திடீரென இடிந்து வீழ்ந்த மூன்று மாடி கட்டிடம்!!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, மில்லகஹமுல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த மூன்று மாடி கட்டிடம் ஒன்று இன்று சனிக்கிழமை (06.07.2024) அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கினிகத்தேனை பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த கட்டிடம் 200 அடி பள்ளத்திற்கு இடிந்து விழுந்துள்ளது.

இந்த கட்டிடம் இடிந்து விழும் போது அங்கு எவரும் இல்லை எனவும், தரமற்ற முறையில் கட்டிடம் கட்டப்பட்டதால் இவ்வாறு இடிந்து விழுந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

கொழும்பில் உயிரிழந்த மாணவர்கள் தொடர்பில் மர்மம் : வெளியாகும் அதிர்ச்சித் தகவல்கள்!!

அண்மையில் கொழும்பில் உயிரிழந்த சர்வதேச பாடசாலை மாணவர்கள், இருவர் தொடர்பில் பல்வேறுபட்ட, முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய தகவல்களின்படி உயிரிழந்த மாணவனின் தந்தை மிகப்பெரும் பணக்காரர் என்பது தெரியவந்துள்ளது.

உலகளாவிய ரீதியில் செயற்படும் சிகையலங்கார தொழில்துறையில் தந்தை ஈடுபட்டு வரும் நிலையில் அவருக்கு உலகின் பல நாடுகளில் அதற்கான கிளைகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் டெல்லியை தளமாக கொண்டு செயற்படும் குறித்த சலூன் இலங்கையிலும் மிகவும் பிரபல்யம் அடைந்த ஒன்றாகும். அத்துடன் அவரும், குடும்பத்தினரும் வெள்ளவத்தை பகுதியிலுள்ள ஆடம்பர வீடொன்றில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் உயிரிழந்த மாணவனுக்கும் மாணவிக்கும் இடையில் நெருக்கமான உறவு உள்ளதுடன், அதனை மாணவனின் தந்தை கடுமையாக எதிர்த்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பாகிஸ்தானை சேர்ந்த கோடிஸ்வரர் ஒருவருக்கு சொந்தமான வீட்டுக்கு செல்வதாக கூறி குறித்த இருவரும் அங்கு சென்றுள்ளனர்.

குறித்த கோடிஸ்வர பாகிஸ்தானிய வர்த்தகரின் மகனின் நெருங்கிய நண்பர்களாக, உயிரிழந்த மாணவனும் மாணவியும் இருந்துள்ளனர். பாக்கிஸ்தான் வர்த்தகரின் வீடு, தொடர்மாடியின் 63ஆவது மாடியில் அமைந்துள்ளது.

முன்னதாக, மாணவர்களின் மரணம் தற்கொலையாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை அது உறுதி செய்யப்படாத நிலையில் மர்மம் நீடித்து வருகிறது.

67ஆவது மாடியில் இருந்து வீழ்ந்த போதும் குறித்த இரண்டு மாணவர்களின் உடலங்களும் மூன்றாம் மாடியின் குளிரூட்டல் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளன, அதுவும் ஒரே இடத்தில் சடலம் மீட்கப்பட்டமை குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, மூன்றாம் நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து கையளித்த பொதி ஒன்றை, உயிரிழந்த மாணவன் கீழே சென்று பெற்று வந்ததாக சிசிரிவி காணொளிகள் மூலம் தெரிய வந்துள்ளது.

எனினும் குறித்த நபர் மூலம் பெறப்பட்ட பொதி குறித்து மர்மம் நீடிக்கிறது. அதேநேரம் உயிரிழந்த மாணவர்களின் உடமைகளுக்கு அருகில் சிகரெட் பெட்டியும், வெற்று தபால் உறையும் பொலிஸாரினால் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

மன்னாரில் முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு!!

மன்னார்  மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் பகுதியில் முன்னாள் போராளி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது, நேற்று (05.07.2024) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

கம்பிகளின் மொழி பிரேம் என அழைக்கப்படும் 42 வயதான கோபாலகிருஷ்ணன் கோகுல் பிரேம்குமார் என்ற முன்னாள் போராளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், நேற்றிரவு அடம்பன் வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, திடீரென தன்னை வாகனத்தால் மோதி விட்டுச் சென்று விட்டனர் என சத்தமிட்டுள்ளார்.

இந்நிலையில், குடும்பத்தினரின் உதவியுடன் உடனடியாக அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, உயிரிழந்த முன்னாள் போராளி ஒரு கால் மற்றும் ஒரு கையும் இழந்தவர் என்பதுடன் பல்துறை சார் ஆளுமை மிக்கவர் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 திருமணத்திற்கு வற்புறுத்திய பெற்றோர்.. திடீரென மயங்கி விழுந்து இளம்பெண் மர்ம மரணம்!!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள பகலகுண்டேவில் உடற்பயிற்சி கூடம் உள்ளது. இங்கு சரவாணி (22) என்ற இளம்பெண் வேலை செய்து வந்துள்ளார். வாடகை வீட்டில் தங்கி தனியாக வசித்து வந்த இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர்.

ஆனால் சரவாணி திருமணம் செய்ய மறுத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவாணியை சந்திக்க அவரது தாய் மகள் தங்கி இருந்த வீட்டுக்கு வந்தார். அப்போது திருமணம் செய்துக்கொள்ளுமறு வற்புறுத்தினார். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

இதையடுத்து, நேற்று காலை வழக்கம் போல் வேலைக்குச் சென்ற இவர், திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார். சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே மரணத்திற்கான காரணம் தெரியவரும் என கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பை உலுக்கிய மாணவர்கள் மரணம் : பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்!!

கொழும்பு கொம்பனிவீதி அடுக்குமாடி குடியிருப்பில் 67 ஆவது தளத்தில் இருந்து விழுந்து மாணவர்கள் புகைப்படம் எடுக்கும்போது அவர்கள் தவறிவிழுந்து உயிிரழந்திருக்கலாம என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் போது மாணவிக்கு உயரமான இடங்களில் இருந்து படம் எடுப்பதில் ஆர்வம் இருப்பது தெரியவந்துள்ளது. அவரது கையடக்க தொலைபேசியில் அவ்வாறான பல படங்கள் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புகைப்படம் எடுக்க முயன்றவேளை அவர்கள் 67வதுமாடியிலிருந்து தவறிவிழுந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸ் பேச்சாளர் , சம்பவம் இடம்பெற்ற தருணத்தில் இருவருக்கும் இடையில் மோதல் எதுவும் இடம்பெறவில்லை என்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

எனினும் மாணவர்களின் மரணம் தற்கொலையா இல்லையா என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

2 வயது குழந்தையை உடலில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்த தாய்!!

கோவை மாவட்டம் காரமடை அருகே பெள்ளாதி கிராமத்தில் வசித்து வருபவர் சந்தோஷ் (31). இவர் மத்தம்பாளையத்தில் சைக்கிள் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலாமணி (28). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இரண்டரை வயதில் அஸ்விக்கா என்ற மகள் இருந்தார். சந்தோஷ் நேற்று காலை தோட்டத்துக்கு சென்று விட்டார்.

அப்போது கலாமணி தனது மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர்கள் கிடைக்கவில்லை. இது குறித்து அவர்கள் காரமடை போலீசில் புகார் செய்தனர்.

இந்நிலையில் மதியம் 2 மணி அளவில் வீட்டின் அருகே இருந்த கிணற்றின் ஓரத்தில் கலாமணியின் செருப்பு கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தனர். அங்கு கலாமணி மற்றும் குழந்தை அஸ்விக்கா ஆகியோர் சடலமாக கிடப்பதை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இது குறித்த தகவலின் பேரில் காரமடை போலீசார் மற்றும் மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் கிணற்றில் பிணமாக கிடந்த கலாமணி, அஸ்விக்கா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டனர். அப்போது கலாமணி தனது மார்போடு சேர்த்து மகள் அஸ்விக்காவை துணியால் இறுக்கமாக கட்டிக் கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் தாய் – மகளின் உடல்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கலாமணிக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

3 மாதங்களில் 3வது மரணம் அமீபிக் காய்ச்சலால் 14 வயது சிறுவன் பலி!!

கேரள மாநிலத்தில் அமீபா தொற்றுக்கு 14 வயது சிறுவன் பலியாகி உள்ளான். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசித்து வரும் மிருதுல் என்ற சிறுவன் அசுத்தமான குளத்தில் குளித்ததாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் இச்சிறுவன் அமீபிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு மருத்துவ வல்லுனர் குழு உயர்தர சிகிச்சை வழங்கியது. இருந்த போதிலும் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த தகவலை கேரள மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தி உள்ளது. கேரளாவில் கடந்த 3 மாதங்களில் இது 3வது அமீபிக் மரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சுகாதாரத்துறை மக்களுக்கு சுத்தம் சுகாதாரத்தை பேண வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன் காய்ச்சல் மற்றும் நோய் அறிகுறியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வரும் படி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இணையத்தில் வைரலான காதல் கதை : பொம்மையுடன் குடும்பம் நடத்தும் இளைஞன்!!

இணையத்தில் நாம் அன்றாடம் பல காதல் கதைகளைப் பார்க்கிறோம். அவற்றில் பெரும்பாலானவை வைரலாகும். சமீபத்தில் ஒரு பொம்மையை காதலியாக நினைத்து வாழும் இளைஞனின் ஒரு காதல் கதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதில் காதலன் நாள் முழுவதும் காதலியை இடுப்பில் கட்டிக்கொண்டு அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறான். ஆனால் அந்த காதலி நாம் நினைப்பது போல் உண்மையான பெண் அல்ல. அது ஒரு பிளாஸ்டிக் பொம்மை.

இவருக்கு இதுவரை காதலி இல்லாத நிலையில், தனியாக வாழ்ந்து வந்த இவருக்கு நம்பகமான காதலி வேண்டும், அதே சமயம் தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவருடன் செல்லக்கூடாது என நினைத்து ஒரு பொம்மையை காதலியாக உருவாக்கினார்.

அவர் இந்த பொம்மைக்கு ‘பிங்கி’ என்று பெயரிட்டுள்ளார். இந்த இளைஞன் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார்.

சமீபத்தில், புனித ஹஜ்ஜுப் தின கொண்டாட்டத்தின் போது, ​​​​அவர் தனது காதலியான பொம்மையுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின.

கடந்த ஆறு மாதங்களாக இந்த பொம்மையை தான் மிகவும் விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், நம் உறவைப் பற்றி மற்றவர்கள் குறை கூறுவதையோ, கிண்டல் செய்வதையோ அல்லது கேள்வி கேட்பதையோ பொருட்படுத்தாதீர்கள்.

மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று கவலைப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.

 

அமெரிக்கா வாழ் இலங்கை சிறுவனின் நெகிழ்ச்சியான செயல்!!

அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த சிறுவனின் நெகிழ்ச்சியான செயற்பாடு தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

11 வயதான சானுஹக் பின்னவலகே என்ற சிறுவன், இலங்கையிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவி புரிந்து வருகிறார். அமெரிக்காவில் வாழும் சானுஹக், ஜனாதிபதி ஜோ பைடனிடமிருந்து சமூக சேவைக்கான தங்க விருது பெற்றுள்ளா்.

அமெரிக்காவின் 50 மாகாணங்களை சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்ட பேச்சு போட்டியில் சனுஹக் பின்னவலகே முதலாம் இடத்தைப் பெற்றார்.

விருதின் மூலம் தனக்கு கிடைத்த பணத்தை கொண்டு, இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்க முன்வந்துள்ளார்.

மாணவர்களுக்கு பொருட்களை வழங்கும் நோக்கில், இலங்கைக்கு வந்துள்ளார். சனுஹக் பின்னவலவின் பெற்றோர் அமெரிக்காவில் வைத்தியர்களாகப் பணி புரிகின்றனர். அவர்கள் முன்னர் கொழும்பு மாலம்பேயில் வசித்து வந்துள்ளனர்.

11 வயதான சனுஹக் சிறிய வயதில் சேவை மனப்பான்மையுடன் செயற்படும் விதம் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

வரி அடையாள எண் பெற்றவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

நாட்டில் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்தல் விடுத்திருந்தாலும், அவர்களின் மாதாந்த வருமானம் ஒரு இலட்சத்திற்கு குறைவாக இருப்பின் வரி செலுத்த தேவையில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அருகில் உள்ள உள்நாட்டு இறைவரி திணைக்கள பிராந்திய அலுவலகத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் 23 இலட்சம் பேர் வரி செலுத்துவோர் அடையாள எண்ணை(TIN) பெற்றுள்ளதுடன் ஜூன் மாதத்தில் மாத்திரம் 13 இலட்சம் பேர் பதிவாகியுள்ளனர்.

மேலும், ஜூலை மாத இறுதிக்குள் வரி செலுத்துவோர் அடையாள எண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கையை 73 இலட்சமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

பதுளையில் கோர விபத்து : சம்பவ இடத்திலேயே பலியான நால்வர்!!

பதுளை – சொரனாதோட்டை வீதியில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (05.07.2024) நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலும், இந்த விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதிகளில் பயணிகள் தங்குமிடங்களை அமைப்பதற்காக மொனராகலையில் இருந்து வந்தவர்களே இந்த கோர விபத்தில் சிக்கியுள்ளனர். இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த மாணவர்கள் : வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!!

கொம்பனித்தெருவில் உள்ள அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது மாணவனும் மாணவியும் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று இடம்பெற்ற பிரேத பரிசோதனைகளின் பின்னர் அவர்களது சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் இருவரே உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலங்கள் அடுக்குமாடி குடியிருப்பின் 03வது மாடியில் குளிரூட்டிகள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதுடன், இயந்திரங்களில் விழுந்துள்ளதாக உடல்கள் சிதைவடைந்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாணவனும் மாணவியும் நெருங்கிய நண்பர்கள் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த மாணவி உயரமான இடங்களில் புகைப்படம் எடுப்பதில் நாட்டம் கொண்டுள்ள நிலையில், அவரது கைப்பேசியில் இதுபோன்ற பல புகைப்படங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, அவ்வாறான புகைப்படங்களை எடுக்க முற்பட்ட போது இருவரும் 67வது மாடியில் இருந்து கீழே விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், விபத்து ஏற்படுவதற்கு முன்னர் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகம் நிலவுவதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அல்டெயார் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்வதற்கு அங்கு வசித்த அவர்களது நெருங்கிய நண்பர் ஒருவரால் அனுமதி வழங்கப்பட்டது.

அந்த நண்பர் காரணமாக மாணவன் மற்றும் மாணவி அடிக்கடி குடியிருப்புத் தொகுதிக்கு வந்து செல்லும் நிலையில், அன்றைய தினம் அங்கு வருவதை பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மகள் வீட்டிற்கு வர தாமதமானதால், அவரது தந்தை மாணவனுக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அவர் தன்னுடன் இல்லை என்று கூறியுள்ளார்.

எனினும் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என குறித்த மாணவியின் தந்தை கூறியதையடுத்து எழுந்த அச்சம் காரணமாக இருவரும் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்தார்களா என்பது தொடர்பிலும் விசாரணை அதிகாரிகளின் கவனம் செலுத்தியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக மாணவன் மற்றும் மாணவியின் கைப்பேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொம்பனித் தெரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில விஜேமான்ன தலைமையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இதேவேளை, சம்பவத்தன்று மாணவி பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டதாக வெளியான செய்திகள் பொய்யானவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரானார் ஈழத்தமிழ் பெண்!!

பிரித்தானியாவில் தொழிற்கட்சி அமோக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் நிலையில் பிரித்தானியாவில் வாழும் ஈழத்தமிழர்களும் புலம்பெயர் தமிழ் சமூகமும் மகிழ்வடையும் வகையில் தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட உமாஸ்ராட்போட் அன்ட் பௌவ் தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளார்.

உமா குமரன் தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களை விட பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு 19,145 வாக்குகள் கிட்டியுள்ளன. இது அந்த தொகுதியில் கிட்டிய வாக்குகளில் 44.1 வீதமாகும்.

இதன் மூலம் ஈழத்தமிழ் பூர்வீகத்தையும் தமிழ் உணர்வையும் கொண்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக கனடாவுக்கு அடுத்தபடியாக பிரித்தானியாவிலும் ஈழத்தமிழ் பூர்வீகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உருவாகியுள்ளார்.

இலங்கையின் போரில் இருந்து புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் குடியேரிய தம்பதிக்கு, கிழக்கு லண்டனில் பிறந்தவர் உமா குமரன். குயின் மேரியில் தனது கல்வியை தொடர்ந்த அவர், ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகிறார்.

தற்போதைய லண்டன் மேயர் சாதிக் கானுக்காகவும், மிக சமீபத்தில் உலகளாவிய காலநிலை அமைப்பின் ராஜதந்திர உறவுகளின் இயக்குநராகவும் உமா குமரன் பணியாற்றியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை, விஞ்ஞானிகள் மற்றும் காலநிலை தலைவர்களுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள துணிச்சலான காலநிலை நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

எனினும் இன்னொரு ஈழத்தமிழ் பூர்வீகவேட்பாளரான கிறிஷ்னி ரிசிகரன் லிப்டெம் எனப்படும் தாராளவாத ஜனநாயக கட்சியிடம் வெற்றிவாய்ப்பை தவறவிட்டுள்ளார்.

எனினும் அவருக்கு 8M430 வாக்குகள் கிட்டியுள்ளன. இதேபோல 2015 ஆம் ஆண்டு முதல் பிரிஸ்டல் மேற்குத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய இன்னொரு ஈழத்தமிழர் சார்பு முகமான தங்கம் டெபோனைர், பசுமைக்கட்சியிடம் வெற்றிவாய்பபை தவறவிட்டுள்ளார்.

எனினும் தங்கம் டெபோனருக்கு 14,132 வாக்குகள் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தந்தையை பழிவாங்க தாய் செய்த மோசமான செயல் அம்பலம்!!

கொழும்பில் தனது நான்கு வயது மகனை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட தந்தை விடுவிக்கப்பட்டுள்ளார்.

தந்தைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம், தந்தையை விடுதலை செய்துள்ளனர்.

சட்டத்தரணி தர்ஷன குருப்பு முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி, குழந்தையைப் பயன்படுத்தி தனது கட்சிக்காரருக்கு எதிராக பொய்யான முறைப்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு மகன் அளித்த வாக்குமூலத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் மனைவி தனது சாட்சிக்காரருக்கு எதிராக பொய்யான முறைப்பாட்டை பதிவுசெய்ய மகனை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

எனினும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரதியில் இந்த விடயம் குறிப்பிடப்படவில்லை.

4 வயது மகன் தந்தைக்கு எதிராக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் வாக்குமூலம் வழங்கி, தவறான முறையில் சமர்ப்பிக்கப்பட்டு, அவ்வாறான ஆவணத்தின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட தந்தை 02 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.

இந்த நிலையில் உயர் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரிட்டோ ஹேமந்த என்ற தந்தை இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

மருத்துவமனையில் சிகிச்சை மறுப்பு : 2 மாத குழந்தை உயிரிழப்பு!!

மாத்தறை புதிய மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை மறுக்கப்பட நிலையில் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

2 மாத குழந்தை பால் குடிக்கும் போது ஏற்பட்ட சிக்கல் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அந்த வைத்தியசாலை குழந்தைக்கு சிகிச்சை வழங்க மறுத்ததை அடுத்து, குழந்தை வேறு ஒரு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளது.

சம்பவத்தில் மாத்தறை கம்புருகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 2 மாதம் 27 நாட்களை உடைய இரட்டைக் குழந்தைகளில் மூத்த குழந்தையே உயிரிழந்துள்ளது.

குழந்தைக்கு நேற்று முன்தினம் (03) காலை பால் கொடுக்கப்பட்ட போது பால் இறுகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெற்றோர் உடனடியாக குழந்தையை முச்சக்கர வண்டியில் மாத்தறை மாவட்ட புதிய வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படவில்லை என பணியாளர்கள் கூறியதை அடுத்து, குழந்தையை அம்பியூலன்சில் வேறு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு பெற்றோர் கேட்ட நிலையில், அதற்கும் வைத்தியசாலை பாதுகாப்புப் பணியாளர்கள் மறுத்துள்ளனர்.

பின்னர் சுமார் 10 கிலோ மீற்றர் தூரம் பயணித்து குழந்தையை மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது குழந்தை இறந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் 30 நிமிடங்களுக்கு முன்னதாக அழைத்து வந்திருந்தால் குழந்தையின் உயிரைக் காப்பாற்றியிருக்கலாம் என்றும் வைத்தியர்கள் தெரிவித்ததாகவும் பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளனர்.

காதலனுடன் சென்ற இளம் தமிழ்ப் பெண் மாயம் : நடந்தது என்ன?

திருகோணமலை – சேருவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியைச் சேர்ந்த இளம் யுவதியொருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடேஸ்குமார் வினோதினி என்ற 25 வயதான இளம்பெண்ணே காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர். விசாரணையை ஆரம்பித்துள்ள மூதூர் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கிளிவெட்டியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்தேக நபரை விசாரணை செய்ததன் அடிப்படையில், கிளிவெட்டி கிராமத்தின் எல்லைப்புறத்தில் பாழடைந்து கிடக்கும் கிணறு ஒன்றை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் நேற்று (03) புதன்கிழமை முதல் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அந்த கிணறு நாளைய தினம் (5) வெள்ளிக்கிழமை காலை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் தோண்டப்படவுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த யுவதியும் மூதூர் கிளிவெட்டி கிராமத்தைச் சேர்ந்த உதயகுமார் விஷ்ணுகாந்த் (வயது 25) என்ற இளைஞனும் காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது.

அத்துடன், கடந்த மே மாதம் யுவதி காதலனுடன் மட்டக்களப்புக்கு சென்ற நிலையில் , மே மாதம் 31ஆம் திகதி குரல் பதிவொன்றை குடும்பத்தாருக்கு அனுப்பியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன் அன்றைய தினம் இரவு வீடியோ அழைப்பில் குடும்பத்தாருடன் கதைத்திருந்ததுடன் தான் வீட்டுக்கு வருவதாக தெரிவித்திருந்த பின்னர் அவருடன் தொடர்பில்லாமல் போயிருந்ததாகவும் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மகளிடம் தொடர்பு இல்லமாமல் போனதை அடுத்து , காதலனின் இலக்கத்துக்கு யுவதியின் குடும்பத்தார் பல முறை முயற்சித்தபோதும் அழைப்பை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகின்றது.

அதன் பின் , ஜூன் மாதம் 13ஆம் திகதி அவர் அழைப்பெடுத்து, தான் வேலையில் நிற்பதாகவும் வீட்டுக்குச் சென்ற கதைப்பதாக யுவதியின் தம்பியிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதன் பின்னர் எவ்வித தொடர்பும் இல்லாத நிலையில், சேருவில மற்றும் மூதூர் பொலிஸ் நிலையங்களில் ஜூலை மாதம் முதலாம் திகதி முறைப்பாடு செய்ததாகவும் யுவதியின் குடும்பத்தார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த யுவதி கொலை செய்து கிணற்றில் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன் ,மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.