குருநாகல் – ஹெட்டிபொல பகுதியில் சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த மின்சார அமைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை மின்சார சபையின் ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
போவத்த – வீரபோகுன பகுதியில் ஏற்பட்ட இடிபாடுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (03.12.2025) மதியம் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
வீரபோகுண ஆதார மருத்துவமனையிலும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குளியாப்பிட்டி போதனா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அவர் இறந்துள்ளார்.
2007ஆம் ஆண்டு தம்புள்ளையில் சாதாரண ஊழியர் ஒருவராக பணிக்கு சேர்ந்த 41 வயதான அனுருத்த குமார, பத்து ஆண்டுகள் அங்கு ஊழியராகப் பணியாற்றிய பின்னர் 2017 ஆம் ஆண்டு உக்குவெல மின் உற்பத்தி நிலையத்திற்கு நிரந்தர ஊழியராக மாற்றப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டு முதல் அவர் ஹெட்டிபொல மின் நிலையத்தில் மின்சார ஊழியராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு விசேட நிதி உதவியை வழங்குவதற்கு அரசாங்கம் தீரமானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெள்ளம் மற்றும் மண்சரிவுகள் காரணமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பாடசாலை மாணவருக்கும் இந்த நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவிக்கப்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தில் இருந்து இந்த நிதி உதவித் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக தெரியவருகின்றது. இதன்படி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், காணாமல் போனோரின் எண்ணிக்கை 356 என தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளதுடன் 171 பேர் காணாமல் போயுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதுடன் 73 பேர் காணாமல் போயுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் இதுவரை 83 பேர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காணாமல் போயுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காணாமல் போயுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 43 பேர் காணாமல் போயுள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காணாமல் போயுள்ளனர்.
மேலும், மொனராகலை, மாத்தளை, கொழும்பு, மட்டக்களப்பு, அநுராதபுரம், முல்லைத்தீவு, அம்பாறை, யாழ்ப்பாணம், பொலன்னறுவை, இரத்தினபுரி, காலி, மன்னார், கம்பஹா மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, அனர்த்தங்களின் ஊடாக 971 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 40,358 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மன்னார் மாவட்டத்தில் இன்று (3) முதல் மறு அறிவித்தல் வரை ஆடு மற்றும் மாடு இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்த ஆடு, மாடுகளை இறைச்சியாக்கி மன்னார் மாவட்டத்தில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் மிருக வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாகவும் இன்று புதன் கிழமை முதல் மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஆடு மற்றும் மாட்டு இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளத்தினால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உயிரிழந்த ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டப் பட்டுள்மை தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உத்தரவை மீறி ஆடு மற்றும் மாடு இறைச்சிக்காக வெட்டி விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,இவ்விடயம் தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் செயல்படு மாறும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரை ஆடு மற்றும் மாட்டு இறைச்சிகளை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.
முதலாம் இணைப்பு
மன்னார் சௌத்பார் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மாடுகளை மன்னார் நகர சபை மீட்டு புதைத்துள்ளனர். -மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தது.
இந்த நிலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு தொகுதி கால்நடைகள் (மாடு) கடலில் விடப்பட்ட நிலையில் குறித்த கால்நடைகள் உயிரிழந்த நிலையில் சௌத்பார் கடற்கரையில் நேற்றைய தினம் மாலை கரையொதுங்கியது.
இந்த நிலையில் அப்பகுதியில் பாரிய துர்நாற்றம் வீசிய நிலையில் மன்னார் நகர சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டதோடு, நகர சபை பணியாளர்களின் உதவியுடன் கரையொதுங்கிய மாடுகள் மீட்கப்பட்டு கடற்கரை பகுதியில் பாரிய பள்ளம் தோண்டப்பட்டு உயிரிழந்த மாடுகள் புதைக்கப்பட்டது.
டிட்வா சூறாவளியுடன் பெய்த கனமழையால் மலைப்பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் ஏற்கனவே நிரம்பி வழிவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
பல இடங்களில் ஏற்கனவே நிலம் விரிசல் அடைந்து வருவதாலும், அடுத்த சில நாட்களில் கனமழை பெய்தால், மீண்டும் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படக்கூடும்.
இதன் காரணமாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.
சமீபத்திய வானிலை அறிக்கைகளின் அடிப்படையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில் பருவமழை படிப்படியாக அதிகரிக்கும்.
நாளை முதல் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு எதிராக சேறு பூசும் போலி பிரசாரங்களை சிலர் முன்னெடுத்து வருவதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வடகல தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை அதிகரித்தால் அது சாதாரண விடயமாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு நிலைமைக்கு இடமளிக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் நபர்கள் இந்த சேறு பூசல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டத்தின் கீழ் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் போலி தகவல்களை சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு எவருக்கும் அனுமதி கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு போலி தகவல்களை பகிர்வோருக்கு எதிராக தண்டனை விதிக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதற்கு சட்டத்தில் இடம் உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பொய்யான பிரசாரங்கள் தொடர்பில் இதுவரையில் 20 முறைப்பாடுகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட , இலங்கையை மீட்டெடுக்க பல சர்வதேச நாடுகள் முன்வந்துள்ளன. அதன்படி, நிதி மற்றும் பொருள் ரீதியான நிவாரண உதவிகளை சில நாடுகள் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கமைய, சர்வதேச மனிதாபிமான நட்பின் ஊடாக, நியூசிலாந்து, அவசர மனிதாபிமான நிவாரணத்தை ஆதரித்து, ஒரு மில்லியன் நியூசிலாந்து டொலரை நன்கொடையாக வழங்கியுள்ளது.
பிரித்தானியாவும் அவசர நிவாரண நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி, எட்டு இலட்சத்து 90 ஆயிரம் அமெரிக்க டொலர் நிவாரண நிதியை இலங்கைக்கு வழங்குவதாக பிரதித்தானியா அறிவித்துள்ளது.
குறித்த நிதியானது செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான அமைப்பு மற்றும் உள்ளூர் பங்காளிகளுடன் இணைந்து அவசரப் பொருட்கள் மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சீன அரசாங்கமும் இலங்கைக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டொலரை நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
குறித்த நிதியை, சீன செஞ்சிலுவைச் சங்கம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திடம் வழங்கியதாக இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.
மேலும், அனர்த்த நிவாரணப் பணிகளை வலுப்படுத்தும் வகையில், இலங்கையிலுள்ள சீன வர்த்தக சம்மேளனம் மற்றும் வெளிநாட்டுச் சீன சங்கம் ஆகியன இணைந்து நன்கொடை திட்டங்களை ஆரம்பித்துள்ளன.
இந்த இரண்டு அமைப்புகளும் இணைந்து அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 10 மில்லியன் இலங்கை ரூபாயைத் திரட்டியுள்ளன.
மேலும், இந்தியா – பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் இலங்கைக்கு பாரிய உதவிகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ் (எச்ஐவி) நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பொறுப்பு வைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
எயிட்ஸ் நோய் தொடர்பாக நேற்று ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ஆம் திகதி. உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொனிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கப்படுகிறது.
இலங்கையில் இதுவரை 7168 எயிட்ஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், ஆண்கள் 5544 பேரும் பெண்கள் 1603 பேரும் இடைநிலை பால் நிலையை சேர்ந்த 21 பேரும் இதனுள் அடங்குவர்.
இதுவரை நாட்டில் 1629 பேர் இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளுமின்றி நோய் தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள்.
வவுனியா மாவட்டத்தில் இதுவரை 43 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். அவர்களில் 21 பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள் ஆவர்.
2 கர்ப்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.
13 பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர். ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டு வருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கி வருகின்றோம்.
அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்த முடியும். எயிட்ஸ் நோய் பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாக தொடர்பு கொள்ளல்,
நோய் தொற்றுள்ள ஒருவரின் குருதியை இன்னுமொருவருக்கு செலுத்துதல், தொற்றுள்ள தாய் ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய் பரவுகிறது.
இலங்கையில் தற்போது குருதி மாற்றங்களின் போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் கர்ப்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஐ.வி பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
நாட்டில் 15 வயது தொடக்கம் 25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது.
குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டு பிடிக்க முடியும். எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால் குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம்.
வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாக வந்து பரிசோதனைகளை மேற் கொள்ள முடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நிவாரணங்கள் அடங்கிய நான்காவது விமானம் நாட்டை வந்தடைந்தது.
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்குடன், மனிதாபிமான உதவி நிவாரணங்கள் அடங்கிய விமானங்களை ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.
மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவும் நோக்கம்
இதன்படி, ஐக்கிய அரபு இராச்சிய விமானப்படைக்கு சொந்தமான C -17 விமானம் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
மீட்பு நடவடிக்கைகளுக்காக விசேட பயிற்சி பெற்ற 53 அபுதாபி சிவில் பாதுகாப்புப் படை வீரர்கள், புதையுண்ட இடங்களில் இருந்த மனித உடல்களை தேடும் திறன் கொண்ட மோப்ப நாய்கள் நாய்கள்,
அவற்றைக் கொண்டு செல்லும் குளிரூட்டப்பட்ட வாகனங்கள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பல வாகனங்கள் இந்த விமானத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டுள்ளன.
அவர்களை வரவேற்க இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமேரி, வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் குழுவினரும் வருகைதந்திருந்தனர்.
நாட்டில் நேற்று (02) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 340,000 ரூபாய்க்கு விற்பனையாகியிருந்த நிலையில், இன்று (03) 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபாயால் குறைவடைந்துள்ளதாக, இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், இன்றைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் பவுண் ஒன்று 338,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 311,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,875 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
கொழும்பு புறநகர் கொட்டாவ நகரின் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று (03) தனியாக இருந்த எட்டு வயது சிறுவனொருவரை கொட்டாவ பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், பொலிஸ் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று சோதனையிட்டனர்.
இதன்போது, சிறுவன் நன்றாக உடையணிந்து, காலணிகள் அணிந்திருப்பதைக் கண்டு சிறுவனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, உணவு மற்றும் பானங்களை வழங்கி, அவன் இருக்கும் இடம் குறித்து விசாரித்துள்ளனர்.
எனினும் சிறுவன் சரியாக பதிலளிக்காததால் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்ற்பட்ட சீரற்ற காலநிலையால் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 25,000 ரூபா உதவி வழங்கப்படவுள்ளது.
அதன்படி பாதிக்கபப்ட்ட மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து 25,000 ரூபாவை வழங்க ஜனாதிபதி அனுர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக நிலைபெறும் என எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, நாளை மறுதினம் வியாழக்கிழமை முதல் நாட்டில், குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருக்கார்த்திகை தீபம் என்பது இறைவனை ஒளி வடிவமாக வழிபடும் திருநாளாகும். இந்த நாளில் வீடு முழுவதும் விளக்கேற்றி வழிபடுவதால் நன்மைகள் அதிகரிக்கும். இது இறை அருளையும், செல்வ நலன்களையும் பெறுவதற்கான நாளாகும்.
திருக்கார்த்திகை தீபத் திருநாள் சிவ வழிபாட்டிற்கு மட்டுமின்றி, மகாலட்சுமியை வழிபட்டு, அவரின் அருளை முழுவதுமாக பெறுவதற்குரிய சக்தி வாய்ந்த நாளாகும். இதனால் இந்த நாளில் மறந்தும் கூட சில தவறுகளை செய்து விடக் கூடாது.
திருக்கார்த்திகை தீபம் அன்று செய்யக் கூடாத 3 தவறுகள்
திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று எந்த காரணத்திற்காகவும் வீட்டில் விளக்கேற்றாமல் இருளாக இருக்கும் படி செய்யக் கூடாது.
திருக்கார்த்திகை அன்று நீங்கள் வெளியூர் செல்வதாக இருந்தாலோ அல்லது ஆன்மீக பயணம் செல்வதாக இருந்தாலோ கூட பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அல்லது உங்களின் உறவினர் யாரையாவது வீட்டில் இருக்கச் செய்து விளக்கேற்றி வைக்க செய்யலாம்.
அவர்களால் உங்கள் வீட்டில் இருக்க முடியா விட்டாலும், வீட்டு வாசலில் மட்டுமாவது விளக்கேற்றி வைக்கச் சொல்லலாம். பூஜை அறையில் விளக்கேற்றி வழிபடா விட்டாலும், வீட்டு நிலைவாசலில் மட்டுமாவது இரண்டு அகல் விளக்குகள் எரியும் படி செய்ய வேண்டும்.
திருக்கார்த்திகை தீபம் அன்று விரதம் இருப்பது சிறப்பு. அப்படி விரதம் இருக்க முடியவில்லை என்றால் சைவமாக சாப்பிட்டு, இறை வழிபாட்டினை மேற்கொள்ளலாம். மறந்தும் கூட இந்த நாளில் அசைவம் சாப்பிடக் கூடாது. அது மிகப் பெரிய பாவமாகும்.
திருக்கார்த்திகை தீபம் அன்று யாரிடமும் கடன் வாங்கக் கூடாது. மளிகைக் கடையிலோ அல்லது வேறு ஏதாவது பொருட்கள் வாங்கினால் கூட பணம் கொடுத்து தான் அந்த பொருளை வாங்க வேண்டுமே தவிர, கடனாக ஒரு போதும் வாங்கக் கூடாது.
திருக்கார்த்திகை திருநாள் என்பது மகாலட்சுமியை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவளின் அருட்கடாட்சத்தை பெறுவதற்கான நாளாகும். இதனால் மகாலட்சுமி மனம் மகிழும் படியான விஷயங்களை மட்டுமே இந்த நாளில் செய்ய வேண்டும்.
அனுராதபுரத்தில் உயிரை மாய்த்துக்கொள்வதற்காக மல்வத்து ஓயாவில் குதித்த ஒரு தாயையும் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க அனுராதபுரம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
உள்ளூர்வாசிகள் மற்றும் உயிர் காப்பாளர் குழுவின் உதவியுடன் தாய் மீட்கப்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளையும் கண்டுபிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மொரட்டுவையைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான 40 வயதுடைய ஒரு பெண் தனது 4 வயது மற்றும் 8 வயதுடைய குழந்தைகளுடன் செவ்வாய்க்கிழமை (02) காலை அனுராதபுரம் நகரத்திற்கு அருகிலுள்ள மல்வத்து ஓயாவில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், குடும்ப தகராறு காரணமாக இவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மலத்து ஓயா அருகே நின்ற ஒருவர், குறித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதையடுத்து உள்ளூர்வாசிகளின் உதவியுடன், பெண்ணை மீட்டு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் உயிர்காப்பாளர் பிரிவு இரண்டு குழந்தைகளையும் தேடும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி, பரகல கீழ் பிரிவு தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27 ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழுந்த அனர்த்தத்தில், கற்பாறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினமும் (02) ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் 05 பேரைக் காணவில்லை எனவும், இவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குருந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோட்டத்தைச் சேர்ந்த 65 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் லயன் குடியிருப்பைச் சேர்ந்த 13 வீடுகள் முழுமையாக மண்ணில் புதையுண்டுள்ளன.
மீட்கப்பட்ட சடலங்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இந்த விபத்தின் காரணமாகத் தமது உடமைகள் அனைத்தும் மண்ணில் புதையுண்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை, மண்ணில் புதையுண்டவர்களை மீட்பதற்கு இராணுவத்தினரோ அல்லது பொலிஸாரோ குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும், கடந்த இரண்டு நாட்களாக மக்களே தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பிரதேச செயலகத்தின் ஊடாகச் சமைத்த உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.