இளம் வயதில் 10,000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சச்சினின் சாதனையை இங்கிலாந்து டெஸ்ட் அணித்தலைவர் அலஸ்டயர் குக் முறியடித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் சச்சின், டிராவிட், இலங்கை வீரர்கள் சங்கக்கார, மேற்கிந்தியத்தீவுகள் வீரர்கள் லாரா, சந்தர்போல் போன்றோர் 10,000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளனர். ஆனால், இங்கிலாந்து வீரர்கள் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10,000 என்ற மைற்கல்லை எட்டியது கிடையாது.
இங்கிலாந்து அணித்தலைவர் குக் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இனிங்ஸில் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
சச்சின் 10,000 ஓட்டங்களை கடந்த போது அவரின் வயது 31 ஆண்டுகள், 10 மாதம் மற்றும் 20 நாட்கள் ஆகும். நேற்று 10,000 ஓட்டங்களைக் கடந்துள்ள குக்கின் வயது 31 ஆண்டுகள், 5 மாதம் ஆகும். இதன் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த வயதில் 10,000 ஓட்டங்களை கடந்தவர் என்ற பெருமையை குக் பெற்றுள்ளார்.
வவுனியாவில் பல முதிரைக் குற்றிகளை வாகனத்தில் கடத்திச் செல்ல முற்பட்டபோது கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை வாகத்துடன் முதிரைக் குற்றிகளை மடக்கிப்பிடித்து கடத்தல் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வன பரிபாலனத் திணைக்களத்திற்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை பெரியமடு பகுதியில் 13 முதிரைக் குற்றிகளை ஏற்றி படங்கு மூலம் மூடிக்கட்டப்பட்ட நிலையிலிருந்த வாகனம் பெரியமடு பகுதியிலிருந்து பூந்தோட்டம் சென்றபோது அதிகாலை 5 மணியளவில் பூந்தோட்டம் பகுதியில் வைத்து வன பரிபாலனத் திணைக்கள அதிகாரிகள் தலைமையில் சென்ற 4 பேரடங்கிய குழுவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், சாரதி மற்றும் உதவியாளர் இருவரும் வாகனத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக வவுனியா வன பரிபாலனத் திணைக்கள அதிகாரி சமன் பிரியந்த தெரிவித்துள்ளார்.
வாகனத்தில் உரிமையாளரை பொலிசார் கைது செய்துள்ளதாகவும் விசாரணையின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டதாகவும். கைப்பற்றப்பட்ட 13 முதிரைக்குற்றிகளின் பெறுமதி பல இலட்சம் ரூபா பெறுமதியானது என்று மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்த கொரில்லாக் கூண்டில் புகுந்த சிறுவனின் உயிரைக் காக்க அங்கிருந்த கொரில்லாவை சுட்டுக்கொன்ற சம்பவத்திற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் ஒஹையோ மாகாணம், சின்சினாட்டி நகரிலுள்ள உயிரியல் பூங்காவில் திறந்தவெளிக் கூண்டில் ஹராம்பே என்னும் 17 வயது ஆண் கொரில்லா அடைக்கப்பட்டிருந்தது.
அந்தக் கூண்டின் தடுப்புச் சுவரில் இருந்த சிறு இடைவெளி வழியாக கூண்டுக்குள் நுழைந்த 4 வயது சிறுவனை கொரில்லா இழுத்துச் சென்றது.
சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் கூண்டிலிருந்து மீட்பதற்காக அந்தக் கொரில்லாவை உயிரியல் பூங்கா அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். இந்த நடவடிக்கைக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
கொரில்லாவை மயங்கச் செய்யும் விதத்தில் அதை சுட்டிருக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கூண்டுக்குள் விழுந்த சிறுவனை இழுத்துச் சென்ற கொரில்லா, அவனை எந்த விதத்திலும் துன்புறுத்தியதாகத் தெரியவில்லை.
அந்த திறந்தவெளிக் கூண்டில் சுமார் 10-15 நிமிடங்களுக்கு மேல் சிறுவன் சிக்கியிருக்கவில்லை. இந்நிலையில், கொரில்லாவை சுட்டுக்கொல்ல அவசர முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
இதனிடையே, சிறுவனைப் பாதுகாப்பாக தங்களுடன் வைத்திருக்கத் தவறிய பெற்றோர்கள் மீது வழக்கு தொடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாக மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹராம்பே என்கிற அந்த அரிய வகை கொரில்லாவுக்கு ஆதரவாக “ஹராம்பேவுக்கு நீதி கிடைக்க வேண்டும்’ என்கிற ஃபேஸ்புக் பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆதரவு கிடைத்து வருகிறது.
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் இறக்குமதி வரியை நிதியமைச்சு அண்மையில் மீளாய்வு செய்ததை அடுத்து இலங்கை சந்தையில் வாகனங்களின் விலை பாரிய அளவு அதிகரிக்கப்படவுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக கார்களின் விலை குறைவடையும் வாய்ப்புள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 800cc மற்றும் 1,000cc இயந்திர கொள்ளளவைக் கொண்ட வாகனங்களின் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இவ் ரகத்தை சேர்ந்த வாகனங்களின் சந்தை விலையில் வீழ்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனேகமான கார்கள் 800cc மற்றும் 1,000cc இயந்திர கொள்ளளவைக் கொண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்நிலையில் இறக்குமதி செய்யப்படும் Maruti Wagon-R போன்ற கார்களின் இறக்குமதி வரி 1.5-1.6 மில்லியன் ரூபாவில் இருந்து 1.35 மில்லியன் ரூபாவாக குறைவடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இறக்குமதி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளுக்கான இறக்குமதி வரி பாரிய அளவு அதிகரித்துள்ளமையினால் முச்சக்கர வண்டிகளின் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் அடையாள பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
உள்ளீர்ப்பு பயிற்சி நடவடிக்கைகளுக்காக மருத்துவர்களுக்கான நியமனங்களை வழங்கும் போது மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தே இந்த பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.
அத்துடன் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவரச சிகிச்சைப் பிரிவு தொடர்ந்தும் இயங்கியதுடன் சிறுவர் பிரிவு, சிறுநீரகப் பிரிவு மற்றும் பிரசவ விடுதிகளுக்கு இந்த பணிப் பகிஷ்பரிப்பு பாதிப்பை ஏற்படுத்தாது என தெரிவிக்கப்படுகின்றது.
பஞ்சாப்பில் ஓடும் பேருந்தில் இறங்கிய இரண்டு பெண்களில் ஒரு பெண் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான மற்றொரு பெண் படும் காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப மாநிலத்தின்,சங்குரிலிருந்து பாட்டியாலாவிற்கு பயணித்த பேருந்திலே குறித்த விபத்து எற்பட்டுள்ளது.மேலும், விபத்து நடக்கும் காட்சி பேருந்து நிலையத்தில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த பேருந்தில் பயணித்த இருவர், பேருந்தை நிறுத்தும் படி ஓட்டுநரிடம் கூறியுள்ளனர், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் இயக்க இருவரும் ஓடும் பேருந்திலிருந்து இறங்கியுள்ளனர், இதில் சோபா எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் நிண்டால் பகுதியை சேர்ந்த சோபா எனவும், விடுமுறை நாட்களை கழிக்க சங்குர் வந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
காயமடைந்து மருத்துவனையில் இருக்கும் மஞ்சு தேவியின் கணவர் கூறுகையில்: ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதே விபத்திற்கு முக்கிய காரணம் என கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவறு செய்த 7 வயது மகனை அவனது பெற்றோர், விலங்குகள் சுற்றித் திரியும் வனத்தில் தனியே விட்டு வந்துள்ள சம்பவம் ஜப்பான் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பானின் வடக்கு பிராந்தியமான ஒகாய்டோ தீவில் வசிக்கும் தம்பதி, கடந்த சனிக்கிழமை தங்கள் 7 வயது மகனை வெளியே அழைத்துச் சென்றனர்.
அந்த சிறுவன் தொடர்ந்து குறும்பு செய்தவண்ணம் இருந்துள்ளான். அத்துடன், வழியில் வரும் வாகனங்கள் மீதும், பொதுமக்கள் மீதும் சிறுசிறு கற்களை எறிந்து விளையாடியுள்ளான்.
இதனால் கோபமடைந்த பெற்றோர், அவனுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக அவனை நடுக்காட்டில் தனியே விட்டுவிட்டு சென்றுள்ளனர். அது கரடிகள் நிரம்பிய காடு ஆகும். 5 நிமிடம் கழித்து அங்கு சென்று பார்த்தபோது சிறுவனைக் காணவில்லை.
இதையடுத்து அவசர அழைப்பெண் மூலம் காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளனர். முதலில் தங்கள் மகன் காணாமல் போய்விட்டதாக பெற்றோர் கூறினர். பின்னர், பொலிசார் தீவிரமாக விசாரித்தபோது, உண்மையை தெரிவித்தனர்.
இதையடுத்து ஹெலிகாப்டர்களில் நூற்றுக்கணக்கான மீட்புப்படையினருடன் பொலிசார் காட்டிற்கு சென்று சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை முதல் தொடர்ந்து தேடியும் அவனை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடைபெறுகிறது.
இங்கிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் விளையாடவில்லையென திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான டில்சான் காயம் காரணமாக விளையாடபோவதில்லை என தெரிவித்துள்ளார்.
அயர்லாந்து அணியுடனான ஒரு நாள் சர்வதேச போட்டி எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின், முதலாவது போட்டி ஜூன் மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“வளமான எதிர்காலத்திற்கான இளைஞர்களின் சக்தி” என்னும் தொனிப்பொருளில் நடைபவனி ஒன்று வவுனியாவில் இன்று(31.05.2016) இடம்பெற்றது.
பவனி வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இவ்வாண்டு தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு வளமான எதிர்காலத்திற்கு இளைஞர்களின் சக்தி என்னும் தொனிப்பொருளில் பவனி நடைபெற்றது.
வவுனியா தபால் நிலையம் முன்பாக ஆரம்பித்த நடைபவனி நகரம் ஊடாக கண்டி வீதி வழியாக சென்று தேசிய இந்து இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னால் நிறைவடைந்தது.
இதில், வடமாகாண சபை உறுப்பினர்களான மயில்வாகனம் தியாகராசா, தர்மபால செனவிரட்ன மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், இளைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தது.
இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 27ம் திகதி ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி அந்த அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 498 ஓட்டங்களைப் பெற்ற வேளை, தனது முதல் இன்னிங்சை இடைநிறுத்திக் கொண்டது.
அந்த அணி சார்பாக சிறப்பாக ஆடிய முஈன் அலி ஆட்டமிழக்காது 155 ஓட்டங்களை குவிக்க அலக்ஸ் ஹெலிஸ் (Alex Hales) 83 ஓட்டங்களையும் ரூட் 80 ஓட்டங்களையும் விளாசினர்.
இதனையடுத்து, தனது முதலாவது இன்னிங்சில் விளையாட ஆரம்பித்த இலங்கை அணி, 43.3 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்டு 101 ஓட்டங்களைப் பெற்ற வேளை அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இதன்படி, 397 ஓட்டங்களால் இங்கிலாந்து முன்னிலையில் இருக்க மீண்டும் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்சில் விளையாட களமிறங்கியது.
அந்த அணி சார்பாக சிறப்பாக ஆடிய தினேஸ் சந்திமால் 126 ஓட்டங்களைக் குவித்ததோடு மெத்தியூஸ் 80 ஓட்டங்களைப் பெற்றார்.
எனவே இங்கிலாந்து அணிக்கு 79 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிலையில், பதிலளித்து ஆடிய அந்த அணி 23.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 80 ஓட்டங்களை பெற்று வெற்றி வாகை சூடியுள்ளது.
சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட் கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவங்கள் ஆலயத்தில் இடம் பெறவுள்ளது. 14 ஆம் திகதி செய்வாய்க்கிழமை 108 சங்குகளால் அம்பாளுக்கு பால் அபிஷேகமும் 15 ஆம் திகதி புதன்கிழமை பகல் சிவபூசையுடன் இரவு திருமஞ்சமும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் விசேட கருட பூசையும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு பெரிய சப்பரத்திருவிழாவும் மறுதினமான 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தேர்த்திருவிழாவும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும் 21 ஆம் திகதி செய்வாய்க்கிழமை மாலை தெற்பத்திருவிழாவுடன் ஆலயத்தினது உற்சவங்கள் யாவும் நிறைவடையும்.
ஆலயத்திருவிழாவில் கலந்து கொள்கின்ற அடியார்களினது தாக சாந்தி மற்றும் பசிப் பிணி ஆகியவற்றினை தீர்ப்பதற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் மீது பற்றுள்ள பல அடியார்களும் அமுத சுரபி அன்னதான சபையினரும் ஒழுங்கு செய்து வருகின்றனர். ஆலயத்திருவிழா காலங்களில் நாட்டினது பல இடங்களில் இருந்தும் ஆலயத்திற்கு வருகின்ற அடியார் களினது போக்குவரத்து வசதிகள் யாழ்ப்பாணம் மத்திய பஸ் தரிப்பு இடத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்கு துறை வரைக்கும் இலங்கைப் போக்குவரத்து வடபிராந்திய சபையும் தனியார் சிற்றூர்தி சங்கத்தைச் சேர்ந்த சிற்றூர்திகளும் அதிக அளவில் சேவையில் ஈடுபடுவதற்கும் முன்வந்துள்ளனர்.
இதேபோன்று குறிகாட்டுவான் இறங்கு துறைக்கும் நயினாதீவு இறங்கு துறைக்குமிடையே சேவையில் ஈடுபடவிருக்கும் மோட்டார் படகினது சேவைகளும் ஆலயத் திருவிழா காலங்களில் வருகின்ற யாத்திரிகர்களினது வருகையினைத் தொடர்ந்து கட்டுப்பாடு இன்றி சேவைகளை மேற்கொள்வதற்கு முன்வந்துள்ளன. இதேபோன்று ஆலயத்தினது திருவிழாவினை யொட்டி சென்றவருடங்களைப் போல இவ்வருடமும் மின்சார விநியோகத்தினை வழங்குவதற்கு இலங்கை மின்சார சபையினர் சம்மதம் தெரிவித்துள்ளதுடன் சுகாதாரத் திணைக்களத்தினரும் ஆலய சுற்றாடலில் புனிதத்தன்மையினை பேணுவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். குடி தண்ணீர் சேவையினை வேலணை சாட்டியில் இருந்து வேலணை பிரதேச சபையின் ஊடாக தண்ணீர் பவுசர்கள் மூலமாக பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆலயத்தினது திருவிழாக்காலங்களில் ஆலயச் சுற்று சூழல் பகுதிகளில் மதுபாவனை மற்றும் புகைத்தல் மற்றும் பச்சை குத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுமுழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளது.பொலித்தீன் பாவனைகளை வர்த்தகர்களும் ஆலயத்திற்கு சென்று வருகின்ற மக்களும் பாவிப்பதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக கடதாசி (பேப்பர்) யிலான அல்லது ஓலையினால் செய்யப்பட்ட பைகளைப் பாவிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நயினாதீவு இறங்குதுறைமுகத்தில் இருந்து குறிகாட்டுவான் இறங்குதுறை முகத்திற்கு இடையில் சேவையாற்றிவருகின்ற (பாரி) பாதை சேவையினை பழுதடையாத நிலையில் ஆலயத்தினது திருவிழா காலங்களில் இயங்குவதற்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ளும்படி யாழ். அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் யாழ்ப்பாண அதிகார திணைக்களத்தினது பொறியியலாளரை பணித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வரலாற்று பிரசித்தி பெற்ற வவுனியா புதூர் நாகதம்பிரான் ஆலய வருடாந்த பொங்கல் விழாவின் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர்தெரிவித்துள்ளனர்.
ஆலயத்தின் வருடாந்த பொங்கல் விழா, எதிர்வரும் திங்கட்கிழமை 06 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், விஷேட போக்குவரத்து ஏற்பாடுகள் உட்பட ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதிய செயற்பாடுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அனைத்து திணைக்களங்கள், நிறுவனங்கள், பொலிஸார் மற்றும் பக்கதர்களின் ஒத்துழைப்புடன் இம்முறையும் சிறப்பாக பொங்கல் விழா இடம்பெறவுள்ளதாக புதூர் ஆலய நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
புதூர் ஆலய பொங்கல் விழாவிற்கு வருடாந்தம் வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகைதருகின்றமை சிறப்பம்சமாகும்.
இன்றைய உலகில் பாரிய சாவல்களில் ஒன்றாக புகைத்தல் மற்றும் போதைப் பொருட்பாவனை காணப்படுகிறது. சிறியவர், பெரியவர் என்ற வயது வித்தியாசமின்றியும் படித்தவர், படிக்காதவர், ஏழை,பணக்காரன் என்ற பாகுபாடு இன்றியும் எல்லோரும் போதைப் பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு சீரழிவதனை நாம் தினமும் காணக்கூடியதாக உள்ளது. அதிலும் இன்றைய மாணவர் சமுதாயத்தையும் இளைஞர்களையும் இலக்குவைத்தே போதைப்பொருள் வியாபாரம் மேற்கொள்ளப்படுகின்றது.
உலக சனத்தொகையில் 100 கோடிப் பேர் புகைப்பழக்கத்திற்கு பழக்கப்பட்டுள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 30% மக்களும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 50% மக்களும் இதற்கு அடிமையாகின்றனர். இதன் அடிப்படையில் உலகில் ஆண்டு தோறும் 55 இலட்சம் மக்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி மாண்டுபோகின்றனர்.
1987இல் உலக சுகாதார நிறுவனம் மே 31ம் நாளை உலக புகைத்தல் எதிர்ப்பு தினமாக அறிவித்தது. இத்தினம் அறிவித்து 29 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் இன்றுவரை புகைப்பிடிப்போரின் எண்ணிக்கை குறைவடையவில்லை மாறாக அதிகரித்தே செல்லுகின்றது. மே 31 என்னும் நாள் புகைத்தலுக்கெதிரான நாளாக, கண்துடைப்புகாக கடமைக்கு கடைப்பிடிக்கும் நாள் போன்று இன்றுவரை கடைப்பிடிக்கப்பட்டுவருகின்றது.
புகைத்தலுக்கெதிராக காத்திரமான நடவடிக்கைகளில் அரச மற்றும் சமூக அமைப்புக்கள் செயற்படவில்லை என்பதற்கு இலங்கையில் புகைப்பிடிப்பவர்களில் நாளொன்றுக்கு சராசரி 60 பேர் இறக்கின்றனர். (ஆண்டுக்கு 20000 பேர் இறக்கின்றனர்.) நாளொன்றுக்கு 80 க்கும் மேற்பட்ட சிறுவர் மற்றும் இளைஞர்கள் புதிதாக புகைத்தல் பழக்கத்துக்கு ஆளாகின்றனர் என்ற அறிக்கைளே இதற்கு ஆதாரமாகும்.
உலகில் மனித இறப்புகளைத் தோற்றுவிக்கும் முக்கிய காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. காரணம் சிகரெட்டில் 4000 இற்கும் மேற்ப்பட்ட இரசாயன பொருள்கள் அடங்கியுள்ளது. அது புகைக்கப்படும் போது மேலும் அதிகரித்து உடலுக்கு தீங்கான இரசாயனங்களை தருகிறது. அதிலும் 69 இரசாயனங்கள் குறிப்பாக புற்றுநோய்க்கு காரணமாகும்.
அது புகையிலையை எந்த முறையில் பயன்படுத்தினாலும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது. அதிக சக்தியை பெறுவதாகவும், மனஅழுத்தத்துக்கு மாற்றாகவும், உற்சாகத்தை தருவாதகவும் எண்ணி இதை பழகுகிறார்கள். அந்த சிறிய துன்பத்திற்காக பெரிய துன்பத்தில் தஞ்சமடையும் செயலான புகைப்பழக்கம் அழிவு நோக்கிய பயணமே.
இன்றைய இளைஞர்களே நாளைய எதிர்காலத்தின் தூண்கள் என்கின்றோம். ஆனால் நாம் எதிர்காலத்தூண்கள் என்ற எமது இளைஞர்களை இன்று புகைத்தலுக்கும், மாவா போதைப்பாக்கு, மது போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாக்கி அவர்களின் எதிர்காலத்தை அழித்து ஒரு நலிவுற்ற இளைஞர் சமூதாயமாக, உறுதியற்ற தூண்களாக மாற்றப்படுகின்றார்கள்.
எனவே நாம் மனித சமூகத்தை பாழாக்கும் இக் கொடிய போதைப்பொருட்களுக்கு எதிராக போராடத் தவறினால் எமது பிள்ளைகள், சகோதரர்கள், நண்பர்கள் எம் முன்னே சீரழிந்து அழிந்து போவதை பார்த்துக் கொண்டிருக்க நேரும். அது மட்டுமல்லாமல் மனிதத்தை மதிக்காத மிருகங்கள் வாழும் சமூதாயத்தில் நாம் வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் ஏற்படும்.
எனவே உங்கள் குடும்ப அங்கத்தவர்களைப் பாதுகாக்க அனைவரும் ஒன்று திரண்டு போதை பாவனைக்கு எதிராக போராடுவோம்.
ஊடக அறிக்கை
30.05.2016
சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பு
வவுனியா மாவட்டம்.
077 5141478
077 4409313
076 7437835
077 6288923
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள விசேட தேவைக்குட்பட்டோரை பராமரிக்கும் நிறுவனமான வரோட் அமைப்பினரின் ஏற்பாட்டில் கிளாரட் சிறுவர் எழுச்சித்திட்ட சிறார்களின் ஒன்று கூடல் நிகழ்வு கிளாரட் அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் அருட்தந்தை அல்பேட் ஜோசப் அருள்ராஜா அவர்களின் தலைமையில் நேற்று (30.05.2016) நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா சிறுவர் நன்நடத்தைகள் பிரிவு அதிகாரி ஜே.கென்னடி கலந்துகொண்டிருந்தார்.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த கிளாரட் அமைப்பின் ஒன்பது சிறுவர் முன்பள்ளி பாடசாலைகளின் மாணவர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு ஆறு வருடங்களின் பின் வவுனியாவில் நடைபெற்றது.
மன்னார் வீதியில் இருந்து வரோட் நிறுவனத்தின் வளாகம் வரை ஊர்வலமாக பாண்ட் வாத்தியங்களை வாசித்தபடி, விநோத உடைகளில் முன்பள்ளிச் சிறார்கள் அணிவகுத்து வந்தனர்.
ஊர்வலத்தில் நல்ல சக்தி, தீய சக்தி என இரண்டு உருவபொம்மைகள் எடுத்து வரப்பட்டு சிறுவர்களினால் ‘தீமைகள் அளிக்கப்பட வேண்டும் எனும் தொனிப்பொருளில்’ தீய சக்தி உருவ பொம்மை தீயிட்டு கொழுத்தப்பட்டது.
மங்கள விளக்கேற்றலை சிறுவர்கள் ஏற்றி வைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. இறைவழிபாட்டைத் தொடர்ந்து விசேட தேவைக்குட்பட்ட கலைச்செல்வன் குழுவினரால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
நிகழ்வில் விருந்தினர்களை சிறுவர்கள் மும்மொழிகளிலும் வரவேற்றனர். முன்பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர் கீதத்தினை இசைத்தனர். நிகழ்வின் இறுதியில் ‘சான்றோன்’ என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
சிறுவர்களின் வரவேற்பு நடனம் மற்றும் கலை நிகழ்வுகளை தொடர்ந்து உரை நிகழ்த்திய அருட்தந்தை அல்பேட் யோசப் அருள்ராஜா,
2009 யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முகாம்களில் உள்ள குழந்தைகளுக்காக கிளாரட் சிறுவர் அமைப்பு ஊருவாக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர் அகதி முகாம்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் சிறுவர்களுக்கு கல்வி போதிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது என சுட்டிக்காட்டினார். எமது முக்கியமான நோக்கமாக இருந்தது மாற்று வலு உள்ளோருக்கான உதவிகள் மேற்கொள்வதே எனத் தெரிவித்தார்.
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின் என்றால் மார்க்கெட் இருக்கும் வரை தான். எப்போது மார்க்கெட் குறைகிறதோ, சினிமாவை விட்டு நடையை கட்ட வேண்டியது தான்.தென்னிந்தியாவில் யார் நம்பர் 1 என்று பல ஹீரோயின்களுக்கிடையே போட்டி,
இதில் அனுஷ்கா, காஜல், ஸ்ருதி ஆகியோர் தான் கடும் போட்டியில் இருக்கின்றனர்.இந்நிலையில் சமூக வலைத்தளமான பேஸ்புக் பக்கத்தில் காஜல் 2 கோடி லைக்ஸுடன் அனுஷ்கா, ஸ்ருதி ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.
நடிகர் சூர்யா தன்னை தாக்கியதாக வாலிபர் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.சென்னை பாரிமுனையை சேர்ந்தவர் பிரேம் குமார். இவர் அடையாறு திரு.வி.க. நகர் பாலம் அருகே பெண்ணின் கார் மீ்து பைக்கை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடந்துக் கொண்டிருந்த வேளை அந்த வழியாக வந்த நடிகர் சூர்யா அந்த வாலிபரை அடித்ததாக கூறப்படுகிறது.இதனையடுத்து அந்த வாலிபர் நடிகர் சூர்யா தன்னை பொதுமக்கள் முன்னிலையில் தாக்கியதாக சென்னை சாஸ்திரிநகர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.