நடிகை ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படங்களுக்கு பின் பட வாய்ப்புகள் குவிந்தன. சம்பளமும் கூடியது.
தற்போது சிவகார்த்திகேயனுடன் காக்கிசட்டை, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடிக்கிறார். அதர்வாவுடன் ஈட்டி படத்திலும் நடிக்கிறார். இப்படங்களுக்கு முன்பு நகர்ப்புறம், காட்டு மல்லி என இரு படங்களில் நடிக்க ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அப்படங்கள் நின்று போயின.
அவ்விரு படங்களின் படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்த அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீதிவ்யா கால்சீட் கொடுக்க மறுக்கிறாராம். இதனால் இரண்டு தயாரிப்பாளர்களும் ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கிறார்கள்.
தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவை நடிப்பாலும், சிந்தனையை தூண்டக்கூடிய வசனங்களாலும் மக்களை வெகுவாக கவர்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரை போலவே நடிகர் விவேக்கும் நகைச்சுவையாக நடிப்பால், சமுதாயத்தில் நிலவும் அவலங்களையும், அரசு ஊழியர்கள் கடமை தவறுவதையும் சுட்டிக்காட்டி வருகிறார்.
சாமி படத்தில் லஞ்சம் வாங்குது தவறு என்பதையும், போகியன்று பழைய துணிகளை தீ வைத்து எரிப்பதற்கு பதிலாக வறுமையில் வாடுபவர்களுக்கு அதை தரலாம் என்றும், ஏழை குழந்தைகளுக்கு பள்ளிகளில் இடம் அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர் நகைச்சுவையுடன் கூறியது பலரையும் கவர்ந்தது.
அதே போல் 12 பி படத்தில் பேருந்து நிறுத்தத்தில் டிரைவர் நிறுத்துவதில்லை என்பதையும், காதல் சடுகுடு படத்தில் கள்ளிப்பால் ஊற்றி பெண் குழந்தைகளை கொல்வது தவறு என்றும், பெண்ணை கற்பழித்தவருக்கு கட்டப்பஞ்சாயத்து மூலம் அபராதம் மட்டும் விதிப்பது தவறு என்பதையும் நகைச்சுவையாக எடுத்துக்கூறியது அநேகம் பேரை கவர்ந்தது. இப்படி பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பு மற்றும் பேச்சால் அவர் மக்களை சிந்திக்கவைத்து வருகிறார்.
சமீபத்தில் வெளிவந்த நான் தான் பாலாவில், உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை என்ற கருத்தை உரக்க சொன்ன விவேக்கை இந்த பிறந்த நாளில் வவுனியா நெற் வாழ்த்துகிறது. இனி வரும் காலங்களிலும் தனது நகைச்சுவை நடிப்பால் அவர் மக்களை தொடர்ந்து சிந்திக்க வைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் சினிமா ரசிகர்களும் விவேக்கை வாழ்த்துகின்றனர்.
பிரித்தானியாவை சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவன் தினமும் 12 பேருந்துகளை மாறி பள்ளிக்கு செல்லும் அவலநிலைக்கு ஆளாகியுள்ளான்.
பிரித்தானியாவின் மேற்கு யோக்ஷைர் நகரை சேர்ந்த கெல்லி-டேவிட் டையலர் (Kelly-David Taylor) என்ற தம்பதியினர் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஏனெனில், இவர்கள் வசிக்கும் வீடு, பள்ளியிலிருந்து வெகுதொலைவில் உள்ளதால், இவர்களின் குழந்தைகள் தினமும் 12 பேருந்துகளில் பயணம் செய்து பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து பெற்றோரின் குழந்தைகள்,பள்ளி கவுன்சிலிடம், எங்கள் குழந்தைகள் மிகவும் சிரமப்படுவதால், எங்கள் வீட்டிற்கு அருகாமையில் உள்ள பள்ளியில் இடம் தருமாறு கேட்டுள்ளனர்.
ஆனால், வீட்டிற்கு அருகாமையில் உள்ள பள்ளியில் இடம் இல்லாததால் கவுன்சில் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது.
வவுனியாவில் கஞ்சா வைத்திருந்த ஒருவரை விசேட அதிரடிப் படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்தனர்.
வவுனியா, குருமன்காடு பகுதியில் விசேட வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினர் சந்தேகத்திற்கிடமான ஒருவரை சோதனை செய்தபோது அவரது பையில் இருந்து ஒரு கிலோ 80 கிராம் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட குறித்த நபர் வவுனியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். தண்டனை என்பது எல்லோருக்கும் பொதுவானதே. ஆனால், கர்நாடக சிறைத் துறை மட்டும் இதற்கு விதிவிலக்கானது.
சிறையில் இருந்த ஜெயலலிதாவுக்கு அவர் கைதி என்பதையே மறந்து சலுகைகளை அள்ளித் தந்திருக்கிறது.
இது எதற்காக என்று விளக்கம் கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பி பதிலும் வாங்கியிருக்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் நரசிம்மமூர்த்தி.
பெங்களூரில் இருந்த அவரை சந்தித்தோம். பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவுக்காக வெஸ்டன் டாய்லெட், ஏ.சி மற்றும் வெளியிலிருந்து உணவு முதலியன தரப்பட்டன என ஊடகங்களில் தகவல்கள் வந்தன.
ஆனால், இதையெல்லாம் மறுத்து அறிக்கைவிட்டார் சிறைத் துறை அதிகாரி ஜெயசிம்ஹா. அதனால் என்னைப் போன்ற வெகுஜன மக்களுக்கு யார் சொல்வதை நம்புவது என்று புரிந்துகொள்ள முடியாததால், நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஐந்து கேள்விகள் கேட்டிருந்தேன். அதற்கு, கடந்த வாரம் கர்நாடக சிறைத் துறை பதில்கள் அனுப்பியது.
1. நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜெயலலிதாவை அடைத்த திகதி, நேரம் என்ன?
பதில்: 27.9.2014 மாலை 6:00. கைதி நம்பர்: 7402.
2. சிறைக்குள் ஜெயலலிதாவுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகள் என்னென்ன?
பதில்: தண்டனைக் கைதியாக ஜெயலலிதா உள்ளே வந்ததில் இருந்து வெளியே சென்றதுவரை சிறைத் துறை அவருக்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கவில்லை.
3. ஜெயிலுக்குள் இருந்தபோது ஜெயலலிதா எத்தனை நபர்களைச் சந்தித்தார்? அவர்களின் பதவிகள் என்ன? அவர்கள் உறவினர்களா? வழக்கறிஞர்களா? நலம் விரும்பிகளா? அதிகாரிகளா? மந்திரிமார்களா? என்பதைத் தெளிவாகக் கொடுக்க வேண்டும்?
பதில்: அவரை யாரும் சந்திக்கவில்லை.
4. ஜெயலலிதா சிறைக்குள் எந்தெந்த அதிகாரிகளின் மேற்பார்வையில் இருந்தார்?
பதில்: ஜெயலலிதா பெண் தண்டனைக் கைதி என்பதால் பெண்களுக்கான ப்ளாக்கில் அடைக்கப்பட்டார். அவரை பெண் எஸ்.பி., பெண் ஜெயிலர், பெண் பாதுகாப்பு அதிகாரி, பெண் தலைமை வார்டன் மற்றும் சிறைத் துறை இயக்குநர் மேற்பார்வையில் இருந்தார்.
5. தண்டனைக் கைதிகளுக்குச் சீருடை கொடுக்கப்பட வேண்டியது சிறைத் துறை விதி. அப்படிச் சீருடை கொடுக்கப்படவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன?பதில்: கர்நாடக சிறைத் துறை 350 விதிப்படி ஒரு தண்டனைக் கைதிக்குச் சீருடைகளும், படுக்கை விரிப்புகளும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், சாதாரண தண்டனைக் கைதிகள் இந்தச் சீருடைகளை அணியத் தேவையில்லை. ஆனால், கொடூரமான தண்டனைக் கைதிகள் கட்டாயம் இந்தச் சீருடைகளைத்தான் அணிய வேண்டும். ஜெயலலிதா சாதாரண தண்டனைக் கைதி என்பதால், அவர் வெள்ளைச் சீருடை அணியவில்லை எனத் தகவல் சொல்லி இருக்கிறார்கள்.
ஜெயலலிதாவுக்கு எந்தச் சலுகைகளும் கொடுக்கவில்லை என்கிறார்கள். ஆனால், சிறைத் துறை அதிகாரியே பத்திரிகைகள் கொடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார். அதேபோல உணவும் வெளியிலிருந்து போனதை போட்டோவோடு பத்திரிகைகளில் வெளி வந்ததே. அது தவறான படங்களா?
ஒரு தண்டனைக் கைதிக்கு நம்பரும், சீருடையும் வழங்கப்பட வேண்டும். அதைக்கூட அணியாவிட்டால், இந்த தண்டனைக்கு என்ன அர்த்தம்?
எந்த அடிப்படையில் கைதிகள் தரம் பிரிக்கப்படுகிறார்கள் என்று தெரியவில்லை. அதே பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் இருந்த 132 பெண் கைதிகளுக்கும் சீருடை வழங்கப்பட்டிருக்கிறது. அதையணிந்த அந்த 132 பெண் சிறைக் கைதிகளும் கொடூரக் கைதிகளா? என்பதை சிறைத் துறை விளக்க வேண்டும்.
மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல்முறையீடு செய்வேன். சொல்வதைப்போல தண்டனைக் கைதிகளுக்கும் பாகுபாடு இருக்கிறது என்றால், அதனை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கேட்பேன்” என்றார்.
கர்நாடக சிறைத்துறை அதிகாரி டி.ஐ.ஜி ஜெயசிம்ஹாவிடம் பேசினோம். ”ஜெயலலிதா யூனிஃபார்ம் அணியாததைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. சட்டத்தில் என்ன இருக்கிறதோ அதைத்தான் நாங்கள் ஃபாலோஅப் பண்ணமுடியும். நாங்களாக எதையும் செய்ய முடியாது. ஜெயலலிதா கர்நாடக சிறைத் துறை விதிகளுக்கு உட்பட்டு உள்ளே கொடுக்கப்பட்ட உணவுகளைத்தான் சாப்பிட்டார்.
வெளியில் இருந்து உணவுகள் வரவழைக்கப்படவில்லை. சாதாரண தண்டனைக் கைதிகள் சீருடை அணியத் தேவையில்லை. அவர்களிடம் துணிகள் இல்லாதபோது நாங்கள் கொடுக்கும் சீருடையை அணிந்து கொள்கிறார்கள்” என்றார்.
லண்டனில் இருந்து இலங்கை நோக்கி வந்த விமானத்தில் பிரித்தானிய பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த இலங்கை வம்சாவளி நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதான பிரித்தானிய பெண்ணையே இந்த நபர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 41 வயதான நபர் எனவும் இவர் இலங்கையில் பிறந்து பிரித்தானியா சென்று குடியேறியவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை லண்டனில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் டிசம்பர் 4ம் திகதி தொடங்குகிறது.
கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் திகதி தொடங்கி 7ம் திகதி வரை நடக்கிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு இந்திய அணி இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடவுள்ளது. இந்த நிலையில் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய அணி படுதோல்வி அடையும் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீரர் மெக்ராத் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது..
அவுஸ்திரேலிய தலைவர் மைக்கல் கிளார்க் காயம் அடைந்து இருப்பது கவலை தரும் விஷயம் என்றாலும் அவுஸ்திரேலிய அணி வலுவாகவே இருக்கிறது.
இந்திய அணி கடந்த முறை போன்றே இம்முறையும் 4–0 என்ற கணக்கில் வயிட்–வாஷ் ஆகவே வாய்ப்பு இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவின் ஆட்டம் அபாரமாக இருந்தது.
அதே ஆட்டத்தை தொடர்ந்தால் வெற்றி எளிதாகிவிடும். இந்தியாவின் கடைசி 3 டெஸ்ட் (இங்கிலாந்துக்கு எதிராக) போட்டியில் அந்த அணி சின்னாபின்னமாகிவிட்டது. இந்திய அணி ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டியில் சிறந்து விளங்குகிறது.
ஆனால் டெஸ்ட் போட்டியில் அப்படி இல்லை. அவர்கள் பவுன்ஸ் பந்துவீச்சில் சிறப்பாக விளையாடவில்லை. இங்குள்ள பவுன்ஸ் ஆடுகளத்தில் திணறுவார்கள். இதுபோன்ற ஆடுகளத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி கடும் பயிற்சி மேற்கொள்வது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த முறை அவுஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் நேற்று அதிகாலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது. பல பகுதிகளிலும் விட்டு விட்டு தொடர்சியாக மழைபெய்து வருகின்றது.
தொடர்ந்து பெய்து வரும் காரணமாக குளங்களை நோக்கி ஏராளமான நீர்வரத்து காணப்படுகிறது. வவுனியாவின் சிறிய குளங்கள் வான்பாயும் நிலையில் காணப்படுகின்றன.
வவுனியா சமணங்குளம் இன்றுகாலை முதல் வான்பாயத் தொடங்கியுள்ளது. அத்துடன் தாழ்வான பகுதிகளிலும் வெள்ளம் தேங்கி நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது.
வவுனியா குளத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எதிர்வரும் சிலதினங்களில் இதுவும் வான்பாயகூடும் என எதிர்பார்க்கபடுகிறது. மழை தொடர்பான விபரங்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருங்கள் விபரங்கள் அவ்வப்போது வவுனியா நெற் ஊடாக வந்து சேரும் .
யாழ்ப்பாணம் மட்டுவில் மற்றும் வவுனியா கோவில்குளம் ஆகிய இடங்களில் வசித்து வருபவருமாகிய “சமஸ்கிருத பண்டிதர்” சதாசிவசர்மா 15.11.2014 அன்று கொழும்பில் இடம்பெற்ற ராம கான சபாவின் பவள விழாவின் போது சம்ஸ்கிருத பணியில் ஆற்றிய பெரும் பணிக்காக கொழும்பு இராமகான சபாவினால் ‘வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
சமஸ்கிருதத் துறையில் யாழ்ப்பாணம் வவுனியா மற்றும் இலங்கையின் பல பாகங்களிலும் பல மாணவர்களை உருவாக்கியதோடு பல நூல்களையும் வெளியிட்டு அவர் ஆற்றிவரும் பணி அளப்பெரியது. அவர் பணி தொடர இறைவனைவேண்டி வாழ்த்தி வணங்குகின்றோம்.
வவுனியாவில் இன்று அதிகாலை (18.11)மின்னல் தாக்கியதில் வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளது.
வவுனியா பொன்னாவரசன்குளம் கிராமத்தில் உள்ள வீடொன்றின் மீதே அதிகாலை 1 மணியளவில் மின்னல் தாக்கியதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் ரி. சூரியராஜா தெரிவித்தார்.
இதேவேளை வீட்டில் வசிக்கும் சிறுவன் உட்பட வயோதிப பெண்ணும் வீட்டில் அச் சமயம் இல்லாத காரணத்தால் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் சென்று பார்வையிட்டிருந்தனர்.
இந் நிலையில் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து போயுள்ளமையினால் 7 ஆம் ஆண்டில் கற்கும் பாடசலை மாணவனின் கற்றல் உபகரணங்கள் சீருடை என்பனவும் எரிந்துள்ளமையினால் பாடசாலை செல்வதில் இம் மாணவன் சிரமங்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா மாவட்டத்தில் பொதுமக்களால் சட்டவிரோதமாக தறிக்கப்பட்ட பெருமளவான மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பல்வேறு தேவைகளுக்காகவும் விற்பனை நோக்குடனும் அங்குள்ள காடுகளில் பொதுமக்கள் சட்டவிரோதமாக மரங்களை தறிப்பதாக வனவளத்துறை அதிகாரிகள் பொலிஸாரிடம் முறையிட்டு வந்தனர். இதனையடுத்து வவுனியா பொலிஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் பெறுமதிமிக்க பெருமளவான மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மரங்களை வெட்டி உழவு இயந்திரங்களில் ஏற்றிச் செல்லும்போதே கைப்பற்றப்பட்டதாகவும், இவ்வாறு கைப்பற்றப்பட்ட மரங்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியானதெனவும் வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விறகுப் பாவனைக்காக என கூறி பொதுமக்கள் அதிகளவான மரங்களை வேறு தேவைகளுக்காக வெட்டிச் செல்வதாக வனத்துறை அதிகாரிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான செயற்பாடு தொடர்ந்து செல்லுமானால் சம்பந்தப்பட்டவர்களுக்கெதிராக உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா சிதம்பரபுரம் ஸ்ரீநாகராஜா வித்தியாலயத்தில் இவ் வருடம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 08 மாணவர்கள் சித்தி பெற்றிருந்தனர். இவர்களுக்கான பாராட்டு விழா இன்று(18.11) வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
வவுனியா கோவில்குளம் இளைஞர் கழகத்தின் கிராம பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக, புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுடன், பரீட்சையில் தோற்றிய மாணவர்களும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் அனுசரணையில் இன்றையதினம் கௌரவிக்கப்பட்டனர்.
கோவில்குளம் இளைஞர் கழகத்தின் செல்வி சுவர்ணா சந்திரகுலசிங்கம் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இவ் நிகழ்வுகள் கழகத்தால் முன்னெடுக்கப்பட்டது.
வித்தியாலய சமூகத்தின் ஒன்றிணைவில் வித்தியாலய அதிபர் திரு சி.வரதராஜா தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவின் பிரதம அதிதியாக வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் திருமதி நா.மாணிக்கவாசகம், நிகழ்வின் சிறப்பு அதிதியாக வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகரபிதாவும், கோவில்குளம் இளைஞர் கழகத்தின் ஸ்தாபகரும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்), கௌரவ விருந்தினராக சிதம்பரபுர பிரதேச வைத்தியசாலையின் வைத்தியகலாநிதி எஸ்.சூரியகுமார் அவர்களும் கலந்து இன்றைய நிகழ்வுகளை சிறப்பித்தனர்.
இன்றைய நிகழ்வில் செல்வி யோ.கோகிலா (181), செல்வன் அ.கோவாஸ்(180), செல்வி அ.யதுசா(174), செல்வி அ.தர்சிகா(173), செல்வி சி.டென்சிகா(172), செல்வன் உ.நிவேதன்(167), செல்வி யோ.நிரோசா(161), செல்வி சி.டிலுசிகா(151) ஆகிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இவ் நிகழ்வில் பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கோவில்குளம் இளைஞர் கழகத்தின் கஜன், நிரோசன், நிகேதன், சஞ்சீவன், காண்டீபன் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்கள் முடிவிலும் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர வரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.
இத்தொடருக்கு முன்பு 113 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி தொடரை 5–0 என்ற கணக்கில் கிண்ணத்தை கைப்பற்றியதின் மூலம், 117 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது.
தென்னாபிரிக்க அணி 115 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும், அவுஸ்திரேலிய அணி 114 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும், இலங்கை அணி 108 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தையும், இங்கிலாந்து 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
அதேபோல் டெஸ்ட் தரவரிசையில், தென்னாபிரிக்க அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய அணி 96 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா-இலங்கை அணிகளுக்கிடையில் இந்தியாவில் நடந்துமுடிந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி ஒரு வெற்றி கூட பெறாமல் ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியதையடுத்து, இந்த முடிவுக்கான பொறுப்பை தான் ஏற்றுக்கொள்வதாக இலங்கை கிரிக்கெட் அணிக்கான தேர்வுக் குழுவின் தலைவரும் பிரதி தபால் அமைச்சருமான ஜெயசூர்ய தெரிவித்துள்ளார்.
“அமைச்சர் எங்களை நியமித்திருப்பது சுயாதீனமாக முடிவுகளை எடுப்பதற்காகத்தான். இந்த மாதிரியான போட்டிகளில் கலந்துகொள்ளும்போது வெற்றியும் வரலாம் தோல்வியும் வரலாம். தேர்வுக்குழுவின் தலைவர் என்ற ரீதியில் அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்தியாவுடனான தொடர் சம்பந்தமாக விளையாட்டுத்துறை அமைச்சர் மீது யாரும் குறை கூறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்த முடிவை தேர்வுக்குழுவும், அணித்தலைவரும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாக அமைப்பும் சேர்ந்துதான் எடுத்தோம்.”
பாராளுமன்றத்தில், இலங்கை விளையாட்டு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு சம்பந்தமான விவாதத்தின்போது ஜெயசூர்ய இதனைத் தெரிவித்தார்.
இந்தியாவில் இலங்கை அணி மோசமாக தோற்ற பின்னர் இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தை சேர்ந்த ஒருவர் அதுபற்றிப் பேசுவதென்பது இதுவே முதல்முறை.
உலகக் கிண்ண போட்டிகளுக்காக ஆயத்தமாகிவந்த இலங்கை அணியை, அவசரமாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த இந்தியத் தொடருக்கு அனுப்ப இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பு எடுத்திருந்த முடிவை ஆரம்பம் முதற்கொண்டே இலங்கையின் முன்னாள் அணித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அர்ஜுன ரணதுங்க போன்றவர்கள் விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் 25 வகையான புதிய 10 ரூபா நாணயக் குற்றிகள் இன்று முதல் புழக்கத்திற்கு விடப்படவுள்ளன. இந்த நாணயக் குற்றிகள் இலங்கையின் 25 நிருவாக மாவட்டங்களையும் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நாணையக் குற்றிகள் மத்திய வங்கியிலிருந்து விநியோகிக்கப்பட்டதன் பின்னர் வணிக வங்கிகள் மற்றும் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக அவை புழக்கத்திற்கு விடப்படவுள்ளன.
புதிய 10 ரூபா நாணயக் குற்றிகளின் முதலாவது தொகுதியை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது 69 ஆவது பிறந்த தினத்தை வெகு சிறப்பாக கொண்டாடினார். இதனை முன்னிட்டு அலரி மாளிகையில் ஜனாதிபதி குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களின் 69 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு நல்லாசி வேண்டி யாழ்ப்பாணத்திலுள்ள மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
இதில் வடமாகாண ஆளுனர் ஜி.ஏ சந்திரசிறி மற்றும் அமைச்சர் கே.என் டக்ளஸ் தேவாநந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்பிரகாரம் ஜனாதிபதி அவர்களை வாழ்த்தியும் நல்லாசி வேண்டியும் ஆலய பிரதம குரு துரைச்சாமி குருக்கள் தலைமையில் இச்சிறப்பு பூசை வழிபாடுகள் இடம்பெற்றன.