பரிஸ் ஒலிம்பிக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிய அருண : இலங்கைக்கு புதிய அங்கீகாரம்!!

பரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அருண தர்ஷன அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதன்படி, ஒலிம்பிக் வரலாற்றில் 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இலங்கையர் என்ற சாதனையை அருண பெற்றுள்ளார்.

06 தகுதிகான் சுற்றுப் போட்டிகளைக் கொண்ட இந்தப் தொடரில் 5ஆவது சுற்றில் அருண கலந்துகொண்டார்.

இதன்படி போட்டி தூரத்தை அவர் 44.99 வினாடிகளில் கடந்து 3ஆவது இடத்தை பெற்றுக்கொண்டார். இது அருணாவின் தனிப்பட்ட சிறந்த நிகர சராசரி ஆகும்.

அதன்படி, 400மீற்றர் தொடரில் இலங்கை சார்பில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இலங்கை தடகள வீரர் என்ற சாதனையை, அருண பெற்றுள்ளார்.

 

மன்னார் பொது வைத்தியசாலையில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு விவகாரம் : விசாரணைகள் ஆரம்பம்!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 27 ஆம் திகதி பட்டதாரி இளம் குடும்ப பெண் மரியராஜ் சிந்துஜா (வயது-27 ) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினராலும் வன்மையான கண்டனங்கள் முன்வைக்கப்பட்டது.

குறித்த பெண்ணின் மரணம் சம்பவ தினம் நோயாளர் விடுதியில் இருந்த வைத்தியர் மற்றும் பணியாளர்கள் அசட்டையீனம் காரணமாக இடம் பெற்றுள்ளதாக பெண்ணின் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த மரணம் தொடர்பில் நீதியான விசாரணைகள் இடம்பெற்று உரிய வைத்தியர் மற்றும் கடமையில் இருந்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய தினம் (4) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் வைத்தியர்களுடன் இணைந்து கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இதன் போது மன்னார் பொது வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதியின்றி நுழைந்து பெண்கள் மகபேற்று விடுதிக்குள் பணியாற்றிய வைத்தியருக்கு இடையூறு விளைவித்ததுடன் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு இடையூரை ஏற்படுத்திய வைத்தியர் அர்ச்சுனாவின் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் குறித்த பெண்ணின் மரணம் குறித்து நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் உரிய தரப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து மக்கள் மத்தியில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மீது உள்ள அவநம்பிக்கை தகர்த்தெரியப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் போது உயிரிழந்த இளம் குடும்பப் பெண் மரணம் தொடர்பாக பல்வேறு கட்ட விசாரணைகள் இடம் பெற்று வருவதோடு,குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை முடிவடைந்த நிலையில் உரிய தரப்பினருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா நாடாளுமன்ற உறுப்பினரிடம் உறுதியளித்தார்.

கடவுச்சீட்டு பெற காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல் : திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள E-passport முறையின் காரணமாக தற்போது நேரம் ஒதுக்கிக் கொள்ளாத 400 பேருக்கு மட்டும் கடவுச்சீட்டு வழங்க குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் E-passport நடைமுறைப்படுத்தப்படவுள்ளமையினால், பழைய முறையில் கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

வளர்ந்த நாடுகளில் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்கு மட்டுமே விசா வழங்கப்படுவதாகவும், நீண்ட காலமாக வழங்கப்பட்டு வரும் விமான அனுமதிப்பத்திரங்களுக்கு விசா வழங்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்தாண்டு புதிய E-passport முறை அமல்படுத்தப்பட்டதால், பழைய முறைப்படி கடவுச்சீட்டு அச்சிட பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் வாங்கப்படவில்லை.

இதன் காரணமாக திகதி நேர முன்பதிவு முறையின் அடிப்படையில் குறைந்தது 400 பேருக்கு கடவுச்சீட்டு வழங்கப்படும் என்று குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதுவரையில் குறைந்தபட்சம் 25 ஆயிரம் புத்தகங்கள் கையிருப்பில் உள்ளதாக பதிப்பாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

அம்பாறையில் படுகொலை செய்யப்பட்ட குடும்பம் தொடர்பில் வெளியான தகவல்!!

பிபில, கரடுகல பொலிஸ் நிலையத்தில் இரவு பணியாளராக கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிளால் மூன்று பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நேற்று காலை T56 ரக ஆயுதத்தை பொலிஸ் நிலையத்திலிருந்து 32 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அம்பாறை, இகினியாகல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு எடுத்துச் சென்று அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிளை சுட்டுக் கொன்றுள்ளார்.

பின்னர் வேறொரு வீட்டிற்கு சென்று ஒரு தாய் மற்றும் மகள் சுட்டுக் கொலை செய்ததுடன், பொலிஸ் நிலையத்திற்கு சென்று தன்னைத்தானே சுட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

இவரால் சுட்டுக்கொல்லப்பட்ட தாய் 54 வயதுடைய பெண் எனவும் மகளுக்கு 17 வயது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த தாயும் மகளும், உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டின் அயலவர்கள் எனவும் இரு குடும்பங்களுக்கும் இடையில் நீண்டகாலமாக காணி தகராறு இருந்து வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், பொலிஸ் உத்தியோகத்தர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், உயிரை மாய்த்துக் கொண்ட அதிகாரி வசிக்கும் வீட்டிற்கு 13 கிலோமீற்றர் தூரத்தில் கொல்லப்பட்ட பொலிஸ் அதிகாரி வசிப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தரை கொன்றுவிட்டு 13 கிலோமீற்றர் தூரம் வந்து தாயையும் மகளையும் கொன்றுவிட்டு பொலிஸ் நிலையத்திற்குத் திரும்பியவர், மனைவிக்கு அழைப்பேற்படுத்தி தன்னைத் தேடவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

தனது வங்கி புத்தகத்தில் உள்ள பணத்தை எடுத்து 3 பிள்ளைகளையும் கவனித்துக் கொள்ளுமாறும் மனைவியிடம் கூறியுள்ளார். இந்த தொலைபேசி அழைப்பினால் பதற்றமடைந்த மனைவி இரண்டு பிள்ளைகளுடன் பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளார்.

இதையடுத்து பதற்றமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மனைவியை அருகில் வர வேண்டாம் என சத்தமிட்டு கூறிய நிலையில் தன்னை தானே சுட்டு உயிரை மாய்த்துள்ளார்.

அவர் அதிகாலை 2.05 மணியளவில் பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 32 கிலோமீற்றர் தூரம் சென்ற பிறகு அதிகாலை 2.45 மணியளவில் பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்தக் கொலையின் பின்னர், அதிகாலை 3.15 மணியளவில் தாயும் மகளும் கொல்லப்பட்டனர். பொலிஸ் நிலையத்திற்கு வந்த இந்த அதிகாரி அதிகாலை 4.10 மணியளவில் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை பி புதிய நகரைச் சேர்ந்த லஹிரு உதார என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 43 வயதான அவர் 20 வருட சேவையில் இருந்த அதிகாரியாகும்.

மூவரைக் கொலை செய்ததுடன், உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் 14 வருட சேவையில் இருந்த அதிகாரி எனவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. காணி தகராறில் தாய் மற்றும் மகளின் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இரு தினங்களுக்கு முன்னர் பேருந்து சாரதியை தாக்கிய சம்பவத்தில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

உயிரை மாய்த்துக் கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிளே முறைப்பாடு பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

ஒலிம்பிக் போட்டித்தொடரில் சாதனை படைத்த கனடிய சிறுமி!!

ஒலிம்பிக் (Olympic) போட்டித் தொடர் ஒன்றில் கனடாவின்(Canada) சார்பில் மூன்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ரொறன்ரோவைச் சேர்ந்த சம்மர் 17 வயது சிறுமியான சம்மர் மெக்கினோஸ்(Summer McIntosh) என்ற நீச்சல் வீராங்கனையே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்.

இதுவரையில் மூன்று தங்கப் பதக்கங்களை எந்தவொரு கனேடியரும் ஒரே ஒலிம்பிக் தொடரில் வென்றதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவர் 200 மீற்றர் மெட்லே, 200 மீற்றர் பட்டர்பிளை மற்றும் 400 மீற்றர் மெட்லெ ஆகிய நீச்சல் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது கனடாவிற்கு பெருமை சேர்க்க முடிந்தமை மகிழ்ச்சியளிப்பதாக சம்மர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்.. நடந்தது என்ன?

வவுனியா மகாறம்பைக்குளம் தாஸ்நகர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை தாஸ்நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவை எடுத்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவர் அங்கு காெண்டு செல்லும் முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து சடலத்தை பார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிணஅறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றயதினம் (05.08.2024) உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அதே பகுதியை சேர்ந்த கோபி (வயது 26) என்ற இளம் குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

நாடாளுமன்றத்திற்கு அருகில் கோர விபத்து : நால்வர் வைத்தியசாலையில்!!

நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நான்கு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது இன்று (03.08.2024) காலை இடம்பெற்றுள்ளது.

அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விபத்தில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அரச ஊழியர்களுக்கு கடுமையாகும் சட்டம் : சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை!!

அரச அதிகாரிகள் பணி நேரத்தில் தனிப்பட்ட சமூக வலைதள கணக்கு அல்லது வேறு எந்தக் கணக்கைப் பயன்படுத்தி அரசியல் கட்சி அல்லது வேட்பாளரை ஊக்குவிக்கும் அல்லது பாரபட்சம் காட்டுவது போன்ற பிரச்சாரம் செய்வது கடுமையான குற்றமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாவிற்கு குறையாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அரசியல் உரிமைகளை இழந்த அரசு அதிகாரிக்கும் கூட இந்த நடைமுறை பொருந்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு அரசியல் கட்சி அல்லது வேட்பாளரை விளம்பரப்படுத்த அல்லது பாரபட்சம் காட்டுவதற்காக ஒருவரின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்கு அல்லது வேறு ஏதேனும் கணக்கைப் பயன்படுத்துதல் மற்றும் ஏதேனும் விளம்பரம் அல்லது அறிக்கையை வெளியிடுவதும் அதே குற்றத்தின் கீழ் கருதப்படுவதாக தேர்தல்கள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசு ஊழியர்கள் மட்டுமன்றி, இந்த சுற்றறிக்கை அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் பொருந்தும். எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை கருத்திற் கொண்டு இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அத்துடன், அரச மற்றும் அரை அரச ஊழியர்கள் கட்சிகள் அல்லது தனிநபர்களை ஊக்குவித்தல் அல்லது பாரபட்சம் காட்டுவதை தடுப்பதற்காகவே இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தேர்தல் ஆணைக்குழுவின் சுற்றறிக்கை எண் 5இன் கீழ் இலக்கம் 8 IV மற்றும் இல. 17 இன் கீழ் ‘மிக முக்கியமானது’ என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது.

இது அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள், அரச திணைக்களத் தலைவர்கள், தலைவர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்து கூட்டுத்தாபனங்கள் மற்றும் பொது மேலாளர்கள் உட்பட அனைத்து அரச தலைவர்களுக்கும் அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கையில், முந்தைய தேர்தல்களில் பெறப்பட்ட புகார்கள் குறித்து முறையான விசாரணையின் பின்னர் புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமிக்கு தடை விதித்த மத்திய கிழக்கு நாடு!!

சமூக ஊடக செயலியான இன்ஸ்டாகிராமை (Instagram) மத்திய கிழக்கு நாடான துருக்கி தடை செய்துள்ளதாக அந்நாட்டு தேசிய தகவல் தொடர்பு ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஓகஸ்ட் 2ஆம் திகதி வெளியிடப்பட்ட உத்தரவில், துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால், இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த உத்தரவைத் தொடர்ந்து, துருக்கியில் உள்ள பலர் எக்ஸ் தளத்தில் இன்ஸ்டாகிராம் feed ஏற்றப்படவில்லை என்று முறைப்பாடு செய்துள்ளனர்.

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் (Ismail Haniyeh) மரணம் குறித்து மக்கள் வேடிக்கையான செய்திகளை வெளியிடுவதை இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா (Meta)தடுத்ததாக, துருக்கியின் ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் ஃபஹ்ரெட்டின் அல்டன் குற்றம் சாட்டினார்.

இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கடந்த 13ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்நிலையில் ஹனியே துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகனுக்கும் நெருக்கமானவர் என தெரிவிக்கப்படுகின்றது.

துருக்கியில் இன்ஸ்டாகிராமில் விதிக்கப்பட்டுள்ள தடையால் 5 கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துருக்கியின் மொத்த மக்கள் தொகை சுமார் 8.5 கோடி அத்தகைய சூழ்நிலையில், துருக்கிய மக்கள் தொகையில் பெரும் பகுதியினர் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹையேஸ் வாகனத்தால் யாழ் சுன்னாகம் விபத்தில் பறிபோன உயிர்!!

யாழ்ப்பாணம் – சுன்னாகத்தில் , ஹையேஸ் வாகனம் ஒன்று, வீதியில் சென்ற மோட்டார் சைக்கிளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் விபத்து இன்று (03.08) இடம்பெற்றுள்ளது.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

மோட்டார் சைக்கிள் ஒன்றில் சென்ற இரண்டு பெண்கள் தமது பக்கத்தினால் சென்றுகொண்டிருந்தவேளை, அவர்களை முந்திச் செல்ல முயன்ற ஹையேஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் இருவரும் காயமடைந்தனர்.

காயமடைந்த பெண்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவத்தில் சங்கானையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆனந்தன் சிவானந்தகௌரி என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து விபத்து தொடர்பான விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை நாளை ஆடி அமாவாசை தினம் என்பதனால் மக்கள் அதிகள்வில் நடமாட்டம் உள்ளதுடன் வீதிக்கு அருகேயும் மோட்டார் சைக்கிளகள் நிறுத்திவைக்கபட்டமையும் விபத்திற்கு காரணம் என பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

வாகனத்தின் டயரில் காற்றை பிடுங்கிய பொலிஸ்காரருக்கு நேர்ந்த கதி!

இலங்கையின் வத்தளைப் பிரதேசத்தில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் வாகனத்தின் டயரில் காற்றை விட்ட பொலிசுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்த பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது.

பல டன் கனரக பொருட்களை ஏற்றிச் செல்லும் கொள்கலன் லாரியின் சக்கரங்களில் காற்றை வெளியேற்றும் போக்குவரத்து சார்ஜன்டிடம் அங்கிருந்த மக்கள் இது ஒரு குற்றச்செயல் என்றும் அதைச் செய்ய வேண்டாம் என்றும் கூறினர்.

சரிவான நிலத்தில் லீவர் மூலம் வாகனத்தை உயர்த்தி டயரை மாற்றுவது கடினம் என்று மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டப்பட்டபோதும், அவர் அதனை செவி மடுக்கவில்லை.

கனரக வாகனத்தின் ஓட்டுநர் வரும் வரை இதைச் செய்ய வேண்டாம் என பொதுமக்கள் கோரியபோதும், காதில் வாங்காமல் அவர் வாகனத்தின் காற்றை பிடுங்கி விட்டார்.

வீதியின் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தமையினால் இவ்வாறு காற்று விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்து ஓட்டுநருக்கு அபராதச் சீட்டும் எழுதுகிறார். இது குறித்த காணொளி சமூகவைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அதேவேளை இந்த வாகனத்தின் காற்றை பிடுங்கிய வத்தளை போலீஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவின் சார்ஜன்ட் விக்ரமசிங்க என கூறப்படுகின்றது.

இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!!

இலங்கையில் உள்ள லிட்டில் ஸ்ரீ பாதவுக்கு சென்ற பிரித்தானியாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் மலையில் இருந்து தவறி விழுந்து காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் (01.08.2024) இடம்பெற்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பிரித்தானிய பெண், சுற்றுலா பொலிஸார் மற்றும் ஒரு குழுவினரின் உதவியுடன் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எல்ல – பசறை வீதியில் அமைந்துள்ள லிட்டில் ஸ்ரீ பாதவுக்கு தரிசிப்பதற்காக நேற்று பயணித்த 33 வயதுடைய பிரித்தானிய பெண் ஒருவரே இவ்வாறு மலையில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

குறித்த அனர்த்தத்தில் அவரது வலது கால் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

 

பூமியில் ஏற்படப் போகும் பகீர் மாற்றம் : இனி ஒரு நாளைக்கு 25 மணி நேரம்!!

பூமியின் ஒரே ஒரு துணைக்கோளான நிலா பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பூமியிலிருந்து நிலா ஆண்டுக்கு சுமார் 3.8 செ.மீ. வீதம் விலகி செல்வதாகவும், இதனால் பூமியில் பகலின் நேரம் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலா விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே மாறும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வில் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு ஆய்வாளர் குழு இந்த ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த ஆய்வில் பூமியிலிருந்து நிலவு மெல்ல மெல்ல விலகி செல்வது தெரிய வந்துள்ளது.

இதனால் பூமியிலும் பல வித மாற்றங்கள் நடக்கும் எனவும், இந்த ஆய்வில் பூமியிலிருந்து நிலா ஆண்டுக்கு சுமார் 3.8 செ.மீ. வீதம் விலகி செல்வதாகவும், இதனால் பூமியில் பகலின் நேரம் அதிகரிக்கும் எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கடந்த காலங்களிலும் பூமியின் ஒரு நாள் என்பது தொடர்ந்து நீட்டித்தே வந்துள்ளது. சுமார் 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரமாக மட்டுமே இருந்துள்ளது.

அது பல கோடி ஆண்டுகளுக்குப் பின்னரே இப்போது இருப்பது போல 24 மணி நேரமாக மாறி இருக்கிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். இந்த இரண்டிற்கும் இருக்கும் அலை சக்திகளில் ஏற்படும் மாற்றமே இதற்குக் காரணமாகும்.

இது தொடர்பாக விஸ்கான்சின்- மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில், நிலவு நமது பூமியில் இருந்து விலகிச் செல்லும் போது, பூமி சுழலும் வேகமும் வெகுவாக குறையும்.

இப்படி நிலவு விலகிச் செல்ல செல்ல பூமியின் வேகம் குறைவதால் பகல் நேரம் என்பது அதிகரிக்கும். மேலும் அடுத்த கட்டமாகப் பல பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளை ஆய்வு செய்ய விரும்புகிறோம் என்றார்.

ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்து!!

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் முந்திச் செல்ல முயன்ற ஹயஸ் வாகனத்தால் மூன்று வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று காலை 7.45 மணியளவில் சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சாவகச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்து, ஹயஸ் வாகனம், டிப்பர் என்பன முறையே தொடர்ச்சியாக பயணித்துள்ளது.

ஹயஸ் வாகனம்

ஒரு கட்டத்தில் ஹயஸ் வாகன சாரதி பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டபோது எதிரே வந்த வாகனத்தால் சடுதியாக ஹயஸ் வானை திருப்ப முற்பட்ட போது பேருந்து பின்பகுதியுடன் ஹயஸ் வாகனம் மோதியுள்ளது.

இதன்போது ஹயஸ் வாகனத்துக்கு பின்னால் வந்த டிப்பரும் ஹயஸ் வாகனத்தின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து காரணமாக ஹயஸ் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் , பேருந்தின் பின்பகுதி, டிப்பரின் முன்பகுதி என்பன சிறியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்தின் போது ஒருவருக்கும் உயிர் சேதம் ஏற்படாத நிலையில் ஹயஸ் வாகனத்தின் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படகிறது. இந்நிலையில், சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

வவுனியாவில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து : மூவர் படுகாயம்!!

வவுனியா பட்டாணிச்சூர் வயல்வெளிக்கு அண்மித்த பகுதியில் இன்று (02.08.2024) மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்ற பிரிதொரு வாகனத்தினை முந்திச்செல்ல முற்பட்ட சமயத்தில் எதிர்த்திசையில் வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிலுடன் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் தெரியவருகின்றது.

இவ்விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் பகுதியளவில் சேதமடைந்துள்ளமையுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பறக்கும் இண்டிகோ!!

வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நாளாந்த விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.

இண்டிகோ விமானசேவை, இலங்கையில் கொழும்புக்கு மட்டுமே இதுவரை விமான சேவை இருந்த நிலையில் யாழ்ப்பாணப்பானத்துக்கு சேவை ஆரம்பம் செய்யப்பட உள்ளது.

யாழ்ப்பாணம் செல்ல ஆர்வம் காட்டும் பயணிகள்

இம்மாதம் முதலாம் திகதி முதல் விமானத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்தியாவிலிருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வருகை தருகின்றனர்.

இவ் ஆண்டு ஜூன் மாதம் 25.2 (28,631) சதவீதமானர்களும், 2023 ஆம் ஆண்டு 26.7 (26,830 )சதவீதமானர்களும் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அதேசமயம் அதிகளவானவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தருவதற்கு ஆர்வமாகள்ளார்கள்.

இதன் காரணமாக , சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையேயான விமானப் பயணத்திற்கான வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.