க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்ற மாணவனை தீவைத்து எரித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச்சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு பல்லேகல – தும்பர சிறைச்சாலையில் இருந்த நிலையில் சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச்சென்றுள்ளார்.
சந்தேகநபர் நேற்று மாலை 5 மணியளவில் வைத்தியசாலையிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் பல்லேகல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் திகதி அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவரின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்களது வீடுகளை சுத்தம் செய்யும் பொருட்டு இந்த நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், 10,000 ரூபாய் நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
பிரபல நடிகை ரிஷ்டா லபோனி ஷிமானா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று முன் தினம் காலமானார். அவருக்கு வயது 39. மூளை ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக உயிரிழந்ததாக அவரது சகோதரர், நடிகை ஷிமானா காலமான செய்தியை அறிவித்துள்ளார்.
பிரபல மாடலும் நடிகையுமான ரிஷ்டா லபோனி ஷிமானா நேற்று முன் தினம் ஜூன் 4ம் தேதி காலை பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் (பிஎஸ்எம்எம்யு) மூளைச்சாவு காரணமாக காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சகோதரர் எஜாஸ் பின் அலி மற்றும் அவரது முன்னாள் கணவர் பாடகர் பர்வேஸ் சாசாத் ஆகியோர் இந்த தகவலை உறுதிப்படுத்தினர்.
மூளைச்சாவு அடைந்த நிலையில், கடந்த 14 நாட்களாக சுயநினைவின்றி இருந்த நடிகை ஷிமானா கடந்த மே 21ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது குடும்பத்தினர் அளித்த தகவல்களின் படி, மே 21ம் தேதியன்று இரவு ஷிமானாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதும், டாக்காவின் தன்மோண்டியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர், அடுத்த நாள் மேல் சிகிச்சைக்காக தன்மோண்டியில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
பின்னர் தலைநகர் அகர்கானில் உள்ள தேசிய நரம்பியல் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு மே 25ம் தேதியன்று மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில், மே 29ம் தேதி அவருக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நடிகை ரிஷ்டா லபோனி ஷிமானா 2006ம் ஆண்டில் நட்சத்திரங்கள் நிறைந்த லக்ஸ்-சேனல் ஐ சூப்பர் ஸ்டார் போட்டியுடன் திரையுலகில் நுழைந்தார். அந்த சீசனின் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் நடித்திருந்த “தாருசினி ட்விப்” திரைப்படம் ரசிகர்களிடையே பெரிதும் கொண்டாடப்பட்டது. ஷிமானா தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்துள்ளார்.
கடந்த 2014ல் பிரபல பாடகர் பர்வேஸ் சசாத்தை திருமணம் செய்து கொண்ட ஷிமானா 2016ல் கர்ப்பமடைந்த நிலையில், திரைத்துறையில் இருந்து சிறிது காலம் ஒதுங்கினார். இறுதியில் இந்த ஜோடி விவாகரத்து பெற்றது. பின்னர் 2019ல் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் திரையுலகில் நுழைந்தார்.
தஞ்சாவூர் வடக்குவாசல் சுண்ணாம்பு காள்வாய் சாலையை சேர்ந்தவர் மெய்யழகன் (43). கட்டிட தொழிலாளி இவரது மனைவி மல்லிகா (36). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குழந்தைகளுடன் மல்லிகா சென்றிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மெய்யழகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டில் தூங்கிய மெய்யழகன் காலை வெகுநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மெய்யழகன் இறந்து கிடந்தார்.
குழந்தைகளுடன் சிவகங்கை சென்ற அவரது மனைவி மல்லிகாவுக்கு தகவல் தெரிவித்தனர். மனமுடைந்த மல்லிகா தனது கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார்.
இறுதிச்சடங்கு முடிந்து, உடல் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. கணவரை தூக்கிக்கொண்டு செல்வதை பார்த்து மயங்கி விழுந்த மல்லிகாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் மருத்துவரான மனைவியை நபர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் விரிவான பின்னணி வெளியாகியுள்ளது.
லாஸ் வேகாஸ் பகுதியில் வசித்து வந்த 33 வயது சிவ கும்மி என்பவரே மருத்துவரான தமது மனைவி Gwendoline Amsrala என்பவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு சிவ கும்மிக்கு 10 முதல் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
UNLV மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மருத்துவர் பயிற்சி நிறைவடைந்ததை கொண்டாடும் பொருட்டு ஆம்ஸ்ரலா தமது நண்பர்களுடன் இரவு மது விருந்துக்கு சென்றுள்ளார்.
இந்த சம்பவம் கும்மிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியதுடன், கணவன் – மனைவிக்கு இடையே சண்டையை மூட்டியுள்ளது. ஒருகட்டத்தில் தமது மனைவியை கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அத்துடன் 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவலும் தெரிவித்துள்ளார். சம்பவத்தன்று பகல் 8.15 மணிக்கு 911 இலக்கத்திற்கு தொடர்புகொண்டு, இறக்க வேண்டும் என்று விரும்புவதாகவும், ஆனால் இதுவரை இறக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உடல் முழுவதும் தாம் கத்தியால் காயப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் சம்பவம் நடந்து 5 மணி நேரத்திற்கு பின்னர் தான் சிவ கும்மி அதிகாரிகளை தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
பூட்டப்பட்ட படுக்கையறைக்குள் தமது மனைவியின் சடலத்திற்கு அருகே இருந்துகொண்டே 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டுள்ளார். மனைவி ஏற்கனவே மரணமடைந்துள்ளதாகவும் அப்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
உடனடியாக சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், மிக மோசமான நிலையில் இருந்த கும்மியை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மேலும், அவரது மனைவி ஏற்கனவே மரணமடைந்துள்ளதாகவும் தெரியப்படுத்தினர்.
சிகிச்சையின் போதே கும்மி கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 முதல் 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது கடந்த மாதம் கிளார்க் கவுண்டி மாவட்ட சட்டத்தரணி அலுவலகத்துடன் கும்மி ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளார்.
இதனால் அவரது தண்டனைக் காலம் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக இருக்கும் என்றே கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் 405 நாட்கள் தண்டனை அனுபவித்துவிட்டார் என்றும், இரண்டாம் நிலை கொலை வழக்கு அவர் மீது பதியப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியாவில் இருந்து கழிவுகளுடன் பலூன்கள் அனுப்பட்ட நிலையில், அதற்கு பதிலடியாக தென் கொரிய சமூக ஆர்வலர்கள் 10 பலூன்களை அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பலூன்களில், வடகொரியா போன்று கழிவுகளை நிரப்பாமல், கிம் ஜோங் உன் எதிர்ப்பு பரப்புரைகளும் K-pop என உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்படும் பாடல்கள் தொகுப்பும் அனுப்பி வைத்துள்ளனர்.
சுமார் 700 பலூன்களில் கழிவுகளை அனுப்பி வைத்ததன் காரணத்தை வெளிப்படுத்தியுள்ள வடகொரியா, தென் கொரிய சமூக ஆர்வலர்கள் இதற்கு முன்னர் செய்த தவறான செயல்களுக்கான பதிலடி என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், பலூன்களை அனுப்புவதை முடித்துக் கொள்வதாக ஞாயிறன்று அறிவித்துள்ள வடகொரியா, தென் கொரியாவில் இருந்து பலூன்கள் பறக்க விடப்பட்டால் கட்டாயம் பதிலடி உறுதி என்றும் எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் சுதந்திர வட கொரியாவுக்கான போராளிகள் குழு 10 பலூன்களை வடகொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
அதில் 200,000 துண்டுப் பிரசுரங்கள் மற்றும் கொரிய பாப் இசை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பதிவு செய்யப்பட்ட 5,000 USB டிரைவ்கள், அத்துடன் ஆயிரக்கணக்கான ஒரு டொலர் பணத்தாள்கள் ஆகியவற்றை நிரப்பி அனுப்பியுள்ளனர்.
மேலும், மக்களின் எதிரி கிம் ஜோங் தென் கொரியாவுக்கு கழிவுகளை அனுப்பி வைத்தார், நாங்கள் வட கொரிய மக்களுக்கு அன்பையும் உண்மையையும் பரிசாக அனுப்பி வைக்கிறோம் என சுதந்திர வட கொரியாவுக்கான போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வில் 720-க்கு 720 என முழு மதிப்பெண்களை பெற்று விழுப்புரம் மாணவன் சாதனை படைத்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியான நிலையில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்த ரஜநீஷ், விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியை சார்ந்த ரெயில்வே அதிகாரியான பிரபாகரன், கல்லூரி பேராசிரியை விமலாதேவி தம்பதியின் மகன் ரஜநீஷ்.
நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்த அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் இனிப்புகள் ஊட்டி பாராட்டினர்.
சிறுவயதிலிருந்து மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த ரஜநீஷ் 10ஆம் வகுப்பில் 482 மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பில் 490 மதிப்பெண்கள் எடுத்தார்.
“நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் நீட்தேர்விற்கு சிறப்பு வகுப்புகளில் பயிற்சி பெற்று முழு மதிப்பெண்ணை பெற்றேன். டெல்லியில் உள்ள எய்ம்சில் பயின்று, இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக ஆக வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு.
இதற்காக அதிகமாக பயிற்சி மேற்கொண்டதில், அதற்கான பலன் கிடைத்துள்ளது. டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம்.
மேலும், தாய் விமலா தேவி, தொடர்ந்து உறுதுணையாக இருந்ததாகவும், உழைப்பினை கொடுத்தால் அதற்கான பலன் கிடைக்குமென அடிக்கடி வலியுறுத்தி வந்ததாகவும், கூறினார்.
கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் தனியார் பேருந்தை பின்னால் வந்த அரச பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரந்தாய் பகுதியில் இன்று (06)காலை 10.00 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து பயனிகளை ஏற்றுவதற்காக தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த போது பின்னால் வந்த அரச பேருந்து மோதியுள்ளது.
குறித்த விபத்தானது திட்டமிட்டு இடம்பெற்றுள்ளதாக பயனிகளால் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியில் இருந்து யாழ்நோக்கி அரச பேருந்தும் தனியார் பேருந்தும் ஒரு சில நிமிட வித்தியாசத்தில் புறப்பட்டு வருவதால் இருவருக்கும் இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்படுவதாகவும் இதனால் வீதியில் போட்டியிட்டு செல்வதாகவும் பொதுமக்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
குறித்த போட்டியின் காரணமாகவே திட்டமிட்டு பின்னால் வந்து தனியார் பேருந்தை அரச பேருந்து மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற இடத்தில் இரு பேருந்துகளின் உடைந்த கண்ணாடி துண்டுகள் வீதியில் கிடந்ததாகவும் பாடசாலை மாணவர்கள் அதிகம் நிற்கும் இடம் அதனால் துப்பரவு செய்து செல்லுமாறு கரந்தாய் கிராம மக்களால் தெரிவிக்கப்பட்ட போது,
அரச பேரூந்து உத்தியோகத்தர் ஒருவர் தரக்குறைவாக மக்களிடம் பதிலளித்துள்ளதுடன் தம்மால் அதனை செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவில் தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் பிள்ளையை பராமரிக்கும் பொலிஸ் அதிகாரி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
வெலிஓயா, கல்யாணபுர பிரதேசத்தில் குழந்தையை கொடூரமான முறையில் தந்தை தாக்கியது தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தையுடன் தாக்குதலுக்கு துணை புரிந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி பொலிஸாரின் பாராமரிப்பில் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறார்.
வெலிஓயா பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் 04 வயது 06 மாத வயதுடைய சிறுமி உத்தியோகத்தர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வெலிஓயா பொலிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்டு பல அழுத்தங்களுக்கு முகங்கொடுத்த சிறுமியை, பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் மிகவும் பாசமாகவும் அன்பாகவும் கவனித்துக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன.
பொலிஸ் சீருடை அணிந்த பெண்ணுக்குள் மலர்ந்த தாய்மை என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அத்துடன், குழந்தையின் பெற்றோரை விட பல மடங்கு அன்பாக கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலையில் சிறுமியை கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை இன்று (05-06-2024) பிற்பகல் பதவிய சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய், சித்தப்பா, பெண்கள் இருவர் உள்ளிட்ட ஐவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான குகுல் சமிந்த எனும் நபரும் மற்றுமொரு சந்தேகநபரும் இன்று அதிகாலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தாயை உளநல வைத்தியர் ஒருவரிடம் அனுப்பி அறிக்கை பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சிறுமியை அனுராதபுரம் நன்னடத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு நீதவான் மேலும் உத்தரவிட்டார்.
பாதுக்கை – வகை இரிதாபொல பிரதேசத்தில் பெரும் வெள்ளத்தில் நீந்தி இரண்டு உயிர்களை காப்பாற்றிய பாடசாலை மாணவி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
10 அடி உயரத்திற்கு பாய்ந்துவந்த வெள்ளத்தில் தத்தளித்த தம்பதியை குறித்த மாணவி துணிந்து வெள்லத்தில் சென்று காப்பாற்றியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
17 வயதான சரித்மா ஜினேந்திரி மாஇட்டிபே என்ற மாணவியான அவர், பாதுக்கை சிறி பியரதன வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.
கடந்த சிலநாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடும் மழையால் பெரு வெள்ளம் ஏற்பாடிருந்தது.
இரிதாபொல பிரதேசத்திற்கு அருகில் பாய்ந்து செல்லும் வாக் ஓயாவின் நீர் மட்டம் திடீரென அதிகரித்து வௌ்ளமாக மாறியது.
நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளத்தால், பலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எல்லாவற்றையும் விட்டுவிட்டு உயரமான இடங்களுக்கு ஓடிச் சென்றனர்.
குறுகிய நேரத்தில் சுமார் 10 அடி உயரத்திற்கு வெள்ளம் உருவானதே இதற்குக் காரணமாகும். சரித்மாவின் பாட்டியும் தாத்தாவும் வீட்டின் பின்புறமுள்ள மலைக்கு ஓடிச் சென்று தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்ட நிலையில், வீட்டின் ஜன்னல் வழியாக சரித்மா வௌியேற முற்பட்ட போது, தம்மை காப்பாற்றுமாறு அலறல் சத்தம் கேட்டுள்ளது.
உடனடியாக செயல்பட்ட சரித்மா, அருகில் இருந்த கட்டிடத்திற்கு சென்று பிளாஸ்டிக் கயிற்றை கொண்டு வந்து நீந்தி அவர்களை நோக்கி சென்று கதறி அழுத கணவன்-மனைவியை கயிற்றின் உதவியுடன் மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சரித்மா ஜினேந்திரிவின் பெற்றோர் இருவரும் வேலை நிமித்தமாக கொழும்பில் தங்கியுள்ளதால் அவரும் அவரது சகோதரரும் பாட்டி மற்றும் தாத்தாவுடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய மாணவியின் துணிச்சலான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.
கேகாலை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் வீட்டின் பின்புறம் பாதுகாப்பு சுவர் கட்டுவதற்காக நேற்றையதினம் (04.06.2024) காலை பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
தோண்டப்பட்ட குறித்த பள்ளத்தில் குழந்தை இருந்தபோது, அதற்கு மேல் இருந்த மண் மேடு குழந்தை மீது சரிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னர், அங்கு வந்த பிரதேசவாசிகள் குழந்தையின் மீது விழுந்த மண்ணை அகற்றி உடனடியாக கேகாலை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சிறுவயது காதலர்கள், நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட பின்னரும் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி பிறிதொரு இடத்தில் தங்கியிருந்த வேளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனும் , 16 வயது சிறுமியும் காதலித்து வந்த நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவ்வேளை காதலர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். நீதிமன்ற விசாரணைகளை அடுத்து, இளைஞனுக்கு 3 மாத கால சிறைத்தண்டனை விதித்த மன்று , சிறுமியை சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்குமாறு கட்டளையிட்டது.
அந்நிலையில் இருவரது தண்டனை காலங்களும் நிறைவடைந்து தமது வீடுகளுக்கு திரும்பிய நிலையில் , மீண்டும் இருவரும் தமது வீட்டை விட்டு வெளியேறி , யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் தங்கிருந்துள்ளனர்.
இது தொடர்பில் தகவல் அறிந்த பொலிஸார் இருவரையும் கைது செய்து , பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ். ஊர்காவற்றுறை – புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றில் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றையதினம் (04.06.2024) இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை பெண்ணின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
கட்டுநாயக்கவில் இளம் தாயும் பிள்ளையும் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போன பெண் மற்றும் அவரது மகளை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸார், பெண் மற்றும் அவரது மகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவும் என அறிவித்துள்ளனர்.
யசோதா ஹன்சனி என்ற 26 வயதுடைய பெண்ணும் அவரது 04 வயது மகளும் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த மே மாதம் 29 ஆம் திகதி முதல் தனது மனைவி மற்றும் மகள் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் 071-859 1639 அல்லது என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன் விக்டர் (49). இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 8 ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தார்.
கடந்த 6 ஆண்டுகளாக கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே பகுதியில் வாடகை வீட்டில் தங்கியிருந்தார்.
மே 18ம் தேதி கடைக்கு செல்வதாக அவருடன் தங்கி இருந்த சக ஆசிரியர் ஒருவரிடம் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது தாய் பாத்திமாமேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான விக்டரை தேடி வந்தனர்.
காணாமல் போன விக்டர் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த 21 வயது பட்டதாரியான ஜனனி என்ற இளம்பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்தது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்திருந்தனர்.
இந்நிலையில் ஜனனி, அண்ணன் முறை கொண்ட தனது உறவினரான தட்சிணாமூர்த்தி (22) என்பவருடன் திருப்பாதிரிப்புலியூர் கிராம நிர்வாக அலுவலர் உசேனிடம் சென்று விக்டரை கொலை செய்ததாக கூறி சரண் அடைந்தார். இருவரையும் அவர் போலீசில் ஒப்படைத்தார்.
அவர்களிடம் போலீசார் நடத்தி விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில், விக்டருக்கும், அரியலூர் மாவட்டத்தை சோ்ந்த ஜனனிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
ஏழ்மையில் இருந்த இளம்பெண்ணின் குடும்பத்திற்கு விக்டர் பண உதவி செய்து வந்துள்ளார். ஜனனி தனது குடும்பத்துடன் குறிஞ்சிப்பாடி பகுதியில் குடியேறியுள்ளார். அங்கும் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.
இந்த நேரத்தில் ஜனனிக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமண நிச்சயதார்த்த ஏற்பாடு நடந்தது. இதையறிந்த விக்டர், நீ திருமணம் செய்யக்கூடாது. இல்லையெனில் உன்னுடன் உல்லாசமாக இருந்ததை வெளியே கூறிவிடுவேன் என இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன ஜனனி இதுகுறித்து தட்சிணாமூர்த்தியிடம் கூறினார். அவர், ஜனனியுடன் சேர்ந்து விக்டரை கொலை செய்ய திட்டம் தீட்டினார். அதன்படி சம்பவத்தன்று ஜனனி விக்டரை தனது வீட்டுக்கு அழைத்துள்ளார்.
சதிச்செயலை அறியாத விக்டர் அங்கு சென்றார்.ஜனனியின் வீட்டில் 2 பேரும் தனிமையில் இருந்தனர். அப்போது, அங்கு தயாராக இருந்த தட்சிணாமூர்த்தி இரும்பு கம்பியால் விக்டரை அடித்துக்கொலை செய்ததாக தெரிகிறது.
பின்னர் அவரது உடலை 2 பேரும் சேர்ந்து சாக்கு மூட்டையில் கட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்துச்சென்று நெய்வேலி வேலுடையான்பட்டு பகுதியில் முட்புதரில் வீசிவிட்டு எதுவும் தெரியாததுபோல் வந்துவிட்டது தெரிந்தது.
இதையடுத்து தட்சிணாமூர்த்தி, விக்டரின் உடலை வீசிய இடத்தை நேற்று போலீசாருக்கு அடையாளம் காட்டினார்.
அங்கு விக்டரின் உடல் சாக்கு மூட்டையில் எலும்புக்கூடாக கிடந்தது.
அதை கைப்பற்றிய போலீசார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, போலீசார், விக்டர் காணாமல் போனதாக பதிவு செய்த வழக்கை, கொலை வழக்காக மாற்றி தட்சிணாமூர்த்தி, ஜனனி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரபை ஏற்படுத்தி உள்ளது.