மின்கம்பத்தில் மோதி பேருந்து விபத்து!!

இரத்தினபுரி, புவக்கஹவெல பிரதேசத்தில் பஸ் ஒன்று வீதியிலிருந்த மின்கம்பமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு : 116 பாதுகாப்பு மையங்கள்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தம் காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (04) கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 41 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

23 மாவட்டங்களின் 262 பிரதேச செயலகப் பிரிவுகளில் 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021 பேர் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரமித தென்னகோன் தெரிவித்தார்.

அந்தந்த பகுதிகளில் 116 பாதுகாப்பு மையங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. 2,368 குடும்பங்களைச் சேர்ந்த 9,248 பேர் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

பெண்ணை தேடிச்சென்ற பொலிஸார் தாயை கைது செய்தனர்!!

வர்த்தகர்களுக்குப் போலி காசோலைகளை வழங்கியதாகக் கூறப்படும் பெண் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிசாருக்கு இடையூறு விளைவித்த பெண்ணின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தல், சந்தேக நபருக்குத் தப்பிச் செல்ல உதவி செய்தல், பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் சீருடைகளை சேதப்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாயார் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான பெண் அம்பாறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஒரு இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை இந்த சம்பவத்தின் போது சந்தேக நபரான பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

உயர்தர பரீட்சையில் மூன்று சித்திகளை பெற்று பார்வையற்ற மாணவி சாதனை!!

குருநாகல் – பிதுர்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஹிமாஷா கவிந்தி ஹேரத் என்ற பார்வையற்ற மாணவி 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் மூன்று சித்திகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.

இந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த போதிலும், தனியார் விண்ணப்பதாரராக கடந்த வருடம் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார். அந்த வகையில் பொருளாதாரம், வர்த்தகம், அரச அறிவியல் ஆகிய பாடங்கள் மூன்றில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

குருநாகல் மஹிந்த மகா வித்தியாலயத்தில் 2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஹிமாசா ஒன்பது பாடங்களிலும் சித்தியடைந்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளின் பாட்டுப் போட்டியில், நாடளாவிய ரீதியில் முதலாவது வந்துள்ளார்.

 

லிட்ரோ எரிவாயுவின் விலைகள் குறைப்பு : புதிய விலை விபரம்!!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய 12.5 கிலோ கிராம் எடை கொண்ட எரிவாயு 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 3,790 ரூபாவாகும்.

5 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதன் புதிய விலை 1522 ரூபாவாகும்.

மேலும், 2.3 கிலோ கிராம் எடைகொண்ட எரிவாயு 28 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதன் புதிய விலை 712 ரூபாவாகும்.

இரண்டு தங்கப் பதக்கங்களை தனதாக்கிய இலங்கை வீராங்கனை தருஷி!!

தாய்வான் பகிரங்க மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இறுதி நாளில் இலங்கையின் தடகள வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்றுள்ளார். பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் நேற்றையதினம் கலந்துக்கொண்ட அவர் குறித்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.

போட்டித் தூரத்தை 2 நிமிடங்கள் 05.74 செக்கன்களில் நிறைவு செய்த அவர், 2024 பாரிஸ் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை 0.04 செக்கன்களால் தவறவிட்டுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

எனினும் நேற்று முந்தினம் நடந்த பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 52.48 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கம் வென்ற அவர் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்று 2 தங்கப்பதக்கங்களை தனதாக்கியுள்ளார்.

மேலும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குகொண்ட டில்ஹானி லேக்கம்கே, 52.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெருகெடுத்தோடும் வெள்ளத்தில் அள்ளுண்டு சென்ற வாகனம்!!

நாட்டில் சீரற்ற காலநிலை நிவவி வரும் நிலையில் வௌ்ளநீரில் சிக்குண்ட கப் ரக வாகனத்தை அங்கிருந்த இளைஞர்கள் இணைந்து​ பெரும் முயற்சிக்குப் பின்னர் மீட்டெடுத்துள்ளனர்.

பெலும்மஹர சந்தியில், கொடகெத பாலத்துக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட கப் ரக வாகனம்
கப் ரக வாகனம், வெள்ளத்தில் சிக்குண்டு அள்ளிச்சென்றபோது, பெரும் போராட்டத்துக்கு மத்தியில் இளைஞர்கள் அதனை தடுத்து நிறுத்தினர்.

பெலும்மஹர சந்தியில் பல அடிக்கு மேல் வெள்ளநீர் நிரம்பியிருந்தது. இந்நிலையில் சிக்குண்ட கப் ரக வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, இழுத்துச் செல்லப்பட்டது.

இதன் போதே, அங்கிருந்த இளைஞர்கள் ஒன்றுக்கூடி, கப் வாகனத்தை மீட்டதுடன், சாரதியை​யும் காப்பாற்றியுள்ளனர்.

 

6 மாத கைக்குழந்தையைக் கொன்று விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வேலயப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 38). நிலத்தில் கம்பி வேலி அமைக்கும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி அழகு மீனா (34). இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வேதாஸ்ரீ என்ற 6 மாத பெண் குழந்தை இருந்தது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக குழந்தை வேதாஸ்ரீ உடல்நிலை சரியில்லாமல் அழுது கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. இதை மருத்துவர்களிடம் காட்டியும் பலனில்லை என்று தெரிகிறது. குழந்தை அழுது கொண்டே இருந்ததால், அழகு மீனா மனமுடைந்தார்.

இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணியளவில் அழகு மீனா தனது 6 மாத குழந்தையுடன் வீட்டின் அருகே உள்ள கண்மாய் பகுதிக்கு சென்றார். பின்னர் பெட்ரோலை எடுத்தார். அப்போது அழகு மீனா தன் மீதும், தன் குழந்தை மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.

குழந்தை உடல் முழுவதும் தீ பரவி வலியால் அலறி துடித்தது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இருவரையும் மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தை வேதாஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அழகு மீனா மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து சிவகங்கை ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் திருப்புவனம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தயவுசெய்து என்னை அடிக்காதீங்க.. கதறிய பிரபல தமிழ்ப்பட நடிகை..வைரலாகும் காணொளி!!

இந்தி நடிகை ரவீனா டாண்டனின் கார் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி, சிலர் அவரை சூழ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழில் சாது, ஆளவந்தான் படங்களில் நடித்தவர் பிரபல இந்தி நடிகை ரவீனா டாண்டன் (49). தெலுங்கு, கன்னட மொழிப்படங்களிலும் நடித்துள்ள இவர், கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருந்தார்.

இந்த நிலையில் மும்பை பாந்த்ரா பகுதியில் ரவீனாவின் கார், சாலையில் சென்றுகொண்டிருந்த 3 பெண்கள் மீது வேகமாக மோதியதாக கூறப்படுகிறது.

அப்போது காரில் இருந்து இறங்கிய ரவீனா தனது ஓட்டுநருக்காக அப்பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். உடனே அங்கிருந்த நபர்கள் சிலர் ரவீனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவரை தள்ளியது போன்ற காணொளி வெளியாகியுள்ளது.

அந்த காணொளியில் ரவீனா ”தள்ளாதீர்கள்..தயவு செய்து என்னை அடிக்காதீர்கள்” என்று கதறுகிறார். மற்றொரு பெண், ரவீனா தன்னை தாக்கியதில் தனது மூக்கில் ரத்தம் வருவதாக முறையிடுகிறார். தற்போது இந்த காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தை உலுக்கிய சம்பவம்… குடும்பப் பெண் பரிதாபமாக உயிரிழப்பு!!

யாழ புனித பத்திரிசியார் கல்லூரி வீதியில் நபரொருவர் தீ மூட்டி கொளுத்தியதில் படுகாயமடைந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் சாவகச்சேரியை சேர்ந்த 45 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான இரத்னவடிவேல் பவானி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி வீதிப் பகுதியில் குடும்பப் பெண்ணை அழைத்து வந்த நரொருவர் குறித்த பெண்ணை தீ மூட்டி கொளுத்தியுள்ளார்.

இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் குறித்த ஆண் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டியுள்ளார். பெண் தீயில் எரிவதைக் கண்ட அயலவர்கள் தீயை அணைத்து பெண்ணை யாழ் போதன வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில் தீக் காயங்களுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ் இளைஞனின் வெளிநாட்டு ஆசை : பெரும் தொகை சுருட்டிய மதபோதகர்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரை வெளிநாடு ஒன்றிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்ச ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் , நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த மதபோதகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞனே இவ்வாறு மதபோதகரால் ஏமாற்றப்பட்டுள்ளார். குறித்த போதகர் இளைஞரை வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி 15 இலட்ச ரூபாய் பணத்தினை மத போதகர் பெற்றுள்ளார்.

காசோலை மோசடி

எனினும் நீண்ட நாட்கள் ஆகியும் வெளிநாட்டு பயணம் சரி வராததால், கொடுத்த பணத்தினை இளைஞன் திருப்பி கேட்ட போது , போதகர் காசோலையை வழங்கியுள்ளார். அந்த காசோலையை வங்கியில் வைப்பு செய்த போது கணக்கில் பணம் இல்லை என காசோலை திரும்பியுள்ளது.

அது தொடர்பில் போதகரை இளைஞன் தொடர்பு கொண்டு கேட்ட போது, தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் , தன்னால் என்னவும் செய்ய முடியும் என இளைஞனை மிரட்டியுள்ளார்.

அதனை அடுத்து இளைஞன் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து , நீர்கொழும்பில் வைத்து போதகரை கைது செய்த பொலிசார் யாழ்ப்பாணம் அழைத்து வந்தனர்.

நாட்டின் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை!!

புதிய இணைப்பு : சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, கேகாலை, காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள ஹோமாகம கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு சற்று முன்னர் அறிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு : காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு தொடர்ந்து இரு தினங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை(04.06) மற்றும் நாளை மறுதினம் (05.06) இவ்வாறு குறித்த மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடுத்தே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என்று தென் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

மண்சரிவினால் முற்றாக இடிந்த வீடு : பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்ட நால்வர்!!

வரகாபொல பிரதேசத்தில் நேற்றைய தினம் முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வரகாபொல மெனெரிப்பிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்று மண்சரிவினால் முற்றாக இடிந்துள்ளது.

இடிபாடுகளில் சிக்கிய நால்வர் இன்று காலை பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் நான்கு பேர் இருந்ததாகவும், இடிபாடுகளில் இருந்து முதலில் வெளியே வந்த தாய், அக்கம் பக்கத்தினரை எச்சரித்து, தந்தை, மகள் மற்றும் மகளின் நண்பர் ஒருவரையும் காப்பாற்றியுள்ளார்.

ஏற்கனவே வரகாபொல நகரம் நீரில் மூழ்கியதால் 1990 சுவ சரிய நோயாளர் காவு வண்டியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வரகாபொல பொலிஸாரின் ஜீப் வண்டி ஒன்று வந்து காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் தீவிரமடையும் வானிலை : உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

மேலும், நாடளாவிய ரீதியில் 3727 குடும்பங்களைச் சேர்ந்த 11864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம், மண்சரிவு, மழை போன்ற காரணிகளினால் 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், 23 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும், 17 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 3304 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாகாணங்களைப் பொறுத்தமட்டில், தென் மாகாணத்தில் 1982 குடும்பங்களை சேர்ந்த 6840 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3005 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளம், பலத்த காற்று, மண்சரிவு, மரம் மற்றும் மண் சரிவு, கடும் மழை போன்றவற்றினால் இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ் பரீட்சையில் சித்திப்பெற்று பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ள சுவிஸ்லாந்து பிரஜை!!

சுவிற்சர்லாந்து நாட்டு பிரஜையொருவர் அந்நாட்டில் நடாத்தப்படும் தமிழ் பரீட்சையில் சித்திப்பெற்று பலரையும் திரும்பி பார்க்கச் செய்துள்ளார்.

சுவிற்சர்லாந்து நாட்டில் பொருளியல் வணிகத்துறையில் முதுகலைமானி நிலையினை நிறைவு செய்துள்ள உறோயர், பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் தமிழ் கற்றுவருகின்றார்.

வளர்நிலை ஒன்றில்(ஆண்டு ஒன்றில்) கற்கும் இவரை சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்படி பாடசாலை அதிபர் பூநகரியான் பொன்னம்பலம் முருகவேள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி விரும்பி விண்ணப்பித்து பரீட்சையில் தோற்றி நூறு புள்ளிக்கு நிகரான ஆறு புள்ளி பெற்றுள்ளார்.

மேலும் இவர் எழுத்து, பேசுதல், கேட்டுவிளங்குதல், வாசிப்பு நிலைகளிலும் மிகச்சிறப்பான தகமை பெற்றுள்ளார்.

புலம்பெயர்ந்த நாடுகளில் பிற இனத்தாருக்கும் தமிழ்கற்பித்த தமிழ்ப்பள்ளி என்ற பெருமைக்குரிய பள்ளியாக சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பள்ளி திகழ்கின்றது.

இதற்கு முன்னரும் நான்கு பிற இனச்சிறார்கள் கற்றுச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

முல்லைத்தீவில் நீரில் மூழ்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!

முல்லைத்தீவு (Mullativu) பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(02.06.2024) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த நபர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான சிவனு சிவகுமார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சடலத்தை நேற்று (02.06) மாலை பார்வையிட்ட முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி S.H .Mahroos சடலத்தை உடல் கூற்று பரிசோதனையின் பின்னர் உறவுகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த நபருடைய வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 4 ஆம் திகதி முல்லைத்தீவு திறந்த நீதிமன்றத்தில் இடம்பெறும் எனவும் இது தொடர்பான சாட்சியமளிக்க உள்ளவர்கள் அந்த இடத்தில் சாட்சியம் அளிக்கலாம் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.