காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற இளைஞன் மரணம்!!

கண்டி திருத்துவக் கல்லூரி ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 19 வயதான இளைஞன் திடீர் மரணமடைந்துள்ளார்.

ஷபீர் அஹமட் என்ற இளைஞன் கண்டி தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

நுரையீரலில் கிருமிகள் புகுந்ததால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த போது தவறி விழுந்ததில் காலில் ஏற்பட்ட காயம் மோசமடைந்துள்ளது.

சில நாட்களின் பின்னர் குறித்த மாணவன் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

சிகிச்சையின் பின்னர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் மாணவனின் பெற்றோர் அவரை கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அங்கு நுரையீரலில் விஷம் கலந்திருப்பது தெரியவந்ததையடுத்து சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது.

கல்லூரியின் ஆதரவுடன் விசேட சிகிச்சைக்காக விமானப்படையின் ஹெலிகொப்டர் மூலம் மாணவன் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்ட நிலையில் நேற்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு சென்ற பேருந்தில் ஏற்படவிருந்த அனர்த்தம் : 40 உயிர்களை காப்பாற்றிய சாரதி!!

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை பாரிய விபத்தில் இருந்து தடுத்து பயணிகளின் உயிரை காப்பாற்றிய சாரதி தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

இடங்கொட கலத்துர வீதியில் தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாரிய பள்ளத்தில் விழும் நிலையில் சாரதியின் சாமர்த்தியத்தால் விபத்து தடுக்கப்பட்டது.

நேற்று காலை கலவானையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது பேருந்தில் 40 பயணிகள் பயணித்துள்ளனர்.

வீதியின் ஓரத்தில் இருந்த மதில் நோக்கி பேருந்து திருப்பி, ஏற்படவிருந்த பாரிய விபத்தை சாரதி தடுத்துள்ளார். வீதியின் மறுபுறம் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் விபத்து ஏற்பட்டிருந்தால், பல மரணங்கள் ஏற்பட்டிருக்கும் என பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் சேறும் சகதியுமாக இருப்பதால் பல வாகனங்கள் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவத்துறைக்கு தெரிவான மாணவன் பரிதாப மரணம் : தவிப்பில் குடும்பம்!!

மட்டக்களப்பு- காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன் இன்று வெள்ளிக்கிழமை (14) காலை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த அக்சயன் , குடும்பத்தின் ஒரேயொரு பிள்ளை என தெரியவருகின்றது. காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத் துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயனும் ஒருவராவார்.

உயிரிழந்த மாணவர் அண்மையில் வெளியான G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23 வது இடத்தில் மருத்துவ துறைக்கு தெரிவாகியிருந்தார்.

அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்கு சென்று அங்கு தரித்துவிட்டு வெள்ளிக்கிழமை (14) காலை வரும்பொழுது பொத்துவில் மற்றும் லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடிய போது நீரில் மூழ்கி மரணமானார்.

உயிரிழந்த மாணவரின் உடல் லாகுகலை வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மருத்துவ துறைக்கு தெரிவான எஸ்.அக்சயன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் காரைதீவு பிரதேசத்தை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

கணவரின் குடிப்பழக்கத்தால் 9 மாத கைக்குழந்தையுடன் மனைவி எடுத்த விபரீத முடிவு!!

மயிலாடுதுறை அருகே குடும்பத் தகராறு காரணமாக 9 மாத கைக்குழந்தையுடன் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள மங்கை நல்லூர் ஜெயராஜ் நகரை சேர்ந்தவர் விக்னேஷ்(30). ஹோட்டல் தொழிலாளியான இவருக்கும், சங்கீதா (25) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது.

இவர்களுக்கு 9 மாதத்தில் ஆரியன் என்ற ஆண் குழந்தை உள்ளது. விக்னேஷுக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு விக்னேஷ் வீட்டில் இல்லாதபோது, சங்கீதா மற்றும் குழந்தை ஆகியோர் தனியாக இருந்துள்ளனர். திடீரென அவரது வீட்டில் இருந்து சத்தம் கேட்பது அறிந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு, சங்கீதாவும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து பெரம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக இளம் பெண் கைக்குழந்தையுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விஷவாயு தாக்கி உயிரிழந்த சிறுமி.. மூக்குத்தி போட்டு அழகு பார்த்த பாட்டி!!

எத்தனை கனவு கண்டிருப்பாள் அந்த சிறுமி. எதிர்கால வாழ்க்கை குறித்த அத்தனைக் கனவுகளும் பாழாய் போனது. உயிரிழந்த சிறுமிக்கு ஆசைப்பட்டது போலவே மூக்குத்தி போட்டு பாட்டி அழகுப்பார்த்ததைக் கண்டு உறவினர்கள் கதறியழுதனர்.

புதுச்சேரி மாநிலத்தில் ரெட்டியார்பாளையம் புதூர் அருகே விஷவாயு தாக்கி 15 வயது சிறுமி உட்பட 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் உயிரிழந்த சிறுமி செல்வராணிக்கு மூக்குத்தி குத்த வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை. இந்த ஆசையை அவருடைய பாட்டி நிறைவேற்றியுள்ளார். சிறுமியின் உடலுக்கு அவர் கண் கலங்கியபடி தங்க மூக்குத்தி அணிவித்தார்.

இச்சம்பவம் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் கண்களில் நீரை வரவழைத்தது.புதுச்சேரியில் நேற்று முன் தினம் காலை விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மாநில முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.பி.,க்கள் செல்வ கணபதி, வைத்திலிங்கம், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்எல்ஏக்கள் சிவசங்கர், சம்பத், செந்தில்குமார், ஆட்சியர் குலோத்துங்கன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

மேலும், அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்தனர். அவர்களிடம் நடந்த விவரங்களை முதல்வர் ரங்கசாமி கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “விஷவாயு பரவாமல் தடுக்க ரெட்டியார்பாளையம் பகுதியில் மட்டுமில்லாமல் புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்யப்படும்.

விஷவாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும். அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று குறிப்பிட்டார்” என்றார்.

சுற்றுச்சூழல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து எவ்வித வாயு பரவியது என ஆய்வு மேற்கொண்டனர். அதே சமயம் புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் உள்ள வீடுகளில் கழிவறை வழியாக விஷவாயு பரவலாம் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அரசு தரப்பில் உடனடியாக அப்பகுதியில் 3 தெருக்களில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேறும்படி மைக் மூலம் எச்சரிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.

பாதிக்கப்பட்ட தெரு மட்டும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் வசித்த மக்கள் முகக் கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அப்பகுதி மக்கள் முகக்கவசம் அணிந்துள்ளனர்.

அப்பகுதியில் இருந்த 200 வீடுகளில் இருந்த மக்கள் பாதுகாப்புடன் அருகேயுள்ள இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

கணவன், மனைவி இருவரும் எடுத்த விபரீத முடிவு : நிர்க்கதியான 2 குழந்தைகள்!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த அண்ணாமலை நகர் பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் . இவர் அதே பகுதியில் காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருடைய மனைவி சத்யா, மகன் தீபக், மகள் ஹரிணி. பிரகாசுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவு இருந்து வந்தது. இந்நிலையில் பிரகாஷ் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த போது இது குறித்து கணவன் மனைவி இடையே வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.

இதில் மனம் உடைந்த சத்யா ரூமுக்குள் உள்ளே சென்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதிர்ச்சி அடைந்த பிரகாஷ் வீட்டிலேயே ஹாலில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தம்பதிகள் இருவரும் நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே நேரத்தில் கணவன் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் குழந்தைகள் இருவரும் பெற்றோரை இழந்து நிர்க்கதியாக நின்ற காட்சி காண்பவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

9 வயது சிறுவனுக்கு ஒரே வாரத்தில் 1.7 கோடி ரூபா இலாபம் : எப்படி சாத்தியம்?

சந்திரபாபு நாயுடுவின் வெற்றியை தொடர்ந்து அவரது பங்குகள் உச்சத்தை தொட்டதால் அவரது குடும்பத்தினருக்கு கோடிக்கணக்கில் வருமானம் கிடைத்துள்ளது.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை கட்சியாக மாறியுள்ளது. இதனால், நான்காவது முறையாக ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக் கொண்டார்.

இதனால், சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் நடத்தும் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு உச்சத்தை தொட்டது.

அதாவது பங்குகளின் விலை இரண்டு வாரங்களில் இரண்டு மடங்கு அதிகரித்ததால் அந்த நிறுவனத்தில் 35.7 சதவீதபங்குகளை வைத்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

இந்த நிறுவனத்தில், சந்திரபாபு நாயுடு மனைவி புவனேஸ்வரிக்கு 34.37 % பங்குகளும், மகன் லோகேஷுக்கு 10.82 % பங்குகளும், மருமகள் பிராமணிக்கு 0.46 % பங்குகளும், அவரது 9 வயது பேரன் தேவன்ஷுக்கு 0.06 % பங்குகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

அந்தவகையில் பேரன் தேவன்ஷ் வைத்திருக்கும் 56,075 பங்குகளின் மதிப்பு ஜூன் 3 -ம் திகதி ரூ.2.4 கோடியாக இருந்த நிலையில் ரூ.4.1 கோடியாக அதிகரித்துள்ளது.

அதன்படி, ஒரே வாரத்தில் தேவன்ஷுக்கு ரூ.1.7 கோடி லாபம் கிடைத்துள்ளது. ஹெரிடேஜ் ஃபுட்ஸ் பங்கு மதிப்பு மும்பை பங்குச் சந்தையில் 52 வார அதிகபட்சமாக ரூ.727.9-ஐ எட்டியதால் ரூ.1,225 கோடி லாபத்தை பெற்றுள்ளது.

இலங்கையில் வேப்ப மரத்தில் அருவியாக கொட்டும் பால் : வியப்பில் குவியும் மக்கள்!!

கந்தளாய், டோசர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் இருந்து பால் திரவம் போன்று வெளியே ஆரம்பித்துள்ளது. கடந்த 9ஆம் திகதி முதல் இந்த திரவம் வெளியேற ஆரம்பித்துள்ளதை பார்வையிட காண ஏராளமானோர் குவித்து வருகின்றர்.

அஜித் பிரேமசிறி என்பவரின் தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் இருந்து வரும் இந்த திரவம், இனிப்பான சுவை கொண்டதாகும். அங்கு வரும் அனைவரும் மிகவும் சுவையாக உள்ளதாக பருகி வருகின்றனர்.

புதிய வீடு கட்டுவதற்கான அடித்தளத்தை வெட்டத் தொடங்கிய அன்று, கிளைகளை அகற்றும் போது குறித்த மரத்தில் இருந்து வெள்ளை நிற திரவம் வெளியேறியதாக வீட்டின் உரிமையாளராக அஜித் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த மாற்றம் தனக்கு அதிர்ஷ்டவசமாக நடக்கின்றதா அல்லது துரதிர்ஷ்டவசமாக நடக்கின்றதா என்ற கேள்வி எனக்குள் உள்ளது என அஜித் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

விஞ்ஞான ரீதியாக வேப்ப மரத்தில் இவ்வாறான திரவம் வெளியேறுவது இயற்கையான ஒன்றாகும். எனினும் கசப்பு தன்மையை கொண்ட வேப்ப மரத்தில் இனிப்பான திரவம் வெளியேறுவது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

காதலியை மகிழ்விக்க முயன்ற காதலனுக்கு நேர்ந்த கதி!!

குருநாகலின் தனது தந்தையின் சுமார் 16 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை திருடி காதலிக்கு செலவு செய்த மகன் மற்றும் காதலியின் தந்தை ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காதலிக்கு அன்பளிப்பு பொருட்களை கொள்வனவு செய்வதற்காக காதலியின் தந்தையுடன் திருடிய நகைகளை அரச வங்கியில் அடகு வைப்பதற்காக சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் அவற்றைத் திருடியவரின் மகனும் அவரது காதலியின் 54 வயதுடைய தந்தையும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்க நகை மற்றும் பணத்தை பத்திரமாக வைத்து விட்டு தந்தை தனது தொழில் நிமித்தமாக சென்றுள்ளார். இதன்போது வீட்டிற்கு நுழைந்த மகன் அதனை திருடிக் கொண்டு வீட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்த நிலையில் அதனை அடகு வைப்பதற்காக செல்வதாக தந்தைக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சோதனையின் போது, ​​அடகு வைக்கப்படவிருந்த 03 தங்க சங்கிலிகள், 04 மோதிரங்கள், 03 பென்டன்ட்கள், ஒரு கை சங்கிலி மற்றும் இரண்டு ஜோடி காதணிகள் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தப் பணத்தில் தன் காதலிக்கு பரிசுகள் வாங்கத் தயாராக இருந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் திருடப்பட்ட 58,000 ரூபாய் பணத்தில் ஐந்நூறு ரூபாய்க்கும் குறைவாகவே வைத்திருக்கிறார்.

எல்லாவற்றையும் செலவழித்து அவருக்கும் காதலிக்கும் ஒரு ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி மற்றும் இரண்டு பவர் பேங்க் வாங்கிக் கொடுத்துள்ளார்.

23 வயதான சந்தேக நபர் மூன்று வன்முறை குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குகள் இன்னும் விசாரணையில் இருப்பதாகவும், சந்தேகநபர் ஐந்தாண்டு இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனையை அனுபவித்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்கள் இருவரும் கல்கமுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தாடியில் 1700 Kg எடையினை கட்டி இழுத்து ஈழத் தமிழர் உலக சாதனை!!

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் வசித்து வரும் 60 வயதான செல்லையா திருச்செல்வம் தனது தாடியில் 1,700 kg எடையினை கட்டி இழுத்து உலகசாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வைத்து, டாடா ஏசி ஊர்தியில் அதன் ஓட்டுநர், அறிவிப்பாளர் மற்றும் இருவர் என நான்கு பேரை வைத்து, 1,700 kg எடையினை கொண்ட( TATA) ஊர்தியை தனது தாடியில் கட்டி 510 மீட்டர் தூரம் கட்டியிழுத்து செல்லையா திருச்செல்வம், சோழன் உலக சாதனை படைத்தார்.

ஏற்கனவே இவர் இலங்கையில் வைத்து 4 உலக சாதனைகள் படைத்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்தது.

சோழன் உலக சாதனை படைத்த திருச்செல்வத்திற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், பதக்கம், அடையாள அட்டை போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் அவர்களால் வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்வின் இறுதியில் உலக சாதனை படைத்த செல்லையா திருச்செல்வம் அவர்களை அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

 

பட்டப்பகலில் வீதியில் நின்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

வீதியில் காத்திருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி மற்றும் மூன்று பென்டன்களை கொள்ளையடித்து தப்பிச் செல்லும் காட்சி சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் கெஸ்பேவ, பண்டாரகம வீதியிலுள்ள மாகந்தன பல்பொருள் அங்காடிக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 2.5 பவுன் தங்க நகைகள் இதன்போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் பல்பொருள் அங்காடிக்கு சென்று வீதிக்கு வந்து முச்சக்கரவண்டிக்காக காத்திருந்த போது, ​​அவர் அருகில் நின்றிருந்த ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், திடீரென அவரது கழுத்தில் இருந்த நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.

குறித்த மோட்டார் சைக்கிள் மொரட்டுவை பிரதேசத்தில் பெண்ணொருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், கடந்த 10ஆம் திகதி இரவு எகொடவீர பிரதேசத்தில் வைத்து திருடப்பட்டதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கெஸ்பேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோன் ஐஸ்கிரீம் இற்குள் மனித விரல் : ஆசையாக சுவைத்துகொண்டிருக்கையில் அரண்டுபோன பெண்!!

கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று இருப்பதை கண்டு பெண் மருத்துவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தியா – மும்பையின் மலாட் பகுதியில் 27 வயதான பெண் வைத்தியர், ஒன்லைனில் கோன் ஐஸ்கிரீம் ஒன்றை ஓர்டர் செய்துள்ளார்.

கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது துண்டிக்கப்பட்ட மனித விரல் ஒன்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு ஐஸ்கீரிமுடன் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து கோன் ஐஸ்கிரீமில் இருந்தது மனித விரல் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அதனை எப்.எஸ்.எல்.க்கு (தடயவியல்) பிரிவுக்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ளனர். எனினும் அப்பெண் ஐஸ்கிரீமில் பாதிக்கு மேல் சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஏதோ ஒன்று வாயில் தட்டுப்படவே என்ன என அவதானித்துள்ளார்.

அபோது , ஐஸ்கிரீமில் துண்டிக்கப்பட்ட சுமார் 2 சென்றி மீற்றர் அளவான மனித விரல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பில் மலாட் பொலிஸார் வெளியிட்ட அறிக்கையில்,

“மும்பையின் மலாட் பகுதியில், ஒன்லைனில் ஓர்டர் செய்த கோன் ஐஸ்கிரீம்க்குள் ஒரு மனித விரலின் துண்டை கண்டு ஒரு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பிறகு அந்த பெண் உடனடியாக மலாட் பொலிஸ் நிலையத்தை அடைந்து புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஐஸ்கீரீம் நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். அதோடு ஐஸ்கிரீம் மற்றும் ஐஸ்கிரீமில் காணப்படும் மனித உடல் உறுப்பை FSL (Forensics)க்கு அனுப்பியுள்ளோம் என கூறியுள்ளது.

 

கணவனுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவை ஒரே நாளில் சமைத்த கர்ப்பிணிப் பெண்!!

ஜப்பான் நாட்டில் கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவை ஒரே நாளில் கர்ப்பிணி பெண் ஒருவர் சமைத்துள்ள சம்பவம் ஒன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணி பெண் தனது கணவருக்காக, 30 நாட்களுக்கு தேவையான உணவை சமைத்துள்ளார்.

தான் பிரசவத்திற்கு சென்றுவிட்டால், கணவர் வெளியில் சரியாக சாப்பிடமாட்டார் எனக் கூறி கவலை தெரிவித்து சமையல் செய்துள்ளார்.

மேலும், இதற்கு கவலை தெரிவித்து, அதனை காணொளியாக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிரசவத்திற்கு செல்வதற்கு முன்பு, தனது கணவருக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவை தயாரித்து, குளிர்சாதனப் பெட்டியில் சேமித்து வைத்துவிட்டார்.

இதனைப் பார்த்த பலர் பலவிதமான கலவையாக கமெண்டுகளை குவித்து வருகின்றனர். மேலும், கர்ப்பிணி இவ்வாறு வேலை செய்யலாமா? என விமர்சித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தந்தையை தாக்கிவிட்டு 14 வயது சிறுமியை பாதாள அறையில் அடைத்து வைத்த காதலன்!!

மொனராகலை பாதாள அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 வயது சிறுமி ஒருவர் பொலிஸாரினால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தல பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட 14 வயதான சிறுமி ஒருவரை இவ்வாறு பாதாள அறையில் மறைத்து வைத்திருந்த நிலையில், மீட்டுள்ளார்.

குறித்த இந்த சிறுமியை இன்று மதியம் மீட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

புத்தல – கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றிற்கு கடந்த 9ம் திகதி வருகைத் தந்த 3 இளைஞர்கள், சிறுமியின் தந்தை மீது தாக்குதல் நடாத்தி, சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர்.

சிறுமியை காதலிப்பதாக கூறும் 20 வயதான இளைஞனினாலேயே இந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெல்லவாய நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போதிலும், சிறுமியை பொலிஸாரினால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனைத் தொடர்ந்து பொலிஸார் நடாத்திய விசாரணைகளில், பிரதான சந்தேகநபருடன் வருகைத்தந்த மேலும் இரண்டு சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதையடுத்து, பொலிஸார் சந்தேகநபர்களிடம் நடாத்திய விசாரணைகளில், சிறுமி மறைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் இடம் தொடர்பான தகவல்களை அறிய முடிந்துள்ளது.

புத்தல பகுதியிலுள்ள பிரதான சந்தேகநபரின் உறவினர் ஒருவரின் வீட்டில் நிலத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த ஒரு பாதாள அறையிலேயே சிறுமி மறைத்து வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குறித்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார், சிறுமியை மீட்டுள்ளனர். சிறுமியை மறைத்து வைக்கும் நோக்கில், ஒரு மாதத்திற்கு முன்பே இந்த அறை நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

5 அடி உயரமும், ஆறு அடி அகலமும் கொண்ட இந்த அறையில், காற்றோட்டத்திற்காக இரண்டு தூளைகள் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், குறித்த பாதாள அறையும், அங்கு சிறுமி இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நிலக்கீழ் பாதாள அறையிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுமியை கொடூரமாக தாக்கிய தந்தை : காணொளி வெளியிட்டவருக்கு பணப்பரிசு!!

முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியிலுள்ள வீடொன்றில் தந்தை ஒருவர் சிறுமியை கொடூரமாக தாக்கும் காணொளியை பதிவு செய்த இளைஞன் இன்று பொலிஸாரினால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த இளைஞருக்கு இன்று (12) பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 5 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

தருஷ சந்தருவன் கொடிகார என்ற இளைஞரே இவ்வாறு பாராட்டப்பட்டுள்ளார்.

இந்த காணொளியின் வாயிலாக குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்வரும்19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டதுடன், சந்தேகநபர்களை எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதவிய நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த தாக்குதலினால் பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பொறுப்பில் உள்ளார்.

வவுனியாவில் அதிகரிக்கும் போதைப்பொருள் விற்பனை : பொலிஸார் மீது குற்றச்சாட்டு!!

வவுனியாவில் மாவா எனப்படும் போதை கலந்த பாக்கு விற்பனை அதிகரித்து வருவதாக பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

எனினும், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கி இருந்த போதிலும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா பூந்தோட்டம் வீதியில் தென்னந்தோட்டத்தடி மற்றும் பூந்தோட்டம் சாந்தி, கற்குழி, தேக்கவத்தை உட்பட வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறான மாவா எனப்படும் போதை கலந்த பாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியிருந்த போதிலும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் குறித்த பகுதிகளில் இளைஞர் குழுக்கள் அதிகளவில் கூடி நின்று குறித்த போதை பாக்கினை கொள்வனவு செய்து உண்பதை அவதானிக்க கூடியதாக இருப்பதாக பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இந்நிலையில், 107 என்கின்ற போதை ஒழிப்பு தொடர்பான யுக்திய நடவடிக்கைக்கான இலக்கங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் பொலிஸார் இவ்வாறான விடயங்களை கண்டும் காணாது இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.