கூகுள் நிறுவனம் வஸ்ட் அப் போன்ற ஒரு அப்பிளிக்கேஷனை வெளியிட திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் கூகுள் நிறுவனம் Duo என்ற video-calling அப்பிளிகேஷனை அறிமுகப்படுத்தியது.
இது போக்கிமான் கோ கேம்மையும் பின்னுக்கு தள்ளி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் கூகுள் நிறுவனம் தற்போது வட்ஸ் அப் போன்ற chat messenger அப்பிளிகேஷனை வெளியிட முடிவு செய்துள்ளது. இதற்கு Allo எனவும் பெரியரிட்டுள்ளது.
இதுவும் கிட்டத்தட்ட Duo அப்பிளிகேஷனை போன்று இருந்தாலும் Allo அப்பில் voice message, Smart Reply, Whisper மற்றும் Shout போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இதில் end-to-end encryption என்ற பாதுகாப்பு அம்சமும், incognito conversations என்ற மறைநிலை உரையாடல்கள் வசதியும் தரப்பட்டுள்ளது.
Snap chat போன்று அனுப்பிய தகவல்கள் அதுவே அழிக்கும் வசதியும், அதனை நாம் தெரிவு செய்து கொள்ளும் அமைப்பும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூகுள் GTalk மற்றும் Hangouts போன்றவற்றில், இது போன்ற வசதி கொடுத்திருந்தது.
ஆனால் கிட்டத்தட்ட வட்ஸ் அப் போன்று Allo அப்பிளிகேஷனை கூகுள் நிறுவனம் முதன்முறையாக முயற்சி செய்துள்ளது.
போரின் அலைகள் மோசமாக தாக்கிய பின்னும் நிமிரும் துணிவுடன் வன்னியின் பல்வேறு மட்டத்தினரும் நகர்கையிலே, இன்னுமொரு வெளிப்படுத்தலாக மாற்றுத்திறனாளிகள் ஒழுங்குபடுத்தலில் வன்னிஸ்வரம் எனும் இசைக்குழு நேற்றுமுன்தினம் (27.08.2016) சனிக்கிழமை அன்று ஆரம்பிக்கப்பட்டது.
‘புதிய பீனிக்ஸ் மாற்றுத் திறனாளிகள்’ அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இந்த நிகழ்விற்கு யோ.புரட்சி தலைமை தாங்கினார். வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
வன்னியின் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்கள் யுத்த காலத்தில் இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலாக இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் கலந்துகொள்ள இருந்தபொழுதும் சுகவீனம் காரணமாக அவர் கலந்துகொள்ளவில்லை. அவரது செய்தி வாசிகப்பட்டது.
வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி, வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனீஸ்வரன் இசைக் கருவியினை புதிய பீனிக்ஸ் மாற்றுத் திறனாளிகளிடம் கையளித்து இசைக் குழுவினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
கடந்த காலங்களில் வன்னியில் தம் இசைத்திறனினை வெளிப்படுத்திய அநேக பாடகர்கள் இந்த இசைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
வவுனியா மண்ணில் இருந்து வலம்வரும் பிருந்தாவனம் இதழின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா நேற்றுமுன்தினம் (27.08.2016) காலை 10.00 மணிக்கு வவுனியா வாடி வீடு கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு கவிஞர் மாணிக்கம் ஜெகன் தலைமை வகித்தார். சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தினை மாணவி நிரோஜினி இசைத்தார். வரவேற்பு நடனத்தினை மாணவி ரோசித்தா வழங்கினார். வரவேற்பு உரையினை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பத்மாவதி ஜெயச்சந்திரன் வழங்கினார். ஆசியுரைகளை சமயப் பெரியோர்கள் வழங்கினர்.
இந்நிகழ்வில் யோ.புரட்சி தலைமையில் ‘பெற்றோர்களை அதிகம் கவனிப்பது ஆண் பிள்ளைகளா? பெண் பிள்ளைகளா? எனும் தலைப்பில் விவாத அரங்கு இடம்பெற்றது.
இவ்விவாத அரங்கில் கவிஞர் மன்னார் பிரதீப், பல்கலைக்கழக மாணவர்களான கிருஷனா யோகநாதன், கட்சன் குரூஸ், யூலியஸ் ஜெயராஜ் லோகு மற்றும் வேதிகா பிரபாகரன், மிதிலைமாறன் ஆகியோர் பங்கேற்றனர்.
நிகழ்வில் பிரதம விருந்தினர் உரையினை, பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வழங்கினார். சிறப்புரையினை சற்பிரசங்க சைவமணி சண்முகரத்தினம் நிகழ்த்தினார்.
தொடர்ந்து கவிஞர் குரும்பையூர் ஐங்கரன் தலைமையில் ‘இம்மண்ணில் என் கண்ணில் படுவதெல்லாம்’ எனும் தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது. இக்கவியரங்கில் கவிஞர்களான சச்சிதானந்தம் கஜன், ஜெகதீசன் கோபிநாத், கஜரதி பாண்டித்துரை, நந்தீஸ்வரி மாயவன் ஆகியோர் பங்கேற்றனர்.
சிறப்பு நடனமாக மாணவி அழகேந்திரன் பிரம்மியா அவர்களின் நடன ஆற்றுகை இடம்பெற்றது.
நிகழ்வில் பிருந்தாவனம் இரண்டாம் ஆண்டு சிறப்பிதழினை வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் பார்த்தீபன் அவர்கள் வெளியிட்டு வைக்க முதற்பிரதியினை அண்ணா நகர் பரமேஸ்வரா வித்தியாலய முன்னாள் அதிபர் லில்லி புளோரா நடேசமூர்த்தி பெற்றுக்கொண்டார்.
இதழின் ஆய்வுரையினை விரிவுரையாளர் பார்த்தீபன் அவர்கள் வழங்கினார். கவிஞர் காக்கேயன்குளம் ஹுசைன் அவர்களின் வாழ்த்துக்கவி தொடர்ந்து இடம்பெற்றது.
பிருந்தாவனம் இதழின் இரண்டாம் ஆண்டு நிறைவினை முன்னிட்டு அதிஷ்ட இலாப பரிசுக் குலுக்கலும் இடம்பெற்றது.
பிருந்தாவனம் இதழின் வளர்ச்சி பற்றிய பகிர்வினை வவுனியா மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன் வழங்கினார். நிறைவாக ஏற்புரையினை பிருந்தாவனம் இதழின் ஆசிரியர் சிவராணி வழங்கினார். பிருந்தாவனம் இதழானது வவுனியா மண்ணில் இருந்து பல மாவட்டங்களிலும் விநியோகிக்கப்படும் கலை, இலக்கிய, கல்வி இதழ் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா தெற்கிலுப்பைக்குளம் 6ம் ஒழுங்கை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் விஞ்ஞாபனம் கடந்த 17.08.2016 அன்று
ஆலய பிரதமகுரு சிவாச்சாரிய திலகம் சிவ ஸ்ரீ சிவசங்கர குருக்ககள் மற்றும் சி .ஸ்ரீ .சங்கரசர்மா தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் 26.08.2016 அன்று காலை சங்காபிசேகத்துடன் அலங்கார உற்சவம் இடம்பெற்று 27.08.2016 சனிக்கிழமை தீர்தோற்சவம் மிகச் சிறப்பாக இடம்பெற்று கொடியிறக்கத்துடன்நிறைவுபெற்றது.
மேற்படி உற்சவகாலத்தில் காவடி பாற்ச்செம்புத் திருவிழா, மாவிளக்குத் திருவிழா, இத் திருவிழாவில் பக்தர்கள் பாற்ச்செம்பு, தீச்சட்டி, காவடிகள் எடுத்து தமது நேர்த்திக் கடனை அம்மனுக்கு செலுத்தியிருந்தனர் .
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி, இரண்டு விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று தம்புள்ளை விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வென்று, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணியின் ஆரம்ப வீரர் தனுஷ்க குணதிலக ஐந்து ஓட்டங்களுடன் வௌியேறி அதிர்ச்சியளித்தார்.
இதனையடுத்து களத்தில் இருந்த டில்ஷானுடன் கைகோர்த்த குஷல் மென்டீஸ் 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இதேவேளை ஓய்வை அறிவித்துள்ள இலங்கையின் அதிரடி நாயகன் டில்ஷானுக்கு இது இறுதி சர்வதேச ஒருநாள் போட்டி என்பதால் இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கியிருந்த அவர், 42 ஓட்டங்களைப் பெற்றவேளை, ஆட்டமிழந்து, அரைச் சதத்தை தவறவிட்டார்.
எனினும், அவரது நிதான ஆட்டம் இலங்கை அணிக்கு வலுச் சேர்த்தது. மறுபுறம் வழமைபோல அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் சந்திமால் 102 ஓட்டங்களை விளாசித் தள்ளினார்.
எனினும் ஏனைய வீரர்கள் அவ்வளவாக கைகொடுக்காததால், 49.2 ஓவர்களில், 226 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது இலங்கை.
இதன்படி 227 என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணியின், டேவிட் வோனர் 10 ஓட்டங்களுடனும், பின்ஜ் 30 ஓட்டங்களுடனும் மார்ஸ் ஒற்றை ஓட்டத்துடனும் வௌியேறினர்.
எனினும் அடுத்ததாக களத்திற்கு வந்த ஜோர்ச் பெல்லி இலங்கை பந்து வீச்சாளர்களை களங்கடித்தார்.
70 ஓட்டங்களை விளாசிய நிலையில் அவரும் ஆட்டமிழக்க 46 ஓவர்களை எதிர் கொண்ட நிலையில் 8 விக்கெட் இழப்பிற்கு 227 ஓட்டங்களைப் பெற்ற அவுஸ்திரேலியா, 24 பந்துகள் மீதமிருக்க இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றியைத் தனதாக்கியது.
இதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அந்த அணி 2-1 என முன்னிலையில் உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி ஆரம்ப வீரரான திலகரட்ண டில்ஷான் இன்றுடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கு விடை கொடுக்கிறார்.
தம்புள்ள ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இன்று 2.30 க்கு இடம் பெறவுள்ள 3 வது ஒருநாள் போட்டியே டில்ஷானின் இறுதி ஒருநாள் ஆட்டமாக அமையவுள்ளது.
1999 ஆம் ஆண்டு சிம்பாவே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் புதுமுக வீரராக களமிறங்கிய டில்ஷான், இதுவரை இலங்கை அணிக்காக 329 ஒருநாள் போட்டிகளில் 22 சதம், 47 அரைச்சதம் அடங்கலாக 10,248 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
இதேவேளை பந்துவீச்சில் 329 ஒருநாள் போட்டிகளில் 106 விக்கெட்டுக்களை பெற்று கொண்டுள்ளார். துடுப்பாட்டம்,பந்து வீச்சு, களத்தடுப்பு மற்றும் விக்கெட் காப்பாளராகவும் தமது திறமையினை இலங்கை அணி சார்பாக வெளிப்படித்தியுள்ளார்.
2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தம்புள்ள மைதானத்தில் இடம்பெறும் பகலிரவு போட்டி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது கடைசி ஒரு நாள் போட்டியில் 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதேசத்தில் தகரக் கொட்டில் கடை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் கடை ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
காத்தான்குடி-02 மௌலானா கபுறடி வீதியில் இன்று (28) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தகரக் கொட்டில் தீப்பற்றி எரிவதைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கும், மின்சார சபைக்கும் அறிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மின்சார சபை ஊழியர்கள் மின்சார இணைப்பை துண்டித்ததுடன் அங்கு வருகை தந்த பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீ விபத்தினால் அருகிலுள்ள துவிச்சக்கரவண்டி திருத்தும் கடையும் சிறியளவில் சேதத்துக்குள்ளாகியுள்ளது.
எரிந்து போன தகரக் கொட்டில் கடலை வண்டி வியாபாரி ஒருவரினால் சில காலமாக உணவு தயாரிப்பிடமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக சிறுகடை வியாபாரிக்கு சுமார் 20,000 ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து மின்னொழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதேவேளை, இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இயக்கச்சி பகுதியில் இன்று காலை கயஸ் வாகனம் ஒன்று விபத்துகுள்ளானதில் சாரதி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
யாழ் நோக்கி சென்றுகொண்டிருந்த கயஸ் வாகனம் இயக்கச்சி பகுதியில் வீதியின் மறுபக்கத்தில் இருந்த மரத்துடன் மோதியே விபத்துக்குள்ளானதாக பளைப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ் விபத்து சாரதி தூக்கத்தில் இருந்ததால் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். இவ்விபத்தில் காயமடைந்த குறித்த வாகன சாரதி கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
அத்துடன் விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளையும் பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா இறம்பைக்குளம் தொண்டர் நிறுவனத்தில் இன்று(28.08.2016) மாலை இரா.சிறீஞானேஸ்வரன் எழுதிய சிறையில் இருந்து மடல்கள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அ.சத்தியானந்தன்(தலைவர் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்), வவுனியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழருவி சிவகுமார், மேழிக்குமரன், மூத்த ஊடகவியலாளர் திரு.மாணிக்கவாசகம், கலைஞர் மாணிக்கம் ஜெகன், மற்றும் கலை இலக்கிய நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா மயிலங்குளம் பகுதியில் நேற்று 27.08.2016 மாலை இரண்டு கைக்குண்டு மற்றும் கிளைமோர் ஒன்றினை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர்.
நேற்று மாலை வவுனியா மயிலங்குளத்திலுள்ள தனது வெற்றுக் காணியினை துப்பரவுப் பணிகள் மேற்கொண்டபோது சந்தேகத்திற்கிடமான முறையில் பொதி இருப்பதை அவதானித்த காணி உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கி இரண்டு கைக்குண்டு மற்றும் கிளைமோர் என்பனவற்றை மீட்டு வெடிக்கவைத்துள்ளனர்.
வவுனியா ஓமந்தையில் அமைந்துள்ள சோதனை நிலையம் அமைந்துள்ள காணியை மீட்டுத்தாருங்கள் என உரிமையாளாகளில் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒமந்தைச் சோதனை நிலையம் அமைந்துள்ள A9 வீதியின் இருபுறங்களிலும் அமைந்துள்ள காணிகள் பலருக்குச் சொந்தமான தனியார் காணிகளாக காணப்படுகிறது. அதற்கான காணி ஆவணங்களும் அவர்களிடம் உண்டு.
ஆனால் பல இடங்களிலும் இராணுவம் பிடித்துள்ள காணிகள் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் ஓமந்தை சோதனை நிலையம் அமைந்துள்ள காணிகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.
இது தொடர்பில் காணி உரிமையாளர்களில் ஒருவரான செ.சிவபாதசுந்தரம் கருத்து தெரிவிக்கும் போது..
யுத்த காலத்தில் தாங்கள் இடம்பெயர்ந்து வவுனியாவின் பல பகுதிகளுக்கு சென்று விட்டதாகவும், அன்று தொடக்கம் இன்று வரை 22 வருடங்களாக வாடகை வீட்டிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருவதாகவும், தற்போது யுத்தம் நிறைவு பெற்று ஏழு ஆண்டுகள் கடந்த நிலையில் நல்லாட்சி அரசு ஒன்று ஏற்பட்டுள்ளது என சொல்லபடுகின்ற சூழலில் தங்களுடைய சொந்த காணிகளை இனியாவது மீட்டுதாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஓமந்தை சோதனை நிலையம் தங்களுடைய நான்கு ஏக்கர் காணியையும் உள்ளடங்கியே அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒமந்தை சோதனை நிலையத்தில் முன்னைய காலங்கள் போன்று சோதனை இடம்பெறுவது கிடையாது என்றும் குறிப்பிடும் சிவபாதசுந்தரம் இனியும் நாங்கள் சொந்த மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்த மக்களாக வாழ முடியாதும் என்றும் தங்களது காணிகளை மீண்டும் தங்களுக்கு வழங்குவதற்கு உரிய அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதுவரை காலமும் காணி ஆவணங்களுடன் பிரதேச செயலகம், மாவட்டச் செலயலகம், அரசில் தரப்புகள், என பலரையும் சந்தித்து காணியை மீட்டுத்தருமாறு கோரியும் பலன் கிடைக்கவில்லை என கவலை தெரிவிக்கும் அவர் தனது குடும்பத்தின் எதிர்காலம் கருதி நல்லாட்சி அரசு என்று சொல்லப்படுகின்ற இந்த ஆட்சியிலாவது காணியை மீட்டுத்தருமாறு கோரிக்கை விடுக்கின்றார்.
ஷாருக்கானுக்கு மான் தோலில் காலணி தயாரித்த பாகிஸ்தான் இரசிகர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் ஹிந்தி நடிகர் ஷாருக்கானின் உறவினர் தங்கியுள்ளார். அவர் ஷாருக்கானுக்கு புகழ் பெற்ற பெஷாவர் காலணியை பரிசளிக்க முடிவு செய்தார்.
அதற்காக காலணி தயாரிப்பாளர் ஜகாங்கீர்கான் என்பவரை சந்தித்து இரண்டு ஜோடி காலணிக்கள் தயாரித்து தரும்படி கேட்டார். ஷாருக்கானுக்கு ‘காலணி’ ஆர்டர் கொடுத்ததை அறிந்த ஜகாங்கீர்கான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் ஷாருக்கானின் தீவிர இரசிகர் ஆவார்.
இவர் ஷாருக்கானுக்கு விசேஷமாக மான்தோலில் ‘காலணி’ தயாரித்தார். இதை அறிந்த பொலிசார் ஜகாங்கீர் கானின் தொழிற்சாலையை சோதனை நடத்தினர்.
அங்கு மான்தோலில் தயாரிக்கப்பட்ட ‘காலணி’ இருந்தது. அதை பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். கொல்லப்பட்ட வன விலங்குகளின் தோலில் இருந்து செருப்புகள் முதலான பொருட்கள் தயாரிப்பது குற்றமாகும்.
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஜகாங்கீர்கானுக்கு அபராதமும் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லோவர் கிரன்லி தோட்டத்தில் ஐந்து வீடுகள் நேற்று நள்ளிரவு இனந் தெரியாதேரால் உடைக்கப்பட்டு, கொள்ளையிடப்பட்டுள்ளன.
வீடுகளிலிருந்த பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன இவ்வாறு கொள்ளையர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக, அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற வீடுகள் இரண்டில் திருமண வைபவமும், ஒன்றில் பூப்பனித நீராட்டு விழாவும் இடம்பெற்றுள்ளன.
அத்துடன் குறித்த வீடுகளுக்கு அருகிலுள்ள இரண்டு வீடுகளும் உடைக்கப்பட்டு இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, கத்தி, குடை மற்றும் பாதனிகளை கொள்ளையர்கள் விட்டுசென்றுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மருத்துவ பரிசோதனைகுச் சென்ற பெண்னை சட்டவிரோதமான முறையில் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மஹிபால உத்தரவிட்டுள்ளார்.
பாலித்த மஹிபால,கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் உள்ள மருத்துவர் ஒருவர் மூலமே குறித்த பெண் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரைவில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வைத்தியர் பாலித்த மஹிபாலவிடம் அறிவித்துள்ளார் என சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இதற்கு இணங்கவே இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தனவிடம் பாலித்த உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை-புல்மோட்டை சுனாமி வீட்டுத்திட்டப்பகுதியில் மாமியாரின் கத்தி வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அவரது மருமகன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்தி வெட்டுக்கு இலக்கானவர் அதே இடத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான எம்.சத்தியசீலன் (31 வயது) எனவும் தெரிய வருகின்றது. சம்பவம் குறித்து தெரியவருவதாகவது,
கத்தியால் வெட்டிய மாமியாரின் மகள் வெளிநாட்டில் வேலை புரிந்து வருவதாகவும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் நேற்றிரவு (27) மதுபோதையில் மாமியாரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட போதே கோபம் கொண்ட மாமியார் கத்தியால் வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
கத்தி வெட்டுக்கு இலக்கான மருமகன் புல்மோட்டை தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
கத்தியால் வெட்டியதாக சந்தேகிக்கப்படும் மாமியாரான புல்மோட்டை-வீரந்தீவு- பகுதியைச சேர்ந்த கனகசிங்கம் நாகம்மா (56வயது) கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாமியாரை இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.