மனைவியின் மரண செய்தியை கேட்டு கணவன் எடுத்த விபரீத முடிவு!!

பாணந்துறையில் மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அன்றைய தினமே உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

“நீ இல்லாமல் நான் ஒரு நாளும் வாழமாட்டேன்” என்று மனைவிக்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருந்த கணவன், மனைவி உயிரிழந்த தினத்தன்று மருந்துகளை அதிகளவில் உட்கொண்டு உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை, வாலான, மங்கள மாவத்தையைச் சேர்ந்த நெலும் கல்ஹரிகா ஹேமகாந்தி என்ற 64 வயதுடைய பெண்ணும் அவரது கணவரான 68 வயதுடைய மஸ்தியகே டொன் ஜயந்த குணதிலக்க என்பவருமே உயிரிழந்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் பெற்றோரான தம்பதியருக்கு திருமணமாகி சுமார் நாற்பத்திரண்டு வருடங்களாகியுள்ளது.

கடந்த முப்பது வருடங்களாக இந்த பெண் நீரிழிவு, கொலஸ்ட்ரால், இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். “என்றாவது ஒரு நாள் நீ இல்லாத நாளில் நானும் என் உயிரை இழப்பேன்.” என கணவர் அடிக்கடி கூறியுள்ளார்.

இந்த நிலையில் களுத்துறை நாகொட வைத்தியசாலையில் உடல்நிலை மோசமடைந்து சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் உயிரிழந்துள்ளார் என்ற செய்தியை கேட்டறிந்த கணவர் அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மனைவியின் பிரேத பரிசோதனை நாகொட வைத்தியசாலையிலும் கணவரின் பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலும் நடைபெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மனைவியை கொடூரமான முறையில் படுகொலை செய்த கணவன் வழங்கிய அதிர்ச்சி வாக்குமூலம்!!

பதுளை பகுதியில் மனைவியின் தலையில் பெரிய கல் ஒன்றால் தாக்கி அவரைப் படுகொலை செய்த கணவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை சம்பவம் லுணுகலை – ஜனதாபுர, தம்பபிட்டிய வத்த கும்புக்கன் ஓயாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றையதினம், வத்த கும்புக்கன் ஓயாவிலிருந்து 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய், தலைப் பகுதியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதையடுத்து 17 வயதுடைய மகள் தனது தாயின் மரணத்தில் சந்தேகம் உள்ளது என்று பொலிஸாரிடம் கூறினார்.

இதற்கமைய பொலிஸார் விசாரணை வேட்டையை ஆரம்பித்தனர். இதன்போது 36 வயதுடைய ஓட்டோ சாரதி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் தலைமறைவாகி இருந்த 45 வயதுடைய மேற்படி பெண்ணின் கணவர் நேற்றிரவு லுணுகலை நகரில் வைத்து லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சிறிய கல் ஒன்றால் மனைவியின் தலைப் பகுதியைத் தான் தாக்கினார் எனவும், பின்னர் பெரிய கல் ஒன்றால் தாக்கிக் கொலை செய்தார் எனவும் சந்தேகநபர் தெரிவித்தார் என்று பொலிஸார் கூறினர்.

இருவருக்கும் இடையே மிக நீண்ட காலமாகக் குடும்பத் தகராறு காணப்பட்டது என்றும், இருவருக்கும் இடையே விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகின்றது என்றும், பெண்ணின் வீட்டுப் பகுதிக்கு குறித்த நபர் செல்லக்கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பொலிஸாரின் விசாரணைகள் நிறைவடைந்ததன் பின்னர் பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

ஒலிம்பிக் சுடரை ஏந்திய முதல் ஈழத் தமிழர் : குவியும் வாழ்த்துகள்!!

2006 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து பிரான்ஸ் வந்தடைந்த தமிழ் பேக்கர் தர்ஷன் செல்வராஜா, 2024 ஆம ஆண்டின் ஒலிம்பிக் சுடரை ஏந்திய முதல் ஈழத் தமிழர் என்ற பெருமையை படைத்துள்ளனர்.

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டது தனது அதிர்ஷ்டம் என பேக்கரி உரிமையாளரும் புலம்பெயர் இலங்கைத் தமிழருமான தர்ஷன் செல்வராஜா தெரிவித்துள்ளார்.

2024 ஆண்டுக்கான தொடர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் தீபத்தை எந்திய 10000 பேரின் ஒருவராக தமிழர் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார்.

ஆயிரக்கணக்கானவர்களில் தானும் ஒருவனாக தேர்ந்தெடுக்கப்ட்டதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைவதாக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தர்ஷன் செல்வராஜா தெரிவித்தார்.

மதுபோதையில் இடம்பெற்ற பயங்கர விபத்து இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

இந்தியாவில் சொகுசு கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்து சம்பவம் புனே கல்யாணி நகர் பகுதியில் நேற்று அதிகாலை 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் பெண் உட்பட இருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் குறித்த காரை செலுத்தியது 17 வயதான சிறுவன் என்பதும் அவர் மதுபோதையில் காரை செலுத்தியும் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து குறித்த சிறுவன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். சிறுவனுக்கு அன்றைய தினமே நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.

வெறும் 14 மணித்தியாலத்திற்குள் சிறுவனுக்கு பிணை வழங்கப்பட்டது தொடர்பில் சிலர் எதிர்மறையான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

முதல் முயற்சியிலேயே உலக சாதனையை முறியடித்த இலங்கை வீரர்!!

உலக பரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் F44 ஈட்டி எறிதலில் இலங்கை வீரர் சமிதா துலான் உலக சாதனையை முறியடித்துள்ளார். ஜப்பான் – டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில் தனது முதல் முயற்சியிலேயே அவர் 66.49 மீட்டர் தூரம் எறிந்து குறித்த சாதனை படைத்துள்ளார்.

பாரா தடகளப் போட்டிகளில் F44 பிரிவின் தடகள வீரர்களும் F64 பிரிவில் போட்டியிடுகின்றனர். இதனையடுத்து, குறித்த போட்டியில் F64 பிரிவின் கீழ் போட்டியிட்ட இந்திய வீராங்கனை சுமித் தங்கப் பதக்கத்தை வென்றார்.

மேலும் இதில் இரண்டாம் இடம் பெற்ற சமிதா துலான் 66.49 மீற்றர் தூரத்தை பதிவு செய்தார். குறிப்பாக மூன்றாவது வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய வீரர் சந்தீப் 60.41 தூரத்தை பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கணவனின் சடலத்திற்கு உரிமை கோரும் நான்கு மனைவிகள்!!

குளியாப்பிட்டிய மருத்துவ பீடத்திற்கு அருகில் இரண்டு சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலத்தை ஏற்றுக் கொள்ள நான்கு மனைவிகள் முன்வந்துள்ளதாக குளியாப்பிட்டிய வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், பொலன்னறுவை உட்பட பல பிரதேசங்களில் வசிக்கும் பிரேமரத்ன அதிகாரி என்ற 59 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் 4 மனைவிகள் சடலத்திற்கு உரிமை கோரியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் சட்டப்படி திருமணம் செய்து கொண்ட மனைவியிடம் சடலத்தை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சைக்கிளில் பயணித்த இருவரும் குருநாகல் நோக்கிச் சென்ற காரை பின்தொடர்ந்து துரத்த முற்பட்ட போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த மற்றைய நபர் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் பாண் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பாண் வாங்கிய ஒருவர் பாணுக்குள் கண்ணாடிப் துண்டை பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று (21.05.2024) வாங்கிய பாணிலேயே கண்ணாடி துண்டு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த கடைக்கு சுன்னாகம் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் இருந்தே பாண் வழங்கப்பட்டுள்ளது.

எனினும், சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவரால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கும் பீட்ரூட் : எப்படி தெரியுமா?

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சிலர் டயட்டைப் பின்பற்றுகிறார்கள், சிலர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறார்கள்.

ஆனால் இதைச் செய்வது மட்டும் தீர்வாகாது, உடல் எடையை குறைக்க சரியான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டும்.

உடல் எடையை குறைக்க ஒரு ஆரோக்கியமான வழியை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால் இந்த பதிவை முழுவதுமாக வாசித்து பார்க்கவும். வேகமாக உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் பீட்ரூடை இப்படி பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

  • அரைத்த ஓட்ஸ் – 1 கப்
  • பீட்ரூட் – 1 துருவியது
  • கேரட் – 2 துருவியது
  • முட்டைக்கோஸ் / கீரை – 1 கப்
  • தேவைக்கேற்ப உப்பு
  • கருப்பு மிளகு தூள் – அரை தேக்கரண்டி
  • தண்ணீர் ஒரு கப்

பீட்ரூட் ஓட்ஸ் செய்வது எப்படி?

  • முதலில் ஓட்ஸை மிக்ஸியில் அரைக்கவும்.
  • துருவிய அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் சேர்க்கவும்.
  • கருப்பு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து மாவை தயார் செய்யவும்.
  • ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, மாவை கடாயில் போடவும்.
  • இருபுறமும் நன்றாக வேகவைக்கவும். இப்படி செய்து எடுத்தால் உடல் எடையை குறைக்கவும் பீட்ரூட் ஓட்ஸ் தயார்.

பீட்ரூட் ஓட்ஸ் நன்மைகள்

  • பீட்ரூட் ஓட்ஸ் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இதில் உள்ள ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது வயிற்றை நீண்ட நேரம் நிரப்பி, எடை குறைக்க உதவுகிறது.
  • ஓட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு புரதம் கிடைக்கிறது. அதே நேரத்தில், பீட்ரூட், கேரட் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றிலும் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
  • இதை தயாரிப்பதில் எண்ணெய் மற்றும் மசாலா அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை. இவ்வாறு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய வகை மீனினம்!!

கொழும்பின் புறநகர் பகுதியில் கல்கிஸ்சை கடற்கரையில் கல்குல்லா அல்லது ஹீல்ஸ் என்று அழைக்கப்படும் அரிய வகை மீனின் இறந்த உடல் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இந்த விலங்கு இனம் பெரும்பாலும் ஆழ்கடலில் உள்ள பாறைகளுக்கு மத்தியில் வாழ்கிறது மற்றும் தரைக்கு வராத இனமாகும்.

அரியவகையாக காணப்படும் இவை மற்ற மீன்களின் உடல் நிறத்தில் இருந்து வேறுபட்ட தோல் புள்ளிகள் காணப்படும். அவை உணவுக்காக எடுத்துக் கொள்ளப்படாத மீன் வகை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆழ்கடலில் உள்ள பாறைகளைச் சுற்றி மீனவர்கள் வீசிய வலைகளில் சிக்கியிருக்கலாம் அல்லது போர்க்கப்பல்களிருந்து வெளியேறும் திரவம் தேங்கி நிலத்திற்கு வந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எலான் மஸ்க்கின் இலங்கை விஜயம் : புதிய விதிமுறைகளை உருவாக்கும் இலங்கை அரசாங்கம்!!

எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் (Elon Musk) இந்த வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதை அடுத்து, ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிப்பதற்கு வசதியாக புதிய விதிமுறைகளை இலங்கை உருவாக்கவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaka Herath) தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உடன் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தோனிசியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அத்துடன், அவரை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். ஏற்கனவே இலங்கையில் ஸ்டார்லிங்கை (Starlink) அறிமுகப்படுத்துவதற்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணப்பம் அனுப்பப்பட்டது.

இதன் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் தற்போது புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமானநிலையத்தில் வெளிநாட்டு பெண் கொடுத்த அதிர்ச்சி!!

7 கோடியே 35 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) காலை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் 57 வயதுடைய பாகிஸ்தான் நாட்டு பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இன்று (20) காலை 9.45 மணியளவில் அபுதாபியிலிருந்து விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர் கொண்டுவந்த பயணப் பொதியிலிருந்து 2 கிராம் 450 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

20 நிமிடங்களில் 100 பேருக்கு மணப்பெண் அலங்காரம் : உலகசாதனை படைந்த இலங்கையர்கள்!!

20 நிமிடங்களில் மணப் பெண் அலங்காரம் , ஆரி வேர்க் டிசைனிங் மற்றும் மெஹந்தி ஆர்ட் போன்றவற்றில் சோழன் உலக சாதனை படைத்த 100 அழகுக்கலை நிபுணர்கள்.

கடந்த வாரம் 15ஆம் திகதி கொழும்பு குளோபல் டவர் ஹோட்டலில் 100 அழகுக் கலை நிபுணர்கள் ஒன்றிணைந்து 2 மணிநேரங்களில் செய்ய வேண்டிய மணப்பெண் அலங்காரத்தை 20 நிமிடங்களில் நிறைவு செய்து புதிய சோழன் உலக சாதனை படைத்தனர்.

அதேவேளை, மேலும் சிலர் ஊசியைப் பயன்படுத்தி செய்யும் மிகவும் நுட்பமான எம்பிராய்டரி வகையான ஆரி வேர்க் கலையில் ஏ4 தாளில் இலங்கையின் வரைபடத்திற்குள் சிங்கத்தை 20 நிமிடங்களில் வரைந்தனர்.

மேலும் சிலர் மெஹந்தி மூலம் 20 நிமிடங்களில் இரண்டு கைகளிலும் அலங்காரமிட்டு சாதனை படைத்தனர். இந்த சோழன் உலக சாதனை நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார் கீர்த்தி ஜே அழகுக்கலை மையத்தின் உரிமையாளர் கீர்த்திகா ஜயசிங்க அவர்கள். சோழன் உலக சாதனை நிகழ்வின் பல்வேறு ஒழுங்குகளை பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

வழங்கப்பட்ட 20 நிமிடங்களில் தமது இலக்கை நிறைவு செய்த 100 அழகுக்கலை நிபுணர்களுக்கான சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம் மற்றும் பேச் போன்றவற்றை சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த மாண்புமிகு கல்வித்துறை இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் அவர்களும் உள்ளூராட்சி விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் முன்னாள் கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க அவர்களும் வழங்கிப் பாராட்டினார்கள்.

இந்த நிகழ்வைக் கண்காணித்து உலக சாதனையாக உறுதி செய்வதற்காக இந்தியாவில் இருந்து அழகுக் கலை நிபுணரான சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன் மற்றும் அழகுக்கலை நிபுணர் அஜய் அவினாஷ் போன்றோர் வந்திருந்தனர்.

மேலும், நடுவர்களாக சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் நாகவாணி ராஜா, பொதுச் செயலாளர் இந்திரநாத் பெரேரா, பீபல் ஹெல்பிங் பீபல் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் திரு. க்ளோரன்ஸ் சாமுவேல் மற்றும் அவருடைய இணையரான திருமதி. க்ளோரன்ஸ் சாமுவேல்,

ரத்தினபுரி மாவட்டத் தலைவர் பிரவீனா பாரதி, அனுராதபுரம் மாவட்டத் தலைவர் அமில திசாநாயக்க, நுவரெலியா மாவட்டத் தலைவர் சதீஸ், மாத்தறை மாவட்டத் தலைவர் ருக்சான் ஜயசுந்தர, கிளிநொச்சி மாவட்டத் தலைவர் ராசதுரை ஜீயசுதர்சன் மற்றும் கண்டி மாவட்டத் தலைவர் சந்திரகுமார் போன்றோர் சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியை கண்காணித்து உறுதி செய்தனர்.

சோழன் உலக சாதனை படைத்த அழகுக்கலை நிபுணர்களை அந் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன், அந்த அமைப்பின் பன்னாட்டு ரீதியிலான தலைவர்கள் மற்றும் பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷனின் நிறுவனர் பிரான்சிஸ் போன்றோர் வாழ்த்திப் பாராட்டினார்கள்

யாழில் பிறந்தநாளன்று இறந்த யுவதி : விபத்தை ஏற்படுத்திய இராணுவ சிப்பாய்க்கு விளக்கமறியல்!!

யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (20.05) இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (20) புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் இராணுவத்தினருக்கு சொந்தமான ஹயஸ் ரக வாகனம் வீதியோரமாக, வீதியை கடக்க துவிச்சக்கர வண்டியுடன் காத்திருந்த யுவதியை மோதியதில் யுவதி உயிரிழந்திருந்தார்.

சம்பவத்தில் வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த சுதாகரன் சாருஜா (வயது 23) என்பவரே தனது 23ஆவது பிறந்தநாளில் உயிரிழந்திருந்தார். விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி பொலிஸார் , வாகன சாரதியான இராணுவ சிப்பாயை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

கைதான இராணுவ சிப்பாயை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது , சிப்பாயை 29ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது யுவதியை மோதிய வாகனத்தில் இராணுவ உயர் அதிகாரிகள் பயணித்ததாகவும் , அவர்களில் இருவர் காயமடைந்த நிலையில் பலாலி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பிறந்த நாளில் யுவதி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவியந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று மாலை 7:00 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இதேவேளை மேலும் ஐந்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பபடுகிறது.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் உழவு இயந்திரம் ஒன்றில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்தபோது வேகமாகச் சென்ற உழவியந்திரம் தேராவில் வளைவு பகுதியில் திருப்பம் முற்பட்டபோது பெட்டி கழன்று புரண்டுள்ளது.

இந்த விபத்தில் உழவனூர் பகுதியில் சேர்ந்த 16 வயதுடைய ர.மிதுசிகன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து இளைஞர்கள் படுகாயம் அடைந்த நிலையில் புதுக் குடியிருப்பு ஆதார வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைதீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள்.

உயிரிழந்த இளைஞனின் உடலும் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு வீதி போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுள்ளார்கள்.

தாயின் இறுதிக்கிரியைக்கு யாழ் வந்த புலம்பெயர் பெண் அதிரடியாக கைது : காட்டிக்கொடுத்த சகோதரி!!

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுசீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் ஐயோப்பிய வாழ் பெண் ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று முன்தினம் (19.05) ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது டென்மார்க் பிராஜவுரிமை பெற்று டென்மார்க்கில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கைது செய்யப்பட்ட பெண் கடந்த 2015ஆம் ஆண்டளவில் தனது சகோதரியின் பெயரில் போலியான கடவுசீட்டை பெற்று டென்மார்க் நாட்டிற்கு சென்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வசித்த அவரது சகோதரி 2019ஆம் ஆண்டளவில் தனக்கு கடவுசீட்டு எடுப்பதற்காக விண்ணப்பித்த போது அவரது பெயரில் ஏற்கனவே கடவுசீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு , அவருக்கு கடவுசீட்டு வழங்கப்படவில்லை. அதன் போதே தனது சகோதரி தனது பெயரில் கடவுசீட்டு எடுத்து வெளிநாடு சென்ற விடயம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தனது தாயாரின் இறுதி கிரியைக்காக டென்மார்க்கில் இருந்து வந்தவர், போலியான கடவுசீட்டை பயன்படுத்தி தனது சகோதரியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் வங்கி கணக்கொன்றினையும் ஆரம்பித்துள்ளார்.

இது தொடர்பில் அறிந்த சகோதரி யாழ்ப்பாண பொலிசாரிடம் முறைப்பாடு செய்த நிலையில், டென்மார்க் பிரஜையான பெண்ணை கைது செய்த பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு, கிழக்கு மக்களுக்கு 25 ஆம் திகதி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்க!!

வடக்கில் கடந்த 100 ஆண்டு கால வரலாற்றில் அதிகூடிய மே மாத மழைவீழ்ச்சி இந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

வடக்கில் மே மாத சராசரி மழைவீழ்ச்சி 90 மில்லிமீற்றர் இருக்கும் நிலையில் மாதம் முடிவடைய இன்னமும் 10 நாட்கள் உள்ள நிலையில் இடஞ்சார்ந்த ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மாகாண சராசரி என்ற வகையில் இன்று வரை 280 மில்லிமீற்றர் மழை கிடைத்துள்ளது என மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா மேலும் தெரிவிக்கையில், வங்காள விரிகுடாவில் தமிழ்நாட்டுக்கு கிழக்காக அடுத்த 36 மணித்தியாலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது எதிர்வரும் 23ம் திகதி மாலையளவில் ஒரு சிறிய புயலாகி வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கனமானது முதல் மிகக்கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மேலும், அதிகளவான இடி மின்னலுடன் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதனால் அவதானமாக இருப்பது அவசியம். அத்துடன் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு கரையோரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 கிலோமீற்றரை விட கூடுதலான வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, நாளை முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு கடற்பகுதிகள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது.

அத்துடன் பல நாட் கலங்களுடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கு சென்றவர்கள் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது சிறந்தது. வடக்கு மாகாணத்தின் கடந்த 100 ஆண்டு கால காலநிலை வரலாற்றில் அதிகூடிய மே மாத மழைவீழ்ச்சி இந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் மே மாத சராசரி மழைவீழ்ச்சி 90 மி.மீ. ஆகும். மே மாத மழை நாட்கள் சராசரியாக 6 ஆகும். ஆனால் இவ்வாண்டு, மாதம் முடிவடைய இன்னமும் 10 நாட்கள் உள்ள நிலையில் இடஞ்சார்ந்த ரீதியில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மாகாண சராசரி என்ற வகையில் இன்று வரை 280மி.மீ. மழை கிடைத்துள்ளது.

இம்மாத இறுதியில் இதன் அளவு இன்னமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதத்தின் இதுவரையான 20 நாட்களில் 12 நாட்கள் மழை கிடைத்துள்ளது.

ஒப்பீட்டளவில் முல்லைத்தீவில் உள்ள கிழக்குப் பகுதிகள், யாழ்.வலிகாமம் பகுதிகள் அதிக அளவிலான மழைவீழ்ச்சியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.