மும்பையில் தம்பதி ஒருவர் தமது புகைப்படத்திற்கு விரும்பிய கமெண்ட் வரவில்லை எனக் கூறி விவாகரத்து கோரிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மும்பையின் தெற்கு பகுதியில் மனைவியுடன் குடியிருந்து வருபவர் குலாத்தி, இவருக்கும் மனைவிக்கும் இடையே தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.இதனையடுத்து பேஸ்புக்கில் தங்களது புகைப்படத்திற்கு Made for each other என்ற கமெண்ட் வந்தால் பிரிய வேண்டாம் எனவும் முடிவெடுத்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் பதிவேற்றிய புகைப்படத்திற்கு நண்பர்கள் எவரும் குறிப்பிட்ட அந்த வாசகம் அடங்கிய கமெண்டை பதிவிடவில்லை என கூறப்படுகிறது.இதில் மனமுடைந்த அந்த தம்பதி தங்களை நட்பு வட்டமே நிராகரித்துள்ளது என முடிவுக்கு வந்ததுடன் விவாகரத்து கோரவும் முடிவெடுத்துள்ளனர்.இதுபோன்ற விவாகரத்து நடவடிக்கைகள் தற்போது அதிகரித்து வருவதாக கூறும் திருமண ஆலோசகர்கள், இது எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்றனர்.
மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி எலிகளை வேட்டையாடும் புதிய இயந்திரமொன்றை கண்டுபிடித்துள்ளார்.
என்சளிட்டா என்ற குறித்த சிறுமி ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடும் ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதன் மூலம் பலருக்கு உள்ள எலி பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என தெரிவித்துள்ளார்.
இந்த இயந்திரமானது வீட்டில் உள்ள பாவனைக்கு உதவாத கழிவு பொருட்கள் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் நடந்த கண்காட்சியின் போது இரண்டாம் இடத்தினையும், மட்டக்களப்பு மட்டத்தில் 1ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
அண்மைக் காலமாக எலிக்காய்ச்சல் மூலம் பலர் உயிரிழந்துள்ளார்கள். அந்த வகையில் இந்த சிறுமியின் கண்டுபிடிப்பு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
சென்னையில் குடும்ப தகராறு காரணமாக பெண் ஒருவர் மகளை கிணற்றில் வீசி கொன்று விட்டு அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த தர்மாராவ் (55) சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
இவருடைய மகள் ஜான்சிராணி (27) கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் ஈஸ்வரராவுடன் ஏற்பட்ட தகராறில் மகள் பல்லவி (3) உடன் ஈஞ்சம்பாக்கம் வந்துள்ளார்.ஜான்சிராணியின் கணவர் ஈஸ்வரராவ், ஈஞ்சம்பாக்கம் வந்து மனைவியை தன்னுடன் வரும்படி அழைத்த போது ஜான்சிராணி மறுத்து விட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது தர்மாராவ் மகள், மருமகன் இருவரையும் சமாதானம் செய்து தூங்கச் சென்றுள்ளார்.
கணவரால் மனமுடைந்த ஜான்சிராணி, நள்ளிரவில் தனது மகள் பல்லவியை அருகில் உள்ள தோட்டத்துக்கு தூக்கிச் சென்று அங்கிருந்த கிணற்றில் வீசியுள்ளார்.தண்ணீரில் மூழ்கிய சிறுமி பல்லவி, அலறி துடித்து பரிதாபமாக இறந்த நிலையில், ஜான்சிராணியும் அதே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார்.
காலை கண் விழித்த தர்மாராவ் தனது மகள் மற்றும் பேத்தி இருவரும் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தேடத் தொடங்கியுள்ளார்.பின்னர் தோட்டத்தில் சென்று பார்த்த போது கிணற்றில் தாய்-மகள் இருவரும் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
தகவல் அறிந்த நீலாங்கரை பொலிசார், கிணற்றில் இருந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து ஜான்சிராணியின் கணவர் ஈஸ்வரராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல பொலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. இவர் ரஜினி நடிப்பில் வெளியான லிங்கா படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. தற்போது பொலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன்பு சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஒரே நேரத்தில் பல பெண்கள் சேர்ந்து நகங்களுக்கு வர்ணம் போட்டுக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்டது.
இந்த சாதனை நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சேர்ந்த பெண்கள் அதிகளவு கலந்து கொண்டனர். அவர்களில் ஒருவராக சோனாக்ஷி சின்ஹா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரது பெயர்களும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து சோனாக்ஷி சின்ஹா கூறுகையில், ‘‘கின்னஸ் புத்தகத்தில் என் பெயர் இடம்பெற வேண்டும் என்று எனக்கு குழந்தை பருவத்தில் இருந்தே ஆசை. அந்த ஆசை தற்போது நிறைவேறியிருக்கிறது’’ என்றார்.
சமூகப் பணிகள் மற்றும் பொது நலப் பணிகளை முன்னெடுப்பதற்காக வவுனியா பூந்தோட்டத்தில் புவனேஸ்வரி அன்பு இல்லம் என்ற பெயரில் புதிய நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டிருக்கின்றது.
வவுனியா ஜே.பி.கே சொப்பிங் கொம்ப்ளக்ஸ், கேபிகே சென்ரர் ஆகியவற்றின் உரிமையாளரும் பிரபல வர்த்தகருமாகிய கு.பிரபாகரன் மற்றும் அவரது சகோதரர்களினால் அவர்களுடைய அன்னையார் புவனேஸ்வரியின் நினைவாக இந்த அன்பு இல்லம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா குடியிருப்பைச் சேர்ந்த கு.புவனேஸ்வரி அவர்களின் ஒரு வருட நினைவஞ்சலியையொட்டி, அவரது நினைவாக இந்த அன்பு இல்லம் குடியிருப்பு பிள்ளையார் கோவில் பிரதம குருக்கள் கந்தசாமி குருக்கள் மற்றும் திருமதி அன்னபாக்கியம் ஆகியோரினால் இணைந்து வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது
இந்த வைபவத்தின் போது, பார்வை குறைபாடுடைய வசதியற்றவர்களான 300 பேருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்;டன. வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த வசதி குறைந்த பாடசாலை மாணவ மாணவிகள் 160 பேருக்குப் பாடசாலை உபகரணங்களும்; வழங்கப்பட்டன.
வவுனியா பொது மருத்துவமனைக்கு படுக்கை 100 விரிப்புக்கள் மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர் கே.அகிலேந்திரனிடம் கையளிக்கப்பட்டது
வேப்பங்குளம் இந்து அன்பு இல்லத்தைச் சேர்ந்த இளம் பெண்ணின் திருமண அன்பளிப்பு ஒன்றும் திருமதி புவனேஸ்வரி அவர்களின் நினைவாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த அன்பு இல்லத்தில் வசதியற்ற வயோதிபர்கள், வறுமைக் கோட்டுக்கு உட்பட்டவர்களுக்கான வைத்திய சேவைகள், வறிய பாடசாலை மாணவர்களுக்கான உதவி கல்விச் செயற்பாடுகள் உள்ளிட்ட சமூக சேவைகளை மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக திருமதி புவனேஸ்வரி அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம், வவுனியா வர்த்தகர் சங்கத் தலைவர் ரீ.கே.இராஜலிங்கம்,வர்த்தகர் அ.தணிகாசலம் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், செலான் வங்கி, சம்பத் வங்கி உள்ளிட்ட வங்கி அதிகாரிகள், சமூக சேவையாளர்கள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.
வவுனியாவில் பதினைந்துக்கு மேற்பட்ட மதுபான சாலைகள் இருப்பதாக சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு இன்று நடாத்திய (11.03.2016) ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.
வவுனியா கமநலசேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இச் சந்திப்பில், வவுனியா மாவட்டத்திற்குட்பட்ட கற்குளம் கிராமத்திற்கான வீதித் திருத்தம் செய்யப்படாமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு கடிதம் மூலமாக அறிவிக்கப்பட்டபோதிலும் எவ்வித பதிலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிடப்பட்டது.
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் மசாஜ் நிலையங்கள் உட்பட மதுபானசாலைகளினால் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பிலும் இதன்போது எடுத்துக்கூறப்பட்டது.
வவுனியா மாவட்டத்தில் பொதுவாக உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் இன்றைய ஊடக சந்திப்பின் பொது சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் பிரதிநிதிகளால் ஊடகவியலாளர்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது. இச்சந்திப்பில், அமைப்பின் இணைத்தலைவர்களான பூ.சந்திரபத்மன், சு.ஜெகதீஸ்வரன் (சிவம்), செயலாளர் டொன் பொஸ்கோ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் உலகின் மிகப் பெரிய விமானம் அவசரமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான எயர்பஸ் A380 என்ற விமானம் டுபாயில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கி சென்ற இவ்விமானத்தில் 502 பயணிகளும் 30 ஊழியர்களும் பயணித்துள்ளனர். இதில் பயணித்த 72 வயது நிரம்பிய ஆஸ்திரேலியா பெண்ணொருவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் நீர்கொழும்பில் உள்ள தனியார் வைத்தியச்சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
கலேவல, கெகிராவ வீதியில், பல்பெந்தியாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 09 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். முச்சக்கர வண்டி ஒன்றும் எதிரே வந்த சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று சிறுவர்கள் படுகாயமடைந்து ஆதியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் காயமடைந்த சிறுவர்களுள் ஒருவரை மேலதிக சிகிச்சைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் தேவகுவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே உயிரிழந்துள்ளான்.
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத் திட்டம் தொடர்பில் ஏற்பட்ட அனைத்துப் பிரச்சினைகளும் குறித்த சீன நாட்டு நிறுவனத்துடன் தீர்வு காணப்பட்டுள்ளதாக, அமைச்சர் மலிக் சமரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த வேலைத் திட்டத்தை மீள ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாகவும், சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையால் சிக்கல் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கையில் வருடமொன்றுக்கு 15,000 கருக்கலைப்புக்கள் இடம்பெறுவதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உளவள ஆரோக்கிய பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி சில்வா இதனைக் கூறியுள்ளார்.
தற்போது, வறுமை, போசாக்கின்மை, உடல்நிலை மாற்றம், வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பெண்கள் உளநிலை பாதிப்புக்கு உள்ளாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, வருடாந்தம் சுமார் நான்கு இலட்சம் பெண்கள் கர்ப்பம் தரிப்பதாகவும் அதில் 140 குழந்தைகள் பிறக்கும் போதே இறந்து விடுவதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
செவனகல, அம்பிலிப்பிட்டிய பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பெண்ணின் கணவர் கடும் காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தின் பின்னணி குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் கனிய எண்ணெய் அகழ்வு செய்ய முடியுமா என்பது குறித்து ஆராய்வதற்கு இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் முதல் நிலையான இரண்டு அமெரிக்க நிறுவனங்களே இவ்வாறு விருப்பம் வெளியிட்டுள்ளன.
எக்சொன் மொபில் மற்றும் லெம்பர்ட் ஒயில் ஆகிய நிறுவனங்களே இவ்வாறு இலங்கையில் கனிய எண்ணெய் அகழ்வு குறித்த ஆய்வுகளில் ஈடுபட விருப்பம் வெளியிட்டுள்ளன. இதேவேளை, கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏற்கனவே பிரான்ஸ் நிறுவனமொன்று கனிய எண்ணெய் வள ஆய்வுகளை மேற்கொள்ள ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது.
கனிய எண்ணெய் அகழ்வு ஆய்வு தொடர்பில் விரைவில் இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, இலங்கை கனிய எண்ணெய் வள ஆய்வுகள் குறித்து இந்தியாவும் சீனாவும் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நேற்று இடம்பெற்ற உலக கிண்ண இருபதுக்கு இருபது பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணி 74 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 20 ஒவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 226 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 74 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இதனிடையே, இந்திய மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையில் இடம்பெற்ற பிரிதொரு பயிற்சி போட்டியில், இந்திய அணி 45 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 19.2 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 45 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
மிகவும் செலவு கூடிய நகரமாக சிங்கபூர் மீண்டும் தெரிவாகியுள்ளது. இங்குள்ள செலவுகள் உலகளவில் எதிர்பார்க்க முடியாதளவு அதிகமானமாக இருப்பதாக ஆய்வொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைதியான நகரங்கள் பட்டியலில், ஹொங்கொங், ஜெனீவா, பாரிஸ் ஆகிய நகரங்களை விட சிங்கபூர் முன்னிலை பெறுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
133 நகரங்கள் இது தொடர்பான ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்த பட்டியலில் லண்டன் 6ஆம் இடத்தையும், நியூயோர்க் 7ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.
சாம்பியாவின் தலைநகர் லுசாகா, இந்தியாவின் பெங்களுர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களை முன்மாதிரியாக கொண்டு செயற்படுவாத உலக பொருளாதார ஆய்வு ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் எரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில் எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
பெரும்பாலும் வேனில் ஏற்பட்ட தீ காரணமாக இவர்கள் அனைவரும் எரியுண்டு இறந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்குமிடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியின் 110ஆவது போட்டி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.
முதலாம் நாளில் இரு அணிகளுமே கடுமையான போட்டியை வெளிப்படுத்தியதோடு, சென். ஜோன்ஸின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ள யாழ். மத்தி, சிறியளவிலான முன்னிலையைப் பெற்றுள்ளது.
யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டுப் பூர்த்தியும் இவ்வாண்டே என்பதன் அடிப்படையில், இப்போட்டி விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்கான பிரதம விருந்தினராக, 1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று கொடுத்த தலைவரும் தற்போதைய அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க கலந்துகொண்டார்.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ். மத்தியின் தலைவர் சி.அலன்ராஜ், தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார்.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி அணி, 75.4 ஓவர்கள் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுகளையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது விக்கெட்டை 6 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி, இரண்டாவது விக்கெட்டுக்காக 63 ஓட்டங்களைப் பகிர்ந்த போதிலும், அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்திருந்தது.
துடுப்பாட்டத்தில் அ.ஜெரோஷன் 51, உப தலைவர் ச.கோமேதகன் 39 ஓட்டங்களைப் பெற்றனர். வேறு எந்த வீரரும் 20 ஓட்டங்களைத் தாண்டியிருக்கவில்லை. பந்துவீச்சில் வ.ஜதுசன் 4, ஆரம்ப வேகப்பந்து வீச்சாளர் ம. நிலோஜன் 3, அணித்தலைவர் அ.கானாமிர்தன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
தனது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த சென். ஜோன்ஸ் அணி, நேற்றைய நாள் முடிவில் 26 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முதலாவது விக்கெட்டுக்காக 26 ஓட்டங்களைப் பகிர்ந்த அவ்வணி, அதன் பின்னர் விக்கெட்டுகளை இழந்தது.
துடுப்பாட்டத்தில் க. கபில்ராஜ் ஆட்டமிழக்காமல் 20 ஓட்டங்களுடன் களத்தில் காணப்படுகிறார். பந்துவீச்சில் தீபன்ராஜ் 2 விக்கெட்டுகளையும் சி.தசோபன், அணித்தலைவர் சி.அலன்ராஜ் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.