மூன்று பிள்ளைகளின் தாய் கொடூரமாக கொலை : மர்மம் குறித்து பொலிஸார் குழப்பம்!!

புத்தளம், மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தில் 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் இன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையில் ஈருபட்டுள்ளனர்.

சம்பவத்தில் மதுரங்குளிய நல்லன்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த செல்வமரிக்கார் அயினா உம்மா என்ற 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த வயோதிப பெண் தனது வீட்டினுள் கைகால்கள் கட்டப்பட்டு, ஆடைகளின்றி படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தனக்குச் சொந்தமான தென்னந்தோப்பு காணியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் , பிள்ளைகள் எப்போதாவது தம்மைப் பார்க்க வருவதாகவும் தெரியவந்துள்ளது.

வீட்டின் படுக்கையில் கைகளையும் கால்களையும் கட்டி ஏதோ ஒரு வழியில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் எனவும் உடலில் வெட்டுக்களோ அல்லது வேறு காயங்களோ காணப்படவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வயோதிப பெண்ணிடம் அதிக அளவில் பணம் இருந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று பிற்பகல் 3 மணியளவில் வயோதிப பெண்ணின் உறவினர்கள் இருவர் வீட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும், அந்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் முன் கதவு திறந்திருந்த நிலையில் அவரை தேடியுள்ளனர். பின்னர், வீட்டுக்குள் சென்று படுக்கை அறையில் பார்த்த போது அந்த வயோதிப பெண் இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கட்டிலில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் பற்றி அந்த வயோதிப பெண்ணின் மகளுக்கு அறிவிக்கப்பட்டதுடன், இதுதொடர்பில் பொலிஸ் அவசர பிரிவினருக்கும், மதுரங்குளி பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மதுரங்குளி பொலிஸாரும், புத்தளம் பிரிவு பொலிஸ் தடயவியல் பிரிவினரும் இணைந்து ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த வயோதிப பெண் தங்கியிருந்த வீட்டின் மூன்று ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர். சம்பவம் இடம்பெற்ற இரவு வயோதிப பெண் தனது மகளின் வீட்டுக்கு சென்று மீண்டும் தனது வீட்டுக்கு வரும் முன்னர் சந்தேக நபர்கள் இவ்வாறு வீட்டின் கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே பதுங்கி இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதோடு பொலிஸ் மோப்ப நாயும் அழைத்துவரப்பட்டு பெண் தங்கியிருந்த வீடு மற்றும் வளவு என்பனவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் ஏ.எம்.சம்சுல் ராபி, சடலத்தை பார்வையிட்டு, சம்பவ இடத்தில் நீதிவான் விசாரணையை முன்னெடுத்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வயோதிப பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நல்லாந்தளுவ பகுதியில் பெரும் பரபரப்பையும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விபரீத முடிவால் உயிரிழந்த மருத்துவர் : அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

அனுராதபுரம் – ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்தியரொருவர் விபரீத முடிவெடுத்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று காலை (12.08) இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சடலமாக மீட்கப்பட்டவர் கெப்பித்திக்கொல்லாவ சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றி வரும் 38 வயதுடைய சாமர சதுரங்க எனவும் தெரிய வந்துள்ளது.

உயிரிழந்த வைத்தியரின் மனைவி தம்புத்தேகம வைத்தியசாலையில் தாதியராக கடமை ஆற்றி வருகிறார்.

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேவ பகுதியில் மனைவியின் தாயாரின் வீட்டில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த வைத்தியரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மோட்டர் சைக்கிள்கள் மீட்பு : ஏழு இளைஞர்கள் கைது!!

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று சனிக்கிழமை (10) மூன்று மோட்டர் சைக்கிள்கள் மீட்கபட்டுள்ளதுடன், ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த வியாழக்கிழமை அதிகாலை வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்கள் கைது செய்யப்படட்டனர். அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த புதன்கிழமை மாலை பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனது பிறந்தநாள் நிகழ்வினை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

அந்த நிகழ்வுக்காக அங்கு உறவினர்கள், நண்பர்கள் என பலர் வந்திருந்தனர். அங்கு வந்த அவரது சில நெருங்கிய நண்பர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.

இதன்போது, பிறந்தநாள் நிகழ்வினை சிறப்பிப்பதற்காக நண்பர்கள், இளைஞர் குழுக்களாக பாட்டுப்பாடி நடனம் ஆடினார்கள்.

இந்த நேரத்தில் மதுபோதையில் இருந்த நெருங்கிய நண்பர்கள் பிறந்தநாள் நிகழ்வுக்காக வந்த பெண் நண்பிகளுடன் சேர்ந்து நடனமாட முற்பட்ட வேலை பிறந்தநாள் கொண்டாடிய நண்பன் அதனை அனுமதிக்காது தடுத்துள்ளார்.

இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதனை அங்கு இருந்த உறவினர்கள் சமரசம் செய்து வைத்துள்ளனர்.

அதன் பின்னர் வியாழக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனை கடத்தி சென்று குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டில் இளைஞனை அடைத்து வைத்து கடுமையாக கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாழடைந்த வீட்டில் இளைஞனை அடைத்து வைத்து விட்டு கடத்தியவர்கள் தப்பி சென்ற நிலையில், கடத்தப்பட்ட இளைஞனை மீட்டு அவரை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பாெலிஸார் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் 20 வயது தொடக்கம் 22 வயது வரையுள்ள 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் பட்டைகாடு பகுதியைச் சேர்ந்த 3 பேரும், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் கோயில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவருவரும் உள்ளடங்கியுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் கைது செய்யப்பட்ட இளைஞர்களையும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் திடீரென உயிரிழந்த இலட்சக்கணக்கான நண்டுகள்!!

திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இலட்சக்கணக்கான சிறு சிகப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரையொதுங்கி உள்ளன. இன்று (10) அதிகாலை முதல் நண்டுகள் இவ்வாறு இறந்து கரையுங்குவதாக கூறப்படுகின்றது.

சுமார் ஐந்து தொடக்கம் ஆறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்த கடற்கரையில் மூன்று தொடக்கம் 4 கிலோ மீட்டர் தூரம் வரை நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன.

அதேவேளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

பரிதாபமாக உயிரிழந்த தம்பதி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

அவிநாசி அருகே புறவழிச்சாலையில் இன்று (சனிக்கிழமை) காலை இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (48 ). பனியன் தொழிலாளி. இவரது மனைவி லதா (42 ). இவர்கள் இருவரும் அவிநாசி அருகே புதிய திருப்பூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் அவிநாசி புதுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவிநாசி மங்கலம் சாலை அருகே புறவழிச் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த கார் அவர்களின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சிவகுமார் லதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருவரது உடல்களையும் கைப்பற்றி அவிநாசி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏழு சந்தேக நபர்கள் கைது!!

வவுனியாவில் இளைஞன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை(08.08.2024) அதிகாலை வவுனியா பூந்தோட்டம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை காணவில்லை என வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, சந்தேகத்தின் பேரில் சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் பகுதிகளை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த புதன் கிழமை(07) மாலை பூந்தோட்டம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தனது பிறந்தநாள் நிகழ்வினை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளார்.

அந்த நிகழ்வில் அவரது உறவினர்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளதுடன் அங்கு வந்த அவரது சில நெருங்கிய நண்பர்கள் மது போதையில் இருந்துள்ளனர்.

இந்நிலையில், பிறந்தநாள் நிகழ்வினை சிறப்பிப்பதற்காக நண்பர்கள், இளைஞர் குழுக்களாக பாட்டுப்பாடி நடனம் ஆடியுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் இருந்த நெருங்கிய நண்பர்கள் பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட பெண் நண்பிகளுடன் சேர்ந்து நடனமாட முற்பட்ட போது பிறந்தநாளை கொண்டாடிய இளைஞன் அதனை அனுமதிக்காது தடுத்துள்ளார்.

இதனால் நெருங்கிய நண்பர்கள் மற்றும் இளைஞர் குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதுடன் அங்கு இருந்த உறவினர்கள் இதனை சமரசம் செய்து வைத்துள்ளனர்.

இதன் பின்னர். வியாழக்கிழமை(08) அதிகாலை 1மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் குழு ஒன்று பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனை கடத்தி சென்று குட்செட் வீதியில் உள்ள கருமாரி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள பாழடைந்த வீட்டில் தனிப்பட்ட தகராறு காரணமாக இளைஞனை அடைத்து வைத்து கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸா தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த பாழடைந்த வீட்டில் இளைஞனை அடைத்து வைத்து விட்டு கடத்தியவர்கள் தப்பி சென்ற நிலையில், கடத்தப்பட்ட இளைஞனை மீட்டு அவரை வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 20 வயது தொடக்கம் 22 வயது வரையுள்ள 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் பட்டைகாடு பகுதியைச் சேர்ந்த 3 பேரும், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் கோயில்புதுக்குளம் பகுதியை சேர்ந்த ஒருவரும் தோணிக்கல் பகுதியை சேர்ந்த ஒருவருவரும் உள்ளடங்கியுள்ளனர்.

மேலும், சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மூன்று மோட்டர் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளதுடன் சான்று பொருட்களுடன் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கோடி ரூபாய் மதிப்புள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தாலி திருட்டு!!

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் பல நூறு வருட காலமாக சோழர் கால தாலி திருட்டுபோயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்த்துக்கேயர் காலத்தில் கோயில் உடைக்கப்பட்ட போது சைவ சமயத்தினாரால் பல உயிர் தியாகங்கள் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டிருந்த குறித்த தாலி நிலையில் கடந்த வாரம் தாலி திருட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து பொது மக்கள் குரலெழுப்ப தொடங்கியுள்ளனர். கோயில் நிர்வாகத்தினர் இவ்விடயத்தை அமைதிப்படுத்தி பொதுமக்களை சமாதானம் செய்ய முயன்றுள்ளனர்.

பல நூறு கோடி பெறுமதியான ரத்தினங்கள், வைடூரியங்கள் பொதிக்கப்பட்ட 5 பவுண் தாலி பல பூஜைகள் செய்யப்பட்டு சக்திவாய்ந்ததாக இருந்தது எனவும் இதை எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் பொது மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருட்டு போய் சிவனின் சக்தியை செயலிழக்க செய்யப்பட்ட சதியா ? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது குறித்து பொறுப்பு கூறவேண்டிய தரப்பினரின் இதுவரை பொலிஸ் முறைப்பாடு கூட செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

அதேபோல் சோழர் காலத்தில் செய்யப்பட்ட பல நூறு கோடி மதிப்புடைய 16 பவுன் வைரம், வைடூரியம் பொதிக்கப்பட்ட தங்க நகைகளும் கடந்த காலத்தில் திருட்டு போயுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் குறித்து மாவட்ட செயலாளர், அரசங்க அதிபர் என சம்பந்தப்பட்ட தரப்பினரின் கவனத்திற்கு பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டுள்ள்ளது.

பொலிஸாருக்கும் பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டதை தொடர்ந்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விடயம் குறித்து ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், ஆளுநர் இந்த தாலியை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், தாலி திருட்டு போயவுள்ள சம்பவம் குறித்து ஆன்மீக வாதிகளார் அச்சம் தெரிவித்தனர்.

இந்நிலையில், போர்த்துக்கேயரிடம் இருந்து பாதுகாக்கப்பட்ட தாலி தமிழர்களால் திருடப்படுவதற்கா ? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

செவ்வாய் கிரகத்தை வெப்பமாக்க புதிய கண்டுப்பிடிப்பு!!

செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் பளபளப்பை வெடிக்கச் செய்வதன் மூலம் அதை வெப்பமாக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு நீராக உள்ளது.

600,000 ஆண்டுகளுக்கு முன்பு நீரோடைகள் கிரகத்தைச் சுற்றி பாய்ந்திருக்கலாம், ஆனால் தற்போது அது வசிக்க முடியாத அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல ஆண்டுகளாக, விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தை வெப்பமாக்குவது எப்படி என்று ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால் முன்மொழியப்பட்ட தொழில்நுட்பங்கள் விலை உயர்ந்தவை மற்றும் செயல்படுத்த கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப்போது, ​​​​சிகாகோ பல்கலைக்கழகம், இல்லினாய்ஸில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழகம் மற்றும் மத்திய புளோரிடா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்,

கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் இரும்பு மற்றும் அலுமினியத்தால் செய்யப்பட்ட பொறிக்கப்பட்ட துகள்களைப் பயன்படுத்தி ஒளியைப் பிரதிபலிக்கவும், தப்பிக்கும் வெப்பத்தை சிக்க வைக்கவும் முடியும் என்று கூறுகிறார்கள்.

பூமியில் மனிதர்கள் தற்செயலாகப் பயன்படுத்திய அதே செயல்முறைதான் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் வாய் பேச முடியாதவர்கள் வாழும் அதிசய கிராமம்!!

இலங்கையில் குறைந்த வசதிகளுடன் வாய் பேச முடியாத செவித்திறன் அற்ற விசேட தேவையுடைய மக்கள் வாழும் கிராமம் ஒன்று தொடர்பில் தகவல் வெளியாகியுள்லது.

இந்த அதிசய கிராமம் இலங்கையின் அனுராதபுரத்தில் , திரப்பனய பிரதேச செயலகப் பிரிவில் அனுராதபுரம், இல. 553 மிவெல்லேவ கிராம சேவை பிரிவில் அமைந்துள்ளது.

தினிப்பிட்டிகம என்றழைக்கப்படும் இக் கிராமத்தில் கிட்டத்தட்ட 20 குடும்பங்கள் வசித்து வருகின்றன, இதில் 15 குடும்பங்கள் பிறக்கும்போதே வாய் பேச முடியாத மற்றும் செவித்திறன் அற்ற விசேட தேவையுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் இன்றி சிரமங்களுக்கு மத்தியில் வசிக்கும் இவர்களின் கிராமத்திற்குள் செல்ல சரியான வீதி இல்லாத பின்னணியில், வெளியூர்களில் இருந்து வரும் லொரிகளில் குடிநீரை அக்கிராமவாசிகள் பெறுகின்றனர்.

இங்குள்ள பெரும்பாலான வீடுகள் களிமண் அல்லது தகர கூரைகளால் கட்டப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகும் இக்கிராமத்தில் வசிப்பவர்கள் கூலித்தொழில், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி என்பன இவர்களின் தொழிலாக உள்ளது.

அதேவேளை குறைந்த வசதிகளின் கீழ் வசிப்பவர்களுக்கு விசேட தேவையுடையவர்களுக்கு உதவித்தொகையாக 5,000 ரூபாய் அரசாங்கத்திடம் இருந்து பெற உரிமை உண்டு.

எனினும் அடிப்படை தேவைகளுக்கு , அந்தத் தொகை போதாததால், கூலி வேலை தேடிச் சென்றாலும், விசேட தேவையுடைய இவர்களுக்கு கூலி வேலைகளும் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வப்போது கூலி வேலை செய்து சம்பாதிக்கும் சொற்பத் தொகை, வாழ்க்கை நடத்தவோ, குழந்தைகளின் கல்வியைத் தொடரவோ போதாது என்கின்றனர் கிராமவாசிகள்.

இக்கிராமத்தில் குளிப்பதற்கு அன்றாட நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏரி உள்ள போதிலும் அதுவும் வறண்டு காணப்படுவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கோடீஸ்வரர் ஒருவரால், இக்கிராமத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது அதன் மோட்டார் பழுதடைந்து, தண்ணீர் வடிகட்டியும் பழுதடைந்துள்ளதாகவும், கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாய் : சுகாதார அமைச்சுக்கு அவசர கடிதம்!!

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் சிந்துஜாவின் மரணம் தொடர்பான விசாரணை முற்றிலும் தவறாகவும், குறித்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை அத்துடன் குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவதையே விசாரணைக்குழுக்கள் மேற்கொள்வதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் நேற்று(09.08.2024) மாலை மத்திய சுகாதார அமைச்சிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கையில், கடந்த மாதம் 28ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற மரணம் தொடர்பாக ஆரம்ப விசாரணைகள் பல கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளன.

அதில் சிலர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளதாக அறிகிறோம். அதில் இரண்டு தாதிய உத்தியோகத்தர்களும், இரண்டு குடும்ப நல உத்தியோகத்தர்களும், ஒரு மருத்துவரும் மன்னார் மாவட்டத்திற்குள் உள்ளக இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிகிறோம்.

இது முற்றிலும் தவறானது. இந்த விசாரணை யாவும் நீதியான முறையில் நடப்பதாக தெரியவில்லை. குற்றம் செய்தவர்களை காப்பாற்றுவதையே விசாரணைக்குழுக்கள் மேற்கொள்வதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ தினத்தன்று சம்பந்தப்பட்ட யாவருக்கும் எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அது ஒரு இடமாற்றமாக இருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக வைத்திய அதிகாரிகளை காப்பாற்றுவதாகவே அறிகிறோம்.

சட்ட வைத்திய அதிகாரி உள்ளதை உள்ளபடி அறிக்கை இடுவதற்கு நெருக்கடி ஏற்படுவதாகவும் அறிகிறோம். எனவே பாதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இழந்து போகிறது.

வழமையான மருத்துவ தவறுகள் போல் இதனையும் மாற்றிவிட முனைவதாக நாம் எண்ணுகிறோம். தவறிழைத்தவர்கள் மீது கால தாமதம் இன்றி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த நாட்டில் கடந்த காலத்தில் நடந்த எந்த ஒரு விசாரணையானது உண்மையான குற்றவாளியை கண்டு பிடித்தது இல்லை. இவ்வாறு அரைகுறையாக கண்டு பிடித்தவர்களுக்கு கூட நடவடிக்கை எடுத்தது இல்லை.

அரசியல் ரீதியிலும் சரி நிர்வாக ரீதியிலும் சரி இந்த நாட்டின் சாபக்கேடு. நீதியை நிலை நாட்டுவதில் எப்பொழுதும் தோற்றே போகிறது இலங்கையின் ஜனநாயகம். இவ்வாறு தொடர்ந்து உண்மைகளை மூடி மறைத்தால் அரச வைத்தியசாலை மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

இதனால் பாதிக்கப்பட போவது சாமானிய பொதுமக்களே .எனவே இதன் மூலம் தனியார் வைத்தியசாலைகளை நாடும் நிலையை ஏற்படுத்த போகிறீர்களா? ஆகவே நீதி நிழலாடும் பட்சத்தில் வைத்தியசாலைக்கு எதிராக தொடர் போராட்டத்தை மேற்கொள்வோம் என்பதனை தங்களுக்கு தயவுடன் அறியத் தருகின்றோம் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜீப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம்!!

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரப்பாலம் பகுதியில் ஜீப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டியிலிருந்து மட்டக்களப்பு பகுதிக்கு விடுமுறையினை கழிக்க வந்த குடும்ப ஒன்றின் ஜீப் வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, குறித்த வண்டியில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் மகா ஓயா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

 

மேலும், ஜீப் வண்டியில் ஐந்து பேர் பயணித்த நிலையில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதுடன் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, அதிகவேகமாக சென்ற வாகனம் வேகத்தினை கட்டுப்படுத்த முடியாமல் நீண்ட தூரத்திற்கு பாய்ந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் பல பிரதேசங்களில் மாலை அல்லது இரவு வேளையில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மி.மீ க்கும் அதிக மழைவீழ்ச்சி எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

22 மாணவர்கள் இணைந்து பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடுமை!!

தனமல்வில பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர், அதே பாடசாலையில் கல்வி கற்கும் 22 மாணவர்களினால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஒரு வருடமாக குழுவாக இணைந்து, தன்னை தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுத்தியதாக தனமல்வில பொலிஸ் நிலையத்தில் அம்மாணவி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

தனமல்வில பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்படி சம்பவத்துடன் தொடர்புடைய 22 மாணவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்வதற்கான விசாரணைகளை தனமல்வில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான உண்மைகளை மறைத்தமைக்காக அந்த பாடசாலையின் அதிபர் உட்பட ஏனையோருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவில் இலங்கை வீரருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

இலங்கையின் முன்னாள் ஒலிம்பிக் பாட்மின்டன் வீரர் நிலுக கருணாரத்ன சர்வதேச ஒலிம்பிக் குழுவின் (IOC) விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழுவுக்கு தெரிவான முதலாவது இலங்கை வீரர் நிலுக கருணாரத்ன காணப்படுகிறார்.

‘விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினராக இலங்கையிலிருந்து தெரிவான முதலாவது நபர் என்ற வகையில் நான் மிகவும் பெருமை அடைகிறேன்.

இதன் மூலம் இலங்கைக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைத்துள்ளது’ என பரிஸ் ஒலிம்பிக் நகரிலிருந்து நிலுக தெரிவித்தார்.

நிலுக 17 வருடங்கள் தேசிய ஒற்றையர் பட்மின்டன் சம்பியனாக இருந்ததுடன் 3 ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் (2012, 2016, 2020) பங்குபற்றியவராவர்.

அத்துடன் பல்வேறு சர்வதேச பட்மின்டன் போட்டிகளில் வெற்றிகளையும் ஈட்டியவராவார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றிய விளையாட்டு வீர, வீராங்கனைகளால் IOC ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

வாக்களிப்பின் மூலம் புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள சர்வதேச ஒலிம்பிக் பேரவை விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு பிறிஸ்பேனில் 2032இல் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டு விழாவரை 8 வருடங்களுக்கு செயற்படும்.

உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களையும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் விளையாட்டு வீரர்கள் ஆணைக்குழு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இக் குழுவில் ஐக்கிய அமெரிக்க ஒலிம்பிக் சம்பியன் அலிசன் பீலிக்ஸ், ஜேர்மனியின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை கிம் பியூ, அவுஸ்திரேலியாவின் படகோட்ட வீராங்கனனை ஜெசிக்கா பொக்ஸ், நியூஸிலாந்தின் டென்னிஸ் வீரர் மார்க்கஸ் டெனியல் ஆகியோர் முக்கிய நான்கு உறுப்பினர்களாக இடம்பெறுகின்றனர்.

 

இலங்கையில் நடு வீதியில் பரிதாபமாக உயிரிழந்த இளம் கர்ப்பிணிப் பெண்!!

பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி காயமடைந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி 45 நிமிடங்கள் கடந்த போதும், வீதியால் சென்ற எவரும் உதவி செய்யாமையால் குறித்த இளம் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 2 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பாணந்துறை வைத்தியசாலைக்கு கர்ப்பிணித் தாய் அழைத்துச் செல்லப்படாததால் அவரும் அவரது ஏழு மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் உயிரிழந்த பெண்ணுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

“ஒரு குழந்தையின் தாயும் ஒரு மாணவியுமான பிரமோதா, டிப்பர் வாகனத்தில் மோதி விபத்தில் இறந்தார். இறுதி அஞ்சலி செலுத்த பாணந்துறையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று பார்த்த போது எனது இதயம் நொருங்கிப் போனது.

அவர் இறக்கும் போது ஏழு மாத கர்ப்பிணியாக இருந்தார், அவர் மடியில் குழந்தையின் சிறிய உடலைப் பார்த்தேன். அது தாங்க முடியாத வேதனை.

மூத்த மகளை துவிச்சக்கரவண்டியில் பாலர் பாடசாலைக்கு அழைத்து வீடு திரும்பும் போது இந்த விபரீதம் நடந்துள்ளது. விபத்து நடந்து சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகும் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாணந்துறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல யாரும் முன்வராததுதான் இங்கு மிகவும் அதிர்ச்சிகரமான காரணமாகும்.

நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் அந்த வீதியில் யாராவது முன் வந்து, மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தால், அவரையும், குழந்தையின் உயிரையும் காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தை பார்த்து பலரும் விபத்தை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளனர்.

இந்த விபத்தை பலர் வாகனங்கள் நிறுத்தி பார்த்தனர். தங்களுக்கு பிரச்சினை வராதவரை அடுத்த விடயங்களை சம்பவங்களாக பார்க்கும் மக்கள் மற்றும் வாகனத்தில் ஏற்றினால் இரத்த கரையும் என நினைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லையா? இல்லை என்றால் தேவையற்ற பிரச்சினை ஏற்படும் என நினைத்து அழைத்து செல்லவில்லையா என என்னால் நினைத்துக்கூட பார்க்க முடிவில்லை.

மனிதனே, உன் மனிதாபிமானத்தை எங்கே மறைத்தாய்?” என அவர் பதிவிட்டுள்ளார்.

வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்த லொறி!!

வெலிமடை வீதியில் தங்கமலை பகுதியில் வீதியை விட்டு விலகி லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக அப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று (08.08.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

அம்பாறையிலிருந்து அப்புத்தளை வர்த்தக நிலையங்களுக்கு அரிசி மூடைகளை இறக்கிவிட்டு அட்டன் நோக்கிப் பயணித்த லொறியொன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் காயமடைந்து அப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.