நோர்வூட் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றில் 4 வயதுள்ள ஒரு சிறுமியை தாய் அடித்து துன்புறுத்தியுள்ளதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிடைத்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை நோர்வூட் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். மேற்படி தாயினால் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு அடித்து துன்புறுத்தியுள்ளதாக குறித்த சிறுமியின் தாத்தா தெரிவிக்கின்றார்.
அதன்பின் நோர்வூட் பொலிஸாருக்கு சிறுமியின் தாத்தா செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த தாயை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுறுத்தல் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை கொழும்பில் பணி புரிவதாகவும் தாய் தோட்டத் தொழிலாளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரமேஷ் ராஜா சௌமியா என்ற இந்த சிறுமி வீட்டில் குழப்பம் செய்வதன் காரணமாக இவ்வாறு தாய் அடித்துள்ளதாக நோர்வூட் பொலிஸார் செய்த விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு தாய் சிறுமியின் காலில் அடித்ததால் சிறுமி நடக்கமுடியாதளவில் இருக்கும் போது தோட்டததில் இருக்கின்ற சிறுவர் பாராமரிப்பு நிலையத்தின் பொறுப்பாளர் பொலிஸாருக்கு கொடுத்த தகவலையடுத்து பொலிஸார் சிறுமியை டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது செய்த தாயை ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக நோர்வூட் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் ரவீந்திரர். தடகள வீரர். ஓட்டப்பந்தயத்தில் தேசிய அளவில் பல பதக்கங்களை பெற்று உள்ளார். இவரது மனைவி லட்சுமி (42). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் லட்சுமி மீண்டும் கர்ப்பம் தரித்தார். தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இவர் சுகப்பிரசவத்துக்காக தினமும் 5 கிலோ மீட்டர் ஓடுகிறார். 7 மாத கர்ப்பிணி ஓடுவது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி லட்சமி கூறியதாவது..
எனது கணவர் ஓட்டப் பந்தய வீரர். அவர் மூலம் நானும் தினமும் ஓடி வருகிறேன். முதல் குழந்தை உண்டான போது தினமும் ஓடுவேன், சுகப்பிரசவம் ஏற்பட்டது.
இப்போது 2வது குழந்தையும் சுகப்பிரசவமாக இருக்க வேண்டும் என்பதற்காக கணவருடன் தினமும் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடி வருகிறேன்.
7 மாத கர்ப்பமாக இருந்த போதிலும் எனது முயற்சியை கைவிடவில்லை. இது பற்றி வைத்தியரிடம் ஆலோசனை கேட்டேன். அவர்கள் உங்களால் முடிந்தால் முயற்சி செய்யுங்கள் என்றார். எனவே ஓட்டப்பயிற்சியை விடாமல் செய்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்று லட்சுமி உஜ்வல பார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தையை தூக்கிக் கொண்டு 80 படிகள் ஏறி சாதனை படைத்தார்.
பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருண்ட யுகத்திற்குப் பின்னான மறுமலர்ச்சிக் காலமானது அவர்களின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு வித்திட்டதைப் போல எமது நாட்டில் தற்பொழுது காணப்படும் அமைதியான சூழ்நிலையானது பலவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வித்திடுவதைக் கண்கூடு பார்க்க முடிகின்றது.
கைத்தொழில் அபிவிருத்தி கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள், கல்வியில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளும் பெறுபேறுகளும், தொழில்நுட்ப விருத்தி, பாதைகள் புனரமைப்பு, மின்சார வழங்கல் என்பவை அபிவிருத்திக்குரிய குறியீடுகளாக அவ்வப்போது காட்டப்படுகின்றன.
சுமூகமான சுற்றாடல் இலக்கியப் படைப்புக்கள் எழுவதிலும் அதே போன்ற ஒரு பங்களிப்பைக் காட்டுவதை யாரும் மறுத்துவிட முடியாது. அதுவும் எமது தலைமுறையினர் அடுத்தடுத்து சந்தித்த பொருளாதார, அரசியல், சமுதாய நெருக்கடிகள், இளம் சமுதாயத்தினரை வெகுண்டெழுச் செய்து தங்களது தாக்கங்களை, உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளுகின்றன. அவற்றினால் உந்தப்பட்ட எமது இளைய தலைமுறையினர் தங்களுடைய ஆதங்கக்களை வெளிப்படுத்துவதற்கு முக்கியமாகக் கவிதை வடிவத்தைப் பாவிக்க முனைகின்றனர்.
ஏனைய இலக்கியங்களைவிட இசையோடு கூடிய பேச்சு அல்லது கவிவடிவங்கள் மக்களை இலகுவாகவே சென்றடைந்துவிடுகின்றன. கவிதைக்கு இது தான் என்று ஒரு வரையறையை யாருமே செய்துவிடாது இருப்பதால் யாரும் அதைக் கையாண்டு உருவாக்க முடியும் என்ற எண்ணத்தையூம் அவர்கள் கொண்டுள்ளனர். இதனால் இலக்கியத்திற்குள் நுழைவதற்கு ஒரு திறவு கோலாகவே கவிதை என்ற வடிவத்தைப் பாவிக்கின்றனர்.
அதைவிடவும் இது படைப்பாளியின் புலமையை மதிப்பிடும் ஒன்று அல்ல என்றும் வாசகனின் மனதை ஆற்றுப்படுத்தவல்ல அருமருந்தே என்பதையும் இளைய சமுதாயம் மனதளவில் கொண்டிருப்பதையும் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
இளமையிலேயே பலவிதமான துயரங்களை சந்தித்த எம் சமூகத்தினருக்கு இப்பொழுது தேவைப்படுவது ஆறுதல் என்பது அனைவருமே உணர்ந்தது தான். ‘நாம் உங்களை அவதானித்துக் கொண்டிருக்கின்றோம். நாங்கள் உங்களைப் புரிந்து கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணத்தை எம்மவரிடையே விதைப்பது மிக முக்கியதாகும். அதற்கு இலக்கியங்கள் துணை செய்து அரிய பங்களிப்பை வழங்குகின்றது என்ற எண்ணத்தை அவர்கள் கொண்டுள்ளனர்.;
அது மட்டுமல்ல. இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடி என்பதால் எமது காலத்தில் நடந்துவிட்ட பதிவுகளைச் சரியாகக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இலக்கியத்தை உயிரோட்டமாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும் ஒரு சிலர் கையாள்வதாகத் தெரிகின்றது. அது மட்டுமல்ல சமகால நிகழ்வுகள், நிதர்சனங்கள், பொருளாதார நெருக்கடி தொழில்நுட்ப வளர்ச்சியின் கோரத் தாண்டவங்கள், இயற்கையின் சீற்றம் போன்ற விடயங்களைப் பதிவளித்துத் தங்கள் இலக்கை அடையவும் முனைகின்றனர்.
அவர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதைப் போல அது ஆதங்கப் படைப்பாகவே எழுந்தாலும் அதன் விளைவு உலகிற்கு அவலங்களை எடுத்துக் காட்டி தீர்வுகளைத் தேடிக் கொள்ளவும் துணைபுரியும். மனித வரலாற்றில் வெவ்வேறு காலங்களில் எந்த பல இலக்கியங்கள் மக்கள் வாழ்க்கையை மாற்றியமைத்ததை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது.
அரசியல் பொருளாதார மாற்றங்களுக்கும் அடிமை வாழ்வை உடைத்தெறிவதற்கும் இலக்கியங்கள் உறுதுணையாக இருந்தன. பெண் விடுதலை பற்றிய பாரதியின் பாடல்கள் அவரின் தேசவிடுதலை பாடல்கள் தமிழ் நாட்டில் பல எழுச்சிகளைக் கொண்டன. ஐரோப்பாவில் உயர் குடிப் பெண்கள் வாசிப்பதற்காக எழுந்த இலக்கியங்கள் பல பொருளாதார மாற்றங்களைக் கொண்டுவந்தன.
பதிவுகள் அனைத்தும் இலக்கியம் ஆகுமா?
நடப்புக்களை அவ்வாறே சொல்லிக் கொள்வதை செய்திகள் என்போம். நிகழ்ந்துவிட்ட பதிவைத் தரவுகளோடு வழங்குவதை சரித்திரம் என்போம். படைப்பிலக்கியம் இவற்றில் இருந்து வேறுபட்டு நயத்துடன் அமைய வேண்டும்.
நயத்துடனே எழும் இலக்கியத்தை படைப்பதற்கு அனுபவம் அவசியமாகின்றது. அனுபவம் அறிவுறுத்தும் பாடத்தை அத்தனை தெளிவாக ஆசிரியராலேகூட சொல்லிக் கொடுத்துவிட முடியாது. இந்த அனுபவமானது ஒவ்வொருவரினதும் வயதைப் பொறுத்தும் தேடலைப் பொறுத்தும் கிடைக்கின்றது என்பது உலகமறிந்த உண்மையாகும். தேடல்களில் இருந்து எழும் பொது நோக்கு தீர்வாகும் போது அது காத்திரமான இலக்கியமாக வடிவெடுக்கின்றது.
கவிதைகளுக்கு சிறப்பான நயம் என்பது கற்பனையால் உருவாக்கப்படுகின்றது. அந்தக் கற்பனையினாலேயே ஒரு விஞ்ஞானிக்குரிய இடத்தைப் படைப்பாளி பெற்றுக்கொள்கின்றான். கவிவரிகள் உவமை, உருவகம் தற்குறிப்பேற்றம் உயர்வு, நவிற்சி போன்ற அணிகளால் அலங்கரிக்கப்படுகின்றது. பெண்ணுக்கு அணிகலன்கள் அழகு சேர்ப்பதைப் போல படைப்புக்கு அழகையும் கனதியையும் இவை சேர்த்து நிற்கின்றன.
அவற்றில் இருந்தெல்லாம் வேறுபட்டு கற்பனை என்பதை முற்றாகவே தள்ளிவிட்டு நடப்பைக் காட்சிப்படுத்துவது போல ஒரு விடயம் தற்பொழுது கையாளப்படுகின்றது. இது கவி வடிவத்தையும் கவித்துவத்தையும் தொலைத்துவிட்டதாகப் பெரியவர்களால் குறை சொல்லப்படுகின்றது.
காலத்தின் கோலங்கள் இளையவர்களின் கருத்துக்களை வெகுவாக ஈர்த்துக் கொள்வதையும் நாம் இங்கு கவனித்தே ஆகவேண்டும். இன்றைய விஞ்ஞான விருத்தியின் முன்பாக மனிதனின் ஓட்டம் எப்படி இருக்கிறது? ஒரு உயரமான மலைச் சரிவில் ஓய்வில் இருந்த ஒரு பாறாங்கல் உருளத் தொடங்கும் ஒரு நிலையைக் கற்பனை செய்து கொள்வோம். அதைப் பார்த்துக் கொண்டு நின்ற குரங்கு ஒன்று பயந்து கொண்டு அதற்கு முன்னாலே ஓடிச் செல்வது போல அமைந்தது தான் விஞ்ஞானத்தில் முன்பாக ஓடிக் கொண்டிருக்கும் மனித சமுதாயத்தின் ஓட்டமாகும். அவர்கள் நின்று நிதானிக்க வேண்டும்.
தொழில்நுட்ப விருத்தியினால் ஓடிக்கொண்டிருக்கும் எமது இளைய சமுதாயம்இ எவ்வாறு ஆறுதலாக நயத்துடனான படைப்புக்களை வழங்கப் போகின்றது என்பதும் கேள்விக்குறிதான்.
வாழ்க்கையின் ஓட்டத்திற்கு ஏற்றது போலவும் இன்றைய நெருக்கடி நிலையை மேவும் விதமாகவுமே அவர்களின் இலக்கியங்கள் அமையலாம் என்பதை ஏற்றுக்கொள்வோம். அப்படியானால் அவற்றின் நிலைத்திருக்கும் தன்மை என்பது எவ்வாறு இருக்கப் போகின்றது என்ற கேள்வியும் அடுத்ததாக எழுகின்றது.
இலக்கியத்தில் பெரியவர்களின் பங்களிப்பு
இன்றைய தலைமுறையினர் பலவித நெருக்கடிகளையும் துன்பங்களையும் தாங்கிக் கொண்டுஇருப்பதால் இலக்கியங்கள் குறிப்பிட்ட வடிவமின்றி அவசரத்திற்கு ஏற்றது போலவே உணர்வுகளை வெளிப்படுத்தலாம் என்ற எடுகோளுடன் பயணம் செய்தோம். அவற்றின் நிலைக்கும் தன்மை என்று பார்க்கும் போது எமக்கு இருபது வருடங்களுக்குப் பினனான தலைமுறையினரைப் பற்றி நோக்குவோம். அவர்கள் யுத்த சூழலையோ பொருளாதார நெருக்கடியையோ அறியாதவர்களாகவே இருப்பர்.
அவர்கள் பார்வையில் எமது இலக்கியங்கள் குறைந்துவிடக் கூடாது. இலக்கியங்கள் காலத்தைக் கடந்தவை. மனித உடல் மறைந்த பின்பும் இலக்கியங்கள் வாழும். பாரதியாரையும் கம்பரையும் கண்ணதாசனையும் இன்றும் நாம் முன்னிலையில் பொற்றவில்லையா?. காலத்தால் அழியாத இலக்கியங்களைப் படைக்க வேண்டியது எமது கடப்பாடல்லவா?
இலக்கியத்தினைப் பற்றிய அறிவையும் அறிமுகத்தையும் மட்டும் வழங்குவது அல்லாமல் இளையவர்களின் படைப்புக்களைத் தொடர்ந்து அவதானித்து இந்த விடயங்களை உறுதி செய்வது பெரியவர்களின் பங்களிப்பாகும். இளையவர்களின் ஆதங்கத்தைப் பரிந்துகொண்டு அவர்களை அன்பாலே வழிப்படுத்தி அழைத்துச் செல்ல வெண்டியவர்கள் அவர்களே.
பெரியவர்களின் பங்களிப்பு வரும்போதே மரபு என்ற விடயமும் இதற்குள்ளே புகுந்து விடுக்கின்றது. அவசர உலகம் விளங்கிக் கொள்ளுமாறு எளிமையாகப் படைப்புக்களை செய்வது போலவே மரபு என்ற விடயத்தையும் புகுத்திக் கொள்ள வேண்டும். இதனால் எளிமை மரபு என்ற இரு எல்லைகளுக்குள்ளே இலக்கியங்களைப் படைப்பது நலமானதாகும்.
வாழ்வினில் எப்பொழுதும் இரு எல்லைகளைக் கொண்டிருப்பது சிறப்பானதே. ஓடும் ஆறு இரு கரைகளைக் கடக்காது இருப்பதைப் போல எனது இலக்கியத்தையும் எளிமை மரபு என்ற எல்லைகளுக்குள் பேணுதலே கடமையாகும்.
அவ்வாறான இரு எல்லைகளுக்குள் கவித்துவத்தையும் கவி நயப்பையும் கட்டியாளுவோம். கவிதையின் வகைகளைக் கொண்டு கவிஞர்களை விமர்சிக்காமல் எண்ணங்களின் வெளிப்பாடுகளை வரவேற்போம். இளையவர்களுக்கான களம் பெரியோரால் ஏற்படுத்தப்படட்டும். எமது இலக்கியமும் காலங்கடந்தும் வாழட்டும்.
வவுனியா மாவட்டத்தில் சாரணர் துறையில் அதயுயர் விருதான ஜனாதிபதி விருதினை பெற்றவர்களின் மன்றமான வவுனியா ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் 5வது பொதுக்கூட்டம் நேற்று (08.03) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாவட்ட ஆணையாளார் திரு.எம்.எஸ்.பத்மநாதன் தலைமையில் நடைபெற்றது.
தலைவராக வைத்திய கலாநிதி அ.திலீப்குமார், செயலாளராக சு.காண்டீபன், பொருளாளராக ஸ்ரீ.கேசவன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக த.நிகேதன், உபதலைவராக இ.நிலானி , உபசெயலாலராக வ.பிரதீபன், பத்தராசிரியராக அ.அனந்தன், மன்றத்தின் உறுப்பினர்களாக வி.அனோஜன், ஜெ.பிரதீபன், நா.கீர்த்தனா, க.பிரதிகா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இப் பொதுகூட்டத்தில் மாவட்ட ஆணையாளர் திரு.எம்.எஸ்.பத்மநாதன், உதவி மாவட்ட ஆணையாளர் திரு.கமலகுமார், மாவட்ட சாரணர் சங்க செயலாளர் திரு.ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கற்பகபுரத்தை வசிப்பிடமாகவும் கிளிநொச்சியை பிறப்பிடமாகவும் கொண்ட ஜெஸ்ரின் மனோகரன் ஜெயக்குமார் என்னும் முன்னாள்போராளி 06.03.2015(வெள்ளிக்கிழமையன்று ) மரணமடைந்தார்.
முன்னாள் போராளி இறக்கும் இறுதி தருணத்தில் தாயாரின் கையைப்பிடித்து, “அம்மா எனது மனைவியையும் பிள்ளையையும் இறுதி வரை நீங்க தான் அம்மா பார்க்க வேண்டும். கைவிட்டுறாதீங்க அம்மா!” என்று கண்ணீர் மல்க, தாயாரிடமிருந்தும், மனைவி தர்சினியிடமிருந்தும் விடைபெற்றார்.
இவர் 2009 ஆம் ஆண்டு போராளியாக இருந்தபோது நெஞ்சில் எறிகணைச் சிதறல் பாய்ந்து முள்ளந்தண்டை தாக்கியதால் இறக்கும் வரை முள்ளந்தண்டுவடம் பாதிப்புக்குள்ளாகியிருந்தார்.
இவரது தகப்பனார் தாயை விட்டுப் பிரிந்து சென்றதால் இவருடன் சேர்ந்த மூன்று சகோதரர்களையும் தாயே பராமரித்து வருகிறார். முன்னாள் போராளியை முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்ட நிலையிலும் தர்சினி என்ற இளம் யுவதி பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலித்து திருமணம் செய்து வாழ்க்கை கொடுத்த நிலையில், தற்போது மூன்று மாத கைக்குழந்தையுடன் கணவரை இழந்து 24 வயதில் விதவையாகியுள்ளார்.
தாயாருக்கு ஒரு கடை ஒன்று இருப்பதாகவும், இரண்டு வருடங்கள் கடையை நடாத்தி வந்தபோதும் ஜெயக்குமாரின் மருத்துவ செலவு, பராமரிப்பு காரணமாக கடையை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்றும், தற்போது கடையை திறந்து வியாபாரம் செய்வதற்கு உதவ யாராவது முன்வர வேண்டும் என்றும், மருமகள் தர்சினியையும், குழந்தையையும் இறுதிவரை தன்னால் பராமரிக்க முடியும் என்றும் ஆனந்தன் எம்.பியிடம் போராளியின் தாயார் தெரிவித்தார்.
நல்லுள்ளம் கொண்ட அன்பர்களே! முன்னாள் போராளிக்கு வாழ்வு கொடுத்த தர்சினிக்கும், அவரது மூன்று மாத குழந்தைக்கும், இவர்கள் இருவரையும் இறுதி வரை தம்மோடு வைத்து பராமரிக்கும் ஜெயக்குமாரின் தாயாருக்கும் உதவ முன்வர வேண்டும் என்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
உதவுமும் நல்லுள்ளம் கொண்ட அன்பர்களின் தொடர்புகளுக்கு:
இலங்கையில் பணியாற்றும் 29 சதவீத பெண் ஊடகவியலாளர்கள், தமது வேலைத்தளங்களில் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச ஊடவிலாளர்கள் சம்மேளனத்தின் ஆய்வில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
டீல்ரூக்சி ஹந்துன்நெந்தி என்ற ஊடகவியலாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வின்படி 45 பெண்களில் 28.8 பெண்கள் தாம் வேலைத்தளங்களில் தொந்தரவுக்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளனர். எனினும் இந்த விடயம் குறித்து முறைப்பாடுகள் எவையும் செய்யப்படுவதில்லை.
பத்திரிகை நிறுவனங்கள் குறித்த முறைப்பாடுகளை, அசட்டை செய்தன் காரணமாகவே பெண் ஊடகவியலாளர்கள் முறைப்பாடுகளை செய்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை இல்லாமல் ஒழிப்பதற்காக மீண்டும் தூக்குத் தண்டனையை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ போதை பொருள் கடத்தல்காரர்களை ஓரிருவரை தூக்கிலிட்டால் நாட்டில் சமூக சீரழிவுகளை தடுக்க முடியும் என்றும் இக் கடத்தல்களின் பின்னணியில் அரசியல் செல்வாக்குள்ளவர்களே இருப்பதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தொழில் அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி நேற்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே நீதி மற்றும் தொழில் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் தர்ம உபதேசங்கள் தினம் தினம் நடத்தப்படும் எமது நாட்டில் இன்று நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குற்றச்செயல்கள் அதிகம் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் நான்காம் இடத்தை எமது நாடு பெற்றுள்ளது. இது பெருமைப்பட வேண்டிய விடயமல்ல கவலைக்குரிய விடயமாகும்.
உயர்மட்டத்தினர் தலைவர்கள் நாட்டின் சட்டத்தை மதிக்காது செயல்படுவதன் காரணமாகவே சாதாரண நாட்டு மக்களும் அதனை முன்னுதாரணமாக கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே நாட்டில் மீண்டும் தூக்குத் தண்டனையை அமுல்படுத்த வேண்டும். இதனை முன்பு சொன்னால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தலைதூக்கும்.
ஆனால் மீண்டும் தூக்குத் தண்டனை கொண்டு வரப்பட வேண்டுமென நான் அமைச்சுப் பதவி எடுத்ததும் தெரிவித்தேன். இதற்கு மக்கள் மத்தியிலிருந்து எவ்விதமான எதிர்ப்பும் கிளம்பவில்லை.
ஏன் மக்கள் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நாட்டுக்குள் குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டன. மக்கள் பொறுமை இழந்து விட்டனர். எனவே குற்றச் செயல்களை இல்லாதொழிப்பதற்கு மீண்டும் தூக்குத் தண்டனை தேவை என்ற நிலைப்பாட்டுக்கு மக்கள் வந்து விட்டனர்.
நாட்டில் இன்று நூற்றுக்கு 45 வீதமானோர் போதை பொருளுக்கு அடிமையாகி சிறைச்சாலைகளில் முடங்கிக் கிடக்கின்றனர். போதை பொருள் பாவிப்பவர்கள் மற்றும் அதன் சில்லறை வியாபாரிகளை பொலிஸார் கைது செய்கின்றனர்.
ஆனால் மொத்தமாக தொகையாக போதை பொருள் கடத்தல்களில் ஈடுபடுவோரை பொலிஸார் கைது செய்வதில்லை. ஏனென்றால் அவ்வாறான கடத்தல்களில் ஈடுபடுவோர் அமைச்சர்களாக இருக்கின்றனர். அல்லது மாகாண சபை உறுப்பினராக இருக்கின்றனர். அப்படியும் இல்லையென்றால் கண்காணிப்பு அமைச்சர்களாக இருக்கின்றனர்.
எனவே இவ்வாறானவர்களை கைது செய்வதில் பொலிஸார் அக்கறை காட்டுவதில்லை. சில்லறை வியாபாரிகளையே கைது செய்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஓரிருவரையாவது தூக்கிலிட வேண்டும். அப்போது தான் சமூக சீரழிவுகளை தடுத்து நாட்டையும் இளம் சமூகத்தையும் பாதுகாக்க முடியும் என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
வவுனியா கற்குளம் மற்றும் நெளுக்குளம் பிரதேச மக்களுடனான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பில் வட மாகாண அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
நெளுக்குளத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வட மாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வட மாகாணபோக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததுடன் மக்களுடனான
சந்திப்பிலும் ஈடுபட்டனர்.
இதன்பொது கற்குளம் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் வீட்டுத்திட்ட பிரச்சனைகள் மற்றும் அடிப்படை வசதியீனங்கள் தொடர்பிலும் அமைச்சர்கள் கேட்டறிந்துகொண்டனர்.
வவுனியாவில் உள்ள பாடசாலைகளின் கல்வி நிலை தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று (08.03) வவுனியா பட்டானிச்சூர் தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர், மற்றும் பாடசாலை அதிபர்கள், அபிவிருத்தி சங்க அங்கத்தவர்கள் உட்பட பலா் கலந்துகொண்டனர்.
வவுனியாவில் முதல் முறையாக பெருமெடுப்பில் மக்களுக்கு பரிசில்கள் வழங்கியும் உலங்குவானூர்தி மூலம் வவுனியா நகரின் அழகை வானில் இருந்து தரிசிக்கும் வாய்ப்பையும் நெஸ்டோ மோல்ட் பால்மா நிறுவனம் நேற்றைய தினம்(07.03.2015) வழங்கியிருந்தது.
வவுனியா தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் நெஸ்டோ மோல்ட் பால்மா நிறுவனம் வயது வேறுபாடின்றிசிறுவர் முதல் பெரியவர்கள் வரையில் அனைத்து தரப்பினரையும் ஒழுங்குபடுத்தி போட்டி நிகழ்வுகளை நடாத்தியும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் அவர்களை குதூகலபடுத்த கூடிய விளையாட்டு திடல்களையும் உருவாக்கி வவுனியா மக்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது . மேற்படி நிகழ்வில் வவுனியாவின் பலபகுதிகளில் இருந்தும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் தமது பிள்ளைகளுடன் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டிருந்தனர்.
வவுனியாவில் இருந்து நெளுக்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வழியில் பாவற்குளம் பாடசாலைக்கு முன்பாக ஒரு சிறிய தேநீர்கடை அங்கு தான் திருமதி சி.பூபதி என்கிற பூபதி அம்மா உள்ளார் .
குருநாகலில் பிறந்து 1958இல் வவுனியா பாவற்குளத்தில் குடியேறி திரு.சிவசுப்ரமணியம் என்பவரை மணந்து 10 பிள்ளைகளை பெற்று கணவனை இழந்து யுத்தத்தில் ஒரு மகனையும் இழந்து வாழ்கையில் போராடி யுத்தத்தில் பாவட்குளத்தில் இருந்து இடம் பெயர்ந்து இரணை இலுப்பைக்குளம் சென்று அங்கும் தேநீர் கடை ஒன்றை வைத்து பிள்ளைகளை ஆளாக்கி 2004 இல் மீண்டும் பாவற்குளத்தில் குடியேறி தனது 85 வயதிலும் தன் கையையே நம்பிக்கையாக கொண்டு தேநீர் கடையை வைத்து உழைத்து வாழ்ந்து வருகிறார்.
3 பிள்ளைகள் ஐரோப்பிய நாடுகளிலும், மற்றைய பிள்ளைகள் இங்கு நல்ல நிலையில் இருந்தாலும் யாரின் கையையும் எதிர்பார்க்காமலும், பிள்ளைகள் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பினாலும் அதை திரும்ப அவர்களுக்கே அனுப்பி விட்டு மன தைரியத்துடன் வாழ்த்து வரும் பூபதி அம்மா அனைவருக்கும் முன் உதாரணமாகவும், உழைப்பின் சிகரமாகவும் வாழ்ந்து வருகிறார் ,
யாரும் கண்டு கொள்ளாத, யாரும் அழைத்து கௌரவிக்காத வன்னியின் அன்னை பூபதியை தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு 08.03.2015 மகளிர் தினமான இன்று அவரது தேநீர் கடைக்கே சென்று கௌரவித்தது.
இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) செயலாளர் மாணிக்கம் ஜெகன், உறுப்பினர் சர்மிலன் ,பாவற்குளம் சமூக ஆர்வலர் குனானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர் .
வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்கம், கலை, இலக்கிய நண்பர்கள் வட்டம், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பு இணைந்து நடாத்திய திருவள்ளுவர் குருபூசை நேற்று(07.02) காலை தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையடியில் நடைபெற்றது .
இந்த நிகழ்வில் முன்னாள் நகரபிதாவும், வடமாகாணசபையின் உறுப்பினருமான திரு.ஜி,ரி.லிங்கநாதன், முன்னாள் உப நகரபிதா திரு .சந்திரகுலசிங்கம் (மோகன்) வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு .இ.நித்தியானந்தன், வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு எஸ்.எஸ்.வாசன், முன்னாள் அதிபர் தேசமான்ய சிவஞானம், சேக்கிழார் மன்ற தலைவர் திரு க.ஐயம்பிள்ளை, அதிபரும் வவுனியா மத்தியஸ்த சபை தலைவருமான திரு.சி,வரதராசா,
தமிழ் விருட்சம்அமைப்பின் தலைவரும் வவுனியா நகர வரியிறுப்பாளர் சங்க தலைவருமான சந்திரகுமார் (கண்ணன்), கவிஞர் மாணிக்கம் ஜெகன், முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் ரோய் ஜெயக்குமார் .சமூக ஆர்வலர்கள் திருவிளங்கம் ஐயா,ஞானபிரகாசம் ஐயா, பபிந்தன், கேசவன், நிகேதன், சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த சங்கக்கார 14,000 ஓட்டங்களை கடந்து சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்கள் வரிசையில் சச்சினைத் தொடர்ந்து 2வது இடத்தில் இருக்கிறார்.
மேலும் சிட்னியில் நடந்த இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 376 ஓட்டங்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி சிறப்பாக விளையாடி ஓட்டங்களை குவித்தது. இதில் பொறுமையாக ஆடிய சங்கக்காரா தனது 24வது சதத்தை அடித்தார். இவர் 107 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்த உலகக்கிண்ணத்தில் ஏற்கனவே இரண்டு சதம் அடித்திருந்த சங்கக்காரவுக்கு இது 3வது சதமாகும்.
இதன் மூலம் உலகக்கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 3 முறை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இந்த உலகக்கிண்ணத்தோடு சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து தான் ஓய்வுபெறுவதாக சங்கக்கார ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வரும் ஓகஸ்டில் இந்தியாவுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடும் டெஸ்ட் தொடரோடு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வுபெறப் போவதாக சங்கக்கார அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. உலகக் கிண்ண லீக் போட்டிகளில் 32வது போட்டியாக இன்று அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதின.
சிட்னியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஆரோன் பின்ச் 29 ஓட்டங்களுடனும் டேவிட் வோனர் 9 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
எனினும் அதன் பின்னர் வந்த ஸ்டீவன் ஸ்மித் (72), மைக்கல் கிளார்க் (62), மெக்ஸ்வெல் (102), வோட்சன் (67) ஆகியோர் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர்.
குறிப்பாக மெக்ஸ்வெல் 53 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு, 10 பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் அடங்களாக 102 ஓட்டங்களை விளாசினார்.
இதனையடுத்து 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்த ஆஸி. 376 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
பந்து வீச்சில் லசித் மலிங்க மற்றும் திஸர பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
இதனையடுத்து 377 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு ஒரு ஓட்டத்தை மட்டுமே பெற்ற நிலையில் ஆட்டமிழந்து ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லகிரு திரிமானே அதிர்ச்சியளித்தார்.
எனினும் அடுத்ததாக களமிறங்கிய குமார் சங்கக்கார, மற்றுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான டில்ஷானுடன் இணைந்து சிறப்பான துடுப்பாட்டத்தை வௌிப்படுத்தினார்.
பின் 62 ஓட்டங்களுடன் டில்ஷான் வௌியேற, சதமடித்த கையோடு 104 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சங்கக்காரவும் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக துடுப்பெடுத்தாட வந்த தினேஸ் சந்திமால் அதிரடியாக ஆடி இலங்கை இரசிகர்களுக்கு விருந்தளித்த போதும், அவரது ஆட்டம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை.
24 பந்துகளில் எட்டு பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடங்களாக 52 ஓட்டங்களைப் பெற்ற போது சந்திமால் காயமடைந்த நிலையில் மைதானத்தை விட்டு வௌியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர் வந்த வீரர்கள் எவரும் அவ்வளவாக சோபிக்காத நிலையில் 46.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்த இலங்கை அணி (9 விக்கெட்டுக்கள்) 312 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன்படி 64 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றியைத் தனதாக்கியது.
பந்து வீச்சில் ஜேம்ஸ் பால்க்னர் மூன்று விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டார்க் மற்றும் மிச்சல் ஜோன்சன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக மெக்ஸ்வெல் தெரிவானார்.
சிம்பாவே அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் அயர்லாந்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியாவின் ஹோபட் நகரில் இன்று நடைபெற்ற மற்றொரு பி பிரிவு லீக் போட்டியில், அயர்லாந்து, சிம்பாவே அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாவே களத்தடுப்பை தெரிவு செய்தது. அயர்லாந்து அணிக்கு ஸ்டெர்லிங் (10) தொடக்கத்திலே ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
மற்றொரு தொடக்க வீரரான போர்டர்பீல்ட் (29) சிம்பாவே பந்துவீச்சை போராடி சமாளித்த நிலையில் வெளியேறினார். எட் ஜோய்ஸ் அசத்தலாக விளையாடி வந்தார். இவரும் பால்பிரினேவும் அணியின் ஓட்டங்களை உயர்த்தினர்.
இருவரும் சிறப்பாக விளையாடி வந்த நிலையில், அணியின் ஓட்டங்கள் 217 என்று இருக்கும் போது எட் ஜோய்ஸ் (112) சதம் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் பால்பிரினே அரைசதம் கடந்தார்.
இவருடன் ஜோடி சேர்ந்த கெவின் ஓ பிரைன் (24), வில்சன் (25), மோனி (10), நிர்யால் ஓ பிரைன் (2) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதிரடி காட்ட ஆரம்பித்த பால்பிரினே 97 ஓட்டங்கள் குவித்த போது ஓட்ட முறையில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார்.
இதனால் அயர்லாந்து அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 331 ஓட்டங்களை குவித்தது.
சிம்பாவே சார்பில் பந்து வீச்சில், சாடாரா, வில்லியம்ஸ் தலா 3, பன்யான்காரா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சிம்பாவே அணி ஆரம்பத்திலே திணற ஆரம்பித்தது. தொடக்க வீரர்களான சிபாவா (12), சிக்கந்தர் (12) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இவரைத் தொடர்ந்து மிர்ரேயும் (11) ஆட்டமிழந்தார்.
மசகட்சா 5 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து ஜோடி சேர்ந்த டெய்லர், வில்லியம்ஸ் சிறப்பாக விளையாடினர்.
அதிரடியாக விளையாடிய டெய்லர் 121 ஓட்டங்கள் குவித்த போது ஆட்டமிழந்தார். இவரது சதம் அணியின் ஓட்டங்களை அதிகப்படுத்தியது.
பின்னர் வந்த எர்வின் (11) வந்த வேகத்தில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அசத்திக் கொண்டிருந்த வில்லியம்ஸூம் (96) ஆட்டமிழந்தார்.
அணியின் ஓட்டங்கள் 300ஐ தொட்டது. ஆனால் 7 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலையில் இருந்தது சிம்பாவே.
அடுத்து வந்த பையான்காரா (5), சாகப்வா (17), முப்பரிவா (18) வரிசையாக ஆட்டமிழக்க, சிம்பாவே 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் அயர்லாந்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
பந்துவீச்சில் அசத்திய குசாக் 4, மோனி, கெவின் ஓ பிரைன் தலா 2, டோக்ரெல், மெக்பிரைன் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
உலகக் கிண்ணத் தொடரில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் 29 ஒட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டி இன்று நியூசிலாந்தில் உள்ள ஒக்லாந்து மைதானத்தில் நடைபெற்றது.
இதில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து, 222 ஓட்டங்களை எடுத்தது.
மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தென்னாபிரிக்க அணிக்கு 47 ஓவர்களில் வெற்றி இலக்கு 232 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.
எளிதான இலக்குடன் களம் இறங்கிய தென்னாபிரிக்காவிற்கு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி அளித்தனர். தொடக்க வீரர் டி கொக் ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
2வது விக்கெட்டுக்கு அம்லாவுடன், டு பிளிஸ்சிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நல்ல முறையில் ஆடியது. டு பிளிஸ்சிஸ் 27 ஓட்டங்களுடன் வௌியேற அடுத்த ஓவரிலேயே அம்லா 38 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
பின் தென்னாபிரிக்காவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. ரசவ் (6), மில்லர் (0), டுமினி (12) என வரிசையாக வௌியேறினர்.
ஒருபுறம் விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் மறுமுனையில் டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடினார். இதனால் அந்த அணி 200 ஓட்டங்களைக் கடந்தது. ஆனால், டி வில்லியர்ஸ் 77 ஓட்டங்களுடன் (58 பந்துகள்) ஆட்டமிழந்தார்.
முடிவில் தென்னாபிரிக்க அணி 33.3 ஓவர்களிலேயே 202 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது.
இதனால் பாகிஸ்தான் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் வீரர் முகமட் இர்பான், ரகத் அலி, வாகாப் ரியாஸ் தலா 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். 49 ரன்கள் எடுத்த சர்பிராஸ் அகமட் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். விக்கெட் காப்பாளரான இவர் 6 பிடிகளை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது,