வவுனியா சிறைச்சாலையில் உயிரிழந்த நிமலரூபன் கொலை வழக்கு தள்ளுபடி!!

nimalaruban

வவுனியா சிறைச்சாலையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோதலையடுத்து தாக்கப்பட்டு உயிரிழந்த தமிழ்க் கைதி நிமலரூபனின் பெற்றோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினை இலங்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திங்கட்கிழமை மனு விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நிமலரூபனின் மரணத்திற்கான காரணங்களை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

உயிரிழந்த நிமலரூபனின் உடலில் 20க்கும் மேற்பட்ட காயங்கள் காணப்பட்டதாகவும் நீதிமன்றத்திடம் விளக்கினார். அப்போது கருத்து தெரிவித்த தலைமை நீதியரசர் மொஹான் பீரிஸ் சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரமொன்றை அடக்கும் போது இவ்வாறான மரணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்று கூறினார்.

இவ்வாறான பயங்கரவாத செயற்பாடுகளுக்கு மனித உரிமை மீறல் என்று அர்த்தம் கற்பிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ள தலைமை நீதியரசர் அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை முறியடிக்கும்போது இவ்வாறான மரணங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்.

இவ்வாறான வழக்குகளை தொடர்ந்தும் விசாரிப்பதன்மூலம், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் தலைமை நீதியரசர் தெரிவித்தார்.

எனவே குறித்த மனுவை தொடர்ந்தும் விசாரிப்பதற்கு நியாயமான காரணங்கள் இல்லை என்று தெரிவித்த தலைமை நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் நம்பிக்கை இல்லை : எம்.கே.சிவாஜிலிங்கம்(படங்கள்)

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் எங்களுக்கு அறவே நம்பிக்கை இல்லை என வடமாகாண சபை உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியற்துறை தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக மையத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலையே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலில் யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதியை அழைக்க இருந்தனர் அது எமது கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்ட பின்னரே முதலமைச்சர் அலரி மாளிகை சென்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்வதாக முடிவெடுக்கப்பட்டது.

அதற்கு நாம் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தோம். ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்யாமல் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் வேணுமென்றால் சம்பந்தனும் விக்னேஸ்வரனும் ஜனாதிபதியுடன் நல்லெண்ண சந்திப்பை மேற்கொள்ளுங்கள் என கூறி இருந்தோம்.

ஜனாதிபதி முன்னிலையில் பதவிபிரமாணம் செய்வது என்பது அவரது காலடியில் போய் வீழ்வதற்கு ஒப்பானது.

வடக்கு மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் திறமைக்கு இவ்வளவு வாக்குகளும் கிடைக்கவில்லை அரசாங்கத்திற்கு எதிரான வாக்குகளே 75 வீதமானவை மிகுதி 25 வீதமான வாக்குகளே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கைகளுக்கும் அதன் வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகள்.

தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல உள்ளக சுயநிர்ணயம் அதாவது வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி அடிப்படையிலான பூரண சுயாட்சி முறைக்கும்.

இலங்கை அரசின் மீதான சர்வதேச விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது அதற்கு பொறுப்பு கூறல் வேண்டும் என்பவற்றுக்காகவே எமக்கு மக்கள் ஆணை தந்துள்ளார்கள்.

எங்களுக்கு இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு தீர்வினை தரும் என்பதில் அறவே நம்பிக்கை இல்லை ஆனாலும் சர்வதேச நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்கவே நாம் மாகாண சபையை ஏற்று கொண்டோம்.

தெரிவு செய்யப்பட்ட அத்தனை உறுப்பினர்களும் மாகாண சபையில் இருந்து கொண்டு மக்கள் தந்த ஆணையை ஏற்று நடப்போம்.

போரிலே கொல்லப்பட்ட மக்கள், மரணித்த மாவீரர்கள், கொல்லப்பட்ட தலைவர்கள், மரணித்த தமிழ் தேசிய வீரர்களுக்கு முள்ளிவாய்க்கால் மண்ணிலே அஞ்சலி செலுத்திவிட்டு தான் முள்ளிவாய்க்கால் பொது நோக்கு மண்டபத்தில் இன்று காலை 10.30 மணிக்கு சமாதான நீதவான் மயிலேறுபெருமாள் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டேன்.

என்னுடன் மன்னார் ஆயரோ, மன்னார் ஆயருடன் பேச்சு நடாத்திய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனோ பேச்சுக்களை நடத்த வில்லை அதனால் தான் நான் இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

51 2 3 4

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 40 அகதிகள் இன்று நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்!!

aus

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 40 இலங்கையர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

அவுஸ்ரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்று கிறிஸ்மஸ் தீவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 40 பேர் நேற்று திங்கட்கிழமை காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் இலங்கையின் முல்லைத்தீவு கடலில் இருந்து கடந்த 2007ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் அரசியல் தஞ்சம் கோரி சென்றுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவில் தங்கியிருந்த யாழ்ப்பாணம், முல்லைத்தீவை சேர்ந்த 40 பேர் 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் இலங்கைக்கு விமான மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டோர் திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த போது கைது செய்யப்பட்டனர். இவர்களில் 12 சிறுவர்கள், 25 பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 பேரும் முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பேருமாக 40 பேர் உள்ளடங்குவர்.

ஒருவருக்கு தலா 20 இலட்சம் ரூபா செலுத்தி முல்லைத்தீவு கடலில் இருந்து கடந்த 2007ம் ஆண்டு படகு மூலம் சட்டவிரோதமாக இவர்கள் அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் கைக்குண்டு வெடித்து சிறுவன் படுகாயம்!!

bombமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருப்பெருந்துறை பகுதியில் கைக்குண்டு வெடித்ததன் காரணமாக சிறுவன் ஒருவன் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் 03 மணியளவில் திருப்பெருந்துறை மாதா தேவாலயத்துக்கு முன்பாகவுள்ள பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் திருப்பெருந்துறை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தில் ஐந்தாம் தரம் கல்வி பயிலும் தி.மதுஸன்(10) என்ற சிறுவனே படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதி கைவிடப்பட்ட பகுதியாகவும் காடுகள் கொண்டதாகவும் காணப்படுகின்ற நிலையில் அப்பகுதியில் சிறுவர்கள் விளையாடியுள்ளனர். இதன்போது அப்பகுதியில் துருப்பிடித்த நிலையில் கிடந்த பொருளை எடுத்து கிணற்று கட்டில் அடித்தபோது அது வெடித்துள்ளது.

இதில் சிறுவன் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்னரும் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டெங்கு நுளம்பு பரவ துணைபோன 6086 பேர் மீது நடவடிக்கை!!

dengu

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருந்த 6086 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 7ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் செயற்படுத்தப்பட்டது. அந்த காலத்தில் 2 லட்சத்து 58,000 இடங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதில் டெங்கு நுளம்பு பரவும் வகையில் 4395 இடங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக மோசமாக டெங்கு பரவும் வகையில் சுழலை வைத்திருந்த 890 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு மென்பானங்களுக்கு வடக்கில் தடை!!

drinks

வெளிநாட்டு மென்பானங்களை வட மாகாண அமைச்சர்களின் நிகழ்வுகளிலோ, கூட்டங்களிலோ பயன்படுத்தக் கூடாதெனவும் அதற்குப் பதிலாக உள்ளூர் பழரசங்களையே பயன்படுத்த வேண்டும் எனவும் வட மாகாண விவசாய, கமலநலசேவை, கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, சுற்றாடல் துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் அறிவுறுத்தியுள்ளார்.

யாழ். புரூடி வீதியிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் நேற்றைய தினம் தனது பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்ட பின்னர் அலுவலகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

இவ்வாறான வெளிநாட்டு மென்பானங்களை அருந்துவதால் உடல்நலக் குறைவு ஏற்படுவதோடு, சிறந்த உள்ளூர் பழரசங்கள் ஒதுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆசிரியர்களுக்காக உயிரைவிட்ட இரண்டு மாணவர்கள்!!

lotus

அம்பாறை மஹஒயா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள ஆசிரியர் தினத்திற்கு குளத்தில் தாமரை இலைபறிக்கச் சென்ற 13 வயது மாணவர்கள் இருவர் குளத்தில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக மஹஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

மஹஓயா இத்தபொல வில்லதலாவ குளத்தில் நேற்று மாலை 04 மணியளவில் தாமரை இலைபறித்தபோது குளத்தில் தவறி விழுந்த மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் மீட்கப்பட்டு மஹஓயா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அஞ்சன பிரியசாந்த மற்றும் தில்ஷான் பிரபாத் குமார என்ற மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
மஹஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் வெடிசத்தம்: விமானங்கள் தாமதம்..!

airportஅமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினலில் உள்ள பணியாளர்கள் குளியலறையில் நேற்று மாலை திடீரென பலமான வெடிசத்தம் கேட்டுள்ளது. அங்கிருந்த பாதுகாப்புப் பணியாளர்கள் விரைந்து சென்று சோதனையிட்டபோது பாட்டில் ஒன்று வெடித்திருந்ததைக் கண்டறிந்தனர்.

உலர் ஐஸ் நிரப்பப்பட்டிருந்த பாட்டிலில் ஏற்பட்ட ரசாயன மாற்றத்தினால் அந்த வெடிவிபத்து நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆயினும், பாதுகாப்புக் கருதி விமான நிலையத்தின் இரண்டாவது டெர்மினல் மூடப்பட்டது. அந்தப் பகுதி முழுவதும் பலத்த சோதனைக்குள்ளாக்கப்பட்டது என்று புலனாய்வுத்துறை செய்தித் தொடர்பாளர் லாரா எமில்லர் தெரிவித்தார்.

வெடிவிபத்து நடந்த குளியலறை விமான நிலையத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்ததால் அங்கு பொதுமக்களால் வரமுடியாது. எனவே, ஐஸ் நிரப்பப்பட்ட பாட்டில் அங்கு எப்படி வந்தது? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருவதாக லாரா கூறினார்.

இதனிடையில், பயணிகளின் உடமைகளுக்கு நடத்தப்படும் பாதுகாப்புத் திரையிடல் சோதனைனையும் விமான நிலைய அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தியதால் அந்த விமான நிலையத்திலிருந்து கிளம்பவேண்டிய நான்கு விமானங்கள் தாமதமாகப் புறப்பட்டு சென்றன என்று விமான நிலைய பொலிஸ் சார்ஜென்ட் கர்லா ஒடிஸ் தெரிவித்தார்.

வடமாகாண சபை புளொட் உறுப்பினர்கள் கட்சி செயலாளர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்..!

PLOTEதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) உயர்பீடம் இன்று முற்பகல் யாழ் கந்தரோடையில் சந்தித்து கலந்துரையாடியது.

இதன்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர்களின் சத்தியப் பிரமாணம் மற்றும் இது தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகள் குறித்து விரிவாக கலந்துரையாடியதுடன், இந்த வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்த வகையில் புளொட்டின் வட மாகாணசபை உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோர் கட்சியின் செயலாளர் சு.சதானந்தம் (ஜே.பி.) முன்னிலையில் இன்று வட மாகாணசபை உறுப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

சிறப்பாக நடைபெற்ற வவுனியா தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் வாணி விழா(படங்கள்)..!

வவுனியா யாழ் வீதியில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் இன்றைய தினம் வாணி விழா நிகழ்வுகள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பொறியியலாளர் திரு. திருநாவுக்கரசு அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் அனைத்து பொறியியலாளர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

vavuniya1vavuniya2vavuniya3vavuniya4

4 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த உறவினருக்கு தர்ம அடி!!

child

இந்திய மாநிலம் ராஜஸ்தானில் உள்ள சவானி ராமசந்திரபுராவில் தாத்தா பாட்டியுடன் வசித்துவந்த 4 வயது சிறுமியை அவரது உறவினர் ரஞ்சித் வால்மிகி என்பவர் நேற்று முன்தினம் அழைத்துசென்றுள்ளான்.

4 குழந்தைக்கு தகப்பனான 30 வயது ரஞ்சித் வால்மிகி அந்த சிறுமிக்கு சொக்லேட் வாங்கிக்கொடுத்து அருகிலுள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்திற்குள் அழைத்துச்சென்று அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குக்கு ஆளாக்கியிருக்கிறான்.

அப்போது அழுத அந்த சிறுமியை அவன் அடித்தும் இருக்கிறான். அவள் அழுகுரல் அருகாமையில் சென்றுக்கொண்டிருந்த வழிப்போக்கர்களுக்கு கேட்க அருகில் வந்து பார்த்து இருக்கின்றனர். உடனே அவனை கையும் களவுமுமாக பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவன் மீது சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டப்படி வழக்கு பதிந்த போலீசார் அப்பகுதி நீதிமன்றத்தில் நேற்று அவனை ஆஜர் படுத்தினர்.

பாலியல் கொடுமைக்கு ஆளான சிறுமியின் பெற்றோர்கள் வறுமை காரணமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தினக்கூலியாக வேலைபார்த்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

அமெரிக்க ராணுவத்தின் உயர் பதவியைப் பெற்ற முதல் சீக்கிய வீரர்!!

miltry

டெல்லியில் பிறந்த சீக்கியரான சிம்ரன்ப்ரீத் லம்பா கடந்த 2006 ஆம் ஆண்டில் தனது மேல்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.
2009 ஆம் ஆண்டு தொழிற்துறையில் பொறியியற்கல்வி முடித்தவுடன் அந்நாட்டு ராணுவத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தை லம்பா அளித்தார்.

சீக்கிய மத கோட்பாடுகளான அவரது தலைப் பாகை, நீண்ட தலைமுடி மற்றும் தாடி போன்றவை குறித்து அமெரிக்க ராணுவ அதிகாரிகள் ஒன்பது மாதம் ஆலோசனை செய்து அதன்பின்னர் லம்பாவைத் தேர்ந்தெடுத்தனர். அந்த வருடமே மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பயின்ற இரண்டு சீக்கிய அதிகாரிகள் அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிய அனுமதிக்கப்பட்டனர்.

அதனைக் கண்ட லம்பாவிற்குத் தானும் சாதாரண படைவீரர் என்ற நிலையிலிருந்து உயர்பதவியை அடையமுடியும் என்ற எண்ணம் தோன்றியது. ஆயினும், மதம் குறித்த அவரது ஆழ்ந்த நம்பிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அதன்பின்னர் பிறமொழிப் புலமை பெற்ற அயல்நாட்டவர்கள் என்ற சிறப்புப் பிரிவின் கீழ் அவர் தற்போது கார்ப்போரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்த லம்பா, மற்ற வீரர்களைப் போலவே தானும் ராணுவத்தின் அனைத்துக் கடமைகளையும் செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

கடந்த 30 வருடங்களில் அமெரிக்க ராணுவத்தில் உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சீக்கியர் என்ற பெருமையையும் லம்பா பெறுகின்றார். 29 வயதான லம்பா தற்போது அந்நாட்டு ராணுவத்தின் ஐந்தாம் நிலை உயர்பதவியை வகிக்கின்றார். தனது முயற்சி கடினமான ஒன்றாக இருந்தபோதிலும் மற்ற சீக்கியர்களுக்கு இது ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்

மருமகளை நிர்வாணமாக்கி, தலையை மொட்டையடித்த உயர் சாதி மாமனார், மாமியார்!!

tor

இந்திய, தானேவில் தங்களின் விருப்பத்திற்கு எதிராக தங்களின் மகனை திருமணம் செய்து கொண்ட 19 வயது இளம்பெண்ணை நிர்வாணமாக்கி தலையை மொட்டையடித்த மாமனார், மாமியார் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் உயர் சாதியைச் சேர்ந்த யோகேஷ் என்பவரை காதலித்தார். யோகேஷின் வீட்டில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் யோகேஷின் பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு அவர்கள் பிவான்டி தாலுகாவில் உள்ள பாலி கிராமத்தில் இருக்கும் அந்த பெண்ணின் பெற்றோரின் வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஓகஸ்ட் மாதம் 30ம் திகதி அந்த தம்பதி வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் யோகேஷின் குடும்பத்தார் அவர்களை வலுக்கட்டாயமாக மைதேவில் உள்ள தங்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு வீட்டு வாசலில் இளம் சோடியை அவர்கள் கட்டிப்போட்டனர். அவர்கள் அந்த பெண்ணை நிர்வாணமாக்கி, தலையை மொட்டயைடித்து தாக்கினர். இதை யோகேஷின் சகோதரர் ஒருவர் மொபைல்போனில் படம் எடுத்துவைத்து இதை யாரிடமும் கூறக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த மைதே கிராமத்து தலைவர் சந்தோஷ் பாட்டில் சம்பவ இடத்திற்கு வந்து இளம் சோடியை மீட்டு பாட்கா காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். யோகேஷை திருமணம் செய்ததால் தன்னை தனது மாமனார், மாமியார் நிர்வாணமாக்கி கொடுமைப்படுத்தியதாக அப்பெண் நேற்று புகார் கொடுத்தார்.

அவரது புகாரின் பேரில் யோகேஷின் பெற்றோர் மதுகர் பாட்டில், மால்டி பாட்டில் மற்றும் அவரின் அண்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விஸ்வரூபம் 2 படத்துக்கு எதிர்ப்பு வராது : கமல்!!

Actor Kamal Hassan meets director Ang Lee Stills

அறியாமை, அரசியல் போன்றவைதான் விஸ்வரூபத்துக்கு வந்த எதிர்ப்புகளுக்குக் காரணம், என்று நடிகர் கமல்ஹாஸன் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படத்தை எடுத்து, பெரும் தடைகளுக்குப் பிறகு வெளியிட்டார் கமல். அந்த தடைகள், எதிர்ப்புகளே அப்படத்துக்கு பெரும் விளம்பரங்களாகவும் அமைந்தன. இந்த நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிடும் முயற்சியில் உள்ளார் கமல்.

இப்படத்துக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் படத்தை டிடிஎச்சில் வெளியிடுவேன் என கமலும் தெரிவித்துள்ளார்.

விஸ்வரூபம் 2ம் பாகத்துக்கும் பெரிய எதிர்ப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கிறீர்களா என அவரிடம் சமீபத்தில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கமல், விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும்.

இந்த படம் பணத்தையும் பாராட்டையும் அள்ளித் தரும் என் நம்பிக்கை உள்ளது. விஸ்வரூபம் படத்தின் முதல் பாகத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அறியாமை, அரசியல், போன்ற காரணங்களால் அவை நிகழ்ந்தன.

அந்த அனுபவங்களில் இருந்து இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்த முறை சர்ச்சைகள் இருக்காது. அறிவுப்பூர்வமாக அணுகுவார்கள் என நம்புகிறேன் என்று கூறினார்.

திருமணமான பெண்கள் மெட்டி அணிவது ஏன் என்று தெரியுமா?

metti

பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது.

இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம். பெரும்பாலான திருமணமான தமிழ்ப் பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள். மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட.

பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால் அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது.

ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது. வெள்ளி ஒரு நல்ல கடத்தி என்பதால் பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது.

இராமயணத்தில் சீதையை இராவணன் கவர்ந்து சென்ற பொழுது இராமனுக்கு அடையாளமாய் சீதை தன் கால் மோதிரமான மெட்டியை (கணையாழியை) கழற்றி எறிந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அப்பொழுது இருந்தே பெண்கள் மெட்டி அணியும் பழக்கம் இருந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.

பேஸ்புக்கிலிருந்து காணாமற் போகும் தேடல் வசதி!!

facebook-who-can-look

உலகின் முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் தொடர்ச்சியாக பல்வேறு புதிய அம்சங்களை தனது பயனர்களுக்காக அறிமுகப்படுத்தி வந்தது.

இருந்தும் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு காரணங்களுக்காக சில அம்சங்களை நீக்கிவிடுவதுண்டு. இதன் ஒரு அங்கமாக கடந்த டிசம்பர் மாதம் நண்பர்களை தேடும்போது அவர்களின் புரபைல் பெயர்களை காட்டாதவாறு மாற்றம் செய்யும் வசதியை நிறுத்தியிருந்தது.

அதே போல தற்போது இந்த வசதியினை (Search Privacy Setting) முற்றிலுமாக நிறுத்தப்போவதாக கடந்த வியாழக்கிழமை பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.