கற்பிட்டி, கந்தகுளிய பிரதேசத்தில் சுமார் 23 கோடி ரூபா பெறுமதியான 23 கிலோ நிறையுடைய திமிங்கல வாந்தியுடன் இரண்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மீனவர்கள் இன்று (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான மீனவர்கள் கந்தகுளி பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் மிதந்த திமிங்கல வாந்தியை மீனவர்கள் இரகசியமான முறையில் எடுத்துச் சென்றமை விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன் மீனவர்களிடமிருந்த திமிங்கல வாந்தியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது .
அடுத்த 24 மணித்தியாலங்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை(Red alert) விடுத்துள்ளது.
அதன்படி, குறித்த பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் கடல் அலையின் உயரம் 2.5 – 3.5 மீற்றர் வரை எழ கூடும் என எதிர்பாக்கப்படுகின்றது.
இந்த நிலையில், மறு அறிவித்தல் வரை கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கற்பிட்டி, கொழும்பு, காலி தொடக்கம் மாத்தறை வரையிலான பகுதிகளில் கடல் அலை கரையை வந்தடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறியுள்ளது.
றீமால் (Remal) சூறாவளியின் தாக்கம் நாளை(30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக, எதிர்வரும் 2 அல்லது 3 தினங்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை நிலவும் எனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, மழையுடனான வானிலைக் காரணமாக 10,483 குடும்பங்களைச் சேர்ந்த 39,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கைத் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு(Mullaitivu) – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் தரித்துள்ள சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கடை ஒன்றின் உரிமையாளர் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கை நேற்று(28.05.2024) இடம்பெற்றள்ளது.
பொலிஸ் விசாரணை
சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவி நாள்தோறும் சந்தேக நபரின் கடைக்குச் சென்று வந்துள்ள நிலையில், சுகயீனம் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மாணவி கர்ப்பம் தரித்திருப்பது வைத்திய பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாணவி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சட்ட வைத்திய விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முள்ளியவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்கா(America) – நியூயோர்க்கில் இரத்தம் சிந்துவது குறித்த சுவரொட்டி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 2024 உலக கிண்ண இருபதுக்கு இருபது(T20 World cup) போட்டிகளின் போது, பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்குமா என்ற அச்சம் மீண்டும் எழுந்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ்-க்கு (ISIS) ஆதரவான சுவரொட்டியில், ஒரு முகமூடி அணிந்த மனிதன் தோளில் துப்பாக்கியுடன் இருப்பதைக் காட்டுகிறது.
அத்துடன், அந்த சுவரொட்டியில் “நீங்கள் போட்டிக்காக காத்திருங்கள், நாங்கள் உங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று இரத்தச் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ளது.
2024 ஜூன் 9 ஆம் திகதியன்று ‘நாசாவ் மைதானத்தை (Nassau Stadium) இந்த சுவரொட்டி குறிப்பிடுவதுடன் குறித்த திகதியில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் தமது குழு ஆட்டத்தில் போட்டியிடவுள்ளன.
மேலும், சுவரொட்டியில் மைதானத்தின் மீது பறக்கும் ட்ரோன்களின் படங்கள் மற்றும் டைனமைட் குச்சியுடன் கூடிய கடிகாரம் ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன. எனினும், இந்த சுவரொட்டி அச்சத்தை தூண்டவில்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (30.05.2024) மற்றும் நாளை மறுதினங்களில் வழமை போன்று இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ஆசிரியர் சங்கங்களினால் பணிப் பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படும் நிலையில், பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என பல்வேறு தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே, கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை இன்று வழங்கியுள்ளது.
அத்துடன், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர் சங்கங்களினால் நடாத்தப்படும் பணிப் பகிஷ்கரிப்பில் பிரதான ஆசிரியர் சங்கம் இணையாது எனவும் சங்கத்தின் நிர்வாகிகளால் கூறப்பட்டுள்ளது.
மேலும், பணிப் பகிஷ்கரிப்பினை தவிர்த்து மீண்டும் பணிக்கு திரும்புமாறும் தமது பிரச்சினைகளை அதிபர் நியமித்த நிபுணர் குழுவிடம் முன்வைக்குமாறும் கல்வி அமைச்சு ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 31ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
க.பொ.த உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் 346 976 பரீட்சாத்திகள் நாடுமுழுவதிலுமிருந்து தோற்றியுள்ளனர். இதில் 281,445 பாடசாலைப் பரீட்சாத்திகளும் 65,531 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் உள்ளடங்குவர்.
இந்நிலையில் மே 31 முதல் மாணவர்கள் தங்கள் முடிவுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையதளம் ஊடாக பார்வையிடலாம் என சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன் தலைமையிலான பொலிசார் நேற்று (28.05) மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர்.
இதன்போது இளைஞர் ஒருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் மீட்க்கப்பட்டன. இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்த போதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
வவுனியா இறம்பைக்குளத்தில் அமைந்துள்ள சிட்டி கிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த மழலையர் விளையாட்டு விழா பள்ளி மைதானத்தில் கடந்த 25.05.2024 சனிக்கிழமை இடம்பெற்றது. சிட்டிகிட்ஸ் முன்பள்ளி ஆரம்பிக்கபட்டு பன்னிரெண்டு(12) வருடங்களை கடந்துள்ள நிலையில் இவ்வருடம் மாணவர்களிடையே intelligence House (Purple),Talent House (Yellow ),Clever House(Green Colour) என இல்லங்கள் பிரிக்கப்பட்டு முதன்முறையாக இல்ல அலங்காரங்களுடன் மழலையர் இல்ல விளையாட்டு போட்டியாக இடம்பெற்றது.
முன்பள்ளியின் முதல்வர் திரு.நந்தசீலனின் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் திரு.யுகநீதன் (பொறியியலாளர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை- வவுனியா ) அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் திருமதி நதீசியா சுஜிராஜ் (உதவி அதிபர்- வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ), திரு.ஜனகதீபன் ( முகாமையாளர் ஆதிரா குருப் ஒவ் கம்பனி ) ,N.A.P. சில்வா (பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்- மாவட்ட செயலகம் வவுனியா ) ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் திருமதி.ஐ.தர்ஜிகா(ஆசிரியை – முருகனூர் சாரதா வித்தியாலயம் ),திருமதி.ஜனனி பிரேம்நாத் (அபிவிருத்தி உத்தியோகத்தர் –விவசாய பயிற்சி நிலையம் – வவுனியா),திருமதி.ஜெயமாலா அசோக்குமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர் –விவசாய பயிற்சி நிலையம் –,வவுனியா),திருமதி.சிவதர்சினி தபோசன் (முகாமைத்துவ சேவை உதவியாளர் –பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை –வவுனியா ),திருமதி சகிறிஸ்டலின் பெர்ணான்டோ (ஆசிரியை – அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயம் ) ,திரு. செலவரத்தினம் நிரஞ்சன் (பாஸ்டர் ) திரு. த.கஜேந்திரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – பிரதிப் பிரதம செயலாளர் அலுவலகம் திட்டமிடல், வடக்கு மாகாணம் ) ஆகியோர் சிறப்பு விருந்தினகளாகவும் கலந்து கொண்டனர் .
முன்பள்ளி மாணவர்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்புடன் அதிதிகள் அழைத்துவரப்பட்டு விளையாட்டு விழா ஆரம்பமானது.மேற்படி நிகழ்வில் ஆர்வத்துடன் போட்டிகளில் சிறார்கள் கலந்துகொண்டதுடன் போட்டியின் நிறைவில் விருந்தினர்களால் சிறுவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன .
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இவ்வார இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்த பரீட்சையில் 346,976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சார்த்திகளும், 65,531 தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
புகையிரத பாதையில் பயணித்த இளைஞர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை குரே வீதியைச் சேர்ந்த மொஹமட் இருபான் மொஹமட் இமாட் என்ற 21 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த இளைஞன் ஹெட்போனில் பொருத்திக் கொண்டு புகையிரதப் பாதையில் நடந்து சென்றூல்ளார். இதன்போது, அளுத்கமவில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல தடவைகள் ஹோர்ன் ஒலித்த போதும், சுற்றியிருந்தவர்கள் கூச்சலிட்ட போதும் அவர் புகையிரத பாதையில் இளைஞர் பயணித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீரிகம ரயில் பாதைக்கு அருகில் தலையில் காயங்களுடன் உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மீரிகம விஜய ரஜதஹான மற்றும் மீரிகம ரயில் நிலையங்களுக்கு இடையில் திலினாகம பிரதேசத்தில் ரயில் பாதைக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சில் அலுவலக உதவியாளராக கடமையாற்றிய சந்திம லக்மால் பெரேரா என்ற 28 வயதுடைய திருமணமாகாத இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்று மதியம் தானம் வழங்கும் நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதாகவும், பிற்பகலில் இருந்து அவர் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் உயிரிழந்த இளைஞனின் தந்தை தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரவில் எங்கு பயணம் செய்தார் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மீரிகம ஆதார வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி துசித பிரமோத் விஜேவர்தன மற்றும் பொலிஸ் குற்றத்தடுப்புப் புலனாய்வு அதிகாரிகள் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் அவரது இல்லத்திலிருந்து சுமார் 3 கிலோமீற்றர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணிக்கும் போது ரயிலில் இருந்து தவறி விழுந்து மரணம் நிகழ்ந்தா அல்லது வேறு ஏதேனும் குற்றச் சம்பவங்களால் ஏற்பட்டதா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீதுவ, லியனகேமுல்ல பிரதேசத்தில் வெட்டுக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. லியனகேமுல்ல கெலேபல்லிக்கு அருகில் உள்ள வீதியில் உள்ள வடிகாலில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த பெண்ணை வேறு இடத்தில் கொலை செய்து சடலம் போடப்பட்டதா அல்லது அதே இடத்தில் கொலை செய்யப்பட்டாரா என இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் மீட்கப்பட்ட சட்லம் தொடர்பில் பொலிஸார் வீசாரணைகளி ஆரம்பித்துள்ளனர்.
மட்டக்களப்பு வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் பகுதியிலுள்ள வயல் வெளியில் அமைந்துள்ள கிணறு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (27) மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வெல்லாவெளி மண்டூர் பிரதான வீதியில் உள்ள வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ரஞ்ஜித்குமார் முன்னிலையில் கிணற்றிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தை பார்வையிட்ட நீதிவான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார், சம்பவ இடத்திற்கு வரவளைக்கப்பட்டு, பொலிஸ் மோப்ப நாய் கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மண்டூர் கோட்டமுனை பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய தம்பிராசா பதிராசா என்ற மீன் வியாபாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்தவர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (26) வீட்டிலிருந்து புறப்பட்டவர் திங்கட்கிழமை மாலை வரையில் வீடு வந்து சேரவில்லை என உறவினர்கள் தெரிவித்ததோடு, பொலிஸாரிடமும் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அதோடு உயிரிழந்தவர் பயணித்த துவிச்சக்கரவண்டியும் அப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பெயரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கபப்ட்டு வருகின்றது.
முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பூதன் வயல் கிராமத்தில் இளம் குடும்ப பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பெண்ணின் கணவர் மற்றும் இருபெண்கள் உள்ளிட்ட மூவரை முள்ளியவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பூதன் வயல் கிராமத்தினை சேர்ந்த இளைஞனை வவுனியா ஆச்சிகுளம் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளம் குடும்பபெண் திருமணம் செய்து 7 மாதங்களாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (26.05.2024) கிணற்றில் குறித்த பெண் விழுந்து இறந்துள்ளதாக முறைப்பாடு செய்வதற்காக கணவன் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.
இதன்போது பொலிஸார் வருகை தரமுன்னர் அயலவர்கள் கிணற்றில் விழுந்த பெண்ணை மீட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இருப்பினும், பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்துள்ள நிலையில் நேற்று (27.05.2024) சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசேதனைக்கு உட்படுத்தப்பட்டபோது குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதான சந்தேகம் எழுந்துள்ளது.
இதனையடுத்து முள்ளியவளை பொலிஸாரால் உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் கணவருடன் வாழ்ந்துவந்த நெடுங்கேணியினை சேர்ந்த மற்றும் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரையும் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம்(Jaffna), தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியொருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
ஊர்காவற்றுறை – கரம்பன் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த 10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை தாக்கி சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாமை, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட்சகோதரி தாக்குதல் நடத்தியதாக மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், தங்கள் மீது தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதாகவும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஊர்காவற்றுறை பொலிஸாரால், குறித்த 11 மாணவிகளும் இன்று(28) யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது, மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதுடன் மாணவிகள் தாக்கப்பட்ட விவகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரியை கைது செய்வதற்கான நடவடிக்கையை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் இருபத்திநான்கு வயதுடைய தாய் ஒருவர் உயிரிழந்த நிலையில் குழந்தையொன்றைப் பெற்றெடுத்துள்ளதாகவும், சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தனது தனிப்பட்ட வைத்தியரின் அறிவித்தலின் பேரில் கடந்த (22 ஆம் திகதி) இறந்த தனது குழந்தையை பிரசவிப்பதற்காக கொட்வில புதிய மாவட்ட வைத்தியசாலையில் தாயொருவர் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் உபாலி கருணாரத்ன விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக தாயை பரிசோதித்த தனியார் வைத்தியர் ஸ்கேன் செய்ததில், வயிற்றில் இருந்த குழந்தையின் இதயம் வேலை செய்யாமல் குழந்தை உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், உயிரிழந்த குழந்தையை பிரசவம் செய்வதற்காக வைத்தியசாலைக்கு செல்லுமாறு தாய்க்கு வைத்தியர் அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த தாய் கொட்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சடலத்தை அகற்றுவதற்கு தேவையான மருந்துகளை வைத்தியசாலை ஊழியர்கள் தாயாருக்கு வழங்கியுள்ளனர்.
இதன்போது, வயிற்றில் இருந்த குழந்தை இறந்துவிட்டதை தாயார் ஏற்றுக்கொண்டதாகவும், பிரசவத்திற்கு அனுமதி தருவதாகவும், அதற்கான ஆவணங்களை எழுதி கையொப்பமிட்டுள்ளார்.
இதன்பின்னர் கடந்த 24 ஆம் திகதி காலை குழந்தை உயிரிழந்த நிலையில் தாய் பிரசவித்துள்ளார். அதற்குள் கரு சற்று மோசமடைந்து விட்டதாகவும், முப்பத்தாறு வாரங்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து உயிரிழந்த குழந்தையின் உடலை ஏற்க உறவினர்கள் யாரும் முன்வரவில்லை எனவும், 25 ஆம் திகதி மதியம், உறவினர்கள் வந்து உடலைக் கேட்டுள்ளனர்.
வைத்தியசாலை ஊழியர்களிடையே சரியான தகவல்தொடர்பு இல்லாத சூழ்நிலையால் குழந்தையின் சடலம் அந்த நேரத்தில் பாதுகாவலர்கள் இல்லாத பிற உடல்களுடன் தகனத்திற்காக வைத்தியசாலை பிணவறையில் இருந்து லொறியொன்றில் அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து சடலத்தை ஒப்படைக்குமாறு உறவினர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய லொறியில் இருந்து சடலம் மீண்டும் வைத்தியசாலை பிரேத அறைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
குழந்தை பிரசவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், நீதவான் வந்து பிரேத பரிசோதனை நடத்துவார் என்றும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், உயிரிழந்த சிசுவின் அடையாளத்தை உறுதிப்படுத்த (DNA) டி.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ளுமாறு மாத்தறை பிரதான நீதவான் அருண புத்ததாச உத்தரவிட்டுள்ள நிலையில், பரிசோதனை செய்யப்படும் எனவும் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.