அறிஞரின் மகன் – சிறுகதை

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.

ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”

அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”

பையன் சொன்னான்”தங்கம்”

அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”

பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.

”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.

இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!

வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை.அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

கடவுள் வரம்

காலம் வரும் எனக்
காத்திருந்தால் நம்முடைய
இளமை போய்விடும் …!

பலன் கிடைக்கும் எனக்
காத்திருந்தால் நம்முடைய
முயற்சி போய்விடும் …!

எதையும் யாரையும்
எதிர்பார்த்துக் கொண்டிருந்தால்
நம் திறமைகள் அனைத்தும் போய்விடும் …!

நம்பிக்கையோடு நம்முடைய
பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தால்
இனிதான பயணம் வெற்றியாய் முடியும்…!

சிறுகதையான வாழ்வைத்
தொடர்கதையாக்க நாம் நம்பிக்கையோடும் உறுதியோடும் கடமையைச் செயலாற்றுவதே
கடவுள் தந்த வரமாம் …!

-ஜெய ராஜரெத்தினம்-

காதல்…… என்னவென்று கூற

மாதம் பன்னிரெண்டும்
எனை மதியாது கழிந்தோட,
ஈகைப் பண்புள்ள வெறுமையோ
நாளும் எனை வாட்ட,
நித்திரைப் பொழுதில்
நிசப்த்த நாளங்கள்,
ஒத்திகை நடத்துதே
என் விழியோர ஈரங்கள்..

நேசம் வீசி
நாடி வந்தேன்,
உன் சுவாசம் தேடி
ஓடி வந்தேன்,
என் பாதைகள் என்றும்
உன் பாதங்கள் தேட,
என் வீதிகள் முடியுமிடம்
என்றும் உன் வீடு தானே..

தனியொரு நாளில்
தவிப்புகள் நிறைய,
துணையிவள் வந்தால்
ஏக்கங்கள் கழிய,
விடையொன்று சொல்லிவிட்டு
வீடு செல்லு தளிரே,
நடைபிணம் நானுன்னை
நாளும் நாடுகிறேனே..

வீசும் காற்றுக்கு
விலைதான் என்னவோ,
வாடிய பயிராய்
வீதியில் நிற்கிறேன்,
எனை ஏசும் உன் விழிக்கு
என்னதான் கோபமோ,
அது சாடிய என்னுயிரும்
உடலிடத்தே பிரிந்தது..

எதுகை மோனையில்
போட்டி போட்டு,
ஏட்டுக் கவிதை வடிக்க
நான் வரவில்லை,
பதுமையிவள் பேசும்
மௌன மொழி கேட்டு,
மனப் பிதற்றலைத்
தீர்க்க வந்துள்ளேன்..

-பிரதீப்-

தோழி

இனையம்
நம்மை
இணைத்தது
உன் முகம் பார்க்காமல்
தொடங்கிய நட்பு
இன்று நம் முகவரிகள்
கூட மனனமானது

விருப்பம் விடுகதை
கவிதை கதை
பரிசுகள்
பகிர்ந்தோம்
கண்ணியமாய்
கைகோர்த்து நடக்கிறோம்
நட்பின் எல்லைகளில்

என்றோ ஒருநாள்
முகம் சந்திப்போம்
அட!
பேச ஒருவிஷயம்
கூட இல்லாமல்
சத்தமிட்டு சிரிப்போம்:)

-nandhalala-

 

நட்பில் நான்கு

cute-little-friends

 

நட்பில் நாற்பது இருக்கட்டும்
நமக்கோ ! நான்கு தான் தேவை !
அவைகள்
1.அக நட்பு
2.முக நட்பு
3. யுக நட்பு
4. சக நட்பு
உன்னை அன்பு செய்தல் – அகமாக !
மற்றவரை அன்பு செய்தல் – முகமாக !
உலகை அன்பு செய்தல் – யுகமாக !
நம் சொந்தங்களை அன்பு செய்தல் – சகமாக !
எனும் நான்கில் மனம் மகிழ்வோம் !!

எழுதியவர் : சி.எம்.ஜேசு

என் உயிர் தோழி

எனக்கு உயிரை கொடுத்து
உலகை பரிசாக காட்டிய
எனது முதல் உயிர் தோழி
என் ” அன்னை”

உலகை பரிசாக கொடுத்த
என் அன்னைக்கு அடுத்து
என் உள்ளத்தை எப்போதும்
குழந்தையாய் வைத்திருப்பவள்
நீயடி…

நீ என்ன இயற்கையின் அவதாரமோ
உன் அருகில் இருந்தால் மட்டும் சோகம்
என்ற எதிரி எட்டிபார்க்க
கூட தயங்குகிறது,

சண்டைகள்தான் நமது இனிய
மொழியோ ,
சங்கீதம் போல் தினமும்
ஒலிக்கிறது ,

வாழ்கையில் வழிகாட்ட பல
நண்பர்கள் இருந்தாலும்
என் வலிகளை நீக்க நீ
ஒரு தேவதை போதுமடி,

இறந்துபோ என்று சொல்
இன்பமாக இறந்து விடுவேன்
ஆனால்
பிரிந்து போ என்று சொல்லி
விடாதே
இறுதி வரை
என் நட்பை!

-முத்து ஸ்ரீ-

 

இறக்கமுடியாத சிலுவைகள்- வைரமுத்து

சொன்னவள் நான் தான்!
உங்களுக்கும் சேர்த்து
நான் தான் சுவாசிக்கிறேன்
என்று சொன்னவள் நான் தான்!

உங்களைத் தவிர
என் கண்களுக்கு
எதையும் பார்க்கத் தெரியவில்லை
என்று சொன்னவள் நான் தான்!

உங்கள் வாழ்க்கை என்னும் கோப்பையை
என் உயிர் பிழிந்து ஊற்றி நிரப்புவேன்
என்று சொன்னவள் நான் தான்!

நம் கல்யாணத்தில்
கடல் முத்துக்களையும்!…
வானம் நட்ஷத்திரங்களையும்!…
அட்ஷதை போடும்
என்று சொன்னவள் நான் தான்!

நாம் பிரிந்தால்
மழை மேல் நோக்கிப் பெய்யும்!
கடல் மேல் ஒட்டகம் போகும்!
காற்று மரிக்கும்!
என்று சொன்னவள் நான் தான்!

இதோ அடிக்கோடிட்ட வார்த்தைகளால்
இதைச் சொல்வதும் நான் தான்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

நான் காதல் கொண்டது நிஜம்!
கனவு வளர்த்தது நிஜம்!
என் ரத்தத்தில்
இரண்டு அனுக்கள் சந்தித்துக் கொண்டால்
உங்கள் பெயரை மட்டுமே உச்சரித்தது நிஜம்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

காதலரைத் தெரிந்த எனக்கு
காதலைத் தெரியவில்லை!
இந்தியக் காதல் என்பது
காதலர்களோடு மட்டும் சம்மந்தப் பட்டதில்லை!

இந்தியா காதலின் பூமி தான்
காதலர் பூமியல்ல!

காதலுக்கு சிறகு மட்டுமே தெரியும்!
கால்யாணத்திற்குத் தான்
கால்களும் தெரியும்!

எனக்குச் சிறகு தந்த காதலா
என் கால்களின் லாடத்தை யாரறிவார்?…

என் தாயை விட
சாய்வு நாற்காலியை
அதிகம் நேசிக்கும் தந்தை!

சீதனம் கொணர்ந்த
பழைய பாய் போல்
கிழிந்து போன என் தாய்!

தான் பூப்பெய்திய செய்தி கூட
புரியாத என் தங்கை!

கிழிந்த பாயில் படுத்தபடி
கிளியோபாற்ராவை நினைத்து
ஏங்கும் என் அண்ணன்!

கருப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில்
கலர்க் கனவு காணும் என் தம்பி!

அத்தனை பேருக்கும்
மாதா மாதம் பிராணவாயு வழங்கும்
ஒரே ஒரு நான்!

கால்களில் லாடங்களோடு
எப்படி உங்களோடு ஓடி வருவேன்?…
என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

ஐரோப்பாவில்
கல்யாணத் தோல்விகள் அதிகம்!
இந்தியவில்
காதல் தோல்விகள் அதிகம்!

இந்தியா காதலின் பூமி தான்!
காதலர் பூமியல்ல!

போகிறேன்!
உங்களை மறக்க முடியாதவளை
நீங்கள் மறப்பீர்கள்
என்ற நம்பிக்கையோடு போகிறேன்!

என்னை மன்னித்து விடுங்கள்!
என்னை மறந்து விடுங்கள்!

-வைரமுத்து-

 

நவயுக நட்பு

முல்லை மொட்டுக்களாய்…
பள்ளிச் சிட்டுக்களாய்…
பகை மறந்து,
பை சுமந்து,
சென்றோமே பள்ளிக்கு….!!!
பதின் ஒரு வருடங்கள்.
பசுமையான வருடல்கள்.
மறக்க முடியா மங்கள நினைவுகள்.
தனிமையில் மீடிப்பர்த்தேன்.
என் இளமை அழுகிறது…!!!
நாங்கள் அடி வாங்காத ஆசிரியர் இல்லை
எங்களின் பகிடி வதைக்கு பலிஆகத
ஆட்களும் இல்லை…!!!
நாங்கள் அங்கு செய்யாத சேட்டையும் இல்லை….!!!
பராமுகமுடன் படித்தோம்,
பக்க விளைவை எதிர் கொள்ள
முடியாமல் தவித்தோம்…!!!
பரீட்சை குறுக்கிட்டது
எங்களின் படிப்புக்கே
முற்றுகை இட்டது.
பெறுபேறும் வந்தது…!!
ஆனந்தத்துடன் இருந்தனர் சிலர்,
அழுகையுடன் இருந்தனர் இன்னும் சிலர்,
மரமாய் இருந்த எம் நண்பர் கூட்டம்
இன்று செடியாய் மாறியது.
உயிர் தோழி மூவருடன்
உயர் தரத்தில் தடம் பதித்தோம்.
புதுப்புது முகங்கள்…
சற்றே ஆறுதலடைண்டன அகங்கள்…
மீண்டும் ஆரம்பம்,
எங்கள் அன்பின் போராட்டம்.
பழைய ஜாபகங்கள் படர்ந்தன.
பிரிந்த தோழிகளின்
நினைவலைகள் நீண்டன…!!!
எமது பாடசாலை
வாகை மரத்திடம் கேட்டுப்பார்,
நாங்கள் செய்த சேட்டைகளை
அது மொழிபெயர்க்கும்…!!!
இதற்குள் உயர்தர வாழ்க்கை
உருண்டோடி விட்டது…!!!
இதை தனிமையில் நினைக்கையிலே
இதயம் சோக கீதம் பாடுது…!!!
அதற்குள் சிலர்,
திருமணமும் முடித்திருப்பார்!
சிலர் பல்கலைக்கழகமும்
சென்றிருப்பார்……!!!
கண்ட இடத்தில் ஒரு புன்னகை
வருடத்துக்கு ஒரு முறை
வாழ்த்து மடல்…..!!!

“கவிக்குயில்”
-F arika Ansar-

 

புதிய ஆத்திசூடி – மகாகவி பாரதியார்

பரம்பொருள் வாழ்த்து

ஆத்தி சூடி.இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உயர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்.

அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்.
இளைத்தல் இகழ்ச்சி
ஈகை திறன்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிக்கொள்
ஒற்றுமை வலிமையாம்.
ஓய்தல் ஒழி.
ஓளடதம் குறை.
கற்றது ஒழுகு.
காலம் அழியேல்.
கிளைபல தாங்கேல்.
கீழோர்க்கு அஞ்சேல்.
குன்றென நிமர்ந்து நில்.
கூடித் தொழில் செய்.
கெடுப்பது சோர்வு
கேட்டிலும் துணிந்து நில்.
கைத்தொழில் போற்று
கொடுமையை எதிர்த்து நில்.
கோல்கைக் கொண்டுவாழ்
கவ்வியதை விடேல்.
சரித்திரச் தேர்ச்சி கொள்
சாவதற்கு அஞ்சேல்
சிதையா நெஞ்சு கொள்.
சீறுவோர்ச் சீறு.
சுமையினுக்கு இளைத்திடேல்.
சூரரைப் போற்று
செய்வது துணிந்து செய்
சேர்க்கை அழியேல்.
சைகையில் பொருளுணர்.
சொல்வது தெளிந்து சொல்
சோதிடந் தளை யிகழ்.
சௌரியம் தவறேல்.
ஞமலிபோல் வாழேல்.
ஞாயிறு போற்று
ஞிமறென இன்புறு.
ஞெகிழ்வது அருளின்.
ஞேயம் காத்தல்செய்.
தன்மை இழவேல்.
தாழ்ந்து நடவேல்.
திருவினை வென்று வாழ்.
தீயோர்க்கு அஞ்சேல்.
துன்பம் மறந்திடு
தூற்றுதல் ஒழி.
தெய்வம் நீ என் றுணர்.
தேசத்தைக் காத்தல் செய்.
தையலை உணர்வு செய்.
தொன்மைக்கு அஞ்சேல்.
தோல்வியில் கலங்கேல்.
தவத்தினை நிதம் புரி.
நன்று கருது.
நாளெலாம் வினை செய்;
நினைப்பது முடியும்
நீதிநூல் பயில்.
நுனியளவு செல்.
நூலினைப் பகுத்துணர்.
நெற்றி சுருக்கிடேல்.
நேர்படப் பேசு.
நையப் புடை.
நொந்தது சாகும்.
நோற்பது கைவிடேல்.
பணத்தினைப் பெருக்கு.
பாட்டினில் அன்பு செய்.
பிணத்தினைப் போற்றேல்.
பீழைக்கு இடங்கொடேல்.
புதியன விரும்பு.
பூமி இழந்திடேல்.
பெரிதினும் பெரிது கேள்.
பேய்களுக்கு அஞ்சேல்.
கொய்மை இகழ்.
போர்த் தொழில் பழகு.
மந்திரம் வலிமை.
மானம் போற்று.
மிடிமையில் அழிந்திடேல்.
மீளுமாறு உணர்ந்துகொள்.
முனையிலே முகத்து நில்.
மூப்பினுக்கு இடங் கொடேல்.
மெல்லத் தெரிந்து சொல்.
மேழி போற்று.
மொய்ம்புறத் தவஞ் செய்.
மோனம் போற்று.
மௌட்டியந் தனைக் கொல்.
யவனர்போல் முயற்சிகொள்.
யாரையும் மதித்து வாழ்.
யௌவனம் காத்தல் செய்.
ரஸத்திலே தேர்ச்சிகொள்.
ராஜஸம் பயில்.
ரீதி தவறேல்.
ருசிபல வென்றுணர்.
ரூபம் செம்மை செய்.
ரேகையில் கனி கொல்.
ரோதனம் தவிர்.
ரௌத்திரம் பழகு.
லவம் பல வெள்ளமாம்.
லாகவம் பியற்சி செய்.
லீலை இவ் வுலகு.
(உ)லோக நூல் கற்றுணர்.
லௌகிகம் ஆற்று.
வருவதை மகிழ்ந்துண்.
வான நூற் பயிற்சி கொள்.
விதையினைத் தெரிந்திடு.
வீரியம் பெருக்கு
வெடிப்புறப் பேசு.
வேதம் புதுமை செய்.
வையத் தலைமை கொள்.
வௌவுதல் நீக்கு.

தூக்கம் கெடுவதால் கணித, விஞ்ஞான திறன் குறையும்

பள்ளிப் பிள்ளைகளின் கற்கும் திறனில், அவர்களது தூக்கமின்மை அல்லது தூக்கம் கெட்டுப் போதல் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அண்மைய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.

சர்வதேச கல்விப் பரீட்சைகளை நடத்தும் ஆய்வாளர்கள் இதனைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மிகவும் முன்னேறிய நாடுகளில், குறிப்பாக கணினி மற்றும் தொலைக்காட்சிகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு இந்த தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், அத்தகைய நாடுகளில் உள்ள பள்ளிப் பிள்ளைகளின் கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறன் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.

பொஸ்டன் கல்லூரியால் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் அமெரிக்காவிலேயே அதிகமான குழந்தைகள் தூக்கம் கெட்டுப் போவதற்கான வாய்ப்பு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

அங்கு 9 முதல் 10 வயது வரையிலான குழந்தைகளில் 73 வீதத்தினருக்கு ஒழுங்கான தூக்கம் கிடையாது என்றும், 13 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளில் 80 வீதத்தினருக்கு தூக்கம் சரியாக இல்லை என்றும் கூறப்படுகிறது.

உலக சராசரியைவிட இது மிகவும் அதிகமாகும்.

இதேபோன்று நியூசிலாந்து, சவுதி அரேபியா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலும் இந்தப் பிரச்சினை அதிகமாக உள்ளது.

நல்ல தூக்கம் இருப்பதால், கணிதம், விஞ்ஞானத்தில் அதிக பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களை கொண்ட நாடுகளாக அஜர்பைஜான், கசகஸ்தான், செக் குடியரசு, ஜப்பான் மற்றும் மோல்ட்டா ஆகிய நாடுகள் திகழுகின்றன.

ஆசிய மாணவர்கள் இந்த கணித, விஞ்ஞான மற்றும் வாசிப்பு திறனில் முன்னணியில் திகழ்கின்றனர்.

சரியான நித்திரை இல்லாத பிள்ளைகள் ஆசிரியர்களின் உத்தரவுகளை கடைப்பிடிப்பதிலும் சோர்வு காண்பிப்பதாகக் கூறப்படுகின்றது.

தூக்கம் குறைவான நிலைமையில் மூளை புதிய விசயங்களை உள்வாங்க தடுமாறுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

கணினியில் விழித்திருத்தல், நண்பர்களுக்கு அதிகமாக மெசேஜ்களை அனுப்புவர்கள் ஆகியோர் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

செவ்வாய்க் கிரகத்தில் அதிக கதிர்வீச்சு ஆபத்து: நாசா

எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு செல்லக்கூடிய விண்வெளி வீரர்கள் கடுமையான கதிரியக்கத் தாக்கத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா எச்சரித்துள்ளது.

பாதுகாப்பு விதிமுறைகள் உடன்படும் அளவைவிட கூடுதலான அளவுக்கு அங்கு கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு விண்வெளி வீரர்கள் இலக்காக நேரிடும் என்று நாசா கூறுகிறது.

உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய்களுக்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடிய அளவில் இந்த கதிர்வீச்சு இருக்கும் என்றும் விண்வெளி வீரர்களை நாசா எச்சரித்துள்ளது.

கியூரியாசிட்டி ரோவர் விண்ணூர்தியைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள் மூலம் இதனை நாசா உறுதிப்படுத்தியுள்ளது.

செவ்வாயின் தரையில் ஊர்ந்துசென்று ஆய்வு நடத்திய ஒரு கார் அளவிலான இந்த ரோபோ- ஊர்தியை அங்கு கொண்டுசெல்லும் அரை-பில்லியன் கிலோமீட்டர் தூர பயணத்துக்கு 8 மாதங்களுக்கும் அதிககாலம் எடுத்துள்ளது.

இந்தப் பயணத்தை கிழமைகள் கணக்கில் விரைவு படுத்துவதற்கு போதுமான உந்துசக்திக்கான தொழிநுட்ப வசதி இன்னும் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

இயற்கை மருத்துவம் – ரத்த விருத்தி தரும் வாழைக்காய்

வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தை தான் சமைப்பது வழக்கம். அதற்காக மற்ற வகை வாழைக்காய்களை சாப்பிடக் கூடாது என்பது கிடையாது. அவைகள் பரவலாக கிடைப்பதில்லை.
மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து இருக்கிறது. இதனால் உடல் பருக்கும். உடலுக்கு நல்ல வளர்ச்சி கிடைக்கும். பசியை அடக்கும். இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. வாயால் ரத்தம் கக்குபவர்களுக்கும், கிராணி, நீரழிவு உள்ளவர்களுக்கு பத்திய உணவாக வாழைக் கச்சல் பயன்படும்.

வாழைக்காயைச் சமைக்கும்போது மேல் தோலை மெல்லியதாகச் சீவியெடுத்தால் போதும். உள்தோலுடன் சமைப்பதே சிறந்தது. சிலர் இதுபோன்று சீவியெடுத்த தோலை நறுக்கி வதக்கி, புளி, மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். பொதுவாக கேரளத்தில் இந்தப் பழக்கம் அதிகம் இருக்கிறது.

இப்படி துவையலாக செய்து சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், பலமும் உண்டாகும். வாழைக்காய் சாப்பிடு வதால் வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் ஆகியவையும் நீங்கும். ஆனால் வாய்வு மிகும். அதுபோல வாழைப்பிஞ்சு சாப்பிடுவது பத்தியத்திற்கு ஏற்றதுதான் என்றாலும் மலத்தை இறுக்கி விடும்.

பச்சை வாழைக்காயை சின்ன சின்ன வில்லைகளாக நறுக்கி வெயிலில்; உலர்த்தி மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.

 

பொதுஅறிவு வினா-விடைகள்!!

சிறுவர்களுக்கு நாடுகள், மலைகள், நீர்வீழ்ச்சிகள், பாலைவனங்கள், தீவுகள், கண்டங்கள் போன்றவற்றைப் பற்றி அறிந்து கொள்ளுவதில் ஆர்வம் அதிகம்.சிறுவர்களுக்கான பொதுஅறிவுத் தகவல்கள், அவர்கள் கற்கும் பாடங்களுடன் தொடர்புடையதாக அமைந்தால் கற்றலுக்காக கற்கும் வாய்ப்பை அதிகரிக்கும்.

இவ்வாறான பொதுஅறிவு வினா-விடைகள் ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து வவுனியா-நெற் இணையத்தில் வெளியிடப்படும்.

1 .உலகிலேயே பரப்பளவில் மிகச் சிறிய நாடு எது?
வத்திகான்

2. உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
ரஷ்யா

3 .உலகிலேயே மிகப் பெரிய தீவு எது?
கிரீன்லாந்து

4. உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது?
தீபெத் பீட பூமி

5. உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது?
சுவிட்சர்லாந்து

6. உலகிலேயே மிகப் பெரிய பாலைவனம் எது?
சஹாரா பாலைவனம் (ஆபிரிக்கா)

7. உலகிலேயே மிகவும் வரண்ட பாலைவனம் எது?
ஆடகாமா பாலைவனம் (சிலி)

8. உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி எது?
ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா)

9. உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது?
நயாகரா நீர்வீழ்ச்சி

10. உலகிலேயே மிக நீளமான நதி எது?
நைல் நதி (6695கி.மீ)

11. உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது?
எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)

12 . உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
மெக்சிகோ வளைகுடா

13. உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது?
ஆசியாக் கண்டம்

14. உலகிலே நதிகளே இல்லாத நாடு எது?
சவுதிஅரேபியா

15. உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது?
பின்லாந்து

(தொடர்ந்து வரும்)

முல்லாவின் கதைகள் – பிரார்த்தனையும் மனிதனும்!

பள்ளிவாசலில் தொழுகை நேரம். முஸ்லீம்கள் பலர் ஒன்று சேர்ந்து தொழுகையில் பங்கு கொண்டு வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார்.

தொழுது கொண்டிருந்த ஒருவன் திடீரென்று தனக்கு அருகே தொழுகையில் ஈடுபட்டிருப்பனைப் பார்த்து ” அடடா நினைவு மறதியினால் என் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேன் ” என்றான்.

” தொழுகை நேரத்தில் நீ பேசியதானல் என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாய். அதனால் நீ மறுபடியும் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும் ” என்றான் அவன்.

” நீயுந்தான் இப்போது என்னுடன் பேசி பிரார்த்தனையைக் கலைத்துக் கொண்டாய். நீயுந்தான் மீண்டும் தொழுகையில் ஈடுபட்டுப் பிரார்த்தனை செய்ய வேண்டும் ” என்றான் மற்றவன். அவர்கள் உரையாடலைக் கேட்டு முல்லா மெல்லச் சிரித்தார்.

” ஏன் சிரிக்கிறீர் ” என அந்த இருவரும் கேட்டனர்.

” பொதுவாக மனித சுபாவத்தை நினைத்துப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிட்டது. மனிதன் தான் ஒழுங்காக முறையாகப் பிரார்த்தனையில் ஈடுபடுவதைவிட மற்றவன் ஒழுங்காகப் பிரார்த்தனை செய்கிறானா என்பதைக் கவனிப்பதில் அதிக அக்கறை செலுத்துகிறான் ” என்றார் முல்லா. அந்த இரண்டு பேரும் வெட்கமடைந்து தலைகுனிந்து கொண்டார்கள்.

(தொடர்ந்து வரும்)

 

தெனாலி ராமன் கதைகள் – இராஜாங்க விருந்து

ஒரு நாள் அரன்மனையில் பெரிய விருந்து நடந்தது. ராஜகுருவும் தெனாலிராமனும் ருசித்து, ரசித்து உண்டு மகிழ்ந்தார்கள்.

விருந்துக்குப் பின் இருவரும் ஒரு மண்டபத்தில் அமர்ந்து சாவதானமாக பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ராஜகுரு “இது போன்ற விருந்து உடலுக்கும் உள்லத்துக்கும் நல்ல சுகம் அளிக்கிறது” என்றார்.

இதைக் கேட்ட தெனாலிராமன் அவரை சீண்டிப்பார்க்க தீர்மானித்தார். “உண்பதை விட, உண்டதைக் கழிப்பதில் தான் தனிச் சுகம்

இருக்கிறது” என்றார் தெனாலிராமன். ராஜகுருவோ சற்று முறைப்பாக “ராஜாங்க விருந்தைப் பழிக்காதே ராமா! இது போன்ற விருந்தை

உண்பதே தனி சுகம் தான்” என்றார்.

தெனாலிராமனோ “கொண்டதை விட கழிப்பதில் தனிசுகம் இருக்கிறது என்பதை நான் ஒரு நாளைக்கு உங்களுக்கு உணர்த்துகிறேன்” என்று கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

ராஜகுரு ஒரு நாள் ஒரு தனியறையில் இருந்த சமயம் பார்த்து வெளியே பூட்டி விட்டார் தெனாலி ராமன். உள்ளேயிருந்த குருவுக்கு மலம்

கழிக்க வேண்டிய அவசியம் வந்து விட்டது. கதவு வெளியே பூட்டப்பட்டிருந்ததால் அவர் பல முறை தட்டினார். பலனில்லை. அவசரத்தில் தவியாய் தவித்துக் கொண்டிருந்தார்.

அவரை நன்றாக தவிக்க விட்டு, கொஞ்ச நேரம் கழித்து ராமன் கதவைத் திறந்தான். அவர் வேகமாக வெளியே வந்து கழிவரை நோக்கி ஓடினார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த ராஜகுரு தெனாலிராமனைப் பார்த்து மூச்சு வாங்கப் பேசினார். “அப்பாடா! ராமா! கழிப்பது தனிசுகம் தான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் இது போன்ற விபரீத விளையாட்டை இனிமேல் செய்யாதே” என்றார்.

தெனாலிராமன் தான் சொன்னதை செய்துகாட்டிவிட்டதை நினைத்து இருவரும் அடக்க முடியாமல் சிரித்தனர்.

(தொடர்ந்து வரும்)

 

மகான்கள் அருளிய மகத்தான உலகப் பொன்மொழிகள்

1. சிறந்த வழி

நாம் முன்னேற்றப் பாதையில் செல்வதே நம்மவர்களையும் முன்னேறச் செய்ய சிறந்த வழி – ஸ்ரீ அன்னை

2. பெருந்தன்மையே முதல் படி

1) இதயத்தில் பெருந்தன்மை இருந்தால், அது, நற்பண்புகளின் அழகாகப் பிரகாசிக்கும்!.
2) நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்!.
3) இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய்நாட்டில் சட்டத்தை மதிக்கத் தூண்டும்.
4) தாய்நாட்டில் சட்டத்தை மதிப்பவர்களால் தான், உலகம் முழுவதும் சமாதானத்தை உருவாக்க முடியும்.
– சீனப் பழமொழி

3. பயப்படாதீர்கள்

நல்ல காரியங்களைச் செய்ய ஒருபோதும் பயப்படாதீர்கள்!
தாமதமின்றி உடனே நல்ல காரியங்களைச் செய்யுங்கள்!
– நெப்பொலியன் ஹில்

4. மூன்று ஆயுதம் நம்மிடம்

தன்னம்பிக்கை, தெளிவு, துணிச்சல் இந்த மூன்றும் தான் ஒருவனை எப்போதும் காப்பாற்றி வழிநடத்திச் செல்லும்.
– கன்ஃப்யூஷியன்

5. துணிவே துணை

ஜூலியஸ் சீசர் போல ரோமப்பேரரசராக உயர வேண்டுமா? அல்லது உங்களுக்குள்ளேயே சிறைப்பட்ட ஒரு பறவையாக வாழ வேண்டுமா? என்பது உங்களின் துணிச்சலைப் பொறுத்தே அமையும். இந்த இரண்டு முடிவுகளும், வெற்றிகளும் உங்களுக்குள்ளேயேதான் இருக்கிறது. எதைத் தேர்வு செய்து தன்முனைப்புடன் உங்களை நீங்களே வழி நடத்திச் செல்கிறீர்களோ, அது போலவே – நீங்கள் எண்ணியது போலவே – உருவாகி விடுவீர்கள். துணிச்சலுடன் உயர்ந்த இலட்சியங்களை அடைய எப்பொழுதும் முன்னோக்கியே செல்லுங்கள்.
-ஸர் டி.ப்ரௌன்

6. வெற்றிக்கு முதல்படி எது?

மாபெரும் செயல்களைச் செயல் வகையில் செய்து முடிக்க உறுதி எடுக்க வேண்டும் என்றால், உங்களுக்கு இன்றியமையாத முதல் மூலப் பொருளான, வெற்றிக்குத் தேவையான முதல் கூறான தன்னம்பிக்கை நெஞ்சில் பொங்கி வழிய வேண்டும். தடைகளையும், அவமதிப்புகளையும், தன்னம்பிக்கைதான் சமாளித்து அடித்துத் துரத்தி பொன்னாக நம்மை உருவாக்கும். நேர் வழி பாதுக்காப்பானது என்பதை உணர்த்தும். தன்னம்பிக்கையுடன், செயல்படுங்கள் அனைத்தையும் துணிச்சல்தான் சாதிக்கும்.
– டாக்டர் ஜான்சன்
( உலகின் முதல் ஆங்கில அகராதியைத் தொகுத்தவர் சாமுவேல் ஜான்சன் 33 ஆண்டுகள் கடின உழைப்பில் வெளிவந்தது. ஆனால் இவர் இறந்து 13 ஆண்டுகள் கழித்தே முதல் பதிப்பு வெளியானது )

7. அன்பின் நோக்கம்

உடைமையில் உரிமை கோருவது அல்ல, அன்பு, உன்னையே காணிக்கையாகத் தருவதுதான் அன்பு கொள்வதன் பொருளாகும்
– ஸ்ரீ அன்னை

8. விதைத்ததைத்தான் அறுவடை செய்கிறோம்

ஒவ்வொரு மனிதனும் விதக்கிறாள். ஒருவன் வாய்ச் சொற்களால் விதக்கிறான். இன்னொருவன் செயல்களால் விதைக்கிறான்.

எல்லா மனிதர்களும் தாங்கள் விதைத்த பண்பு விதைகளுக்கு ஏற்ப கோதுமைப் பயிராகவோ அல்லது களைச் செடியாகவோ வளர்கிறார்கள்.

எதைப்பற்றியும் சிந்திக்காமல் விதைத்தவனுக்கு எந்தச் செயல் நிறைவேற்றமும் ஏற்படவில்லை.

செயல் நோக்கத்துடன் விதைகளைத் தூவிவிட்டு அதைத் தேடி உண்மையாக உழைத்தவனே ‘வெற்றி’ என்னும் நற்கனிகளைப் பெற்றவனாவன்.

பெரும்பாலான மக்கள் வயதான பிறகே தங்களின் வளர்ச்சியின்மை குறித்து அழுது புலம்புகின்றனர்.

நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு எதை விதைத்தீர்களோ அதைத்தான் அறுவடை செய்கிறீர்கள்.

நல்லவற்றையே எண்ணி அதற்காக உண்மையில் உழைத்தால் உங்களுக்கு வெற்றி என்னும் அறுவடை சிறப்பாக இருக்கும்.
– பார்பர்

9. அஞ்சா நெஞ்சம் வேண்டும்

கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!
– சுபாஷ் சந்திரபோஸ்

10. நல்ல எண்ணெய் எது?

மனிதனின் வாழ்க்கைச் சக்கரத்தில் கொடுமையான துன்பம் தருகிற கதை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது ஒவ்வொறு மனிதனும் ‘துணிவு’ என்ற எண்ணெயை தன்னுடைய சக்கரத்திற்கும், மற்றவர்களின் வாழ்க்கைச் சக்கரங்களுக்கும் போட வேண்டும் அப்போது தான் எல்லாச் சக்கரங்களும் இணைந்து முன்னேறும்.
– அய்டா

11. ஓய்வு எடுங்கள்

‘திடும்’ எனப் பொங்கிச் செயலாற்றும் கடல் நடுவேதான் அமைதியாகத் தீவுகளும் உள்ளன. மனிதனும் இதுபோல், வாழ்க்கைப் போர்க்களமாக இருந்தாலும் வார ஓய்வு நாட்களில் முழு ஓய்வுடன் அமைதியாக இருக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். ஓய்வு நாளை முழு அமைதியுடன் கழிக்கும்போது கிடைக்கும் சக்தி வாழ்க்கைப் பிரச்சினைகளை சமாளிக்க வழி ஏற்படுத்திக் கொடுக்கும்.
– டப்ஃபீல்டு

12. எளிமைதான் முன்னேற்றம்

எளிமையாக இருங்கள். எளிமைதான் உன்மையாக வாழக் கற்றுக் கொடுக்கும். மாபெரும் கண்டுபிடிப்புகளுக்குத் தேவையான அறிவைத் தரும் சாவி எளிமையில் தான் அடங்கி இருக்கிறது. நல்லவற்றிற்கு உடனே நம் மனதைத் திறக்கவும், கெட்டதற்கு உடனடியாகவும் நம் மனக்கதவை மூடக்கூடிய சக்தியும், எளிமையாக வாழும்போதுதான் கிடைக்கும். எளிமையாக வாழத்தான் நமக்கு நிறையத் துணிச்சல் வேண்டும். அது இருந்தால் நாம் நினைத்ததை சாதிக்கலாம்.
– ஜே.ஆர்.லோவெல்

13. அன்பை அனுப்புங்கள்

அன்பு காட்ட எப்படிப்பட்ட வாய்ப்பு கிடைத்தாலும் அதை நழுவ விடாதீர்கள். அதைப் பயன்படுத்துங்கள். மாமிசம் சாப்பிடாத பழக்கம் உங்கள் அன்பிலிருந்து மலர்ந்திருந்தால் அது ஓர் அற்புதமான விஷயம். அகிம்சை, அன்பின் காரணமாக மலர்ந்தபோது பரம தர்மமாகிறது. மத நூல்களைப் படித்து ஒரு சம்பிரதாயத்தை ஏற்று மலர்ந்ததென்றால், அது ஒரு தர்மமல்ல! ஒருவருடைய தோளில் நீங்கள் கைவைத்தால், உங்களது இதயத்தின் அன்பு முழுவதையும் உங்கள் கையின் மூலம் அவருக்கு அனுப்புங்கள். உங்களது முழு உயிரையும் முழு இதயத்தையும் அந்தக் கையில் இணையச் செய்து போகவிடுங்கள். அந்தக் கை மாயமாக வேலை செய்வதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.

ஒருவரது கண்களைச் சந்திக்கும்போது உங்கள் கண்களில் உங்கள் இதயம் முழுவதையும் கொட்டி விடுங்கள்.
கண்கள் மந்திரம் மாயம் அடைந்து ஒருவருடைய இதயத்தை அசைத்து விடுவதைக் கண்டு அதிசயிப்பீர்கள்.
உங்கள் அன்பு விழிப்படைவது மட்டுமல்ல, மற்றவரது அன்பு விழிப்படைவதற்கும் வழி வகுப்பதாகி விடலாம்.
சரியான முறையில் அன்பு செலுத்தும் மனிதன் ஒருவன் பிறந்தால் இலட்சக்கணக்கான மனிதர்களின் உள்ளத்தில் அன்பு பெருக்கெடுக்கத் துவங்கிவிடும்!.
– ஓஷோ ரஜனீஷ்

14. சூரிய ஒளி போல

யாருடன் பழகினாலும் அந்தஸ்து பார்க்காமல் ஒரே மாதிரியான அணுகுமுரையுடன் உள்ளன்பு குறையாமல் பழகுங்கள்.
– ரீடர்ஸ் டைஜஸ்ட்

15. வாய்மை வெல்லும்

தெய்வத்தின் விருப்பத்திற்கு எதிராக எந்த ஒரு
மனித சக்தியும் நிற்க முடியாது! (எனவே, சோதனையான நேரங்களிலும் நேர்மையாக வாழ்வோம்).
– ஸ்ரீ அன்னை

16. பிரார்த்தனை செய்யலாமா?

இறைவன் எங்கோ வெகு தொலைவில் இருக்கிறார். ஆனால், பிரார்த்தனையோ அவரை பூமிக்கு இழுத்துக் கொண்டு வருவதுடன், அவருடைய சக்தியையும் நம்முடைய முயற்சியையும் இணைக்கிறது
– மாட்டிகாஸ் பெரீன்

17. நல்ல எண்ணமே சிறந்தது

நாம் நமது எண்ணங்களின் மீது கவனம் வைக்க வேண்டும் கெட்ட எண்ணங்கள் மிகவும் ஆபத்தான திருடர்கள்.
– ஸ்ரீ அன்னை

18. எல்லா உயிர்களையும் நேசியுங்கள்

அன்பு நிறைந்த ஒருவர், மனிதர் படும் துன்பங்களைக் காட்டிலும், விலங்குகள் படும் துன்பத்தைச் சகித்துக் கொள்ளமாட்டார்.
– ரோமெயின் ரோலந்து

( தெரு நாய்களுக்கு உணவளித்து உங்களைச் சுற்றி எப்போதும் அன்பான அதிர்வுகளையே பாதுகாப்பாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் ஆத்மாவாக எளிதில் உயர்வீர்கள்)

19. இயற்கை நமது நன்பன்

மனிதன் சில சமயங்களில் தான் தேடாதவற்றைக் கூடக் கண்டுபிடித்து விடுகிறான்
– அலெக்ஸாண்டர் ஃப்ளெயிங்

( தியானம் செய்யும் பழக்கத்தால் இந்த சக்தி நமக்குக் கிடைக்கிறது)

20. சிந்தனைக்கு

நாம் அறிந்துள்ளவைகளுக்கு அப்பால் ஒரு அறியும் சக்தி நம்முள் உள்ளது. நமது சிந்தனைகளை விட நாம் உயர்ந்தவர்கள்.
– ஸ்ரீ அன்னை

( எனவே, இறைவன் மீது முழு நம்பிக்கை வைத்து நேர்வழியில் வாழ்வோம்)

21. அன்பை வெளிப்படுத்துங்கள்

அன்பு விஸ்வமயமானது. நித்தியமானது. அது, என்றும் தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது. அது ஒரு தெய்வ சக்தியாகும். அதன் புறவெளிப்பாட்டின் அடையாளங்கள் எல்லாம் அதன் கருவிகளைச் சார்ந்தவை. அன்பு எங்கும் வியாபித்திருக்கிறது. அதன் இயக்கம் தாவரங்களிலும் காணப்படுகிறது. விலங்குகளிடத்திலும் அது செயல்படுகிறது. கற்களிலும் அதைக் காண முடியும்.
– ஸ்ரீ அன்னை

22. வாழ்வின் வெற்றி

வாழ்வின் வெற்றி என்பது ஒரு மனிதன் பின்பற்றும் சத்தியத்தைப் பொறுத்தது.
– ஸ்ரீ அன்னை

23. தரமே தங்கக்குணம்

முதல் விதியாக இலட்சியத்தில் உறுதியில்லாமல் இருக்கலாம். ஆனால், இலட்சிய உறுதி வேண்டுமெனில் முதல் தரமான மூன்று அம்சங்கள் தேவை. அஞ்சாமை, துணிவு, விடாமுயற்சி எனும் இந்த மூன்றும் இருந்தால் முதல் விதி நம்மிடம் இருந்து இலட்சியத்தை வெற்றிபெறச் செய்யும்.
– ஸ்ரீ அன்னை

24. எது உயிர் மூச்சு?

நம்பிக்கை என்பது மனித வாழ்வின் உயிர் மூச்சாகும் சூரிய ஒளி, ஊதா ஒளி மற்றும் உயிர்களின் வளர்ச்சியைப் போல் முக்கியமானதாகும்.
– நார்மன் வின்சென்ட்டில்

25. அன்பின் சக்தி

அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும். அனைத்தையும் நம்பும். அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும். அனைத்திலும் மன உறுதியாய் இருக்கும்.
– புனித பைபிள் கொரிந்தியர் 1:13

26. அன்பு மயமாக இருங்கள்

அன்பு மற்றும் கருணை என்பதில் புனிதமானது. புனிதமற்றது என்ற வித்தியாசமே இல்லை. அன்பு, எப்பொழுதும் தெய்வீகமானது தான். இறைவன் அன்புமயமாகவே இருக்கிறார்
– ஓஷோ ரஜனீஷ்

27. மனஉரம் வேண்டும்

கோழையான எந்த ஒரு மனிதனும் போர்க்களத்தில் எல்லோருடனும் சேர்ந்து எளிதாக வென்று விடுவான். அவனைத் தனியாகப் போரிடச் சொன்னால் கண்டிப்பாகத் தோற்றுவிடுவான். ஒவ்வொறு தனிமனிதனும் குறிக்கோளை அடைவதற்காக துணிச்சலுடன் வாழ்க்கையைச் சந்தித்து வெல்வது தான் உண்மையாக வாழ்ந்த வாழ்க்கையாகும்.
– ஜார்ஜ் எலியட்

28. யோசனை கூறும் தகுதி

யார் யார் நம்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் நமக்கு அறியும் ஆலோசனைகளையும் புகட்ட உரிமை உள்ளவர்களே.
– ஜார்ஜ் எலியட்

29. உறுதி

மனிதன் எதை உறுதியாக நினைக்கிறானோ அதுவாகவே அவன் மாறிவிடுவான்.
– புனித பைபிள்

30. உதவி கிடைக்க

நேர்மையும் நல்லெண்ணமும் இருக்கின்றபோதெல்லாம் இறைவனின் உதவியும் உள்ளது.
– ஸ்ரீ அன்னை