பாரிஸ் ஒலிம்பிக்கில் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருமை!!

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கான சிறந்த கலாச்சார ஆடைகளில் இலங்கைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

இதன்போது 11 சிறந்த கலாச்சார ஆடைகள் பெயரிடப்பட்டுள்ளன. அவற்றுள் இலங்கையின் கலாசாரத்தை வெளிக்காட்டி உருவாக்கப்பட்ட ஆடையானது மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.

மேலும் முதலாம் இடத்தை மங்கோலியாவும் இரண்டாம் இடத்தை மெக்சிகோவும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கொடுமை : வெளியான அதிர்ச்சித் தகவல்!!

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து திருகோணமலை புறா தீவிற்கு விடுமுறைக்காக வந்த இருபது பேர் கொண்ட இலங்கையர்கள் குழு ஒன்று புறா தீவின் சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் சுற்றுலா பணியாளர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த குழுவினர் அண்மையில் புறா தீவிற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் அவர்களிடமிருந்து 90,000 ரூபாவை புறா தீவு சுற்றுலா ஊழியர்கள் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை படகு சவாரி, நீச்சல் போன்றவற்றுக்கு தேவையான உபகரணங்கள் மிகவும் பழுதடைந்த நிலையிலேயே அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த உபகரணங்களை சுற்றுலா பயணிகள் திருப்பிக் கொடுக்கும் போது, குறித்த உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டதால் இவ்வாறு பழுதடைந்துள்ளதாக தெரிவித்து, மேலதிகமாக 12,000 ரூபாவை செலுத்துமாறு சுற்றுலா வழிகாட்டிகள் கேட்டுள்ளனர்.

ஆனால், சுற்றுலா பயணிகள் பணத்தை தர மறுத்ததால், சுற்றுலா குழுவில் இருந்த பெண்கள் உட்பட அனைவரையும் சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட சிலர் பொல்லுகளால் தாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் சுற்றித்திரிந்த 10 பேர் அதிரடியாக கைது!!

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்கள் , மது போதையில் வாகனம் செலுத்தியவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்தியவர்கள் என 10 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமைகளில் பண்ணை பகுதியில் பெருமளவாவர்கள் நடை பயிற்சி செய்வதற்கும் , குழந்தைகள் , சிறுவர்களுடன் கடற்கரையில் பொழுதை கழிக்கவும் என கூடுவார்கள்.

இந்த நேரங்களில் இளைஞர்கள் குழுக்கள் பெரிய சத்தங்களுடன் மோட்டார் சைக்கிள் ஓடுதல் , வீதியில் ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களை செலுத்துதல் என மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்து மக்களுக்கு இடையூறு விளைவித்து வந்தனர்.

அது தொடர்பில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து , போக்குவரத்து பொலிஸார் நேற்று பண்ணை பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அதன் போது மோட்டார் சைக்கிளை ஆபத்து விளைவிக்கும் வகையாக செலுத்தியமை , போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களின் 10 மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் , அவர்களின் மோட்டார் சைக்கிள்களையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ள பொலிஸார் , நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

வாகன இறக்குமதிக்கான அனுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தேர்தலை இலக்குவைத்து இறக்குமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலைக்கு ஒரு அரசாங்கம் நாட்டை மீண்டும் இட்டுச்செல்ல முடியாது. தற்போது வாகனங்களை தவிர ஏனைய அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.

வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக நீக்கப்படும், முதல் காலாண்டில் வணிக நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களுக்கு அனுமதி வழங்குவோம் என்றும் கூறியுள்ளார்.

 

வைத்தியசாலையிலுள்ள மகனை பார்க்க சென்ற 25 வயது இளம் தந்தை விபத்தில் சிக்கி பலி!!

கொழும்பு – காலி பிரதான வீதியில் பயாகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 வயதுடைய இளம் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் தனது பிள்ளையை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

மக்கொனை அக்கரமலை பிரதேசத்தை சேர்ந்த இளம் தந்தையே உயிரிழந்துள்ளார்.

களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பிள்ளையை பார்க்கச் சென்ற இவர் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸை கடக்க முற்பட்ட போது, எதிரே வந்த லொறியுடன் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

சுற்றுலா செல்வதற்கான சிறந்த நாடுகளில் இலங்கைக்கு கிடைத்துள்ள இடம்!!

சுற்றுலா செல்வதற்கான சிறந்த முதல் மூன்று நாடுகளுள் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளது.

அதனுடன், கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய நிலமைகளால் மீள எழுந்திருக்கும் இலங்கை இவ்வாண்டில் சுற்றலாவுக்கான சிறந்த நாடுகளுள் முன்னணியில் உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஃபோர்ப்ஸ் நாளிதழின்படி, 2024ஆம் ஆண்டில் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வதற்காக கிரீஸ் , மொரிஸ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உலகின் சிறந்த சுற்றுலா நாடுகளாக பெயரிடப்பட்டுள்ளன.

இதேவேளை, சுற்றுலா பயணிகளுக்காக அதிசொகுசு ரீதியிலான வசதிகள் இலங்கையில் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இலங்கை மேடு பள்ளங்களுடன் மற்றும் கண்கவர் கடற்கரைகளுடன் காணப்படக்கூடிய தீவாக உள்ளதுடன் ஒப்பீட்டளவில் பாலி நாட்டைப் போன்ற ஈர்ப்பைக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கை அழகை கண்டுகளிக்கும் விதத்தில் 22 தேசிய பூங்காக்கள் உள்ளதாகவும் ஃபோர்ப்ஸ் நாளிதழ் கூறுகிறது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது!!

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில், 29,200 சிகரெட்டுகள் அடங்கிய 146 சிகரெட் பெட்டிகளை மறைத்து வைத்திருந்த 37 வயதுடைய சீனப்பெண் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கொழும்பில் கிளப் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவரும், பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரும், மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய சாரதி ஒருவரும் சட்டவிரோதமான முறையில் 39,000 சிகரெட்டுகள் அடங்கிய 195 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை தமது பயணப் பொதிகளில் மறைத்து வைத்திருந்த போது சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 

திருமணமான நான்கே மாதங்களில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு : நடந்தது என்ன?

தமிழக மாவட்டம் சேலத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள ஓலைப்பாட்டியைச் சேர்ந்தவர் நித்யா. 21 வயதான இவர் வேறு சமூகத்தைச் சேர்ந்த தினேஷ் (23) என்பவரை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் நித்யா தனது கணவர் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தார். காலையில் எழுந்த தினேஷ் மனைவி சடலமாக தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து நித்யாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நித்யாவின் தாய் அளித்த புகாரின் பேரில் தாரமங்கலம் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் தினேஷிற்கும், நித்யாவிற்கும் இடையே கடந்த ஒரு மாதமாக தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் நித்யா இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

திருமணமான நான்கே மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

யாழில் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கைதான பெண்!!

யாழ்ப்பாணம் (Jaffna) சிவபூதராயர் கோவிலடி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக கசிப்பு மற்றும் கோடாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று (28.07) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, 80 ஆயிரம் மில்லிலீட்டர் கோடா மற்றும் 2250 மில்லிலீட்டர் கசிப்புடன் குறித்த பெண் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு தலைக்காதலால் விபரீதம் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

மகாராஷ்டிரா மாநிலம் நவிமும்பை உரண் பகுதியில் வசித்து வருபவர் 22 வயது யாஷிரி ஷிண்டே. இவர் பேலாப்பூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி விட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர் வேலை பார்க்கும் இடத்தில் விசாரித்தனர். அன்றைய தினம் இளம்பெண் முன்கூட்டியே புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். பல இடங்களில் தேடி பார்த்தும் பலனில்லை. மறுநாள் காலை தங்கள் மகள் காணாமல் போனதாக போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து யாஷிரி ஷிண்டேவை தேடி வந்தனர். ரயில் நிலையம் அருகே முட்புதரில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீசார் அங்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு ஆய்வு நடத்தினர். இதில் வயிறு, முதுகு போன்ற இடங்களில் பல கத்தி குத்து காயங்கள் இருந்ததை கண்டனர். இதனால் அப்பெண் கொலையானது உறுதி செய்யப்பட்டது. உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காணாமல் போனதாக புகார் அளித்த பெற்றோரை மருத்துவமனைக்கு வரவழைத்து அடையாளம் காண செய்தனர். இதில் அப்பெண் யாஷிரி ஷிண்டே என தெரியவந்தது. மகளின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தாவூத் சேக் என்பவர் தனது மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவர் கொலை செய்து இருக்கலாம் என இளம்பெண்ணின் தந்தை சுரேந்திர குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சாரே கூறுகையில், “சந்தேகத்தின் பேரில் தாவூத் சேக் என்ற நபரை பிடிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. கொலை செய்யப்பட்ட நாளில் யாஷிரி ஷிண்டே அரை நாள் மட்டும் வேலை செய்துள்ளார்.

அன்று பிற்பகல் 3.30 மணி முதல் 4 மணி வரையிலான நேரத்தில் கொலை சம்பவம் நடந்து இருக்கலாம். கொலைக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

கோர விபத்தில் தாய் மரணம் : உதவியின்றி தவிக்கும் பிள்ளைகள்!!

குருணாகல் பொல்பித்திகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 4 பிள்ளைகளின் தாய் உயிரிழந்தார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் மற்றும் கல்வியில் ஈடுபட்டுள்ள மேலும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 பிள்ளைகளும் தாயாரின் உழைப்பிலேயே வாழ்த்து வந்துள்ளனர். பொல்பித்திகம, பிரதேசத்தில் வசித்து வந்த 46 வயதான எச்.எச். நிரோஷா தமயந்தி, என்ற இந்த பெண், ஆடை தொழிற்சாலையில் சேவையில் ஈடுபட்டிருந்தார்.

நேற்று காலை 7.30 மணியளவில் பணிக்கு செல்லும் போது, அவர் விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இவருடன் பணிபுரிந்து வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த மற்றுமொரு பெண்ணும் ஆண் ஒருவரும் விபத்தில் படுகாயமடைந்து குருநாகல் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து பொல்பித்திகம நோக்கி சென்ற பாரவூர்தியின் சாரதி உறங்கியதால், வாகனம் வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதியது. இதனையடுத்து பிரதான வீதியை நோக்கி சென்று மூவர் மீது மோதியுள்ளது.

இதனையடுத்து, பாரவூர்தியை ஓட்டிச் சென்ற 27 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மஹவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அவிசாவளையில் நீரில் மூழ்கி சிறுவன் பலி!!

அவிசாவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாச்சிமலை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (28.07) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் பண்டாரகமை (Bandaragama) பகுதியில் வசிக்கும் 17 வயதுடைய சிறுவனொருவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த சிறுவன் தனது நண்பர்களுடன் நாச்சிமலை ஆற்றில் நீராடிக் கொண்டிருக்கும் போது சிறுவனும் அவரின் நண்பரொருவரும் திடீரென நீரில் மூழ்கியுள்ளனர்.

இதன்போது, சிறுவனின் நண்பர் பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை உயிரிழந்த சிறுவனின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

இந்திய அணியை வீழ்த்தி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை அணி!!

ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ண தொடரில் இலங்கை அணி 08 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணி நிர்ணயித்த 166 என்ற வெற்றியிலக்கை கடந்த இலங்கை அணி ஒன்பதாவது ஆசிய மகளீர் கிண்ணத்தை தன்வசப்படுத்தியுள்ளது. இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தை முதல் முறையாக வென்றுள்ளது.

ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 165 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் அந்த அணி சார்பில் Smriti Mandhana அதிகபட்சமாக 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Kavisha Dilhari 02 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் 166 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Harshitha Samarawickrama ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 69 ஓட்டங்களை பெற்றதுடன், அணித்தலைவர் Chamari Athapaththu 61 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

வவுனியா நகரசபை தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 2ஆம் இடம் பிடித்து சாதனை!!

ஸ்வர்ணபுரவர தேசிய விருது வழங்கும் நிகழ்வில் 20 விருதுகளைப் பெற்று வடக்கு மாகாணம் முதலாமிடம் பெற்றுள்ளதுடன், அதில் வவுனியா நகரசபை இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிறனை மதிப்பிடுவதற்கான ஸ்வர்ணபுரவர தேசியவிருது வழங்கும் விழாவில் பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களால் ஸ்வர்ணபுரவர தேசிய விருது வழங்கி வைக்கப்பட்டது.

நாடு முழுவதுமுள்ள 276 உள்ளுராட்சி மன்றங்களுக்கு கட்டம் கட்டமாக நடாத்தப்பட்ட சபைகளின் செயற்றிறன் மதிப்பீட்டின் அடிப்படையில் 62 விருதுகளில் வடக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்கள் 20 விருதுகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை நகரசபை முதலாமிடத்தைப் பெற்று தங்க கேடயத்தையும் பெற்றுக் கொண்டது.

வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் தேசிய கனிஸ்ட போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாமிடம்!!

கொழும்பு தியகம விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வில் வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் 3000 மீற்றர் போட்டியில் 10நிமிடம் 0 செக்கனில் ஓடி முடித்து தேசிய ரீதியில் 2ம் இடத்தினை பெற்றுள்ளார்.

முதலாம் மற்றும் மூன்றாவது இடத்தினை இரானுவ வீரர்கள் பெற்றிருந்தமையுடன் ஓர் தமிழ் விளையாட்டு வீரானாக தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தினை பெற்று சசிகுமார் டனுசன் வவுனியா மாவட்டத்திற்கு மாத்திரமின்றி வடமாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

இவ் விளையாட்டு வீரர் வடமாகாணத்தில் கடந்த 2013ம் ஆண்டு 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஒடி முடித்த சாதனையினை 11 வருடங்களின் பின்னர் 06.07.2024 அன்று இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போது,

800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஓடி சமன் செய்துள்ளமையுடன் வடமாகாணத்தில் சிறந்த சுவட்டு வீரராக சம்பியனை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா இளைஞன் தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் வரலாற்று சாதனை!!

தேசியமட்ட விளையாட்டுப் போட்டியில் வடமாகாணத்தை பிரிநிதித்துவப்படுத்தி வவுனியா வடக்கு இளைஞன் தங்கப்பதக்கம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

48வது தேசிய மட்ட விளையாட்டு போட்டி கொழும்பில் இடம்பெற்றது. இதில் குத்துச்சண்டை போட்டியில் வடமாகாணத்தை பிரதிநிதிப்படுத்தி முதன்முறையாக தங்கப்பதக்கத்தை பெற்று வவுனியா நெடுங்கேணியை சேர்ந்த முத்தையா கிரிதரன் என்ற இளைஞன் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த குத்துச்சண்டை போட்டியானது கொழும்பு டொரின்டன் உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றிருந்தது. இதில் 63.5 தொடக்கம் 67 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டே குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதேவேளை வடமாகாண தலைமை பயிறுவிப்பாளர் மு.நிக்சன் ரூபராஜ் தலைமையிலான அணியினர் ஒரு தங்கம், 02 வெள்ளி 05 வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுக்கெண்டனர்.

இதில் குறித்த பயிற்றுவிப்பாளரின் பயிற்சியின் கீழான வவுனியா மாவட்ட குத்துச்சண்டை அணியினர் 01 தங்கம் மற்றும் 03 வெண்கலப்பதக்கத்தினை பெற்றமை குறிப்பிடத்தக்கது.