முட்டாள்கள் தினமான இன்று மட்டக்களப்பில் உள்ள முதியவர் ஒருவர் புகைபிடிப்பவர்களுக்கு வினோதமான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இவர் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு செய்தியொன்றை வழங்க வேண்டும் என்ற நோக்கில் தனது மாட்டு வண்டியில் வினோதமான முறையில் பரிசுப் பொதிகளுடன் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை காட்சிப்படுத்தியிருந்தார்.
இன்னும் சிகரட் புகைக்கும் உங்கள் சிலருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், இந்த வாழ்த்துக்கள் உங்களுக்கு பொருத்தமற்றது எனின் பொருத்தமானவர்களுக்கு கொடுத்து வாழ்த்துங்கள், இவ்வருடம் இவ்வாழ்த்து உமக்கு பொருந்துமாயின் அடுத்த வருடம் பொருந்தாமல் இருக்க வாழ்த்துகின்றோம்..” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளை மாட்டு வண்டியில் காட்சிப்படுத்தியிருந்தார்.
உலகலாவிய ரீதியில் இன்றைய தினம் முக்கிய நாளாக காணப்படுவதால் அவரின் இச் செயலானது அனைவரினதும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
உரித்தால் கண்களில் கண்ணீர் வரவைக்காத புதிய வெங்காயத்தினை ஜப்பான் நிறுவனம் கண்டறிந்துள்ளது.
வெங்காயத்தை உரிக்கும் வேளையிலும், நறுக்கும் வேளையிலும் கண்ணீர் வருவதை கண்டு, இவ்வளவு கஷ்டப்பட்டு உள்ளே ஒன்றுமே இல்லாத ஒரு வெங்காயத்தை நாம் ஏன் உரிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருப்பார்களோ, என்னவோ.
இந்த கஷ்டம் அடுத்த தலைமுறையினருக்கும் தொடர வேண்டாம் என்று நினைத்த ஜப்பானிய வேளாண்மை அறிவியல் துறையினர், உரித்தாலும், நறுக்கினாலும் அருகில் இருப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்காத நவீன ரக வெங்காயத்தை கண்டுபிடிப்பதில் தற்போது வெற்றியடைந்துள்ளனர்.
வெங்காயத்தில் கத்தி படும் வேளையில் அது வெளியேற்றும் வேதிக்கலவை தான் இந்த கண்ணீருக்கான காரணம் என்பதை கண்டறிந்த ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள், அந்த வேதிக்கலவை நீக்கப்பட்ட வெங்காய வித்துக்களை சமீபத்தில் உருவாக்கினர்.
அவற்றை நட்டு, வளர்த்து இந்த நவீன வகை வெங்காயங்களை விளைவித்து தற்போது சாதனை படைத்துள்ளனர். இதற்கான காப்புரிமையை பெற்றுள்ள ஒரு ஜப்பானிய நிறுவனம், இந்த வெங்காயம் வர்த்தக ரீதியாக விற்பனைக்கு வருமா என்பது தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆனார் நம்மவர்கள் கண்ணீர் வராமல் வெங்காயத்தை உரிப்பதற்காக வெங்காயத்தை நீரில் ஊறவைத்து வெட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொம்பன் படப் பிரச்னை குறித்து நாம் தமிழர் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது..
கொம்பன் படத்தில் சாதிய சீண்டல்கள் இருப்பதாக மருத்துவர் கிருஷ்ணசாமி கிளப்பிய புகாருக்குப் படம் பார்த்த நடுநிலையாளர்கள் உரிய நம்பிக்கையைப் பதிலாகச் சொல்லி இருக்கிறார்கள்.
நடிகர் சரத்குமார், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு, இயக்குநர்கள் சங்கத் தலைவர் விக்கிரமன் உள்ளிட்டோர் நேற்று கொம்பன் படத்தை முழுதாகப் பார்த்து, படத்தில் சாதிய மோதலுக்கான எந்த அறிகுறியும் இல்லை எனச் சொல்லியிருக்கிறார்கள்.
நிறைய படங்களை இயக்கி இருக்கும் இயக்குநர் விக்கிரமன், ”கொம்பன் படத்தில் சாதி மற்றும் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் இருப்பதாக யாராவது நிரூபித்தால், நான் இனிமேல் படம் எடுப்பதையே நிறுத்தி விடுகிறேன்” எனச் சொல்லியிருக்கிறார்.
இத்தகைய நம்பகமான கருத்துகளுக்குப் பிறகாவது அண்ணன் கிருஷ்ணசாமி கொம்பன் படத்துக்கான எதிர்ப்பைக் கைவிட வேண்டும். ஆனால், இப்போதும் ‘கொம்பன் படம் வெளியானால் சாதிய மோதல்கள் உருவாகும்’ என அண்ணன் கிருஷ்ணசாமி திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருப்பது, ஒருவகையில் இத்தகைய மோதலைத்தான் இவர் விரும்புகிறாரோ என எண்ண வைக்கிறது.
‘கொம்பன் படத்தில் சாதிய பிரச்னை’ எனப் பேசிக்கொண்டே இருந்தால், அது உண்மையான சாதியப் பிரச்னையாகவே மாறிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் மரியாதைக்குரிய தலைவராக இருக்கும் அண்ணன் கிருஷ்ணசாமி, இத்தகைய அபாயத்தை உணராமல் ஒரு திரைப்படத்துக்கு எதிராகக் கொடிபிடித்துக் கொண்டு இருக்கக்கூடாது.
திரைத்துறைக்கு அடுத்தடுத்து நிலவும் இத்தகைய ஆபத்துகளைச் சகித்துக் கொண்டு இருக்க முடியாது.
இன்று படம் வெளியாக இருக்கும் நிலையில், அண்ணன் கிருஷ்ணசாமி அவர்களே படத்தை நேரடியாகப் பார்த்து அதன் உண்மைத்தன்மையை அறிய வாய்ப்பிருக்கிறது.
இதற்கிடையில் கொம்பன் வெளியீட்டுக்கும் ‘நண்பேண்டா’ வெளியீட்டுக்கும் இடையே எந்த பிரச்னையும் இல்லை என நண்பேண்டா படக்குழுவினரே என்னைத் தொடர்புகொண்டு பேசினார்கள்.
திரைத்துறை எத்தகைய மோதலோடும் இல்லாமல் கலைப்பணி ஆற்றும் களமாக இருக்க வேண்டும் என்பதையே நாம் தமிழர் கட்சி விரும்புகிறது. எனவே பெருமதிப்புமிக்க மருத்துவர் கிருஷ்ணசாமி அவர்கள் கொம்பன் பிரச்சனையை மேற்கொண்டும் பெரிதாக்காமல், அமைதிகாக்க வேண்டும்.
மிகுந்த பொருளாதார பிரச்னைகளுக்கு மத்தியில் உருவாகும் திரைப்படங்கள் இத்தகைய நெருக்கடிகளுக்கு ஆளாகும் போது அது திரைத்துறையையே நலிந்து போக வைத்துவிடும்.
தமிழ்த்திரைத்துறையைக் காக்க வேண்டிய கடமை ஒரு தமிழராக அண்ணன் கிருஷ்ணசாமிக்கும் இருக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார்.
உலகின் மூத்த பெண்மணியாக கருதப்படுகின்ற ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மிசாவோ ஒகாவா இன்று புதன்கிழமை மரணமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒகாவா இம்மாதம் 5 ஆம் திகதி தனது 92 வயது மகனுடன் பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். ஏற்கனவே சுகயீனமுற்றிருந்த அவருக்கு பசியின்மை அதிகரித்து வந்தது. இந்நிலையிலேயே தனது 117 ஆவது வயதில் அவர் மரணத்தை தழுவினார்.
உலகில் அதிகூடிய வயதான பெண்மணி என்ற பெருமைக்குரியவராக 2013 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவானார் ஒகாவா.
நிறையுணவு, தினமும் 8 மணிநேர நித்திரை, உடற்பயிற்சி போன்றவையே நீண்ட காலம் வாழ்வதற்கு வழிவகுத்ததாக ஒகாவா ஆங்கில நாளிதழுக்கு வழங்கியிருந்த செவ்வியில் தெரிவித்திருந்தார்.
ஒகாவா 1898 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி பிறந்தார். இவருக்கு 114 வயதாகும் போது உலக சாதனைப் புத்தகமான கின்னஸில் இடம்பெறுவதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அளித்த வாக்குறுதிக்கு அமைய சீமெந்துக்கான நிர்ணய விலை உள்ளடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி எந்தவொரு இலட்சினையின் கீழும் விற்பனை செய்யப்படும் 50 கிலோ சீமெந்து ஒரு மூடையின் விலை 870 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிர்ணய விலைக்கு சீமெந்து விற்பனை செய்யாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் சிரியாவில் உள்ள கிராமத்திற்குள் புகுந்து 30 பேரின் தலையை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐஎஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய சிரியா மாகாணத்தில் உள்ள ஹாமாவின் அல் மபுஜாக் கிராமத்திற்குள் நேற்று புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகி உள்ளதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
காலை 2.30 மணியில் இருந்து 6.30 மணிவரை நடந்த இந்த தாக்குதலில், பலரின் தலைகளை துண்டித்தும், தீவைத்து எரித்தும் கொன்றுள்ளனர்.
அமெரிக்காவில் தாய் ஒருவர் ஹோட்டல் கழிவறையில் வைத்து தனது குழந்தையை கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மிட்டவுனில் உள்ள போரோ பர்கர் ஹொட்டலுக்கு, லிதிஷா பிஷர் ( 35 ) என்ற பெண் தனது 20 மாத மகன் காவிரியல் ஆர்டிஸ்சுடன் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில் தனது மகனின் வாயை கைகளால் மூடி ஹோட்டலின் கழிவறைக்குள் கொண்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் ஊழியர்கள் கழிவறையை சூழ்ந்து கொண்டு சத்தம் போட்டனர்.
ஆனால், லிதிஷா கழிவறையின் கதவை உள்பக்கமாக பூட்டி கொண்டார், பின்னர் தொழிலாளர்கள் கதவை உடைத்து திறந்தபோது, குழந்தை மயங்கிய நிலையில் இருந்தது.
உடனடியாக ஊழியர்கள் குழந்தைக்கு முதலுதவி அளிக்க முயன்றனர். ஆனால் அதை லிதிஷா தடுத்து விட்டார். பின்னர் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து லிதிஷாவை கைது செய்த பொலிசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
7 மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் தாக்க தயாராகும் அதிநவீன விமானத்தை தயாரிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
உலகின் எந்த மூலைக்கும் ஆயுதங்களையும், ராணுவ டாங்கிகளையும், காலாட்படைகளையும் அனுப்பி வைக்கும் ராட்சத சக்தி கொண்ட அதிநவீன விமானத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
‘PAK TA’ என்ற பெயரில் தயாரிக்கப்படும் இந்த விமானம், சுமார் 400 ராணுவ டாங்கிகளையும், அவற்றுக்கு தேவையான வெடிப் பொருட்களையும் ஒரே வேளையில் சுமந்து கொண்டு ஏழே மணி நேரத்தில் உலகின் எந்த மூலையையும் சென்றடைந்து விடும்.
மணிக்கு 2 ஆயிரம் கிலோ மீற்றர் வேகத்தில் வழியில் எங்கும் நிற்காமல் சுமார் 7 ஆயிரம் கிலோ மீற்றர் தூரம் வரையில் பறக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள இந்த விமானம், 200 டன் எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டதாக இருக்கும் என ரஷ்யாவின் ராணுவ தொழில் கமிஷன் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்பதினோராம் நாள் 30-03 -2014 திங்கட்கிழமைகைலாச வாகன உற்சவம் இடம்பெற்றது.
கைலாச வாகன உற்சவம் கொண்டாடபடுவதன் கைங்கரியம் என்னவெனில் இராவணன் தனக்கு சமனாக யாருமே இருக்கக் கூடாது அந்தப் பரம்பொருளேயாயினும் என்று அகங்காரம் பட்டு, அந்தப் பரம்பொருளை கயிலையில் இருக்கும் சிவபெருமானாகக் கருதி அந்தக் கையிலயையே அசைத்து தனது அதிகாரத்தை அங்கு நிறுவ முயன்று ஓர் தேரில் மிக விரைவாக சென்றான் இராவணன்.
அப்போது அந்த தேர்பாகன் அதை கண்டு பொறுக்காது இயலாமையும் உணர்ந்து , அந்தக் கைலாயம் மீது இந்த தேர் செல்லாது என்பதோடு அவ்வாறு செலுத்துவது தருமமும் அன்று என்று மொழிவான். அதனை கேட்டும் மனம் திருந்தாது, அந்தப் பாகனை சினந்து இன்னும் விரைவாக செலுத்துக என்றான். இவ்வாறு மிக விரைவாக சென்று கைலையை அடைந்து சிவபெருமான் பார்வதியோடு இருக்கும் கயிலாய மலையை அசைக்க கருதி எடுக்க, அது கண்டு சிவபெருமான் சிறிதே தன் விரலால் நசுக்க, நசியுண்டு தலையில் இருந்த கிரீடம் உடம்பு எல்லாம் நெடு நெடுவென தளர்ந்து விழ , அவனும் அலறி தன் தவற்றினை உணரத்தான். இப்படிப்பட்ட வல்லமை மிக்க இறைவனை இன்றைய நிலையில் நினைவு கூர்ந்து கைலாச வாகன காட்சி திருவிழா கொண்டாடப்படுகிறது .
வழமை போன்று மாலையில் மகோற்சவ குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் தலைமையில் அபிசேகங்கள் பூஜைகளின் நிறைவில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கைலாச வாகனத்திலும் விநாயகர் இடப வாகனத்திலும் வள்ளி தெய்வானை சமேத முருகபெருமான் இடபவாகனத்திலும் திருவீதி உலா வந்த காட்சியும் இடம்பெற்றது.
கண்ணாடிப் பாளங்கள் (சீட் கிளாஸ்) விற்பனை செய்யும் நிறுவன களஞ்சிய அறையில் கண்ணாடிப் பாளங்கள் சரிந்து விழுந்ததில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் 28 வயது இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரண மடைந்துள்ளார். இதைப் பார்த்த கடை உரிமையாளருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டி, மஹய்யாவைப் பகுதியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மரணித்தவர் கெலிஓயாப் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் எனத் தெரிய வருகிறது.
சுமார் 120 கிலோ எடைகொண்ட சீட் கண்ணாடிகளே இவர் மீது விழுந்துள்ளன. இவர் கண்ணாடிப் பாளங்களை கையாழும்போது இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் நடக்கும் போது நேரில் யாரும் காணவில்லை எனத் தெரிவிக்கப் படுகிறது.பின்னர் ஸ்தலத்திற்கு கண்டி மாநகர சபையின் தீயணைக்கும் பிரிவினர் அழைக்கப்பட்டு காயமடைந்தவரை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்ல எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.
அதே நேரம் கண்ணாடி களஞ்சிய உரிமையாளர் ஸ்தலத்திற்கு வந்த போது சம்பவத்தை நேரில் கண்டதினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருதயப் பாதிப்பிற்குள்ளாகி கண்டி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அட்டன் புரூட்ஹில் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 17 வயதுடைய மற்றும் 18 வயதுடைய ஆகிய இரு மாணவிகள் பரீட்சை பெறுப்பேற்றை காரணமாகக் கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.
பரீட்சை பெறுபேற்றை பார்த்த இவ்விரு மாணவிகளும் நினைத்த பெறுபேறு கிடைக்காததால் இவ்வாறு தற்கொலை முயற்சி செய்துள்ளனர். இதில் ஒரு மாணவி கால்நடைகளுக்கு வழங்கப்படும் மாற்று மருந்தை உட்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் உடனடியாக அயலவர்கள் இவர்களை டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தற்போது இரு மாணவிகளும் உடல் நலத்தோடு சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சையின் பின் வீடு திரும்பலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை கடந்த 25 வருடங்களின் பின்னர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, ஹோமாகம முதல் கொழும்பு கோட்டைக்கு இடையிலான ரயில் சேவைகளும் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய ஹோமாகம தொடக்கம் கோட்டை ரயில் நிலையம் வரையிலான ரயில் சேவை இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், 25 வருடங்களின் பின்னரான கொழும்பு கோட்டை நிலையத்தில் இருந்து தலைமன்னாருக்கான ரயில் சேவை இன்று மாலை 7.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு ரயில் சேவைகளின் நேர அட்டவணைகள் இன்று தொடக்கம் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆகுரோவா தோட்டத்தில் நாய் ஒன்று பூனை குட்டிக்கு பால் கொடுக்கும் அதிசய சம்பவம் இத்தோட்ட மக்கள் மத்தியில் பெரும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாயும் பூனையும் என்றால் எதிரிகளாகவே இருக்கும். சில சமயங்களில் நண்பர்களாகவும் இருக்கும். ஆனால் அதுவும் அபூர்வமாகதான் இருக்கும். அவ்வாறான அபூர்வமான காட்சிதான்
ஆகுரோவா தோட்டத்தில் உள்ள சௌந்தராஜன் என்பவர் தனது வீட்டில் இடம்பெற்றுள்ளது.
சௌந்தராஜன் என்பவர் செல்லப் பிராணிகளாக குறித்த நாயையும் பூனையையும் வளர்த்து வருகின்றார். இந்நிலையில் பசியில் தவிக்கும் பூனை குட்டிக்கு பாசத்துடன் நாய் பாலூட்டி வருகின்றது.
இந்த அதிசய சம்பவத்தை பார்வையிட பிரதேச மக்கள் பலர் தமது வீட்டுக்கு வருவதாக சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.
2014ம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரணதரப் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதன் அடிப்படையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..
2014ம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. இதன் அடிப்படையில் வவுனியா செட்டிகுளம் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு..
1. R. தமிழ்ச்செல்வன் – 8A,C
2. J. ராபின் – 7A,C,S
3. I. கஜேந்திரன் – 6A,B,C,S
4. A.மேனகா – 6A,B,C,S
5. S. கிருஸ்டிகா – 6A,B,2C
6. S. ஜிலைக்ஷன் – 5A, B, 2C, S
7. N. உதயராஜ் – 5A, 3C
8. K.லக்க்ஷாயன் – 5A, 2B, C
9. C. கிருசாந்தினி – 5A, 2B, C
10. I. இசைவிந்தன் – 4A, 2B, 2S
11. K. அஸ்மத் – 4A, 3S
12. T. மிதுசா -4A, B, 3C, S
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 75% உயர்தரப் பரீட்சைக்கு தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் பற்றாக்குறை, வளப்பற்றாக்குறை உட்பட பல்வேறு தடைகளுக்கு மத்தியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மட்டுமன்றி இவர்களை வழிநடத்திய அதிபர், ஆசிரியர்களையும் வாழ்த்துவதில் நாமும் பெருமை கொள்வோம்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கைக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசாங்கம் தலையீடு செய்தால் உறுப்புரிமையை இலங்கை இழக்க நேரிடும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை எச்சரித்துள்ளது.
கிரிக்கெட் இடைக்கால நிர்வாக சபையை அமைத்ததன் ஊடாக ஏதேனும் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றிருந்தமை நிரூபிக்கப்பட்டால் இலங்கை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுப்புரிமையை இழக்கும் என அறிவித்துள்ளது.
இவ்வாறு உறுப்புரிமை தற்காலிக அடிப்படையில் ரத்து செய்யப்பட்டால, உலகக் கிண்ணப் போட்டித் தொடர் போன்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டிகளில் இலங்கை பங்கேற்க முடியாது.
கிரிக்கெட் நிர்வாகத்தில் தேவையின்றி அரசியல் தலையீடு செய்யப்பட்டால் அது பேரவையின் 2.9 பி சரத்திற்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருந்தால் அது குறித்து நம்பகமான பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில் எவ்வித தவறும் கிடையாது என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.
புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க அண்மையில் இடைக்கால கிரிக்கெட் சபையொன்றை நிறுவி அதன் பொறுப்புக்களை முன்னாள் வீரர் சிதத் வெத்தமுனியிடம் ஒப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.