வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!! (படங்கள்)
வவுனியா விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி!(படங்கள்)!
வவுனிய விளாத்திக்குளம் சிதம்பரம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி வித்தியாலயத்தின் அதிபர் திருமதி தர்மராணி தலைமையில் 05.03.2015 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி எம்.பி சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்கள் இ.இந்திரராசா, ம.தியாகராசா, வவுனியா வடக்கு ஆரம்பபிரிவு உதவிக்கல்வி பணிப்பாளர் திரு.நவரட்ணம், ஓமந்தை மத்திய கல்லூரி அதிபர் திரு.திருஞானசம்பந்தமூர்த்தி, ஓமந்தை கிராம சேவையாளர் செல்வி அனுசியா, வர்த்தகர் திரு.சுரேஸ், ஆசிரிய ஆலோசகர் திரு.மகேஸ்வரன், வளவாளர் திரு.பகிரதன், ஓமந்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி யோகேஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வவுனியா வைத்தியசாலைக்கு வடமாகாண சபையால் சிறந்த சுகாதார சேவைக்கான விருது-2014(படங்கள்)!
2014 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் சிறந்த சுகாதார சேவை வழங்கியமைக்கு விருது வழங்கும் விழா யாழில் இடம்பெற்ற போது வடக்கு முதலமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.
யாழ் நகரிலுள்ள ரில்கோ விருந்தினர் விடுதியில் கடந்த 04.03.2015 புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் HEALTH EXCELLENT AWARD 2014 என்னும் விருது சிறந்த சுகாதார வைத்திய சேவையை வழங்கியமைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலைக்கு வழங்கபட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்வில் விருந்தினராகக் கலந்து கொண்டு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களிற்கு 1300 மில்லியன் ரூபாய் செலவில் புனர்வாழ்வு வைத்தியசாலையொன்றை மாங்குளத்தில் புதிதாக அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு மாகாணமும் ஏனைய மாகாணங்களைப் போன்று சிறந்த சேவையாற்றி வருகின்ற நிலையில் வடக்கு மாகாணத்தில் இன்றும் அதிகளவான தேவைகள் இருப்பதாகவும் எனினும் அவற்றைப் பூர்த்தி செய்வதற்குரிய வளங்கள் பற்றாக்குறையாக இருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் கடந்த காலத்தில் நடைபெற்ற போரின் காரணமாக இங்குள்ள மக்கள் சொத்து மற்றும் உயிரிழப்புக்களை எதிர்நோக்கியிருந்தனர். அத்தோடு இந்தப் போரின் போது அவயங்களை இழந்த, பெற்றோர்களை இழந்த சிறுவர்களும் பெரியவர்களும் தற்போதும் பெரும் கஷ்ரங்களையும் துன்பங்களையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
இதனால் நாட்டிலுள்ள 9 மாணாகங்களில் வடக்கு மாகாணத்தில் விசேட தேவையுடையோர் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. இவர்களில் பெரும்பாலானோர் சுகாதாரத் தேவையுடையவர்களாகவே காணப்படுகின்றனர்.
இதனடிப்படையில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த சுகாதாரத் துறையினர் ஏனைய மாகாணங்களை விட அதிகமாக உழைக்க வேண்டிய தேவை நிறையவே உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்றாலும் வடக்கு மாகாணத்தின் சுகாதாரக் குறிகாட்டி ஏனைய மாகாணங்களுக்கு நிகராகவே உள்ளது. வடக்கு மாகாணத்தின் விசேட தேவைகளை ஆராய்ந்து ஐந்து வருடத்திற்கான சுகாதாரத் திட்டமொன்றினை உருவாக்கி நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.
எமது மாகாணத்தைப் பொறுத்தவரையில் சுகாதாரத்துறையில் ஆளணிப்பற்றாக்குறை நிறையவே காணப்படுகிறது. குறிப்பாக மாகாணத்திலுள்ள 101 வைத்தியசாலைகளில் 37 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் ஒருவர் கூட இல்லாத நிலையே இருக்கின்றது. இந்த நிலைமையானது நாட்டிலுள்ள மாகாணங்களில் வடக்கு மாகாணத்தில் மட்டுமே காணப்படுகின்ற பிரதான குறைபாடாகும் என்றார்.
வடக்கில் பல ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோர், கணவனை இழந்த பெண்கள் என எப்போதுமே பிரச்சனைகளின் மத்தியில் பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களினது நலனிலேயே வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் அக்கறை கொண்டு சேவைகளை முன்னெடுக்க வேண்டுமென்றும் அமைச்சர் சத்தியலிங்கம் கேட்டுக் கொண்டார்.
சிறுநீரை அதிகமாக அடக்கி வைக்கக்கூடாது : ஏன் என்று தெரியுமா?
சிறுநீர் உடலில் இருந்து வெளியேறுவது இயல்பான ஒன்று. ஆனால், பலரும் சூழ்நிலை காரணமாக பல மணி நேரம் சிறுநீரை அடக்கி வைக்கிறார்கள், குறிப்பாக பெண்கள், பயணம் மேற்கொள்ளும் போது மோசமான கழிவறை மற்றும் பல்வேறு காரணங்களால் சிறுநீரை அடக்குகிறார்கள்.
இது ஆபத்தானது. ஆண்களை விட பெண்களே அதிகளவில் சிறுநீரை அடக்குகிறார்கள். பொதுவாக மனிதனின் சிறுநீர்ப்பையின் கொள்ளளவு 350 முதல் 500 மி.லி. வரைதான் இருக்கும். எப்போதுமே சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் சிறுநீர் கழித்து விடுவது நல்லது. அளவுக்கு அதிகமாக அடக்கி வைக்கக்கூடாது.
அதிலும் பெண்கள் சிறுநீரை அடக்க கூடாது. இதனால் பலவிதமான பிரச்சனைகளை அனுபவிக்க நேரிடும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சிறுநீரை அடக்கக்கூடாது. இதனால் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. ஒரு நாளில் காலை தொடங்கி இரவு வரை 5 முதல் 7 முறை சிறுநீர் கழிக்க வேண்டும்.
மூன்று மணி நேரத்துக்கு மேல் சிறுநீரை தேங்க விடக்கூடாது. சிறுநீர்ப்பையின் கொள்ளளவை மீறி சிறுநீர் தேங்குவதால் நிறைய விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. சிறுநீர்ப்பை அதிகமாக விரிவடைவதால் சிறுநீர்ப்பையில் உள்ள அழுத்தம் கொடுக்க வேண்டிய திசுக்கள் காலப்போக்கில் பாதிப்படைந்து விடும்.
இந்த திசுக்கள்தான் சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்ததுமே அதை வெளியேற்றத் தூண்டுகின்றன. இத்தகைய திசுக்கள் பாதிப்படைவதால் சிறுநீர்ப்பை செயலிழந்து போகும். சிறுநீர் முழுவதுமாக வெளியேற்றப்படாமல் உள்ளே தேங்கிவிடும் நிலை ஏற்படும்.
இப்படி உள்ளே சிறுநீர் தேங்குவதால் அடிக்கடி சிறுநீர்ப்பாதை அடைப்பு ஏற்படவும் சிறுநீர்ப்பையில் கல் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. நாட்கள் செல்லச் செல்ல சிறுநீரகங்கள் வீக்கமடைந்து செயல்இழந்து போகும் வாய்ப்பும் உண்டு. அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் சிலருக்கு வயிறு வீங்கிவிடும். சிறுநீர் கழித்து முடிந்ததும், அது சகஜ நிலைக்கு வந்து விடும். சிறுநீரை கட்டுப்படுத்தாமல் அவ்வப்போது வெளியேற்றுவது தான் ஆரோக்கியமான உடல் நலத்துக்கு நல்லது.
ஏ9 வீதியில் நடந்த வாகன விபத்தில் ஐவர் காயம்!!
முல்லைத்தீவு முறிகண்டி ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். முறிகண்டியிலிருந்து பரந்தனிற்கு குறுந்தூர சேவையில் ஈடுபட்டு வரும் பேரூந்துடன், கொழும்பிலிருந்து வந்த லொறி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் பேரூந்தில் பயணம் செய்த ஐவர் காயமடைந்துள்ளனர். மோதிய வாகனம் பேருந்துடன் மோதி குடை சாய்ந்ததுடன், பேருந்து வீதியை விட்டு விலகி சென்றுள்ளது.
வீதியினருகின் உள்ள பனை மரத்துடன் இரண்டு வாகனங்களும் மோதியுள்ளன.
விபத்து தொடர்பாக மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
ஒரு மணிநேரம் காத்திருந்து லண்டன் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ளார். எமிரேட்ஸ் விமான சேவைகள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஈ.கே. 651 என்ற விமானத்தில் இன்று சனிக்கிழமை காலை 10.13க்கு டுபாய் ஊடாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதியுடன் அவரது பாரியார் ஜயந்தி சிறிசேன, ஜனாதிபதி ஆலோசகர் டாக்டர் கிறிஸ் நோனிஸ் உள்ளிட் 6 பேர் லண்டன் புறப்பட்டனர்.
இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் சாதாரண பயணிகளைப் போன்று ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்குச் சென்று காத்திருந்து புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வெதுப்பகம் திறந்து வைப்பு!!(படங்கள்)
வவுனியா மாவட்டம் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தினால் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சரினால் முன்னெடுக்கப்பட்ட வெதுப்பகம் அமைக்கப்பட்டு அந்த கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு நேற்று(06.03) வெள்ளிக்கிழமை வைபவ ரீதியாக திறக்கப்பட்டு கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெதுப்பகமானது 1.5 மில்லியன் ரூபாய் செலவில் அந்த கிராம மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் பிரதான நோக்கோடு அமைக்கப்பட்டது.
குறித்த நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் , சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் ,வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜி.டி.லிங்கநாதன் மற்றும் திரு.தியாகராஜா , வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.மோகநாதன் ,செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அப்பகுதியின் கிராம சேவகர் ஆகியோர் இணைந்து குறித்த வெதுப்பகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்து பிரமனாலங்குளம் கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கிராம மட்ட அமைப்புக்களுக்கு வாழ்வாதார உதவித் திட்டம்!!(படங்கள்)
வவுனியா மாவட்டத்தின் மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் செயற்திட்டம், வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் நேற்று (06.03) வெள்ளிக்கிழமை காலை 11:30 மணியளவில் வவுனியா மாவட்ட கிராம அபிவிருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், மற்றும் ந.சிவசக்தி ஆனந்தன்,
வடமாகாண சபை உறுப்பினர்களான திரு.ஜி.டி.லிங்கநாதன், திரு.தியாகராஜா, திரு.இந்திரராஜா, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.மோகநாதன் மாகாண கிராம அபிவிருத்தி பணிப்பாளர் திரு.பெலிசியன், மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 06 மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுக்கு பாத்திரப் பொருட்களும், அலுவலக தளபாடங்கள், கதிரைகள் என்பனவும், சுமார் 25 பெண்களுக்கு அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு தையல் இயந்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
யாழில் இடம்பெற்ற இளம் காதல் ஜோடியின் வினோதத் திருமணம்!!
யாழ். வல்வெட்டித்துறை கடற்பரப்பில் வித்தியாசமான முறையில் படகில் அமைக்கப்பெற்ற அலங்காரப் பந்தரில் காதல் ஜோடியின் திருமணம் ஒன்று மாலை இடம்பெற்றது.
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைச் சேர்ந்த யாழ். கல்லூரி ஒன்றில் உயர்கல்வியை மேற்கொண்டு வரும் சாம்ஜெயவேல் பானுமதி ஆகிய காதல் ஜோடியினருக்கே இந்த வினோத திருமணம் யாழ். வல்வெட்டித்துறையில் ரேவடி கடற்பரப்பில் இடம்பெற்றது.
குறித்த இந்த நிகழ்வு மாலை 5 மணியளவில், உல்லாச பயணிகளுக்கென யாழில் வடிவமைக்கப்பட்டு, வல்வை கடலில் சேவையிலீடுபடும் “Valvai Blues Boat” என்னும் சிறிய உல்லாசப் படகில் இடம்பெற்றது. குறித்த இந்த வினோத திருமணம் சுற்றத்தவர்கள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
அமெரிக்க நியூயோர்க் நகரில் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்து!!
அமெரிக்கா நியூயோர்க் நகரிலுள்ள லாகார்டியா விமான நிலையத்தில் பயணிகள் விமானமொன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வேலியில் மோதி வியாழக்கிழமை விபத்துக்குள்ளானதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் பனிப்புயல் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.மேற்படி விபத்தையடுத்து விமானத்திலிருந்த 127 பயணிகளும் 5 விமான ஊழியர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
அவர்களில் 24 பேருக்கு சிறியளவான காயங்கள் ஏற்பட்டிருந்தாகவும் எவரும் பாரதூரமான காயங் களுக்கு உள்ளாகவில்லை எனவும் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் இருவர் மட்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.அட்லான்டாவிலிருந்து நியூயோர்க்கிற்கு பயணத்தை மேற்கொண்ட ‘டெல்ற்றா 1086’ விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தால் விமானத்தின் முன் பகுதியும் இறக்கையொன்றும் சேதமடைந்துள்ளன.
வவுனியா ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்திற்கு தமிழ் தேசிய இளைஞர் கழகத்தால் வர்ணப்பூச்சு கையளிப்பு!!(படங்கள்)
வவுனியா சிதம்பரபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நாகராஜா வித்தியாலயத்தின் கட்டடங்களின் புனரமைப்புக்காக பாடசாலை அதிபர் திரு.எஸ்.வரதராஜா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க வர்ணப்பூச்சு நேற்று வெள்ளிக்கிழமை (06.03) காலை 10.00 மணியளவில் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
தொடர்ந்து பாடசாலையின் பௌதீக வளர்ச்சி தொடர்பாகவும் மாணவர்களின் கல்வி நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இவ் நிகழ்வில் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளரும், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஸ்தாபகருமான திரு.க.சந்திரகுலசிங்கம் (மோகன்), பாடசாலை அதிபர் திரு.எஸ்.வரதராஜா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் ஊடக இணைப்பாளர் திரு.ம.சஞ்சீவன், செயலாளர் திரு.ஸ்ரீ.கேசவன், பொருளாளர் திரு.த.நிகேதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலிறுதிக்கு இந்தியா முன்னேறிய இந்திய அணிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து!!
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய அணிக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி நேற்று தனது 4வது லீக்கில் மேற்கிந்திய தீவுகள் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், தொடர்ந்து 4 லீக் போட்டிகளிலும் வென்று 8 புள்ளிகளுடன் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியது.
இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
உலக கிண்ண போட்டியின் 28வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் மோதிக்கொண்டன. இதில் நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இதன்படி களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக ஹோல்டர் 57 ஓட்டங்களை பெற்றார். இந்நிலையில் 44.2 ஓவர்களில் மேற்கிந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 182 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக முஹமட் ஷமி 3 விக்கெட்டுகளையும் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
வெற்றிக்கு 183 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 39.1 ஓவர்கள் நிலையில் 6 விக்கெட்டுக்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
ஜெயலலிதாவின் 22 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வந்தது!!
ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா ஆகியோர் மீதான டான்சி நில வழக்கு 22 ஆண்டுகளுக்குப் பின்னர் முடிவுக்கு வந்துள்ளது.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் அரசு நிறுவனமான தமிழ்நாடு சிறு தொழில்கள் கழகத்துக்குச் (டான்சி) அமைந்துள்ளது. அந்த தொழிற்பேட்டைக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை 1992ம் ஆண்டில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த ஜெயா பப்ளிகேஷனுக்காக வாங்கியதில் அரசுக்கு 2.76 கோடி இழப்பு ஏற்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது.
கடந்த 2000ம் ஆண்டு, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா, சசிகலாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதித்தாலும், தண்டனையை ரத்து செய்யவில்லை.
பின்னர் 2003ம் ஆண்டு இவ்வழக்கில் இருந்து ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை விடுவித்து டான்சி சொத்தை திருப்பித் தர வேண்டும். என்று 2003ம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
முன்னதாக 1993ம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆலந்தூர் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்துக்கு விற்றது சட்டவிரோதம் என்பதால், அந்த விற்பனைப் பத்திரத்தை ரத்துசெய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரினார்.
இந்த வழக்கு கடந்த 22 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட குழு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது டான்சிக்கு சொந்தமான சொத்து அந்த நிறுவனத்துக்கே திருப்பித் தரப்பட்டுவிட்டது என்று கூறப்பட்டதோடு இந்த வழக்கு அவசியமற்றது என்று வாதிடப்பட்டது.
மேலும், இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் ஆலந்தூர் பாரதி தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
பலாத்காரம் செய்த நபரை நடுவீதியில் அடித்தே கொன்ற மக்கள்!!(வீடியோ)
இந்திய மாநிலமான நாகலாந்தில் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த வாலிபரை பொது மக்கள் இழுத்து வந்து சரமாரியாக தாக்கி கொன்றுள்ளனர்.
வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து சிமாப்பூருக்கு வந்த சையது என்ற அந்த நபர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்துள்ளார்.
இந்நிலையில் அவர் 20 வயது இளம்பெண்ணை பலாத்காரம் செய்ததாக கடந்த மாதம் 25ம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிமாப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த பலாத்கார சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சிமாப்பூரில் திரண்ட 4000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஊர்வலமாக மத்திய சிறைக்கு சென்று வன்முறையில் ஈடுபட்டனர்.
பின்னர், சிறையில் நுழைந்த அவர்கள் சையதை வெளியே இழுத்து வந்து நிர்வாணப்படுத்தி அடித்ததில் படுகாயம் அடைந்த அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தென் கொரிய தலைநகரில் அமெரிக்கத் தூதுவரை கத்தியால் வெட்டிக் காயப்படுத்திய நபரால் பரபரப்பு!!
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் அந்நாட்டிற்கான அமெரிக்கத் தூதுவர் மார்க் லிப்பேர்ட் வியாழக்கிழமை நபரொருவரின் கத்திக் குத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சியோல் நகரில் இடம்பெற்ற காலை விருந்துபசார நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் மீது கத்திக் குத்து நடத்தப்பட்டுள்ளது.தாக்குதல் நடத்திய 55 வயதான கிம் என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் குறிப்பிட்ட நபர், “வட கொரியாவும் தென் கொரியாவும் இணைக்கப்பட வேண்டும்’ என கூச்சலிட்டவாறு கத்தியுடன் லிப்பேர்ட்டை நெருங்கி “போர் பயிற்சிக்கு இடமில்லை” எனத் தெரிவித்தவாறு இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
தாக்குதல்தாரி லிப்பேர்ட்டின் வலது கன்னத்திலும் இடது மணிக்கட்டுப் பகுதியிலும் கத்தியால் வெட்டியுள்ளார்.இதனால் அதிர்ச்சியுடன் குருதி பெருக்கெடுத்தோட லிப்பேர்ட் நின்றிருக்க, பொலிஸார் கிம்மை உடனடியாக மடக்கிப் பிடித்துக் கைதுசெய்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லிப்பேர்ட் அறுவைச்சிகிச்சையொன்று உட்படுத்தப்பட்டதாகவும் அவரது உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை எனவும் தென் கொரிய அதிகாரிகள் கூறுகின்றனர்.கிம், கொரிய தேசியவாத செயற்பாட்டாளர்களுடன் தொடர்புபட்ட ஒருவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவர் 2006 ஆம் ஆண்டிற்கும் 2007 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் ஆறு தடவைகள் வட கொரியாவுக்கு பயணத்தை மேற்கொண்டிருந்ததாக புலனாய்வு அதிகாரிகள் கூறுகின்றனர்.
2011 ஆம் ஆண்டில் கிம், வட கொரிய மறைந்த தலைவலர் கிம் – யொங் இல்லிற்காக சியோலில் ஞாபகார்த்த ஸ்தலமொன்றை அமைக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலானது தென் கொரிய, அமெரிக்க கூட்டிணைப்பு மீதான தாக்குதல் என தென் கொரிய ஜனாதிபதி பார்க் கெயுன் – ஹை குற்றஞ்சாட்டியுள்ளார்.தென் கொரியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான வருடாந்த இராணுவ பயிற்சிகள் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே மேற்படி தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை நீடிப்பு!!
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்களை ஏற்கும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 31ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் பெப்ரவரி 6ம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. முன்னதாக மார்ச் 6ம் திகதியுடன் (இன்றுடன்) விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தது.
எனினும் இந்தக் கால எல்லை எதிர்வரும் 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.