அண்ணன், தங்கை உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பலியான சோகம்!!

தமிழகத்தில் சனி, ஞாயிறு, திங்கள் கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை நாட்கள். இதனால் மாணவர்கள் வீடுகளில் தங்காமல் சுற்றித் திரிகின்றனர். சில நேரங்களில் அபாயங்களில் சிக்கிக் கொள்கின்றனர்.

அந்த வகையில் ராணிப்பேட்டையில் குட்டை, ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை உட்பட 4 பேர் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னை பகுதியில் வசித்து வருபவர் 45 வயது பரமசிவம்.

இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி தனியார் கம்பெனி ஊழியர். இவர்களது மகன்கள் 11 வயது தினேஷ், 9வயது ரஞ்சித், 10 வயது மகள் சுப்ரியா.

இவர்கள் வீட்டின் அருகே உள்ள மீன்கள் வளர்க்கும் குட்டையில் குளிக்க சென்றனர். அப்போது திடீரென இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர். புகாரின்பேரில் நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே காரைமேடு ஊராட்சி மணல்மேடு கிராமத்தில் வசிப்பவர் வெற்றி வீரன்.இவரது மகன் 9 வயது மாவீரன் . அதே பகுதியில் வசிக்கும் பிரகாஷ் மகன் சக்தி இருவரும் காரைமேடு ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தனர்.

இருவரும் பள்ளி விடுமுறை என்பதால் திருவாலி ஏரிக்கு சென்றுள்ளனர். ஆடைகளை அவிழ்த்து கரையில் வைத்து விட்டு குளித்தபோது ஏரியில் மண் எடுத்ததால் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி நீரில் மூழ்கினர். மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் ஏரியில் வலை வீசி தேடிய போது இரு சிறுவர்களின் சடலமும் சிக்கியது.

அதே போல் கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நெய்தலூர் ஊராட்சி சின்னக்களத்துப்பட்டியை சேர்ந்த முருகேசன்- ரம்யா தம்பதியர். இவர்களுக்கு 6 வயதில் கிருஷ்மிதா என்ற மகளும், 2 வயதில் தர்ஷித் என்ற மகனும் உள்ளனர். நேற்று காலை தர்ஷித் அருகில் வசிக்கும் அபிலன் மகன் மயிலனுடன் சிறிய சைக்கிளில் சாலையில் விளையாடிக்கொண்டு இருந்தான்.

இருவரும் அருகில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சைக்கிளுடன் சென்றனர். அங்குள்ள 5 அடி ஆழ தொட்டிக்கு அருகே தண்ணீர் பாட்டிலை வைத்து விளையாடிக்கொண்டு இருந்தனர்.

அப்போது பாட்டில் தவறி விழவே அதை எடுக்க முயற்சி செய்த தர்ஷித் உள்ளே விழுந்துவிட்டான். 10 இஞ்ச் சுற்றளவு கொண்ட குழாயில் அவனை தண்ணீர் இழுத்து சென்றுவிட்டது. பெற்றோர் தேடி வந்தபோது தொட்டியில் தர்ஷித் விழுந்தது தெரிய வந்தது.

தீயணைப்பு படையினர் வந்து தொட்டியில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் குழாயை பொக்லைன் இயந்திரம் மூலம் 8 இடங்களில் உடைத்து அதிநவீன லைட் மூலம் பார்த்தனர்.

200 மீட்டர் தூரத்தில் சின்னக்களத்துபட்டி சேப்பளாப்பட்டி மெயின் ரோட்டின் அருகே 5வது குழியில் உள்ள குழாயில் தர்ஷித் சடலம் சிக்கி இருந்தது தெரியவந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் ஒன்றியம் பெருந்தொழுவு ராமலிங்கபுரத்தில் வசித்து வருபவர் 37 வயது செல்வக்குமார்.

இவரது 2வது மகன் நித்திரன் வீட்டில் இருந்த 60 லிட்டர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டான். அலறித்துடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் ஏற்கனவே நித்திரன் மூச்சுத்திணறி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

‘நானில்லாம அவங்க கஷ்டப்பட வேணாம்’ மனைவி, மகளைக் கொன்று கணவன் எடுத்த விபரீத முடிவு!!

நானில்லாம அவங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட வேண்டாம் என்று மனைவியையும், மகளையும் கொன்று விட்டு கணவனும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37).

இவர் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அசிதா என்ற மனைவியும், பிரித்திகா என்ற 5 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், நிதி நிறுவனத்தில் கடன் பிரச்னையால் சதீஷ்குமார் 4 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை.

வீட்டில் ஏற்பட்ட பிரச்னையால் மனமுடைந்த சதீஷ்குமார் மனைவி, குழந்தையை கொன்றுவிட்டு, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த போலீஸார் சடலங்களை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், சதீஸ்குமார் வீட்டில் ஆய்வு செய்தபோது, ​​சதீஸ்குமார் சாவுக்கான காரணத்துடன் எழுதிய கடிதம் மற்றும் டைரியை கண்டுபிடித்தார்.

அதில், “என்னால் வாழ முடியாது. நான் இறந்தால் என் மனைவி மற்றும் குழந்தைகள் மிகவும் கஷ்டப்படுவார்கள், அதனால் அவர்களையும் என்னுடன் அழைத்துச் செல்வேன். என் விதி முடிந்து விட்டது. தயவுசெய்து அனைவரும் என்னை மன்னியுங்கள். ஐ லவ் யூ ஆஷிதா, பிரித்திகா”.

மேலும் முதுகலை பட்டதாரியான அவரது காதல் மனைவி, சதீஸ்குமாருக்கு அறிவுரை கூறி டைரியில் பல குறிப்புகளை எழுதியுள்ளார். அதற்கு சதீஷ்குமாரும் பதில் எழுதினார்.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, ​​`இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். குடும்பங்களுக்கு இடையே பிரச்னையும் ஏற்பட்டுள்ளது. சதீஷ்குமாருக்கும் கடன் பிரச்னை உள்ளது.

இதனால் வீட்டில் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முடிவு எடுக்கப்படுவதற்கு முந்தைய நாள் கூட, அசிதாவின் பெற்றோர் அவரது வீட்டிற்கு வந்து அறிவுரை வழங்கியுள்ளனர். அசிதாவின் தந்தை நாகராஜ் அளித்த புகாரில், மருமகனின் தேவையற்ற செயலால் ஒரு குடும்பமே சீரழிந்துள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.

களுத்துறையில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் இளைஞன் : அச்சுவேலியில் இறுதி அஞ்சலி!!

களுத்துறையில் (Kalutara) நீராட சென்றபோது உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த பொது சுகாதார பரிசோதகரின் பூதவுடல் இறுதிக் கிரியைகளுக்காக அச்சுவேலி பத்தமேனியிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 25 ஆம் திகதி அவித்தாவ, எத்தாவெட்டுனுவல பகுதியில் நீராட சென்றபோது பொது சுகாதார பரிசோதகரான சிவயோகபதி கௌதமன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

குறித்த இளைஞன் மொரட்டுவ பிரதேசத்தில் கடந்த ஐந்து வருடங்களாக பொது சுகாதார பரிசோதராக கடமையாற்றியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று குளத்தில் நீராடச் சென்ற போதே அனர்த்தத்தில் சிக்கியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய 28 வயதான ஹர்ஷநாத் என்ற மற்றுமொரு பொது சுகாதார உத்தியோகத்தரும் உயிரிழந்துள்ளார். இதில் எஸ். ஹர்ஷநாத் என்ற அதிகாரி மட்டக்களப்பை சேர்ந்தவராவார்.

இந்த நிலையில் அச்சுவேலி இளைஞனின் பூதவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று (27) மதியம் ஒரு மணியளவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் பலியான சோகம்!!

வவுனியாவில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம், வவுனியா – போகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலனிகம கிராம வயல் பகுதியில் இன்று(26) காலை இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் 53 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மனைவியை அடித்து கொலை செய்த கணவன்!!

ஹபரணை, பலுகஸ்வெவ பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று கணவனால் அடித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கான பெண் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குடும்ப தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எப்பாவல, பலுகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசாங்கத்தால் முடக்கப்பட்ட 900 வங்கிக்கணக்குகள்!!

நிலுவையில் உள்ள வரிகளை வசூலிப்பதற்காக, மொத்தமாக 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

முறையற்ற வரி வசூல் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், இந்த நிலுவைத் தொகையை வசூலிக்க அரசாங்கம் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியம் நாட்டிற்கு பிரச்சினைகளை உருவாக்க விரும்பவில்லை என்றும் அதன் நிதி நிர்வாகத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு நாட்டைத் திருப்ப முனைவோர் ஆட்சிக்கு வந்தால், சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவது குறித்து பரிசீலிக்கலாம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கடந்த கால நிதி சிக்கல்கள் மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்காக விரிவான கலந்துரையாடலின் பின்னரே தற்போதைய உடன்படிக்கை எட்டப்பட்டதாகவும், எனவே மாற்றங்கள் தேவையில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்பியின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த அண்ணன்!!

மட்டக்களப்பு, கல்லடி பிரதேசத்தில் காட்டு யானைகள் உள்நுழைவதை தடுக்க பொருத்தப்பட்ட சட்டவிரோத மின்கம்பியில் சிக்கிய இளைஞனின் உயிரைக் காப்பாற்ற, தன் உயிரை பணயம் வைத்த அண்ணன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

கொட்டுகச்சிய நவோத்யா வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 14 வயதுடைய சுனேத் ஹிமாஷ என்ற மாணவனே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.

சிறுவனின் சகோதரனும் நண்பரும் இல்லாவிட்டால் இந்நேரம் அவர் உயிரிழந்திருப்பார் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுவன் தனது வீட்டிற்கு அருகில் கறிவேப்பிலை பறிக்க சென்ற போது மின்கம்பியில் சிக்கியுள்ளார். உயர் மின்னழுத்தம் கொண்ட மின்சார கம்பியில் சிறுவன் கையை வைத்துள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக் கொண்டிருப்பதனை அவதானித்த சகோதரன் மற்றும் அவரது நண்பர் தங்கள் உயிரை பற்றி யோசிக்காமல் தம்பியின் காலை பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளனர்.

தென்னிலங்கையில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!!

ஹொரணை பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பிரதீபிகா குமாரி என்ற 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கெலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலைமை காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அயல் வீட்டிலுள்ள நபர் ஒருவர் தனது சகோதரனுடன் பிரதீபிகாவை சந்திப்பதற்காக கத்தியுடன் சென்றுள்ளார்.

திடீரென பிரதீபிகாவை அவர் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். இந்த நிலையில் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரின் மனைவி இன்னொருவருடன் சென்று வாழ்ந்து வரும் நிலையில், அதற்கு கொலை செய்யப்பட்ட பெண் உதவியதாக, சந்தேகநபர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே குறித்த பெண்ணை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்!!

யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்

பிஜிலி ரமேஷ். ரஜினி தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பவானைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது. இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென இடத்தை தக்கவைத்தார். ஆனால் மதுப்பழக்கம் காரணமாக இவரது உடல்நிலை மோசமடைந்தது.

நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

 

வவுனியாவில் நாேயாளர் காவு வண்டியில் குதித்து தப்பிய பெண் வைத்தியர் : இருவர் கைது!!

கடத்திச் சென்றதாக பெண் வைத்தியர் ஒருவர் நாேயாளர் காவு வண்டியில் குதித்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் பாெலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா – மன்னார் வீதியில் நேற்று (26.08) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தாெடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுள்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் சாப்பாடு கொண்டு சென்றுள்ளனர்.

குறித்த சாப்பாட்டை வழங்கிவிட்டு நோயாளா் காவு வண்டி வவுனியா நோக்கி வந்த போது வீதியில் நின்ற பெண் வைத்தியர் ஒருவர் குறித்த நோயாளர் காவு வண்டியில் மறித்து ஏறியுள்ளார்.

குறித்த ஆயுள்வேத பெண் வைத்தியரை ஏற்றிக் கொண்டு வவுனியா நோக்கி சென்ற நோயாளர் காவு வண்டி வேப்பங்குளம் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளை நிரப்பி விட்டு, மீண்டும் மன்னார் வீதி ஊடாக பம்பைமடு நோக்கி புறப்பட்ட நிலையில் நோயாளர் காவு வண்டியில் இருந்த பெண் வைத்தியர் நோயாளர் காவு வண்டி கதவை திறந்து கீழே குதித்துள்ளார்.

இதனால் குறித்த பெண் வைத்தியர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு கூடிய மக்களிடம் தன்னை கடத்திச் செல்ல முற்பட்டதாக பெண் வைத்தியர் தெரிவித்ததையடுத்து நோயாளர் காவு வண்டியை மறித்து அதன் சாரதி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் நெளுக்குளம் பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களும் நாேயாளர் காவு வண்டியையும் நெளுக்குளம் பாெலிசிற்கு காெண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலை உதவிப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் நெளுக்குளம் பாெலிசிற்கு சென்று நாேயாளர் காவு வண்டியை விடிவித்துள்ளனர்.

இது தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகிறார்கள்.

இதேவேளை, குறித்த சாரதி மாற்று வீதியூடாக வைத்தியசாலைக்கு செல்ல வாகனத்தை திருப்பிய பாேதே குறித்த சகாேதர மாெழி பெண் வைத்தியர் அச்சம் காரணமாக குதித்தாக வைத்தியசாலை தரப்பால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – மட்டக்களப்பு சுகாதார பரிசோதகர்களுக்கு தென்னிலங்கையில் நடந்த சோகம்!!

களுத்துறை, அவித்தாவ, இஹலகந்த பிரதேசத்தில் அத்தாவெட்டுனுவல என்ற இடத்தில் நீராடிக் கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இருவரும் தென் பகுதியில் கடமையாற்றிய மட்டக்களப்பு மற்றும் யாழ்பாணத்தைச் சேர்ந்த சுகாதார பரிசோதகர்கள் ஆவர்.

மொரட்டுவ பிரதேசத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் குழுவினர் மற்றும் நான்கு பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவொன்று அங்கு நீராடச் சென்ற போதே இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் மொரட்டுவை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய எஸ். கௌதம் (வயது -26) மற்றும் எஸ். ஹர்ஷநாத் (வயது -28) ஆகிய இரு பொது சுகாதார உத்தியோகத்தர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

மேலும் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதுகளால் வாகனம் இழுத்து யாழ் நபர் சாதனை!!

யாழ். தென்மராட்சியின் சாதனை நாயகன் செல்லையா திருச்செல்வம், 1,500 கிலோகிராம் எடையுள்ள ஹயஸ் வாகனத்தை காதுகளால் கட்டி இழுத்து சாதனை படைத்துள்ளார்.

ஹயஸ் வாகனத்தை 100 மீட்டர் தூரம் தனது இரு காதுகளால் கட்டி இழுத்து சென்றுள்ளார். நேற்றையதினம் யாழ்.கொடிகாமம், நட்சத்திர மஹால் முன்றலில் ஏ9 வீதியில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.

இதேவேளை, செல்லையா திருச்செல்வம், இதற்கு முன்னர் பல தடவைகள் தமிழ்நாடு, கொழும்பு, யாழ்ப்பாணம் என தனது தாடியால் பல்வேறு வாகனங்களை இழுத்து சாதனைபுரிந்து சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சாரதி தூங்கியமையால் விபத்துக்குள்ளான கார்!!

திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.  குறித்த சம்பவம் மாங்கேணி காட்டுப் பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட காரில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, சாரதி தூங்கியமையால் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரத்தில் பெரும் சோகம்… பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவன்!!

அனுராதபுரம் – கலென்பிந்துனுவெவ பகுதியில் மின்சாரம் தாக்கியதில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் உல்பத்கம பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரிழந்துள்ளார்.

வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் குழாயிலிருந்து குளித்துக் கொண்டிருந்த போது அருகில் இருந்த தண்ணீர் மோட்டாரின் வயர் அவிழ்ந்து மாணவனின் உடலில் பட்டதில் மின்சாரம் தாக்கி குறித்த மாணவன் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மலேசியாவில் இந்திய பெண்ணுக்கு நடந்த துயரம்!!

மலேசியாவின் – கோலாலம்பூரில் நடந்த சம்பவத்தில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சித்தூர் மாவட்டத்தின் அனிமிகானிபள்ளி கிராமத்தை சேர்ந்த 45 வயதுடைய விஜயலட்சுமி, அங்குள்ள நடைப்பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, பாதை திடீரென இடிந்து விழுந்தமையினால், அவர் கழிவுநீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் அருகில் இருந்த விஜயலட்சுமியின் கணவர் மற்றும் மகன் உயிர் தப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள பொது அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.  எனினும், சனிக்கிழமை(24) மாலை வரை குறித்த பெண் தொடர்பாக எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் வியாபாரத்தின் காரணமாக மலேசியாவுக்கும் பயணம் செய்து வந்துள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, ஆந்திரப் பிரதேசத்து வெளிநாட்டுப் பிரதேசம் (APNRT) அமைப்பின் அதிகாரிகளுக்கு, மீட்பு நடவடிக்கைகளை பயனுள்ளதாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கல்வி மேம்பாட்டு துறை அமைச்சர் நாரா லோகேஷுடன் இணைந்து முதல்வர் இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்.

இலங்கையில் தொடரும் பெரும் சோகம் : குடும்ப சுமையால் மகள் எடுத்த விபரீத முடிவு!!

மொனராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த க.பொ.த உயர்தர மாணவி ஒருவர் உயிரை மாய்த்துள்ளார். கடந்த 24 ஆம் திகதி தனது தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு படுக்கையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொனராகலை வெதிகும்புர வித்தியாலோக வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்கும் மோக்சா செவ்வந்தி என்ற 18 வயதுடைய மாணவியே உயிரிழந்துள்ளார்.

இவரது தந்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காட்டு யானை தாக்கி உயிரிழந்தார். வீட்டில் தாய், தம்பி மற்றும் அண்ணன் வசித்து வரும் நிலையில், கடந்த 24ம் திகதி காலை கரும்பு வெட்டுவதற்காக தாய் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

தம்பியும் ஒரு பயிற்சி வகுப்புக்கு சென்றுள்ளார். மதியம் மூன்று மணியளவில் தம்பி வந்து பார்த்தபோது அவர் படுக்கையில் இறந்து கிடந்துள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், “அம்மா எங்களால் மிகவும் கஷ்டப்படுகின்றார். அதனை பார்க்க வருத்தமாக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணப்பிரச்சினை காரணமாக அவர் படிப்பதில் கூட சிரமப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

அதில் குடும்பத்திற்கு உணவு வழங்க முடியவில்லை என்ற இயலாமை காரணமாக பல ஆண்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.