புதுமணத் தம்பதி தலையை முட்டிய சர்ச்சை.. உறவினர் கைது!!

கேரளாவில்..

போலீஸார், மணப்பெண்ணான சஜ்லாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதைத் தொடர்ந்து, பெண்மையை அவமதித்ததாகவும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தொல்லை கொடுத்ததாகவும் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோட்டு பல்லச்சனா பகுதியில் திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்குச் சென்ற புதுமணப்பெண் சஜ்லாவின் தலையையும், அவரின் கணவர் சச்சினின் தலையையும், பாரம்பர்ய பழக்கம் என்ற பெயரில் ஒருவர் சேர்த்து முட்டவைத்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியது.

கடந்த திங்கள்கிழமை திருமணம் முடிந்து கணவர் வீட்டுக்குப் போனபோது, கணவரின் உறவினரான சுபாஷ் என்பவர் பின்னால் நின்றுகொண்டு, புதுமண தம்பதியின் தலைகளைப் பிடித்து ஒன்றோடு ஒன்று பலமாக மோதச் செய்தார்.

மகிழ்ச்சியாக புகுந்த வீட்டுக்குச் சென்ற சஜ்லா, தலையில் கடுமையான வலியுடன், கண்களில் கண்ணீர் பெருகிய நிலையில் நின்றார். மணமகன், மணமகளின் தலையை முட்டும் சம்பிரதாயம் கொல்லங்கோடு பகுதியில் இருந்துவருவதாகக் கூறப்பட்டது.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து மகளிர் ஆணையம் வழக்குப்பதிவு செய்தது. மேலும் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி கொல்லங்கோடு போலீஸுக்கு மகளிர் ஆணையம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

விளையாட்டாக மணமக்களின் தலையை லேசாக முட்ட வைக்கும் செயல் அந்தப் பகுதியில் நடப்பது வழக்கம் எனவும், இந்தச் சம்பவத்தில் மணமகளுக்கு வலியும், அதிருப்தியும் ஏற்பட்டதால் விவாதமானதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் போலீஸார் மணப்பெண்ணான சஜ்லாவிடம் வாக்குமூலம் பெற்றனர். அதைத் தொடர்ந்து, பெண்மையை அவமதித்ததாகவும், உடலுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் தொல்லை கொடுத்ததாகவும் சுபாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சுபாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சஜ்லா கூறுகையில், “கணவர் வீட்டுக்குச் செல்லும் சடங்கின்போது அந்த வேதனையான நிகழ்வு நடந்தது. தலையை முட்டக்கூடாது என அங்கிருந்த என் தங்கை, கணவரின் தங்கையிடம் சொல்லியிருக்கிறார். ஏற்கெனவே சொல்லி வைத்திருப்பதால் இடிக்கமாட்டார்கள் என நான் நினைத்தேன்.

ஆனால் அவர் திடீரென எங்கள் தலையை பிடித்து மோதிவிட்டார். சாதாரணமாக நான் பிறர் முன்னிலையில் அழமாட்டேன். ஆனால், அவர் தலையை பிடித்து மோதியபோது எங்கே நிற்கிறோம் என்ற உணர்வே சிறிது நேரம் இல்லாமல்போனது.

இல்லையென்றால் உடனே அவரை திட்டியிருப்பேன். இப்போதும் எனக்கு சிறிய அளவில் தலையில் வலி இருந்துகொண்டே இருக்கிறது. எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவரது உடலில் தொட்டு வலி ஏற்படுத்தினால் வருத்தமாகத்தான் இருக்கும்.

நான் சந்தோஷமாக கணவர் வீட்டுக்குள் போகவேண்டும் என நினைத்து வந்தேன். இந்தச் சம்பவத்தால் விளக்குடன் அழுதுகொண்டே புகுந்த வீட்டுக்குள் சென்றேன். அவர் இந்த சம்பவத்துக்கு வருத்தம்கூட தெரிவிக்கவில்லை.

எனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் இனி இங்கு திருமணம் ஆகிவரும் வேறு பெண்களுக்கு ஏற்படக்கூடாது” என்றார். இதுகுறித்து சஜ்லாவின் கணவர் சச்சின் கூறுகையில், “எங்கள் பகுதில் தலையை மோதும் ஒரு சடங்கு உண்டு என அவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால், நான் அப்படி எதுவும் கேள்விப்பட்டது இல்லை. லேசாக தலையை சேர்த்து வைத்துவிட்டு விட்டிருந்தால் பிரச்னை இருந்திருக்காது. தலையை பலமாக மோதியதால் வலியில் சஜ்லா அழுதுவிட்டாள்’’ என்கிறார்.

பண்ணை வீட்டில் நடந்த பயங்கரம்.. கழுத்தறுக்கப்பட்ட காதல் தம்பதி!!

திருச்சியில்..

திருச்சி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி, தோட்டத்து வீட்டில் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதல் ஜோடியை வெட்டிக்கொன்றது யார் என்பது தெரியவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் பி.மேட்டூர் ஆசாரித்தெருவில் வாழ்ந்து வந்த 29 வயது ராஜ்குமார், சோபனாபுரத்தை சேர்ந்த 20 வயதாகும் சாரதா என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். ராஜ்குமார் சாரதா தம்பதிக்கு குழந்தை இல்லை.

நெல் அறுவடை இயந்திரத்தின் டிரைவரான ராஜ்குமார்,வைக்கோல் சுற்றும் எந்திரம் வைத்துள்ளார். நெல் அறுவடை இயந்திரம், வைக்கோல் இயந்திரத்தை வைத்து பணிகளை செய்து வரும் ராஜ்குமார், சோபனாபுரம் பகுதியில் விஜயசேகரன் என்பவரது 4 ஏக்கர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயமும் செய்து வந்தார்.

விஜயசேகரனின் தோட்டத்தில் வீடு ஒன்றும் உள்ளது. ராஜ்குமார் அந்த வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த ஞாயிறு அன்று ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி சாரதா ஆகியோர் பி.மேட்டூர் பகுதியில் வைக்கோல் சுற்றும் பணிக்கு சென்று வந்துள்ளார்கள்.

வேலைக்கு சென்று வந்த பின்னர் தம்பதி இருவரும் தோட்டத்து வீட்டில் வழக்கம் போல் தூங்கினர். இந்நிலையில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் விஜயசேகரன் தோட்டத்து வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அப்போது, ராஜ்குமாரும், சாரதாவும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் உடனடியாக உப்பிலியபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரட்டை கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சில தகவல்கள் தெரியவந்துள்ளது.. ராஜ்குமாரும் சாரதாவும் தோட்டத்து வீட்டின் வராண்டாவில் கயிற்றுக்கட்டிலில் படுத்து தூங்கி உள்ளனர்.

அப்போது, அங்கு வந்த மர்ம நபர்கள் கத்தியால் அவர்களது கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடியிருக்கிறார்கள். ஆனால் கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்ற விவரங்கள் போலீசாருக்கு தெரியவரவில்லை.

இந்நிலையில் உப்பிலியபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். கொடுக்கல்-வாங்கல், முன்விரோதம், நிலப்பிரச்சினை, தொழில் போட்டி உள்ளிட்ட காரணங்களால் கொலை செய்யப்பட்டார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தோட்டத்து வீட்டுக்கு செல்லும் பிரதான சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பார்த்த போலீசார், அதில் உள்ள சந்தேக நபர்கள் யார் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்தும் தேடி வருகின்றனர். காதல் தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான்கு மாத கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொலை செய்த கணவன்!!

கடலூரில்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கர்ப்பமான மனைவி மீது சந்தேகமடைந்த கணவன், மனைவியின் கழுத்தை பிளேடால் அறுத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அருகே கீழ் அனுப்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான சிலம்பரசனுக்கும், மயிலாடுதுறை மாவட்டம் அரசூர் கிராமத்தைச் சேர்ந்த ரோஜா என்பவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருந்த ரோஜா மீது சிலம்பரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டு நாள்தோறும் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் சிலம்பரசன் வீட்டில் இருந்த பிளேடால் ரோஜாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த ரோஜா ரத்த வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கிராம மக்கள் கிள்ளை போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து சென்ற போலீசார் ரோஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ரோஜாவை கொலை செய்துவிட்டு தலைமறைவான சிலம்பரசனை தேடி பிடித்த போலீசார் விசாரணை நடத்தியதில், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் ரோஜாவுக்கு திருமணத்தில் சம்மதம் இல்லை என்றும், அடிக்கடி செல்போனில் சிலரிடம் பேசி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திருமணமான சில மாதங்களிலேயே புதுப்பெண்ணை கணவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் சிதம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோர விபத்தில் மூவருக்கு நேர்ந்த சோகம்!!

பதுளையில்..

பதுளையில் இடம்பெற்ற வீதிவிபத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதுளை கெப்பட்டிபொல பிரதான வீதியில் இன்று முற்பகல் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தேகெதரவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சிற்றூந்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மிஸ் கலிபோர்னியா பட்டத்தை வென்ற இலங்கை யுவதி!!

இலங்கையில்..

அமெரிக்க வாழ் இலங்கை யுவதியான தாலியா பீரிஸ் மிஸ் கலிபோர்னியா டீன் யு.எஸ்.ஏ 2023 (Miss Teen USA 2023) எனும் பட்டத்தை வென்றுள்ளார்.

இவருடனான சந்திப்பு தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் Julie Chung தனது டுவிட்டரில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

இன்று நான் புதிய மிஸ் கலிபோர்னியா டீன் தாலியா பீரிஸை சந்தித்தேன், கிரீடம் அணிந்த முதல் அமெரிக்க வாழ் இலங்கையர் தாலியா அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையே கலை மற்றும் அதற்கு அப்பால் உள்ள உறவுகளை உருவாக்க தனது தளத்தை பயன்படுத்துகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்துள்ள உலகின் மிகவும் ஆபத்தான பறவை!!

இலங்கையில்..

‘உலகின் மிகவும் ஆபத்தான பறவை’ என்று பெயரிடப்பட்டுள்ள இரண்டு காசோவரி பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்த பறவைகள் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து MH179 மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று முன்தினம் (05.07.2023) கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள குறித்த காசோவரி (Cassowary) பறவைகளை இன்னும் ஒரு மாதத்தின் பின்னர், பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெஹிவளை மிருக காட்சிசாலை தெரிவித்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய மற்றும் ஆபத்தை விளைவிக்க கூடிய பறவைக் கூட்டத்தில், 9 மாதமான ஆண் கெசோவரி பறவையொன்றும், இரண்டு பெண் காசோவரி பறவைகளும் உள்ளதாக தெஹிவளை மிருக காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் தினுசிக்கா மானவடு தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பறவைகள் தற்போது, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்!!

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு முள்ளியவளை – முறிப்பு பகுதியில் நேற்று (06) மாலை பாம்பு தீண்டி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் முள்ளியவளை – முறிப்பு பகுதியியை சேர்ந்த மகேந்திரன் கஜன் என்ற 27 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞனின் உயிரிழப்பானது அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வவுனியாவில் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தில் நாய்க்கு இரத்தப் பரிசோதனை!!

வவுனியாவிலல் தனியார் மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்றில் நாய்க்கு குருதி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை நிலைய உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளதாக வடமாகாண சுகாதாரப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

குறித்த தனியார் மருத்துவ பரிசோதனை நிலையத்தை தனது வைத்திய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் நபர் ஒருவர் குறித்த வைத்தியசாலையில் நாய்க்கு இரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,

ஆதாரத்துடன் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ஆகியோருக்கு முறைப்பாடு செய்திருந்தார்.

விலங்களுக்கு என தனியான வைத்தியர்கள் மற்றும் வைத்திய பரிசோதனை நிலையம் உள்ள போதும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் மருத்து நிலையம் ஒன்று இவ்வாறு நடந்து கொண்டமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக முறைப்பாட்டாளர் தெரிவித்திருந்ததுடன், குறித்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் எழுத்து மூலம் பதில் வழங்கிய வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், குறித்த முறைப்பாடு தொடர்பாக எமது பணிமனையினால் ஆய்வுகூட உரிமையாளரிடம் விளக்கம் கோரி கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. அவரினால் எமக்கு பதில் கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது.

அத்துடன் அக் கடிதத்தில் தான் இனிமேல் அத்தகைய தவறை புரியமாட்டேன் என மன்னிப்பும் கோரியுள்ளார் என தங்களுக்கு அறியத் தருகின்றேன் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண சுகதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி வழங்கிய எழுத்துமூல பதிலில்,

குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் அவர்களால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வு கூட உரிமையாளர் மன்னிப்பு கோரியுள்ளதுடன், தவறு இனிவரும் காலங்களில் இடம்பெறாது என கடிதம் மூலம் அறிவித்துள்ளார் என்பதை தங்களுக்கு அறியத் தருகின்றேன் என முறைப்பாட்டாளருக்கு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் பாடசாலை மாணவனுக்கு நேர்ந்த சோகம்.. நீதி மன்றம் விடுத்த உத்தரவு!!

கிளிநொச்சியில்..

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.கிளிநொச்சி, பளை முல்லையடி பகுதியில் (05-07-2023) இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துவிச்சக்கர வண்டியில் வீதியை கடப்பதற்காக காத்திருந்த சிறுவனை வேகமாக வந்த கப்ரக வாகனம் மோதி தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய சாரதியை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்தில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்போது விபத்தை ஏற்படுத்திய சாரதி விபத்து நடந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற நிலையில் நேற்றைய தினம் பளைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆரம்பகட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி சுபராஜினி முன்னிலையில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதை அடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிடபட்டுள்ளது.

தாயுடன் நேரலையில் பேசியபடி தற்கொலை செய்து கொண்ட மகன் : அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில்..

தமிழகத்தின் கோவில்பட்டி அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த ராணுவ வீரர் தாயுடன் செல்போனில் பேசும் போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே உள்ள கீழக்கரந்தை கிராமத்தைச் சேர்ந்த வேலுப்பிள்ளை என்பவரது மகன் மணித்துரை, 2015 ஆம் ஆண்டில் இருந்து ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

ஜம்மு காஷ்மீரில் பணியாற்றிய மணித்துரை, கடந்த 1 ஆம் தேதி தன் பணியின் போது துப்பாக்கியை வைத்து தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உதயசுருதி என்பவருடன் திருமணம் ஆனது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்ச கணக்கில் பணத்தை இழந்த மணித்துரை தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி செய்தி வெளியானது.

மணித்துரை தற்கொலை செய்து கொள்ளும் முன்பு கீழக்கரந்தையில் இருக்கக்கூடிய தனது தாய் கனக வேலம்மாளை செல்போனில் அழைத்து, தான் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்ததாகவும், பலரிடம் கடன் வாங்கியுள்ளதாகவும், ஊருக்கு வரவே விருப்பம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘இனி வாழ விரும்பவில்லை, 2 முறை துப்பாக்கி சத்தம் கேட்டதும் தான் இறந்து விட்டதாக நினைத்துக் கொள், அதுவரை பேசு அம்மா’ எனக் கூறியுள்ளார். பின்பு, துப்பாக்கி சத்தம் கேட்டதும் தாய் கனக வேலம்மாள் கதறி அழுதுள்ளார்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. மணித்துரை கடந்த 1 ஆம் தேதி ஊருக்கு வரவிருந்த நிலையில், அவருடைய உடல் மட்டுமே வந்துள்ளது என உறவினர்கள் கதறி அழுதனர்.

மணித்துரையின் தந்தை கடந்த 3 மாதங்களுக்கு மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது மகனும் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் இந்திய இளம் பெண் உயிருடன் புதைக்கப்பட்டு கொடூர கொலை!!

அவுஸ்திரேலியாவில்..

அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு பகுதியில் முன்னாள் காதலியை கடத்திச் சென்று, உயிருடன் புதைத்து, அவர் மரணத்திற்கு காரணமான இந்திய வம்சாவளி இளைஞர் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

அடிலெய்டு நகரின் வடக்கு பிளம்டன் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார் 21 வயதான ஜாஸ்மீன் கவுர். இந்த நிலையில் 2021 மார்ச் மாதம் அந்த முதியோர் காப்பகத்தில் இருந்து ஜாஸ்மீன் கவுர் கடத்தப்பட்டார்.

இதே ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் காதலனால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பொலிசாருக்கு புகார் ஒன்றையும் அளித்திருந்தார் கவுர். இதனையடுத்து பிப்ரவரி 9ம் திகதி பொலிசார் 21 வயதான தாரிஜ்கோட் சிங் என்பரை எச்சரித்து அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் தான் மார்ச் மாதம் 5ம் திகதி ஜாஸ்மீன் கவுர் மாயமானதை அடுத்து, பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், தாரிஜ்கோட் சிங் மீது சந்தேகம் எழுந்தது. ஜாஸ்மீன் கவுரை கடத்தி சென்ற சிங், அவரது கை, கால்களை பிணைத்து மார்ச் 5ம் திகதி இரவு உயிருடன் புதைத்துள்ளார்.

பொலிசார் முன்னெடுத்த தீவிர சோதனையை அடுத்து, அவரது சடலம் மீட்கப்பட்டது. கைகள் கட்டப்பட்டு, கண்கள் மூடப்பட்ட நிலையில், ஜாஸ்மீன் கவுர் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து தாரிஜ்கோட் சிங் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதில் ஜாஸ்மீன் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என மறுத்துள்ளார். ஆனால், தீவிர விசாரணைக்கு பின்னர் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். தமது காதலை முறித்துக் கொண்ட ஆத்திரத்தால் கொலை செய்ததாகவும், அவரை துன்புறுத்த எந்த எண்ணமும் இல்லை என்பதால், உயிருடன் புதைத்ததாக தாரிஜ்கோட் சிங் நீதிமன்ற விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவ சோதனையில், உயிருடன் புதைக்கப்பட்டதால், கவுர் மூச்சை இழுத்த போது அவரது சுவாசத்தில் மண் கலந்து மூச்சுக்குழாயை அடைத்துள்ளது என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே, ஜாஸ்மீன் கவுர் மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்துள்ள நிலையில், தாரிஜ்கோட் சிங் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கலாம் என்றே கூறப்படுகிறது.

காதலனுடன் விடுதியில் தங்கிய 22 வயது இளம் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!!

இரத்தினபுரியில்..

தனது காதலனுடன் விடுதியில் தங்குவதற்காகச் சென்ற 22 வயதான பிரதீபா மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை (05) பகிரங்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி – இறக்குவானை, மாதம்பை பகுதியில் ஹோட்டல் அறையொன்றில் தூக்கில் தொங்கிய சடலமாக மீட்கப்பட்ட யுவதி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் பிரதீபாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தபோதும், யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக அவரது காதலன் கூறியுள்ளார்.

இதனையடுத்து, கஹவத்தை சட்ட வைத்திய அதிகாரி எம்.டி.எம்.எஸ்.கே. திஸாநாயக்க நேற்றைய தினம் தனது தீர்மானத்தை பகிரங்கமாக தெரிவித்து யுவதியின் உடலுறுப்புகள் மேலதிக பரிசோதனைக்கு கஹவத்தை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றது.

இறக்குவானையைச் சேர்ந்த என்ற இந்த யுவதியின் மர்ம மரணம் தொடர்பில் இறக்குவானை பதில் நீதிவான் சரத் விஜயகுணவர்தனவின் உத்தரவில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

உயிரிழந்த யுவதி, கடந்த 4 ஆம் திகதி பகல் மாதம்பே பனாவல வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றுக்கு தனது காதலனான இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியுடன் சென்று அறையொன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த நிலையில் உயிரிழந்தமை குறிப்பிடத்த்க்கது.

கோர விபத்தில் பரிதாபமாக பலியான இளம் தம்பதி!!

குருநாகலில்..

குருநாகலில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தம்பதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்து இன்றைய தினம் (06.07.2023) குருநாகல் – தம்புள்ளை பிரதான வீதியின் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகின்றது.

குறித்த விபத்தில் 34 வயதுடைய சி.பி அமில புஷ்பசிறி என்பவரும், 33 வயதுடைய அவரது மனைவி சதுராணி நிசன்சலா குமாரி ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படகமுவ காப்புப் பகுதியில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மீது லொறி மோதியதில் இளம் தம்பதிகள் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் கட்டுவன மகிந்த கல்லூரியில் ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் தமது ஒரே மகளை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற போதே தம்பதியினர் இந்த விபத்திற்குள்ளாகியுள்ளனர்.

மேலும் விசாரனையில், மழை பெய்து கொண்டிருந்தபோது, வேகமாக வந்த லொறி, வேகக்கட்டுப்பட்டை இழந்து வீதியில் வந்த திசைக்கு திரும்பிய போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்த புஷ்பசிறிகே இலங்கை கடற்படைக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் சமையல்காரராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்தியவர்களின் மோசமான செயல்.. காயமடைந்த இளம் தந்தைக்கு நேர்ந்த சோகம்!!

அஷான் மதுஷன்..

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் புலிச்சாகுளம் பகுதியில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

கடந்த 28ஆம் திகதி இரவு 10.30 மணியளவில் புத்தளம் கொழும்பு பிரதான வீதியில் வேன் மோதியதில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதியை விபத்து இடம்பெற்ற அதே வேனில் ஏற்றிச் சென்றதாகவும் வேண்டுமென்றே மருத்துவமனைக்கு அழைத்து செல்வதனை தாமதப்படுத்தியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதான அஷான் மதுஷன் மெண்டிஸ் என்பவரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார். அம்புலன்ஸ் வண்டியை கொண்டு வந்து மதுஷானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பிரதேசவாசிகள் முயற்சித்தனர். இருந்த போது வேனில் இருந்தவர்கள் அவரை அதே வேனில் ஏற்றி வைத்தியசாலைக்கு செல்வதாக கூறி புத்தளம் நோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து சுமார் 2 கிலோமீற்றர் தொலைவில் உள்ள முந்தலம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்குப் பதிலாக, விபத்து இடம்பெற்று சுமார் 3 மணித்தியாலங்களின் பின்னர் சுமார் 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுஷனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றவர்கள், படுகாயமடைந்து வீதியில் வீழ்ந்த கிடந்தவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

எனினும் அதிக இரத்தப்போக்கு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மதுஷனின் வலது கால் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த முந்தலம பொலிஸார், விபத்து நடந்த இடத்தில் விழுந்த வேனின் உரிமையாளரை இலக்கத் தகடு மூலம் அடையாளம் கண்டுள்ளனர்.

சில காலங்களுக்கு முன்னர் வேனை வேறு ஒருவருக்கு விற்றதாகவும், ஆனால் அது இதுவரை தனது பெயருக்கு மாற்றப்படவில்லை எனவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, வாகனத்தை கொள்வனவு செய்த நபரையும், வேனின் சாரதியையும், விபத்தின் போது அங்கிருந்த மேலும் இருவரையும், வேனையும் பொலிஸார் கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர்.

சந்தேகநபர்கள் மூவரையும் பொலிஸாரிடம் அழைத்துச் சென்றபோது மதுஷனின் உறவினர்களும் ஏனையோரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விபத்தில் சிக்கிய மதுஷனை வேனில் ஏற்றிக்கொண்டு, வழியில் நிறுத்தி முச்சக்கரவண்டி ஒன்றைக் கொண்டு வந்து வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதாகக் கூறப்பட்டது.

விபத்தில் படுகாயமடைந்த மதுஷனை சுமார் 3 மணித்தியாலங்கள் விபத்துக்குள்ளான வேனுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் வேனை மன்னாருக்கு எடுத்துச் சென்று மறைத்ததாகவும் சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வேன் சாரதி, உரிமையாளர் மற்றும் மற்றுமொரு சந்தேக நபரை எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் பதில் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் : விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!!

கட்டுநாயக்காவில்..

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 4 பொதிகளை உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இது குறித்த முதல் செய்தி வெளியானதும், ‘கோல்டன் ஜெல்’ என்ற பொருளை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என பலரும் கூறியுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய தீர்வை வரியற்ற வர்த்தக நிலையத்திலுள்ள 24 வயதுடைய பெண்ணின் கைகளுக்கு இது எவ்வாறு வந்ததென ஆராயப்பட்டது.

இந்த நிலையில் சில கடத்தல்காரர்கள் விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுடன் தொடர்புபட்டு மோசடியான முறையில் இவற்றினை கடத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.

விமானம் மூலம் நாட்டுக்கு வருபவர்கள் கொண்டு வரும் பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல விமான நிலைய ஊழியர்கள் உதவுகிறார்கள் என்றால் அது மிகவும் ஆபத்தான நிலைமை என கூறப்படுகின்றது.

அங்கு பணியாற்றும் ஊழியர்கள் என்ற நம்பிக்கையில் பணியாளர்கள் பெரிய அளவில் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. இதனை தங்களுக்கு சாதகமாக கடத்தல்காரர்கள் பயன்படுத்திக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான பொருட்களை எடுத்துச் செல்வார்களா என்பதை பாதுகாப்புப் படையினர் ஆர்வத்துடன் சரிபார்க்கும் அரிதான சந்தர்ப்பங்களும் உள்ளன. அதற்கமைய, இந்த ஊழியர் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது தங்க ஜெல் கரைசல் பொட்டலங்களை மறைத்து வைத்து எடுத்து செல்ல முயற்சித்துள்ளார்.

எனினும் அவர் ஒழுங்கற்ற முறையில் நடப்பதாக சிசிடிவி கண்காணிப்பில் காட்டிய சந்தேகத்தின் அடிப்படையில், இந்த பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஜெல் கரைசல் அடங்கிய 4 பொட்டலங்கள் மேலதிக விசாரணைக்காக தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, தங்க ஜெல் குறித்து விசாரணை நடத்தும் போது, ​​தற்போது கடத்தல்காரர்கள் தங்கத்தை ஜெல் வடிவில் தயாரித்து சட்டவிரோதமாக கடத்துவதாக தெரியவந்துள்ளது.

ஜெல்லை மீண்டும் தங்கமாக மாற்றும் தொழில்நுட்பம் இந்தியாவில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாக சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

காதலனுடன் விடுதி அறைக்கு சென்ற யுவதி மர்மமாக உயிரிழப்பு : வைத்திய அறிக்கையில் வெளியான தகவல்!!

இரத்தினபுரியில்..

இரத்தினபுரி – இறக்குவானை, மாதம்பை பகுதியில் ஹோட்டல் அறையொன்றில் தூக்கில் தொங்கிய சடலமாக மீட்கப்பட்ட யுவதி, தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சடலம் மீதான நீதவான் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறக்குவானை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாதம்பை பகுதியிலுள்ள விடுதி அறை ஒன்றுக்கு இளைஞனும், குறித்த யுவதியும் சென்ற நிலையில் இளைஞன் வெளியில் சென்று மீண்டும் விடுதி அறைக்கு திரும்பிய நிலையில், அறை உள்பக்கமாக மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து கதவை திறக்க இளைஞன் முயற்சித்த போதும், அறையை திறக்க முடியாமையினால் விடுதி நிர்வாகத்திற்கு அறிவித்து விடுதி ஊழியர் ஒருவரின் உதவியுடன் யன்னல் வழியாக பார்த்த போது, யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, யன்னல் வழியாக உள்ளே சென்ற இளைஞன், யுவதியை மீட்டு கஹவத்தை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், யுவதி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

இதையடுத்து, வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக தமது பொறுப்பில் எடுக்கப்பட்ட 23 வயதான இளைஞன் மற்றும் ஹோட்டலில் பணிப் புரிந்த பெண் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

உடற் கூற்று பரிசோதனைகளுக்காக உடல் பாகங்கள் இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும், முழுமையான விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னரே, உயிரிழப்புக்கான காரணத்தை வெளிப்படுத்த முடியும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.