அமெரிக்காவை சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பிரபல நடிகை கிம் கர்தஷியானை போன்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக 1 கோடி ரூபாய் செலவளித்துள்ளார். அமெரிக்காவின் மன்செஸ்டர் நகரைச் சேர்ந்த ஜார்டன் ஜேம்ஸ் பார்க் (23) என்ற வாலிபர் கிம் கர்தாஷியனின் தீவிர ரசிகன்.
மேக்கப் கலைஞரான ஜேம்ஸுக்கு கிம்மின் டிசைனர் கைப்பைகள், ஃபர் கோட்டுகள் (Fur coat) என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் பார்ப்பதற்கும் கிம்மை போன்றே இருக்க விரும்பிய ஜேம்ஸ்,1 கோடி ரூபாய் செலவு செய்து பிளாஸ்டிக் சேஜரி செய்துள்ளார்.
மேலும் உதடுகளை பெரிதாக்கி, தலைமுடியை லேசர் வைத்து எடுத்ததுடன், புருவத்தையும் டாட்டூ மூலம் பெரிதாக்கி கிம் போன்று ஆகியுள்ளார். ஆனால் இவரை பார்த்து பலர் விமர்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் கூறுகையில், இவ்வாறு செய்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றும் நான் பிளாஸ்டிக் போன்று போலியாக இருப்பதாக கிண்டல் செய்பவர்களை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம் அண்மையில் Android 5 Lollipop இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது. இவ் இயங்குதளப் பதிப்பிற்கான அப்டேட்டான Android 5.1 Lollipop இனை 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள பதிப்பில் நீக்கப்பட்டுள்ள Silent வசதி இப்புதிய பதிப்பில் மீண்டும் அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், பிரதான நினைவக முகாமைத்துவம் மேம்படுத்தப்படவுள்ளது.
இவை தவிர வயர்லெஸ் இணைப்பில் காணப்பட்டுள்ள தவறுகள் நீக்கப்பட்டுள்ளன, மின்கல முகாமைத்துவம் மேம்படுத்தப்பட்டுள்ளது, ஒலி அமைப்பில் காணப்பட்ட தவறுகள் நீக்கப்பட்டுள்ளன.
ரஜினி இருவேடங்களில் நடித்த லிங்கா படம் கடந்த 12ம் திகதி வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. உலகம் முழுவதும் 4 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளன. தமிழகத்தில் 700 தியேட்டர்களில் திரையிரப்பட்டு உள்ளது. லிங்கா படம் ரிலீசான மூன்று நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.
தொடர்ந்து வசூல் குவிப்பதாகவும் தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த நிலையில் லிங்கா படம் மூலம் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக சில விநியோகஸ்தர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். சென்னையில் திரண்டு நஷ்டத்தை ஈடுகட்டும் படியும் வற்புறுத்தி வருகிறார்கள். இதற்கு பட நிறுவனம் கண்டனம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் லிங்கா படத்தை விநியோகம் செய்துள்ள வேந்தர் மூவீஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி.சிவா வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது..
கடந்த 2 நாட்களாக லிங்கா படத்தின் வசூல் பற்றிய தவறான தகவல்களை சில தவறான நபர்கள் பரப்பி வருகிறார்கள். லிங்கா வெளியான சமயத்தில் தமிழகமெங்கும் அரையாண்டு தேர்வு நடப்பதாலும், தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிட்டதாலும், எதிர்பார்த்த அளவைவிட சற்று வசூல் குறைந்தது.
ஆனால் நேற்று மாலை முதல் குடும்பம் குடும்பமாக கூட்டம் கூட்டமாக மக்களின் வருகையால் திரையரங்குகள் நிரம்பி வருகிறது. இதுவே இப்படத்தின் வெற்றிக்கு சாட்சி.
லிங்கா மக்களுக்கு பிடித்த படம், விநியோகஸ்தர்களுக்கு லாபம் தரும் படமாகவும் நிச்சயம் இருக்கும். எனவே இப்படத்தின் வசூல் பற்றிய எல்லா விவரங்களும் நாங்கள் அறிவிப்பது மட்டுமே உண்மையானது. மேலும் லிங்கா பற்றிய அவதூறான செய்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
ரஜினி அரசியலில் ஈடுபட வற்புறுத்தி உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ரசிகர்கள் அறிவித்துள்ளனர். ரஜினிகாந்த் ரசிகர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் தமிழ்நாடு ரஜினிகாந்த் பட்டதாரிகள் பேரவை, இளைஞர் பேரவை, மருத்துவர் பேரவை, மகளிர் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ரசிகர்கள் பேசியதாவது, ரஜினி நேரடி அரசியலுக்கு வந்தால் நாட்டில் நேர்மையான ஆட்சி, ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என்று அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே மக்கள் நலன் கருதி ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்.
ரஜினி அரசியலில் ஈடுபட ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கோவில்களில் வழிபாடுகள் நடத்தி உள்ளோம். ரசிகர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது பாராட்டோ பதவியோ அல்ல. தாங்கள் நேரடி அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளதா இல்லையா என்பதை ரசிகர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
தங்களுடைய அரசியல் சம்பந்தப்பட்ட அறிவிப்பு எதுவாக இருந்தாலும் ஏற்போம். இனி வாழ்வோ, அல்லது சாவோ உங்களோடுதான். இதற்காக உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தப்போகிறேம். அதை நடத்தும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளனர்.
விக்ரம்-எமிஜக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள படம் ஐ. இப்படத்தை ஒஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் மட்டும் பாடல்கள் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பொங்கலுக்கு படம் ரிலீசாகும் என்று உறுதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இது வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது. டிரைலரை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை ஐ டிரைலரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
ஏற்கனவே ஐ டீசரை 90 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர் பார்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா– அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. முதலில் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 408 ஓட்டங்கள் குவித்தது.
நேற்றைய 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. தவான் 26 ஓட்டங்களுடனும், புஜாரா 15 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 4வது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. காயம் காரணமாக தவான் களம் இறங்கவில்லை. புஜாராவுடன் வீராட் கோலி இணைந்து ஆடினார். அவுஸ்திரேலிய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்திய விக்கெட்டுகள் மளமள என்று சரிந்தன.
117 ஓட்டங்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்தன. வீராட் கோலி (1), ரகானே (10), ரோகித்சர்மா (0) ஆகியோர் விக்கெட்டை ஜோன்சன் கைப்பற்றினார். ஹாசில்வுட் பந்தில் அணித்தலைவர் டோனியும் (0), ஸ்டார்க் பந்தில் அஸ்வினும் (19) ஆட்டம் இழந்தனர்.
காயம் காரணமாக தவான் 6வது விக்கெட் விழுந்தபிறகு களம் வந்தார். பொறுப்புடன் விளையாடி வந்த புஜாரா 7வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அவர் 43 ஓட்டங்கள் எடுத்தார். அப்போது ஓட்ட எண்ணிக்கை 143 ஆக இருந்தது.
தவான் தனி நபராக கடுமையாக போராடினார். 81 ஓட்டங்களில், அவரும் பெவிலியன் திரும்பினார். இந்திய அணி 64.3 ஓவரில் 224 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனால் அவுஸ்திரேலியாவுக்கு 128 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடைசியாக உமேஷ்யாதவ் 30 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். ஜோன்சன் 4 விக்கெட் கைப்பற்றினார். ஹாசில்வுட், ஸ்டார்க், லயன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
இதையடுத்து 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி அவுஸ்திரேலியா 2வது இன்னிங்சை தொடங்கியது. வார்னரும், ரோஜர்சும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வார்னர் 6 ஓட்டங்களிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வட்சன் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் விரைவில் விக்கெட்டை இழந்தனர்.பொறுப்புடன் ஆடிய ரோஜர்ஸ் அரை சதம் கடந்து அணியின் வெற்றிக்கான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தார்.
அவர் 55 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த மூன்று விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா கைப்பற்றினார். இதையடுத்து அணித்தலைவர் ஸ்மித்துடன் இணைந்து ஆடிக்கொண்டிருந்த மார்ஷ் 17 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், யாதவிடம் விக்கெட்டை இழந்தார்.
ஆரோன் வீசிய முறையற்ற பந்தை தட்டிவிட்டு ஓட்டங்கள் எடுக்க முயன்ற ஸ்மித் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்த ஓவரில் ஹாடினை (1) வெளியேற்றினார் யாதவ். இந்த இன்னிங்சில் அபாரமாக பந்து வீசி 122 ஓட்டங்களுக்குள் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன் பின்னர் 24வது ஓவரில் மார்ஷ் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். இதனால், அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
வவுனியா ஊடான வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்வுத்தேகம இடைப்பட்ட பகுதியில் ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ரயில் பாதையில் வௌ்ளநீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுபாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்ளவிருந்த ரயில் சாவஸ்திரிபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு – கோட்டையில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் ரயில்கள் மாஹவ வரை மட்டுமே சேவையை மேற்கொள்ளும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் கூறியுள்ளது.
எவ்வாறாயினும் குறிப்பிடப்பட்ட கால அட்டவணையின் படி ரயில் சேவைகள் இடம்பெறும் எனவும் வௌ்ளநீர் வடிந்ததும் வடக்கு ரயில் பாதையின் ரயில் போக்குவரத்துக்கள் வழமைக்கு திரும்பும் எனவும் நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ரயில் கல்கமுவ வரை தனது பயணத்தை மேற்கொள்ளும். வௌ்ளநீர் வடிந்ததும் நிலைமை வழமைக்கும் திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
பலாங்கொடை – ஹய்வத்தை பிரதேசத்தில் பொல்லால் தாக்கி தனது மகனைக் கொலை செய்த 54 வயதான தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 27ம் திகதி இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் சந்தேகநபரின் மனைவி கடந்த 18ம் திகதி பலாங்கொடை பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்படி நேற்றையதினம் வீட்டில் இருந்த கழிவறையில் இருந்து 25 வயதான இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மகனைக் கொலை செய்த தந்தை, சடலத்தை கழிவறைக்குள் மறைத்து வைத்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
வடக்கு ரயில் பாதையில் தலாவ மற்றும் தம்புத்தேகமவுக்கிடையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதையில் மழை நீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை மேற்கொள்ளும் ரயில் சாவஸ்திரிபுர வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொழும்பு – கோட்டையில் இருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ரயில்கள் மஹவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் கூறியுள்ளது.
அத்துடன் கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் ரயில் கல்கமுவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மழை நீர் வடிந்ததும் நிலைமை வழமைக்கும் திரும்பும் என ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை அநுராதபுரம் குவிச்சன்குளத்தின் அணை உடைப்பெடுக்கும் அபாயம் தோன்றியுள்ளதால், குளத்தை அண்மித்த பகுதிகளில் வாழ்கின்ற மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அநுராதபுரம் நகர ஆணையாளர் சம்பத் ரோஹண தெரிவிக்கின்றார்.
நிலவுகின்ற அதிக மழையின் காரணமாக குளம் ஏற்கனவே வான் பாய்வதாக நகர ஆணையாளர் சுட்டிக்காட்டுகின்றார்.
அநுராதபுரம் புதிய பஸ் தரிப்பிடம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இருந்து மக்களை அகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நகர ஆணையாளர் கூறினார்.
வவுனியாவில் பெய்துவரும் கடும் மழை காரணமாக செட்டிகுளத்திலுள்ள மீடியாபாம், கந்தசாமி நகர், பாவற்குளம் படிவம் நான்கு மற்றும் மெனிக்பாம் ஆகிய பகுதி மக்களை முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செட்டிகுளம் – பூவரசன்குளம் ஊடான போக்குவரத்து நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்றும், நேற்று முன்தினமும் பெய்த கடும் மழை காரணமாக தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் அதிகரித்திருக்கிறது.
இதனால் செட்டிகுளம் – பூவரசன்குளம் போக்குவரத்து பாதை தடைப்பட்டது.
இதேபோன்று நெளுக்குளம் – செட்டிகுளம் வீதியும் வெள்ளத்தால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பித்தடைந்திருக்கும் அதேவேளை பாவற்குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்தால் அதன் வான் கதவுகள் திறக்கப்படலாம் என்று வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் சூரியராஜா கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பாடசாலை ஒன்றினுள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 139 மாணவர்கள் உள்ளிட்ட 149 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து அந்த நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டுவந்தனர். இதன்படி தண்டனை விதிக்கப்பட்டிருந்த வைத்தியர் உஸ்மான் மற்றும் அர்ஷத் மெஹ்மூத் ஆகிய இரு தீவிரவாதிகளுக்கு, வெள்ளிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூக்கிலிடப்பட்ட ஒருவரான வைத்தியர் உஸ்மான், இராணுவ மருத்துவப் பிரிவின் முன்னாள் வீரர் என்பதோடு, 2009 ல் ராவல்பிண்டி இராணுவத் தலைமையகம் மீதான தாக்குதலில் ஈடுபட்டார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இவர் தடை செய்யப்பட்ட இயக்கமான லஷ்கர்-இ-ஜாங்வியின் உறுப்பினராவார். மேலும் 2009ம் ஆண்டு லாகூரில் வைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் சூத்திரதாரி எனவும் இவர் சந்தேகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மற்றையவரான அர்ஷத் மெஹ்மூத், பர்வேஸ் முஷாரஃப்பை 2003ம் ஆண்டு படுகொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டவர். அத்துடன் தீவிரவாத இயக்கம் ஒன்றுடன் தொடர்புபட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிக மழை காரணமாக இலங்கையின் சில பிரதேசங்களிலுள்ள போக்குவரத்து பாதைகள் நீரில் மூழ்கியுள்ளது.
பொலனறுவை மட்டக்களப்பு, கல்லெல்ல மற்றும் மன்னம்பிட்டி பிரதேசங்களின் உள்ள பாதைகளே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்பாதைகளை பயன்படுத்தும் சாரதிகளுக்கு மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பதுளை மஹியங்கனை பாதையில் நேற்று இரவு 12 மணியளவில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் பாதையின் போக்குவரத்து தடைபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வவுனியாவில் கடந்த சிலதினங்களாக திருடர்கள் தமது கைவரிசையை காட்டிவருகின்றனர். இன்று (20.12) அதிகாலையில் வவுனியா கோவில்குளம் ஒன்பதாம் ஒழுங்கைப் பகுதியில் இரண்டு வீடுகளில் கூரிய ஆயுதங்களுடன் வீட்டு கதவுகளை உடைத்து உள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிருந்தவர்களை சரமாரியாக தாக்கிவிட்டுபணம் மற்றும் பெருந்தொகையிலான நகைகள் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
மேற்படி இரண்டு வீடுகளும் ஒன்பதாம் ஒழுங்கையில் இருந்து சற்று ஒதுக்கு புறமாக அமைந்துள்ளமையோடு நேற்று கடும் மழையும் பெய்து கொண்டிருந்தமையாலும் அயலவர்கள் இதுதொடர்பாக அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இதேபோன்று கடந்த வாரமும் வவுனியா கோவில்குளம், தெற்கிலுப்பைகுளம் ஆகிய இடங்களில் திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். முகமூடி அணிந்து வாள்கள் பொல்லுகள் சகிதம் கதவை உடைத்து உள்நுழையும் ஆறுக்கு மேற்பட்ட கொள்ளையர்கள் வீட்டிலிருதவர்களை கட்டி வைத்துவிட்டு பணம் நகைகள் என்பவற்றை சூறையாடி சென்ற மூன்று சம்பவங்கள் இதுவரை கடந்த வாரத்தில் இடம்பெற்றுள்ளன.
பயங்கர கூரிய ஆயுதங்களுடனே இக் கொள்ளையர் குழு தமது கைவரிசையை காட்டியுள்ளனர். மேற்படி சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர் .மேற்படி கொள்ளையர் குழு தொடர்பாக பொதுமக்களே மிகவும் அவதானமாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
ஜப்பானின் விசேட விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு கடந்த வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் 26 வயதுக்கும் 60 வயதுக்கும் உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீசா முடிவடைந்தபோதும் அதிக காலம் நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். 2013ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் பின்னர் ஜப்பானினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய நாடு கடத்தல் நடவடிக்கை இதுவாகும்.
வவுனியா, பாவற்குளம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியரை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி இடமாற்றம் செய்ய முற்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விடயம் தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தனர்.
பாவக்குளம் பிரதேச வைத்தியசாலையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்று வரும் நிலையில் அவை மிகவும் மோசமாகவுள்ளதாகவும் கட்டுமானத்தில் பல தவறுகள் உள்ளதாகவும் பிரதேசவாசிகள் அண்மையில் வைத்தியருக்கு சுட்டிக்காட்டியிருந்தனர். இதனையடுத்து வைத்தியர் ஒப்பந்தக்காரர்களிடம் வேலைகள் சீரில்லை என மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர் என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து ஒப்பந்தக்காரர் வைத்தியரை தாக்க முட்பட்டிருந்த போது சிகிச்சைக்காக சென்றிருந்தவர்கள் அதனை தடுத்திருந்தனர். எனினும் கடந்த புதன்கிழமை வைத்தியசாலைக்கு வருகை தந்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஒப்பந்தக்காரர்களுக்கு சார்பாக செயற்பட்டுள்ளார்.
இரவு பகல் பாராது மக்களுக்கு சேவையாற்றும் வைத்தியரை பாடசாலை ஆசிரியர் மாணவனை வகுப்பறைக்கு வெளியில் விடுவது போல் வைத்தியசாலைக்கு வெளியே விட்டு வைத்தியரின் அறையை பூட்டி அராஜகம் செய்துள்ளார்.
எனினும் பிரதேசவாசிகள் உடன் வைத்தியசாலைக்கு வந்து வைத்தியரை அவரது கடமையை செய்ய விடுமாறு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரை கோரியிருந்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்தும் எமது வைத்திய சாலையின் வைத்தியரை இடமாற்றம் செய்வதற்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு சார்பாக செயற்படவும் அதிகாரிகள் முனைகின்றனர். அதனை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றோம் என தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களுக்காக பணி செய்யும் வைத்தியரை இடமாற்றம் செய்யாதே, மூவின மக்களுக்கும் சேவை செய்யும் வைத்தியரை அவமானப்படுத்தாதே, ஒப்பந்தக்காரரே உங்கள் பணியை சிராக செய், சுகாதார அமைச்சரே வைத்தியசாலையின் தரம் உயர்த்து என்ற சுலோசகங்களை தாங்கியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
சிகிச்சைக்காக வந்திருந்தவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் ஒன்றினைந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30 நிமிடங்கள் வரை ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா நெளுக்குளத்தின் ஊடாக செட்டிக்குளம் செல்லும் பிரதான வீதி திருத்தப்படாமையினால் பயணம் செய்யும் மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகளாகியும் இவ்வீதி திருத்தப்படவில்லை. வீதி மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது. விநாயகபுரம், இராசேந்திரகுளம், சூடுவெந்தபுலவு, பாவற்குளம், உலுக்குளம், வீரபுரம் என பல கிராம மக்கள் வவுனியா நகரத்திற்கு செல்வதற்கு பிரதான வீதியாக இது அமைந்துள்ளது.
பாடசாலை செல்வோர் வியாபாரம் செய்வோர் பொருட்களை கொள்வனவு செய்ய நகரத்திற்கு செல்வோர், மற்றும் மாவட்ட வைத்தியசாலை செல்வோர் என பல தரப்பட்டவர்களும் இவ்வீதி திருத்தப்படாமையினால் பல சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
துவிச்சக்கர வண்டியில் பயணிப்பவர்கள் வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனாலும் குளம் போல வெள்ளம் நிறைந்திருப்பதனாலும் விழுந்து எழும்பி செல்ல வேண்டிய நிலையும் காணப்படுவதாக மக்கள் தெரிவிகிகின்றனர்.
குறிப்பாக விநாயகபுரம், இராசேந்திரகுளம், பாவற்குளம் முதலான வீதிகள் பயணிக்க முடியாத நிலையில் மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இதேவேளை பல மாதங்களுக்கு முன்னர் குன்று குழிகள் மூடப்படுவதற்கு வீதியில் கொட்டப்பட்ட கிரவல் மண் பரவப்படாத நிலை காணப்படுகின்றது.
வெள்ள நீர் தேங்கியுள்ளதால் வீதி மேடு பள்ளமாக காணப்படுகின்றது இதனால் பிரயாணம் செய்பவர்களும் வாகன சாரதிகளும் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
வவுனியா தெற்கு பிரதேச சபை,வெங்கலச்செட்டிகுள பிரதேச சபை வீதி அபிவிருத்தி அதிகார சபை இவ்வீதியை திருத்துவதற்கு இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.