உலககிண்ணத் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கையின் தர்மசேனா, இங்கிலாந்தின் கெட்டில்பரோ நடுவர்களாக செயல்படவுள்ளனர்.
மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது நடுவர்களாக எராஸ்மஸ் (தென்னாபிரிக்கா), இயன் கோல்டு (இங்கிலாந்து) இருப்பர். அதே போல் போட்டி நடுவராக ரஞ்சன் மடுகல்ல (இலங்கை) செயல்படுகிறார்.
இதில் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடியும் நடுவராகவும் பணியாற்றியவர் என்ற புதிய சாதனையை இலங்கை நடுவர் குமார் தர்மசேன ஏற்படுத்தப் போகிறார்.
தர்மசேன, கடந்த 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணியில் இடம் பெற்றவர். அந்த வகையில் இறுதிப் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர் உலகக்கிண்ண இறுதி ஆட்டத்துக்கு நடுவராக பணியாற்றுவது இதுவே முதல்முறை.
கொழும்பில் பிறந்த தர்மசேனா கடந்த 2010ம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக நடுவராக பணியாற்றத் தொடங்கினார்.
சகலதுறை வீரரான இவர் இலங்கை அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளிலும் 141 ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை நடக்கும் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த அணிகளான நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மோதுகின்றன.
11வது உலகக்கிண்ணத்தை நடத்தும் நாடுகளான அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளன. இவ்விரு நாடுகளின் மோதல் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
உலகக்கிண்ண கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக அவுஸ்திரேலியாவே கணிசமான ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பதை புள்ளி விவரங்கள் தெளிவாக கூறுகிறது.
உலகக்கிண்ண போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி 6ல் அவுஸ்திரேலியாவும், 3ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றிருக்கின்றன.
நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் தொடர்ந்து 8 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ள பிரன்டன் மக்கலம் தலைமையிலான நியூசிலாந்து முதன்முறையாக உலகக்கிண்ண மகுடத்தைக் கைப்பற்றும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறது.
நாளை ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அது நியூசிலாந்து அணியின் 300வது ஒருநாள் போட்டி வெற்றியாகவும் அமையும். அதே சமயம் 5வது பட்டத்திற்கு குறி வைத்துள்ள மைக்கல் கிளாக் தலைமையிலான அவுஸ்திரேலியாவும் எதிரணியை துவம்சம் செய்ய பல வியூகங்களை தீட்டி வருகிறது.
இந்த உலகக்கிண்ணத்தை பொறுத்தவரையில் நியூசிலாந்து அணி லீக் முதல் அரையிறுதி வரையிலான தனது அனைத்து ஆட்டங்களையும் சொந்த நாட்டிலேயே விளையாடி இருக்கிறது.
இப்போது தான் முதன்முறையாக அவுஸ்திரேலிய மண்ணில் விளையாடப் போகிறது. இது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அவுஸ்திரேலியா கருதுகிறது.
நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் இவ்விரு அணிகளும் ஒரே பிரிவில் (ஏ பிரிவு) இடம் பெற்றிருந்ததால் லீக்கில் சந்திக்க நேர்ந்தது.
ஒக்லாந்து ஈடன் பார்க்கில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 32.2 ஓவர்களில் 151 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் எளிய வெற்றியை பெறும் வகையில் களமிறங்கிய நியூசிலாந்தை அவுஸ்திரேலிய வீரர்கள் கலங்கடித்தனர்.
இருப்பினும் நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 152 ஓட்டங்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் லீக் ஆட்டத்தில் சந்தித்த தோல்விகளுக்கு இறுதிப் போட்டியில் பதிலடி கொடுக்கப் போவதாக அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் சவால் விடுத்துள்ளார்.
நடப்பு உலகக்கிண்ணத் தொடரில் சாதனை படைக்க இவ்விரு அணிகளில் யார் சம்பியன் ஆகப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணியின் தோல்வியைத் தொடர்ந்து பாகிஸ்தான், வங்கதேச ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் சபைக்கு அழைப்பை எடுத்து `மோக்கா.. மோக்கா’ என்று கேலி செய்ய ஆரம்பித்துள்ளனர்.
இந்தியா லீக் போட்டியில் பாகிஸ்தானையும், காலிறுதியில் வங்கதேசத்தையும் எளிதில் வென்றது. எனவே, இந்தியா எப்போது தோற்கும் என்ற ஆசையில் இவ்விரு அணிகளின் ரசிகர்ளும் ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்நிலையில் 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற இந்தியா, அரையிறுதியில், அவுஸ்திரேலியாவிடம் 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக்கிண்ணத்தை விட்டு வெளியேறியது.
இந்நிலையில் மும்பையிலுள்ள பி.சி.சி.ஐ தலைமை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அவற்றை ஊழியர்கள் எடுத்து பேசினால் மறுமுனையில், `மோக்கா.. மோக்கா’ என்று பாடுவதும், இப்போ என்ன பண்ணுவீங்க என்று கேட்பதுமாக இருந்துள்ளது.
இந்த போன் அழைப்புகள் எங்கிருந்து வந்துள்ளன என்று பார்த்தபோது, அதில் பெரும்பாலும் வங்கதேசத்தில் இருந்தும், சில போன் அழைப்புகள், பாகிஸ்தானில் இருந்தும் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
தொடர்ந்து சுமார் 200 போன் அழைப்புகள் வந்ததால், பிசிசிஐ தற்காலிகமாக தொலைபேசி இணைப்பை துண்டித்து வைத்துள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், “மோக்கா.. மோக்கா விளம்பரங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. ஆனால், அது எங்களை திருப்பி தாக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சிக்கு அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு இன்று (28.03) வவுனியாவில் இடம்பெற்றது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியில் பலரும் தம்மை அங்கத்தவர்களாக இணைத்துக்கொண்டிருந்தனர்.
வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர்களான கருணாதாச, இ. சஜீந்திரா, எஸ். துரை உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் உத்தரவை கணக்கில் கொள்ளாது, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தடையை நீடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது என வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் பேண முடியாது என்று, கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீதிமன்றம் அறிவித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய மூன்று மாத கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்தது.
எனினும் இந்த தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல், விடுதலைப் புலிகளின் தடையை நீடிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இலங்கையை சேர்ந்த குமார் தர்மசேன நடுவர்களில் ஒருவராக செயற்படவுள்ளார்.
இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் சிறந்த நடுவர் என தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்தைச் நடுவர் ரிச்சர்ட் கெட்டல்பரோ, நாளைய போட்டியில் மற்றுமொரு நடுவராக செயற்படவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக்கிண்ணத்தை நான்கு முறை வென்ற அவுஸ்திரேலியா நாளை முதல் முறையாக இறுதிப்போட்டியில் களம் இறங்கும் நியூசிலாந்து அணியுடன் மோதும்.
இணையத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக சேறு பூசிய நபரை புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் போலியான தகவல்கள் போலியான புகைப்படங்களை பேஸ்புக் மூலம் பிரச்சாரம் செய்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இம்முறை எனது வாக்கு மஹிந்த ராஜபக்சவிற்கே எனக் குறிப்பிட்டு முகப்புத்தகத்தில் பிரச்சாரம் செய்துள்ளார். பதுளையைச் சேர்ந்த சுஜித் நிலந்த என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்தல் சட்டங்களை கடுமையாக மீறிச் செயற்பட்டுள்ளதுடன் குற்றவியல் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படக்கூடிய குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேக நபர் நேபாளத்திலிருந்து கடந்த 25ம் திகதி நாடு திரும்பிய போது பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கொரியாவிற்கான இலங்கை தூதரகத்தில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு சேறு பூசும் நோக்கில் பேஸ்புக்கில் புகைப்படப் பிரச்சாரங்களில் ஈடுபட்டதாக சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 1ம் திகதி வரையில் சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நேற்று உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா பயணிகளின் நலன் கருதி சிகிரிய மலை ஏறுவதை இலகுபடுத்துவதற்காக இயங்கு ஏணி முறையை பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கலை, கலாச்சார இராஜாங்க அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சிகிரியாவிலுள்ள கற்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில் தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்களின் அறிவுரைகளுக்கமைய இவ் இயங்கு ஏணி பொருத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இயங்கு ஏணியை பயன்படுத்தவதினால் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளும் சிகிரியாவிற்கு வருகை தரக் கூடும் என அமைசச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஹற்றனில் 5000 ரூபாய் போலி நாணய தாளைப் பயன்படுத்தி தயிர் கொள்வனவில் ஈடுப்பட்ட சந்தேக நபர் ஒருவர் பொலிசாரினால் கைது.
ஹற்றன், டிக்கோயா பகுதியை சேர்ந்த குறித்த சந்தேகநபர் நேற்று தயிர் விற்பனையாளரிடம் இருந்து தயிரை பெற்று 5000 ரூபா போலி நாணய தாள்களை வழங்கியுள்ளார். அதேவேளை விற்பனையாளரும் 5000 ரூபாவிற்கு மீதிப்பணத்தை வழங்கியுள்ளார்.
எனினும் தயிர் விற்பனையாளர் குறித்த பணம் போலியானது என கண்டறிந்து கொண்டு, சந்தேக நபரை பிடிக்க முயற்சி செய்த வேளை, அவர் தப்பியோடியுள்ளார்.
அதேவேளை நகரத்தில் உள்ள பொது மக்களின் முயற்சியினால் சந்தேக நபர் பிடிக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஹற்றன் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர் ஹற்றன் நகரில் உள்ள நகை பட்டறை ஒன்றில் பணி புரிகின்றவா் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சந்தேக நபரின் வீட்டையும், பணிபுரியும் நகை பட்டறையையும் ஹற்றன் பொலிஸார் சோதனையிட்டுள்ளதுடன், இன்று ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள்.
அடல்பிகாரி வாஜ்பாய்க்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி நேரில் சென்று, அவர் இல்லத்திலே இந்த விருதினை வழங்கி வாஜ்பாய்யை பெருமைப்படுத்தியுள்ளார்.
பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாய் ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய பேச்சாளர், மென்மையானவர், அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர்.
இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப்பற்றி சொல்கின்ற ஆவணங்களாகும்.
அயோத்தி பிரச்சினையும், குஜராத்தில் நடந்த கோத்ரா பிரச்சினையும் இவர் இதயத்தை குத்துகின்ற சம்பவங்களாக இருந்தது. அரசியலில் இவருடைய சகாக்களை மதவாத தீவிரவாதிகள் என்று விமர்சிக்கின்றவர்கள் கூட வாஜ்பாய்யை மனம்திறந்து பாராட்டுவார்கள்.
ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சிகாலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளவாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார்.
பம்பாயிலிருந்து இவர் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர். 1986ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் வாஜ்பாயும் கலந்துகொண்டார்.
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களை விசேட மாவட்டங்களாக கருதி அப்பகுதி மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுக்க கூட்டு அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
யாழ். கச்சேரியில் இடம்பெறும் வட மாகாண அதிபர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் கல்வி அமைச்சுடன் இணைந்து இந்த கூட்டு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வட மாகாணத்திலே கல்வி நடவடிக்கைகளில் வீழ்ச்சி காணப்படுவதாகவும் கொழும்பு மாவட்டத்தோடு ஒப்பிடும் போது ஒரு போட்டித்தன்மை அற்றுக்காணப்படுவதாகவும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் கல்வி நடவடிக்கைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி, பாடசாலைகளுக்கு தேவையான வளங்களை அதிகரிக்கச் செய்து, கல்வியின் தரத்தை முன்னேற்ற நடவடிக்ககைகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் சகல தரப்பினரிடமும் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
வட மாகாண கல்வி நடவடிக்கைகளை ஆறு மாத காலத்திற்குள் முன்னேற்றாவிட்டால் அதிபர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இங்கு தெரிவித்துள்ளார்.
உலகக் கிண்ணப் போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளன. நாளை அவுஸ்திரேலிய- நியூசிலாந்து அணிகள் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்காக பலப் பரீட்சை நடாத்தவுள்ளன.
இலங்கை, வங்க தேசம், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் காலிறுதிப் போட்டியுடனும், தென்னாபிரிக்க மற்றும் இந்திய அணிகள் அறையிருதிப் போட்டியுடனும் வெளியேறின.
வங்கதேச அணி காலிறுதி ஆட்டத்தில் இந்திய அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. அதேபோல் மற்றுமொரு காலிறுதியில் இலங்கை அணி தென்னாபிரிக்க அணியிடம் படுதோல்வியடைந்து வெளியேறியது.
அடுத்து அறையிருதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி நியூசிலாந்து அணியிடம் பரிதாபகரமான முறையில் தோல்வி கண்டது. அதற்காக அந்த வீரர்களுக்கு எதிராக இலங்கை, வங்கதேசம் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் போராட்டங்கள் நடைபெறவில்லை. வீரர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்படவில்லை, வீரர்களின் படங்கள் எரிக்கப்படவில்லை.
நாடு திரும்பிய இலங்கை அணி வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் சார்பாக சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. ரசிகர்கள் பலரும் திரண்டு வரவேற்பு வழங்கினர்.
அதே போன்று இலங்கை அணி 2007 மற்றும் 2011ம் ஆண்டுகளில் 50 ஓவர் உலக கிண்ண போட்டிகளிலும் 2009 மற்றும் 2012ம் ஆண்டுகளில் T20 உலகக் கிண்ண போட்டிகளில் இறுதிப் போட்டிவரை சிறப்பாக சிறப்பாக விளையாடியபோதும், நான்கு இறுதிப் போட்டிகளிலும் தோல்வியடைந்தது.
இருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை ரசிகர்கள், வீரர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டதிலோ, அல்லது வீரர்களின் வீடுகளின் மீது தாக்குதல் போன்ற வன்முறைச் சம்பவங்களிலோ ஈடுபடவில்லை. மாறாக நாடுதிரும்பிய இலங்கை அணி வீரர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதே போன்று இம்முறை வங்கதேச ரசிகர்கள் தங்கள் வீரர்கள் திறமையான முறையில் விளையாடியதாகவும் நடுவர்கள் செய்த தவறால்தான் தோற்றதாகவும் முழுமையாக தங்கள் வீரர்களின் பக்கம் இருந்தார். அந்த நாட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஒரு படி மேலே போய், நடுவர்கள் செய்த தவறால்தான் தங்கள் நாடு தோற்றதற்கு காரணம் என்று வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார்.
அதேபோல் தோல்வியடைந்து தாய்நாடு திரும்பிய தென்னாபிரிக்க வீரர்களை அந்நாட்டு ரசிகர்கள் விமானநிலையத்தில் அன்புடன் வரவேற்றனர். வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு உற்சாகமான அளவளாவினர்.
அடுத்த உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றிபெற்று நாட்டுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டனர். உலகக் கிண்ண போட்டிகளில் தொடர்ந்து பரிதாப தோல்வியைச் சந்தித்து வரும் தென்னாபிரிக்க வீரர்களுக்கு இந்த ஆறுதல் இதமளித்தது. வீரர்கள் மனநிறைவுடன் வீட்டுக்கு சென்றனர்.
ஆனால் இந்தியாவில் என்ன நடக்கின்றது கடந்த 2011ம் ஆண்டு 28 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்றது. அதற்கு முன்பு 1999 முதல் 2007ம் ஆண்டு வரை அவுஸ்திரேலிய அணிதான் தொடர்ச்சியாக மூன்று முறை உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்று சாதனை படைத்திருந்தது.
கடந்த உலகக் கிண்ணப் போட்டியின் போது அவுஸ்திரேலிய அணி காலிறுதிச் சுற்றில் இந்திய அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது. தோல்விக்காக அவுஸ்திரேலிய வீரர்களை அந்த நாட்டு ரசிகர்கள் அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொள்ளவில்லை. வெற்றி தோல்வி விளையாட்டில் சகஜம் என்பதை புரிந்து வைத்துள்ளனர்.
ஆனால் 28 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்ற அணி தொடர்ந்து கோப்பையை தக்க வைத்துக்கொள்ள வேண்டுமென்று நினைப்பது எந்தவிதத்தில் நியாயம்.
அப்படிப் பார்த்தால் மூன்று முறை உலகக் கிண்ணத்தை வெற்றிபெற்ற அணி வீரர்களை அந்தநாட்டு ரசிகர்கள் என்ன செய்திருக்க வேண்டும்.
வெற்றி பெற்றால் கொண்டாடுவதும் வீரர்களை கடவுள் அளவிற்கு தூக்கிப் பிடிப்பதும் தோல்வியடைந்தால் அடுத்த நாளே காலுக்குக் கீழ் போட்டு மிதிப்பதும் இந்தியாவில்தான் தொடர்கிறது. இந்த நிலை மாறவேண்டுமென்பதே விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பம்.
நேற்று முதல் இந்திய அணி வீரர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாட்டுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் வந்தடையும் விமான நிலையம் மற்றும் வந்தடையும் நேரம் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதேநேரம் கிரிக்கெட் வீரர்கள் அனைவரினதும் வீடுகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள. இது உலகக் கிண்ண போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு அவமானமாகும்.
தோல்வியடையும்போது ஆறுதல் அளிக்காத ரசிகர்களுக்கு வெற்றியை கொண்டாடவும் உரிமை இல்லை என்ற தார்மீக உண்மையையும் ரசிகர்கள் உணர வேண்டும்.
அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் உலக கிண்ண இறுதி போட்டியுடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது மைக்கல் கிளார்க்கின் காலில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு வந்த அவர் முதுகு வலியுடன் நீண்டநாள் விளையாடி வருகிறார்.
இதனால் டெஸ்ட் தொடரில் இருந்து விலகிய அவர் அதன் பிறகு முத்தரப்பு ஒரு நாள் தொடரிலும் பங்கேற்கவில்லை. ஆகவே, உலகக்கிண்ண அணியில் இடம்பெறுவாரா என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், அவர் உடல்தகுதியை நிரூபித்ததால் அணியில் சேர்க்கப்பட்டார்.
நீண்ட நாட்களாக அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடி வரும் கிளார்க் நாளை நடைபெறும் இறுதி போட்டி பற்றி செய்தியாளர்களிடம் கருத்து வௌியிட்ட போது இந்த ஓய்வு அறிவிப்பை தெரிவித்தார்.
இதனால் நாளைய போட்டி அவருக்கு உணர்ச்சிகரமான போட்டியாக இருக்கப்போகிறது. அவுஸ்திரேலியாவிற்கு உலகக்கிண்ணத்தை பெற்று தந்த சந்தோசத்துடன் ஓய்வு பெறுவாரா என்பது நாளை தெரியும்.
கோடரி தாக்குதலுக்கு இலக்கான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன இன்று காலை உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் படுகாயமடைந்த பிரியந்த சிறிசேனவுக்கு உயிரிழக்கும் போது வயது 40 என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரியந்த சிறிசேன நேற்று முன்தினம் பொலனறுவையில் வைத்து கோடரி தாக்குதலுக்கு இலக்கானார். தாக்குதலினால் பிரியந்த சிறிசேனவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.
பொலனறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரியந்த பின்னர் வான் வழியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில்ஏழாம்நாளான நேற்றுமுன்தினம் 26-03 -2015 வியாழக்கிழமை காலை முதல் அபிசேகங்கள் ஆர்ரதனைகள் இடம்பெற்று மதியம் வசந்த மண்டபபூயையின் பின் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் சர்ப்ப வாகனத்திலும் திருவீதி உலா வந்தனர் .
மாலை வசந்தமண்டப பூஜையின் பின் அமிர்த வர்ஷினி தீர்த்த கரைக்கு விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் இடப வாகனதிலும் எழுந்தருளியிருந்தனர் .பின்னர் தீர்த்தக்கரையில் மன்மதன் ரதிக்கான அபிசேகங்கள் இடம்பெற்று திருபொற்சுண்ணம் முதலியவை பாடப்பட்டு பக்தர்கள் தீர்த்தக்கரையில் இறைவனை நோக்கி கற்பூரம் கொளுத்தி விடுகின்ற அருமையான வசந்த உற்சவம் இடம்பெற்றது. தொடர்ந்து திரு வீதி உலாவந்து வசந்த உற்சவம் நிறைவு பெற்றது .
வவுனியா கோவில் குளம்அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனத்தில் ஆறாம் நாளான நேற்று முன்தினம் 25-03 -2015புதன்கிழமையன்று காலை முதல் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ ராஜாராம் குருக்கள் தலைமையில் நடராஜ பெருமானுக்கு விசேட யாகம் மற்றும் அபிசேகங்கள் முதலியன இடம்பெற்று 10.30 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம் பெற்று விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் தனி தனி வாகனங்களிலும் நடராஜரும் பார்வதியும் அசைந்து ஆடி ஆடி வீதி வலம் வந்தமை இன்றைய தினம் விசேட அம்சமாகும்.
ஈற்றில் நடராஜ பெருமானுக்குரிய யாகம் கலைக்கப்பட்டு வழமையான மதிய பூஜையுடன் பகல் திருவிழா நிறைவு பெற மாலை மமீண்டும் வழமை போல நான்கரை மணிக்கு மகா யாகம் தொடங்கப்பட்டது . அதன் பின் தம்ப பூஜை வசந்த மண்டப பூஜையுடன் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானும் மூசிகம் மற்றும் மயில் வாகனங்களிலும் அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் சர்ப்ப வாகனத்திலும் திருவீதி உலா வந்து மாலை திருவிழா இரவு ஒன்பது மணியளவில் நிறைவு பெற்றது .