கைவிரல்கள் இல்லாத சிறுமி : ஆனால் விருது அழகான கையெழுத்துக்காக!!

12

தலையெழுத்து சரியில்ல, நேரம் நல்லா இல்லை என்று வழக்கமான வாழ்க்கையை நகர்த்துவதற்கே சிலர் விதி மீது பழிபோடுவார்கள். ஆனால் தடைகள் பல இருப்பினும் தங்களுக்குள் ஓர் இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, தடைகளுக்கு அஞ்சாமல் எதிர் நீச்சல் போட்டு ஜெயிப்பார்கள். வெர்ஜீனியாவைச் சேர்ந்த அனையா எல்லிக் (Anaya Ellick) இந்த வகையைச் சேர்ந்தவர்தான்.

உடல் குறைபாட்டுடன் பிறந்த அனையா எல்லிக், தன் மன உறுதியை விடாமல், ஜெயித்துக் காட்டி, பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். மணிக்கட்டுக்குக் கீழே விரல்கள் இல்லாமல் பிறந்த அனையா, பிறரை எதிர்பார்க்காமல் தானாகவே தன் வேலைகளைச் செய்துகொள்ளப் பழகிக் கொண்டார்.

இரண்டு கைகளுக்கு நடுவே பேனாவை வைத்துக்கொண்டு எழுதப் பழகினார். கைகள் இரண்டும் நன்றாக இருப்பவர்களிலேயே, பலரது எழுத்துக்கள் படிக்கவே முடியாத அளவுக்கு கிறுக்கல்களாக இருக்கும். ஆனால் விரல்கள் இல்லாமல் எழுதிய அனையா எல்லிக்கின் அழகான கையெழுத்திற்காக, 2016ம் ஆண்டுக்கான நிக்கோலஸ் மாக்ஸிம் சிறப்பு விருது (Nicholas Maxim Special Award) கிடைத்துள்ளது அந்நாட்டவர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்கி இருக்கிறது.

வெர்ஜீனியாவில் உள்ள ‘க்ரீன்பேரியர் க்ரிஸ்டியன் அகடமியில் (Greenbrier Christian Academy) முதல் கிரேடு படித்துவருகிறார் அனையா. அழகான கையெழுத்துப் போட்டியை Zaner-Bloser என்ற கல்வி நிறுவனம், உடல் மற்றும் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு இடையே, ஆண்டுதோறும் நடத்திவருகிறது.

13

இந்த போட்டியில், முதல் வகுப்பு தொடங்கி 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இந்த ஆண்டு நடத்தப்பட்ட தேசிய அளவிலான கையெழுத்துப் போட்டியில், சுமார் 50 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் அனையாவின் முத்து முத்தான கையெழுத்தைக் கண்ட நடுவர்கள், ”இரண்டு கைகளும் இருப்பவர்கள்கூட இவ்வளவு அழகாக எழுதமாட்டார்கள்” என பிரமித்துப்போனார்கள்.

இதுகுறித்து அனையாவின் பெற்றோர்கள், ‘அனையா கைவிரல்கள் இல்லாமல் பிறந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தோம். கவலையோடு இருந்த நாங்கள், இவளது சுறுசுறுப்பைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். எல்லாவற்றையும் உடனே கற்றுக்கொள்கிறாள். டிரெஸ் போட்டுக்கொள்வது, ஷூவுக்கு லேஸ் கட்டிக்கொள்வது என எல்லாவற்றையும் தானாகவே செய்துகொண்டு பள்ளிக்கு ரெடி ஆகிவிடுகிறாள். பியானோ நன்றாக வாசிக்கிறாள். அழகான கையெழுத்துப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், முதல் பரிசாக 1,000 டாலர்கள் பரிசாகக் கிடைத்துள்ளது. தற்போது உலம் முழுவதிலும் இருந்து, அனையாவுக்கு பாராட்டுகள் குவிகின்றன” என்கின்றனர் பெருமிதத்துடன்.

வெற்றிபெற வேண்டும் என்கிற எண்ணம் எப்படித் தோன்றியது என கேட்டதற்கு, ” எனக்கு ரோல்மொடல் 30 வயது ஜெசிக்கா காக்ஸ். அமெரிக்காவைச் சேர்ந்த இவருக்கும் இரண்டு கைகள் இல்லை. ஆனாலும், தன்னுடைய விடா முயற்சியால் தற்போது விமானம், கார் ஓட்டுவது என்று எல்லா வேலைகளையும் கால்களாலேயே செய்வதைக் கண்டேன். நானும் அவரைப் போல எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டேன். இதுவே என் வெற்றிக்குக் காரணம்” என்கிறார், அனையா எல்லிக்.

எட்டாம் வகுப்பு படித்தவரின் ஆண்டு வருமானம் 290 கோடி : ஆச்சர்யப்படுத்தும் மனிதர்!!

3

ஒவ்வொரு மனுஷனுக்கும் படிப்பு முக்கியம் , படித்தவர்களால் மட்டும்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நினைத்தால் அது தவறு ” என்கிறார் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்து… இன்று ஆண்டுக்கு 290கோடி ரூபாய்க்கு மேல் பால் பொருள் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் ஈரோடு இளைஞர் சதீஷ் குமார்.

எப்படி சாத்தியமானது இது? அவரே சொல்கிறார் உற்சாகமாக….

”ஈரோட்டை அடுத்துள்ள தயிர்பாளையம்தான் என்னோட சொந்த ஊர். பரம்பரையாகவே விவசாயக் குடும்பம்தான். விவசாயத்துடன் சேர்த்து பால் பண்ணை ஒன்றை சிறிய அளவில் நடத்தி வந்தார் அப்பா.
பண்ணையில் உற்பத்தியாகும் பால் முழுவதையும் பெங்களூருவுக்கு அனுப்பி வந்தார்.

அதில் பெரிய அளவு லாபம் கிடைக்கவில்லை. மேலும், நாள் தோறும் 1000 ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டது. அதனால் அதை விடப் போவதாக அப்பா சொல்லிக்கொண்டு இருந்தார். பள்ளிக்கூடம் போய்கொண்டிருந்த எனக்கு எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க விருப்பம் இல்லை. விவசாயத்தின் மீதும் பெரிய ஆர்வமில்லை. வேறு ஏதாவது தொழில் செய்து முன்னேற வேண்டும் என்கிற பொறி மட்டும் மனதில் இருந்தது.

சரி அப்பா செய்யும் பால் தொழிலை தொடரலாம் என்று முடிவு செய்தேன். அதோடு நிற்காமல் எங்க பண்ணையில் இருந்து அனுப்பும் பாலை கொள்முதல் செய்ய வரும் பெங்களூரு வியாபாரியை போய் பார்த்தேன். அங்கு அவர், நாங்க அனுப்பும் பாலை நேரடியாக விற்பனை செய்யாமல், அதை மதிப்புக்கூட்டிய பால் பொருட்களாக மாற்றி விற்பனை செய்து வருவதை கண்டேன்.

2

அதில் குறிப்பாக, ‘பன்னீர்’ (Paneer ) எனப்படும் பாலாடைக்கட்டி தயாரித்து ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து நல்ல வருமானம் பார்த்து வருகிறார் என்பதை அறிந்து கொண்டேன். நாமும் அது போல் பன்னீர் தயாரித்து விற்பனை செய்தால் நாள் தோறும் ஏற்படும் 1000 ரூபாய் இழப்பை தவிர்த்து, கூடுதல் லாபம் பார்க்க முடியும் என முடிவு செய்து, அந்த பெங்களூரு வியாபாரியிடம் பன்னீர் தயாரிக்கும் தொழில் நுட்பத்தை சொல்லித்தருமாறு கேட்டேன்.

அவர் அதை கற்றுத்தர மறுத்து விட்டார். அதுக்காக நான் சோர்ந்து போகவில்லை. எப்படியாவது பனீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை கற்றாக வேண்டும் என்கிற ஆர்வம்தான் ஏற்பட்டது. பல இடங்களில் அலைந்து திரிந்து பன்னீர் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை ஓரளவு கற்றுக்கொண்டேன். காய்ச்சிய பாலில் வினிகர் சேர்த்து பன்னீர் தயாரிக்கலாம் என்கிற அடிப்படை தகவலை தெரிந்து கொண்டேன்.

அதை உடனே நடைமுறைப்படுத்தும் வேலையை தொடங்கினேன். அப்பா வீட்டில் இல்லாதபோது அந்த வேலையை செய்தேன். காய்ச்சிய பால் 300 லிட்டரை பன்னீர் தயாரிக்க பயன்படுத்தினேன். பன்னீருக்கு எப்படி வடிவம் கொடுப்பது என்பது தெரியாமல் எனக்கு தெரிந்த அளவில் அதை தயாரித்து முடித்தேன்.

இதை வந்து பார்த்த அப்பா, ‘300 லிட்டர் பால் வீணாயிடும் போல் இருக்கு’ என்றார். இல்லை…இது முதல் முயற்சிதான் தொடர்ந்து செய்யும் அடுத்த முயற்சிகளில் ஜெயித்து காட்டுகிறேன்’ என்று அவருக்கு நம்பிக்கை கொடுத்தேன். சரி சரி என்று சொல்லிப்போனார்.

நானாக முயன்று தயாரித்த பன்னீரை, ஏற்கனவே அறிமுகமான பெங்களூரு ஹோட்டல்கள் சிலவற்றுக்கு அனுப்பினேன். அதை வாங்கி விற்பனை செய்த ஹோட்டல்காரர்களும் சில ஆலோசனை சொன்னார்கள். அதையும் மேம்படுத்தி பன்னீர் தயாரித்து அனுப்பினேன். வாங்கி சாப்பிட்ட எல்லோருக்கும் டேஸ்ட் பிடித்துப்போனது. படிப்படியாக ஓர்டர்கள் வரத்தொடங்கின.

நிறைய ஓர்டர்கள் குவிந்ததால், எங்களின் சொந்தப் பண்ணையில் உற்பத்தியாகும் பால் போதாமல், வெளியில் இருந்தும் பால் கொள்முதல் செய்யத் தொடங்கினோம். பெரிய பெரிய ஹோட்டல்களுக்கு மட்டுமே பன்னீர் சப்ளை பண்ணிவந்த நாங்கள், எல்லா மக்களுக்கும் பன்னீர் போய் சேரவேண்டும் என்கிற நோக்கில், சில்லரை விற்பனையிலும் கால் பதிக்க முடிவு செய்தோம்.

அப்படி சில்லரை வியாபாரத்தில் இறங்கும்போது, அதுக்கு ஒரு ‘பிராண்ட் நேம்’ வைத்து மார்க்கெட் செய்தால், பிசினஸ் ஓஹோனு போகும் என எண்ணி, பால் சம்பந்தப்பட்ட பெயர் ஒன்றை தேடும் படலத்தில் இறங்கினேன். அப்படி கூகுளில் தேடும் பொழுது கிடைத்த பெயர்தான் ‘மில்கி மிஸ்ட்’. அந்த பெயரே நன்றாக இருந்ததால் அதையே பிராண்ட் நேமாக வைத்து சில்லரை விற்பனையை தொடங்கினோம். சில வருடங்கள் கழித்து சில்லரை விற்பனையை விரிவுபடுத்தும் விதமாக, 10 லட்சம் ரூபாய் வங்கிக் கடன் பெற்று மெஷின் வைத்து, பன்னீர் தயாரிக்க ஆரம்பித்தோம்.

தொடக்கத்தில் நன்றாக போய்க்கொண்டிருந்த வியாபாரத்தில், ஒரு கட்டத்தில் தேக்கம் ஏற்பட்டது. நண்பர் ஒருவரிடம் இது குறித்துபேசியபோது, ‘விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்றால் விளம்பரம் கொடுப்பது அவசியம்’ என்று ‘ஐடியா’ கொடுத்தார். அதே சமயம், ‘ நீங்க கடைக்கு கொடுக்கும் பன்னீர் எப்போதும் ஜில்லுனு ஃபிரஷா இருக்கவேண்டும். அதுக்கு முக்கியமான சில்லரை வியாபாரிகளுக்கு மினி ஃபிரிட்ஜ் வாங்கி கொடுங்கள்’ என்றும் மேல் ஆலோசனை சொன்னார்.

1

நண்பர் சொன்ன ஆலோசனைப்படி விளம்பரமும் கொடுத்தோம். மினி ஃபிரிட்ஜும் கொடுத்தோம். ஆனாலும், பனீர் வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏதும் இல்லை. காரணத்தை அறிய, கடை கடையாய் போய் ஆய்வு செய்தோம். அப்படி செய்ததில் ஒரு உண்மை புலப்பட்டது.
நாங்கள் கொடுத்த ‘ஃபிரிட்ஜ்’ அலமாரியில் பெரும்பகுதி இடத்தை வேறு உணவுப்பொருட்கள் அடைத்துக்கொண்டிருந்தன. மீதமுள்ள சிறிய இடத்தில் ஒரு மூலையில் மட்டும் எங்கள் தயாரிப்பான பன்னீர் வைக்கப்பட்டிருந்தது.

அப்படி செய்ய என்ன காரணம் என்று சில்லரை வியாபாரிகள் சிலரிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் சொன்ன பதில் எங்களை வேறு கோணத்தில் யோசிக்கவைத்தது.’பன்னீர்’ என்பது அன்றாடம் தேவைப்படும் அத்யாவசிய உணவுப்பொருள் கிடையாது. அதனால்தான் வேகமான விற்பனை நடக்கவில்லை என்றார்கள்.

சரி, அத்யாவசிய பால்பொருட்கள் என்ன என்பதை யோசித்தபோது, முதலில் வந்து நின்றது தயிர். மேம்படுத்தப்பட்ட தயிர் விற்பனையில் இறங்க முடிவெடுத்தோம். அதன் மூலப்பொருளான பாலை, பால் வியாபாரிகளிடம் லிட்டர் கணக்கில் கொள்முதல் செய்யத் தொடங்கினோம். ஆனால், கொஞ்ச நாளில் ஒன்றை புரிந்துகொண்டோம். பால் வியாபாரிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பால் சுத்தமானதாக இல்லை.

எனவே, தயிர் உற்பத்தி செய்ய தேவையான பாலை, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முடிவு செய்தோம். அதற்கு எங்களுக்கு தோதான கிராமங்கள் தோறும் பால் கொள்முதல் மையங்களை திறந்தோம். கொள்முதல் செய்யப்படும் பால், பதப்படுத்தப்படவேண்டியது முக்கியம். அதற்கு என ஐந்து பால்குளிரூட்டு நிலையங்களை தகுந்த இடங்களில் அமைத்தோம்.

தமிழ்நாடு முழுவதும் 35,000 கறவையாளர்கள் எங்கள் நிறுவனத்துடன் இணைந்துள்ளார்கள். தயிர் போக பால் பொருளான பட்டர் தயாரிப்பிலும் இறங்கினோம். அதைத்தொடர்ந்து 110 வகையான பால் பொருட்களை தயாரிக்க தொடங்கினோம். வியாபாரம் சூடு பிடித்தது.

இப்படியான சூழலில் இன்னொரு சவாலையும் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்கள் நிறுவனத்தின் மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து சில்லரை விற்பனையாளர்களுக்கு வேன் மூலம் கொண்டுசெல்லப்படும் பால் பொருட்கள், விரைவில் கெட்டுப்போவதாக கவலை தெரிவித்தார்கள் வியாபாரிகள் பலரும்.

அதனால், மொத்த விற்பனையாளர்களுக்கு குளிரூட்டப்பட்ட வாகனங்கள் கொடுத்தோம். தயாரிக்கும் அதே தரமுடன் பால் பொருட்கள், சில்லரை வியாபாரிகளை சென்றடைய ஏதுவாக அது அமைந்தது. நாளுக்குநாள் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. எல்லாத்தொழிலிலும் புதுப்புது தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு வருகிறது. அதை உடனுக்கு உடன் தொழிற்சாலைக்குள் கொண்டுவந்தால் மட்டுமே நாம் களத்தில் நிற்கமுடியும். தயாரிக்கும் உணவுப்பொருட்களை, சுத்தமாகவும் சுகாதாரமாகவும் கொடுக்கமுடியும். அதே நேரம் தரம்தான் மிகமுக்கியம். அதை முதல் நோக்கமாக வைத்து செயல்படுவதால்தான் தொடர் வளர்ச்சியில் உள்ளோம்.

இன்றைய திகதியில் எங்கள் தொழிற்சாலையில் 450 பேர் வேலை பார்க்கிறார்கள். 2007-08ம் ஆண்டுகளில் 14 கோடியாக இருந்த எங்கள் பால் பொருட்கள் வர்த்தகம், இன்றைய திகதியில் 290 கோடிரூபாய் என்று உயர்ந்திருக்கிறது. இந்த வெற்றிக்கு தொழில் மேல் வைத்திருக்கும் நேசம்தான் காரணம். லாபம் வருகிறது என்பதால் வேறு தொழில்களில் இறங்கலாம் என்கிற எண்ணம் என்னிடம் துளியும் இல்லை. வெற்றிகரமாக செய்துவரும் இந்த தொழிலை, எப்படி மேம்படுத்துவது என்கிற யோசனைதான் எனக்கு உள்ளது.

மனிதனுக்கு கல்வி என்பது அவசியம்தான். அது நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள பேருதவி புரிகிறது. அதற்கு மேலாக நாம் பெறும் அனுபவக் கல்விதான் நம்மை பக்குவப்படுத்தி நம்மை மேம்படுத்துகிறது. குறைவான படிப்பு உள்ளவர்கள் முன்னேற முடியாது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஏனெனில் எட்டாம் வகுப்பு மட்டுமே படித்த என்னிடம் இன்று நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் பணியாற்றுகிறார்கள். மொத்த சிந்தனையும் நாம் செய்கின்ற தொழில் மீது இருக்கவேண்டும். அதில் புதிய புதிய யுக்திகளை கையாள வேண்டும். அத்துடன் செய்யும் தொழிலில் ஈடுபாடும், பொறுமையும், மனம் தளராமையும் இருந்தால் நிச்சயம் சிகரங்களை தொடமுடியும். அதுக்கு நானே நல்லதோர் உதாரணம்” என்றார் பொங்கும் உற்சாகத்துடன்.

வவுனியா நொச்சிமோட்டையில் வாகன விபத்து!!

 
வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகே இன்று (29.05.2016) மதியம் 1.00 மணியளவில் வான் ஒன்று விபத்துக்குள்ளானது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

வவுனியாவிலிருந்து ஒமந்தை நோக்கி பயணித்த வான் இன்று மதியம் 1.00 மணியளவில் நொச்சிமோட்டை பாலத்தை கடக்க முற்ப்பட்ட வேளை வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்ப்படவில்லை
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3 4

ஒரு புகைப்படத்தால் ஹீரோவான கனடிய பொலிஸ்!!

Canada police

கனடாவில் பொலிஸ் ஒருவர் ஊனமுற்ற நபரோடு ரோட்டில் அமர்ந்து பேசியது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கனடாவின் Halifax பிராந்திய நகராட்சியை சேர்ந்த பொலிசான Shawn Currie என்பவர், தெருவோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.
அப்போது அந்த வழியாக இரண்டு கால்களையும் இழந்த நபர், அமர்ந்தபடியே கைசக்கரத்தினை பயன்படுத்தி ரோட்டோரமாக வந்துள்ளார், இதனைப்பார்த்த Shawn Currie சற்றும் யோசிக்காமல் அந்த ஊனமுற்ற நபருடன் தரையில் அமர்ந்து பேசியுள்ளார்.

இதனை சக பொலிஸ் ஒருவர் புகைப்படம் எடுத்து டுவிட்டரில் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை பார்த்த பலரும், மனித இதயம், இந்த புகைப்படம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணம், மனித நேயம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறதுஎன தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த புகைப்படத்தினை 100 பேர் ரீடுவிட் செய்துள்ளனர், இதுகுறித்து Currie கூறியதாவது, எங்கள் இருவருக்கும் ஒருவரையொருவர் நன்றாக தெரியும், அவருடன் அமர்ந்து தற்போது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பது குறித்து விசாரித்துக்கொண்டிருந்தேன்.

இது எங்களுக்குள் நடந்த ஒரு பொதுவான உரையாடல் தான், ஆனால் இதுதொடர்பான புகைப்படம் சமூகவலைதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார்.

Canada police - Copy

சீரற்ற வானிலையால் பிள்ளைகளுக்கிடையில் தொற்றுநோய்கள் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

sri-lanka-floodwaters

அதிக மழையுடனான வானிலைக் காரணமாக வௌ்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பிள்ளைகளுக்கிடையில் தொற்றுநோய்கள் பரவக்கூடிய அவதானம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வயிற்றோட்டம், வாந்தி மற்றும் சரும நோய்கள் என்பன பரவலாக ஏற்படக் கூடும் என சுகாதார அமைச்சின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

எனினும் உரிய சிகிச்சை மற்றும் முன்ஆயத்த நடவடிக்கைகளூடாக அவற்றை தவிர்த்துக் கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக காய்ச்சல், வயிற்றோட்டம், மலத்துடன் இரத்தக் கசிவு அல்லது சிறுநீர் கழிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் சிறார்களுக்கு ஏற்படுமாயின் உடனடியாக நீராகாரங்களை வழங்குமாறு விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கூறியுள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜீவனி, கஞ்சி, தோடம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை வழங்குமாறும், நோய் அறிகுறி குறைவடையாவிடின் உடனடியாக வைத்திசாலைக்கு கூட்டிச் சென்று சிகிச்சை பெற வேண்டும் எனவும் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

திரைப்படமாகின்றது சாவித்திரியின் வாழ்க்கை!!

Savithiri

பழம்பெரும் நடிகை நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உள்ளது.

1950, 60 மற்றும் 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்ட நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை நாக் அஷ்வின் என்பவர் திரைப்படமாக எடுக்கவுள்ளார். இவரது கதாபாத்திரத்தில் வித்யா பாலன் அல்லது நயன்தாரா ஆகிய இருவரில் ஒருவர் நடிப்பர் என தெரிவிக்கப்படுகிறது.

1952ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அடி எடுத்து வைத்த நடிகை சாவித்திரி தமிழ், கன்னடம், ஹிந்தி மொழிதிரைப் படங்களில் நடித்துள்ளார். 1950, 60, 70களில் திரையுலக ரசிகர்களை தனது நடிப்பால் கட்டிப்போட்டிருந்தவர் சாவித்ரி. திலகம் பூசினாற் போன்ற உடல்வாகுடன் இருந்த சாவித்ரி நடிப்பில் அசத்தியமையால் அவர் நடிகையர் திலகம் எனும் பட்டம் பெற்றார்.

முன்னணி நடிகையாக இருந்த சாவித்ரி காதல் மன்னன் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுக்கு தாயானார். சென்னையில் நீச்சல் குளத்துடன் பெரிய பங்களா கட்டிய முதல் நடிகை இவராவார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து நடித்து சம்பாதித்து செல்வச் சீமாட்டியாக வாழ்ந்த அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்து கடைசிக் காலத்தில் வறுமையில் வாடி இறந்தார்.

நாக் அஷ்வின் என்பவர் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் தெலுங்கில் திரைப்படமாக்குகிறார். திரைக்கதை எழுதும் வேலையை முடித்துள்ள அஷ்வின், ”இந்த திரைப்படம் இந்திய சினிமா கண்டிறாத திரைப்படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

முறிகண்டி வாகன விபத்தில் இருவர் படுகாயம்!!

Accident

யாழ் – கொழும்பு பிரதான வீதியின் முறிகண்டி பிரதேசத்தில் சிறிய ரக பிகப் வண்டியும் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. குறித்த விபத்து இன்று(29.05) காலை நடந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவர் முறிகண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்ட இடத்தை அண்மித்த பகுதிகளில் வாகன நெரிசல் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை முறிகண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற வானிலையால் ரம்புட்டான் பயிர்ச்செய்கை பாதிப்பு!!

rambutan

களனி ஆறு பெருக்கெடுத்தமையால் மல்வானை உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக ரம்புட்டான் பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரம்புட்டான் மரங்கள் நீரிழ் மூழ்கியமையால் காய்கள் பழுதடைந்துள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த முறை சிறந்த அறுவடையை எதிர்பார்த்த போதிலும் வௌ்ளம் காரணமாக அவை அழிவடைந்துள்ளதாகவும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ரம்புட்டான் செய்கையாளர்களுக்கான இழப்பீட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி சுப ஹீன்கெந்த தெரிவித்துள்ளார்.

3 பேரின் உயிரைக் காப்பாற்றிய மூளை சாவு அடைந்த மாணவி : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

Student

மும்பையில் வீதி விபத்தில் உயிரிழந்த மாணவி ஒருவர் சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு தேர்வில் கூட்டு சராசரி தர புள்ளி (சி.ஜி.பி.ஏ.) 8.6 பெற்று பெற்றோருக்கு ஆறுதல் அளித்துள்ளார்.

மும்பையில் கெஜல் பாண்டே (வயது 16) என்ற மாணவி கடந்த ஏப்ரல் மாதத்தில் தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார்.

அவர்களை முந்தி செல்ல முயன்ற கார் இடித்து விபத்து ஏற்படுத்தியதில் கெஜல் பாண்டே மூளை பாதிப்பு அடைந்துள்ளார். அதன்பின் அவர் மூளை சாவு அடைந்து விட்டார் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து அவரது உறுப்புகளை கொடையாக அளிக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதனால் 14 வயது குழந்தை உள்பட 3 பேர் உயிர் பிழைத்தனர்.

அந்த மாணவி விளையாட்டு, நடனம் மற்றும் பிற துறைகளிலும் சிறந்து விளங்கியுள்ளார். பிறந்த நாள் வருவதற்கு 10 நாட்களுக்கு முன் விபத்தில் பலியாகி உள்ளார். அவர் வர்த்தக படிப்பு எடுத்து சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் ஆக விரும்பினார். ஆனால் அது நடைபெறவில்லை என அவரது தந்தை சோகமுடன் கூறியுள்ளார்.

காதலியுடன் பூங்காவுக்குச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த கதி!!

Love

அமெரிக்காவில் காதலியுடன் பூங்காவுக்கு சென்ற இளைஞர் தேனீக்கள் கொட்டியதில் விஷம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் லூசியானாவை சேர்ந்தவர் அலெஸ் பெஸ்ட்லர் (23). இவர் தனது காதலி சான் யாவுடன் லூசியானாவில் மலைப்பகுதியில் உள்ள ஒரு பூங்காவுக்கு சென்று இருந்தார்.

அப்போது அங்கு இருந்த தேன் கூட்டில் இருந்த தேனீக்கள் திடீரென பறந்து வந்து பெஸ்ட்லரையும் அவரது காதலி சான்யாவையும் கொட்டியது. இதனால் மிரண்ட சான்யா அங்கிருந்து ஓட்டம் பிடித்து தப்பினார்.

ஆனால் பெஸ்ட்லர் தேனீக்களிடம் சிக்கி கொண்டார். அவரை தேனீக்கள் கூட்டம் உடல் முழுவதும் மொய்த்து கொடுக்குகளால் கொட்டித் தீர்த்தது.

இதற்கிடையே தேனீக்களிடம் இருந்து அவரை காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த வைத்தியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பெஸ்ட்லரும், அவரது காதலியும் தேனீக்களை கோபப்படுத்தவில்லை. இருந்தாலும் அவை கோபமடைந்து 1000 தடவைக்கு மேல் கொட்டியுள்ளன என வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

2 1/2 வயதுக் குழந்தையை துஷ்பிரயோகம் செய்த இளைஞன் கைது!!

Abuse

2 1/2 வயது ஆண் குழந்தையை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 17 வயதான இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, கல்பிடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுவனின் வீட்டுக்குச் சென்றிருந்த வேளையே குற்றத்தை இழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், சிறுவன் வைத்தியப் பரிசோதனைகளுக்காக கல்பிடி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்பிடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மண்ணில் மாபெரும் முத்தமிழ் விழா : தென்னிந்திய நடிகர்கள் வருகை!!

 
வன்னி குறோஸ் கலாச்சார பேரவை பெருமையுடன் நடாத்திய மாபெரும் முத்தமிழ் விழா நேற்று (28.05.2016) சனிக்கிழமை மாலை 2.30 மணியளவில் இருந்து நள்ளிரவு வரை புதுக்குடியிருப்பு நகரில் பாரம்பரிய கலாச்சார கலைஞர்களினால் சிறப்பாக நடைபெற்றது.

ஒரே மேடையில் வன்னியின் தெரிவு செய்யப்பட்ட பாரம்பரிய கலைப்படைப்புக்களின் சங்கமமாக காத்தவராயன் சிந்துநடைக்கூத்து, கோவலன் கூத்து, அரிச்சந்திர மயான காண்டம், பண்டாரவன்னியன், சமூக நாடகம் என்பன சிறப்பாக அரங்கேற்றப்பட்டது.

நிகழ்வுகளில் கலந்துகொண்ட பிரபல திரைப்பட நடிகர் நாசார் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கு முத்தமிழ் விழாவிற்காக வருகை தந்தமை மற்றும் தமிழ் மக்களைச் சந்திக்கக்கிடைத்தமை மகிழ்ச்சியளிப்பதாகவும், முத்தமிழ் விழாவின் நிகழ்வுகள் யாவும் சிறப்பாக நடைபெற்றதாகவும், கலந்துகொண்ட கலைஞர்கள், பொதுமக்கள், ஏற்பாட்டாளர்கள் என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும்,

இதேவேளை தென்னிந்திய குணச்சித்திர திரைப்பட நடிகர் மு.சண்முகராஜன் கருத்துத்தெரிவிக்கையில், இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டமையை முன்னிட்டு மிகவும் சந்தோஷமடைவதாகவும், இதுபோன்ற நிகழ்வுகளை நான் பார்க்கவில்லை. கலைஞர்கள் சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

இந்நிகழ்வுகள் வைத்திய கலாநிதியும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட இணைத் தலைவருமான சி.சிவமோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றதோடு, நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக நாசார் (பிரபல திரைப்பட நடிகர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் மற்றும் பாரம்பரிய நாட்டு கூத்து கலைஞர்), திரு.மு.சண்முகராசா (தென்னிந்திய குணச்சித்திர திரைப்பட நடிகர், நிகழ்நாடக மன்ற கூத்துபட்டடை நிறுவனர்),

இரா.சம்பந்தன் (பாராளுமன்ற உறுப்பினர், எதிர்க்கட்சித்தலைவர், தலைவர்-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு), சோ.மாவை சேனாதிராஜா (பாராளுமன்ற உறுப்பினர், தலைவர்-இலங்கை தமிழரசு கட்சி), திரு.எஸ்.இராமசுப்ரமணியன் (தலைவர் மற்றும் நிறைவேற்றுப் பணிப்பாளர் – ஆகாஷ் குறூப்), வடமாகாண சபையின் அமைச்சர்கள், உறுப்பினர்கள், அரச அதிபர், வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், சமூக அமைப்புக்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டதோடு சுமார் 8000 இற்கும் மேற்பட்டோர் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக ஊடகவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.

DSC_2364 DSC_2366 DSC_2381 DSC_2400 DSC_2401 DSC_2424 DSC_2425 DSC_2440 DSC_2459 DSC_2488 DSC_2535 DSC_2536 DSC_2573 DSC_2583 DSC_2592 DSC_2594 DSC_2600 DSC_2605

வவுனியா வருகைதந்த தென்னிந்திய நடிகர்கள்!!

 
இந்தியாவிலிருந்து வருகை தந்த தென்னிந்திய நடிகர் நாசார் மற்றும் சண்முகராஜன் நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் நடைபெற்ற மாபெரும் முத்தமிழ் விழாவின் பிரதம விருந்தினர்களாக கலந்து சிறப்பித்திருந்தனர்.

அத்துடன் அவர்கள் இன்றையதினம் வவுனியா நெல்லி ஸ்டார் ஹோட்டலுக்கு வருகை தந்திருந்தனர்.

1 2 3 4 5

வவுனியாவில் கஞ்சா செடிகள் மீட்பு : பொலிசார் அதிரடி நடவடிக்கை!!

 
வவுனியா உக்குளாங்குளத்தில் வீடு ஒன்றிலிருந்து கஞ்சா செடிகளை நேற்று (28.05.2016) மாலை 4.30 மணியளவில் வவுனியா பொலிசார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

கடந்த சில வாரங்களாக வவுனியா உக்குளாங்குளத்தில் மாடுகள் காணாமல் போயிருந்தன. இதனையடுத்து பிரதேச மக்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தன.
பிரதேச மக்கள் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

மாட்டுத் திருட்டுடன் தொடர்புடைய சந்தேக நபரை விசாரணை செய்த பொலிசார். சந்தேகத்தின் பெயரில் சந்தேக நபரின் வீட்டை பரீசோதனை மேற்கொண்டனர்.

இதன் போது வீட்டின் அறையிலிருந்து 4-6 அடி உயரமுடைய இரு கஞ்சா செடிகளை பொலிசார் கைப்பற்றினர்.

இவ் விடயம் தொடர்பான மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3 4

இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பஞ்சாயத்து தலைவர் : காட்டிக் கொடுத்த சிசிடிவி கமெரா!!

Capture

கர்நாடகாவில் பஞ்சாயத்து தலைவர் ஒருவர் பெண் ஊழியரை பாலியல் ரீதியாக தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவின் மாண்டியா பகுதியை சேர்ந்த பஞ்சாயத்தை தலைவர் சந்திரஹாசா (வயது 30).

இவர் நேற்று மாலை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளார்.இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளன.இந்நிலையில் குறித்த பெண் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இலவசமாக மின்சார இணைப்பு!!

electricity pylon

இலங்கை மின்சார சபையும் தனிநபர் மின் உற்பத்தியாளர்களும் இணைந்து 10 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்க தீர்மானித்துள்ளனர்.மின்வலு மின்சக்தி அமைச்சர் ரன்ஜித் சியம்பளாபிட்டியவின் பணிப்பின் பேரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள வீடுகளின் சேதங்கள் தொடர்பாக கணிப்பீடுகள் நடைபெற்று வருவதுடன் மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதற்கு இலங்கை தனியார் மின் உற்பத்தியாளர் நிறுவனம் 7 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு சுமையும் வழங்காமல் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட வேண்டுமென அமைச்சரின் வழிகாட்டலில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.