வவுனியா நெளுக்குளம் அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய மஹோற்சவப் பெருவிழா 2016 நேற்று (12.05.2016) வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
10 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறவுள்ள திருவிழாவில் தினமும் சிறப்புப் பூஜைகளின் பின்னர் முருகப் பெருமான் வள்ளி சமேதராக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கவுள்ளார்.
10 நாள் திருவிழாவில் முதலாம் நாளான நேற்று முருகப் பெருமான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் உலா வந்து பதர்களுக்கு அருள்புரிந்தார்.
தினமும் நடைபெறும் சிறப்புப் பூஜைகளில் கலந்து சிறப்பிக்குமாறு ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளரான சஞ்சய் பாங்கரை, அந்த அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அவமரியாதை செய்ததுடன் வேலை விட்டு நீக்கிவிடுவேன் என மிரட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஒரு ஓட்டம் வித்தியாசத்தில் தோற்று போனது.
இதனால் படுடென்ஷனான ப்ரீத்தி ஜிந்தா பயிற்சியாளர் சஞ்சய் பாங்கரிடம் சரமாரியாக வாக்குவாதம் செய்துள்ளார்.
வீரர்கள் முன்னிலையில் கடுமையாக திட்டியதுடன் வேலையை விட்டு நீக்கி விடுவேன் என மிரட்டியதாகவும் தெரிகிறது.
பயிற்சியாளரின் செயல்பாடே தோல்விக்கு காரணம் என கூறியதுடன், நான்கு எழுத்தில் கெட்ட வார்த்தை கூறி அவமானப்படுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என ப்ரீத்தி ஜிந்தாவும், சஞ்சய் பாங்கரும் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரான்ஸ் நாட்டில் இளம்பெண் ஒருவர் தன்னை பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் நாக்கை இரண்டாக கடித்து துப்பிவிட்டு தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரான்ஸில் உள்ள Toulouse நகருக்கு அருகில் Purpan என்ற பகுதியில் 19 வயதான இளம்பெண் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.
நேற்றைய தினம் வெளியே சென்றுருந்த அந்த இளம்பெண் மாலை நேரத்தில் தனது வீட்டிற்கு நடைப்பயணமாக சென்றுள்ளார். அப்போது, 24 வயதான இளைஞன் ஒருவர் அந்த இளம்பெண்ணிற்கு தெரியாமல் அவரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பிறகு தனது அடுக்குமாடி குடியிருப்பை அடைந்த பெண், மேல்தளத்திற்கு செல்வதற்காக அங்குள்ள ‘லிஃப்ட்டில்’ ஏறியுள்ளார். பெண்ணை தொடர்ந்து வந்த இளைஞரும் லிஃப்ட்டில் கண் இமைக்கும் நேரத்தில் நுழைந்துள்ளார்.
பெண் தனியாக இருக்கிறார் என்பதை உணர்ந்த அந்த இளைஞர் கண நேரமும் சிந்திக்காமல் பெண் மீது பாய்ந்துள்ளார். நடப்பதை உணர்ந்த பெண் தன்னுடைய முழு பலத்தையும் திரட்டி இளைஞரின் பிடியில் இருந்து தப்ப முயன்றுள்ளார்.
ஆனால், இளைஞரின் பலத்தை எதிர்க்கொள்ள முடியாத பெண் ‘இனி தனது பலத்தால் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது’ என நினைத்து அவனது விருப்பத்திற்கு இணங்குவது போல் நாடகமாடியுள்ளார்.
உற்சாகமடைந்த இளைஞன் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன் முத்தம் கொடுத்துள்ளார்.
இது தான் தப்பிக்க சரியான தருணம் என தீர்மானித்த பெண், தனது பல முழுவதையும் திரட்டி வாலிபரின் நாக்கை பற்களால் பலமாக கடித்து இரண்டாக துண்டாக்கியுள்ளார். கொடூரமான வலியால் துடித்த இளைஞன் லிஃப்ட் நின்றதும் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து புகார் பெற்று பொலிசார் லிஃப்ட்டில் சோதனை செய்தபோது, அங்கு இளைஞரின் துண்டிக்கப்பட்ட பாதி நாக்கு இருந்ததை கண்டு அதனை எடுத்து மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், பாதி நாக்குடன் தப்பியுள்ள நபர் நிச்சயமாக அருகில் உள்ள ஏதாவது ஒரு மருத்துவமனைக்கு செல்வார் என்பதால் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு மருத்துவமனைக்கும் ரகசிய தகவல் அளித்துள்ளனர்.
பொலிசார் எதிர்ப்பார்த்தது போல் பாதி நாக்குடன் மருத்துவமனை ஒன்றிக்கு சென்ற அந்த இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.
தற்போது இளைஞர் மீது பாலியல் பலாத்கார முயற்சி வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இளைஞரின் பலத்தை தனது புத்தியை பயன்படுத்தி தப்பித்த இளம்பெண்ணின் துணிச்சலை பொலிசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான 9 ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்கப் போவதாக அமுலாக்கத் துறை அறிவித்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் 9,600 கோடி கடன் வாங்கி, அதைத் திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா தற்போது பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளார். அவரை இந்தியா வரவழைக்கவும், கடனை திரும்பச் செலுத்த வைக்கவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு உரிய பலன் கிடைக்கவில்லை.
இந்த சூழலில் இந்தியாவில் உள்ள அவரது அசையா சொத்துகள் மற்றும் பங்குகளை முடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து அமலாக்கத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மல்லையாவுக்குச் சொந்தமான பங்களாக்கள், விலை உயர்ந்த கார்கள், வங்கிக் கணக்குகள் ஆகியவற்றின் மதிப்புகள் ஏற்கெனவே கணக்கிடப்பட்டுள்ளன.
இதை தவிர, உள்நாட்டில் அவருக்குச் சொந்தமாக உள்ள அசையா சொத்துக்கள் மற்றும் பங்குகள் தற்போது மதிப்படப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு 9,000 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றை முடக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றார்.
இதனிடையே, மல்லையாவுக்குச் சொந்தமான ஜெட் விமானங்களை ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் வரும் 29 மற்றும் 30ம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அவரது கடன் நிலுவையில் 535 கோடியை ஈடுகட்டும் வகையில், அந்த விமானங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் செம்மரம் கடத்தியதாக கூறி சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களை குறித்து ஏன் தமிழக அரசு வருந்தவில்லை, உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஏன் நிவாரணம் வழங்கவில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சீமான் பேசுகையில், சென்னை போரூரில் குளத்துக்குள்ளே அடுக்குமாடி கட்டிடம் கட்டினான், சரிந்து விழுந்தது 60 பேர் உயிரிழந்தனர்.
60 பேரும் தெலுங்கன், ஒருவர் கூட தமிழன் கிடையாது. உயிரிழந்த 60 பேருக்கும் தமிழ்நாடு அரசாங்கம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்தது. ஆந்திரா அரசாங்கம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியது.
சம்பவயிடத்திற்கு ஆந்திரா முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு உடனே வந்தார், தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா உடனே வந்தார்.
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக கூறி 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனரே ஏன் ஒருத்தன் கூட போகவில்லை? நாங்க என்ன அவ்வளவு ஈன ஜாதி பய மக்களா? அவ்வளவு கேடு கெட்டவர்களா? எங்களுக்கு ஒன்னுமே இல்லையா?
அவங்களுக்கு பத்து, பத்து லட்சம் நிவாரணம் கொடுத்தீங்களே, எங்களுக்கு ஒத்த ரூபாய் கொடுக்கவில்லையே, நாங்க என்ன அவ்வளவு மனம் கேட்ட மக்களா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச செயலகப்பிரிவில் உள்ள மாணவர்களில் 45 வீதமானவர்கள் போஷாக்கு குறைபாட்டுடன் காணப்படுவதாகவும், போஷாக்கு மட்டத்தினை அதிகரிப்பதற்கான செயற்பாடுகளில் பிரதேச அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்கள், பொதுமக்கள் ஈடுபட வேண்டுமேனவும் வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.
இவ்வாறு போஷாக்கற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இடம்பெயர்வு, பெற்றோர் விழிப்புணர்வின்றி செயற்படுகின்றமை முக்கிய காரணமாக அமைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்தில் வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலேயே 45 வீதமாக காணப்படுவதாகவும் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளில் 30 தொடக்கம் 35 வீதமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடவத்த, கோப்பியவத்த பகுதியில் கையடக்கத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவன் மின்னல் தாக்கி பரிதாபமான முறையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவன் ஒருவன் கட்டிலில் இருந்தவாறே தனது கையடக்கத்தொலைபேசியில் விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரெனெ மின்னல் தாக்கியதையடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
குறித்த மாணவன் கிரிவெல்ல மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கல்வி கற்றுவந்த, குடும்பத்திற்கு ஒரே ஆண் மகன் ஆவான். இச்சம்பவம் குறித்து அவரது சகோதரி கூறுகையில்,
தம்பி எப்போதும் கையடக்கத்தொலைபேசியை கைகளில் வைத்துக்கொண்டே இருப்பான், யார் சொன்னாலும் கேட்பதில்லை.
சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்ததையடுத்து, தந்தை கையடக்கத்தொலைபேசியொன்றை அவனுக்கு பரிசளித்தார்.
மழைகாலங்களிலும் அவன் அதை பயன்படுத்திய வண்ணமே இருப்பான். குறித்த சம்பவதினத்தன்றும் அதேபோல் கட்டிலில் இருந்தவாறே விளையாடிக்கொண்டிருந்தான் அப்போது இடி முழங்கும் சத்தம் கேட்டது. அதையடுத்து, அக்கா என்று என்னை அழைக்கும் சத்தமும் கேட்டது விரைந்துசென்று பார்த்தேன்.
அவன் கட்டிலிருந்து சில அடிகள் முன்னோக்கி கீழே விழுந்திருந்தான்.
நான் என்னவென்று விசாரித்த போது பதில் வராததால் தொட்டுப்பார்த்தேன், கைகள் உறைந்து போய்க் காணப்பட்டன.
அத்துடன் பயத்து போய் நான் அனைவரையும் சத்தம் இட்டு அழைத்து தம்பியை அவசரமாக வைத்தியசாலைக்கு தூக்கிச் சென்றேன் என அவர் தெரிவித்தார்.
சூரிய மண்டலத்திற்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை நாசாவின் கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.
சூரிய மண்டலத்தைப் போலவே அதற்கு அப்பால் பல சூரிய மண்டலங்கள் உள்ளன. பரந்துபட்ட விண்வெளியில் உள்ள பல சூரியன்களை அவற்றுக்கான கிரகங்கள் சுற்றி வருகின்றன.
அவற்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அனுப்பிய கெப்ளர் தொலைநோக்கி தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றது.
இந்நிலையில், சூரிய மண்டலத்துக்கு அப்பால் 1,284 புதிய கிரகங்கள் இருப்பதை இதுவரை கெப்ளர் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது என்று நாசா அறிவித்துள்ளது.
அவற்றில் 9 கிரகங்கள் சூரியனில் இருந்து பூமியைப் போலவே சரியான தூரத்தில் சுற்றி வருகின்றன. அதனால் அங்கு சரியான தட்பவெப்ப நிலை, தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெப்ளர் தொலைநோக்கியின் புதிய கிரகங்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கடந்த ஜூலை 2015 ஆம் ஆண்டு பட்டியல் தயாரிக்கப்பட்டது.
அப்போது மொத்தம் 4,302 கிரகங்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றில் 1,284 கிரகங்கள்தான் உண்மையில் பெரியதாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவற்றில் 550 கிரகங்கள் பூமியை போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்தவையாக உள்ளன என்று நாசா தெரிவித்துள்ளது.
ஊழலற்ற நல்லாட்சியை உருவாக்குவதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரன் பாராட்டியுள்ளார்.
லண்டனில் நேற்று (12.05) நடைபெற்ற ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பின் போதே பிரித்தானிய பிரதமர் பாராட்டு தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஊழலற்ற உலகத்தை உருவாக்கும் நோக்கிலான ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில், ஊழலை ஒழிப்பதற்காக நடவடிக்கைகள் பலவற்றை எடுத்துள்ள தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்கின்றமை சிறப்பானதாகும் என்றும் பிரித்தானிய பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை சென்றடைந்து சாதனை படைக்கும் நோக்கில் இரு இலங்கையர்கள் காத்திருக்கின்றனர். உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கும் செல்லும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜயந்தி குருஉத்தும்பால மற்றும் யோஹான் பீரிஸ் (Jayanthi Kuru Utumpala – Johann Peiris) ஆகிய இருவரும் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு செல்லும் எதிர்பார்ப்பில் உள்ள இலங்கையர்களாகும்.
இவர்களின் எண்ணம் ஈடேறுமானால், எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்கு சென்ற முதலாவது இலங்கையர்கள் என வரலாற்று சாதனை பதிவு செய்வர்.
இமயமலை எனப்படும் எவரெஸ்ட் மலைப் பகுதி அதிக குளிராக உள்ள நிலையில் வளிமண்டலத்தில் ஒட்சிசன் குறைந்த அளவில் உள்ளது.
இந்த நிலைமையினை தாங்கிக்கொள்ள கூடிய வகையில் அவர்களின் உடல்களை தயார்படுத்த ஒன்றரை மாதம் பயிற்சி பெற்று, உரிய முறையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜயந்தி குருஉத்தும்பால மற்றும் யோஹான் பீரிஸ் தெரிவித்துள்ளனர்.
அதற்காக எவரெஸ்ட் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள முகாம்களில் இருந்து முறையே இலக்கம் 1, 2 மற்றும் 3 ஆகிய முகாம்களுக்கு சென்று மீண்டும் வருகை கட்டங்களை நிறைவு செய்துள்ளதாக யோஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
முதலாம் இலக்க முகாமிற்கு சென்று மீண்டும் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள முகாம்களுக்கு வருவதாகவும், அதன் பின்னர் அரை நாள் ஓய்வு பெற்றுக்கொண்டு மீண்டும் இரண்டாம் இலக்க முகாமிற்கு சென்று மீண்டும் அதே இடத்திற்கு வரவேண்டும். அத்தகைய ஒரு சுழற்சி முறையை பின்பற்ற வேண்டும் எனவும், அவை அனைத்தையும் தாங்கள் நிறைவு செய்துள்ளதாக ஜயந்தி குறிப்பிட்டுள்ளார்.
மலை உச்சியில் 10 நாட்களுக்கு காலநிலை சிறப்பான நிலையில் காணப்படும் எனவும், அதனை இலக்கு வைத்து மலை உச்சிக்கான பயணத்தை ஆரம்பிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
தாங்கள் தற்போது இறுதி கட்டமாக மலை உச்சிக்கு செல்லவுள்ளதாகவும், அதற்கு அவசியமான காலநிலைக்காக காத்திருப்பதாகவும், தாங்கள் நினைத்ததனை விடவும் இது மிகவும் கடினமான விடயம் என குறிப்பிட்டுள்ளனர்.
குழு என்ற ரீதியில் தமக்கு எவரெஸ்ட் சவாலை வெற்றி கொள்ள முடியும் என ஜயந்தி மற்றும் பீரிஸ் எதிர்பார்த்துள்ளனர்.
இதுவரையில் எவரெஸ்ட் மலை உச்சிக்கு வெற்றிகரமான முறையில் மூவாயிரம் பேர் வரையில் சென்றுள்ளனர்.
எவரெஸ்ட் மலை உச்சிக்கு ஏறிய சந்தர்ப்பத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 210 என பதிவாகியுள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்தி ஜனவரி மாதம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்ப்பதே இதன் நோக்கமாகும்.
தற்போதைய நடைமுறையில் பல்கலைக்கழக அனுமதிக்காக மாணவ மாணவியர் சுமார் இருபது மாதங்கள் காத்திருக்க நேரிட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்தினால் இந்தக் காலத்தை எட்டு மாதங்களாக குறைக்க முடியும். பல்கலைக்கழக அனுமதி காலம் தாழ்த்தப்படுவதனால் தனியார் நிறுவனங்கள் நோக்கிப் போவதும் அதிகரித்துள்ளது.
இந்த நிலைமையை சரி செய்வதே அரசாங்கத்தின் நோக்கமாக அமைந்துள்ளது.ஏப்ரல் மாதம் பரீட்சை நடாத்துவது குறித்து கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சைத் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது எனவும் கிரேரு தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று முன்தினம் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்து சிறுவர் நன்னடத்தை திணைக்களம், மற்றும் வவுனியா பிரதேச செயலக சிறுவர் பெண்கள் பிரிவினரால் காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவில் தாய் வெளிநாட்டில் தொழில் புரிந்து வருகின்ற நிலையில் தந்தை வேறு ஒரு திருமணம் செய்து கொண்டதையடுத்து அவர்களின் 17 வயதுடைய மகள் மற்றும் மூன்று ஆண் சகோதரர்கள் பல நாட்களாக தனிமையில் வசித்து வந்துள்ளனர்.
எனினும் கஸ்டத்தினை தாங்கிக் கொள்ள முடியாமல் 17 வயது யுவதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார். சகோதரியின் தற்கொலை முயற்சியினை அறிந்த சகோதரர்கள் அயலவரின் உதவியை நாடியுள்ளனர். தற்கொலைக்கு முயற்சித்தவரை அக் கிராமத்தவர்கள் வவுனியா பிரதேச செயலகத்தின் சிறுவர் பெண்கள் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவ்விடத்திற்குச் சென்ற பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் சிறுவர்களின் நலனை கருத்திற்கொண்டு தாய் வெளிநாட்டில் பணிபுரிவதையும், தந்தையின் நிலைமையினையும் அறிந்து அச் சிறுவர்களின் பாதுகாப்பினை கவனத்திற்கொண்டு சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஊடாக வவுனியாவில் இயங்கிவரும் சிறுவர் காப்பகத்தில் 17வயது யுவதி உட்பட மூன்று ஆண் சிறுவர்களையும் அவர்களுக்குத் தேவையானவற்றை அதிகாரிகளின் உதவியுடன் பெற்றுக் கொடுத்து சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் பல தாய்மார் வெளிநாடு சென்று தொழில் புரிவதால் அவர்களின் கணவன், பிள்ளைகள் நலனில் குறையேற்பட்டு பல அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் விருட்சம், வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் பரிபாலன சபை, வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள வித்தியாவின் ஓராண்டு ஆத்ம சாந்தி பூசையும்,
அவருக்கும் கண்ணீருடன் வாழும் அவரது தாய்க்கும் நீதி கிடைக்க வேண்டி பிரார்த்தனையும் நாளை (13.05.2016) வெள்ளிகிழமை காலை 8.00 மணிக்கு வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற உள்ளது.
அனைவரையும் கலந்து கொண்டு பிரார்த்திக்குமாறு ஏற்ப்பாட்டுக் குழுவினர் வேண்டி நிற்கின்றனர்.
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் யகன்கா சாராய் என்ற இடத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் பிரசாத். அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரது மகன் ரித்திக் ராஜ் (வயது 15). அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான்.
பள்ளிக்கு செல்லும் போது அந்த மாணவனை மர்ம மனிதர்கள் கடத்தி சென்றனர். அவர்கள் மாணவன் தந்தை நிரஞ்சன் பிரசாத்துக்கு போன் செய்து 50 லட்சம் பணம் கொடுத்தால் மகனை விடுவிப்பதாக கூறி மிரட்டினார்கள். பொலிசுக்கு தகவல் சொன்னால் சிறுவனை கொன்று விடுவதாக அவர்கள் எச்சரித்தனர்.
ஆனால் அதையும் மீறி நிரஞ்சன் பிரசாத் பொலிசுக்கு புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர்.
பொலிசுக்கு தகவல் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த கடத்தல்காரர்கள் மாணவனை கொலை செய்தனர். போல்பைகா என்ற இடம் அருகே பஞ்சாயத்து அலுவலகம் பகுதியில் பிணத்தை போட்டு விட்டு அவர்கள் தப்பி சென்று விட்டனர். பொலிசார் சிறுவனின் பிணத்தை கண்டெடுத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் ஒன்று திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். இதில் சில போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து கூடுதல் போலீசார் வர வழைக்கப்பட்டு அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமியான நிஷி உக்லே இங்கிலாந்தில் சாதனை படைத்துள்ளார்.
நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட் என்ஸ்டைனின் சாதனை 10 வயது சிறுமியான நிஷி உக்லேயால் முறியடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் மென்சா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நுண்ணறிவுத் தேர்விலேயே கலந்துகொண்டு சாதனையை முறியடித்துள்ளார்.
குறித்த இச்சிறுமி தனது முதலாவது தேர்வில் 162 புள்ளிகளையும் இரண்டாவது தேர்வில் 142 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
இவரின் அறிவுத்திறமையைக்கண்டு வியந்த அவ் அமைப்பினர் இச்சிறுமியை அவர்களின் அமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளனர்.
இச்சிறுமி அல்பட் அய்ன்ஸ்டைனை விட 2 புள்ளிகள் அதிகமாக பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிஷி உக்லேவின் பெற்றோரான நிலங்க மற்றும் ஷிரோமி கடந்த 2001 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இங்கிலாந்தின் மென்சஸ்டர் பகுதிக்கு சென்றனர்.
இவரின் சாதனை தொடர்பாக சிறுமியின் தந்தை கூறுகையில்,
அவள் எங்களுக்கு கிடைத்த வரம். வெகு சீக்கிரத்திலேயே அவள் எழுத படிக்க கற்றுக்கொண்டாள் , அத்துடன் அவள் கணிதத்தில் தேர்ச்சி பெற்றுக்காணப்பட்டாள்.
நாங்களும் பல சுவாரஸ்யமான சோதனைகளை அவளுக்கு வழங்கினோம். எந்தப்பெற்றோரும் தமது பிள்ளைகளின் திறமைகள் வீணாக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் இருப்பினும் அவர்களின் குழந்தைப்பருவத்தை சரி சமமான வகையில் பேணப்பட வேண்டும்.
அவளும் ஏனைய சிறுவர்களைப்போல் 10 வயதுச்சிறுமி . அவளுக்கு படிக்கவும் சைக்கிள் ஓட்டவும் மிகவும் பிடிக்கும். அவள் குறித்து நான் மிகவும் பெருமையடைகிறேன்.
கடந்த மாதம் மென்சஸ்டரில் இடம்பெற்ற தேர்வை எழுதிய முதல் குழந்தை நிஷி ஆகும். முதல் தேர்வில் 150 கேள்விகளுக்கும் விடையளித்தாள், ஆனால் இரண்டாவது வினாத்தாளை சரியான நேரத்திற்குள் விடையளிக்க தவறிவிட்டாள்.
இது குறித்து சிறுமி நிஷி தெரிவிக்கையில்,
விடையளிப்பது அவ்வளவு இலகுவான விடயமல்ல. அதேவேளை அவ்வளவு கடினமானதாகவும் இருக்கவில்லை . முதல் வினாத்தாள் எழுதி முடித்த பின் போதியளவு நேரம் இருந்தமையினால் விடைகளை சரி பார்க்க முடிந்தது என தெரிவித்தார்.
நான் குற்றம் எதனையும் செய்யவில்லை என்பதே எனது நிலைப்பாடாகும். இதை அன்று முதல் கூறி வருகின்றேன். எனக்கு நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தால் ஏற்றுகொண்டிருக்கவே மாட்டேன். குற்றம் செய்யாமல் எவ்வாறு தண்டனையை ஏற்றுகொள்ள முடியும் என இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசேல் ஜனித் பெரேரா தெரிவித்தார்.
இலங்கை கிரிக்கட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும் விக்கட் காப்பாளருமான குசல் பெரேரா தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பாவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குசல் ஊக்குமருந்து பாவித்திருக்கவில்லை என்பது தெரியவந்ததையடுத்து சர்வதேச கிரிக்கட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில் இதுதொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று இலங்கை கிரிக்கெட் சபையில் நடைபெற்ற போதே குசேல் ஜனித் பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘கூறுவதற்கு நிறைய உள்ளன. சர்வதேச கிரிக்கெட் சபையால் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக திலங்க சுமதிபால நேற்றிரவு எனக்கு அறிவித்தார். இதனையடுத்து உடனடியாக அவரை நேரில் சென்று சந்தித்தேன்.
மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு வந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்தை நான் உட்கொண்டிருந்ததாக நிறைய பேர் என் மீது குற்றம் சுமத்தியிருந்தனர். ஆனால் ஒரு சிலர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தனர். இதனையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
எனக்கு எதிராக பலவாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எவ்வாறாயினும் இன்று மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன். நான் தடைசெய்யப்பட்ட எந்த ஊக்க மருந்தையும் உட்கொள்ளவில்லை என்று கிரிக்கெட் சபையிடம் கூறியிருந்தேன். இதே நிலைப்பாட்டிலே நான் இருந்து வந்தேன். அது இன்று உண்மையாகியுள்ளது.
நாளை முதல் எனக்கு பயிற்சியில் ஈடுபட முடியும். அணியில் இணைவதற்கு முன்னர் கட்டாயம் பயிற்சிகளில் ஈடுபடுவது அவசியமாகும்.
எனக்கு நிகழ்ந்த சம்பவத்தால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை விளையாட்டு மூலமே நிவர்த்தி செய்ய முடியும். எனவே எதிர்வரும் காலங்கங்கில் கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று இந்த பாதிப்பை நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன். எனது இழப்பை பணத்தால் ஒப்பிட முடியாது. நாட்டுக்காக மீண்டும் களமிறங்குவதே எனது நோக்கமாகும்.
எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாக எனக்கு கூறமுடியாது. காரணம் எனக்கு சாதகமான முடிவே வந்துள்ளது.
குற்றம் செய்யாமல் குற்றத்தை ஒத்துகொள்ள முடியாது. இதுவே எனது நிலைப்பாடாக இருந்தது. எனக்கு நான்கு வருடங்கள் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் ஏற்று கொண்டிருக்கவே மாட்டேன். நான் குற்றம் செய்யாமல் எவ்வாறு தண்டனையை ஏற்றுகொள்வது.
இதேபோன்று என்னுடைய ஆதரவாளர்களும் என் மீது கோபம் கொள்ளவில்லை. இதனால் எனக்கு பெரிய அழுத்தம் இருக்கவில்லை என்றார்.