தோழியைக் கொன்று காட்டுக்குள் உடலை வீசி சென்ற இளைஞர்!!

பணப்பிரச்சனையில் தோழியைக் கொலைச் செய்து, உடலை காட்டுக்குள் வீசி சென்ற இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மஸ்தலா சங்கத்தின் சேவைப் பிரதிநிதி பூஜா காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில்,காட்டில் இளம்பெண் பூஜாவின் சடலத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி வட்டத்தில் உள்ள அகும்பை கிராமத்தைச் சேர்ந்தவர் குஷால். இவரது மகன் பூஜா(24). இவர் தர்மஸ்தலா சங்கத்தின் சேவை பிரதிநியாக செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதி வேலைக்குச் சென்ற பூஜா திடீரென காணாமல் போனார். அவர் வீடு திரும்பாததால், பூஜாவின் தந்தை குஷால், அகும்பே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பூஜாவை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அகும்பே வனப்பகுதியில் பூஜாவின் உடல் போலீஸாரால் கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது பூஜா கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து பூஜாவின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது நாலூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் அடிக்கடி செல்போனில் பேசியது தெரிய வந்தது.இதையடுத்து போலீஸார், மணிகண்டனை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது பூஜாவும், அவரும் நீண்ட நாள் நண்பர்கள் என்றும், பணப்பிரச்சினையில் பூஜாவை மணிகண்டன் கொலை செய்து உடலை வனப்பகுதியில் வீசியதும் தெரிய வந்தது. இதையடுத்து மணிகண்டனை போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர்.

தண்ணீர் தொட்டியில் மனைவி 2 குழந்தைகள் உடல் மீட்பு – கணவன் கைது!!

கோவை மாவட்டம் ஒண்டிபுதூரை அடுத்த நெசவாளர் காலனியில் வசித்து வருபவர் தங்கராஜ். இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஹரிணி மற்றும் ஷிவானி என்கிற 2 பெண் குழந்தைகளும் உண்டு.

உள்ளூரில் பெயிண்டர் வேலைக்கு செல்லும் தங்கராஜ், கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் மதுபோதைக்கு அடிமையான இவர், வீட்டில் நாள்தோறும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் வீட்டு வேலைக்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்தார் புஷ்பா. ஆனால் மனைவியிடம் இருந்த 100, 200 ரூபாயைக் கூட விட்டு வைக்காமல் பறித்துக் கொண்டு மது அருந்தி, வீட்டில் தகராறு செய்வது வழக்கம்.

இந்நிலையில் ஜூலை 8-ம் தேதியன்று காலையில் புஷ்பாவும், அவரது 9 வயது மற்றும் 3 வயது குழந்தைகளும் வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதப்பதாக அப்பகுதியில் தகவல்கள் பரவியது.

இதையடுத்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் நேரில் சென்று பார்த்தபோது, அதில் புஷ்பா மற்றும் 2 குழந்தைகளின் உயிரற்ற உடல்கள் கிடந்தன.

இதனை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.

இதில் மனைவி, குழந்தைகள் உயிரிழந்த நிலையிலும், காலையிலேயே மது அருந்திய தங்கராஜ், தள்ளாடிக் கொண்டிருந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில், முந்தைய நாள் இரவில் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், வந்த ஆத்திரத்தில் மனைவியை சரமாரியாக தாக்கியதாக கூறினார்.

இதன் காரணமாக விரக்தியடைந்த புஷ்பா, குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்தது.

குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பில் இருந்து விலகி, மதுவுக்கு அடிமையானவரால் இளம்பெண், தன் பிள்ளைகளுடன் உயிரை மாய்த்த இந்த சம்பவம் ஒண்டிப்புதூர் பகுதி மக்களை ஓலமிடச் செய்துள்ளது.

கனடாவில் திருடப்பட்ட 400 கிலோ தங்கக் கட்டிகள் : சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார்!!

கனடா(Canada) ரொறன்ரோ நகரத்தில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த ஆண்டு திருடப்பட்ட 20 மில்லியன் கனேடிய டொலர் பெறுமதியான 400 கிலோ தங்கம் இந்தியா மற்றும் டுபாய்க்கு கடத்தப்பட்டிருக்கலாம் என கனேடிய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி பியர்சன் விமான நிலையத்தில் உள்ள கனடா சரக்கு டெர்மினலில் இருந்து 6,600 தங்கக் கட்டிகள் திருடப்பட்டன. 3 நாட்களுக்கு பிறகு தங்கம் திருடப்பட்டது பொலிஸாருக்கு தெரியவந்தது.

 

400 கிலோ எடையுள்ள இந்தத் தங்கக் கட்டிககளின் விலை இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.450 கோடியாகவுள்ள நிலையில் திருடப்பட்ட தங்க கட்டிகள் இன்று வரை மீட்கப்படவில்லை.

இந்தத் தங்கம் இந்தியா மற்றும் துபாய்க்கு வந்திருக்கலாம் எனவும், நெட்ஃபிளிக்ஸின் கிரைம் சீரிஸ் பாணியில் இந்த திருட்டு நடந்ததாகவும் கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த திருட்டுக்கு போலி சீட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 3 பேரும் உள்ளதாகவும், இது வரலாற்றில் மிகப்பாரிய திருட்டு என்று பொலிஸார் விவரித்துள்ளனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்து தகவல் அளித்த பொலிஸார், விமான நிறுவன ஊழியர்கள் இருவரின் உதவியுடன் இந்த திருட்டு நடந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இதன் போது திருடப்பட்ட தங்கத்தை உருக்கி தங்க வளையல்கள் தயாரிக்கப்பட்டு பின்னர் விற்பனை செய்யப்படுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த தன்வந்தை பாராட்டிய ஜனாதிபதி!!

பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த 13 வயதான திருகோணமலையை சேர்ந்த ஹரிகரன் தன்வந்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் சந்தித்து பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் இச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மார்ச் மாதம் 1ம் திகதி பாக்கு நீரினையை கடந்து சாதனை படைத்த மாணவனை ஜனாதிபதி இவ்வாறு பாராட்டியதுடன், கடலில் நீந்திய அனுபவங்களையும் கேட்டறிந்து கொண்டதாக அவரது தந்தை தெரிவித்தார்.

இச் சந்திப்பில் தன்வந்தின் தாய் தந்தையரும் கலந்து கொண்டனர்.

 

திருகோணமலை கிணறு ஒன்றில் படுகொலை சம்பவம் : பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!!

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியின் காதலனான பிரதான சந்தேக நபர் மூதூர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை நாளை செவ்வாய்கிழமை வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை ஆறு சந்தேக நபர்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை மூதூர் நீதிவானின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த பிரதான சந்தேக நபரான படுகொலை செய்யப்பட்ட யுவதியின் காதலன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை குறித்த யுவதியின் காதலன், காலனின் தந்தை, சகோதரி அவரது வீட்டில் வேலை செய்தவர், உட்பட JCB வாகன சாரதி இருவருமாக ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது-25) என்ற யுவதி காணாமல் போயிருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (6) பாழடைந்த கிணறு ஒன்றில் கல்லோடு கட்டி போட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இதன்போது அவருடைய ஆவணங்கள் அடங்கிய கைப்பை, உடைந்த தலைக்கவசம் என்பனவும் மீட்கப்பட்டிருந்தன. குறித்த யுவவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது தலைப்பகுதி தாக்கப்பட்டு மண்டையோடு உடைந்திருந்ததாகவும், தலையின் பிற்பகுதியில் பாரிய துளை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் காதலனின் வீட்டில் இருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தியிருக்கலாம், என்ற சந்தேகத்தில் இரும்புக்குழாய் உட்பட சில சான்றுப் பொருட்களையும் மீட்டுள்ளனர்.

 

கொழும்பு துப்பாக்கிச் சூடு : கால் துண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட்ட பாடகி சுஜீவா!!

கொழும்பு அத்துருகிரிய பிரதேசத்தில் இன்று (08) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பிரபல பாடகி கே. சுஜீவா படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் 2 மணியளவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர்கள், இரத்தக் குழாய் சத்திர சிகிச்சை நிபுணர்கள், எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பொது சத்திரசி கிச்சை நிபுணர்கள் ஆகிய 4 குழுக்கள் இந்த சத்திர சிகிச்சையில் பங்குபற்றியுள்ளனர்.

தற்போது பாடகி கே. சுஜீவா நலமாக இருப்பதாகவும், கால் துண்டிக்கப்படாமல் காப்பாற்ற முடிந்தது என்றும் கூறினார். பாடகி கே. சுஜீவா மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவர் என்பதோடு, பிரபல பாடகர் மகிந்த குமாரின் சகோதரியும் ஆவார்.

இவர் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பல பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் பதவியேற்பு!!

வவுனியா பல்கலைக்கழகத்தின் இரண்டாவது துணைவேந்தராக பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா பதவியேற்றுள்ளார். அவர் நேற்று (08.07.2024) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகத்தின் பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் உட்பட பல்கலைக்கழக கல்வி சார் உத்தியோகத்தர்கள் புடைசூழல் மங்கள வாத்திய இசையோடு அழைத்துவரப்பட்ட புதிய துணைவேந்தர், ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட நியமனக் கடிதத்தினை கையொப்பமிட்டு பெற்றுக் கொண்டிருந்தார்.

நடராஜா ராஜவிசாகன்

அத்துடன், வவுனியா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடராஜா ராஜவிசாகன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.மோகனதாஸ், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரன் உட்பட பீடாதிபதிகள் விரிவுரையாளர்கள் கல்வி சார்ந்த ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய 15 வயது பாடசாலை மாணவன்!!

புத்தளம்(Puttalam) – மஹகும்புக்கடலை, இலக்கம் 4 கிவுல பிரதேசத்தில் நான்கு வயதுடைய சிறுவனின் உயிரை 15 வயது பாடசாலை மாணவனொருவன் காப்பாற்றியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (08.07.2024) இடம்பெற்றுள்ளது.

புத்தளம், மஹகும்புக்கடலை பிரதேசத்தில், அயல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனொருவன் தனது வீட்டுக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற நிலையில், தவறுதலாக 36 அடிக்கு மேல் ஆழமுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்துள்ளார்.

இதன்போது, கிணற்றில் விழுந்த சிறுவன் கூச்சலிட்டதையடுத்து, சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளமையயை அறிந்து கொண்ட 15 வயதுடைய மாணவன் உடனடியாக கிணற்றில் குதித்து சிறுவனை காப்பாற்றியுள்ளார்.

புத்தளம், மஹகும்புக்கடலை, இலக்கம் 4 கிவுல கிராமத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய ஆகாஷ் நெதுமின என்ற சிறுவனே கிணற்றில் விழுந்துள்ளதுடன் சசிந்து நிம்சர என்ற 15 வயதுடைய பாடசாலை மாணவனே உயிரை காப்பாற்றியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உயிரை காப்பாற்றிய மாணவன் கூறுகையில், “தம்பிக்கு நான் சாப்பாடு ஊட்டிக் கொண்டு இருந்தேன். அவர் சாப்பிட்டு விட்டு வீட்டுக்குச் செல்வதாய் கூறி விட்டு சென்றார்.

நான் சமையல் அறைக்குச் சென்று கோப்பையை கழுவி விட்டு வெளியே வரும் போது, சசிந்து அண்ணா என்று சத்தம் கேட்டது. நான் உடனடியாக கிணறு இருக்கும் பக்கத்திற்கு சென்று பார்த்தேன்.

அப்பொழுது தம்பி கிணற்றில் மூழ்குவதை கண்டு, உடனடியாக கிணற்றில் குதித்தேன். பின் மேலே வந்த தம்பியை பிடித்துக் கொண்டு அருகில் இருந்து மோட்டாருக்கான குழாயை பிடித்துக் கொண்டவாறு சத்தமாக கத்தி உதவி கோரினேன்.

பின்னர் தம்பியின் அம்மாவும் ஏனையோரும் வந்து எங்களை காப்பாற்றினர்.” என அவர் தெரிவித்துள்ளார்.

அழகு நிலைய திறப்பு விழா துப்பாக்கிச்சூட்டில் மேலுமொருவர் உயிரிழப்பு!!

கொழும்பு அதுருகிரிய நகரில் அழகு நிலையம் திறப்பு விழாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (08.07.2024) காலை பத்து மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த என்பவர் கொல்லப்பட்டார்.

அத்துடன் துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் காயமடைந்த நிலையில் அவர்களில் ஒருவர் பிரபல பாடகி கே சுஜீவா. அதுருகிரியவில் மணிக்கூண்டு கால்வாய்க்கு அருகில் உள்ள அழகு நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 6 பேர் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர். கிளப் வசந்த அங்கு உயிர் இழந்த நிலையில் காயமடைந்த மேலும் ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் வந்த வாகனம் என கூறப்படும் வாகனம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூளையை தின்னும் அமீபா நோய்க்கு மூவர் பலியான சோகம்!!

இந்தியாவின் கேரளாவில் மூளையை தின்னும் அமீபா நோய் தொற்றுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் நீர்நிலைகளின் சுகாதாரத்தை உறுதி செய்ய என உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் எழுதிய கடிதத்தில்,

தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.

அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையை தின்னும் நோய் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை அமீபா நோயின் அறிகுறிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேவையிலிருந்து விலகுவேன் : யாழ் சாவகச்சேரி வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் மருத்துவர் அர்ச்சுனா!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரி மருத்துவர் அருச்சுனா இராமநாதன் சாவகச்சேரி வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளார்.

நாடாளுடன்றத்திற்கு பேச்சுக்கு வருமாறு கூறியதை அடுத்து அவர் மருத்துமனையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுகின்றது.

யாழ் சாவகச்சேரி வைத்தியசாலை வைத்திய அதியட்சகர் அருச்சுனா- இராமநாதனை இடமாற்றம் செய்ய மருத்துவ மாபியாக்கள் முயல்வதாக தெரிவித்து, தென்மராட்சி மக்கள் இன்று பெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந் நிலையில், போராட்டக்காரர்கள் 5 பேரை மருத்துவமனை தங்கும் விடுதிக்கு அழைத்து பேச்சு நடத்திய போதே இதனை தெரிவித்தார்.

மருத்துவமனை சிக்கலை சுமுகமாக தீர்க்க பொலிசார் தீவிர முயற்சியெடுத்த நிலையில், வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.

தன்னை கொழும்புக்கு அழைத்துள்ளதாகவும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பதில் அத்தியட்சகராக மீண்டும் நியமித்தால், மீண்டும் அதை பொறுப்பேற்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

அவ்வாறு , இல்லையெனில் மருத்துவ சேவையிலிருந்து விலகி வெளிநாடு செல்வதை பற்றி யோசிப்பதாகவும் மருத்துவர் அருச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யாழ்ப்பாணம் சாவகச்சேரி மருத்துவ அதிகாரியாக கடந்தமாதம் கடமையேற்ற மருத்துவர் அருச்சுனா இராமநாதன் , வைத்தியசாலையில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தியதுடன், அங்கு இடம்பெற்ற முறைகேடுகளையும் அம்பலப்படுத்தியிருந்தார்.

இதை அடுத்து அங்குள்ள மருத்துவர்கள் போர்க்கொடி உயர்த்தியதுடன், 4 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மருத்துவரை வெளியேற்ற பல சதிகள் இடம்பெற்றதுடன், நேற்றிரவு அவரை கைது செய்ய பொலிஸார் முறபட்டபோது தென்மராட்சி மக்கள் மருத்துவருக்கு ஆதரவாக திரண்டு அதனை தடுத்ததுடன், இன்றும் போராட்டத்தை முன்னெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியில்லா கடன்!!

கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கற்கைநெறிகளை தொடர்வதற்கான செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கற்கைநெறிகளை தொடர்வதற்கு வட்டியில்லா கடன் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

உயர்தரத்தில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களுக்கு நுழைவதற்கு வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்காக இந்த வட்டியில்லாக் கடன் திட்டம், 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதில் அதிகபட்சமாக 08 இலட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அமைச்சு விளக்கமளித்துள்ளது.

முன்னதாக கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட 17 அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் 100 பட்டப்படிப்புகளை கற்பதற்கு ஏழு மாணவர் குழுக்களின் கீழ் உள்ள 17,313 மாணவர்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், 2022 ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்கள் இந்தக் கடன் திட்டத்தின் எட்டாவது தொகுதியாக உள்வாங்கப்படவுள்ளதுடன், அது தொடர்பில் அரச சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் வழங்கப்படவுள்ள உத்தேச கற்கைநெறிகள் தொடர்பான முன்மொழிவுகள் தற்போது அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும், தெரிவித்துள்ளது.

 

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு – இருவர் பலி : கோடீஸ்வரரின் மனைவி தொடர்பான தகவல்!!

அத்துருகிரியில் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் மனைவியும் காயமடைந்துள்ளார்.

அவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது குறித்த இடத்தில் அவரது மனைவியும் இருந்துள்ளார்.

காயமடைந்த பெண்ணுக்கு தற்போது சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் குறிப்பிட்டார்.

புதிய இணைப்பு : அதுருகிரிய துப்பாக்கிச் சூட்டுக்கு வந்ததாகச் சந்தேகிக்கப்படும் கார் கடுவெல, கொரதொட்ட பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று (08) காலை 10 மணி அளவில் அதுருகிரிய நகரில் மணிக்கூண்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அழகுகலை நிலைய திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான 55 வயதான சுரேந்திர வசந்த பெரேரா என்ற ‘கிளப் வசந்த’ மற்றும் 38 வயதுடைய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் கொழும்பு 7 மற்றும் அதுருகிரிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா உட்பட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பாடகி கே.சுஜீவா உட்பட மேலும் நான்கு பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முதல் இணைப்பு

கொழும்பின் புறநகர் பகுதியான அதுருகிரிய நகரில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடத்தப்பட்டமையினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

படுகாயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களில் பிரபல சிங்கள பாடகி கே. சுஜீவா என்பவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர் ஆபத்தான நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டில் பிரபல கோடிஸ்வரரும் கிளப் உரிமையாளர் கிளப் வசந்தா உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம், அதனை மேற்கொண்டவர்கள் தொடர்பான தகவல்களை இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூமியின் சுழற்சியில் மாற்றம் : விஞ்ஞானிகளின் அதிர்ச்சித் தகவல்!!

பூமியின் மையமானது எதிர்புறமாக சுற்றத்தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த ஜூன் 12 ஆம் திகதி வெளியான ஆய்வு இதழின் கட்டுரை ஒன்றிலேயே இது உறுதி செய்யப்பட்டுள்ளது

Crust, mantle, வெளிப்புற மையம் மற்றும் உள்புற மையம் ஆகிய 4 அடுக்குகளாக பூமி அமைத்துள்ளது.

உலகம் அதன் சுழற்றிச் பாதையில் சுற்றும் வேலையில் பூமியின் மையத்தில் உள்ள திடமான மெட்டல் மற்றும் நிக்கல் உலோகங்களால் ஆன INNER CORE என அழைக்கப்படும் பந்து போன்ற அமைப்பு தனிச்சையாக சுற்றி வருகிறது.

நிலவில் அளவில் 70 சதவீதம் உள்ள இந்த உட்புற மைய உலோக பந்தின் சுழற்சி குறித்து கடந்த நூற்றாண்டு முதலே விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பூமியின் மைய உலோக கோளத்தின் சுழற்சியில் சமீப காலங்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுழற்சி மட்டுமின்றி இந்த மையப் பகுதியின் சுழற்சி வேகத்திலும் மாறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர் வெவ்வேறு கால கட்டங்களிலிலும் தற்போதும் பூமியில் உள்ள கடல் அலைகள் வீசுகின்ற தன்மைகளையும், பூமியில் ஏற்பட்ட பெரிய அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் தரவுகளையும் கணக்கிட்டு பூமி அடுக்கில் உள்ள மையப்பகுதி எதிர்புறமாக சுழலழத் தொடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

தலைமன்னார் பிரதான வீதி விபத்தில் சிக்கி உயிரிழந்த அருட்தந்தை!!

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட் பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின் உதவி இயக்குனருமான அருட்தந்தை கே.ஜொனார்த்தனன் அடிகளார் (வயது 31) உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது நேற்று (07.07.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

தலைமன்னார் ஆலயத்தில் மாலை நேர திருப்பலியை ஒப்புக் கொடுத்த நிலையில் மீண்டும் தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மாலை 6.50 மணியளவில் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

இதன் போது படுகாயமடைந்த அருட்தந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டால் பணவீக்கம் உயரும் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

அரசாங்க ஊழியர்கள் கோருவது போன்று சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்டால் பாரியளவு பணவீக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரித்தால் அவ்வாறு வழங்கப்படும் தொகைக்காக பணத்தை அச்சிட நேரிடும் என தொழிற்சங்கங்கள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமன் ரத்னப்பிரிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பணம் அச்சிட்டால் மீண்டும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் எனவும்,இதனால் சம்பளங்களை அதிகரிப்பதில் எவ்வித பலனும் கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பணத்தை அச்சிட்டு சம்பளங்களை அதிகரிக்க வேண்டுமாயின் அதனை தொழிற்சங்கங்கள் தெளிவாக குறிப்பிட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.