.
2015 – ஆம் ஆண்டு ஷான்ஸி மாகணத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து 14 பெண்களின் உடல்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது.
2008 முதல் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் ஷான்ஸி மாகாணத்தில் நடைபெற்ற ஆவி திருமணங்கள் பற்றி கள ஆய்வு நடத்திய, ஷாங்காய் பல்கலைக்கழகத்தின் சீன மொழித்துறையின் தலைவர் ஹூயாங் ஜிங்ச்சுன் அவர்களின் கூற்றுப்படி, பெண்ணின் சடலம் அல்லது எலும்பின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
அவர்கள் ஆய்வு நடத்தியபோது அத்தகைய சடலங்கள், 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் யுவான் (3,400 முதல் 5,700 யூரோ; 4,500 முதல் 7,500 அமெரிக்க டாலர்கள்) வரை விலைபோகக் கூடியவையாக இருந்தன. இவற்றுக்கான தற்போதைய விலை ஒரு லட்சம் யுவான் வரை இருக்கலாம் என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.
சடலங்களை விற்பது 2006 ஆம் ஆண்டு சட்டப்படி குற்றம் என வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்லறையிலிருந்து சடலங்களை திருடிச் செல்வோரை இந்த சட்டம் தடுத்துவிடவில்லை என்றே கூறலாம்.
ஆவி மணமகளை தேடிக் கொண்டிருந்த குடும்பத்திற்கு, உடலை வழங்கி, விற்று பணம் சம்பாதிப்பதற்காக ஒரு பெண்ணை கொன்றுவிட்டதாக உள்மங்கோலியாவின் லியாங்ச்செங் வட்டத்தில் கடந்த ஆண்டு கைதான ஒருவர் காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டார்.
இது நடைபெறுவதற்கான காரணம் இடத்திற்கு இடம் மாறுபடுகிறது.
ஷான்ஸி போன்ற சமீபத்திய கொலைகள் நடைபெற்றுள்ளதாக கூறப்படும் சீனாவின் சில மாவட்டங்களில், சுரங்க அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிக திருமணமாகாத இளைஞர்கள் உள்ளனர்.
இத்தகைய பணியில் ஈடுபடுகின்ற போது உயிரிழப்புகள் அதிகமாக நடைபெறும் ஆபத்து அதிகரித்து காணப்படுகிறது.
குடும்பத்தின் நல்வாழ்வுக்கு ஆதரவு அளிப்பதற்கு உழைக்கின்றபோது இறந்துவிட்ட மகனுக்கு, இறந்த ஒரு மணமகளை கண்டுபிடிப்பது அவர்களால் செய்யக்கூடிய நல்ல காரியமாக பார்க்கப்படுகிறது.
இறந்த உறவினருக்கு காட்டும் நேசத்திற்கு உணர்வுப்பூர்வமாக ஈடு செய்கின்ற வடிவமாக இந்த ஆவி திருமணம் பங்காற்றுகிறது.
ஆனால், ஆண் – பெண் பாலின சமச்சீரின்மை விகிதமும் இதில் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 100 பெண்களுக்கு 115.9 ஆண்கள் பிறப்பதாக 2014 – ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.
ஆனால், இதற்கு முக்கியமான கலாசார காரணங்களும் உள்ளதாக டாக்டர் ஹூயாங் நம்புகிறார்.
பல நாடுகளில் உள்ளதைப் போல, இறந்தோரின் விருப்பங்கள் நிறைவேற்றப்படாவிட்டால், தங்களுக்கு ஆபத்து அல்லது பாதிப்பு வரும் என்று சீன மக்களும் நம்புகின்றனர்.
ஆவிக்கு திருமணம் செய்து வைப்பது, இறந்தோரின் ஆன்மாக்களை சாந்தியடையச் செய்வதற்காக என்று கருதப்படுகிறது.
“இறந்தவர்கள், உலக வாழ்க்கைக்கு பின்னரும் தொடர்ந்து வாழ்கின்றனர் என்பது தான் இந்த ஆவி திருமணத்திற்கு பின்னால் இருக்கின்ற அடிப்படை தத்துவம். எனவே, யாராவது ஒருவர் வாழ்கின்றபோது திருமணம் புரியாவிட்டால், இறப்புக்கு பின்னர் திருமணம் செய்து கொள்வது அவசியமாகிறது” என்று டாக்டர் ஹூயாங் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பெரும்பான்மை நிகழ்வுகள் சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் அதாவது, ஷான்ஸி, ஷாஅன்ஸி மற்றும் ஹூனான் மாகாணங்கள் போன்ற பகுதிகளில் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால், ஹாங்காங்கிலுள்ள ஜோதிடர் ஸெட்டோ ஃபாத்-ச்சிங் என்பவர் இந்த ஆவி திருமண வழக்கத்தின் முற்கால வடிவமானது ஆசியாவின் தென் கிழக்கிலுள்ள சீன சமூகங்களிடம் இன்னும் இருப்பதாக உறுதிப்படுத்துகிறார்.
தைவானில் திருமணமாகாத பெண் இறந்துவிட்டால், அவளுடைய குடும்பத்தினர் இறந்தவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிகள் எடுகின்றனர்.
பணம், காகிதப் பணம், ஒரு தலைமுடி முடிப்பு, ஒரு கைவிரல் நகம் ஆகியவற்றோடு சிவப்பு நிற பைகளை பாதைகளில் வைத்துவிட்டு அவற்றை எடுக்கின்ற ஆண் யார்? என்பதை ஒளிந்திருந்து பார்ப்பார்கள்.
அந்த பைகளை முதலாவதாக எடுக்கின்ற ஆண் மகன், மணமகனாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
ஆனால், அந்த ஆவி மணமகளை அந்த ஆண் மகன் திருமணம் செய்ய மறுத்துவிட்டால், அது துரதிர்ஷ்டமாகப் பார்க்கப்படுகிறது.
ஆவி திருமணங்களின் திருமணச் சடங்கு முறைகள் எல்லாம் ஒரே மாதிரியானவை.
சீனப் பெருநிலப் பகுதியை தவிர வேறு எங்கும் எலும்புகள் தோண்டி எடுக்கப்படுவதில்லை.
ஆவியை திருமணம் செய்துகொள்கின்ற மணமகன், பின்னர் பூமியில் வாழ்கின்ற பெண்ணொருவரை திருமணம் செய்துகொள்ளலாம்.
ஆனால், ஆவி திருமணத்தின் மனைவியை தான் முதல் மனைவியாக வைத்து வணங்க வேண்டும்.
தைவானின் தாய்ச்சுயுங் என்ற பகுதியில் நிகழ்ந்த பிரமாண்டமான சடங்கு ஒன்றில், இறந்துபோன தன்னுடைய காதலியை ஒருவர் திருமணம் செய்து கொண்ட காணொளி பதிவு கடந்த ஆண்டு மிகவும் வைரலாக இணையதளத்தில் பிரபலமானது.
ஒருவர் இறந்தபிறகு, அந்த இழப்புக்களை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் நடைபெறும் உலக அளவிலான குழப்பங்களில் இந்த சடங்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
“இத்தகைய ஆவி திருமணங்கள் இறந்தவர் மீதான மாறாத அன்பை வெளிக்காட்டி, மனதை நெகிழ வைப்பவை” என்று ஸெட்டோ ஃபாத்ச்சிங் பிபிசியிடம் கூறியுள்ளார்.
இந்தியாவின் காட்டுமன்னார் கோவில் முகாமில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போதிய அடிப்படை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டு கடந்த 1990ஆம் ஆண்டு சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். இவர்கள் மாநிலம் முழுவதும் 107 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, விருத்தாச்சலம், காட்டுமன்னார்கோவில் ஆகிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். தற்போது தமிழகத்தில் உள்ள முகாம்களில் 64 ஆயிரம் பேர் மட்டுமே வசிக்கின்றனர்.
காட்டுமன்னார்கோவில் முகாமில் முன் சேமிப்பு கிடங்கில் தடுப்புகளை அமைத்து அகதிகள் வசித்து வந்தனர். நீண்ட போராட்டத்துக்குப்பின் கடந்த 2011ஆம் ஆண்டு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இவர்களுக்கு சிறிய அளவிலான காங்கிரிட் வீடுகள் கட்டித் தரப்பட்டன. இந்த வீடுகளில் 75 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் வசித்து வருகின்றனர்.
இந்த வீடுகளை கட்டுவதற்கு அரசு சார்பில் நிலம் வழங்கப்பட்டது.
இந்த முகாமில் வசிப்பவர்களின் குழந்தைகள் மேற்படிப்புக்கு சேருவதில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். முகாமில் உள்ளவர்களில் 30 பேர் தற்போது படித்து வருகின்றனர். இவர்களில் 8 பேர் மேற்படிப்பு படித்து வருகின்றனர். 2000ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டில் முகாமைச் சேர்ந்த ஒருவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்து மருத்துவர் ஆனார். அதன் பிறகு இடஒதுக்கீடு இரத்து செய்யப்பட்டது.
இதனால் பல மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றும் மருத்துவப் படிப்பில் சேர இயலவில்லை என அகதிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
இதுகுறித்து முகாமில் தங்கியுள்ள சுமன் என்பவர் கூறுகையில், முகாமில் தங்கியுள்ளோருக்கு வருமானம், வாழ்வாதாரம் முக்கியப் பிரச்னையாக உள்ளது. இதனால் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்ல விரும்புகின்றனர்.
அந்நாட்டில் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதால் வெளியில் வேலைக்கு செல்லலாம். சோதனையும் தவிர்க்கப்படுகிறது. ஆனால் இங்குள்ள முகாமில் தங்கியுள்ளோர் வேலைக்குச் செல்ல முடியாது. திடீர் சோதனையும் நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலானோர் வேலைக்குச் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அவுஸ்திரேலியாவுக்கு அகதிகள் ஆண்டுதோறும் 20 ஆயிரம் பேர் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு இந்திய அரசிடம் விண்ணப்பித்து முறையான அனுமதி பெற்று விசாவுடன் செல்லலாம். இந்த அனுமதியைப் பெற கடவுச்சீட்டு முக்கியமானதாகும். ஆனால், இந்த ஆவணங்களை இந்திய அரசு வழங்காததால் பலர் கள்ளத்தோணியில் அவுஸ்திரேலியா செல்கின்றனர்.
எனவே, எங்களுக்கு கடவுச்சீட்டு வழங்க இந்திய அரசு முன்வர வேண்டும் என்றார். முகாமைச் சேர்ந்த முனியம்மாள் கூறுகையில், முகாமில் ரேஷன் அரிசி வழங்கி வருகின்றனர். ஆனால், கடந்த சில மாதங்களாக வழங்கப்படும் அரிசி கெட்டுப்போனதாக உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நல்ல அரிசியை வழங்க வேண்டும். எங்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையும் போதவில்லை. வேறு வருமானத்துக்கும் வழியில்லை. எனவே அரசு உதவித் தொகையை உயர்த்தித்தர வேண்டும் என்றார்.
மேலும், இங்கு நிரந்தர குடிநீர்த் தொட்டி இல்லை என்றும், அவ்வப்போது குடிநீர் கொண்டுவந்து விநியோகம் செய்யப்படுவதாகவும், இந்த தண்ணீர் தங்களுக்கு போதுமானதாக இல்லை என்றும் அகதிகள் தெரிவிக்கின்றனர்.
தெருவிளக்கு வசதி இல்லை எனவும் கூறுகின்றனர். எனவே, அரசு உரிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொகவந்தலாவ – தெரேசியா தோட்டத்தில் கிரை பறிக்கசென்ற குடும்பஸ்தத்தர் ஒருவர் இன்று (29) காலை சடலமாக மீட்கபட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் நேற்று ஞாயிற்றுகிழமை காலை 09.00 மணி அளவில் கீரை பறித்து கொண்டு வருவதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றுள்ளார்.
எனினும் நேற்று முழுவதும் அவர் வீடு திரும்பாத நிலையில், இன்று காலை 07.00 மணி அளவில் மாட்டுக்கு புல் அறுக்கும் புல் கான் ஒன்றில் இருந்து இவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கபட்டவர் 44 வயதுடைய மாரிமுத்து விக்னேஸ்வரன் எனவும், இரண்டு பிள்ளைகளின் தந்தையெனவும் அடையாளம் காணபட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சடலம் பிரதே பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை தனியார் காணி ஒன்றின் உரிமையாளர் தனது காணியினை சுத்திகரிக்கும்போது மண்ணில் புதையுண்ட நிலையில் 30 துப்பாக்கிகளைக்கண்ட நிலையில் ஓமந்தைப் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அவ்விடத்தில் புதையுண்டு கிடந்த விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் இத் துப்பாக்கிகளை பொலிசார் கைப்பற்றி ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றிருந்தனர்.
எனினும் அவ்விடத்தில் மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் என்ற அடிப்படையில் இன்று காலை அவ்விடத்தில் தேடுதலை மேற்கொண்ட பொலிசார் மேலும் 11 துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும் மொத்தம் 41 எல்.எம்.ஜி ரக துப்பாக்கிகளை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை தொடர்பாக வவுனியா நகரசபை செயலாளர் த.தர்மேந்திராவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது..
இலஞ்ச ஊழல் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறவில்லை. ஆனால் அலுவலக மட்ட விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை, தன்மீது குற்றம் இருந்தால் நிரூபிக்கட்டும் என்றும் தெரிவித்தார்.
அதேவேளை இன்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் இன்று காலை ஊடகவியலாளர்களை அழைத்து சந்திப்பு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
நகரசபை செயலாளருக்கு எதிரான பல குற்றச்சாட்டுக்களையும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தியிருந்ததுடன் அதற்கான ஆதாரமும் தன்னிட்டம் இருப்பதாகவும் வவுனியா நகரில் அனுமதியின்றி கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் முறையாக அனுமதியின்றி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும்,
தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றிலிருந்து வவுனியா நகரபைச் செயலாளர் ஐந்து இலட்சம் ரூபாவினை கையாடல் செய்துள்ளதாகவும் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் காண்பித்ததுடன் சட்டரீதியாக நகரசபை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், மின்சாரத்தின் உதவியுடன் இறந்தவர்களை தகனம் செய்யும்போதும் அதற்கான கட்டணத்தில் நகரசபைச் செயலாளர் கையாடல் செய்துள்ளதாகவும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மேலும் தெரிவித்திருந்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் குற்றச்சாட்டு தொடர்பாக நகரசபை செயலாளரிடம் தொடர்பு கொண்டபோது..
அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் நிராகரித்த நகரசபைச் செயலாளர் விடுமுறை தினங்களில் இறந்தவர்களை தனம் செய்ய வரும்போது நகரசபை ஊழியர்கள் விடுமுறையில் சென்றதால் தகனம் செய்யும் பொறுப்பினை வேறு உழியர்களிடம் ஒப்படைக்க வேண்டிய தேவையினையும் தெளிவுபடுத்தியிருந்தார்.
எது எவ்வாறாயினும் தன்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதுடன் நின்றுவிடாது அதை உறுதிப்படுத்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் எந்த ஒரு நடவடிக்கையை தன்மீது மேற்கொண்டாலும் எதிர்கொள்ள தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
வவுனியா சேமமடு படிவம் 1 அருள்மிகு ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலய அஷ்டபந்தன பஞ்ச குண்டபக்ஷ புனராவர்த்தன பிரதிஷ்ட மகா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா எதிர்வரும் 04.09.2016ஞாயிற்றுக்கிழமைஎழுமணி முதல் ஒன்பது மணிவரையான சுப முகூர்த்த வேளையில் பிரதிஸ்டகுரு சிவஸ்ரீ இராமநாத பத்மகுமார குருக்கள் தலைமையில். இடம்பெறுகிறது.