வவுனியாவில் இருந்து வெளியாகும் முதல் முழுநீளத் திரைப்படமான “மரணவேட்டை” வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஐயாத்துரை மண்டபத்தில் நேற்று (02.04) வெளியிடப்பட்டது.
இமயம் கிரியேசனின் இயக்கத்தில் இமயவனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள இத் திரைப்பட வெளியீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.இ.நித்தியானந்தன் அவர்கள் கலந்து கொண்டு திரைப்படத்தின் முதற்பிரதியை பெற்றுக்கொண்டார்.
மேலும் இவ் விழாவில் கலைத்துறையைச் சார்ந்தோர், கலை இலக்கிய ஆர்வலர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
குவைத் நாட்டில் உயிரிழந்த மட்டக்களப்பைச் சேர்ந்த யுவதியை சட்ட பூர்வமற்ற முறையில் குவைத் நாட்டுக்கு அனுப்பிய உப முகவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த யுவதியின் தாய், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
மட்டக்களப்பு சத்துருக் கொண்டான் மூன்றாம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த சோமசுந்தரம் சர்நீதியா (22) என்ற யுவதி, கடந்த 28.2.2015 அன்று குவைத் நாட்டில் உயிரிழந்தார். இவரின் சடலம் 15.3.2015 அன்று மட்டக்களப்புக்கு கொண்டு வரப்பட்டு சத்துருக்கொண்டானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், குறித்த யுவதியின் தாய் சோமசுந்தரம் கீதா என்பவர், குவைத் நாட்டுக்கு தனது மகளை சட்ட பூர்வமற்ற முறையில் அனுப்பிய காத்தான்குடியைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் எஸ்.சி.எம்.சியாம் என்பவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு 01.04.2015 அன்று மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளதாக தாய் சோமசுந்தரம் கீதா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், காத்தான்குடியைச் சேர்ந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு உப முகவர் எஸ்.சி.எம்.சியாம் என்பவர் பல தடவை எமது வீட்டுக்கு வந்து குவைத் நாட்டில் நல்ல வீட்டு வேலை இருப்பதாகவும் கூடிய சம்பளம் கிடைக்குமெனவும் பொய் சொல்லி எனது மகளை குவைத் நாட்டுக்கு அனுப்பினார்.
இவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாமலும் இவருக்கு வெளிநாடு செல்வதற்கான காப்புறுதி செலுத்தாமலும் குறித்த உப முகவர் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடாக வீட்டு வேலைக்கான விசா இல்லாமல், விஸிட் எனப்படும் விசா மூலம் சட்ட பூர்வமற்ற முறையில் குவைத் நாட்டுக்கு அனுப்பியிருந்தார்.
உயிரிழந்த எனது மகளின் சடலம் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்ட போது, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு சென்று இது தொடர்பாக அறிய முற்பட்ட போதுதான், சட்ட பூர்வமற்ற முறையில் எந்த பதிவுகளுமின்றி எனது மகளை குவைத் நாட்டுக்கு அனுப்பியிருந்தமை தெரியவந்தது.
எனது மகளின் சடலத்துக்கு மேலே வைக்கப்பட்டவாறு மகளின் கடவுச்சீட்டு மாத்திரமே வந்தது. மகள் உயரமான மாடியிலிருந்து வீழ்ந்து உயிரிழந்ததாக, மரணத்திற்கான காரணம் எழுதப்பட்ட அறிக்கையொன்றின் மூலம் அறிந்து கொண்டேன். எனது மகள் குவைத்தில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார். அவரை கொலை செய்துள்ளார் என்று நினைக்கின்றேன்.
எனது மகளின் மரணம் தொடர்பில் எந்தவொரு நஷ்டஈடும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. ஒரு ரூபாய் பணம் கூட குவைத்திலிருந்தோ அல்லது அனுப்பிய முகவரிடமிருந்தோ கிடைக்கவில்லை. எனது மகளுக்கு நான்கு வயதில் ஒரு குழந்தையுண்டு. அவரின் கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனது கணவரும் யுத்தத்தினால் இறந்து விட்டார். மிகவும் கஷ்டமான குடும்ப சூழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
குடும்ப கஷ்டத்தின் காரணமாகவும் எனது மகளின் குழந்தையை வளர்தெடுக்க வேண்டும் என்பதற்காகவுமே அவர் குவைத்துக்கு சென்றார். எனவே எனது குடும்ப நிலையை கருத்திற் கொண்டு எனது மகளை குவைத் நாட்டுக்கு சட்ட பூர்வமற்ற முறையில் அனுப்பிய காத்தான்குடியைச் சேர்ந்த உபமுகவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் இவ்வாறான முறையில் வறிய பெண்களை சட்ட பூர்வமற்ற வகையில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்புவதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொள்வதாக அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கு கடந்த 29.03.2015 அன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து, மாவட்டத்தின் குறைகள் தேவைகள் குறித்து கலந்துரையாடியபோதே வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக்கலந்துரையாடலில், அவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் மேலும் வலியுறுத்தியதாவது..
போரினால் மிகவும் மோசமான அழிவுகளை சந்தித்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில் அப்போரினால் உடல் அவையங்களை இழந்தும், கடும் காயமுற்றும் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் இதேநிலைமையே காணப்படுகின்றது.
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், இரண்டு கால்களையும், கைகளையும், கண்களையும் இழந்துள்ளோர், கண் அல்லது கை அல்லது காலை இழந்துள்ளோர் என்று வாழ்ந்துவரும் நிலையில், இவர்கள் தமது நிரந்தர வாழ்வாதாரத்துக்கு வழியேதுமின்றி பல்வேறு துன்பங்களையும் துயரங்களையும் நாளாந்தம் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
எனவே இவ்வாறானவர்களின் தகவல்களை முழுமையாக திரட்டி, அவர்களுக்கு நிரந்தர மருத்துவ உதவிகளும் வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படல் வேண்டும். அத்துடன் மாதாந்த கொடுப்பனவு வழங்குவது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
அதேபோல் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை, குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்கள் உள்ளடங்கலாக தலையிலிருந்து கால் வரைக்கும் உடலில் எறிகணைச்சிதறல்கள், குண்டுகளை சுமந்தவாறு கடும் இன்னல்களுக்கும் அவஸ்தைக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். இவற்றை அகற்ற விசேட வைத்திய நிபுணர்களை அழைத்து சிகிச்சை அளிக்கப்படல் வேண்டும்.
மேலும் இறுதி கட்டப்போரினால் இடம்பெயர்ந்து செட்டிக்குளம் முகாமுக்கு சென்ற நிலையில் விவசாயிகளின் உழவு இயந்திரங்களும் உபகரணங்களும், பொதுமக்களின் பல்வேறு வகையான வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும், முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தென்னிலங்கைக்கு கடத்தப்பட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நஸ்டஈடுகள் வழங்கப்படுதல் வேண்டும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அக்காணிகளில் உரித்துடைய மக்கள் மீளக்குடியமர்த்தப்படுதல் வேண்டும் என்றும் ஆனந்தன் எம்.பி வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்துப்பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புனர்வாழ்வு அமைச்சும் மாகாணசபையும் இணைந்து குறித்த விவரங்களின் பிரகாரம் தகவல்களை திரட்டுமாறும், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கிளிநொச்சியில் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்றை நிறுவி, அதனூடாக மருத்துவ வாழ்வாதர உதவிகளை வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மாலை உணவு தொண்டையில் சிக்கி அதிலிருந்த ஊறுகாய் வெங்காயத் தோல் சுவாசக்குழாயில் உட்பிரவேசித்த நிலையில் உயிருக்காகப் போராடிய எஜமானரை அவரது நாய் காப்பாற்றிய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
கிழக்கு யோர்க் ஷியரைச் சேர்ந்த அலன் ஸ்பென்சர் (67) என்ற மேற்படி நபர் சம்பவதினம் மாலை உணவு அருந்திக் கொண்டிருந்த போதே உணவு அவரது தொண்டையில் சிக்கியுள்ளது.
இதனையடுத்து, அவர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகிய நிலையில் தரையில் சரிந்து விழுந்துள்ளார்.
இந்நிலையில் அவரது நாயான லெக்ஸி, உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த தனது எஜமானரது முதுகில் பாய்ந்து நிபுணத்துவம் பெற்ற முதலுதவிச் சிகிச்சையாளர் போன்று புத்திசாலித்தனமான முறையில் செயற்பட்டு முதுகை அழுத்தி அவரது தொண்டையில் அடைபட்டிருந்த உணவு வெளியேற வழிவகை செய்துள்ளது.
இதனையடுத்து, அலனின் சுவாசக் குழாயில் பிரவேசித்திருந்த வெங்காயத் தோல் வெளியேறவும் அவரது சுவாச செயற்கிரமம் இயல்பு நிலைக்குத் திரும்பி யுள்ளது.
டோகா கட்டாரில் மானி,நேரியல் குழந்தை செல்வங்களின் அனுசரணையில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பால் இரத்தினபுரி கலெல்ல கலைமகள் தமிழ் வித்தியாலய தாய் ,தந்தை ஒரு சிலர் இருவரையும் இழந்த 50 மாணவர்களுக்கு ஆசிரியர் திரு.ஐங்கரன் அவர்கள் தமிழ் விருட்சத்திடம் அவர்களின் நிலையை தெரியப்படுத்தி கற்றல் உபகரணங்கள் தந்து உதவும் படி கேட்டு கொண்டதுக்கினங்க 01.04.2015 அன்று இரத்தினபுரி கலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்க பட்டது .
அதிபர் திருமதி ந.ஜீவரத்தினம் அவர்களின் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில்
தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்கம் ஜெகன், தமிழ் விருட்சத்தின் யாழ் இணைப்பாளர் நிதர்சன், ஆசிரியர்கள் ஐங்கரன், கலாதர்சன், செல்வமணி, வசந்தகுமாரி, சசிகலா, பிரதீபா உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன. அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு.
ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.
வறுமையால் உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும் பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.
இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி வைத்தியர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.
வைத்தியர்களுக்கு இப்போது நிறையவே வேலை. எந்த வகை உணவு உண்ணலாம், எது கூடாது என்று இருதயவியல் நிபுணர்கள் நமக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இதைத் தான், நமது முன்னோர் விரதம் என்றார்கள்.
ஆயுர்வேதம் என்பது அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இதில் லங்ஙனம் பரம ஒளஷதம் என்று சொல்லப்பட்டுள்ளது. லங்ஙனம் என்றால் உணவு. ஒளஷதம் என்றால் மருந்து. உணவே சிறந்த மருந்து என்பது வேதவாக்காகும்.
நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது வெற்றிடமாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பௌர்ணமி, வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள்.
விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலசலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர்.
ஆகவே விரதம் என்பது ஆன்மீக நோக்கம் மட்டுமல்ல அறிவியல் ரீதியாக பல நன்மைகளை வழங்குகின்றது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தேர்வுக்குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர் தனது இராஜினாமா கடிதத்தை விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவிற்கு அனுப்பிவைத்துள்ளார்.
இதேவேளை, தெரிவுக்குழுவில் உள்ள ஏனைய சில உறுப்பினர்களும் இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரிய கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளவத்தை பிரதேசத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றுக்குள் இருந்து நேற்று இந்திய தம்பதியர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஹோட்டல் தரப்பு வெள்ளவத்தை பொலிஸாருக்கு வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் கேசரிக்கு தெரிவித்தார்.
36 மற்றும் 37 வயதுகளை உடைய இந்திய பிரஜைகளான தம்பதியரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லர் மேலும் குறிப்பிட்டார்.
சடலங்களாக நேற்று இரவு மீட்கப்பட்ட இந்த தம்பதியர் கடந்த மார்ச் 27 ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கை வந்துள்ளனர். இந் நிலையில் வெள்ளைவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்றிலேயே தங்கியிருந்துள்ளனர்.
இந் நிலையில் நேற்று முன் தினம் இரவு வேளையில் வெளியே சென்றுள்ள இந்த தம்பதியினர் மீண்டும் பின்னிரவில் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து தமது அறைக்கு சென்றுள்ள அந்த தம்பதியினர் நேற்று மாலை வரை அந்த அறையில் இருந்து வெளியேறாததை அடுத்து சந்தேக மடைந்த நிலையிலேயே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து நேற்றைய தினமே வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் உதயகுமார வுட்லரின் நேரடி கட்டுப்பாட்டில் குற்றவியல் பிரிவின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாகஹவத்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந் நிலையில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இந்த தம்பதியர் இரவு நேர களியாட்ட விடுதிகளில் கேளிக்கைகளில் ஈடுபடுவது, கெசினோ விளையாட்டுக்களுக்கு அடிமையாகியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்து அவர்கள் இறுதியாக அருந்தியதாக சந்தேகிக்கப்படும் குளிர்பான போத்தல்கள் இரண்டு பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த போத்தல்களில் விஷம் கலந்திருப்பது பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் இந்த தம்பதியர் குளிர்பானத்தில் விஷம் கலந்து அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சடலங்கள் இரண்டும் குறித்த தனியார் ஹோட்டல் அறையிலேயே உள்ள நிலையில் காலை நீதிவான் ஸ்தலத்தை பார்வையிடவுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைகளும் இன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சைப்பிரிவும், புதிய இரத்த வங்கியும் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் சுகாதார அமைச்சர் டாக்டர் றாஜித சேனாரத்ன, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வைத்திய கலாநிதி சி.சிவமோகன், வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிதாக ஆரம்பிக்கப்பட் இப் பிரிவானது ஓர் வரப்பிரசாதமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பதின்மூன்றாம் நாளாகிய 01.042015 புதன்கிழமையன்று சப்பர திருவிழா இடம் பெற்றது.
நேற்று முன்தினம் பிரதோஷ அபிசேகங்கள் நிறைவடைந்த பின் மாலை ஐந்து மணியளவில் யாக பூசையும் ஐந்தரை மணிக்கு தம்ப பூசையும் அதனை தொடர்ந்து வீராசாமியின் புதல்வர்கள் கண்ணன் கரன் மற்றும் அவர்களது குழுவினரின் சிறப்பு தவில் நாதஸ்வர கச்சேரி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து அருளகம் சிறுவர்களது சிறப்பு வயலின் கச்சேரி கச்சேரி இடம்பெற்றது.
வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து ஒன்பது மணியளவில் எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் முதலியோர் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அதுவும் வவுனியாவில் மிக உயர்ந்த வானுயர்ந்த சப்பரத்தில் திரு வீதி உலா வந்தனர்.
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் பன்னிரெண்டாம் நாளான 31-03 -2015செவ்வாய்க்கிழமை அன்று வேட்டை திருவிழா உற்சவம் இடம்பெற்றது.
உற்சவதினத்தன்று மாலை நான்கரை மணிக்கு ஆலயத்தில் இருந்து குதிரை வாகனத்தோடு ஊர்வலமாக புறப்பட்ட அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் வெளிகுளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் மாலை ஐந்தரை மணியளவில் வேட்டையை முடித்துக்கொண்டு மீண்டும் வெற்றி களிப்போடு கொரவபொத்தான வீதி ஊடாக ஊர் முழுதும் பூரண கும்பங்கள் வைக்கப்பட்டு எம்பெருமான் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் வரவேற்கப்பட்டார்.
பக்த அடியார்களின் வேண்டுதல்கள் காணிக்கைகளை பெற்று கொண்டும் அடியார்களுக்கு அருள் பாலித்த வண்ணமும் ஆலயத்தை மாலை ஏழு மணியளவில் வந்தடைந்த பின்னர் பிராயசித்த அபிசேகம் இடம் பெற்று வழமைபோல் தம்பபூசை அசந்த மண்டப பூசையுடன் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஆகியோர் உள் வீதி வெளிவீதி வலம் வந்து இரவு பத்து மணியளவில் திருவிழா நிறைவுபெற்றது .
பெங்களூரில் பள்ளியிலேயே மாணவியை சுட்டுக் கொன்ற வழக்கில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள தனியார் உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில், கௌதமி என்ற மாணவி(18) இரண்டாம் ஆண்டு பிரீ யுனிவர்சிட்டி பயின்று வந்துள்ளார். இவரை அப்பள்ளியிலேயே வேலை பார்த்து வந்த ஊழியரான மகேஷ், நேற்றிரவு சுட்டுக் கொன்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் பொலிசார், காதல் பிரச்னையும் காரணமாக இருக்குமா என சந்தேகிக்கின்றனர். மாணவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய மகேசை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது.
மகேஷ், மைசூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததும், விரைந்து சென்ற பொலிசார் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியையும் கைப்பற்றினர்.
யாழ். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இன்று வியாழக்கிழமை காலை குறித்த தேர் திருவிழாவின் போது வயதான பெண் ஒருவரின் கழுத்திலிருந்த சங்கிலியை யாரோ இழுப்பது போன்ற உணர்வு தென்பட்ட நிலையில் குறித்த பெண் திரும்பிப் பார்த்தபோது சங்கிலியை பிடித்தவாறு குறித்த பெண் நின்றுள்ளார்.
இதனையடுத்து வயதான பெண் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தன்னுடன் சேர்த்து 3 பெண்கள் வந்ததாகவும் தாங்கள் திருட்டு நோக்கத்திற்காகவே வந்திருப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் பிடிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடைக்குள்ளிரு ந்து கைத்தொலைபேசி ஒன்றும் 15ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆலயத்திலிருந்த பக்தர்களிடம் அறுக்கப்பட்ட 4தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இந்தப் பெண்ணுடன் வந்த மற்றைய இரு பெண்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தாயொருவருக்கு ஒரேசமயத்தில் கருத்தரித்து பிறந்த மூன்று மகள்மார், ஒரேநாளில் ஒரே நேரத்தில் திருமண பந்தத்தில் இணைந்த சம்பவம் தென் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
பஸ்ஸோ புன்டோ நகரைச் சேர்ந்த ரபேலா, ரொசிலி மற்றும் தஜியனி பினி ஆகிய மேற்படி 29 வயது சகோதரிகள் ஒரே தோற்றத்தைக் கொண்ட ராபயல், கப்பிரியல் மற்றும் எட்வார்டோ ஆகிய ஆண்களை திருமணம் செய்துள்ள னர்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
வவுனியாவில் தாய், தந்தையை இழந்த சிறுமி ஒருவரை கடந்த 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்ட கிறிஸ்தவ பாதிரியார் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 9ஆம் திகதி வரை நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..
வவுனியா, வெளிக்குளம் பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்ட சிறுமி ஒருவரை அந்தச் சிறுவர் இல்ல மதகுரு தனது செட்டிகுளம், துடரிகுளம் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 5 வருடங்களாக துஷ்பிரயோகம் செய்து வந்தார் என கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட யுவதியால் (தற்போது வயது 20) முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய பாதிரியார் நேற்று முன்தினம் இரவு கைதுசெய்யப்பட்டு நேற்று புதன்கிழமை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவுப் பழக்கவழக்கங்கள் இன்றியமையாவை. நாம் சாப்பிட்டபின் சில பழக்க வழக்கங்களை தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றி வருகின்றோம். சாப்பிட்ட பின்னர் எவற்றை செய்யக்கூடாது என்று பார்ப்போம்..
1.சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.
2.சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும்.
3.அதேபால் சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில்
பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
4.சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் அசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.
5.சாப்பிட்ட பின்னர் உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள்(Don’t Loosen Your Belt). ஏனெனில் அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்புள்ளது.
6.சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில் குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.
7.சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் என்று கூடச் சிலர் சொல்ல கேட்டிருப்பீர்கள். சாப்பிட்ட பின் நடந்தால் செரிமான உறுப்புகளுக்கு உணவு போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது.
8.மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணிநேரம் கழித்தே உறங்கச் செல்ல வேண்டும். மருத்துவத் துறையில் நவீன மூட நம்பிக்கைகள் பலவும் இதுபோல உண்டு.