யாழில் திருமணமாகி 20 நாட்களில் இளம் பெண் ஆசிரியை பரிதாபமாக உயிரிழப்பு!!

திருமணமாகி 20 நாட்களே நிறைவடைந்த நிலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (06.07.2024) இடம்பெற்றுள்ளது.

தம்புவத்தை, ஏழாலை மேற்கு பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய சபேஸ் பிரவீனா என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த ஆசிரியை நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதுடன் வட்டவல குயில்வத்தை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில், யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 24 ஆம் திகதி திடீரென அவருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை வைத்தியசாலையில் அனுமதித்தவேளை எலும்பில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் (06) அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மேலும்,சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம்(07) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரினால் பல மில்லியன் டொலர் வருமானம்!!

இளைஞர் வேளாண் தொழில்முனைவோர் கிராமம் திட்டத்தின் கீழ் வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரை சேகரித்து ஏற்றுமதி செய்யும் திட்டமொன்றினை ஆரம்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீடுகளில் வீணாகும் தேங்காய் நீரின் ஒரு லீற்றரின் கொள்வனவு விலை 18 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் ஒரு லீற்றர் தேங்காய் நீர் 14 ரூபாவாகக் கொள்வனவு செய்யப்பட்டதாகவும், தேங்காய் நீரின் ஏற்றுமதிக்கான தேவை அதிகரித்துள்ளமையினால் கொள்வனவு விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் 13,348 மெற்றிக் தொன் தேங்காய் நீர் ஏற்றுமதி செய்யப்பட்டு 11.16 மில்லியன் டொலர் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு (2023) இதே காலகட்டத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேங்காய் நீரின் அளவு 11,365 மெற்றிக் தொன் ஆகும்.

இதற்கமைய, ஒரு தேங்காயில் 250 முதல் 300 மில்லி மீற்றர் வரை தண்ணீர் உள்ளதுடன், மிகச்சிறிய தேங்காயில் சுமார் 150 மில்லி மீற்றர் தேங்காய் தண்ணீர் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தோனேசியாவில் தென்னையில் காணப்படும் தேங்காய் நீரை விட இலங்கையில் தேங்காய் நீரின் செறிவு அதிகமாக இருப்பதாகவும் ரொஷான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

மழைக்காலத்தில் தேங்காய் உற்பத்தி அதிகரிக்கும் எனவும், வறட்சி காலத்தில் உற்பத்தி குறைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

வவுனியாவில் இளம் மனைவியையும் இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவன் முறைப்பாடு!!

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் மனைவி ஒருவரையும் அவரது இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் 32 வயதான அ.அபிராமி என்னும் பெயருடைய தனது மனைவி, பிள்ளைகளான கம்சனா (வயது11), சன்சிகன் (வயது 8) ஆகிய இருவரையும் கடந்த வியாழக்கிழமை பாடசாலைக்கு அழைத்து சென்றுள்ளார்.

எனினும், குறித்த இரு மாணவர்களும் பாடசாலைக்கு செல்லவில்லை. மனைவியும் வீடு திரும்பவில்லை. நானும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடிய நிலையில் அவர்கள் மூவரும் வீடு திரும்பவில்லை என கணவன் தன் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, மனைவியையும், இரு பிள்ளைகளையும் காணவில்லை என கணவர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான தகவல் கிடைத்தோர் 0765273860 என்னும் தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது வவுனியா பொலிசாருக்கோ தெரியப்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

 

வவுனியா மாணவன் சசிகுமார் டனுசனால் 11 வருடகால வடமாகாண சாதனை முறியடிப்பு!!

வடமாகாணத்தில் கடந்த 2013ம் ஆண்டு 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஒடி முடித்த சாதனையினை 11 வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் இடம்பெற்ற வட மாகாண மட்ட விளையாட்டு பெருவிழாவின் போது 800 மீற்றர் ஒட்டப்போட்டியில் 1நிமிடம் 59.03 செக்கன் நேரத்தில் ஓடி சமன் செய்துள்ளமையுடன் வடமாகாணத்தில் சிறந்த சுவட்டு வீரருக்கான சம்பியனை வவுனியா மாவட்ட வீரரான சசிகுமார் டனுசன் தம்வசமாக்கியுள்ளார்.

வடமாகாண மாகாண விளையாட்டு பெருவிழாவானது யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் (06.07) மற்றும் நேற்று (07.07) இடம்பெற்றிருந்தது.

இந்நிகழ்வில் போதே பயிற்சிவிப்பாளர் குமார் நவநீதன் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் வவுனியா வீரர் சசிகுமார் டனுசன் இச் சாதனையினை நிலைநாட்டியுள்ளார்.

சசிகுமார் டனுசன் தேசிய மட்ட விளையாட்டு விழாவில் பங்குபற்றி 1050மீற்றர் ஓட்டப்போட்டி இறுதிப்போட்டியில் 6வது இடத்தினையும் , தேசிய இளைஞர் விளையாட்டு பெருவிழாவில் 20வயதுக்கு மேற்பட்டோருக்கான 800 மீற்றர் மற்றும் 1500 மீற்றர் ஆகிய ஒட்டபோட்டியில் 4வது இடத்தினையும் என பல சாதனைகளை புரிந்து வவுனியா மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மாட்டை கடத்திச் சென்ற இருவர் பொதுமக்களால் நையப்புடைப்பு!!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் மாட்டினை கடத்திச் சென்ற இருவரை மடக்கிப் பிடித்த அப் பகுதி இளைஞர்கள் அவர்களை நையப்புடைத்ததுடன் பொலிசாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சம்பவம் நேற்று (07.07.2024) மாலை இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பத்தினியார் மகிழங்குளம் பகுதியில் காணி ஒன்றில் கட்டி நின்ற மாட்டினை திருடிச் சென்ற இருவரை தாண்டிக்குளம் பகுதியில் வழி மறித்த இளைஞர்கள் அவர்களை கட்டி வைத்து நையப்புடைத்ததுடன், வவுனியா பொலிசாருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் குறித்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது குறித்த இருவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அங்கு ஒன்று கூடிய பொதுமக்கள் பொலிசாருக்கு தெரிவித்தனர். இதனால் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சற்றுநேரம் முரண்பாடான நிலமை ஏற்பட்டிருந்தது.

எனினும் குறித்த இருவரையும் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பொலிசார் பொதுமக்களிடத்தில் உறுதியளித்த நிலையில் நிலமை கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

அத்துடன் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு. திலீபன் சம்பவ இடத்திற்கு சென்று பொலிசார் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த இருவருக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறும் பொலிசாருக்கு வலியுறுத்தினார்.

வவுனியாவில் கடந்த சில மாதங்களாக மாடுகள் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பாக பொதுமக்களால் தொடர்ச்சியான முறைப்பாடுகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2 நாளில் திருமணம்.. சுவரேறி குதித்து காதலனுடன் தஞ்சம் அடைந்த இளம்பெண்!!

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பெத்தேல்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் தேவகுமார். இவரது மகள் பெமிஷா (23). எம்.ஏ பட்டதாரி. இவரும் மேற்கு நெயூரை சேர்ந்த ராமும் (24) காதலித்து வந்துள்ளனர்.

ராம் (பி.இ) பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியராக உள்ளார். பெமிஷா தனது காதலன் ராமுடன் குடும்பத்தினருக்கு தெரியாமல் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். மேலும் காதலன் ஊருக்கு வந்ததும் ரகசியமாக சந்திப்பது வழக்கம்.

இந்த காதல் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெமிஷா வீட்டில் தெரிய வந்தது. காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றார்கள்.

ஆனால் பெமிஷா காதலை கைவிட மறுத்துவிட்டார். பெற்றோர் அவரை சமாதானம் செய்தனர். ஒரு கட்டத்தில் பெமிஷா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். அவர்கள் அவரை உன்னிப்பாகக் கண்காணித்தனர்.

வேறு வழியின்றி பெமிஷா திருமணத்திற்கு சம்மதம் தெரிவிப்பது போல் நடிக்க ஆரம்பித்தார். மகளின் மனம் மாறியதாக நினைத்து பெமிஷாவின் பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்தனர்.

உறவினர் மூலம் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகள் நடந்தன. அழைப்பிதழ் அச்சடித்தல், நிச்சயதார்த்தம் என அனைத்து ஏற்பாடுகளும் சுமுகமாக நடந்தன. திருமண தேதி முடிவு செய்யப்பட்ட நிலையில், வரும் 8ம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

திருமணத்துக்கான நகைகள், புது ஆடைகள் தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் பெமிஷா. ஆனால், மகளின் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக பெமிஷாவை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர் பெற்றோர். அவர் வெளியூர் சென்றபோதும் அவரது குடும்பத்தினர் உடன் சென்றனர்.

திருமண நாள் நெருங்க நெருங்க பெமிஷா மனதில் ஒருவித பதற்றம் ஏற்பட்டது. இதை அவரது வீட்டில் இருந்தவர்களும் கவனித்து பெமிஷா மீது கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் உறவினர்கள் வரத் தொடங்கினர்.

அவர் அமைதியாக இருந்தால், அவரது விருப்பத்திற்கு மாறாக திருமணம் நடக்கும். இதனால் வீட்டை விட்டு ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்த பெமிஷா, இதுகுறித்து தனது காதலனிடம் தெரிவித்தார்.

அதன் பிறகு அவரும் சில நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து ஊருக்கு வந்தார். இந்நிலையில், நேற்று மாலை, வீட்டின் பின்புறம் நின்றிருந்த பெமிஷா திடீரென சுவரின் மீது ஏறி தப்பினார். கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டில் இருந்து தப்பி ஓடிய அவர், உடனடியாக குளச்சல் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

தனது காதல் விவகாரங்களை போலீசாரிடம் கூறியதோடு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தகவலையும் கூறியுள்ளார்.

சட்டப்படி இளம்பெண் மேஜர் என்பதால் காதலை சேர்த்து வைக்க வேண்டும் என்றார். இந்தத் தகவல் அறிந்து காதலன் ராமும் காவல் நிலையம் வந்தார். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி இருதரப்பிலும் பெற்றோரை வரவழைத்தனர்.

காணாமல் போன மகளைத் தேடியபோது, ​​காவல்நிலையத்தில் மகள் தஞ்சம் புகுந்ததை அறிந்த பெமிஷாவின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல் நிலையம் சென்று தங்கள் மகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் பெமிஷா தன் காதலன் ராமுடன் செல்வதில் உறுதியாக இருந்தார்.

பெற்றோருடன் செல்ல மறுத்துவிட்டார். இருவரும் சட்டப் படிப்பு மேஜர் என்பதால், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிய போலீஸார், இருவரையும் பதிவுத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினர்.

ஒரு காதல் ஜோடியை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யக்கூடாது. மீறி, தொந்தரவு செய்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என, இரு தரப்பு பெற்றோரையும் போலீசார் எச்சரித்தனர். அதன் பிறகு பெமிஷா தனது காதலன் ராமுவுடன் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினார்.

நடு வீதியில் பலியான கல்லூரி மாணவி!!

சென்னையில் முன்னால் சென்றுக் கொண்டிருந்த கார், எதிர்பாராமல் திரும்பியதில் நிலைத்தடுமாறி ஸ்கூட்டியில் இருந்து விழுந்த கல்லூரி மாணவிகள் மீது லாரி மோதியதில், தோழியுடன் ஸ்கூட்டியின் பின்னால் அமர்ந்திருந்த ஆர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை திருவல்லிக்கேணி டிபி கோவில் தெருவை சேர்ந்தவர் ரேணுகாதேவி (23). மாநிலக் கல்லூரியில் வேதியியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இந்நிலையில், மாலை ரேணுகாதேவி, தன்னுடன் படிக்கும் தோழி செனாய் நகரை சேர்ந்த ஆர்த்தி (24) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டார்.

லேடி வெலிங்டன் கல்லூரியை நெருங்கும் போது, ​​ரேணுகாதேவிக்கு முன்னாள் சென்ற கார் திடீரென இடதுபுறமாக நின்று வலதுபுறம் செல்ல முயன்ற போது காரின் பின்னால் சென்றுக் கொண்டிருந்த ரேணுகாதேவி பதற்றமடைந்தார்.

இந்நிலையில், எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய ரேணுகாதேவி, இருசக்கர வாகனத்துடன் கீழே சாய்ந்து ஸ்கூட்டியுடன் விழுந்துள்ளார். அப்போது, ​​அவ்வழியாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரி, இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த ஆர்த்தி மீது மோதியது. இதில் ஆர்த்தி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து தலையில் காயம் அடைந்த ஆர்த்தியை அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆர்த்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே காயங்களுடன் உயிர் தப்பிய கல்லூரி மாணவி ரேணுகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் டேங்கர் லாரி டிரைவர் தாம்பரத்தை சேர்ந்த மாடசாமியை (45) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெற்ற மகளை எரித்து கொலை செய்த பெற்றோர்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் ஒருவர் ரவி பீல் என்பவரை பெற்றோர் விருப்பத்திற்கு மாறாக திரமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் அப்பெண்ணை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதை அறிந்த காதல் தம்பதி பல்வேறு இடங்களில் தங்கி தங்களது உயிரை பாதுகாத்து வந்தனர். இறுதியாக காதல் தம்பதியினர் வங்கிக்கு வரவுள்ள தகவல் அப்பெண்ணின் குடும்பத்தினருக்கு கிடைத்துள்ளது. இதனால் வங்கிக்கு சென்ற குடும்பத்தினர் அங்கே காத்திருந்து, அப்பெண்ணை கணவரின் கண் முன்னே காரில் கடத்தி சென்றன.

இதையடுத்து கணவர் போலீசில் புகார் அளித்தார். அதற்குள்ளாக அந்த இளம்பெண்ணை கடத்தி சென்ற குடும்பத்தினர், அவரை கொலை செய்து உடலை எரித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் பெண்ணின் உடல் 80 சதவீதத்துக்கும் மேல் எரிந்திருந்தது. போலீசார் வருவதை அறிந்த குடும்பத்தினர் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலத்தை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குபதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி பலி!!

சென்னை ரெட்டேரி பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் (30). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி துர்கா (26). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது.

தற்போது 6 மாத கர்ப்பிணியான துர்கா, தனது ஒன்றரை வயது பெண் குழந்தையான கிருத்திகாவுடன் துராபள்ளத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் வீட்டில் தாய் துர்கா தூங்கிகொண்டு இருந்தார். குழந்தை கிருத்திகா தாய் பக்கத்தில் விளையாடிக்கொண்டு இருந்தது. சிறிது நேரத்தில் குழந்தை கிருத்திகாவை காணவில்லையே என துர்கா தேடினார்.

அப்போது வீட்டின் வெளியே 2 அடி ஆழம் உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தை கிருத்திகா தவறி விழுந்திருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த துர்கா குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

வரதட்சணை கொடுமை… விபரீத முடிவெடுத்த மனைவி!!

கூடுதல் வரதட்சணை கொடுக்கும்படி மனைவியிடம் கணவர் அடிக்கடி கேட்டு வந்துள்ளதால் கடைசியில் விபரீதம் ஏற்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள விஜயநகர் மாவட்டம் சுசுலஹகலி தாலுகா பசப்புரா கிராமத்தை சேர்ந்த பூஜா (22) ஐ.டி ஊழியர் ஆவார்.

இவருக்கு கடந்த 2022 -ம் ஆண்டு சுனில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் பெங்களூரு ஜாலஹள்ளி அருகே கங்கம்மனகுடி பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாடகைக்கு வசித்து வந்தனர்.

இதில், சுனிலுக்கு திருமணத்தின் போதே வரதட்சணை கொடுக்கப்பட்டது. ஆனால், கூடுதலாக இன்னும் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியிடம் கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் சுனிலின் சகோதரி மற்றும் குடும்பத்தினரும் வரதட்சணை வாங்கி வருமாறு பூஜாவிடம் வாக்குவாதம் செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த பூஜா இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில் உள்ள தனது அறையில் திடீரென தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

பின்னர், தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பூஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் தான் வரதட்சணை கேட்டு சுனில் கொடுமைப்படுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

வெளிநாட்டவர்களுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய வசதி அறிமுகம்!!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.

நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்திற்காக இந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிபத்திரங்களை பெறுவதற்கு இதுவரை வெரஹெர வரை செல்ல வேண்டியிருந்தது.

இது தொடர்பாக சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள தரப்பினரும், சுற்றுலாப் பயணிகளும் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இதேவேளை இந்த நடைமுறை மூலம் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

எப்படியிருப்பினும், இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் நாடுகளில் வழங்கிய ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

 

கொழும்பை உலுக்கிய மாணவன், மாணவியின் மரணம் : பொலிஸார் வெளியிட்ட தகவல்!!

கொழும்பு – கொம்பனிவீதியின் அடுக்குமாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் எதுவும் இடம்பெறவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவ தினத்தன்று பதிவான சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விபத்து இடம்பெற்ற தருணத்தில் இருவரும் சுமுகமாக முறையில் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவி உயரமான இடங்களில் இருந்து படம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவர் எனவும்,புகைப்படம் எடுக்கும்போது அவர்கள் தவறி விழுந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

மாணவியின் கையடக்க தொலைபேசியில் அவ்வாறான பல படங்கள் காணப்பட்டதாகவும், புகைப்படம் எடுக்க முயன்றவேளை அவர்கள் 67வதுமாடியிலிருந்து தவறிவிழுந்திருக்கலாம் எனவும், விபத்தாகயிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தற்கொலையா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

விசேட அதிரடி படையினரால் சுற்றிவளைத்து பிடிக்கப்பட்ட யுவதி!!

மொரட்டுவ பகுதியில் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த யுவதி ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

மொரட்டுவ படை முகாமின் மோட்டார் சைக்கிள் அணி அதிகாரிகள் குழு மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் குழுவின் அதிகாரிகள் குழு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை லுனாவ பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த யுவதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யுவதி கைது

அந்த வீட்டில் இருந்து 80 மில்லிகிராம் ஐஸ் மற்றும் 500 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட யுவதி மேலதிக விசாரணைகளுக்காக மொரட்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பிள்ளைகளுடன் தமிழகத்தில் தஞ்சமடைந்த இலங்கைப் பெண்!!

தலைமன்னாரிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தமிழகத்திற்கு தஞ்சம் தேடி சென்றுள்ளனர்.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோகவள்ளி (வயது 34),அவரது பிள்ளைகளான அனுஜா (வயது 08),மிஷால் (வயது 05) ஆகியோர் தலைமன்னாரிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடல் பகுதியை சென்றடைந்தனர்.

தகவல் அறிந்த மெரைன் பொலிஸார் அவர்களை மீட்டு விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் யோக வள்ளி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதி முகாமில் பிறந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பிய போது திருமணம் முடித்த நிலையில் , தற்போது கணவரை பிரிந்து வாழ்கிறார் என தெரியவந்துள்ளது.

இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் தமிழகம் வந்ததாக தெரிய வந்துள்ளது.

அதேவேளை படகு கட்டணமாக 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்தி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் விசாரணைக்கு பின்னர் 3 பேரையும் மெரைன் போலீசார் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கப்படைத்துள்ளனர்.

பொலிஸாரின் தவறால் வாழ்க்கையை தொலைத்த மாணவர் : கண்ணீர்விடும் பெற்றோர்!!

பொலிஸாரின் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவன் ஒருவர் முற்றாக ஊனமுற்றுள்ளார்.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மாத்தறை நாவிமன பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றது. இதனால் மாணவனின் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை மீட்க உதவி கோரியுள்ளனர்.

பிறவியிலேயே ஊனம் இல்லாத ஹரிஷ் ஹன்சகவுக்கு பொலிஸாரின் தவறுதலான துப்பாக்கிச்சூட்டால் , இன்று பேசக்கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, ஒரு பொலிஸ் அதிகாரியின் தவறு காரணமாக ஹன்சகவின் தலையில் சுடப்பட்டு, அவர் ஊனமுற்றார்.

இவர் தனது நண்பர்களுடன் கிராம விகாரை ஊர்வலத்தில் காவடி ஆடுவதற்காக மயில் தோகை தேட சென்ற போதே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை வைத்தியர்களின் கடின பிரயத்தனத்தால் ஹன்சக இன்று இவ்வாறு வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் 5 பேர் கொண்ட மிகவும் வறிய குடும்பத்தில் நோய்வாய்ப்பட்ட குழந்தையை குணப்படுத்துவது பெற்றோருக்கு மிகவும் சவாலாக உள்ளது.

அதற்குக் பிரதான காரணம் தந்தையின் கூலி வேலையில் இருந்து வரும் வருமானமே. இதுவரை செய்த சிகிச்சையால், தற்போது எழுந்து உட்காரும் நிலைக்கு வந்துள்ளார்.

உள்ளூர் வைத்தியர் ஒருவர் அவருக்கு சிகிச்சை அளிக்க விருப்பம் தெரிவித்தாலும், அதற்கு ஹன்சகவை அழைத்துச் செல்ல பெற்றோரால் முடியாத சூழ்நிலையே காணப்படுகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாணவி கொடுத்த பொருளால் 7 மாணவர்கள் வைத்தியசாலையில்!!

மாணவியொருவர் கொண்டு சென்ற ஆமணக்கு விதைகளை உட்கொண்டு சுகவீனமுற்ற 7 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (5) வெள்ளிக்கிழமை பிற்பகல் பொலன்னறுவை பிரதேசத்தில் திம்புலாகல கல்வி வலயத்துக்குட்பட்ட வெலிகந்த, அசேலபுர பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

சுகவீனமடைந்த மாணவர்கள் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கல்வி கற்கும் 4 மாணவர்களும் 3 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சுகவீனமடைந்த மாணவர்களின் உடல் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.