மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில்அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
குருநாகல் பிரதேசத்தில் 2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறுகளைப் பெற்ற மாணவன் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
பல்கலைக்கழக அனுமதிக்கு போதுமான பெறுபேறுகள் கிடைக்காததால் மனமுடைந்து இந்த மாணவன் இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்த மாணவன் 2022 ஆம் ஆண்டு முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதாகவும், பல்கலைக்கழக அனுமதி பெறாத காரணத்தினால் கடந்த வருடம் இரண்டாம் தடவையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
இருப்பினும், அவருக்கு ஒரு சி மற்றும் இரண்டு எஸ் மாத்திரமே கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத மாணவன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்றும், நாளையும் (3,4) மூட தீர்மானித்துள்ளதாக சமூக ஊடகங்கள் ஊடாக பரவிவரும் செய்தியில் உண்மையில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளை இன்று (03.06.2024) மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இருப்பினும், அரச அல்லது தனியார் துறை நிறுவனங்கள் தொடர்பில் அவ்வாறான தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், நாளை (04.06) பாடசாலை மீள ஆரம்பிக்கப்படுமா என்பது குறித்து இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் கலந்துரையாடிய பின்னர் இன்று பிற்பகல் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
மேலும், மோசமான வானிலை காரணமாக ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தை மாத்திரம் மூடுவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளம் – ஆராச்சிக்கட்டுவ விஜயகடுபொத பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது 15 வயதில் கணிதப் பிரிவில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முகம் கொடுத்து 3 சித்திகளைப் பெற்றுள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தில் 16ஆவது இடத்தைப் பெற்று சாதனை புரிந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது
ஆராச்சிக்கட்டுவ , விஜயகடுபொத பிரதேசத்தில் வசிக்கும் மஞ்சநாயக்க முதியன்சலாகே அவீஷா நெட்சரணி மஞ்சநாயக்க எனும் 15 வயதுடைய சிறுமியே இந்த சாதனையை படைத்துள்ளார்.
பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் போதே, கல்வி கற்பதில் திறமையை வெளிப்படுத்தி வந்த அவீஷா நெட்சரணி, முதலாம் ஆண்டு முதல் மூன்றாம் ஆண்டு வரை ஆராச்சிக்கட்டுவ விஜயகட்டுபொத மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.
அந்த சிறுமி புத்தளம் வில்பாத அனுர மகா வித்தியாலயத்தில் இணைந்துகொண்டதுடன், அங்கு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி 190 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டார்.
அதன்பின்னர் ஐந்தாம் ஆண்டு முதல் எட்டாம் ஆண்டு வரை கம்பஹா ரத்னாவளி மகா வித்தியாலயத்தில் தனது கல்வியை தொடர்ந்தார். முதலாம் ஆண்டு முதல் எட்டாம் தரம் வரை கல்வி கற்கும் போது, அவீஷா நெட்சரணி வகுப்பில் திறமையை வெளிக்காட்டி வந்துள்ளதுடன் வகுப்பில் சகல பாடங்களிலும் 90 இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்று தொடர்ச்சியாக முதல் நிலையை பெற்றார்.
எட்டாம் தரத்தில் கல்வி கற்கும் போது, தனக்கு 10 ஆம், 11 ஆம் தர பாட புத்தகங்களை படிப்பதற்கு ஆசையாக உள்ளது எனவும் குறித்த புத்தகங்களை வாங்கிக் கொடுக்குமாறும் அவீஷா நெட்சரணி தமது பெற்றோர்களிடம் அடிக்கடி கூறிவந்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சை எழுத வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அவீஷா நெட்சரணி, நிச்சயமாக சிறந்த புள்ளிகளை பெறுவேன் என நம்பிக்கையும் வைத்திருந்தார்.
சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு தனக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்காவிட்டால் தான் எட்டாம் தரத்துடன் கல்வியை கைவிடப் போவதாகவும் பாடசாலைக்கு செல்லப்போவதில்லை எனவும் அந்த சிறுமி தனது பெற்றோர்களிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
எனினும் தனது மகளின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அவீஷா நெட்சரணியின் பெற்றோர்கள் மகள் படிக்கும் பாடசாலையின் அதிபர் மற்றும் வகுப்பாசிரியரை சந்தித்து மகளின் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதன்போது அவீஷா நெட்சரணி எனும் சிறுமி சாதாரண தரப் பரீட்சை எழுதுவதற்கு இன்னும் வயது இருப்பதாகவும், நல்ல முறையில் கல்வி கற்று வரும் அவரது படிப்பு பாதிப்படையும் வகையில் இடமளிக்க வேண்டாம் எனவும் அந்த பாடசாலையின் அதிபர் சிறுமியின் பெற்றோர்களிடம் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து தமது மகளின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, 8ஆம் தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த போதே அந்த பாடசாலையில் இருந்து சட்டபூர்வமாக விலக்கியுள்ளனர்.
பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் வெளிவாரியாக தோற்றுவதற்கும் விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில் அவீஷா நெட்சரணி, இரவு, பகலாக வீட்டில் இருந்தே படித்து சாதாரண தரப் பரீட்சைக்கும் தோற்றினார். இவ்வாறு சாதாரண தரப் பரீட்சையில் 8 ஏ தர சித்திகளையும் பெற்றுக் கொண்டார்.
பின்னர் தான் க.பொ.த உயர் தரப் பரீட்சையையும் எழுத விரும்புவதாகவும் அவீஷா நெட்சரணி தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். மகளின் விருப்பத்திற்கு பெற்றோர்களும் தமது முழு ஆதரவையும் தெரிவித்து, தேவையான பாடப்புத்தங்களையும் வாங்கிக் கொடுத்துள்ளனர். இணையத்தளம், யூரியூப் என்பனவற்றின் உதவியுடன் ஒரு வருடத்தில் கணித பிரிவுக்கான பாடப்பரப்பை தேடி கல்வியும் கற்றார்.
பின்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுத தனிப்பட்ட பரீட்சார்த்திக்கான விண்ணப்பதையும் விண்ணப்பித்து, நம்பிக்கையுடன் பரீட்சையும் எழுதி மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுக் கொண்டதுடன் புத்தளம் மாவட்டத்தில் கணிதப்பிரிவில் 16 ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டார்.
களுத்துறை – பாணந்துறை பேருந்து நிலையத்திற்கு அருகில் தனியார் பேருந்துடன் அரச பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று (02.06.2024) காலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் அரச பேருந்தில் பயணித்த நடத்துனர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் பாணந்துறை டிப்போவில் கடமையாற்றும் நடத்துனர் என தெரியவந்துள்ளது.
அரச பேருந்து பாணந்துறை பேருந்து நிலையத்தை நோக்கி திரும்ப முற்பட்ட போது, கொழும்பில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தை அடுத்து தனியார் பேருந்தின் சாரதி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஊர்காவற்துறை பகுதியில் குளம் ஒன்றினுள் துவிச்சக்கர வண்டியுடன் விழுந்து இரு சிறுமிகள் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியுற்று மயக்கமடைந்த தாய் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்து சம்பவத்தில் ஊர்காவற்துறை நாரந்தனை தெற்கு சூரியவத்தை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய நிரஞ்சன் நிதுசா மற்றும் 5 வயதுடைய நிரஞ்சன் அனுஷ்கா ஆகிய இரு சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வறிய குடும்பத்தைச் சேர்ந்த குறித்த இரு சிறுமிகளும் வீட்டில் இருந்து துவிச்சக்கர வண்டியில் கடைக்கு பால் வாங்க சென்றுள்ளனர். பால் வாங்க சென்ற இருவரையும் காணவில்லை என குடும்பத்தினர் தேடிய போது கடைக்கு சற்று தொலைவில் உள்ள குளத்திற்குள் இருவரும் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
குளத்தின் வரம்பு வழியாக துவிச்சக்கர வண்டியை செலுத்திய வேளை அருகில் இருந்த கல் தடக்கி, துவிச்சக்கர வண்டியுடன் தவறி குளத்துக்குள் விழுந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இரு சிறுமிகளின் சடலங்களும் மீட்கப்பட்டு, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மரண விசாரணை அதிகாரி நாகராஜா தியாகராஜா, ஊர்காவற்துறை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு சிறுமி ஒருவர் கடந்த வருடம் விபத்தில் உயிரிழந்த நிலையில், தற்போது இருவரும் உயிரிழந்தமை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (03.06.2024) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு : பாடசாலைகளுக்கு நாளைய தினம் (03.06.2024) விடுமுறை வழங்குவது தொடர்பில் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும், மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 3834 குடும்பங்களை சேர்ந்த 13717 பேர் பாதிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, பல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனை அண்டியுள்ள குடும்பங்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளன.
வெளியாகிய உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் விஞ்ஞானப் பிரிவில் இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலய மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முன்னிலை பெற்றுள்ளனர்.
அந்தவகையில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் நான்கு மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன், மாவட்ட மட்டத்தில் 1,2,3,5 ஆம் நிலைகளை பெற்றுள்ளனர். அத்துடன் 8 மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் 20 நிலைக்குள் சித்தியடைந்துள்ளனர்.
வர்த்தகப் பிரிவில் 4 மாணவர்கள் 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்றுள்ளதுடன் ஒரு மாணவி மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுள்ளார். அத்துடன் 4 மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதல் 20 நிலைக்குள் சித்திபெற்றுள்ளனர்.
கணிதப் பிரிவில் ஒரு மாணவி 3 பாடங்களிலும் ஆ சித்திகளை பெற்றுள்ளதுடன் மாவட்ட மட்டத்தில் 5ம் நிலையினை பெற்றுள்ளார். அத்துடன் 6 மாணவிகள் மாவட்ட மட்டத்தில் முதல் 20 நிலைக்குள் சித்தியடைந்துள்ளனர்.
கலைப்பிரிவில் ஒரு மாணவி 3 பாடங்களிலும் ஏ சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 23 ஆம் நிலையினை அடைந்துள்ளார். தொழில்நுட்ப பாடத்தில் மாவட்ட மட்டத்தில் 9 ம் நிலையினை ஒரு மாணவி பெற்றுள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலையில் இன்று (01.06.2024) நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 03.05.2024அன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்ட நிலையில் 12.5 கிலோகிராம் எடையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாக அறிவிக்கப்பட்டது.
அத்துடன் 5 கிலோகிராம் நிறைகொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டருக்கு ரூ.70 குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 1582ரூபா எனவும் கூறப்பட்டிருந்தது.
அதேவேளை லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறித்த தினத்திலேயே குறைக்கப்பட்டிருந்தது.
இதற்கமைய 12.5 கிலோகிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,840 ரூபா என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கடும் வெப்பதால் 85 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடங்கள் தெரிவித்துள்ளன.
அந்தவகையில் ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மரணங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. பீகார் மாநிலத்தின் பல பகுதிகளில் 44 டிகிரி செல்சியசை கடந்து வெப்பம் பதிவாகி வருகிறது.
வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழல் நிலவி வருகிறமை குறிப்பிடத்தக்கது
முட்டைக்காக ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் வீட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் அனில் குமார் (வயது 35). இவரது மனைவி பூஜா. இந்த தம்பதி பெங்களூரு பகுதியில் வாடகை வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தனர்.
அனில்குமார், பூஜா இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு உணவு சாப்பிடும்போது அனில் குமார், தனக்கு கூடுதல் முட்டை வேண்டும் என்று கேட்டுள்ளார்.
அதற்கு பூஜா மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் பூஜாவை அனில் குமார் திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த பூஜா, மாடியில் இருந்து குத்தித்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் இடத்திற்கு வந்த பொலிஸார் பூஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையின் கழகமட்ட கிரிக்கட் அணிக்காக தற்போது விளையாடிவரும் மன்னார் மாவட்ட வீராங்கனையான சயந்தினி தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள ஒருவராக மாற்றம் பெற்றுள்ளார்.
இளம் வயதிலேயே நேர்த்தியான பந்துவீச்சினை வெளிப்படுத்திய அவர் தற்போது 23 வயது பெண்களுக்கான National Super League போட்டிகளில் விளையாடி வருகின்றார்.
National Super League போட்டிகளில் அவர் கடந்த 27ஆம் திகதி தனது அறிமுகப் போட்டியில் விளையாடியுள்ளார்.
கொழும்பு அணிக்காக விளையாடும் அவர் ஆரம்ப பந்து வீச்சாளராக செயற்பட்டிருந்தார்.
இந்தப் போட்டியில் இரண்டு ஒவர்களை வீசிய சயந்தினி வெறும் 10 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து அசத்தியிருந்தார்.
இன்ஸ்டாகிராமில் (Instagram) பெண்கள் மீது அதிகரிக்கும் தொல்லைகளை கட்டுப்படுத்துவதற்காக புதிய அம்சமொன்றை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் பெண் அங்கத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கு எதிரான தொந்தரவுகளும் அதிகரித்து வருகின்றது.
பெண்களுக்கு தவறான முறையில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், தகாத வார்த்தைகளால் திட்டுதல் மற்றும் அவர்களை கேலிக்கு உட்படுத்தல் போன்ற விடயங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
இந்நிலையில், இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராமில் ‘லிமிட்’ (Limit) மற்றும் ‘ரெஸ்டிரிக்ட்’ (Restrict) எனும் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் மூலம் நமது பதிவை யார் காணலாம், யார் கருத்து மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பலாம் என்பதை நாமே தீர்மானிக்க முடியும்.
குறித்த பதிவிற்கு ‘ரெஸ்டிரிக்ட்’ செய்யப்படும் நபர், பதிவுக்கு கமன்ட் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூகப் பிறழ்வான புகைப்படங்களை தவறுதலாக யாருக்கும் அனுப்பினால் அதை இன்ஸ்டாகிராமே மறைத்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று பிற்பகல் வெளியாகியிருந்த நிலையில், 190 பரீட்சார்த்திகளின் பரீட்சைப் பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
146 பாடசாலை பரீட்சாத்திகளுடையதும் 44 தனியார் பரீட்சாத்திகளுடையதுமான பெறுபேறுகளே இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2 இலட்சத்து 69 ஆயிரத்து 613 பேர் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் ஒரு இலட்சத்து 73 ஆயிரத்து 444 பேர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை பரீட்சை மீளாய்வு செய் வதற்காக எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியுமெனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், எலுரு நகரைச் சேர்ந்தவர் யேசுரத்னம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜக்கு ரத்னா கிரேஸ் (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் யேசுரத்னத்தை காதலிக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று, எலுருவில் ஜக்கு ரத்னா கிரேஸின் வீட்டின் அருகே, யேசுரத்னம் அவரை வழிமறித்து தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் ஜக்கு ரத்னா கிரேஸ் இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ஆத்திரமடைந்த யேசுரத்னம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், ஜக்கு ரத்னா கிரேஸின் கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தினார்.
இதில் நிலைக்குலைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் யேசுரத்னம் தானும் கத்தியால் குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அந்த இடம் முழுவதும் ரத்த வெள்ளமாக காட்சியளித்தது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸார், யேசுரத்னத்தை மீட்டு எலுரு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் ஜக்கு ரத்னா கிரேஸின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யேசுரத்தினம் ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவித்தனர். யேசு ரத்தினம், ஜக்கு ரத்தினத்தை கத்தியால் குத்தும் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.