ஹொரணை பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் தங்கியிருந்த வீட்டிற்கு நேற்று முன்தினம் அதிகாலையில் கறுப்பு ஆடை அணிந்து முகத்தை மூடியவாறு நுழைந்த இனந்தெரியாத இருவர் படுக்கையில் இருந்த பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை மேவனபலனை சிரில்டன் தோட்டத்தின் உதகந்த பகுதியைச் சேர்ந்த ரமணி சகுந்தலா என்ற 58 வயதுடைய இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் பங்களாதேஷ் நாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும் அவர் சில காலங்களாக தனது தங்கையுடன் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இங்கிரிய ஹல்வத்துர பிரதேசத்தில் வசிக்கும் ஒரு பிள்ளையின் தாயான இளைய சகோதரியும் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் இந்த வீட்டில் தங்க வந்திருந்த நிலையில், நேற்று இருவரும் கதவுகளை மூடிக்கொண்டு உறங்கச் சென்றதாக சகோதரியின் வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் வீட்டின் அறையொன்றிலும், அவரது சகோதரி சமையலறைக்கு அருகிலுள்ள அறையொன்றிலும் உறங்க சென்றுள்ளனர்.
நள்ளிரவு 1.30 முதல் 1.45 மணிக்குள் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் இருவரும் தங்கையின் கை, கால்களை கட்டி வாயில் துணியை திணித்து விட்டு பக்கத்து அறைக்கு சென்று அக்காவை கொன்று விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் அணிந்திருந்த தங்கப் பொருட்கள் அதே நிலையில் இருந்த போதிலும் கொலையாளிகள் வீட்டின் அலமாரியை வெளியே இழுத்து தங்கப் பொருட்களையும், பணத்தையும் எடுத்துச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலையாளிகள் வீட்டிற்குள் நுழைந்த விதம் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும், கதவு அல்லது ஜன்னல் எதுவும் சேதமடையவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவன் பஹ்மி ஹசன் சலாமா இம்மாதம் ஜூன் 15ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கும் சாதனையை நிகழ்த்த உள்ளார் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய இவர் கடந்த மூன்று மாதங்களாக இந்தச் சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல் முனையில் இருந்து தலைமன்னார் வரையான 32 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி நேரத்தில் தாம் கடக்க எண்ணியுள்ளார் என சலாமா கூறினார்.
கடந்த 18ஆம் திகதி இவர் பாக்கு நீரினையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலைமன்னார் வரையிலான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்தி கடந்துள்ளார்.
இவருக்கான நீச்சல் பயிற்சிகளை விமானப்படை கோப்பிறல் றொசான் அபேசுந்தர வழங்கி வருகின்றார். இந்தப் பயிற்றுநர் 2021 ஆம் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்திச் சென்று மீளவும் அங்கிருந்து தலைமன்னாருக்கு 28 மணித்தியாலயம் 19 நிமிடம் 58 செக்கனில் நீச்சாலை நிறைவு செய்து ஆழிக்குமரன் ஆனந்தன் ஏற்படுத்தியிருந்த 51 மணி நேர சாதனையை முறியடித்த சாதனையாளர் ஆவார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த திருகோணமலையைச் சேர்ந்த ஹரிகரன் தனவந்தையும் இவரே பயிற்றுவித்திருந்தார்.
பஹ்மி ஹசன் சலாமா வுக்கு பாதுகாப்புப் படை,விளையாட்டு அமைச்சு மற்றும் இச்சாதனை ஒளிப்பதிவு இவருடன் மேலும் கண்காணிப்பு ஊடக போன்ற விடயங்களுக்கு அனுமதி பெற்றுள்ளார்.
இவர் ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட பாடசாலை மட்டத்தில் நீச்சல் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிக் கின்னங்களையும் பெற்றுள்ளர். இவரின் தந்தை, மற்றும் பயிற்றுவிப்பாளர், இவரது பாடசாலை அதிபர் ஆகியோர்களும் இவருக்கு உந்து சக்தியாக உள்ளார்.
தெகிடி படப்புகழ் பிரதீப் கே விஜயன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பாலவாக்கத்தில் வசித்து வந்த நடிகர் பிரதீப் கே விஜயன், கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை என்றும் நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் அவரது தொடர்பு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதனையடுத்து சந்தேகமடைந்து பொலிஸார் உதவியோடு அவரது வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, பிரதீப் கே விஜயன் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பிரதீப் கே விஜயன் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
தமிழில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் நடித்த தெகிடி திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஒரு நாள் கூத்து, என்னோடு விளையாடு, மீசைய முறுக்கு, மேயாத மான், நெஞ்சில் துணிவிருந்தால், திருட்டு பயலே 2, சங்கு சக்கரம், இரும்புத்திரை, ஆடை, கென்னடி கிளப், ஹீரோ, மனம், உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘ருத்ரன்’ படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், அவரது திடீர் மரணம் பிரதீப் கே விஜயன் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, வீட்டின் பொருட்கள் மற்றும் உடமைகளுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. குறித்த சம்பவமானது நேற்று நள்ளிரவு 12:15 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்.மாவட்ட ஊடகவியலாளரான தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீதே இவ்வாறு அடையாளம் தெரியாத சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் வீட்டின் சில பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதுடன், வீட்டின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
சில சமூக ஊடகங்கலில் வரும் போலிச் செய்திகளை அடிப்படையாக வைத்து அதனை தவறாக புரிந்து கொண்ட சிலரால் தான் ஒரு ஊடகவியலாளர் என்ற ரீதியில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாகவும், இது ஒரு ஊடக அடக்குமுறை எனவும் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு உரிய தீர்வை பெற்றுத்தரக்கோரி பொலிஸ் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் மருத்துவரே உயிரை மாய்த்துள்ளார். கொழும்பை சேர்ந்த மருத்துவர் , காதல் விவகாரத்தினால் உயிரை மாய்த்திருக்கலாம் என கருதப்படுகிறது.
அதேவேளை அவரது காதலியென கருதப்படும் யுவதியொருவர் தொலைபேசியில் வழங்கிய தகவலை வைத்தியசாலை நிர்வாகத்தினர், வைத்தியரின் விடுதி கதவை உடைத்து சென்று பார்த்த போது, வைத்தியர் சடலமாக காணப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அவரது மூக்கிற்குள் பஞ்சுகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் ஏதோ ஒரு வகை மருந்தை செலுத்தி உயிரை மாய்த்திருக்கலாமென கருதப்படுகிறது.
மின்சாரம் தாக்கி 17 வயது பாடசாலை மாணவி உயிரிழந்துள்ளதாக துரதிஷ்டவசமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நுகேகொட மஹாமாயா பெண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் நிஷானி பியுமிகா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நிஷானி பியுமிகா நேற்று தனது சகோதரியுடன் பாடசாலை முடிந்து வீடு திரும்பியிருந்தார். பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்த நிஷானி, வீட்டுக்கு வந்த பின் செயல்படாத நிலையில் இருந்த தையல் இயந்திரத்தை இயக்க முயற்சி செய்துள்ளார்.
தையல் இயந்திரத்தின் மோட்டர் மற்றும் வயருடன் இணைக்கப்பட்டிருந்த மின்சார பிளக்கை அறையின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த பிளக் பொயிண்டுடன் இணைக்க மாணவி முயற்சித்த போது அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளது.
இதனை அடுத்து தவறான முறையில் மின்சாரம் பெற முயன்றபோது மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவரது அலறல் சத்தம் கேட்ட அயல் வீட்டு பெண் ஒருவர், அறையில் விழுந்து இருந்த மாணவியை பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அதற்குள் அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நிஷானி பியுமிகாவின் தந்தை கடந்த 2023 ஆம் ஆண்டு மலேசியாவில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கு வேலைக்காக சென்ற நிலையில் பாட்டியுடன் மாணவி வசித்து வந்துள்ளதாகவும் பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் (Sri Lanka) நேற்றைய தினத்தை விட இன்று (12.06.2024) தங்கத்தின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதற்கமைய, 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,830 ரூபாவாகவும் 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 198,650 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,770 ரூபாவாகவும் 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 182,100 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தங்கத்தின் விலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விசுவமடு பகுதியினை சேர்ந்த 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 24 வயது இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசுவமடு தொட்டியடி பகுதியினை சேர்ந்த சிறுமியை காதலித்த நிலையில் இருவரும் தலைமறைவாகியுள்ளனர்.
இதனையடுத்து இளைஞனை கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பொலிஸார் தேடிவந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் சிறுமியை யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் உறவினர்களின் வீடுகளில் தங்கி நின்று பின்னர் வெள்ளப்பள்ளத்திற்கு சிறுமியினை வீட்டிற்கு கூட்டிவந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இளைஞர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் டிப்பர் வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை (12) அதிகாலை யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், நுணாவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமொன்று அவரை மோதியுள்ளது.
இதன்போது இவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். குருணாகல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
காட்டில் உறங்கிக்கொண்டிருந்த காட்டு யானையை இளைஞர் ஒருவர் தொடும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது. இந்நிலையில் சம்பவம், தொடர்பில் அநுராதபுரம் வனவிலங்கு உதவிப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த காணொளி அநுராதபுரம் ரணஜயபுர காட்டுப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ரணஜயபுர காட்டுப்பகுதிக்குள் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த யானையின் அருகில் மெதுவாகச் சென்று அதைத் தொட்டுவிட்டுவரும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது.
காட்டு யானையை எப்படி நெருங்குவது என்பதை காண்பிக்க, ஒரு சாகச செயலாக இந்த காணொளியை இளைஞர்கள் பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர்.
காணொளி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள வனவிலங்கு திணைக்களம், இது ஆபத்தான செயல் என்றும் , காணொளியை பார்த்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட எவரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் (12.06.2024) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றரிலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
அத்துடன் இலங்கையின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்குச் சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தலங்கம, தலஹேன பகுதியில் அமைந்துள்ள வீட்டில் மனைவியைக் கொன்று 5 நாட்களாக சடலத்தை மறைத்துவைத்த கணவனும், சந்தேகநபரான நண்பரும், நேற்று அதிகாலை தலங்கம பொலிஸில் சரணடைந்துள்ளனர்.
சந்தேகத்திற்கிடமான கணவனும், ஐஸ் போதைப்பொருள் பாவனைக்கு அதிக அடிமையாகியிருந்த அவரது நண்பரும், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் அவரைக் கொன்றதாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
31 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான தாருகா நதி குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது சடலம் தலங்கம, தலஹேன பகுதியில் உள்ள வாடகை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்ட மனைவி, கணவர் மற்றும் அவர்களது குழந்தையுடன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
சந்தேகநபரின் கணவர் 7-8 வருடங்களாக நண்பர் ஒருவருடன் பழகியுள்ளார், அவர் கலேவெல பிரதேசத்தில் வசிப்பவராகும்.
கடந்த 6 ஆம் திகதி கணவர் தனது நண்பருடன் வீட்டில் ஐஸ் போதை பொருள் பருகிக் கொண்டிருந்த போது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
பின்னர் கணவரின் நண்பர் மனைவியை கத்தியால் தலையில் அடித்து கொன்று உடலை வீட்டில் மறைத்து வைத்துவிட்டு எதுவும் நடக்காதது போல் இருந்தனர்.
நேற்று அதிகாலை இருவரும் தலங்கம பொலிஸில் சரணடைந்ததுடன் பெண்ணை தாங்களே கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடுகன்னாவ பிரதேசத்தில் வசிக்கும் இளைஞன் ஒருவர் “ஜனாதிபதி கடவுளே எனக்கு உதவு” என்ற பதாதையை ஏந்தியவாறு நடந்து செல்லும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து கோட்டை ஜனாதிபதி மாளிகை வரை நடந்து செல்லும் பேரணியை குறித்த நபர் ஆரம்பித்துள்ளார். குறித்த நபர் வங்கியொன்றில் 15 இலட்சம் ரூபாவை கடனாக பெற்றுள்ளார்.
இந்நிலையில், அதனைத் தீர்க்க முடியாத காரணத்தினால், ஜனாதிபதியிடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்த்து இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அந்த உதவியை பெற்றுக் கொள்வதற்காக அவர் நடை பேரணி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியில் மோதி 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார்.
திஹாரிய, கல்கெடிஹேன பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷனுக ரவிந்து என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விற்பனை தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
குறித்த இளைஞன் விபத்தில் சிக்கிய நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்துள்ளார். இந்த நிலையில் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடியுள்ளார்.
மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து, இளைஞரின் பெற்றுார் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கு முன்னர் குறித்த இளைஞனின் விருப்பத்தை கருத்தில் கொண்டு குடும்பத்தாரின் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய, நேற்றிரவு இளைஞனின் உறுப்புகள் அகற்றப்பட்டு மூன்று பேருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 03ஆம் திகதி காலை இந்த இளைஞன் விபத்தில் சிக்கியுள்ளார். கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப், இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்து வத்துப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த விபத்தின் காரணமாக அந்த இளைஞன் தலையில் பலத்த காயம் அடைந்து விபத்து நடந்த நேரம் முதல் சுயநினைவின்றி இருந்துள்ளார். விபத்து நடந்த போது, அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது.
விபத்தின் பின்னர், நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.