கணவரை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி பரபரப்பு வாக்குமூலம்!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (35). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மங்களலட்சுமி (30).

இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு தஸ்வந்த் (8) என்ற மகன் உள்ளார்.

சீனிவாசன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சீனிவாசன், மனைவியிடம் தகராறு செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த மங்களலட்சுமி, வீட்டில் இருந்த கத்தியால் கணவரின் வயிற்றில் குத்தினார். படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நசரத்பேட்டை போலீசார், சீனிவாசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து நசரத்பேட்டை போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து கணவனை குத்திக்கொலை செய்த மங்களலட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடற்கரையில் குளிக்க சென்ற இந்திய தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்!!

கிரிந்த கடற்கரையில் குளித்த இந்திய தம்பதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

கடற்கரையில் பலத்த அலைகளால் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் இந்தியப் பிரஜைகளான 35 வயதுடைய ஆண் மற்றும் 33 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் திருமணமான தம்பதிகள் எனவும், அவர்களது குடும்பத்தினருடன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தெபரவெவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மீண்டும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா!!

நேற்றுடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(05.06.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (05.06.2024) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.88 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 225.69 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.21 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 335.53 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 321.81 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 393.55 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 378.43 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: நகை வாங்க காத்திருப்போருக்கான செய்தி!!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (05) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 24 கரட் தங்கம் 199,400 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் 182,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,920 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,850 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

இலங்கையில் காலநிலை மாற்றத்தால் பலி எண்ணிக்கை அதிகரிப்பு : தொடரும் அபாய எச்சரிக்கை!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று (05) அதிகாலை 06 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மாத்தறை மாவட்டத்தில் 06 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 03 பேரும், காலி, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் தலா 02 பேரும், கேகாலை மாவட்டத்தில் ஒருவருமாக மொத்தம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த அனர்த்தங்களில் 13 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடனான வானிலையினால் 13 மாவட்டங்களில் 65,777 குடும்பங்களைச் சேர்ந்த 2,47,406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 41 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ள

அதேவேளை, 4,162 குடும்பங்களைச் சேர்ந்த 15,735 பேர் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதுடன், 2,592 குடும்பங்களைச் சேர்ந்த 10,820 பேர் 151 இடைதங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அத்தனகல ஓயாவிற்கு விடுக்கப்பட்டுள்ள வெள்ள அபாய சிவப்பு எச்சரிக்கை நாளை (06) மாலை 03 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.

அத்தனகலஓயாவின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால், தாழ் நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

இதன்படி, கம்பஹா, வத்தளை, ஜா-எல, கட்டான, மினுவங்கொட ஆகிய பகுதிகளுக்கு தொடர்ந்தும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பின்தங்கிய கிராமத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற இரு சகோதரிகள்!!

வெளியாகியுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை(G.C.E A/L) பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சியில் உள்ள பின்தங்கிய கிராமம் ஒன்றில் இரு சகோதரிகள் விஞ்ஞான பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.

கிளிநொச்சி(Kilinochchi) – கண்டாவளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட உழவனூர் பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவரே இவ்வாறு சித்தியடைந்துள்ளனர்.

பின்தங்கிய கிராமமான உழவனூர் பகுதியில் அடிப்படை வசதிகளின்றி வறுமையான சூழ்நிலையிலும் தனது தந்தையின் தனி உழைப்பை மட்டும் வைத்து தமது கல்வியை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளனர்.

குறித்த மாணவிகளின் தந்தை லொத்தர் சீட்டுக்கள் விற்பனை செய்பவர் என்ற நிலையில், அவரது தனி வருமானத்தை கொண்டு தம்மை கல்வி பயில வைத்ததாகவும், சுமார் 5 கிலோமீற்றர் சென்று தர்மபுரம் மகா வித்தியாலயத்திலேயே தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

களு என்ற நாயினால் காப்பாற்றப்பட்டுள்ள குழந்தை உட்பட நால்வரின் உயிர்!!

சீரற்ற வானிலை காரணமாக அகலவத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்பகுதியில் இருந்த மண்மேடு இடிந்து விழுந்த நிலையில் களு என்ற நாயினால் குழந்தை உட்பட நால்வர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நேற்று (03) நிலவிய சீரற்ற வானிலையின் போது அகலவத்த – பெல்லன பிரதேசத்தில் வசிக்கும் விதானலகே சோமசிறி என்பவரின் குடும்பத்தினரே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

வழக்கத்தினை விட அதிக சத்தத்துடன் கருப்பு நாயொன்று வீட்டின் பின்புறம் குரைத்துக்கொண்டிருந்த நிலையில், குடும்ப தலைவர் வீட்டின் கதவை திறந்து கொண்டு வீட்டின் பின்புறம் சென்று பார்வையிட்டுள்ளார்.

இதன்போது நாய் தன்னிடம் ஏதோ சொல்வதினை உணர்ந்த நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய், தந்தை மனைவி, குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். இவ்வாறு வீட்டிலிருந்து வெளியே சென்ற சிறிது நேரத்திலேயே வீட்டின் பின்புறம் இருந்த மலை முழுவதுமாக இடிந்து வீட்டின் மீது விழுந்துள்ளது.

இந்நிலையில், தனது வீட்டின் வளர்ப்பு நாயான களுவினால் தங்களது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் உரிமையாளர் கண்ணீருடன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

பல தடவைகள் மழை பெய்யும் : இன்றைய வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!!

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (05.06.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாலை அல்லது இரவில் நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

மேலும் சில மாவட்டங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் 05 கிராம் ஹெரோயினுடன் 24 வயதுப் பெண் கைது!!

வவுனியாவில் 05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 24 வயது யுவதி ஒருவர் நேற்று (04.06) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

பொலிசார் வவுனியா, தோணிக்கல் பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது விற்பனைக்காக தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்த 05 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை மீட்டனர்.

இதன்போது குறித்த ஹெரோயின் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த யுவதியும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

வவுனியா நெடுங்கேணியில் வீட்டிற்குள் நுழைந்த பொலிசாரின் ஜீப் : மயிரிழையில் தப்பிய மாணவர்கள்!!

வவுனியா, நெடுங்கேணி பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த புளியங்குளம் பொலிசாரின் ஜீப் வண்டி வீடு ஒன்றுக்குள் புகுந்து நேற்று (04.06) மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் பயணித்த புளியங்குளம் பொலிஸ் நிலைய ஜீப் வண்டி சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து வீதியோரத்தில் இருந்த வீடு ஒன்றுக்குள் புகுந்துள்ளது.

வீட்டு வேலியை உடைத்துக் கொண்டு சென்ற ஜீப் வண்டி வீட்டிற்குள் நின்ற மோட்டர் சைக்கிள், வீதியோர மின்சாரத்தூண், வீட்டு குடிநீர் இணைப்பு என்பவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன், அருகில் உள்ள கொட்டகையில் படித்துக் கொண்டிருந்த சுமார் 40 வரையான மாணவர்கள் மயிரிழையில் தப்பியுள்ளனர்.

விபத்தின் போது புளியங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட 5 பேர் சிவில் உடையில் வாகனத்தில் இருந்ததாக விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் பொதுமக்கள் குவிந்ததும் பொலிசார் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையத்திற்குள் தப்பிச் சென்றுள்ளனர். நெடுங்கேணி பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ஜீப் வண்டியை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விசேட அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பொலிசார் மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கனடாவில் பணிபுரியும் வீட்டு பராமரிப்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட வசதி!!

கனடாவில் (Canada) பணிபுரிய விரும்பும் வீட்டு பராமரிப்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) வசதியை நேரடியாக வழங்கும் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாக கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) அறிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“குறித்த திட்டத்தின் மூலம், கனடாவுக்கு வருகை தரும் புதிய வீட்டு பராமரிப்பு நிபுணர்களுக்கு வந்தடைந்த உடனேயே நிரந்தர வதிவிட வசதி வழங்கப்படும். அதேவேளை, அவர்களால் தற்காலிக அல்லது பகுதி நேர பராமரிப்பு வழங்கும் நிறுவனங்களில் பணியாற்ற முடியும்.

மேலும், இந்தப் புதிய முறையானது, பராமரிப்பாளர்களுக்கு தகுதி பெற்ற நிறுவனங்களில் தகுந்த வேலையை எளிதாகப் பெற்றுக்கொள்ள உதவுவதுடன் கனடாவில் நிரந்தர வதிவிட நிலையைப் பெறுவதற்கு ஒரு சிக்கலற்ற வாய்ப்பை பெறவும் உதவும்.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கமைய கனடாவில் வீட்டு பராமரிப்பாளர்களாக பணிபுரிய விரும்புவர்கள் சில தகுதிகளை பெற்றவர்களாக இருத்தல் அவசியமாகும்.

ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் 4ஆவது கட்டம் வரையான தேர்ச்சி, கனடாவின் உயர்தர பாடசாலை டிப்ளோமாவிற்கு சமமான கல்வித்தகைமை, புதுப்பிக்கப்பட்ட வேலைத்தளங்களிலான அனுபவங்கள் மற்றும் முழு நேர வீட்டு பராமரிப்பாளர்களாக பணிபுரியும் வாய்ப்பை கொண்டிருத்தல் போன்ற தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அதேவேளை, பணியாளர்கள் தங்களது வருகையை இந்த ஆண்டு செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் (Fall Season) மாதங்களுக்கு முன் அல்லது 2025ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு முன் உறுதி செய்ய வேண்டும்.

அது மாத்திரமன்றி, கனேடிய சட்டத்திட்டங்களுக்கமைய வருகை தரும் பணியாளர்களுக்கு முழு தேவைகள் மற்றும் விண்ணப்ப வழிமுறைகள் உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

 

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழம் சாப்பிடலாம் : அதிகம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

உடலில் இன்சுலின் என்னும் ஹார்மோன் போதுமான அளவு உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால், சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

சர்க்கரை நோயாளிகள் பழங்களை அளவாக தான் சாப்பிட வேண்டும். இன்று சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை வாழைப்பழத்தை சாப்பிடலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை சாப்பிடலாம். ஆனால் அது அவற்றின் முதிர்ச்சியைப் பொறுத்தது. அதாவது, பச்சை அல்லது பழுக்காத வாழைப்பழம் ஒட்டுமொத்த மெட்டபாலிச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆனால் நன்கு கனிந்த வாழைப்பழங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு அவ்வளவு நல்லதல்ல. கனியாத வாழைப்பழத்தில் அதிக எதிர்ப்புத் திறன் கொண்ட மாவுச்சத்தும் குறைவான சர்க்கரையும் உள்ளது.

இவை சிறுகுடலில் ஜீரணிப்பதை எதிர்க்கின்றன. இதனால் இவை பெருங்குடலில் நொதித்து, பெருங்குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாகின்றன.

ஆனால் நன்கு கனிந்த வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், அது இரத்த சர்க்கரை அளவை சட்டென்று அதிகரித்துவிடும். எனவே சற்று கவனமாக இருங்கள்.

ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோய் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 1-2 மீடியம் சைஸ் வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

இருப்பினும், இரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கங்களை அனுபவிப்பவர்கள், ஒரு உணவியல் நிபுணர் அல்லது மருத்துவரை கலந்தாலோசித்த பின்னரே வாழைப்பழங்களை உட்கொள்ள வேண்டும்.

அதே சமயம், வாழைப்பழத்தினால் சந்திக்கும் மோசமான விளைவைத் தடுக்க சர்க்கரை நோயாளிகள் ஒருசிலவற்றை பின்பற்ற வேண்டும். இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்க, சிறிய அளவிலான வாழைப்பழத்தை ஆசைக்காக சாப்பிடலாம்.

அளவுக்கு அதிகமாக கனிந்த வாழைப்பழத்தை தவிர்த்து, லேசாக பழுத்த வாழைப்பழத்தை சாப்பிடவும். வாழைப்பழம் சாப்பிடும் போது, மற்ற பழங்களை அதிகம் எடுப்பதைத் தவிர்த்திடுங்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கலாம்.

வாழைப்பழத்தை சாப்பிடும் போது நட்ஸ், யோகர்ட், சூரியகாந்தி விதைகள் அல்லது வேர்க்கடலை வெண்ணெய் போன்ற புரோட்டீன் உணவுகளுடன் எடுக்கும் போது, சர்க்கரையை உறிஞ்சும் திறன் தாமதப்படுத்தப்படும்

மனைவியுடன் தகராறு : 3 வயது மகனை ஏரியில் தூக்கி வீசிய தந்தை குற்ற உணர்ச்சியில் விபரீத முடிவு!!

சென்னை போரூர் ஏரியில் தனது 3 வயது மகனை தூக்கி வீசிய தந்தை குற்ற உணர்ச்சியில் தானும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள தாம்பரம் – மதுரவாயல் புறவழிச் சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் வந்த நபர் திடீரென உடன் அழைத்து வந்த 3 வயது சிறுவனை தூக்கி போரூர் ஏரி தண்ணீரில் வீசிவிட்டு தப்பி ஓடி விட்டார். அப்போது அங்கு ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக ஏரியில் வீசப்பட்ட சிறுவனை உயிருடன் மீட்டு போரூர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காவல் துறையினர் விசாரணையில், ஏரியில் குழந்தையை வீசிவிட்டு சென்றது தலைமை செயலக காலனியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பது தெரியவந்தது. இவரது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவி பிரியாவை வீட்டில் வைத்து கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தனது 3 வயது மகனை தூக்கி வந்து கோபத்தில் போரூர் ஏரியில் தூக்கி வீசிவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் சிறுவனின் தாயார் பிரியாவிடம் சிறுவனை காவல் துறையினர் ஒப்படைத்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக பெற்ற மகனையே ஏரியில் வீசிவிட்டு சென்ற கொடூர தந்தையை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே நேற்று போரூர் ஏரியில் ஆண் சடலம் ஒன்று மிதப்பதாக போரூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சடலமாகக் கிடந்தவர், மூன்று வயது மகனை எரியில் தூக்கி வீசிய தந்தை மோகன்ராஜ் என்பது தெரியவந்தது.

ஏரியில் 3 வயது மகனை வீசிவிட்டு சென்ற மோகன்ராஜ், குழந்தையை இப்படி ஏரியில் உயிருடன் வீசி விட்டோமே என்ற மன உளைச்சலில் ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலத்தை மீட்ட போரூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

பிரபல நடிகையின் கணவர், மகனுடன் தற்கொலை.. நடிகையை விளாசும் ரசிகர்கள்!!

‘கணவரின் மரணத்திற்கு பொறுப்பு..,’; மலையாள அடல்ட் வெப் சீரிஸ் நடிகையை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அடல்ட் படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து ரசிகர்களிடையே புகழ் பெற்ற நடிகை தியா கவுடா, தனது கணவர் மற்றும் அவர்களது நான்கு வயது மகனின் கொடூரமான மரணத்தைத் தொடர்ந்து அனைத்து பக்கங்களில் இருந்தும் கொடூரமான சைபர் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறார்.

தியாவின் கணவர் ஷெரீப் மற்றும் மகன் அல் ஷிஃபாப் ஆகியோர் கடந்த வாரம் புதன்கிழமை தாங்கள் குடியிருந்து வரும் வாடகை வீட்டின் இரண்டாவது மாடியில் இறந்து கிடந்தனர்.

இது குறித்து நடிகை தியாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஷெரீப் அவர்கள் குழந்தையை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் பரவியது.

கேரள மாநிலம் வாலாஞ்சேரியைச் சேர்ந்த ஷெரீப், சாவக்காட்டைச் சேர்ந்த நடிகை தியாவை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வாழ்க்கை ஒரு குழந்தைப் பிறப்பிற்கு பின்னர் தோல்வியில் முடிந்தது.

பின்னர் இந்த ஜோடி தனித்தனியாக வாழ முடிவு செய்தது. தியா ஆலுவாவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் ஷெரீப் மூன்று வாரங்களுக்கு முன்பு தனது மகனுடன் வாடகை வீட்டில் குடியேறினார்.

இந்நிலையில், ஷெரீப் தியாவுக்கு போன் செய்து, தங்கள் மகனைக் கொலை செய்து பின்னர் தற்கொலை செய்து கொள்ளும் தன்னுடைய முடிவைப் பற்றி நடிகை தியா கவுடாவிடம் தெரிவித்துள்ளார்.

கணவரின் தொலைபேசி அழைப்பால் பதற்றமடைந்த தியா, ஷெரீப்பின் பக்கத்து வீட்டுக்காரரிடம் விவரத்தை கூறி ஷெரீப்பின் தற்கொலை முயற்சியைத் தடுத்து நிறுத்துமாறு கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல் துறை அதிகாரிகள் உடனடியாக வீட்டிற்குச் சென்று பார்த்த போது, ​​ஷெரீப் மற்றும் மகன் இருவரும் இறந்து கிடந்தனர். அவர்களது உடலைப் பார்க்க இறுதி வரை தியா வரவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், பிரேத பரிசோதனைக்குப் பின்னர் வாலாஞ்சேரியைச் சேர்ந்த ஷெரீப்பின் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அவர்கள் இருவரது சடலங்களைக் கைப்பற்றி இறுதிச் சடங்குகளுக்காக மலப்புரத்திற்குக் கொண்டு சென்றனர். சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இருவரது தற்கொலைக்கும் நடிகை தியா தான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக அவரை விமர்சித்து வருகின்றனர்.

10வது மாடியிலிருந்து குதித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

மகராஷ்டிரா மாநிலம், மும்பையில் ஐஏஎஸ் தம்பதியின் மகள் தான் வசித்து வந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு மும்பையில் உள்ள சுருச்சி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் லிபி ரஸ்தோகி (27). லிபி மகாராஷ்டிரா கேடர் ஐஏஎஸ் அதிகாரிகளின் மகள். ஹரியானாவில் சட்டக்கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

10வது மாடியில் இருந்து குதித்து லிபி தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

லிபி தனது தேர்வு முடிவுகளைப் பற்றி கவலைப்பட்டதாக போலீசார் விசாரணைக்குப் பின்னர் தெரிவித்தனர். இதன் காரணமாக அவள் தற்கொலை முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறிய போலீசார், எனினும் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.

லிபியின் தந்தை விகாஸ் ரஸ்தோகி மகாராஷ்டிரா கல்வித் துறையில் முதன்மைச் செயலாளராகவும், அவரது தாயார் ராதிகா ரஸ்தோகி மாநில உள்துறை முதன்மைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றனர்.

லிபியின் அறையில் சோதனையிட்ட போலீசார் தற்கொலைக்கு முன்னர் லிபி எழுதிய உருக்கமான கடிதத்தை கைப்பற்றினர். அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் தாயொருவர் பொலிஸாரிடம் விடுத்த கோரிக்கை : மகனுக்கு மறுவாழ்வு!!

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையான மகனை , அதிலிருந்து மீட்டு தருமாறு தாயார் கோரியதை அடுத்து, இளைஞன் நீதிமன்றின் ஊடாக புனர்வாழ்வு முகாமிற்கு பொலிஸார் அனுப்பி வைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெறுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தாயொருவரே இவ்வாறு பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகின்றது. தனது மகன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்.

அவரை அந்த பழக்கத்தில் இருந்து மீட்டு தருமாறு மானிப்பாய் பொலிசாரிடம் கோரியுள்ளார். தாயின் கோரிக்கையை அடுத்து இளைஞனை கைது செய்த பொலிஸார் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , நீதிமன்றின் ஊடாக கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.