அதிர்ச்சியூட்டும் இந்த வீடியோவில் வானத்தில் பறந்து செல்லும் விமானம் ஒன்றை மறைவு பகுதியில் இருந்து குர்து போராளி ஒருவர் சுட்டு வீழ்த்துகிறார்.
அந்த வீடியோவில் துருக்கி அரசுக்கு சொந்தமான AH-1W SuperCobra விமானம் ஒன்று அங்குள்ள மலைபிரதேசம் ஒன்றில் பறந்து செல்கிறது.
ஆனால் அந்த விமானத்தை தாக்கி அழிக்க போதுமான ஆயுதத்தை தாங்கி நின்ற குர்து போராளி அதை சுட்டு வீழ்த்த தயாராகிறான்.
இதனையடுத்து விமானத்தை குறிவைத்து அந்த குர்து போராளி சுடுகிறான். பெரும் சத்தமுடன் வெடித்துக்கிளம்பிய அந்த வெடிகுண்டு விமானத்தை வெடித்துச் சிதறடிக்கிறது.
இந்த வீடியோ தற்போது தனியார் செய்தி ஊடகம் ஒன்றில் வெளியாகி பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகின்றது.
பிரித்தானியாவில் டொமினோ பீட்சா ஊழியர் மீது புகார் தெரிவித்த வாடிக்கையாளரை வீடு தேடி வந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட போல் வில்லியம் என்பவர் இதுகுறித்து தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் டொமினோ ஊழியரால் தாக்கப்பட்டுள்ள படத்தையும் பதிவேற்றியுள்ளார்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த டொமினோஸ் நிறுவனம், தற்போது இந்த விவகாரம் பொலிஸ் விசாரணையில் இருப்பதாகவும், மேற்கொண்டு தகவல்கள் எதையும் வெளியிட இயலாது எனவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்பட்ட நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ள அந்த நிறுவனம், விசாரணை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் இந்த விவகாரம் தொடர்பாக அளிக்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அதிக தொலைப்பேசி அழைப்புகள் வந்துள்ளதை அடுத்து டெவன் பகுதி பொலிசார் கருத்து கூறவும் மறுத்துள்ளனர்.
வாடிக்கையாளர் போல் வில்லியம் தாம் ஒடர் செய்த பீட்சாவில் தூவப்பட்டிருக்கும் உணவுப்பொருட்கள் குறைவாக இருந்துள்ளதை சுட்டிக்காட்டி அந்த ஊழியர் மீது புகார் அளித்ததே இந்த விவகாரத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
வவுனியா புளியங்குளம், சின்னப்பூவரசங்குளம் அருள்மிகு மண்டபத்து பிள்ளையார் ஆலய புனராவர்த்தன பிரதிஸ்டா மகா கும்பாபிஷேகம் நாளை மறுதினம் (18.05.2016) நடைபெறவுள்ளது.
இன்று (16.05.216) கிரிகைகள் ஆரம்பமாகி நாளை (17.05.2016) எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று நாளை மறுதினம் (18.05.2016) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
போரினால் பாதிப்படைந்த இவ்வாலயத்தின் மூல மூர்த்தி இடப்பெயர்வின் போது காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
பக்தர்கள் தம்மால் முடிந்த பொருளுதவியையோ, பணவுதவியையோ வழங்குவதன் மூலம் யுத்தத்தில் பாதிப்படைந்த இவ்வாலயத்தை மீண்டும் மிளிரச்செய்ய உதவுமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.
வவுனியா கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் வேண்டுகோளிற்கிணங்க தமிழ் தேசிய இளைஞர் கழகத்தினால் கிராமங்கள் தோறும் இளைஞர் கழகங்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் மூலமான ஒருதொகை நிதியுதவி நேற்று(15.05.2016) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட தலைமைக்காரியாலயத்தில் வைத்து அன்பளிப்பு செய்யப்பட்டது.
தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவர் சு.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில் சுப்பர் ஸ்டார் இளைஞர் கழகத்தின் கடினப் பந்து துடுப்பாட்ட அணிக்கான நிதியுதவியினை புளொட் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இன் நிகழ்வில் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும் , வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய க.சந்திரகுலசிங்கம்(மோகன்), சுப்பர் ஸ்டார் இளைஞர் கழகத்தின் செயலாளர் சி.தர்மசீலன், கழகத்தின் ஆலோசகர்களான ர.பிரதீபன், த.தியாகு, சுப்பர் ஸ்டார் கழகத்தின் கடினப் பந்து துடுப்பாட்ட அணியின் தலைவர் எஸ்.புனிதகுமார் (பாஸ்கரன்) ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்டவர்களுக்கு மரணம் ஒரு முடிவு. ஆனால் உயிருடன் இருக்கும் அவர்களது இனிய உறவுகளுக்கு அதுவே துயரத்தின் ஊற்று. கொல்லப்பட்டவர்கள் பற்றிய துன்பச் சுமையையும் அவ்வாறு கொல்லப்பட்டோர்கள் விட்டுச் சென்றுள்ள அவர்களுக்குரிய குடும்பச் சுமையையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலையில் அவர்களது இனிய உறவினர்களின் இடர்கள் உள்ளன.
சுமாராக 1,50,000க்கும் மேல் பெரும் தொகையில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் அது சமூக கட்டமைப்பில் பாரிய குலைவையும் பெரும் இடைவெளியையும் ஏற்படுத்தியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட இப்பெருந்தொகையான மக்களின் பெரும்பாலானோர் சிறுவர்களும், குழந்தைகளும், பெண்களுமாவர். பெண்களின் கையிலேயே பிள்ளைகளின் பாதுகாப்பு இருப்பது இயல்பு. ஆனால் பிள்ளைகள் பதுங்கு குழிகளுள் ஆகக்கூடியது 20 நிமிடத்திற்கு மேல் இருக்கமாட்டார்கள்.
அதுவும் சிறிய பதுங்கு குழிகளுள் அதன் கொள்ளவைவிடவும் அதிகமானோர் பதுங்குவதால் கரியமில வாயு வேகமாக அப்பதுங்கு குழிகளை நிரப்ப சிறுவர்கள் அதனால் இலகுவில் பாதிப்புற்று தலைவலிக்கு உள்ளாகி பதுங்கு குழிகளைவிட்டு சிறிது நேரத்திலேயே வெளியேறுவர். அப்போது பிள்ளைகளின் பாதுகாப்பிற்காக பெண்கள் கூடவே வெளியேறிவிடுவர்.
வெளியேறிய பிள்ளைகள் அங்கிங்காய் ஓடும் போது அவர்கள் எறிகணை தாக்குதலுக்கு இலக்காகுவர். அப்போது குறிப்பாக பெண்கள் பிள்ளைகளை நோக்கி ஓடும் போது பிள்ளைகளும் பெண்களும் எறிகணை வீச்சிற்கு சிக்குண்டு மாழ்வது இயல்பாகவே நிகழ்ந்தன. இதனால் பெண்களும், சிறுவர்களுமே அதிகம் மாண்டனர் என்பது உண்மை.
ஆசியாவிலேயே கருவில் இருந்து கல்லறைவரை ஒருவரின் விபரக் கோவையை பெரிதும் பதிவுசெய்து வைத்திருக்கும் நாடு இலங்கை என்ற பெருமை பேசப்படுவதுண்டு. அப்படியென்றால் அப்பதிவேடுகளின் துணைகொண்டு மேற்படி கொல்லப்பட்ட அனைவரின் விபரங்களை அரசினால் இலகுவில் திரட்டி வெளியிட முடியும். ஆனால் அதற்கு இந்த அரசு தயாரில்லை என்பது வேதனைக்குரியது.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும் முள்ளிவாய்க்கால் பற்றிய அனைத்து அநீதிகளும் களையப்படும் என்றும் அவ்வாறு மக்களைக் கொன்றவர்கள் மீது விசாரணை நடத்தி கண்டிக்கப்படுவார்கள் என்றும் பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தமிழ் மக்களின் வாக்குக்களால் பதவிக்கு வந்தது இந்த அரசாங்கம். ஆனால் அவ்வாறு பதவிக்கு வந்ததும் அதனால் நன்மை அடைந்தது தமிழ் மக்களை பாதித்த தரப்பினரே தவிர தமிழ் மக்கள் அல்ல.
நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் நடந்தது என்ன?
• அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்படவில்லை.
• அரசிடம் சரணடைந்தும், அரசால் கைது செய்யப்பட்டும் இருந்தோரில் காணமல்போகச் செய்யப்பட்ட 17400 பேரில் எவரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தைப்பொங்கல் தினத்தன்று அறிவித்துவிட்டார்.
• போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணை என்பது இராஜதந்திர சூழ்ச்சி வலைகளினால் மூடிக் கட்டப்பட்டுவிட்டது,
• அரசியல் தீர்வு பற்றிய விடயம் இலவு காத்த கிளியின் கதையாக காட்சியளிக்கிறது.
• அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவர் என்பதற்குப் பதிலாக ஏற்கனவே விடுதலையாகியிருந்த முன்னாள் போராளிகள் மீண்டும் கைது செய்யப்படும் நிலையே இன்று காணப்படுகிறது.
மேற்படி ஒன்றரை வருட காலத்தில் மக்களிடம் இராணுவத்தால் 20 வருடங்களுக்கு முன் பறிக்கப்பட்டிருந்த குடியிருப்பு மற்றும் தோட்டக் காணிகளில் சிறிதளவு பகுதி அவர்களது வீடுகள், கிணறுகள் என்பன முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் வெறும் காணித்துண்டுகள் மட்டும் திருப்பி கையளிக்கப்பட்டதைத் தவிர ஒன்றரை ஆண்டுகளில் தமிழருக்கு வேறெதுவும் நிகழவில்லை.
இந்நிலையில் தமிழ் மக்கள் மத்தியில் இயல்பாகவே அரசாங்கத்தின் மீது கோபம் எழுந்துள்ள சூழலில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் நிகழ்வதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கின. ஒரு குறைந்தபட்ச ஜனநாயக சூழலில் அத்தகைய எழுச்சிகள் ஏற்பட முடியும் என்று அரசு கணக்குப் போட்டுள்ளதால் அத்தகைய எழுச்சிகளைத் தடுப்பதற்கான எழுச்சி எதிர்ப்புத் தந்திரமாக பயங்கரவாத பூதத்தைக் காட்டி விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை கைதுசெய்யும் படலம் ஆரம்பமாகியுள்ளது.
அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய நிலையில் அதற்கு எதிராக எழக்கூடிய மக்கள் எழுச்சிகளை தடுப்பதற்கான பலிகடாக்களாக விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை கைது செய்கிறது. இது போலீஸ், புலனாய்வு அரசை பலப்படுத்தி மக்கள் போராட்டத்தை தடுப்பதற்கான ஒரு தந்திரமாகும்.
முள்ளிவாய்க்காலில் படுகொலைக்கு உள்ளான தமிழ் மக்கள் பற்றி அரசுக்கு எந்த கவலையும் கிடையாது. எந்தவித அனுதாபச் செய்தியையும் வெளியிடக்கூடிய அளவிற்கு சிங்கள மக்களின் மத்தியில் இருந்து நீதிமான்கள் யாரையும் காணமுடியவில்லை.
90,000 இளம் விதவைகள், அங்கவீனம் உற்றோர், பிள்ளைகளை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், வாழ்வின் அனைத்து கட்டமைப்புக்களும் அழிக்கப்பட்ட நிலை, சமூக கட்டமைப்பு குலைந்து போயுள்ள நிலை, குடும்பத்திற்கு சோறு போடும் குடும்ப உழைப்பாளி கொல்லப்பட்ட நிலையென பேரழிவுக்கு உள்ளான தமிழ்ச் சமூகத்தில் பெரும் வெற்றிடங்கள் நிலவும் போது அரசாங்கத்தின் நடப்பாண்டு வரவு-செலவு திட்டத்தில் இதற்காக நிதிகள் ஒதுக்கப்படவில்லை.
முள்ளிவாய்க்கால் 2009, மே-18 அவலத்தைவிடவும் அதன் விளைவாக பின்பு அதிகரித்துச் செல்லும் தொடர் துயரத்தின் அளவு மிகப் பெரியது. எனவே இப்போதைய இந்த மனித அவலத்தை முள்ளிவாய்க்கால் 2009, மே-18 அவலத்தைவிடவும் பெரிதானதென கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த வடுவையும், துயரத்தையும் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். வரலாற்றுச் சக்கரத்தில் இது சுழன்று பல புதிய புதிய பிறப்புக்களைக் கொண்டுவரும்.
ஆனால் அதுவரை இந்த மக்களுக்கு ஆறுதல் கூற யாரும் இல்லை. மாறாக அநீதியை மூடி மறைக்கவே ஆயிரம் கரங்கள் உள்ளன. ஆயிரம் கரங்கள் மறைத்து நின்றாலும் ஓர் ஆதவன் மறைவதில்லை என்பதுபோல ஒருநாள் தமக்கான உரிமையும், நீதியும் வென்றெடுக்கப்படும் என்ற ஆறுதலைத் தவிர மக்களுக்கு ஆறுதல் வேறெதுவும் இல்லை.
படுகொலைக்குள்ளான எமது இனிய உறவுகளுக்கு நெஞ்சார அஞ்சலி கூறுவதுடன் அவர்தம் இனிய உறவினர்களுக்கு ஆறுதலைக் கூறுவதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் உள்ளோம் என்ற துயரை இத்துயர் தோய்ந்த நினைவுநாளில் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
ந.சிவசக்தி ஆனந்தன்,
பாராளுமன்ற உறுப்பினர்,
வன்னி மாவட்டம்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு.
இன்று காலை 5.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி கட்டுநாயக்க பகுதியில் பதிவாகியுள்ளது. 260.02 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கட்டுநாயக்க பகுதியில் பதிவாகியுள்ளது.
கொழும்பில் 232.4 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், திருணேமலையில் 182.04 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், மன்னாரில் 173.09 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இரத்மலானையில் 170.08 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், இரத்தினப்புரியில் 131.01 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டில் மின்னல் தாக்குதல்களுக்கு இலக்காகி பத்து பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவைரயில் பத்து பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இடி மின்னல் தாக்குதல்கள் ஏற்படக் கூடுமெனவும், மக்கள் இது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வற் வரி 15 வீதத்தினால் உயர்த்தப்பட்ட போதிலும் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட மாட்டாது என புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் ஏ.பீ.ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
ரயில் கட்டணங்களில் மாற்றமில்லை. ஏதேனும் காரணங்களுக்காக ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட வேண்டுமாயின் அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
இதுவரையில் அவ்வாறு ஒர் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
ரயில் பயணங்களுக்காக செலவிடப்படும் பணத்தில் 50 வீதமான பணம் எரிபொருளுக்காக செலவிடப்படுகின்றது. எரிபொருள் விலைகள் குறைவடைந்த காரணத்தினால் செலவுகள் குறைவாகவே காணப்படுகின்றன.
ரயில் திணைக்களம் தற்போது வருடாந்தம் 6000 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 3 விமானங்கள், வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்குவதற்கு இருந்த மூன்று விமானங்கள் மத்தள மற்றும் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டன என்று விமான நிலையத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்கவில் அதிகூடிய, மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காலி மாவட்டம், கரந்தெனிய பிரதேசத்தில் தந்தை ஒருவரின் வீட்டை மகள் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
தந்தை சிறிய பழைய வீட்டில் வசித்து வருவதனை கௌரவக் குறைவாக கருதிய மகள் தந்தை வீட்டில் இல்லாத போது வீட்டை டோசர் கொண்டு தரை மட்டமாக்கியுள்ளார். கரந்தெனிய, பஹல மானன என்னும் பிரதேசத்தில் அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மகள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் மகளுக்கு வீடு அமைத்துக் கொள்ள தந்தை காணியை மகளின் பெயரில் எழுதி, ஒரு பகுதி காணியில் சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார்.
குறித்த மகள், தந்தை வழங்கிய காணியில் அதி சொகுசு அழகிய வீடு ஒன்றை நிர்மானித்துள்ளார். தந்தையின் பழைய சிறிய வீட்டினால் தமது ஆடம்பர வீட்டின் அழகு கெடுவதனால், தந்தையின் வீட்டை இடித்துவிட மகள் திட்டமிட்டார்.
தந்தை வீட்டில் இல்லாத போது அவரது உடமைகள், உடைகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் சிறிய வீட்டில் இருந்த நிலையில் புல்டோசர் ஒன்றை தருவித்து அந்த வீட்டை தரைமட்டமாக்கியுள்ளார்.
வீடு திரும்பிய தந்தை இதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.இது குறித்து மகளிடம் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்,
சிறிய பழைய வீடு தமது வீட்டின் அழகை பாதிப்பதாகவும் அதனால் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியதாகவும் மகள் பதிலளித்துள்ளார்.
இதனால் சமாதானம் அடையாத தந்தை, இது குறித்து கரந்தெனிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தந்தையை தமது வீட்டில் வந்து குடியேறுமாறு மகள் கோரியுள்ளார். எனினும் அந்தக் கோரிக்கையை குறித்த தந்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
மன்னார் மதவாச்சி வீதியில் சிறுநாவற்குளம் சந்தியில் கைதிகளை ஏற்றிச் செல்லும் பொலிஸ் வாகனம் விபத்துக்குள்ளாகி 8 கைதிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்களில் 5 பேர் வவுனியா வைத்தியசாலையிலும், 3 பேர் மன்னார் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் இருந்து சிறைக்கைதிகளை ஏற்றிக்கொண்டு வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேரூந்தே விபத்திற்குள்ளாகியுள்ளது.
மன்னாரில் இருந்து கைதிகளை ஏற்றிக்கொண்டு இன்று(15.05) மாலை வவுனியா சிறைச்சாலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த குறித்த பேரூந்து மன்னார்-மதவாச்சி பிரதான வீதி சிறுநாவற்குளம் சந்தியில் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்கு உள்ளாகியது.
தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையின் காரணமாக குறித்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அப்பகுதியில் கூடி நின்ற மக்களுடன் கலந்துரையாடியதோடு, விபத்து குறித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
வவுனியா வேப்பங்குளம் இந்து அன்பக செல்வி.சரண்யாவின் “கருவறை நோக்கி” நூல் வெளியீட்டு விழா அன்பகத்தின் நிர்வாகி சிவச்செல்வி கு.ஜெயராணி தலைமையில் இன்று(15.05.2016) நடைபெற்றது.
இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், காதர் மஸ்தான், கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், அந்தணர் ஒன்றியத் தலைவர் ஜெயந்திநாதக் குருக்கள், பிரபாகரக் குருக்கள், தமிழ்மணி அகளங்கன், வர்த்தக சங்கத் தலைவர் திரு.ராசலிங்கம், சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத் தலைவர் சேனாதிராஜா உட்பட பிரதேச முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கார்த்தி அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை பற்றி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
கார்த்தி தற்போது காஷ்மோரா படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகிகளாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனிஷா யாதவ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் விவேக் இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நடித்துள்ளார். கோகுல் இயக்கி வரும் இப்படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புக்கு பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மணிரத்னம் படத்திற்கு முன்பே சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் இதுகுறித்து கார்த்தி தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கார்த்தி நடித்து வரும் காஷ்மோரா படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் முடிவடையவுள்ளதாகவும், அதன் பின்னர் அவர் மணிரத்னம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறியிருக்கிறார்கள். மேலும் வேறு எந்த படத்திலும் நடிக்க இதுவரை ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்றும் கூறியுள்ளார்கள்.
தினமும் அப்பிள் சாப்பிடுவதால் எராளமான நன்மைகள் உண்டு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்பிளில் நிறைய சத்துகள் உள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
அப்பிளைத் தோலுடன் சாப்பிடுவது தான் நல்லது. தோலில்தான் அதிகம் அன்டி-அக்ஸிடண்ட்டுகள் அதிகம் உள்ளன என்று எல்லாம் பலரும் சொல்லுவார்வகள். ஆனால் இந்த காணோளியை பாருங்கள்.
கடைகளில் வாங்கும் அப்பிளில் சுடுநீரை ஊற்றுவதால் கடைசியில் ஒரு அதிர்ச்சி விடயம் இருக்கின்றது அது என்னவென்று நீங்களே பாருங்கள். இம்மாதிரியான அப்பிள் சாப்பிடுவதால் புற்று நோய் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டி தெல்தெனியாவில் 88 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான 30 வயது இளைஞன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கண்டி நகரில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆறாம் திகதி 88 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த இளைஞன் ஒருவர், 88 வயது நிறைந்த மூதாட்டி என்றுகூட பார்க்காமல் அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.
டிகிரி குமரிஹாமி என்ற 5 திருமணமான பிள்ளைகளின் தாயான இவருக்கு 2 பெண் பிள்ளைகளும் 3 ஆண் பிள்ளைகளும் உள்ளனர். இவர்களில் 2 ஆண் பிள்ளைகள் பாதுகாப்புப் படைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களாவர்.
இச் சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அந்த இளைஞன் இச்சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவாகி விட்டாராம். உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி, கண்டியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
ஆனால் கடந்த 8ம் திகதி அந்த மூதாட்டி உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்த பொலிசார் குற்றவாளியை நேற்று கைது செய்தனர்.
இச் செய்தியை இலங்கை ஆங்கல ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளதுடன், இந்திய ஊடகங்களும் இச் செய்தியை இன்று வெளியிட்டுள்ளன.