மீண்டும் திரையில் இணையும் சூர்யா-ஜோதிகா- ரசிகர்கள் உற்சாகம்!!

Surya-Jyothika-photos-10

திரையில் காதலித்தது மட்டுமில்லாமல் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டவர்கள் சூர்யா-ஜோதிகா. இதில் ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 8 வருடங்களாக நடிக்கவே இல்லை.நீண்ட இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இதை தொடர்ந்து ஜோதிகா தேசிய விருது இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.இப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து ரியல் லைப் காதல் கணவர் சூர்யாவும் நடிக்கவிருப்பதாக கிசுகிசுக்கப்படுகின்றது.

 

@ குறியீட்டைக் கண்டுபிடித்த டொம்லின்சன் தனது 74வது வயதில் மரணம்!!

ray-tomlinson-color

மின்னஞ்சல் முகவரிகளுக்கான ‘@’ குறியீட்டை கண்டுபிடித்த ரேமண்ட் டொம்லின்சன், தனது 74ஆவது வயதில் காலமானார்.

அமெரிக்காவில் பிறந்து மாஸாசுசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம்பெற்ற டொம்லின்சன், அர்பாநெட் சிஸ்டம் முறையில், வலைப்பின்னல் இணைப்பால் ஒன்றிணைக்கப்பட்டுள்ள ஒரு கணினியிலிருந்து இருந்து இன்னொரு கணினிக்குக் கடிதங்களை அனுப்பும் முறையை 1971ஆம் ஆண்டு முதன்முதலாக கண்டுபிடித்தார்.

பின்னர் @ குறியீட்டுடன், தொலைவிலுள்ள ஏனைய கணினிகளுக்கு அந்தத் தகவல்கள் போய்ச்சேரும் புதிய தொழில்நுட்பத்தையும் வடிவமைத்தார்.

இன்று மின்னஞ்சல்; என்றழைக்கப்படும் இந்த செலவில்லாத துரிதமான கடிதப் போக்குவரத்தின் தந்தையாக விளங்கிய ரே டொம்லின்சன் தனது 74ஆவது வயதில் கடந்த சனிக்கிழமை காலமானார்.

அயராத உழைப்பு மற்றும் தன்னடக்கத்தின் அடையாளமாக விளங்கிய அவரது மறைவுக்கு உலகின் பலநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான இணையதளவாசிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கூகுளின் ‘ஜிமெயில்’ குழுமமும் ரே டொம்லின்சனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளது.

பரீட்சையில் மாணவருக்கு உதவிய ஆசிரியர்கள்!!

1 (41)

பள்ளித் தேர்வின் போது மாணவருக்கு செல்போனில் விடை அனுப்பிய 3 ஆசிரியர்களை பொலிசார் கைது செய்தனர்.ஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றன.இதில், கணித தேர்வின்போது மாணவர் ஒருவர் 20 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்துக்கு வந்துள்ளார்.

தேர்வு மைய கண்காணிப்பாளர் அவரை தேர்வு எழுதுவதற்காக அனுமதிக்க சோதனையிட்டார்.அப்போது அவர் செல்போன் வைத்திருந்தது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் அந்த மாணவரின் செல்போனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளும், மிஸ்டு கால்களும் வந்த வண்ணம் இருந்தன.

குறுஞ்செய்திகளில் அன்றைய தேர்வுக்கான விடைகள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவரின் செல்போனை பறிமுதல் செய்ததுடன் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் தகவல் அளித்துள்ளார்.பின்னர் இது தொடர்பாக பொலிசாரிடன் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவருக்கு விடைகளை குறுஞ்செய்திகளாக அனுப்பியது யார், மிஸ்டு கால் அழைப்புகளை விடுத்தது யார்? என்பது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சந்தோஷ்பூர் பஞ்சாயத்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமச்சந்திர பொலாய், கஞ்சாம் பாரதி வித்யாபீட பள்ளி உதவி ஆசிரியர் பன்சிதாரா பிஸ்வால், ரவுலிபந்தா தொடக்கப்பள்ளி ஆசிரியர் நாபா பத்ரா ஆகியோர் மாணவருக்கு உதவி செய்தது தெரியவந்தது.இதையடுத்து 3 பேரையும் பொலிசார் கைது செய்தனர்.

 

டி20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பம்!!

ICC-T20-World-Cup

16 அணிகள் பங்கேற்கும் 6வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்ரல் 3ம் திகதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. முதல் சுற்று, சூப்பர்-10 சுற்று என்று இரண்டு வகையாக நடைபெறுகிறது.

முதல் சுற்றில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. ‘ஏ’ பிரிவில் பங்களாதேஷ், நெதர்லாந்து, அயர்லாந்து, ஓமன், ‘பி’ பிரிவில் ஸ்கொட்லாந்து, சிம்பாவே, ஆப்கானிஸ்தான், கொங்கொங் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி சூப்பர்-10 சுற்றுக்கு முன்னேறும்.

15ம் திகதி தொடங்கும் சூப்பர்-10 சுற்றில் தான் பிரதான அணிகள் அடியெடுத்து வைக்கின்றன. இதில் அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு மோத இருக்கின்றன. அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

சூப்பர்-10 சுற்றில் ஒரு பிரிவில் இந்திய அணியுடன் நியூசிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பெறும் அணி அங்கம் வகிக்கும். மற்றொரு பிரிவில் இங்கிலாந்து, தென்ஆபிரிக்கா, இலங்கை, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இடம் பெறுகிறது.

நாளை நடக்கும் தொடக்க ஆட்டங்களில் கொங்கொங்-சிம்பாப்வே (பிற்பகல் 3 மணி), ஆப்கானிஸ்தான்-ஸ்கொட்லாந்து (இரவு 7.30 மணி) அணிகள் நாக்பூரில் மோதுகின்றன.

சுரங்கம் தோண்டிய 10 பேர் கைது!!

arrest (1)

சட்டவிரோதமான முறையில் சுரங்கம் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட 10 பேர் நிவிதிகல – தோலஸ்வல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கஹவத்தை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதன்போது சுரங்கம் தோண்டப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி மாணிக்கக்கல் மற்றும் சுவர்ணாபரண அதிகார சபையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

60 கிலோ கஞ்சா கடத்தல் – சந்தேக நபருக்கு விளக்கமறியல்!!

arrest

பொலிகண்டி கரையோரப் பகுதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 60 கிலோ கேரளக் கஞ்சாவைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பி.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இளவாலைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இளவாலைப் பொலிஸாரும் வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து கடந்த 21 ஆம் திகதி பொலிகண்டி கடற்கரையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கு நடமாடிய இன்பர் சிட்டியைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 60 கிலோ கஞ்சாப் பொதியையும் மீட்டனர்.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் சந்தேக நபரை சில தினங்கள் வரை தடுத்து வைத்து விசாரணை நடத்திய வல்வெட்டித்துறை பொலிஸார் அண்மையில் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தினார்கள். அதன்போது எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் சந்தேக நபரை வைக்குமாறு உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி கைப்பற்றப்பட்ட கஞ்சா கான் மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்து அறிக்கையினை பெறுமாறும் பணித்தார்.

 

பதவியைத் துறந்தார் லசித் மலிங்க!!

Malinga

இருபதுக்கு 20 கிரிகெட் போட்டிகளின் தலைவர் பதவியில் இருந்து தான் இராஜினாமா செய்து கொள்வதாக லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஆசிய கிண்ண போட்டிகளின் போதும், தற்போது காயம் காரணமாக லசித் மாலிங்க ஒய்வரையிலேயே இருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15ம் திகதி இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளின் போது, அவர் வழமைக்குத் திரும்புவார் என, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஸ்ஸுக்கு கருப்பு கண்ணாடி – திடீர் நடவடிக்கை!!

chesterfield-bus

சிறைச்சாலை பஸ்கள் அனைத்துக்கும் கறுப்புக்கண்ணாடி பொறுத்தப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் நிஷாந்த தனசிங்க தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பஸ்கள், முக்கியமான சந்தேக நபர்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கலாபவன் மணியின் மரணத்தில் திடீர் சந்தேகம் : உடலில் விஷம்?

Kalapavan Mani

மரணமடைந்த பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணியின் உடலில் ‘மெத்தைல்’ கலந்த மது இருந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள நடிகரான கலாபவன் மணி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் 200 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மலையாளத்தில் கதாநாயகனாவும், தமிழ், தெலுங்கில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மறுமலர்ச்சி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர், ஜெமினி, மழை, வேல், ஆறு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவர், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினை காரணமாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது உடல்நிலை நேற்று திடீரென மோசமாகி மருத்துவர்களின் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கலாபவன் மணி உயிர் பிரிந்தது.

இந்நிலையில், கலாபவன் மணி தனது இல்லத்தில் நண்பர்களுடன் மது அருந்தியதாகவும், அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மரணமடைந்த கலாபவன் மணியின் உடலில் ‘மெத்தைல்’ கலந்த மது இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இதை தொடர்ந்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திரிச்சூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு, இன்று (திங்கட்கிழமை) கலாபவன் மணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. அதை தொடர்ந்து, பொதுமக்கள் அஞ்சலிகாக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

அவரது உடலுக்கு கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, மலையாள திரைப்பட நட்சத்திரங்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் மாலை 5 மணியளவில் அவரது இறுதி சடங்குகள் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், மறைந்த கலாபவன்மணியின் உடலில் மெத்தனால் கலந்த மது இருந்ததாக அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காவல் துறையிடம் கூறி இருப்பதாக தெரிகிறது. அதன் அடிப்படையிலும் தீவிர விசாரணை நடத்தி வரும் காவல் துறை, பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின் தான் எதையும் உறுதியாக கூற முடியும் என்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் ஹிலாரி தோல்வி!!

Hilary

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 8ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பாளர் தேர்வு தீவிரமாக நடைபெறுகிறது. ஜனநாயக கட்சியில் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், பெர்னி சாண்டர்ஸ் ஆகியோரிடையே போட்டி நிலவுகிறது.

குடியரசு கட்சியில் கோடீசுவரர் டொனால்டு டிரம்ப் மற்றும் டெட் குரூஸ் இடையே கடும் போட்டி உள்ளது. தற்போது மாகாண ரீதியாக வேட்பாளர் போட்டி பிரசாரம் மற்றும் வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஓட்டெடுப்பில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் டெக்சாஸ், அர்கன்சாஸ், அலபாமா, டென்னிசே, ஜார்ஜியா, விர்ஜினியா ஆகிய 6 மாகாணங்களில் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் விர்ஜினியா, அலபாமா, மசாசூ செட்ஸ், டென்னிசே ஆகிய 4 மாகாணங்களில் வென்றார்.

இந்த நிலையில் நேற்று 5 மாகாணங்களில் ஓட்டெடுப்பு நடந்தது. அதில் குடியரசு கட்சியின் முன்னணி வேட்பாளராக திகழும் டொனால்டு டிரம்ப் கன்சாஸ், மெய்னே காகசஸ் ஆகிய 2 தொகுதிகளில் தோல்வியை தழுவினர். இங்கு இவரை எதிர்த்து போட்டியிடும் டெட் குரூஸ் வெற்றி பெற்றார்.

அதேபோன்று ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கன்சாஸ், நெப் ரஸ்கா ஆகிய மாகாணங்களில் ஹிலாரி கிளிண்டனின் எதிர்ப்பாளர் பெர்னி சாண்டர்சை வென்றார்.

இதற்கிடையே அடுத்து நடைபெறும் தேர்தல்களில் கென்ட் கசிகாசஸ், மற்றும் லூசியானாவில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்புக்கு வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் லீசியானாவில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, ஹிலாரி கிளிண்டன்– மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே தொடர்ந்து கடும் போட்டி நிலவுகிறது.

நல்லிணக்கத்துக்கான சிறந்த எடுத்துக்காட்டு மகா சிவராத்திரி!!

Maithiri

மனிதன் மேற்கொள்ளும் தெய்வீக சமயா சாரங்கள், அனுஷ்டானங்களின் ஊடாக முழு பிரபஞ்சத்தினதும் நன்மை, நன்நெறிகள் மீதான அவனது எல்லையற்ற பக்தி வெளிப்படுகின்றதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள சிவராத்திரி தின செய்தியில் தெரிவித்துள்ளார்.

அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, உலகெங்கிலுமுள்ள இலட்சக் கணக்கான இந்து பக்தர்கள் தங்களிடம் ஆன்மீக நல்லொழுக்கப் பெறுமானங்களை வளர்த்துக் கொள்ளவும் லௌகீக வாழ்க்கையை மிகச் சிறப்பான முறையில் அமைத்துக்கொள்ளவும் அனுஷ்டிக்கின்ற மகா சிவராத்திரி தினத்தின் ஊடாக வெளிப்படுவது நன்மைகளின் மீதான மனிதனது உயர்ந்த ஈடுபாடும் பிணைப்புமாகும்.

இந்நன்னாளில் இந்து பக்தர்கள் அமைதியையும் மன ஆறுதலையும் எதிர்பார்ப்பதோடு, அவர்களது சகல ஆசாபாசங்கள் மற்றும் சமய அனுஷ்டானங்களின் போதும் பரஸ்பரம் ஒருவர் மற்றொருவருக்காக நல்லிணக்கமான வாழ்வுக்காகப் பிரார்த்திக்கின்றார்கள். நீண்ட நெடுங்காலமாக மனித உள்ளங்களில் கருக்கொண்டு தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வரும் இத்தகைய பாரம்பரியங்கள் எப்போதும் மனிதனது அமைதியான சமாதானமான வாழ்க்கைக்கு வழிகோலுவதாகவே அமைந்துள்ளன.

கடவுளும் மனிதனும் ஒரே புள்ளியில் சந்திக்கும் இத்தகைய சமய அனுஷ்டானங்கள் மூலம் சமூகத்திற்குக் கிடைக்கும் நற்செய்தி முழு மனித சமூகத்தினதும் மதிப்பிற்கும் அங்கீகாரத்திற்கும் பாத்திரமாய் அமைகின்றன.

மகா சிவராத்திரி தினத்தை அதன் உண்மையான அர்த்தத்துடன் அனுஷ்டிக்கும் சகல இந்து பக்தர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என அவ்வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையர்களுக்கு அர்த்தபூர்வமான சிவராத்திரி அமைய பிரதமர் வாழ்த்து!!

Ranil

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மகா சிவராத்திரியை முன்னிட்டு தனது வாழ்த்துச்செய்தி ஒன்றை வௌியிட்டுள்ளார். அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..

உலகம் முழுவதுமுள்ள இந்து பக்தர்கள் மாசி மாதம் அமாவாசை தினத்தன்று உதயமாகும் மகா சிவராத்திரி தினத்தை வெகுவிமர்சையாகக் கொண்டாடுகின்றனர். இந்த இரவு சிவபெருமானின் விருப்பத்துக்குரிய இரவாகவும் கருதப்படுகிறது.

இத்தினத்தில் தமது ஆன்மீக வாழ்வை ஒளியூட்டிக் கொள்ளும் நோக்கத்துடன் இந்து பக்தர்கள் இரவு முழுவதும் நித்திரையின்றி விரதம் அனுஷ்டிப்பதோடு, புண்ணிய கருமங்களிலும் ஈடுபடுவர். ஒளிரும் விளக்கு மூலம் இரவு ஒளியூட்டப்படுவது போன்று அறியாமை இருள் நீங்கி வாழ்க்கை குறித்த விளக்கம் கிடைக்கட்டும் என்று இந்த இரவில் அவர்கள் பிரார்த்திக்கின்றனர்.

சிவராத்திரியை அர்த்த மிக்கதாக கழிப்பதன் ஊடாக விடுதலைக்கான வழியை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது அவர்களது நம்பிக்கையாகும்.

சுதந்திரம், நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தை அடைந்துகொள்வதற்கு பாரிய அர்ப்பணிப்பு, பொறுமை, துணிச்சல், மானிட அன்பு அவசியம் என்பதில் சந்தேகமில்லை. இன, மத பேதங்களை விதைத்து எமது நாட்டை இருளில் தள்ளுவதற்குப் பல்வேறு சக்திகள் செயற்பட்டுக்கொண்டிருக்கும். இச்சந்தர்ப்பத்தில், மனிதநேயத்தைக் கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்வதற்கும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்குமான ஒரு சந்தர்ப்பமாகமகா சிவராத்திரிதினத்தை ஆக்கிக் கொள்வோம்.

சகோதர இந்து மக்களுக்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் அர்த்தபூர்வமான மகா சிவராத்திரி தினமாக அமையட்டும் என்று பிரார்த்திக்கிறேன் என பிரதமரின் வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்!!

Sivan

மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். சிவனுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை புராணங்கள் குறிப்பிடுகின்றன. அவை சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பனவையாகும்.

மா‌சி மாத‌த்‌தி‌ல் தே‌ய்‌பிறை கால‌த்‌தி‌ல் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நாளையே நா‌ம் மகா ‌சிவரா‌த்‌தி‌ரியாக ‌கொண்டாடுகின்றோம். அ‌‌ன்றைய ‌தின‌ம் ‌விரத‌மிரு‌ந்து ‌சிவாலய‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ன்று இறைவனை வண‌ங்குவதா‌ல் இறைவ‌னி‌ன் அருளை‌ப் பெறலா‌ம்.

பார்வதி வழிபாடு..

மா‌சி மாத சது‌ர்‌த்த‌சி அ‌‌ன்றுதா‌ன், பா‌ர்‌வ‌தி தே‌வி, ‌சிவபெருமானை எ‌ண்‌ணி வ‌ழிப‌ட்ட நாளாகு‌ம். அதனை ‌சிற‌ப்‌பி‌க்கவே ஒ‌வ்வொரு மாதமு‌ம் வரு‌ம் சது‌ர்‌த்த‌சி நாள‌ன்று ‌சிவரா‌த்‌தி‌ரியாக நா‌ம் வழிபடுகின்றோம். பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

ஐந்துவகை சிவராத்திரி..

சிவராத்திரி ஐந்து வகைப்படும். அவை நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாதசிவராத்திரி, யோகசிவராத்திரி, மகா சிவராத்திரி. மாசிமாதம் தேய்பிறை சதுர்த்தசி நாளை மகாசிவராத்திரியாக சிவாலயங்களில் கொண்டாடுகிறோம். ராத்ர என்னும் சொல்லுக்கு செயலற்று ஒடுங்கி நிற்கும் காலம் என்று பொருள். இதனையே சம்கார காலம் அல்லது பிரளயகாலம் என்று குறிப்பிடுவர். ஒவ்வொரு நாள் இரவும் உயிர்கள் தூக்கத்தில் ஒடுங்கி செயலற்று விடுகின்றன. அதனையே நித்திய சிவராத்திரி என்று குறிப்பிடுவர்.

தைமாத தேய்பிறை சதுர்த்தசியில் வருவது பட்ச சிவராத்திரி. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருவது மாத சிவராத்திரி. சோமவாரமான திங்கட்கிழமை சிவராத்திரி வந்தால் யோக சிவராத்திரி என்பர். மாசிமாத சிவராத்திரி மகாசிவராத்திரி.

அம்பிகையின் கோரிக்கை..

மகா ‌சிவரா‌த்‌தி‌ரியை‌ப் பற்றிய புராண‌க் கதைக‌ள் பல உ‌ள்ளன. அ‌தி‌ல் மு‌க்‌கியமாக‌க் கூற‌ப்படு‌ம் கதை ஒ‌ன்று உ‌‌ள்ளது. அதாவது பிரளய காலம், பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டனர். உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே இ‌ல்லாம‌ல் இரு‌ந்தது.

இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை, அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்.

அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெற வேண்டும் என்றும், அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றா‌ர்க‌ள் எ‌ன்று புராண‌‌த்‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

சிவராத்திரி விரதம்..

சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும். விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்.

மறுநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். மனிதராய் பிறந்த யாரும் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

நான்கு கால பூஜை..

மகாசிவராத்திரியன்று நான்குகாலஅபிஷேகம் சிவபெருமானுக்கு நடைபெறும். போது ஒவ்வொரு காலத்திலும் சிவபெருமானின் ஒவ்வொரு கோலத்தை வழிபடவேண்டும். முதல்காலத்தில் முருகப்பெருமானை நடுவில் அமர்த்தி உமாதேவியும், சிவபெருமானும் காட்சிதரும் சோமாஸ்கந்தரை வழிபடுவர். இரண்டாம்காலத்தில் தென்முகக்கடவுளான தட்சிணாமூர்த்தியை வணங்கவேண்டும். 3ம் காலத்தில் கருவறையின் பின்புறமுள்ள லிங்கோத்பவரை தரிசிக்கவேண்டும். நான்காம் காலத்தில் ரிஷபவாகன சிவனான சந்திரசேகரரை வழிபடவேண்டும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கே பிறகே சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

அபிஷேகப் பொருட்கள்..

சிவராத்திரியன்று சிவாலயத்திற்கு வில்வ இலையுடன் செல்ல வேண்டும். இரவு கடைசி சாம பூஜை வரை அங்கே இருக்க வேண்டும். சிவாய நம என உச்சரிக்க வேண்டும். அன்று சாப்பிடக்கூடாது. நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். முதல் சாம பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் ஜாமத்திற்கு வெண்ணெய், நான்காவது சாமத்திற்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோயிலில் ஒப்படைக்க வேண்டும்.

மகா சிவராத்திரி தினத்தில் லிங்க தரிசனம் செய்வதுடன், சிவலிங்கத் திருமேனியைப் போற்றும் லிங்கப் புராண குறுந்தொகை முதலான தெய்வப் பாடல்களைப் பாடி வழிபடுவது சிறப்பு. அந்த வகையில் சிவனாரைத் துதிக்கும் லிங்காஷ்டகம் பெரிதும் மகிமை வாய்ந்தது. ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகத்தைப் படிப்பதால், ஜாதகத்தில் சூரியன் மற்றும் குருவால் ஏற்படும் குறைகள் நீங்கும், பிணிகளும் அகன்று நலம் பெறலாம். சகல மங்கலங்களும் உண்டாகும்.

செல்வவளம் தரும் சிவராத்திரி..

மகாபாரதம் சாந்தி பர்வத்தில் சிவராத்திரியின் மகத்துவம் கூறப்பட்டுள்ளது. அம்பு படுக்கையில் கிடந்த பீஷ்மர், சிவராத்திரி விரத மகிமையை பாண்டவர்களுக்கு சொன்னார். இக்ஷ்வாகு குலத்தில் பிறந்த மன்னர் சித்திரபானு. அஷ்டவக்கிர முனிவர் ஒரு சிவராத்திரி நாளில் மன்னனைச் சந்திக்க வந்தார். விரதமிருந்த மன்னன், முனிவரிடம், தான் மன்னனாக உயர்ந்த காரணத்தை தெரிவித்தார்.

முற்பிறவியில் சுஸ்வரன் என்னும் வேடனாக நான் வாழ்ந்தேன். வேட்டையாடி மாமிசத்தை விற்பது என் தொழில். ஒருநாள், பகலில் மிருகம் ஏதும் சிக்கவில்லை. இரவான பிறகு மான் ஒன்றைக் கொன்றேன். காட்டிலேயே தங்கிவிட்டேன். மிருகங்களிடமிருந்து தப்ப ஒரு மரத்தில் ஏறிக் கொண்டேன். பசிமயக்கத்தால் தூக்கம் வரவில்லை. இலைகளைப் பறித்து கீழே போட்டபடி இருந்தேன்.

பொழுது புலர்ந்து விட்டது. அந்த நாள் சிவராத்திரி என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. மரணம் ஏற்பட்டு என் உயிர் நீங்கிய பின், இரு சிவதூதர்கள் என்னை அழைத்துச் செல்ல வந்தனர். நீ வேட்டையாடச் சென்ற நாள் சிவராத்திரி. அன்று நீ ஏறியது வில்வமரம். மரத்தடியில் ஒரு சிவலிங்கம் இருந்தது. நீ வில்வ இலைகளைப் பறித்துப் போட்டபடி இருந்தாய். உறங்கவும் இல்லை. அறியாமல் செய்தாலும், சிவராத்திரியன்று லிங்கத்துக்கு வில்வார்ச்சனையால் உனக்கு நற்கதி கிடைத்தது என்றனர். அதனால், நாடாளும் மன்னனாக சித்திரபானு என்ற பெயரில் இப்பிறவியில் பிறக்கும் பேறு பெற்றேன் என்றார்.

அறியாமல் செய்த அர்ச்சனையே ஒரு வேடனை நாட்டின் மன்னன் ஆகும் அளவிற்கு உயர்த்தியது. எனவே பக்தியுடன் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள், எத்தனை பிறவி எடுத்தாலும் பணக்காரர்களாக இருப்பர். அவர்களது சந்ததியும் செல்வவளத்துடன் திகழும் என்று கூறப்படுகிறது. எனவே சிவராத்திரி தினத்தன்று அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சென்று கண்விழித்து சிவ புராணம் படித்து இறைவன் அருள் பெருவோம்.

 

வவுனியா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் சிறுவர்களுக்கு அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு!!

 
வவுனியா ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சிறுவர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கு சிவகாமி பவுண்டேசன் நிறுவனத்தினாரால் நேற்று (06.03.2016) ஆடைகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டன.

இன் நிகழ்வின் போது எமது செய்தியாளரின் மனதினை நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்றும் நடைபெற்றது

சிறுவன் ஒருவன் கண்கலங்கியவாறு பின்வருமாறு தெரிவித்தான்

“எனக்கு ஐந்து வயது, நான் கடந்த 2009ம் ஆண்டிலிருந்து இங்குதான் வசித்து வருகின்றேன். எனக்கு அப்பா இல்லை அம்மா மட்டும்தான் அம்மாவிற்கு கஸ்டம் என்று என்னை இங்கு சேர்த்துவிட்டார்” எனத் தெரிவித்தான்.

DSC_0111 DSC_0112 DSC_0113 DSC_0114 DSC_0115 DSC_0116 DSC_0117 DSC_0118 DSC_0119 DSC_0120 DSC_0121 DSC_0122 DSC_0123 DSC_0124

வவுனியாவில் அகில இலங்கை சைவ மகாசபையின் சைவத்தமிழ் இளைஞர் மாநாடு!!

 
அகில இலங்கை சைவ மகாசபையால் மகா சிவராத்திரி நிகழ்வை முன்னிட்டு சைவத்தமிழ் இளைஞர் மாநாடு வவுனியா கோவிற்குளம் சிவன் கோவில் முதியோர் இல்லத்தில் நேற்று (06.03.2016) நடைபெற்றது.

இவ் மாநாடானது வவுனியா வேப்பங்குளம் ஞானவைரவர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி நடைபவணியாக கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரி (சிவன்) ஆலயத்தை சென்றடைந்து, காலை 10 மணிக்கு ஆரம்பமான சைவத் தமிழ் இளைஞர் மாநாட்டில் சைவ மகாசபை, சிவஞான சித்த பீடம் இறுவட்டு வெளீயீடும் நிகழ்வும் இடம்பெற்றது

இவ் மாநாட்டில் பிரதம விருந்தினராக சிவத்திரு.சீ.யோகேஸ்வரன் (மட்டக்களப்பு நாடளுமன்ற உறுப்பினரும் கிழக்கிழங்கை இந்து இளைஞர் பேரவைத் தலைவரும்), கௌரவ விருந்தினராக திருமிகு.நா.குமரகுருபரன் (அமைப்பாளர் சர்வதேச இந்து இளைஞர் சங்கம்) மற்றும் சிவத்திரு நவரட்ணநாஜா (தர்மகத்தா கோவிற்குளம் அகிலாண்டேஸ்வரர் ஆலயம்), மத குருமார்கள், அறநெறி மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

DSC_0009 DSC_0013 DSC_0030 DSC_0055 DSC_0056 DSC_0065 DSC_0072 DSC_0073 DSC_0081 DSC_0086 DSC_0096 DSC_0100

பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஆசிய சம்பியன் பட்டத்தை கைப்பற்றிய இந்தியா!!

12806106_991954174173031_4233593053065589620_n

ஆசிய கிண்ண T20 போட்டியின் இறுதி ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

ஆசிய கிண்ணம் T20 போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் டோனி பந்து வீச்சை தெரிவு செய்தார்.

மழை காரணமாக 5 ஓவர்கள் குறைக்கப்பட்டன. இதனையடுத்து வங்கதேசத்தின் துவக்க வீரர்களாக தமிம் இக்பால் மற்றும் சவும்யா சர்கர் களமிறங்கினர்.

15 ஓவர்கள் ஆட்டம் என்பதால் அடித்து ஆட வேண்டிய கட்டாயத்துக்கு வீரர்கள் தள்ளப்பட்டனர். இந்நிலையில் சர்கர் 14 ஓட்டங்களிலும் தமிம் 13 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த சபீர் ரஹ்மான் மற்றும் ஷாகிப் அல் ஹசன் பொறுப்புடன் விளையாடியனர்.

அணியின் எண்ணிக்கை 64 ஓட்டங்களாக இருந்தபோது ஹசன் 21 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஹிம் மற்றும் மொர்டாசா சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அந்த அணியின் மொகமதுல்லா இறுதி கட்டத்தில் இந்திய வீரர்களின் பந்தை அடித்து ஆடினார். இதனால் வங்கதேச அணி 15 ஓவர்களில் 120 ஓட்டங்கள் எடுத்தது. ரஹ்மான் 32 ஓட்டங்களுடனும் மொகமதுல்லா 33 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதையடுத்து 121 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

ரோகித் சர்மா 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். எனினும் தவான் மற்றும் விராத் கோஹ்லி இணை சிறப்பாக விளையாடியது.

இந்நிலையில் 9 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 60 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தவான் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தது. பின்னர் கோஹ்லியுடன் இணைந்த டோனி சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.

அதன்படி 13.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் எடுத்து இந்தியா வெற்றிபெற்றது.

கோஹ்லி 5 நான்கு ஓட்டங்கள் உட்பட 41 ஓட்டங்களுடனும் டோனி 1 நான்கு ஓட்டம் 2 ஆறு ஓட்டம் உட்பட 20 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் முதல் ஆசிய கிண்ணம் T20 தொடரை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா பெற்றுள்ளது.

இப் போட்டியின் சிறப்பாட்டக் காரராக சிகர் தவானும் தொடரின் சிறப்பாட்டக்காரராக சபீர் ரஹ்மானும் தெரிவுசெய்யப்பட்டனர்.