வவுனியா உக்குளாங்குளம் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நுளைந்த பாரிய முதலை இளைஞர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
வவுனியா உக்குளாங்குளம் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நுளைந்த பாரிய முதலை அப்பகுதி இளைஞர்கள் சிலரால் பிடிக்கப்பட்டு பொலிசார் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இம் முதலை வவுனியா நெளுக்குளம் குளத்திலிருந்து உக்குளாங்குளம் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் வந்திருக்கலாம் என்று வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனடா நாட்டில் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காட்டில் தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதன்காரணமாக அந்த காட்டின் அருகில் அமைந்துள்ள எண்ணெய் நகரமான போர்ட் மெக்முர்ரேயில் ஆயிரத்து 600 கட்டுமானங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இந்த நிலையில் அங்கு வசித்து வந்த 80 ஆயிரம் பேர், வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சிகள் நடக்கின்றன. ஆனால் கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு படையினர் திணறுகின்றனர். அந்த நகரின் பெரும் பகுதி தீயில் அழிந்து விடும் ஆபத்து உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டன் நகர மேயராக பாகிஸ்தானை சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள மாகாணங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில நகரங்களுக்கான மேயர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடந்தது.இதில் லண்டன் நகர மேயர் பதவிக்கான தேர்தலில் பிரபல கோடீஸ்வரரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கானின் முன்னாள் மனைவி ஜெசிமாவின் சகோதரருமான ஸக் கோல்ட் ஸ்மித் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து பாகிஸ்தானை சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகனான சாதிக் பாஷா(45) என்பவர் தொழிலாளர் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார் 11 லட்சம் மக்கள் வாக்களித்தனர். மொத்த வாக்குகளில் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக பெற்ற சாதிக் கான், லண்டன் நகர புதிய மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு லண்டனில் உள்ள டூட்டிங் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக கடந்த பத்தாண்டுகளாக பதவி வகித்துவரும் சாதிக் கான், மனித உரிமைகள் துறை வழக்கறிஞராகவும் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் கோல்டன் பிரவுன் தலைமையிலான மந்திரிசபையில் செல்வாக்கு நிறைந்தவராக அறியப்பட்ட இவர், லண்டன் நகர மேயர் தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த ஆண்டு அந்நாட்டின் நிழல் மந்திரிசபையில் இருந்து விலகினார். சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் பழமைவாத கட்சி அதிக வாக்குகளை வாங்கி பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
எனினும், லண்டன் நகர மேயர் பதவிக்கு நடந்த தேர்தலில் தொழிலாளர்கள் ஆளும்கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபல வைர வியாபாரியும், கோடீஸ்வரருமான ஸக் கோல்ட் ஸ்மித்தை பின்னுக்குத்தள்ளி பாகிஸ்தானை சேர்ந்த பஸ் சாரதி ஒருவரின் மகனான சாதிக் பாஷா தொழிலாளர்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு இந்த வெற்றியை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன் நகரின் மேயராக பொறுப்பேற்றுக்கொள்ளும் முதல் இஸ்லாமியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் இன்று பாராளுமன்றத்தை முற்றுகையிட சென்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை கலைக்கும் மத்திய அரசை கண்டித்து வரும் இன்று பாராளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுகளை கவிழ்த்தது மற்றும் எதிர்க்கட்சியினரை குறிவைத்து பொய் மற்றும் அவதூறு பிரசாரங்களை பரப்புவது, நாடெங்கும் பெருகிவரும் விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பல பிரச்சனைகளை மையப்படுத்தி, மத்திய அரசின் செயல்பாடுகளில் இருந்து ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்ற முழக்கத்துடன் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.
முன்னதாக, ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொண்டர்களிடையே பேசிய சோனியா காந்தி, ஜனநாயகத்தின் வேர்களை அழிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு முயன்றுவருவதாக குற்றம்சாட்டினார். அநீதிகளுக்கு காங்கிரஸ் ஒருபோதும் அடிபணியாது, சரியான வகையில் அதை எதிர்கொள்ளும் என குறிப்பிட்ட அவர், மோடி அரசின் முகமூடியை ஜனநாயக முறையில் நாம் கிழித்தெறிய வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.அடிப்படை ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளால் எதிர்க்கட்சியினரை குறிவைத்து அரசு தாக்குதல் நடத்திவருவதாகவும் குறிப்பிட்ட சோனியா காந்தி, நாம் பல சவால்களை கடந்து வந்துள்ளோம். தொடர்ந்து போராடும் ஆற்றலை வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்துள்ளது என்று கூறினார்.
பின்னர், சோனியா காந்தி தலைமையில் அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கிச் சென்றனர். அவர்கள் பாராளுமன்றத்தை நெருங்காத வகையில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். அந்த வேலிகளை கடந்து முன்னேறிச் செல்ல முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட காங்கிரசார் முயன்றனர்.இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோரை பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
வெள்ளைக்காரன் ஆட்சி மீண்டும் நாட் டில் தலைதூக்கியுள்ளது. நாய்களுக்கான அனுமதிப் பத்திரத்திற்கும் 10000 ரூபா செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்த பொது எதிர்க்கட்சியினர்.சிறுநீரக நோயாளர்களின் இரத்தப் பரிமாற்றம் செய்யும் கட்டணத்திற்கும் புற்று நோயாளர்களின் எக்ஸ்ரேக்கும் 15 வீத வற்வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் குற்றம்சாட்டியது.
பாராளுமன்ற குழு அறையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பொது எதிரணி யின் ஊடகவியலாளர்கள் மாநாட்டிலேயே இக்கருத்துக்கள் வெளியிடப்பட்டன.பொது எதிரணியினர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்;இலங்கையர்களிடம் அனைத்து விடயங்களிலும் வெள்ளைக்கார ஆட்சியாளர்கள் வரிகளை அறவிட்டனர். இன்று நாட்டில் மீண்டும் அவ்வாறானதொரு வெள்ளைக்கார ஆட்சி தலையெடுத்துள்ளது.
எதிர்காலத்தில் நாய்க்கும் மனித உடலுக்கும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். சிறுநீரக நோயாளர்களின் இரத்தப்பரிமாற்றம் புற்று நோயாளர்கள் “எக்ஸ்ரே” உட்பட அனைத்து மருத்துவர்களுக்கும் 15 வீத வற்வரி அறவிடப்படுகின்றது.இது பெரிய அநீதியாகும்.கடந்த ஆட்சியில் வற்வரியானது தொலைபேசி கட்டணங்கள், சுகாதார சேவைகள், மின் கட்டணங்களுக்கு விலக்கப்பட்டிருந்தது.ஆனால் இன்று இவை அனைத்திற்கும் வற்வரி அறிவிடப்படவுள்ளது. இதனை எதிர்த்து நுகர்வோர் நீதிமன்றம் சென்று நியாயம் கேட்கலாம். நாமும் நீதிமன்றம் செல்லவுள்ளோம் என்றனர்.
வவுனியா நகர எல்லைக்குள் வவுனியாவிற்கான பொருளாதார மத்திய நிலையத்தினை தாண்டிக்குளம் பகுதியில் அமைத்துத்தருமாறு கோரி உள்ளுர் விளைபொருள் விற்பனை சங்கம் எற்பாடு செய்த அமைதிப்பேரணி இன்று காலை நடைபெற்றது.
காலை 9.30 மணியளவில் தினச்சந்தையில் ஒன்று கூடிய பொது அமைப்புக்கள், மாவட்ட விவசாயிகள், மொத்த கொள்வனவாளர்கள், விற்பனையாளர்கள் எனப் பலரும் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டதுடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இப் பேரணி பஸார் வீதியூடாக – தர்மலிங்கம் வீதி வழியாக, ஹொறவப்பொத்தான வீதியூடாக வவுனியா மாவட்ட செயலகத்தை சென்றடைந்து அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினை கையளித்தனர்
தொடர்ந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருடன் வவுனியா பிரதேச செயலாளர், வர்த்தக சங்க உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுர் விளைபொருள் விற்பனையாளர் சங்க உறுப்பினர்கள, பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து பொருளாதார மத்திய நிலையம் அமையவுள்ள காணி தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இன்று தினச்சந்தை கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டு இப் பேரணிக்கு ஆதரவு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் வெப்பநிலை அதிகரித்து காணப்படுவதால் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலான காலப்பகுதியில் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு பாடசாலை அதிபர்களை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,கடந்த சில மாதங்களாக பல மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. அதிகரித்த வெப்பமானது பாடசாலை மாணவர்களை அதிகமாக பாதிக்கச் செய்கின்றது.
எனவே மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் வெயில் அதிகரித்த காலப்பகுதியில் மாணவர்களின் வெளிப்பாட விதானங்களை தவிர்த்துக்கொள்ளுமாறு அமைச்சு ஆலோசனை வழங்குகிறது.
மேலும் வகுப்பறைகளில் கதவுகள், ஜன்னல்கள் திறக்கப்பட்ட நிலையில் காற்றோட்டமான சூழலில் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுப்பதோடு முடிந்த வரை மாணவர்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்குமாறும் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிசக்திவாய்ந்த மினசார கம்பியிலிருந்து திருட்டுத் தனமாக மின்சாரத்தைப் பெறமுயன்ற சிறுவனொருவன் மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியாகியுள்ளார்.இச் சம்பவம் மொனராகலை, தம்பகல என்ற இடத்தில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
தம்பகலையைச் சேர்ந்த ஏ. ஜீ அமில என்ற 15 வயது நிரம்பிய பாடசாலை சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.அதிசக்திவாய்ந்த மின்சார கம்பியிலிருந்து திருட்டுத் தனமாக வீட்டுக்கு மின்சாரத்தினைப் பெற முயன்றபோது சிறுவன் பொருத்திய கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் பலியாகியதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.சிறுவனின் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைகளுக்காக மொனராகலை அரசினர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் பணி புரிந்த 10 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இன்றி தொழில் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இத்தாலி மொன்சா பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் நடத்தப்பட்ட திடீர் சோதனையின் போது 10 பேரும் கைது செய்யப்பட்டதாக இத்தாலிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பத்துப் பேரில் இரு பெண்களும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் வதிவிட அனுமதி பத்திரம் இன்மை காரணமாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.இது குறித்து இத்தாலிய பொலிஸார் மேலதிக விசாரணைகள் நடத்தி வருகின்றனர்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட கடலோர பாதுகாப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும் ஒன்பது படகுகள் நைஜீரியாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.வெலிசரையில் உள்ள கடற்படை முகாமில் உள்ள படகு தொழிற்சாலையில் இந்த படகுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.இலங்கையில் தயாரிக்கப்பட்ட படகுகள் வெளிநாடு ஒன்றுக்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த விற்பனை மூலம் சுமார் 60 கோடி ரூபா வருவாய் கிடைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
நைஜீரிய அரசாங்கத்தின் சார்பில் படகுகளை கொள்வனவு செய்யும் நிகழ்வில் இலங்கைக்கான நைஜீரிய தூதுவர் எஸ்.யூ. அஹமட் பங்கேற்றுள்ளார்.1994 ஆம் ஆண்டு முதல் அன்று காணப்பட்ட தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடற்படையினர் சிறிய படகுகளை தயாரிப்பதை ஆரம்பித்தனர்.போரின் இறுதிக்கட்ட நடவடிக்கைகளின் போது மனிதபிமான நடவடிக்கைகளுக்கு இந்த படகுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.
உலகமயமாக்கல் காரணமாக இலத்திரனியல் சாதனங்களின் வருகை அதிகரித்துள்ளன. இதன் காரணமாக மனிதனது தேவைகளும், வேலைகளும் இலகுபடுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு வெளிவரும் இலத்திரனியல் சாதனங்கள், குறிப்பாக ஸ்மார்ட் போன்கள் மனிதனது வாழ்வியலோடு ஒன்றித்து விட்டது.
இந்நிலையில், இளைஞர்கள் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் ஸ்மார்ட் போன்களில் நேரத்தினை செலவிடுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.குளோபல் வெப் இன்டக்ஸ் எனும் குறித்த புள்ளவிபரத்தின்படி, 1980ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த பெரும்பாலான இளைஞர்கள் ஸ்மார்ட் போன்களில் நேரத்தை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 18 வயது முதல் 32 வயது வரையான இளைஞர்கள் சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 மணியே 14 நிமிடம் ஸ்மார்ட் போன்களில் நேரத்தினை செலவிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கையானது 2012ஆம் ஆண்டிற்கு பின்னர் அதிகரித்துள்ளதாகவும், மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, ஸ்மார்ட் போன் மோகமுடையவர்களுக்காக அண்மையில் ஜெர்மனியில் சாலைகளின் தரைகளில் வீதி சமிஞ்சைகள் பொருத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்திச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (6) இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமியை மீட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.கடந்த மாதம் 27 ம்திகதி கொக்கட்டிச்சோலை அரசடித்தீவில் மாலைநேரம் பிரத்தியோக வகுப்புக்குச் சென்று திரும்புகையில் அச்சிறுமி அரசடித்தீவில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த குறித்த நபரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பெற்றோர் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யவில்லை என கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோர் புதன்கிழமை (4) மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சிறுமியைக் கடத்திச் சென்றவரை நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் கைது செய்துள்ளதுடன் கடத்திச் செல்லப்பட்ட சிறுமியையும் மீட்டுள்ளனர். இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.
கோண்டாவில் பகுதியில் தண்டவாளத்தில் படுத்திருந்த இரு இளைஞர்கள் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை அதிகாலை கோண்டாவில் புகையிரத நிலையப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதம் கோண்டாவில் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து சம்பவத்தில் உயிரிழந்த இரு இளைஞர்களின் சடலங்கள் அடையாளப்படுத்தப்படவில்லை என்பதுடன், விபத்துச் சம்பவம் குறித்த கோப்பாய்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நாட்டிலுள்ள பல வைத்தியசாலைகளில் பாரியளவில் தாதிமார்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கம் கூறுகின்றது. வைத்தியசாலைகளுக்குள் 30,000 இற்கும் அதிகமான தாதிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அந்த சங்கத்தின் தலைவர் காமினி குமாரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
வைத்தியசாலைகளில் புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்ட போதிலும், அவற்றில் பணியாற்றுவதற்கு போதுமான அளவு தாதிமார் இல்லை என்பது வருத்தமளிப்பதாக காமினி குமாரசிங்க கூறினார்.
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் வேண்டுமெனக் கோரி நடைபெற்ற பேரணியில் விவசாயிகள், பொது அமைப்புக்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இப் பேரணியானது. வவுனியா தினச்சந்தையிலிருந்து காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மாவட்ட செயலகம் வரை சென்று அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் வழங்கியுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக தகவல்களுக்கு தொடர்ந்து வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று (05.05.2016) மாலை 5.00 மணிக்கு வாடிவீடு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போது..
முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்தல்
விவசாயிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளல்
மக்கள் பிரதிநிதிகள் உரிய முறையில் செயற்படாமை
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு தாண்டிக்குளம் சாதகமில்லை
வவுனியாவில் தூரநோக்க அபிவிருத்தியினை பற்றி சிந்திக்க வேண்டும்
தற்போது பாராளுமன்றம் நடக்கின்றது. எங்களால் தெரிவு செய்யப்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்கள் எங்கே?
முதலமைச்சரின் தீர்மானத்தில் தான் பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமையும் என்பது தெரியும்
என பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் இவைகள் பற்றி விரிவாகவும் ஆராயப்பட்டது..
இந்த கலந்துரையாடலின் இறுதியாக முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாளை மறுதினம் (07.05.2016) சனிக்கிழமை வர்த்தக நிலையங்களை மூடி அமைதியான முறையில் பேரணியாக சென்று மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றும் கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடலில் பல அமைப்புக்கள் கலந்து கொண்ட போழுதும் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.