இணையதளம் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்க கோரி இந்தியா முழுவதும் மருந்துக் கடை உரிமையாளர்கள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன் 40 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை உணர்த்தும் வகையில் மருந்து பொருட்கள் இணையதளம் மூலம் விற்பனை செய்வதை தடுக்க கோரி இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் இன்று மருந்து கடைகள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மட்டும் சுமார் 40,000 மருந்து கடைகள் இன்று மூடப்பட்டிருக்கும் என தமிழ்நாடு மருந்து விற்பனையாளர் சங்க நிர்வாகம் கூறியுள்ளது. எனினும் மருந்து கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தாலும், பொது மக்கள் மருந்து கேட்டால் கடையை திறந்து அதனை விநியோகிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இணையதளம் மூலம் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் போதை மருந்துகள் மற்றும் கலாவதியான மருந்துகளின் நடமாட்டம் அதிகரிக்கும் ஆபத்து இருக்கும் என கூறப்படுகிறது.
இதனால் இணைய வணிகத்தை கண்டித்து இன்று நள்ளிரவு 12 மணி வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கிறது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலிலே திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடுவதை அறிகின்றோம்.
தனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை நன்கு தெரியும் என்பதோடு, இவரை நான் ஒரு சிறந்த சமூக சேவகியாக பார்த்திருக்கின்றேன். அங்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய மக்களின் பிரச்சினைகளில் இவர் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றார்.
இவர் ஜெர்மன் மொழியிலே (DEUTCH) ஆற்றல் மிக்கவர். இவர் போன்று மொழிப் புலமையுள்ளவர்கள் எங்கள் மத்தியிலே குறைவாகவே காணப்படுகின்றனர். இவரது மொழியாற்றல் காரணமாக ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் எங்களுடைய மக்களுக்குத் தேவையான உதவிகள் பலவற்றை செய்துகொண்டிருக்கின்றார்.
இலங்கையிலே வாழுகின்ற எங்களுடைய மக்களுக்காக இவர் மிகவும் கரிசனையுடன் சேவைசெய்து வருபவர். தேர்தலிலே இவருடைய வெற்றி இங்கு வாழுகின்ற தமிழர்களாக இருந்தாலும், புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களாக இருந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்தமட்டிலே ஒரு மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது.
எனவே, அங்கு வாக்குரிமை உள்ள அனைத்து மக்களும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்களுக்கு ஆதரவளித்து இவரைத் தெரிவு செய்வதன் மூலம் அங்கு வாழுகின்ற மக்களுக்கு மாத்திரமல்ல இங்கே வாழக்கூடிய மக்களுக்கும் பெருமை சேர்ப்பதோடு, தேவையானபோது சுவிஸ் நாட்டு அரசை எங்களுடைய பிரச்சினைகளில் அக்கறை கொள்ள வைக்கவும் அது உதவியாக இருக்கும்.
த.சித்தார்த்தன், பா.உ.,
(யாழ். மாவட்டம்)
13.10.2015.
வடக்கில் கண்ணி வெடி அகற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காக சுமார் 108 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது குறித்த ஒப்பந்தம் இன்று இலங்கையின் ஜப்பானுக்கான தூதரகத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் கன்னி வெடி அகற்றும் பணிகளுக்காக 2003ம் ஆண்டு முதல் 27.7 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீனாவின் உப வெளிவிவகார அமைச்சர் லீ சென்மின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு ஒரு வழமையான சந்திப்பு என முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக ‘தென் சீனா மோனிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகாரம் இழந்ததன் பின்னர் சீனத் தலைவர் ஒருவர் முதல் தடவையாக அவரை சந்தித்துள்ளமை விசேட அம்சமாகும்.
இலங்கைக்கும் சீனாவுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கான விசேட பிரதிநிதியாகவே அந்நாட்டின் உப வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இலங்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்புவதற்கு முன்பதாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்த லீ சென்மின் இலங்கை விஜயமானது வெற்றிகரமான விஜயமாக அமைந்ததாக கூறியிருந்தார். ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட பல தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியிருந்த சீன உப வெளிவிவகார அமைச்சர் மஹிந்த ராஜபக் ஷவுடனான சந்திப்பு குறித்து எதுவும் கூறவில்லை என் பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நீதியமைச்சர் அரசியல் கைதிகள் என்ற வகையில் சிறைகளில் யாருமில்லை. எல்லோருமே குற்றவாளிகள் தான் என்று கூறுவதை வன்மையாக கண்டிக்கிறோம். சகல அரசியல் கைதிகளுக்கும் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்கவேண்டும் என்று யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமாகிய மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
14 சிறைகளில் 217 கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்றுமுன்தினம் முதல் ஈடுபட்டுள்ளமை குறித்தும் இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவருமில்லை என்ற நீதியமைச்சர் விஜேதாஸவின் கருத்து தொடர்பாகவும் கேட்டபோதே மாவை சேனாதிராசா எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
நீதியமைச்சர் விஜேதாஸவின் கருத்து பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றது. சிறையிலிருக்கும் அனைத்து கைதிகளையும் விடுதலைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற பழைமையான கருத்தை நீதியமைச்சர் கொண்டிருக்கிறார். இது உண்மைக்கு புறம்பான நியாயமாகும்.
நீதியமைச்சரின் கூற்றுப்படி பார்த்தாலும் விடுதலைப் புலிகளோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று கருதினாலும் அது அரசியல் என்றே கருதப்பட வேண்டும். விடுதலைப்புலிகளை அழைத்து அரசாங்கமே பல்வேறு சமாதானப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளது. சர்வதேசமும் இதனை நடத்தியுள்ளது.
அப்படியிருக்கும் போது ஒரு குறிப்பிட்ட தொகுதி இளைஞர்களை குற்றவாளிகள் என்று கூறுவது பொருத்தமற்ற விடயமாகும்.
அக்காலத்தில் பொலிஸாருக்கும் இராணுவத்துக்கும் இருந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி வேண்டுமென்றே இந்த இளைஞர்கள் நீண்டகாலமாக சிறையில் அடைத்து வைத்திருப்பது மிகவும் கொடூரமானது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னும் இது நீடிப்பது அநீதியானது. ஜனாதிபதியும், பிரதமரும் சிறையில்வாடும் இளைஞர்கள் விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்.
ஜனாதிபதி ஒருவரால் மட்டுமே அந்த பொது மன்னிப்பு வழங்க முடியும். ஏலவே ஆயுதம் தாங்கிப் போராடிய ஜே.வி.பி.யினருக்கு ஆயிரம் ஆயிரமாக பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனபடியால் ஜனாதிபதி ஆட்சிபீடம் ஏறியது தமிழ், முஸ்லிம் மலையக மக்களின் வாக்குப்பலத்தினால் என்பதை நினைவில் கொண்டு அதிலும் வட, கிழக்கு மக்கள் குறித்த ஆட்சிமாற்றத்துக்கு காத்திரமான பங்களிப்பு செய்துள்ளார்கள் என்ற நன்றியுணர்வை மனதில் கொண்டு சிறையில் வாடும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறோம்.
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக பெண்கள் உட்பட சிறையில் அரசியல் கைதிகளாக வழக்கு விசாரணைகள் இல்லாமல் உயர்வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டும் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டவர்களுமாக 243 கைதிகள் 14 சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாம் பல முறை சந்தித்து உரையாடியுள்ளோம். அவர்களது விபரங்கள் எமக்குத் தரப்பட்டு முன்னைய அரசாங்கத்துடனும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியுடனும் மற்றும் சட்ட மா அதிபர் காரியாலயத்துடனும் பேசியுள்ளோம்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார் பில் வழக்கறிஞர்கள் சிறைச்சாலைகளுக்கு சென்று கைதிகளை விசாரணை செய்து மதிப்பீட்டறிக்கையொன்று அரசாங்கத்திடம் கையளித்ததையும் நாம் அறிவோம். இதுவிடயமாக சிறைக்கைதிகள் எத்தனையோ முறை பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். தற்பொழுது அந்த சிறைக் கைதிகள் தமது உயிரை பண யம் வைத்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். அவர்களின் இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பலமான ஆதரவை வழங்குகிறது.
ஆட்சிமாற்றத்துக்குப் பின்னுள்ள இந்த அரசாங்கம் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றதற்குப் பின்னும் நாங்கள் தலைவர் சம்பந்தன் தலைமையில் சென்று சிறையிலுள்ள கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் 20 வருடங்கள் கழிந்த நிலையில் அவர்களை சிறையில் வைத்திருப்பதற்கு எவ்வகையான நியாயமும் இல்லை.
நீதிமன்றம் இனி குற்றவாளிகளாக கண்டாலும் அவர்கள் 20 வருடத்துக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து விட்டார்கள். ஆகையால் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். குறிப்பாக சொல்லப் போனால் வழக்குகள் பதிவு செய்யப்படாமலே 20 வருடங்களுக்கு மேல் தமது வாழ்வை சிறையில் கழித்து விட்டார்கள். எக்குற்றமும் பதிவு செய்யப்படாமல் குற்றமற்றவர்கள் கூட விடுதலை செய்யப்படாமல் சிறையில் உள்ளனர். இப்படியிருக்கும் நிலையில் அவர்கள் தொடர்ந்தும் சிறையில் வாடு வது அநீதியாகும். மரணதண்டனை விதிக் கப்பட்டவர்கள் கூட 20 வருடம் கழிந்த பின் விடுவிக்கப்படுகிறார்கள்.
எனவே, தீர்ப்பை வழங்கி அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும். அல்லது பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என மாவை குறிப்பிட்டார்.
வெவ்வேறு பிரதேசங்களில் இரு சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதோடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பியோடியுள்ளார்.
பசறை கனரல்லை மற்றும் வெல்லவாய ஆகிய இருவேறு பிரதேசங்களில் பதினொருவயதே நிரம்பிய இரு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளனர். கனவரல்லையைச் சேர்ந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய 19 வயது நிரம்பிய இளைஞன் பசறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள அதே வேளை வெல்லவாயவைச் சேர்ந்த சிறுமி துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தில் இருவரை வெல்லவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மேற்படி இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு மேலும் ஒருவர் தேடப்பட்டு வருகிறார்.
இதேவேளை கனவரல்லையைச் சேர்ந்த இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கு இன்று நடவடிக்கை எடுத்திருந்தனர்.
கனவரெல்லையில் கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்க வந்த சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறவே பெற்றோர் மேற்படி சம்பவம் தொடர்பாக, பசறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இம்முறைப்பாட்டையடுத்து குறிப்பிட்ட இளைஞனை பசறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி, பசறை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். கைது செய்யப்பட்ட இளைஞனை பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய, பசறைப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
வெல்லவாயவில் வெல்லவாய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் பயிலும் பதினொரு வயது சிறுமி பாடசாலை விட்டு வீடு திரும்பும் வழியில் வழி மறிக்கப்பட்டு மூவரால் தினமும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார். இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து துரிதமாக செயற்பட்ட வெல்லவாய பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் சிறுமியை வெல்லவாய சிறுவர் நன்னடத்தைப் பிரிவிடம் ஒப்படைத்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு மற்றுமொரு சந்தேக நபரைத் தேடி வலை விரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியை வெல்லவாய வைத்தியசாலையில் வைத்து பரிசோதனைக்குட்படுத்திய பின்னர் மொனராகலை மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பாதுகாப்பு பராமரிப்பு நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேருக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மோட்டார் சைக்கிள் சாரதிகள் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய பொலிஸார் விதித்த தடைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இரு மோட்டார் சைக்கிள் சாரதிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதனையடுத்து இன்று குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதிய ஒழுக்கு விதிகளின் படி, பாதுகாப்பான தலைக்கவசங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச பிரதி சொலிஸ்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
இதன்படி விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை நவம்பர் 2ம் திகதி வரை நீடிப்பதாக அறிவித்துள்ளது.
நன்னீர் மீன்பிடியாளர்களை ஊக்குவிக்கும் செயல்த்திட்டத்தின் கீழ் வவுனியா குளத்தில் நன்னீர் மீன்குஞ்சுகளை வடக்கு மீன்பிடி அமைச்சர் வைப்பிலிட்டுள்ளார்.
வடக்குமாகாணத்தில் உள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களை வாழ்வாதாரத்தில் ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அமைவாக, ஏற்கனவே மாகாணத்தில் உள்ள பல நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு அவர்களது குளங்களில் நன்னீர் மீன்குஞ்சுகளை வைப்பிலிட்டுக்கொடுக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்ததே,
அதனடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் உள்ள வவுனியா குளத்தில் சுமார் 75,000 நன்னீர் மீன்குஞ்சுகளை வைப்பிலிடும் நிகழ்வு நேற்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எம்.பி.நடராஜா, அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சத்தியசீலன் மற்றும் அந்த குளத்தை சார்ந்த மீனவ சங்கங்கள் என்பன கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்தில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும்படி வினோதமான முறையில் உயிரியல் பாடம் எடுத்துள்ளார்.
நெதர்லாந்தின் க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் என்ற பள்ளியில், டெபி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது இளமையான யோசனையால் மாணவர்களின் மனதைத் தொட்டிருக்கின்றார்.
இவர் ஒரு நாள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மனித உடற்பாகங்கள் சம்பந்தப்பட்ட பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் இவருக்கு வித்தியாசமான ஒரு யோசனை தோன்றியுள்ளது.
அதாவது தனது நகரில் எலும்புக்கூடைப்போல வடிவமைக்கப்பட்ட ஆடைகளை பெண்கள் அணிந்துபோவதை, டெபி என்ற குறித்த ஆசிரியை அவ்வப்போது கவனித்திருக்கிறார்.
இதைப் பயன்படுத்தி தமது மாணவர்களுக்கு உயிரியல் பாடம் எடுக்க விரும்பிய டெபி, தனது இத்தகைய யோசனையை கல்லூரி அதிபரிடம் கூறி அனுமதியும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஒரு நாள் மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருக்கையில், திடீரென மேசை மேல் ஏறிநின்று கொண்டு தான் அணிந்திருந்த ஆடைகளை களைந்துள்ளார்.
அதிர்ச்சியுடன் அவரைக் கவனித்து வந்த மாணவர்கள் அந்த உடைக்குள் அவர் அணிந்திருந்த எலும்புக்கூடு மற்றும் உடல் உறுப்புகள் சார்ந்த உடைகளைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
இதன் பின்னர் தான் அணிந்திருந்த ஆடைகளில் வடிவமைக்கப்பட்ட பாகங்களை ஒவ்வொன்றாக, மாணவர்களுக்கு டெபி விளக்கியுள்ளார்.
இதனை வீடியோவாகப் பதிவு செய்து பள்ளி நிர்வாகம் தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது.
தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வயோதிபரின் மகளே அவரை கூட்டில் அடைத்து வைத்தமை தெரியவந்துள்ளது.
பின்னர் 73 வயதான அந்த முதியவர் மெனின்கின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பலகொல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையுடன் இயங்கும் அருளகம் சிறுவர் இல்லம் மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பவற்றின் சிறுவர் முதியோர் தின விழா எதிர் வரும் 16.10.2015 வெள்ளிகிழமையன்று பிற்பகல் 3.30 மணியளவில் எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்தில் இடம்பெறுகிறது .
மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ ப.சத்தியலிங்கம் அவர்கள்(வடமாகாண சுகாதார அமைச்சர்)கௌரவ விருந்தினராக திரு .ஜி.ரி.லிங்கநாதன்(வடமாகாண சபை உறுப்பினர்)சிறப்பு விருந்தினர்களாக திரு.கா. உதயராசா அவர்கள்(பிரதேச செயலாளர் வவுனியா) திரு .க.பரந்தாமன் அவர்கள்(பிரதேச செயலாளர் வவுனியா வடக்கு)DR.S.சிவதாஸ் அவர்கள்(மனநல சிகிச்சை பிரிவு பொது வைத்தியசாலை வவுனியா)திரு.திருமதி.சியாமலி திசாநாயக்க அவர்கள்(பொலிஸ் பொறுப்பதிகாரி-சிறுவர் பெண்கள் பிரிவு) ஆகியோரும் கலந்து கொள்கின்றனர் .
அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரப் பெண்ணொருவர் தனது கிளி இனத்தைச் சேர்ந்த 32 வளர்ப்புப் பறவைகளுக்கு 100,000 அமெரிக்க டொலர் பெறுமதியான சொத்தை எழுதிவைத்து விட்டு இறந்துள்ளார்.
நியூயோர்க் நகரைச் சேர்ந்த லெஸ்லி ஆன் மன்டெல் (69 வயது) என்ற பெண்ணே இவ்வாறு தனது வளர்ப்புப் பறவைகள் ஒவ்வொன்றினதும் பெயரைக் குறிப்பிட்டு அவற்றுக்கு பெருமளவு சொத்தை எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார்.
அத்துடன் அந்தப் பறவைகளுக்கு வெவ்வேறு தினங்களில் வழங்கப்பட வேண்டிய விசேட உணவுகள் தொடர்பான விபரங்களும் அந்த உயிலில் குறிப்பிடப்பட்டுள்ளன.
மேலும் அவர் மேற்படி பறவைகளுக்கான நிதியத்தின் காப்பாளராக தனது மகன் முறையான மத்தியூவை பெயர் குறிப்பிட்டுள்ளதுடன் தனது நாயான பொரஸ்றி, பூனையான கிகி என்பற்றைப் பராமரிக்கும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்துள்ளார். லெஸ்லியின் கணவர் பிரபல விஞ்ஞான புனைக்கதை எழுத்தா ளரான ஆர்தர் ஹெர்பேர்க் ஆவார்.
வவுனியா மாவட்டத்தில் செட்டிகுளம் பிரிவில் நேரியகுளம் வீரபுரம் பகுதியில் வசிக்கும் மிகவும் வறிய குடும்பங்களுக்கு வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா அவர்கள் தன்னுடைய குறித்து ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அக் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுயதொழில் மேற்க்கொள்வதற்காக பால்மாடுகளை வழங்கிவைத்தார்.
இன்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் திரு.ம.தியாகராசா மற்றும் செட்டிகுளம் பகுதி கால்நடைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.