யாழில் குடும்ப சண்டையில் பரிதாபமாக பலியான இளைஞன்!!

யாழில் அக்காவின் கணவனுக்கும், தந்தைக்குமிடையில் ஏற்பட்ட தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் ஒருவர், அக்காவின் கணவரின் கத்திக்குத்து தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில், தாவடி பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் சம்பவத்தில் வரதராசா நியூட்சன் (23) என்பவரே உயிரிழந்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் (23) உயிரிழந்ததாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞனின் அக்காவின் கணவருக்கும்- இளைஞனின் தந்தைக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராற்றை விலக்கச் சென்ற இளைஞன் மீது, அக்காவின் கணவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இளைஞனின் தந்தை மீதும் தலைக்கவசத்தால் தாக்கிய நிலையில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து, அக்காவின் கணவனை சுன்னாகம் பொலிசார் கைது செய்திருந்ததுடன் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேம்பாலத்தில் இருந்து விழுந்த மாணவன் பலி : தற்கொலையா?

கொழும்பு பகுதியில் உள்ள மேம்பாலத்தில் இருந்து நெடுஞ்சாலையில் விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மாணவனின் மரணம் சந்தேகத்திற்குரியது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (24) இரவு 7 மணி அளவில் அதிவேக நெடுஞ்சாலையில் கொழும்பு வெளிவட்ட வீதியின் 1.2 கிலோ மீற்றர் தூணுக்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து இளைஞன் வீழ்ந்துள்ளார்.​​

மாத்தறை நோக்கிச் சென்ற காரில் இளைஞன் மோதியதாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பாதுக்க பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தில் கார் சேதமடைந்துள்ளதுடன், கார் சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் நடத்திய சோதனையில் உயிரிழந்த இளைஞரின் வீட்டில் தற்கொலை செய்து கொள்வதாக எழுதப்பட்ட கடிதம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இருளில் மூழ்கிய இலங்கையில் பல பகுதிகள்!!

சீரற்ற காலநிலையினால் இலங்கையில் 431, 500 பேர் மின் தடை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மின் தடை தொடர்பில் நாளாந்தம் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுவதால், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மீள பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் கடந்த 4 நாட்களில் 59,400 மின்சார செயலிழப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், கிடைக்கப் பெற்றுள்ள 3300,000ற்கும் அதிகமான முறைப்பாடுகளுக்கு அமைய மின் தடங்கல்களைச் சீரமைக்கும் பணிகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நேற்றைய தினம் (24) வரையில் 330,000 பேருக்கான மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

யாழில் சிற்றுண்டி உட்கொள்ள சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணம் (Jaffna) – மருதானார் மடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் துருப்பிடித்த கம்பி துண்டு வைத்து செய்த ரோல் இனங்காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்றிரவு (24.05.2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த உணவகத்தில் ரோலினை வாங்கி உட்கொண்ட நபர் அதனுள் கம்பி துண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே குறித்த உணவகத்திற்கு ரோல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்ததுடன் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்!!

சட்டவிரோதமாக மலேசியாவிற்குச் சென்ற 1,608 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான 2 மாத காலப்பகுதியில் குறித்த 1,608 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மலேசிய அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு அமைய இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த கௌரவம்!!

இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் ரஸல் ஆர்னோல்ட்டை கிரிக்கட் அவுஸ்திரேலியா கௌரவப்படுத்தியுள்ளது. கிரிக்கட் அவுஸ்திரேலியாவின் பல்கலாச்சார தூதுவர்களில் ஒருவராக ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கட் வீரரும், கிரிக்கட் வர்ணணையாளருமான ஆர்னோல்ட் உள்ளிட்ட 54 பேர் இவ்வாறு தூதுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுத்துறையிலும் சமூகத்திலும் சாதக மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கிலான திட்டமொன்றை கிரிக்கட் அவுஸ்திரேலியா முன்னெடுக்க உள்ளது.

வசீம் அக்ரம், உஸ்மான் கவாஜா, ரவி சாஸ்திரி, அலெனா கிங், ஸ்கொட் போலன்ட் போன்ற 54 பேர் இவ்வாறு தூதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த தந்தையின் வார்த்தைக்கு உயிரூட்டிய 13 வயது சிறுவன்!!

மாத்தறையில் உயிரிழந்த தனது தந்தையின் ஞாபகார்த்தமாக 13 வயது சிறுவன் உருவாக்கிய வெசாக் மின்குமிழ் பந்தல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறித்த அலங்கார பந்தலானது மாத்தறை புனித தோமஸ் கல்லுரியில் 8ஆம் தரத்தில் கல்வி பயிலும் வெனுஜ தெனுவான் சேனாநாயக்க என்ற மாணவனாலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

வெனுஜவின் தனது தந்தையும் பாட்டனாரும் மின் பொறியியலாளர்கள் என்பதோடு இதன்மூலம் இருவரிடமும் மின் தொழில்நுட்ப வேலைகளை சிறு வயதிலிருந்தே கற்றுக் கொண்டுள்ளார்.

அத்துடன் அவர்கள் வெசாக் தினங்களில் மின்குமிழ் பந்தல்களை அமைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், தந்தையின் அரவணைப்பை 3 மாதங்களுக்கு முன் இழந்துள்ள வெனுஜ என்றாவது ஒருநாள் நீ அதிசிறந்தவனாக உருவாக வேண்டும் எனும் புத்திமதியை கூறியே தந்தை வளர்த்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே உயிரிழந்த தனது தந்தையின் இந்த வார்த்தைக்கு உயிரூட்டி வெனுஜ 5000 மின்குமிழ்கள் கொண்ட வெசாக் பந்தலொன்றை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் விமானியாக வேண்டும் என்பதே தனது ஆசை என வெனுஜ குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் தேடப்படும் தமிழர் : தகவல் கொடுத்தல் இரண்டு மில்லியன் சன்மானம்!!

கொழும்பில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் என்பவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

1978 ஆம் ஆண்டு பிறந்த சந்தேக நபர் 5 அடி 6 அங்குலம் உயரம் உடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரின் புகைப்படத்தை வெளியிட்டு மக்களின் உதவி நாடப்பட்டுள்ளது. சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் வழங்குவோருக்கு இரண்டு மில்லியன் ரூபா சன்மானம் வழங்கப்படும்.

தகவல்கள் தருவோரின் பெயர்கள் இரகசியமாக பாதுகாக்கபடும் என பொலிஸார் தெரிவித்துள்ளார். அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் 071-8591753 அல்லது 071-8591774 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

வீதியில் குவிக்கப்பட்ட பெருந்தொகை மரக்கறி : கடலென திரண்ட மக்கள் வெள்ளம்!!

இலங்கையில் நேற்று முதல் வெசாக் வாரம் ஆரம்பமாகி உள்ளது. நேற்று பொசன் போயாவை முன்னிட்டு நாடு முழுவதும் தானசாலைகள் அமைக்கப்பட்டு மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன.

நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் உணவுகளை பெற்று உண்டு மகிழ்ந்தனர். அதில் சில தானசாலை நிகழ்வுகள் மக்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளன.

கண்டி, பிலிமதலாவ பகுதியிலுள்ள வீதியில் வைத்து மரக்கறி தன்சல் வழங்கப்பட்டுள்ளது. பெருந்தொகை மரக்கறிகளை மக்களுக்கு இலவசமாக வியாபார ஒருவர் வழங்கியுள்ளார்.

தற்போது நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியில் இவ்வாறான தன்சல் மக்களுக்கு மிகவும் பிரயோகமாக மாறியுள்ளது. பல மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருந்த மக்கள் தன்சல் மரக்கறிகளை பெற்றுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

மரணக் கிணறு இடிந்து விழுந்ததில் ஐவர் காயம்!!

கண்டி – திபுலபலஸ்ஸ, ரொட்டலவெல விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டிருந்த மரணக் கிணறு இடிந்து வீழுந்ததில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

வெசாக் பண்டிகையை முன்னிட்டு திவுலபலஸ்ஸ, ரொட்டவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த மரணக் கிணறே இவ்வாறு இடிந்து விழுந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த 50 வயதுடைய பெண் ஒருவரும் 13, 36, 40, மற்றும் 45 வயதுடைய நான்கு ஆண்களும் கிராதுருகோட் மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திவுலபலஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காயமடைந்தவர்களில் இருவர் கிராதுருகொட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய மூவர் மஹியங்கனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கார் மீது விழுந்த பாரிய மரம் : தெய்வாதீனமாக தப்பிய குடும்பம்!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (24.05) பிற்பகல் மஹவெவ, கொஸ்வாடிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும்,

காரில் இருந்த மூவர் மாரவில ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் அனர்த்த நிவாரண அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் கொஸ்வாடிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மரம் கார் மீது விழுந்துள்ளது.

விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஏழு வயது மகள் ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை கடந்த நாட்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற மூன்று பெண்கள் மரம் விழுந்து உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் திடீரென உடைந்து வீழ்ந்த வெசாக் தோரணம் : பலர் காயம்!!

வெசாக் பண்டிகை முன்னிட்டு கம்பஹா திவுலபிட்டிய மரதகஹமுல பிரதேசத்தில் கட்டப்பட்டிருந்த வெசாக் தோரணமொன்று திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது.

இதன்போது, சிலர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் மழை மற்றும் காற்று காரணமாக இந்த வெசாக் தோரணம் இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையால் உயிரிழந்த பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

மாரவில மற்றும் மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மரங்கள் உடைந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாத்தன்டிய ஹவான வீதியில் பிலகட்டுமுல்ல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மீது பலா மரம் விழுந்ததில் 36 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹவெவ மெதகொட பிரதேசத்தில் வசித்து வந்த ஹஷினி இஷார லங்கா என்ற 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் மதியம் 11.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்த பெண் தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் நாத்தாண்டிய நகருக்கு சென்று கொண்டிருந்தார்.

இதில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், தந்தை படுகாயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மாதம்பே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளியாப்பிட்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரும் மழையில் இருந்து தப்பிப்பதற்காக வீதிக்கு அருகாமையில் உள்ள மரத்தின் அடியில் இருந்த போது மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.

சூரியதென்ன, கல்முருவ பிரதேசத்தைச் சேர்ந்த நிசன்சலா சரோஜனி என்ற 39 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பலத்த காயமடைந்த பெண் மாதம்பே கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது இந்த விபத்துக்குள்ளானது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தீவிர புயல்!!

வங்காள விரிகுடாவில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (24.05) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது புயலாக வலுப்பெற்று பங்களாதேஷை நோக்கி நகரக்கூடும் என்று அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவியுள்ளது.

இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. மேலும் அதே திசையில் நகர்ந்து நாளை (25) புயலாக உருவாகவுள்ள நிலையில் ‘ரெமல்’ எனப் பெயரிடப்ப்டுள்ளது.

இந்நிலையில், வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றதன் எதிரொலியாக தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 3 கைதிகள் விடுதலை!!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 3 கைதிகள் நேற்று (23.05) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நடாளாவிய ரீதியில் 10 பெண் கைதிகள் உட்பட 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் சிறுகுற்றங்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்ற குற்றங்களுக்காக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் கே.ஏ.எஸ்.அபயரட்ண மற்றும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குறித்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்கி அவர்களை விடுதலை செய்து வழியனுப்பி வைத்தனர்.

வவுனியா பொலிஸாரால் வெசாக் தினத்தை முன்னிட்டு உணவு வழங்கல்!!

வெசாக் தினத்தை முன்னிட்டு வவுனியா பொலிஸாரால் இன்று (23.05) தன்சல் வழங்கி வைக்கப்பட்டது.

வன்னி பிரதி பாெலிஸ்மா அதிபரின் வழிகாட்டலில் ஏ9 வீதியில் அமைந்துள்ள பிரதி பாெலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்னால் சவ்வரசி கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.

இதன் பாேது வீதியால் சென்ற பலரும் வாகனங்களை நிறுத்தி சவ்வரசி கஞ்சியை பருகி சென்றிருந்தனர்.

இதனையடுத்து, வவுனியா தலைமை பாெலிஸ் நிலையத்தில் சமுதாய பாெலிஸ் குழுவின் ஏற்பாட்டில் சமைத்த உணவுப் பாெதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்பாேது வீதியால் சென்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்று சமைத்த உணவுப் பாெதிகளை பெற்றுச் சென்றனர்.

இந் நிகழ்வுகளில் வன்னி மாவட்ட பிரதி பாெலிஸ்மா அதிபர் சாமந்த விஜயசேகர, சிரேஸ்ட பாெலிஸ் அத்தியட்சகர் மாலன் அஜந்த பெரேரா, வவுனியா தலைமை பாெலிஸ் நிலைய பாெறுப்பதிகாரி ஜெயக்காெடி, மதகுருமார், சமுதாய பாெலிஸ் குழு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் கலந்து காெண்டனர்.