இந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியில் இரண்டு கால்கள் மற்றும் கைகள் இன்றி பிறந்த சிறுவன் ஒருவர் தனது திறமையால் அசத்துகிறார். Tiyo Satrio என்ற 11 வயது சிறுவனே இவ்வாறு பிறந்துள்ளார்.
இருப்பினும் குறித்த சிறுவன் பாடசாலைக்குச் சென்று தன் கல்விகளை தொடர்கின்றார்.
இது தொடர்பில் Tiyo Satrioவின் தாய் கருத்து தெரிவிக்கையில், நான் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை, கால்கள் கைகள் மாத்திரமே இல்லை. ஆனால் தன் மகன் திறமையானவன்.
மற்றைய குழந்தைகள் போல் சாதாரணமாகவே இருக்கின்றான். அவருக்கு கணித பாடத்தில் அதிகம் ஆர்வம் இருப்பதாகவும், சிறந்த நுண்ணறிவு கொண்டவன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலை நிறைவடைந்ததும் சக மாணவர்களுடன் இணைந்து விளையாடுவான் என்றும் விளையாடுவதில் மிகுந்த ஆர்வம் உடையவன் என்றும் அவரது தாய் கூறியுள்ளார்.
இதேவேளை இவர் தன் வாய் மூலமே எழுதுவார் என்றும் சிறந்த திறமைசாலி எனவும் பாடசாலை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
Tiyo Satrioவின் மருத்துவ செலவுகளுக்கு அரசாங்கம் நிதிகளை வழங்கி உதவி செய்து வருவதாகவும் அவரின் தாயார் கூறியுள்ளார்.
கரிபியன் பிரிமியர் லீக் தொடரில் இன்றைய டை்ரைடன்ட்ஸ் மற்றும் போட்ரியோட்ஸ் அணிகளுக்கெதிரான போட்டியில் இரண்டு வீரர்கள் மோதுண்டு வீழ்ந்ததில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஏ.பி.டி வில்லியர்ஸ் அடித்த பந்தினை பிடியெடுக்க சென்ற போட்ரியோட்ஸ் அணியின் ஜே.ஜே.ஸ்மாட்ஸ் மற்றும் கிரான் பவவேல் ஆகியோர் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் சுருண்டு மைதானத்தில் வீழ்ந்தனர்.
இதன்போது உபாதைக்குள்ளான நிலையில் பவவேல் உடனடியாக அம்யுலன்ஸ் வாகனத்தின் மூலமாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
கலப்பின விதைகளில் இருந்து உருவாக்கப்படுபவை தான் “ஒக்டோபஸ் தக்காளி மரங்கள்”. ஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஒக்டோபஸ் கைகள் போலப் படர்ந்திருப்பதால் இதற்கு இந்தப் பெயர் உருவானது.
40 முதல் 50 சதுர மீட்டர்கள் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் தக்காளி மரமொன்றில் ஒவ்வொரு சீசனிலும் பல்லாயிரக்கணக்கான கிலோ தக்காளிகள் விளைகின்றன.
அமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசோர்ட்டில் விவசாயத்திற்கென தனி பசுமைக்குடில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கேதான் ஒக்டோபஸ் தக்காளி மரங்களும் உள்ளன.
சீனாவில் இருந்து தக்காளி விதைகள் கொண்டு வரப்பட்டு அங்கே விதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஒரு தக்காளி மரம் வளர்வதற்கு 1.2 முதல் 1.5 ஆண்டுகள் வரை ஆகிறது. 8 மாதங்கள் வரை இந்த மரம் காய்ப்பதில்லை. அதற்குப் பிறகு பூத்து, காய்க்க ஆரம்பித்தால் 14 ஆயிரம் தக்காளிகள் வரை அறுவடை செய்யலாம்.
தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் 2 தக்காளி மரங்களில் இருந்து 32 ஆயிரம் தக்காளிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 522 கிலோ.
இந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவிருக்கிறது. டிஸ்னி வேர்ல்டில் 1 மணி நேரம் பசுமைக்குடிலைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
அசாதாரணமான செடிகள், காய்கள், பழங்கள் போன்றவற்றை இங்கே பார்க்கலாம். ஒவ்வொரு செடியும் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு விளைகிறது, எப்படிப் பராமரிக்கிறார்கள் போன்ற தகவல்களை சுவாரசியமாகத் தருவார்கள்.
தக்காளி மரத்தில் காய்ப்பதே ஓர் ஆச்சரியம், அதிலும் பல்லாயிரக்கணக்கில் காய்த்துத் தொங்குவதைப் பார்ப்பதற்கென்றே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர்.
அமெரிக்காவில் மூன்று இளைஞர்கள் வினோதமான முறையில் ஓன்லைனில் இருக்கும் போதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் வெர்ஜினியா பகுதியை சேர்ந்த டி.ஜே.வில்லியம்ஸ் என்பவர் காரில் இருந்து கொண்டே பேஸ்புக் ஒன்லைன் வீடியோவில் பேசிக்கொண்டிருந்தார். அவரது இரண்டு நண்பர்கள் அந்த காரில் இருந்தனர். இருவரும் வில்லியம்ஸை பார்த்தவண்ணம், பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கு அதிகமான அந்த வீடியோ பதிவில் சுமார் 5 நிமிடம் 40 நொடிகள் துப்பாக்கிச் சூடு சத்தம் மட்டும் பதிவாகியுள்ளது. 20 முறை துப்பாக்கிச் சுடும் சத்தம் பதிவாகியுள்ளது.
“நிம்மதியாக இருங்கள், அமைதியாக இருங்கள், நிம்மதியாக இருங்கள், தூங்க செல்லாதீர்கள், நிம்மதியாக இருங்கள்” என்ற குரல் வீடியோ பதிவில் ஒலித்தது. துப்பாக்கிச் சுடும் சத்தம் முடிந்த பிறகும் சுமார் ஒரு மணி நேரம் வீடியோ பதிவாகி இருந்தது.
துப்பாக்கிச் சூட்டினை நோர்போக் பொலிஸ் உறுதி செய்துள்ளது. மேலும், தற்கொலைக்கு முயன்ற மூன்று பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதில் இருவருக்கு பலத்த காயமும், ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தில்லா காயம் ஏற்பட்டுள்ளதாகவும் நோர்போக் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டனியோ பெர்கின்ஸ் என்பவர் மருத்துவமனையில் இறந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்டிருந்த 7 பேருக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
ஆயுள் தண்டனை பெற்றுள்ள 7 பேருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2008ல் நடந்த இந்த கொலை சம்பவத்தில் விஜயன் மனைவி சுதாவின் தங்கை பானு, தமிழக காவல்துறையை சேர்ந்த காவலர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயசந்திரன் பிறப்பித்துள்ள இன்றைய தீர்ப்பில், நூற்றுக்கணக்கான சாட்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இவர்கள் குற்றவாளிகள் என்பது தெளிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதியன்று சென்னை கோட்டூர்புரம் அருகே வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டார்.
அந்த தாக்குதலில் விஜயன் மரணமுற்றத்தை அடுத்து, சென்னை கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். பின்னர்அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்ட பிறகே துரிதப்படுத்தப்பட்டது.
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன், தனது மூன்றாவது மனைவியான வி.என் ஜானகியின் சகோதரரின் குழந்தைகளான லதா, கீதா, சுதா, பானு ஆகிய நால்வரையும் வளர்ப்பு குழந்தைகளாக வளர்த்தார்.
இவர்களில் சுதாவின் கணவர் கே. விஜயகுமார் என்ற விஜயன். இவர் 2008ஆம் ஆண்டு ஜூன் 4ஆம் தேதி சென்னை நந்தனத்தில் சிலரால் அடித்துக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை காவல்துறையின் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) விசாரித்துவந்தது.
இந்த வழக்கில் சுதாவின் சொந்தத் தங்கையான பானு என்பவருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்தது. இவர்களது தம்பியான திலீபன் நடத்திய பள்ளிக்கூடத்தை யார் கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக பானுவுக்கும் திலீபனுக்கும் பிரச்சனைகள் இருந்தன.
இதில் திலீபனுக்கு ஆதரவாக விஜயன் இருந்ததால், அவரை கொல்ல பானு திட்டமிட்டார் என்றும் போலீஸ் கான்ஸ்டபிளான கருணா என்பவரது உதவியோடு இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டதாகவும் சிபிசிஐடி கூறியது.
இதற்காக நான்கு லட்ச ரூபாய் கருணாவுக்குக் கொடுக்கப்பட்டது. அவர் நான்கு பேரை கூலிக்கு அமர்த்தினார்.
விஜயன் காரில் வரும்போது அந்தக் கார் மீது மற்றொரு வாகனத்தை மோதச் செய்து, அவரை காரை விட்டு வெளியேறச் செய்து இரும்பு பைப்பால் அடித்து கொன்றனர் என சிபிசிஐடி குற்றம்சாட்டியது.
இந்த வழக்கில் பானு, கருணா, பானுவின் தோழி புவனா உள்பட 8 பேர் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். இதில் புவனா வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். மீதமிருக்கும் ஏழு பேர் மீது வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கில் 79 சாட்சிகள் சாட்சியமளித்தனர்.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (14.07.2016)இடம்பெற்ற தொழில் சந்தையில் 2000ற்கு அதிகமான இளைஞர் யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.
இன்று காலை 8.30 மணிக்கு தொழிற்சந்தையினை தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், இராஜாங்க அமைச்சின் செயலாளர் சுனில் அபேவர்த்தன, வடமாகாண சபை உறுப்பினர்களான செ.மயூரன், ம.தியாகராசா, பணிப்பாளர் நாயகம் மனிதவலு மற்றும் வேலைவாயப்புத் திணைக்களம், சர்வதேச தொழில் ஸ்தாபன நிறுவனப் பிரதிநிதி திருமதி.அயோம டி சில்வா,
மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஜரோப்பிய ஒள்றிய தேசிய ஒருங்கிணைப்பாளர் திரு.சிவப்பிரகாசம், வவுனியா மாவட்ட பொதுமக்கள் தொழில் சேவை மத்திய நிலைய திணைக்கள உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இன்று காலை 8.30 மணிமுதல் மலை 4 மணிவரை இடம்பெற்ற தொழிற்சந்தையில் 2000ற்கும் அதிகமான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு தொழில்வாய்ப்பினைப் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தனியார்துறையில் இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பினைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டியதாகவும் பட்டதாரிகள் அரச தொழில் வாய்ப்பினை எதிர்பார்த்து வந்ததாகவும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.
வவுனியா தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த டொனி என்ற 17 வயதுச் சிறுவன் கடந்த ஞாற்றுக் கிழமை எதிர்பாராமல் இடம்பெற்ற பட்டாசு வெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிக்கி தனது இரண்டு கண்களினதும் பார்வையை இழந்துள்ளார்.
தற்போது சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் இவரது ஒரு கண் முற்றாக செயலிழந்து விட்டதாகவும், முறையான சிகிச்சை வழங்கப்படின் மீண்டும் ஒரு கண்ணின் பார்வையை பெறமுடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வவுனியா நெற் இணையம் அவரது தாய் மற்றும் சகோதரியை தொடர்புகொண்டு சம்பவத்தை உறுதிப்படுத்திக் கொண்டதுடன் இவரது மேலதிக சிகிச்சைக்கு நல்லுள்ளம் கொண்டவர்களிடமிருந்து உதவியை எதிர்பார்ப்பதாகவும் மேலும் தெரிவித்தனர்.
தந்தையை இழந்து தனது 3 சகோதரிகள் மற்றும் தாயை தனது உழைப்பின் மூலம் கவனித்து வந்த இவருக்கு நேர்ந்த இவ் அனர்தத்தால் இக் குடும்பமே செய்வதறியாது அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
இவரது மேலதிக சிகிச்சைக்கும் இக் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கும் நல்லுள்ளம் கொண்டவர்களிடமிருந்து தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அதிக உடல் பருமன் காரணமாக அகால மரணம் ஏற்படுவது பெண்களை விட ஆண்களுக்கே அதிகம் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.உடல் பருமன் அதிகரிக்க அதிகரிக்க பிற உபாதைகளும், பக்க விளைவுகளும் அதிகமாக தோன்றுவது அனைவரும் அறிந்த ஒன்றுதான். உடல் எடையைக் குறைப்பதற்கு பல்வேறு மருத்துவ வழிமுறைகள் இருந்தாலும் அதிகப்படியான உடல் எடை இருந்தால் குறைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. எனவே, இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில், அதிக உடல் எடையுடன் இருப்பது, உரிய வயது முதிர்வுக்கு முன்பாகவே எதிர்பாராத விதமாக அகால மரணம் ஏற்படுவதற்கு நேரடியாக தொடர்புடையது என்றும், இந்த ஆபத்து பெண்களை விட ஆண்களுக்கு மூன்று மடங்கு அதிகம் இருப்பதாகவும் புதிய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. லான்செட் மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட நாற்பது லட்சம் மக்களிடம் பெறப்பட்ட தகவல்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட இந்த ஆய்வு, பருமனான மக்கள், சாதாரண எடையில் இருப்பவர்களை விட சராசரியாக மூன்று வருடங்கள் முன்னதாகவே உயிரிழப்பதாக கூறியுள்ளது.மேலும், மிகவும் பருமனான மக்கள் தங்களின் ஆயுள் காலத்தில் பத்து வருடங்களை இழப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
அதிக எடையுடன் இருப்பது இதயம் மற்றும் நுரையீரல் தொடர்பான வியாதிகள், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் ஆபத்தினை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் இந்த ஆய்வில் தெளிவுபடுத்தப்படவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினி கால்ஷிட் கிடைப்பது சாதரண விஷயம் இல்லை. மூன்றாவது படத்திலேயே அப்படி ஒரு வாய்ப்பு ரஞ்சித்திற்கு கிடைக்க, கபாலியை வெற்றிகரமாக முடித்து செம்ம குஷியில் உள்ளார்.இவர் இந்த வாரம் ஒரு வார இதழக்கு பேட்டியளித்துள்ளார். இதில் ரஜினி சார் எப்போதும் டப்பிங் பேசும் போது எந்த இயக்குனரையும் உள்ளே அனுமதிக்கமாட்டாராம்.மணிரத்னம் மட்டுமே சண்டைப்போட்டு உள்ளே இருந்துள்ளார், அதன் பின் ரஞ்சித் மட்டுமே டப்பிங் ஸ்டுடியோவில் இருந்துள்ளார்.
மேலும், முதல் நாள் பேசியதை மறுநாள் பேசமாட்டேன் என கூறியுள்ளார், டப்பிங் எல்லாம் முடிந்து ஒருநாள் சார் மீண்டும் அந்த வசனத்தை பேசுங்கள் என்று ரஞ்சித் கூற, ரஜினி சிரித்துக்கொண்டே, “சார் நீங்க பெரிய ஆளு தான்” என்று கூறினாராம். அதுமட்டுமின்றி என்னை கொடுமைப்படுத்திய 3 இயக்குனர்களில் நீங்களும் ஒருவர் என செல்லமாக கூறியுள்ளார்.ரஜினி சொல்வதை வைத்து பார்த்தால் ஒருவர் ரஞ்சித் மற்றொருவர் மணிரத்னம் மூன்றாவது யாராக இருக்கும்….?.
கமல்ஹாசன் சபாஷ்நாயுடு படத்தின் படப்பிடிப்பை மிகவும் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார். இப்படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அலுவலகத்தின் மாடிப்படியில் இருந்து நேற்று நள்ளிரவு கமல்ஹாசன் தவறி விழுந்தார். இதில் அவரது முதுகு தண்டுவடம் மற்றும் கால் எலும்பு முறிவடைந்தது.இதனை தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் மூட்டு மற்றும் முதுகு தண்டவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் கூறினர்.தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, இவர் குணமாக சில வாரங்கள் ஆகும் எனவும், அதுவரையிலும் ஓய்வு எடுக்கும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஆடுகளம் படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் டாப்ஸி. முதல் படமே 6 தேசிய விருது என வாங்கினாலும் டாப்ஸிக்கு பெரிதாக பெயர் கிடைக்கவில்லை.இதை தொடர்ந்து தெலுங்குப்பக்கம் இவர் செல்ல, இவரை அங்கு வெறும் கவர்ச்சி நடிகையாக தான் பார்த்துள்ளனர்,
இதுக்குறித்து மிகவும் வருத்தமாக சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.இதில் ‘இனி நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன், எனக்கு தற்போது கவர்ச்சி நடிகை என்ற பெயர் தான் உள்ளது, அதை மாற்ற வேண்டும்’ என சோகமாக கூறியுள்ளார்.
தமிழகத்தில் ரயிலில் குழந்தையை விற்க முயன்ற இரண்டு பெண்களை கைது செய்த கோவை ரயில்வே பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.வாடிப்பட்டியை சேர்ந்த ராணி மற்றும் சேலத்தை சேர்ந்த சாந்தி என்ற இரண்டு பெண்கள் பிறந்து சில நாட்களே ஆன குழந்தையை விற்க முயற்சி செய்துள்ளனர்.
அதன் விவரம் பின்வருமாரு, ஈரோட்டில் இருந்து கேரளா செல்லும் பயணிகள் ரயிலில் தங்கள் வைத்திருந்த குழந்தையை பயணிகள் சிலரிடம் விற்க முயற்சி செய்துள்ளனர், இதை அறிந்த பயணிகள் சிலர் கோவை ரயில்வே பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து கோவை ரயில் நிலையத்தில் பொலிசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின் போது, சாந்தியின் மகளான ஷாலினிக்கு குழந்தை இல்லாததால் குழந்தையை விலைக்கு வாங்கவோ, தத்தெடுக்கவோ முயற்சி செய்து வந்துள்ளார், இந்நிலையில் திருச்சூரை சேர்ந்த சம்சீலா என்பவருக்கு கடந்த 8ம் திகதி பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்த குழந்தையை இடைத்தரகர் மம்மூட்டிகாகா என்பவர் மூலம் சாந்தி வாங்கியுள்ளார், இதற்காக எந்தவித சட்டநடவடிக்கைகளையும் பின்பற்றவில்லை.
இதனால் பிரச்சனை வரும் என்பதை அறிந்துகொண்ட சாந்தி, மீண்டும் சம்சீலாவிடம் குழந்தையை கொடுக்க சென்றுள்ளனர்.அப்போது ரயிலில் செல்லும் பயணிகளிடமே குழந்தை விற்க முயற்சி செய்துள்ளனர், இந்த முயற்சி பலனலிக்காதலால் சிக்கி கொண்டனர் என்பது தெரியவந்துள்ளது.
103 வயதிலும் உழைப்பின் வாட்டம் குறையாமல், 384 மரங்களை தானே நட்டு, வளர்த்து, இதுவரை பராமரித்தும் வருகிறார் இந்த சாலுமரதா திம்மக்கா என்ற மூதாட்டி.இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் ஹுலிக்கல் என்ற கிராமத்தில் வசிக்கும் திம்மக்கா தனது வாழ்க்கையில் துன்பங்களை சகித்து வாழ்ந்துள்ளதாக கூறுகிறார். மேலும், அவருடைய மோசமான வறுமையும் நிழலாக இன்னும் அவரை தொடர்கிறது. சில பலன்களையும் மரங்களால் அடைந்து வந்திருப்பதாக கூறுகிறார்.
கடந்த கால வாழ்க்கை
திம்மக்கா இளம்பெண்ணாக இருந்தபோது ஒரு விவசாயியை திருமணம் செய்துள்ளார். கணவருடைய வருமானம் மிகக்குறைவுதான்.கணவர் உட்பட அங்கு வசிக்கும் சக கிராமத்தினர் புதுமனைவி வந்ததும் குழந்தை பெற்றுக்கொள்வது, குடும்ப வாழ்க்கை போன்ற சமூக நெறிகளை பின்பற்றுவதில்லை.அதற்கு மாறாக, மரக்கன்றுகளை நட்டு, தாவர வளர்ச்சிப் பணியில் முனைப்பு காட்டுகின்றனர். அதையே தங்கள் குழந்தைகள் போல நினைக்கின்றனர்.
பசுமை நேய கிராமம்
பெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்த ஹுலிக்கல் கிராமம். ஹுலிக்கலுக்கு அருகாமை கிராமமான குடூருக்கு இடைப்பட்ட 4 கி.மீ. தூரத்தில் வெறுமெனே கிடந்த நிலப்பரப்பில் 10 ஒட்டுரக மரக்கன்றுகளை வளர்த்து வருகிறோம் என்கிறார்.
அவர்களுடைய வறுமை காரணமாக தாவரங்கள் வளர்ப்பதில் பல இன்னல்களை சந்தித்ததாகவும் மேலும், பல மரக்கன்றுகளை நட்டு இந்த பகுதியை அழகுப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறுகிறார்.இவர் வளர்த்த பல ஆலமரங்கள் மிகப்பெரிதாக அழகும் நிழலும் தந்து பயன்படுகிறது. அதனுடைய பொருளாதார மதிப்பு ரூ.15 லட்சம். அதற்காக, அரசு திம்மக்காவுக்கு சன்றிதழ்களும் வழங்கியுள்ளது.
ஆனால், அவற்றை வைத்து என்ன செய்வது, அதை பாதுகாக்கக் கூட சரியான வீடு வசதி இல்லாமல் வறுமை கோட்டுக்கு கீழே வாழ்கிறார். வீடு சம்பந்தப்பட்ட ரசீதுகளுக்கும் சரியாக பணம் செலுத்தமுடியாமல் அவருக்கு ஓய்வூதியமான ரூ.500 கூட சரியாக கிடைக்கப் பெறாமல் கஷ்டப்படுகிறார்.
சூற்றுச்சூழலில் ஆர்வமுடைய, என்னுடைய பணியால் ஈர்க்கப்பட்ட, ஒரு மகன் கிடைத்தால் தனக்குப் பிறகு, இந்த பணியை தொடர்வான் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார். இந்த நிலையிலும் திம்மக்கா, தனது வறுமை மீது அதிருப்திக்கொண்டாலும் தாவர வளர்ச்சிப் பணி மீது சலிப்பு கொள்ளவில்லை.நம் காலத்துக்குப் பிறகும் இந்த உலகில் மக்களுக்கு பயனுள்ள எதையாவது விட்டுச்செல்ல வேண்டும் அதற்கு பயனுள்ள மரங்களை விட வேறு சிறந்தது எது இருக்க முடியும் என்பது திம்மக்காவின் நம்பிக்கை.
தங்கள் குடும்பம் பிள்ளைகளுக்காக வழ்வது சமுதாய கடமையாக இருந்தாலும் அவர்களுக்கு அதில் ஏனோ நோய்களும் நிம்மதியின்மையுமே நிலவுகிறது. தாவரங்களை பிள்ளையாக வளர்த்த திம்மக்கா நோயில்லாமல் 103 வயதிலும் உழைக்கும் அளவுக்கு இருப்பது, தர்மம் தெரிந்த இயற்கை தந்திருக்கும் குறைவற்ற செல்வமான ஆரோக்கியமே! ஆச்சரியமே!
சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை காலணியில் மறைத்து வைத்து இந்தியாவிற்கு எடுத்துச் செல்ல முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குறித்த நபரை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.ஆறு தங்க பிஸ்கட்களை இந்தியாவின் மும்பை நகரிற்கு எடுத்துச்செல்ல இந்த நபர் முயற்சித்துள்ளார்.
கண்டி கடுகஸ்தோட்டையைச் சேர்ந்த 48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று நள்ளிரவு ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான யூ.எல் 141 ரக விமானத்தில் மும்பை நோக்கிப் பயணிக்க இந்த நபர் முயற்சித்துள்ளார்.சந்தேகநபர் அணிந்திருந்த காலணிகளை கழற்றி சோதனையிட்ட போது காலணியின் அடிப் பகுதியில் நுட்பமான முறையில் தலா மூன்று தங்க பிஸ்கட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.தங்கத்தின் எடை 600 கிராம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வென்னப்புவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மன் நாட்டு குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும், லொயிட் ஹென்றிக் என்ற 1 வயதும் 10 மாதமும் ஆன குழந்தையே பலியாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த குழந்தையும், அவரது பெற்றோரும் கடந்த வாரம் அளவில் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்துள்ளதுடன், இவர்கள் வென்னப்புவ பிரதேசத்தின் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.நேற்று பெற்றோர் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த போது குறித்த குழந்தை தரையில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், பாதுகாப்பற்ற மின்சார பொருளினை குழந்தை தொட்டிருக்கலாம் எனவும் இதன்மூலம் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி குழந்தை உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இதேவேளை, குழந்தையின் சடலம் தங்கொட்டுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் முன்னெடுத்துவருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.