வவுனியாவில் கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்தும் ஒற்றுமையை வலிறுயுறுத்தியும் பேரணி!!

கறுப்பு ஜீலை கலவரத்தை நினைவு கூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மக்களின் பங்கு பற்றுதலுடன் குறித்த ஆர்ப்பாட்டமானது வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (14.07) மாலை இடம்பெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘இனியும் கலவரம் வேண்டாம், பிரிவினைகள் வேண்டாம், சமூக ஒற்றுமையை குலைக்காதே, ஆட்சியாளர்களே இனவாததிதை தூண்டாதே, யாழ் நூலகத்தை எரித்தது இனவாதமே, நாடு பூராகவும் ஜீலை கலவரத்தை திட்மிட்டு நடத்தியது ஆட்சியாளர்களே’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பினர்.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாறி மாறி ஆடசிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன என்பனவே இந்த நாட்டின் இன நல்லுறவு சீர்குலைத்து கலவரங்கள் ஏற்படக் காரணம் எனவும், அவ்வாறான ஆட்சியாளர்களை விரட்டியடிக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்தனர்.

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய யுவதியின் மரணம்!!

பேராதனையில்..

பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான சாமோதி சந்தீபனி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.அது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக்குழு நாளை சனிக்கிழமை (15) வைத்தியசாலைக்கு சென்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில் மருந்துகள் காரணமாக ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையை கூட்டி உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் ருக்க்ஷான் பெல்லான கூறுகிறார்.

அத்துடன் இந்திய கடன் உதவியின் கீழ் தரம் குறைந்த நிறுவனங்களில் இருந்து தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி செய்வதே இந்த நிலைக்கு காரணம் என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை பாணந்துறை வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்த இளம் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!!

கடுகண்ணாவவில்..

கடுகண்ணாவ அலகல்ல மலையில் நடைபயணம் மேற்கொண்ட டென்மார்க்கை சேர்ந்த 32 வயதுடைய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மாயமான 32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் திகதி இலங்கை வந்து குறித்த பெண், தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஜூலை 10 ஆம் திகதி கண்டியில் உள்ள விடுதி ஒன்றுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் சுற்றுலா செல்வதாக விடுதி நிர்வாகத்திடம் கூறியதாகவும், கடந்த செவ்வாய்க்கிழமை (11) இரவு வரை விடுதிக்கு திரும்பாத நிலையில், நிர்வாகம் கண்டி பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதன்பிறகு அவரது அறையை உடைத்த பொலிஸார் அவரது உடைமைகள் சிலவற்றைக் கண்டுபிடித்தனர்.பெண் விடுதி திரும்பாததால் அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று வியாழக்கிழமை (13) முதல் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் அவர் திரும்பி வருவாரா என்பதைப் பார்க்க ஒரு நாள் காத்திருக்க வேண்டும் என்று விடுதி நிர்வாகத்திடம் பொலிஸார் கூறியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் மாயமான 32 வயதுடைய டென்மார்க்கை சேர்ந்த பெண்ணின் சடலம் பொலிஸாரால் இன்று வெள்ளிக்கிழமை (14) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் நேற்று (13) முதல் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையையின்போதே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது தவறி வீழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பேராதனை வைத்தியசாலையில் மர்மமாக உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வெளியான தகவல்!!

பேராதனையில்..

பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் எனவும், அவருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய, அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன (21 வயது) என்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

எவ்வாறாயினும், ஊசி மூலம் மருந்து ஏற்றியதையடுத்தே அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.பெற்றோரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த யுவதியின் மரணம் தொடர்பில் ஆராய்வதற்காக, விசேட வைத்திய குழுவொன்று, நாளை பேராதனை வைத்தியசாலைக்கு செல்ல உள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேராதனை போதனா வைத்தியசாலையில் Bupivacaine என்ற மயக்க மருந்து வழங்கப்பட்ட நிலையில், இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த மருந்தின் ஒரு தொகுதியில் ஒரு பதார்த்தம் குறைவாக இருந்தமையே உயிரிழப்பிற்குக் காரணம் என்பது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உறுதியாகியிருந்த நிலையில் தற்போது அந்த மருந்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த காலப்பகுதியில் பேராதனை போதனா வைத்தியசாலை மற்றும் சிறுவர் வைத்தியசாலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தோணிக்கலில் பராமரிப்பற்ற காணியில் கைக்குண்டு மீட்பு!!

வவுனியா தோணிக்கல் லக்சபான வீதியில் பராமரிப்பற்ற காணியிலிருந்து இன்று (14.07) மதியம் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

துருப்பிடித்த நிலையில் கைக்குண்டு காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று குறித்த கைக்குண்டுனை மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த கைக்குண்டு இன்னும் இயங்கு நிலையில் காணப்படுகின்றதா? அல்லது செயழிழந்த நிலையில் காணப்படுகின்றதா என்பதை ஆராய்வதற்கு பாதுகாப்பு பிரிவினருக்கு பொலிஸாரினால் தகவல் வழங்கப்பட்டமையினையடுத்து அவர்கள் கைக்குண்டை பாதுகாப்பான முறையில் அவர்கள் எடுத்துச்சென்றுள்ளனர்.

வவுனியாவில் 10 கிலோ 74 கிராம் கேரள கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் கைது!!

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் நேற்று (13.07) இரவு 11.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது 10 கிலோ 74 கிராம் கேரள கஞ்சாவுடன் கடற்படை சிப்பாய் ஒருவரை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் கேரள கஞ்சா கடத்துவதாக வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தவலின் குறித்த பேரூந்தினை வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் வைத்து சோதனைக்குட்படுத்தினர்.

இதன் போது பொதி செய்யப்பட்ட நிலையில் காணப்பட்ட 10 கிலோ 74 கிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த பேரூந்தின் பயணித்த கடற்படை சிப்பாயை பொலிஸார் கைது செய்தனர்.

மேலும் குறித்த கடற்படை சிப்பாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் முழங்காவில் புவனேகா முகாமில் பணியாற்றிவரும் 27வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினையும் சந்தேகநபரையும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தியமையுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய மேலதிக நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மனிதர்களின் எலும்பை உடைத்து கொலை செய்யும் பறவை… இலங்கையில் ஏற்படுத்தப்போகும் பேரழிவு!!

இலங்கையில்..

நியூகினியா மற்றும் வடக்கு ஆஸ்திரேலியாவின் வெப்ப மண்டல காடுகளில் வாழும் பறவை தான் காசோவரி பறவை. பறக்கும் தன்மையற்ற இந்த பறவைகள் தற்போது 4 மட்டும் தான் இருக்கின்றது.

இதில் 3 கசோவரி இனங்கள் மற்றொரு பறவை ஈமியூ.. உலகின் ஆபத்தான பறவையாக கூறப்படும் இந்த பறவை மனிதர்களின் உயிரை எளிதில் பறித்துவிடுமாம்.

ஆம் தனது கூர்மையான நகங்களை வைத்து மனிதனின் தோலைக் கிழித்து கொலை செய்யும் திறன் கொண்டதுடன், ஒரு உதை கொடுத்தால் எலும்புகளே உடைந்துவிடுமாம்.

சாதாரணமாக தனது அலகினால் கொத்தினாலே கூர்வாள் அளவிற்கு காயத்தை ஏற்படுத்தும். இந்த பறவை இனத்தில் ஆண்பறவை தான் அடைகாத்து குஞ்சு பொரிக்கும். பெண் பறவையானது ஆண் பறவையின் அருகே முட்டையிட்டு சென்றுவிடுமாம்.

இந்த முட்டையை 9 மாதங்கள் ஆண் பறவையே அடைகாத்து குஞ்சு பொரித்து வளர்க்குமாம். இன்னும் இதுகுறித்த விரிவான தகவலை கீழே உள்ள காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

ஜப்பான் தடுப்புக் காவலில் மாணவிக்கு நேர்ந்த சோகம்.. குடும்பத்தினர் விடுத்த கோரிக்கை!!

ஜப்பானில்..

ஜப்பான் குடிவரவு மையத்தில் 2021 ஆம் ஆண்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த போது மரணமான இலங்கை பெண்ணின் குடும்பத்தினர், தொழில்முறை அலட்சியத்தால் மரணம் நிகழ்ந்ததாக கூறி ஜப்பான் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதற்கமைய மரணமான இலங்கை பெண்ணின் குடும்பத்தினர் தமது சட்டத்தரணிகளிடம் இது தொடர்பான வலியுறுத்தலை விடுத்துள்ளனர். ரத்நாயக்க லியனகே விஸ்மா சந்தமாலி என்ற பெண்ணே, குடிவரவு சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

ஜப்பானில் உள்ள தடுப்பு முகாமில் முறையான சிகிச்சை இன்றி உயிரிழந்த இலங்கை மாணவி விஷ்மா சந்தமாலி தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடியதன் பின்னர் அறிக்கை ஒன்றை வழங்குமாறு ஜப்பானில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு வெளிவிவகார அமைச்சு கடந்த மார்ச் மாதம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் அவர் விசா நிபந்தனைகளுக்கு முரணாக தங்கியதால் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்டில் குடிவரவு பணியகத்தில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.அங்கு வாந்தி மற்றும் வயிற்றுவலி உள்ளிட்ட உடல் நலக்குறைவால் அவதியுற்ற அவர் 2021 மார்ச் 6ஆம் திகதி ஜப்பானின் நகோயாவில் உள்ள தடுப்பு மையத்தில் உயிரிழந்தார்.

விஷ்மா சந்தமாலியின் உடல் நிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் இந்த மரணம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினாலும், விஷ்மா சந்தமாலி உடல்நிலை மோசமாகிய நிலையில் உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்திருக்கலாம் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அதன்படி, உயிரிழந்த சந்தமாலியின் பாட்டி இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தார்.விஷ்மா சந்தமாலியின் கடைசி சில நாட்களைக் காட்டும் சிசிடிவி காணொளியை அண்மையில் அவரது வழக்கறிஞர்கள் வெளியிட்டனர்.எனினும், இது அங்கீகரிக்கப்படாத காணொளி என்று ஜப்பானிய நீதித்துறை அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

23 ஆண்டுகளின் பின்னர் இலங்கைக்கு கிடைத்துள்ள தங்கப்பதக்கம்!!

இலங்கை..

ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்சிப் போட்டித்தொடரில் 400 மீற்றர் மகளிருக்கான போட்டியில் நதீஷா ராமநாயக்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

நதீஷா இறுதிப்போட்டியில் 52.62 செக்கன்களில் ஓடி முடித்து இந்த வெற்றியை ஈட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 2000 ஆம் ஆண்டு நட்சத்திர ஓட்ட வீராங்கனை தமந்தி தர்ஷா, ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்சிப் போட்டித்தொடரில் 400 மீற்றர் போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.

இதன் பின்னர் 400 மீற்றர் ஒட்டப்போட்டியில் முதல் தடவையாக இலங்கைக்கு 23 ஆண்டுகளின் பின்னர் தங்கப்பதக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது.

எட்டு நாடுகளை தோற்கடித்து இலங்கை மாணவி கராத்தே சாம்பியன் ஷிப் போட்டியில் சாதனை!!

இலங்கை மாணவி..

சிங்கப்பூரில் எட்டு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற கராத்தே சாம்பியன் ஷிப் – 2023 போட்டியில் இலங்கை வீராங்களை இரண்டு பதக்கங்களை வென்றுள்ளனர்.

கம்பஹா, மிரிஸ்வத்த, கெப்பிட்டிபொல உயர்தரப் பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் ஷெனுஷி தமாஷா என்ற மாணவியே இவ்வாறு 15 வயதுக்குட்பட்ட போட்டியில் தங்கப்பதக்கத்தையும் மற்றுமொரு போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இந்த மாணவி, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பயிற்சியாளர் தனுகா பியூமல் வழிக்காட்டலில் இலங்கையில் நடைபெற்ற போட்டியிலும் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இம்மாணவி இலங்கைக்கு மட்டுமின்றி கெப்பிட்டிபொல கல்லூரிக்கும் பெறுமையை பெற்றுத்தந்தமைக்காக கல்லூரியின் அதிபர் சாந்தி விஜேசூரிய தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றுள்ளது.

பாடசாலை சென்ற மாணவியை கடத்த முயன்ற மர்ம நபர்கள்!!

பண்டாரவளையில்..

பண்டாரவளை பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமியை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.பண்டாரவளை, வனசிரிகம, மகுலெல்ல பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

10 வயதுடைய அவர் மகுலெல்ல கல்லூரியில் 6ஆம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார்.சிறுமியின் தகவலுக்கமைய, இந்த சிறுமி வழமை போல் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தார். வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் தன்னை முச்சக்கரவண்டிக்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் தன்னை முச்சக்கர வண்டியில் ஏற்றிய பின்னர் குடிக்க ஏதோ கொடுத்ததாக கடத்தப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவை கசப்பாக இருந்ததால், அதனை துப்பி விட்டு அங்கிருந்து தப்பியோடி பாடசாலைக்கு சென்றுள்ளர்.

பாடசாலைக்குச் சென்று வகுப்பறையில் அழுதுகொண்டிருந்தபோது, ​​வகுப்பு ஆசிரியர் சம்பவம் தொடர்பில் விசாரித்துள்ளார். குறித்த சிறுமியை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்க அதிபர் மற்றும் ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் மகளிர் பணியகம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் வாழ்ந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

இலங்கை..

அமெரிக்காவின் அட்லாண்டாவுக்குச் சென்றிருந்த இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.ஜோர்ஜியாவின் கென்னசோவில் உள்ள தனது இல்லத்தில் இருந்து அட்லாண்டாவுக்கு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

ஹசித் நவரத்ன என்ற 34 வயதுடைய இளைஞன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்லாண்டாவில் காரில் சடலமாக மீட்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இளைஞனின் மரணத்திற்கான காரணம் இதுவரை பொலிஸாரினால் உறுதிப்படுத்தவில்லை. ஜூலை மாதம் 7ஆம் திகதி ஹசித் நவர்த்னே காணாமல் போனதாக முதலில் அறிவிக்கப்பட்டது.

அவர் ஜூலை மாதம் 2ஆம் திகதி அட்லாண்டாவுக்குச் செல்லவிருந்ததாகவும், அதன் பின்னர் அவர் தொடர்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

யாழில் 15 வயது மாணவியை கடத்திச் சென்று குடும்பம் நடத்திய 19 வயது இளைஞன் : கம்பி எண்ணும் ஐவர்!!

யாழில்..

யாழில் 15 வயதான பாடசாலை மாணவியை கடத்தி சென்று, குடும்பம் நடாத்திய 19 வயது காதலனும், அவர்களுக்கு உதவிய ஐவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியைச் சேர்ந்த 15 வயதான பாடசாலை மாணவி கடந்த வருடம் தனது காதலனான 19 வயதான இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்று இருந்தார்.

அதனையடுத்து, மாணவியின் பெற்றோர், மகளை இளைஞர் ஒருவர் கடத்தி சென்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்த வேளை, இளைஞனின் தாயார் அவர்களுடன் தொடர்பில் இருப்பதனை அறிந்து இளைஞனின் தாயையும் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், மாணவியும், காதலனும் விசுவமடு பகுதியில் வீடொன்றில் குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில், தாயார் கைது செய்யப்பட்டதை அறிந்து, இளைஞனும், காதலியும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்தனர்.

அதனையடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார், மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தனர்.இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அவர்கள் தங்க வீடு கொடுத்த வீட்டு உரிமையாளர், மாணவியை அழைத்து செல்ல உதவியவர்கள், இளைஞனின் தாயார் என ஐவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை நேற்று புதன்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை , அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

யாழில் நபர் ஒருவரின் செயலால் வியப்பில் பலர்!!

யாழில்..

யாழில் சுமார் 35 இலட்சம் ரூபாய் செலவில் 2 கிலோமீற்றர் வரையிலான வீதியைப் பெயர் குறிப்பிட விரும்பாத நபரொருவர் புனரமைத்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கிலிருந்து கடற்கரையில் உள்ள நாலாம் பனை பிள்ளையார் ஆலயத்திற்க்கு செல்கின்ற வீதியும், அங்கிருந்து கடற்கரைக்கு செல்கின்ற வீதியுமே இவ்வாறு புனரமைக்கப்பட்டுள்ளது.இதில் சுமார் முந்நூறு மீற்றர் வரை, 5 அடி வரை உயரமாக மண் அரண் அமைக்கப்பட்டு அதற்கு மேலாகக் கிரவல் இடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது குறித்த நபர் அக் கடற்கரை வீதியில் 100 க்கும் மேற்பட்ட சவுக்கு, இலுப்பை மரங்களை நாட்டி அதனைப் பராமரித்தும் வருகின்றார் எனவும் கூறப்படுகின்றது.செயலிழந்து போன வீதி விளக்குகளை அவர் சீர் செய்து கொடுத்துள்ளதுடன் 17 வீதி விளக்குகளைப் புதிதாகப் பொருத்தியும் கொடுத்துள்ளாராம் அந்த பரோபகாரி.

அத்துடன் நீண்ட தூரம் நடந்து பாடசாலைக்குச் செல்லும் பல மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள், உதிரி பாகங்கள், என்பனவும் வழங்கி கல்வி ஊக்கிவிப்பு பணிகளையும் அவர் மேற்கொண்டு வருவதுடன் பல்வேறு ஆன்மீகப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடி கோடியாக செல்வம் கொட்டிக்கிடந்தாலும் அடுத்தவர்களுக்கு உதவும் குணம் பலரிடம் காணப்படாத இக்காலத்தில் இப்படியும் ஒருவரா என விய்யக்க வைக்கின்றார் அம்மனிதர்.

சுவீடன் பெண்ணை கோலாகலமாக திருமணம் செய்துகொண்ட யாழ் இளைஞன்!!

யாழில்..

சுவீடன் நாட்டு பெண்ணை யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கோலகலமாக திருமணம் செய்துள்ளார்.

குறித்த திருமணம் யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தமிழ் கலாசார முறைப்படி இடம்பெற்றுள்ளது.

குறித்த தம்பதியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருவதோடு, பலரும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

வவுனியாவில் 34வது வீரமக்கள் தினம் : அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடி!!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 34ஆவது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இன்று (13.07.2023) இடம்பெற்றது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) வவுனியா மாவட்ட அமைப்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து கழகத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது டன் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர், முன்னாள் நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.