வவுனியா ஏ9 வீதியில் அமைந்துள்ள நொச்சிமோட்டையில் சிறி உபாசகி அம்மையார் ஆன்மீக நிலையம் ஒன்று நேற்று (14.05) காலை 11.00 மணிக்கு வைபவ ரீதியாக சுவாமி சிறிபாலன் தலமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பூந்தோட்டம் சாந்தசோலையில் இயங்கிவந்த சிறி உபாசகி அம்மையார் ஆன்மீக நிலையம் நோச்சிமோட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஏ9 பாதையில் பயணிக்கும் பக்தர்கள் மற்றும் பயணிகள் இளைப்பாறும் அறையும் கழிவறைகளும் அமைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் இளைப்பாறி செல்ல முடியும் என சிறி உபாசகி அம்மையார் ஆன்மீக நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் சிறி உபாசகி அம்மையார் ஆன்மீக நிலையத்தால் நோச்சிமோட்டை பிரதேசத்தை சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளாக 25 குடும்பங்களுக்கு கோழிக்குஞ்சுகளும், 2 குடும்பங்களுக்கு தண்ணீர் இறைக்கும் இயந்திரம், 50 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் மற்றும் தெல்லிப்பளை ஆயுள்வேத வைத்தியசாலைக்கு 80000 ரூபா பெறுமதியான மருத்துவ உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் கா.உதயராசா கலந்துகொண்டு வாழ்வாதார உதவிகளையும் வழங்கிவைத்தார்.
மொரட்டுவ பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றத்தினரால் ‘சொற்கணை’ எனும் விவாதப் போட்டி ஒன்று புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் நேற்று (14.05.2016) முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களிடையே நடைபெற்றுள்ளது.
வெற்றி பெற்ற அணிக்கு எழுத்தாளர் ஜெயமோகன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், கவிஞர் பா.விஜய், கவிஞர் தாமரை, ஆகியோரது வாழ்த்துக் கையெழுத்துடனான அவர்களது புத்தகங்களே வழங்கப்பட்டன. தொடர்ந்து 25 மாவட்டங்களிலும் வெற்றி பெறும் அணிகளுக்கும் வழங்கப்படவுள்ளன.
அகில இலங்கை சொற்கணை ஒருங்கிணைப்பாளர் சிவகுமாரன் கௌதமனின் தலைமையில் முல்லை மாவட்ட சொற்கணை ஒழுங்கமைப்பாளர் சசிவர்மன் மற்றும் மொ.ப.க.கழக மாணவர்களினால் இப் போட்டி நிகழ்வுகள் நடைபெற்றன.
பிரதம விருந்தினராக முல்லை வலய கல்விப் பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன் கலந்திருந்ததோடு, அதிபர்களான செல்வநாயகம், இரவீந்திரன், ஏகாம்பரம் ஆகியோருடன் பல பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மொ.ப.க.கழக 40 வருட தமிழ் இலக்கிய செயற்பாடுகளுடன்.. அதன் அண்மைக்கால நிகழ்வுகள் வீடியோ மூலம் காட்சிப்படுத்தப்பட்டன.
வருடம் ஒன்றில்..
* சொற்கணை விவாதப் போட்டி
* ஒளிச்சுவடி ஒளிப்படப் போட்டி
* இலக்கிய கலை விழா
என்பவற்றை இவர்கள் நடாத்தி வருகின்றனர். இம்முறை அகில இலங்கை ரீதியாக இப் போட்டிகளை நடாத்த திட்டமிட்டுள்ளனர்.
சொற்கணை 2016 விவாதப் போட்டியில்..
* 1ம் இடம்
மு/வித்தியானந்தா கல்லூரி
* 2ம் இடம்
மு/ முல்லைத்தீவு ம.வி
* 3ம் இடம்
மு/ புதுக்குடியிருப்பு ம.க
ஆகிய அணிகள் மேற்படி சொற்கணை விவாதப் போட்டியில் (14.15.2016) வெற்றி பெற்றிருக்கின்றன.
இறுதிப் போட்டி தவிர சகல சுற்றுக்களும் காலையிலிருந்து மாலை வரை 4,5 அமர்வுகளாக மூடிய அரங்கில் தொடர்ச்சியாக நடைபெற்றிருந்தது.
மிகத் துடிப்புடன் செயற்பட்ட இளவல்கள் முடிவுகளை திரைச்சீலை மூலம் உடனுக்குடன் அறிவித்தபடி போட்டிகளை வேகமாக நடாத்தியிருந்தனர்.
மாணவர்களுக்கான மதிய உணவும் வழங்கப்பட்டதுடன்.. கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் நடுவர்களுக்கான நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தொடர்ச்சியாக இப்பேற்பட்ட அமைப்புக்களால், எமது மாவட்டத்தின் மாணவர்களிடையே கலை இலக்கியத்தை தூண்டக்கூடிய செயற்பாடுகள் நடைபெறுமானால்.. தேவையற்ற சிந்தனைகளிலிருந்து அவர்கள் விலகி இருக்கும் சூழல் தானாக உருவாகும் என்பதில் ஐயமில்லை.
நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதேவேளை, 1796 குடும்பங்களைச் சேர்ந்த 6735 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 43 குடும்பங்களைச் சேர்ந்த 172 பேர் சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்துள்ளதாகவும் 13 வீடுகள் பகுதியளவிலும் ஒரு வீடு முற்றாகவும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாத காரணத்தினால் நடிகர் சூர்யா மன்னிப்பு கோரியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் நடிகர் சூர்யா வாக்களிக்கவில்லை.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டில் இருப்பதால் முதல் முறையாக வாக்குரிமையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.
இது தனக்கு குற்ற உணர்ச்சியையும், வருத்தத்தையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு தற்போது தன்னால் அதனை செய்ய முடியாமல் போனதற்காக அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மக்கள்தங்களது வாக்குரிமையை நிறைவேற்ற வீடியோக்கள் மூலம் நடிகர் சூர்யா விழிப்புணர்வு எற்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடை மழை பெய்து வருகின்றது. இதன்படி இன்று காலை 8.30துடன் முடிவடைந்த 48 மணிநேரத்தில் 114.7 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, அம் மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கடும் மழை காரணமாக பல வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதோடு, இதனால் போக்குவரத்தும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. மேலும், அடை மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, நாவற்குடா உட்பட பல இடங்களில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
அத்துடன் இந்தப் பகுதிகளில் இன்றைய தினம் நடைபெறவிருந்த பல பொது நிகழ்வுகள் இரத்துச் செயயப்பட்டுள்ளன. தனியார் வகுப்புக்களும் நடைபெறவில்லை.
இதுஇவ்வாறு இருக்க மலையகத்தில் நேற்று (14.05) இரவு முதல் கன மழையுடன், பனிமூட்டமும் கூடிய சீரற்ற காலநிலையே காணப்படுகின்றது. அத்தோடு பனிமூட்டம் அதிகரித்து காணப்படுவதன் காரணமாக வாகன சாரதிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
அத்துடன், பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக ஹட்டன் – கொழும்பு பிரதான வீதி மற்றும் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் பனிமூட்டம் காணப்படுவதன் காரணமாக இவ் வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகளை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்தோடு பெய்த மழை காரணமாக ஹட்டன் – தும்புருகிரிய வீதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் மண்மேட்டுடன் கூடிய கட்டிடம் சரிந்து விழுந்ததில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை.
எனினும் இதில் பாதிக்கப்பட்ட நான்கு பேரை வேறு இடங்களுக்கு செல்லுமாறு கிராம சேவகர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒடியல் மா – 1/2 கிலோ
மீன் – 1 கிலோ (வகை வகையான சிறு மீன்கள். முள் குறைந்த மீன்களாக இருப்பது நல்லது)
நண்டு – 6 துண்டுகள் (இவை கூட மிகச் சிறிய நண்டுகளாக இருந்தால் நல்லது)
இறால் – 1/4 கிலோ
சின்ன சின்ன கணவாய்கள்.
நெத்தலி மீன் கருவாடு 100 கிராம்
பயிற்றங்காய் – 250 கிராம் (1 அங்குல நீள துண்டுகள்)
பலாக்கொட்டைகள் – 25 (கோது நீக்கி பாதியாக வெட்டியது)
அரிசி – 50 கிராம்
செத்தல் மிளகாய் – 15 அரைத்தது
பழப்புளி – 100 கிராம்
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒடியல் மாவை ஒரு சிரு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் விட்டு ஊறவிடவும். நீரில் மிதக்கும் தும்புகளை அகற்றி மாவை நன்றாக நீரில் கரைக்கவும். 2மணி நேரமாவது ஒடியல் மா ஊற வேண்டும். செத்தல் மிளகாய் எனப்படும் காய்ந்த மிளகாயை நீர் தெளித்து அம்மியில் நன்றாக விழுது போல் அரைக்கவும். காரம் அதிகமாக இருக்க வேண்டுமானல் 3 அல்லது 4 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். பழப் புளியை ஒரு சிறிய பாத்திரத்தில் நீர் விட்டு அதிகம் நீர்த்தன்மையில்லாமல் கரைத்து வைக்கவும்.
இன்னொரு பெரிய பாத்திரத்தில் சரியான அளவு நீர் விட்டு கொதிக்க வைக்கவும். (கூழில் நிறைய பொருட்கள் போடுவதால் அவை நன்றாக வேகுமளவுக்கு தண்ணீர் அதிகமாய் இருக்க வேண்டும். அதே போல் பாத்திரமும் பெரிதாக இருந்தால் தான் பொருட்கள் அடி பிடிக்காமல் பதமாக இருக்கும்.) அதனுள் கழுவிய அரிசி, பயற்றங்காய், பலாக்கொட்டைகள், மீன்துண்டுகள்,மீன்தலைகள், நண்டு, இறால்,நெத்தலி கருவாடு, கீரை ஆகியவற்றை போட்டு நன்றாக அவிய விடவும்.
நன்றாக அவிந்ததும் ஒடியல் மா (நீரை வடித்துவிட்டு கரைசலான ஒடியல் மாவை மட்டும் எடுக்கவும்.) அரைத்து வைத்துள்ள மிளகாய் விழுது, கரைத்த புளி என்பவற்றைப் போட்டு கலந்து சுவைக்கேற்ப உப்புச் சேர்த்து குறைந்த நெருப்பில் வைத்து கூழ் தடிப்பானதும் சூடாக பரிமாறவும்.
உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும். கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேசக் கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்கக் கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம், கூழின் காரத் தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.
நம்மைப் படைத்த கடவுளால் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும், ஒரே உருவத்தில் நம்முடன் இருக்க முடியாது என்பதால், தாயை அவர் படைத்ததாக ஒரு பழமொழி உண்டு. அத்தகைய தாயை மதித்து நேசிக்காதவர்கள் வாழ்க்கையை நேசிக்கத் தெரியாதவர்கள் என்றுதான் கூறவேண்டும்.
தாய்ப்பாசத்திற்கு நிகராக வேறு எதையும் சொல்ல முடியாது. பலவீனமாக உள்ள எண்ணற்ற நேரங்களில் நம் வாழ்வில் அவள் துணையாக இருக்கிறாள். குடும்பத்தின் மீது அதிக அக்கறை செலுத்தும் தாய், தன்னுடைய சொந்த தேவைகள் எதையும் நினைப்பதில்லை.
தாயால் ஒரே நேரத்தில் தோழியாகவும் ஆசிரியராகவும் இருக்க முடியும். அத்தகைய மேன்மை மிக்க தாய்மார்களிடம் இருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம் உள்ளன.
பொறுமையின் மதிப்பு..
உங்கள் குழந்தை பருவத்தை மீண்டும் நினைத்து பாருங்கள். பள்ளிப் பருவத்தில் உங்கள் வீட்டுப் பாடங்கள் செய்வதற்கு உதவி செய்யும்போது, உங்கள் மீது அம்மா ஒருபோதும் எரிச்சல் அடைந்தது இல்லை என்பது நினைவில் இருக்கிறதா? நீங்கள் இளமைப் பருவத்தில் பிடிவாதம் செய்தபோது அதனை அன்னை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. நீங்கள் அவளுடன் வாதிடும்போது கூட, உங்கள் மனம் புண்படும்படி அவள் எதையுமே செய்ததில்லை.
கருணையின் முக்கியத்துவம்..
நண்பர்கள், எதிரிகள், நாய்கள், பூனைகள் மற்றும் வீட்டில் உள்ள எல்லோருக்கும் உதவ வேண்டும் என்று தாய்மார்கள் நினைப்பதுண்டு. ஒரு தாயின் கருணை வீட்டில் அனைவரிடத்திலும் பரவலாக இருக்கும். இதனை தனது வீட்டிற்கு வரும் யாராக இருந்தாலும் அவள் உபசரிக்கும் பக்குவத்தில் புரிந்துகொள்ளலாம். நம்மைவிட துர்பாக்கியசாலிகள் மீது கருணை காட்ட வேண்டும் என்பதை நமக்கு தனது செயல்களின் மூலம் உணர்த்தியவள் ஒரு தாயைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்.
சுயநலமின்மை எனும் பெருங்குணம் ஒரு தாய்க்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. தங்களது குடும்பத்தினரின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவதில் எந்த மறுசிந்தனைக்கும் அவர்கள் இடமளிப்பதில்லை.
பேஸ்புக்கில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட உணர்வுகளை தெரிவிக்க உதவும் ரியாக்சன்களை பயனர்கள் பயன்படுத்த வேண்டாம் என பெல்ஜியம் பொலிசார் எச்சரித்துள்ளனர்.
பேஸ்புக்கில் லைக் பட்டன் இருப்பது போல் டிஸ்லைக் பட்டன் இருக்க வேண்டும் என பயனர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து, கடந்த பெப்ரவரி மாதம் பேஸ்புக் நிறுவனம் கோபம், சிரிப்பு, சோகம், ஆச்சர்யம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக பட்டன்களை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், பெல்ஜியம் பொலிசார் அதனை பயன்படுத்த வேண்டாம் என பயனர்களை எச்சரித்துள்ளனர்.இது தொடர்பாக பெல்ஜியம் பொலிசார் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், பேஸ்புக் ஏன் வெறும் 6 உணர்வுகளை மட்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏனெனில், பேஸ்புக்கில் வரும் பதிவுகளுக்கு நாம் இடும் உணர்வுகளை வைத்து நம்மை பற்றி அறிந்து கொள்ளும் பேஸ்புக், நம்மை வகைப்படுத்திக் கொண்டு நமக்கேற்ற விளம்பரங்களை வெளியிட்டு லாபம் ஈட்டுகிறது.
இதன் மூலம் உங்கள் மனநிலையை அறிந்து கொள்ளும் அவர்கள் மார்க்கெட்டிங் செய்வது மேலும் எளிதாகுகிறது. எனவே உங்களுடைய தனியுரிமையை பாதுகாக்க விரும்பினால், அதனை பயன்படுத்துவதை பற்றி சிந்தியுங்கள் என எச்சரித்துள்ளனர்.
மும்பை விமான நிலையத்தில் ஜேர்மனியின் லுப்தான்சா விமானம் தரையிறங்கிய போது விமானத்தின் டயர் வெடித்த சம்பவத்தில் அதில் இருந்த 163 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ஜேர்மன் தேசிய விமான நிறுவனமான லுப்தான்சா நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஒன்று 163 பயணிகளுடன் நேற்று முன் தினம் இரவு மும்பைக்கு வந்தது.
அப்போது விமானம் தரையிறங்கும் போது விமானத்தின் 4 டயர்கள் வெடித்தன. ஆனாலும் சாமர்த்தியமாக செயல்பட்ட விமானி விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சரியான இடத்தில் நிறுத்தினார்.
இதில் விமானத்தில் இருந்த 163 பயணிகளும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விபத்து நடந்த ஓடுபாதையை பயன்படுத்த முடியாததால், பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இந்த சம்பவத்தால் மும்பையில் இருந்து முனிச் நகருக்கு நேற்று புறப்பட்டுச் செல்லக்கூடிய லுப்தான்சா விமானமும் ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதுதொடர்பில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் அடிமைப்பட்டு கிடக்கும் தமிழ் இனம் எழுச்சிபெறுவதற்கு மாற்று அரசியலை உருவாக்கவேண்டிய காலக்கட்டம் ஏற்பட்டுள்ளது.
இனம், மொழி, கலை இலக்கியம்,பண்பாடு, சிதைக் கப்பட்டுள்ளது. பாரம்பரிய வேளாண்மை முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது.
நம் கண்முன்னே கொத்துகொத்தாகலட்சக்கணக்கான ஈழத் தமிழ் உறவுகள்கொன்று குவிக்கப்பட்டனர். அதனை கேட்பதற்குகூட நாதியில்லாமல் இருக்கிறோம்.
தாய் திருநாட்டில் நிலம்,காட்டு வளம், கனிமவளம் ஆகிய அனைத்தையும் காவுகொடுத்து நிற்கிறோம். சொந்த நிலத்தில் வந்தவரை வாழவைத்தது சரிதான். ஆளவைத்து அடிமைப்பட்டு கிடந்ததாலேயே இன்று உரிமைகளை இழந்து நிற்கிறோம்.
கடந்த 50 ஆண்டு காலம் ஆண்ட ஆட்சியாளர்களால் கச்சத்தீவை பறி கொடுத்தோம், முல்லைப் பெரியாறு, காவிரி நதி நீர் பிரச்சினையில் நமது உரிமைகளை இழந்தோம்.
அணு உலை, மீத்தேன், கெயில் எரிவாயு திட்டங்களால் பாதிப்புகளையும், துன்பங்களையும் அனுபவித்து வருகிறோம். துயரங்களும், துன்பங்களும், நம்மைசுற்றிசுற்றியே துரத்திக் கொண்டிருக்கின்றன.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று பேசியவர்கள், எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் என்கிற நிலையை ஏற்படுத்திவிட்டனர். தாய் மொழியை மறந்த இனம், உலக வரலாற்றில் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.
அதனைமறந்துஅக்கரையின்றி நாம் இருக்கிறோம். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இனமான தமிழ்இனம்,50 ஆண்டுகளாக அடிமைப்பட்டு கிடக்கிறது.
தமிழர் மீட்சியே தமிழர் எழுச்சிஎன்பதுதேவனேய பாவாணரின் சொல். இதுபற்றி யாரும் சிந்திப்பதே இல்லை.
இதனால் இன்று தமிழன் 5–க்கும், 10–க்கும் அரிசிக்கும் கையேந்திநிற்கிறான்.இந்த இழி நிலையை மாற்றவேண்டும். லஞ்சம், ஊழல், மதுவைகொண்டு வந்தவர்களே இன்றுஅதனை ஒழிப்போம் என்கிறார்கள்.
இது தமிழினத்தின் வளர்ச்சிக்கு பேராபத்து.பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் லஞ்சம், ஊழல் என்கிற பேச்சே இல்லாமல்இருந்தது.
ஆனால் இன்று அப்படியா இருக்கிறது.எல்லா திசைகளிலும் லஞ்சமும்ஊழலும்புரையோடிக் கிடக்கிறது.இதுபோன்ற ஒரு சூழலில் அரசியல் விடுதலைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிஉள்ளது.
அதிகாரம் மிக வலிமையானது. துன்பபூட்டுகளுக்கான சாவி ஆட்சி அதிகாரமேஎன்று அண்ணல் அம்பேத்கர் கூறுவார்.
யானை வலிமை மிக்க மிருகம்.ஆனால் அது தனது வலிமைதெரியாமல் மண்டியிட்டுமற்றவர்களைமுதுகில் ஏற்றிக் கொள்வது போலவலிமைமிக்க இந்த இனம்வந்தவர்களையெல்லாம் தனது முதுகில் ஏற்றி அடிமைப்பட்டு கிடப்பதாகதெய்வதிருமகனார் முத்து ராமலிங்க தேவர் கூறுவார்.
இதனை புரிந்து தமிழர் அரசை நிறுவநாம் பாடுபடவேண்டும்.ஆட்சிக்குவந்தால் அதை செய்வோம், இதைசெய்வோம் என்று கூறுபவர்கள் 50 ஆண்டுகளாகசெய்யாதது ஏன்?
இத்தனை ஆண்டுகளாக எதையும் செய்யாதவர்கள் இதற்கு மேலா செய்யப்போகிறார்கள்?
தமிழ் இனம் இன்னுமா இதனை நம்ப வேண்டும். இன்னும் எத்தனை காலம்நம்மை ஏமாற்றிக் கொண்டே இருப்பார்கள்.தன்மானத்தை இழந்து தமிழன் வாழ்வது தலைகுனிவாக உள்ளது. தமிழர்களாகிய நாம்அனைவருமேசிந்தித்து வாக்களிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
தமிழக அரசியலைமாற்றி அமைக்க இதுவே நமக்கான வாய்ப்பு.இதனை நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
எனது தாய் தமிழ் உறவுகளே,தாய்மார்களே படித்த இளைஞர்களே உழைக்கும்வர்க்கமே,இனத்தின் விடுதலைக்காக சிந்தித்து வாக்களியங்கள்,. நீங்கள்செலுத்தப்போகும் ஒவ்வொரு வாக்கும் உங்களது எதிர்கால வாழ்க்கை என்பதை மனதில்பதித்து இந்த தேர்தலில் செயல்படுங்கள்.
தன்னை உருக்கி வெளிச்சம் தரும்தியாகத்தின் அடையாளமாக திகழும் இரட்டை மெழுகுவர்த்திசின்னத்தில் நாம் தமிழாய் இணைந்து அனைவரும் வாக்களிக்க வேண்டுஎன்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் ரோமங்கள் வளர்ந்துள்ளன. பிதி அக்தர் எனும் இந்த சிறுமி ஓநாய் நோய் என கூறப்படும் விசித்திர நோயால் அவதிப்பட்டு வருகின்றார்.
பிறக்கும்போதே இவரது முகத்தைச் சுற்றி ரோமங்கள் வளர்ந்து காணப்பட்டது. பின்னர் உடல் முழுவதும் முடி வளர ஆரம்பித்துள்ளது.
குழந்தை வளர்ந்தால் இந்தக் குறைபாடு சரியாகிவிடும் என பெற்றோர் நினைத்துள்ளனர். ஆனால், பிதி அக்தர் வளர வளர அவருடன் ரோமங்களும் உடல் முழுதும் வளரத் தொடங்கியது.
அத்துடன் அவரது ஊனும் வளர்ந்து வீங்கிக் காணப்பட்டது. இதனால் அந்த சிறுமி தன்னுடைய உடலை முழுவதுமாக மூடிக்கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்.
அவரது தந்தைக்கு வருமானம் அதிகம் இல்லாததால் தொடர்ந்து மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் அம்மா கூறுகையில்,
‘‘அவள் பிறக்கும்போது கடவுள் கொடுத்த வரம் என்று நினைத்தோம். ஆனால், ஒவ்வொரு நாளும் வலியுடன் வாழும் எனது குழந்தையை நீண்ட காலம் என்னால் பார்க்க முடியாது’’ என்றார்.
உலகத்தில் நான்கு அல்லது ஐந்து பேர்தான் இதுபோன்ற விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என சிறுமிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பழைய WhatsAppஐ மேம்படுத்திக் கொண்டு உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மாற்றுங்கள் என்று ஒரு தகவல் பரவி வருகிறது.
இணையத்தில் தகவல்களை திருடும் ஹேக்கர்கள் பல முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது அவர்கள்‘WhatsApp Gold’ என்னும் முறை மூலம் WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடும் முயற்சியில் இறங்கி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் ’WhatsApp Gold’ தற்போது அனைராலும் பயன்படுத்த முடியும் என்ற தகவலோடு ஒரு மெசேஜ் WhatsAppல் வேகமாக பரவி வருகிறது.
உங்களது WhatsAppஐ ‘WhatsApp Gold’ ஆக மேம்படுத்திக் கொள்ள ஒரு இணையத்தளமும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த இணையதளம் செயல்படவில்லை.
இதனால் இது WhatsApp பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்களின் திருடும் முயற்சியாக கருதப்படுகிறது. எனவே உங்களது நண்பர்களும் உங்களுக்கு இந்த மெசேஜை அனுப்பினால் அவதானமாக இருந்து கொள்ளுங்கள்.
கமல்ஹாசன் நடிக்கவுள்ள அடுத்த படமான சபாஷ் நாயுடு படத்தில் அவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் மகளாக நடிக்கவுள்ளார். இளைய மகள் அக்ஷராஹாசன் உதவி இயக்குனராக பணிபுரியவுள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக ஹொலிவூட் நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளராம். மனு நாராஜன் என்ற நடிகரையே ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக நடிக்க கமல் தேர்வு செய்துள்ளார். இவர் ஒரு அமெரிக்க வாழ் இந்தியர் மட்டுமின்றி ‘Good Night Good Morning’, ‘Wall Street’ உள்பட ஒருசில ஹொலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை 16ஆம் திகதி முதல் அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ராஜீவ்குமார் இயக்கவுள்ளார்
ரயில் பாதைகளில் நடந்து செல்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாளை முதல் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் பாதைகளில் நடந்து செல்பவர்களினால் ஏற்படும் உயிராபத்து கடந்த காலங்களில் அதிரித்து வருகின்றன.
இதேவேளை, ரயில் பயணங்களின்போது அதற்கான பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு நாளை முதல் 3000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தற்போது, 1500 ரூபாவாக காணப்படும் அபராதத் தொகையை 3000 ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள்தோறும் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.