இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் மதீச பத்திரன (Matheesha Pathirana) லங்கா பிரீமியர் லீக் (LPL) வரலாற்றில் அதிகபட்ச தொகையான 120,000 அமெரிக்க டொலர்களுக்கு (3.5 கோடி இலங்கை ருபாய்) கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் (Colombo Strikers) அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் ஏலம் இன்று (21.05.2024) கொழும்பில் (Colombo) நடைபெற்று வருகின்றது.
அத்துடன், இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் தசுன் ஷானக (Dasun Shanaka) 85,000 அமெரிக்க டொலர்களுக்கு (2.5 கோடி ருபாய்) கண்டி அணியால் வாங்கப்பட்டுள்ளார்.
அதற்கு அடுத்தபடியாக, தென்னாபிரிக்க வீரர் ரைலி ரோசோவ் (Rilee Rossow) 60,000 அமெரிக்க டொலர்களுக்கு ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) அணியால் வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியில் பேருந்தொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது, இன்று (21.05.2024) காலை இடம்பெற்றுள்ளது.
பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்த பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு தரிசனத்திற்காக செல்வதற்காக குறித்த பக்தர்கள், ஒன்றுசேர்ந்து பேருந்து ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி பயணித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, தரிசனம் செய்துவிட்டு இன்று காலை யாழ்ப்பாணம் நோக்கி திரும்பி வந்த நிலையில் பூநகரி பாலத்தினை கடந்து வரும்போது பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதில் ஆறு பேரும் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையதினம்(22) விடுமுறை இல்லை என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்படும் என்று சமூக வலைத்தளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், அந்த தகவல்கள் உண்மையில்லை என்று கல்வி அமைச்சு மறுப்பு வெளியிட்டுள்ளது. எனவே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை நடைபெறவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலைமைக்கு ஏற்ப தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் மாகாண கல்வி செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கே உள்ளதாக கல்வி அமைச்சின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 ஆண்டுக்கு முன்பு 2 வயதில் காணாமல் போன குழந்தையை AI உதவியுடன் சென்னை பொலிஸார் தேடி வருகின்றனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (50). இவருடைய 2 வயது மகள் கவிதா கடந்த 2011 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமாகியுள்ளார்.
பின்னர், தனது மகளை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அதே தினத்தில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, பொலிஸார் ‘காணவில்லை’ என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்த திரிபாதி, தனிப்படைகளை அமைத்து தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்று சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் வசம் சென்றது. ஆனாலும், கவிதா கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கை முடித்து வைத்தனர்.
ஆனாலும், 13 ஆண்டுகளாக தனது மகளை தேடும் பெற்றோர் காவல்துறையின் கதவுகளை தட்டி வந்தனர். பின்னர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் இந்த வழக்கை எடுத்தனர்.
தற்போது, 2 வயதில் மாயமான கவிதா புகைப்படத்தை AI தொழில்நுட்பம் மூலம் தற்போது 14 வயதில் எப்படி இருப்பார் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கவிதாவின் பழைய புகைப்படம் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படம் ஆகியவற்றை இணைத்து போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், காணாமல் போன சிறுமியின் தகவல் தெரிந்தால் 9444415815, 9498179171 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், சரியான தகவல் தருபவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
13 ஆண்டுகளாக காணமால் போன மகளை தேடும் தந்தையின் பாசப் போராட்டம் கண்கலங்க வைத்துள்ளது.
திருமண நாளில் கணவர் கொடுத்த பணத்தில் மனைவி வாங்கிய லொட்டரிக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது.
இந்திய மாநிலமான பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பயல் என்பவர் தனது கணவர் கொடுத்த பரிசுத்தொகையின் மூலம் வாங்கிய லொட்டரியால் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளின் போது பயலின் கணவர் ஹர்னீக் சிங் தனது மனைவிக்கு பரிசுத்தொகை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டும் பயலுக்கு அவரது கணவர் பரிசுத்தொகை வழங்கியுள்ளார். அவர் அந்த தொகையில் லொட்டரி வாங்கி வந்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் தான் வாங்கும் லொட்டரியில் ‘3’ என்ற எண் அதிகம் இருப்பதை பயல் உறுதி செய்து வந்தார். அதாவது தனது ராசி எண் என்ற காரணத்தால் பயல் இந்த நம்பரை தேர்வு செய்துள்ளார்.
இந்நிலையில், தனது 16 -வது திருமண நாளையொட்டி கணவர் கொடுத்த பரிசுத்தொகையில் துபாய் டியுட்டி ஃபிரீ டிரா (DDF) லொட்டரியை பயல் வாங்கியுள்ளார்.
மே 3 -ம் திகதி பயல் வாங்கிய லொட்டரிக்கு 1 மில்லியன் டொலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 8 கோடியே 22 லட்சம்) பரிசு தொகை கிடைத்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக தனது கணவர் மற்றும் குழந்தைகள் பெயரில் DDF லொட்டரியை பயல் வாங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் 14 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தம்பதியரை, குடும்ப நல நீதிமன்றம் ஒன்றாக சேர்த்து வைத்துள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரளாவின் ஆழப்புழாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது, 14 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தம்பதியர் நீதிமன்ற தலையீடு காரணமாக தங்களது திருமணத்தை மீண்டும் சட்டப்படி பதிவு செய்ய முன்வந்துள்ளனர்.
கடந்த 2006 -ம் ஆண்டு சுப்ரமணியன் (58) மற்றும் கிருஷ்ணகுமாரி (49) என்ற இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமண வாழ்க்கை சில ஆண்டுகள் இனிதாக சென்று அகல்யா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இதனைதொடர்ந்து, இருவருக்குள் ஏற்பட்ட விரிசல் காரணமாக 2010 -ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்படி விவாகரத்து பெற்றனர்.
இதன்பின்னர், ஜீவனாம்சம் கோரி ஆலப்புழா குடும்ப நல நீதிமன்றத்தை கிருஷ்ணகுமாரி நாடினார். ஆனால், அதனை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் சுப்ரமணியன் வழக்கு தொடர்ந்தார்.
அப்போது, இந்த பிரச்சனைக்கு குடும்ப நல நீதிமன்றம் மூலம் சுமூகமாக தீர்வு காண வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, குடும்ப நல நீதிமன்றம் வழங்கிய ஆலோசனைப்படி இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தனர். இதனால், 15 வயதான மகள் அகல்யா தனது பெற்றோருடன் சேர்ந்து வாழ ஆர்வத்துடன் உள்ளார்.
தமிழக மாவட்டம் கரூரைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் தென்கொரிய இளைஞரை காதலித்து திருமணம் செய்தார்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் விஜயலட்சுமி. இவருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த மின்ஜுன் கிம் (28) என்ற இளைஞருக்கும் ஒன்லைன் மூலம் அறிமுகமாகியுள்ளது.
இருவரும் பேச ஆரம்பித்து நண்பர்களாகியுள்ளனர். நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்கள் பெற்றோரிடம் காதல் குறித்து கூறியுள்ளனர்.
இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே மின்ஜுன் கிம், விஜயலட்சுமி இருவரும் திருமணம் முடிவானது. இந்து முறைப்படி இவர்களுக்கு திருமணம் நடந்தது.
தமிழக மாவட்டம் திருப்பூரில் மதுபோதையில் கொடுமைப்படுத்திய கணவரை, அவரது மனைவி தாய், தந்தையுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம் எஸ்.வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (30). இவரது மனைவி திவ்யா கடந்த ஆண்டு தனது கணவரை காணவில்லை என பொலிஸில் புகார் அளித்தார்.
அதன்பேரில் பொலிஸார் 8 மாதங்களாக தேடியும் வடிவேல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வடிவேலின் தாயார் பல்லடம் பொலிஸில் புகார் மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில், மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த பாலாஜி என்பவரைப் பிடித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதில், திவ்யா தனது தாய், தந்தை உதவியுடன் கணவரை கொலைசெய்து கிணற்றில் வீசியது தெரிய வந்தது.
பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வடிவேல் தினமும் குடித்துவிட்டு மனைவியை அடித்து, உதைத்து துன்புறுத்தியுள்ளார்.
கொலை அம்பலம்
கணவரின் கொடுமை தாங்கமுடியாமல் திவ்யா தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்றும் வடிவேல் அவரை அடித்துள்ளார். இதனால் கணவரை கொலை செய்ய திட்டமிட்ட திவ்யா, அதனை தனது தாய் மரியாள் (48), தேவராஜ் (50) ஆகியோரிடம் கூறியுள்ளார்.
அதன்படி அக்காள் கணவர் தெய்வேந்திரன் உடன் சேர்ந்து வடிவேலுவுக்கு விஷ மாத்திரை கொடுத்துள்ளனர். அடுத்து அவரை கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளனர்.
இதனையடுத்து முத்து, பவுன்ராஜ், பாலாஜி ஆகியோருடன் சேர்ந்து, வடிவேலின் உடலை கருப்பு பாலிதீன் கவரால் சுற்றி அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர் என தெரிய வந்தது.
திவ்யா உட்பட 7 பேரையும் கைது செய்த பொலிஸார், கிணற்றுக்கு சென்று வடிவேலின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர், தனது தம்பியை சுத்தியால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவின் ஆனேக்கல் தாலுகாவைச் சேர்ந்தவர் சிவகுமார் (18). இவரது 14 வயது சகோதரர் பிரானேஷ் 7ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்தார். பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த பிரானேஷ், கோடை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் புறநகர் பகுதியில் பிரானேஷ் தலை, வயிற்றுப் பகுதியில் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, பிரானேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில் சிறுவன் ஆயுதத்தால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுவனின் சகோதரர் சிவகுமார் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
செல்போனில் ஒன்லைன் கேம்ஸ் விளையாடும் ஆர்வம் கொண்டவர் சிவக்குமார். ஆனால் தனது தம்பி பிரானேஷ் செல்போனை வாங்கி விளையாடியதுடன் திருப்பி கேட்கும்போது தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார், அவரை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று சுத்தியலால் அடித்து கொன்றுள்ளார்.
இதுதொடர்பான காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகி இருந்தது. அதனைக் கைப்பற்றிய பொலிஸார் சிவக்குமாரை கைது செய்தனர்.
யாழ். அச்சுவேலி பகுதியில் இராணுவ வாகனம் மோதியதில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அச்சுவேலி புத்தூர் கணம்புலியடி சந்தியில் இன்று(20.05.2024) காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில், திவாகரன் – சரோஜா என்ற 23 வயதுடைய இளம் யுவதி ஒருவரே உயிரிழந்துள்ளார்.
புத்தூர் கணம்புலியடி சந்தியில் விபத்து இடம்பெற்று, வைத்தியசாலைக்கு கொண்டுவரும் முன்னர் யுவதி உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வீதியை கடப்பதற்காக குறித்த யுவதி வீதியோரம் நின்றுள்ளார், யுவதி நின்ற திசைக்கு எதிர் திசையாக புத்தூர் சந்தியிலிருந்து இராணுவ உயரதிகாரிகள் பயணித்த வான் வேகமாக வருகைத்தந்துள்ளது.
இதன்போது, வீதியின் இடது பக்கத்தில் சென்ற வாகனம், வீதியின் வலது பக்கத்தில் நின்ற யுவதியை மோதி, மரத்திலும் அருகில் இருந்த ரோலர் இயந்திரத்துடனும் மோதி கவிழ்ந்தது.
இந்நிலையில் உயிரிழந்த யுவதியின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
அம்பாறை- காரைதீவு பகுதியில் பல கோடி பெறுமதியானது என நம்பப்படும் 49 கிலோ நிறையுடைய நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) சிக்கியது.
ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான பெறுமதியானது என நம்பப்படும் நீல தூணா அல்லது உள்ளுரில் நீல ஹெலவள்ளா(ஹென்டா) என அழைக்கப்படும் பாரிய மீன் சிக்கியுள்ளது.
கோடிக்கணக்கான பெறுமதி
பெரிய கண் மற்றும் நீல நிற வர்ணங்களை கொண்டுள்ள குறித்த மீன் அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் மீனவரின் தூண்டிலில் பிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 49 கிலோ நிறையுடைய குறித்த மீனை விற்பதற்கான முயற்சியில் மீனவர்கள் இறங்கியுள்ளனர்.
கடும் போராட்டத்திற்கு மத்தியில் பிடிக்கப்பட்ட குறித்த மீன் இனங்கள் 7 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் யாவும் பெறுமதி மிக்கதாக உள்ளதாகவும் மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.
அதேவேளை பாரிய மீன்களை கொள்வனவு செய்கின்ற நிறுவனங்களே இவ்வாறான மீன்களை அதிக விலை கொடுத்து வாங்குவதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் பிறந்த நாளன்று இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை, புத்தூர் – கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார். யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட இராட்சத இரத்தின கல்லை விற்பனை செய்வதற்கு உலகளாவிய ரீதியில் பிரபல்யமான ஜேம்ஸ் கொன்ஸ்டானிடோ தான் உதவுவதாக அறிவித்துள்ளார்.
பிரபல வர்த்தகரும் தொலைக்காட்சி பிரபலமுமான கொன்ஸ்டானிடோ பிரித்தானியாவின் பல்வேறு இடங்களில் நகை அடகு நிலையங்களை நடாத்தி வருகின்றார்.
இந்நிலையில் நவீன் அமித கமகே என்பவருக்கு இந்தக் கல் சொந்தமானது என்பதுடன், இதனை விற்பனை செய்து கொடுக்கும் பொறுப்பினை கொன்ஸ்டான்டியிடம் ஒப்படைத்துள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக இரத்தினபுரி பகுதியில் இந்த கல் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆசியாவின் அரசி என அழைக்கப்படும் இந்த இரத்தினக் கல் சுமார் 300 கிலோ கிராம் எடையுடைய மிகவும் அரிய வகை கல் ஆகும்.
குறித்த அரிய வகை இரத்தினக்கல் சுமார் 250 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தஹய்யாகல பிரதேசத்தில் 52 வயது பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அவரின் வீட்டிலிருந்து 50 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர் தொடர்பில் ஹம்பேகமுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவ தினத்துக்கு முன்னைய தினம், பாதிக்கப்பட்ட பெண்ணின் அயல் வீட்டில் நபரொருவர் இந்தப் பெண்ணின் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு, அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தப் பெண் இரவு உறங்கச் சென்றபோது, வீட்டுக்கு வெளியில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டுள்ள நிலையில்,
அவர் வீட்டின் பின்புறத்தில் உள்ள கதவைத் திறந்து வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென வீட்டுக்குள் நுழைந்த சந்தேக நபரொருவர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபர் வீட்டிலிருந்த 50 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர், அயல் வீட்டு உரிமையாளர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டின் பல மாகாணங்களுக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களுக்கும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது
நாட்டில் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி நிலை படிப்படியாக நிலைபெற்று வருவதால், தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலையை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால் இந்த அறிவித்தல் விடுத்துள்ளது.
மேலும் சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் ஹெலி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோர் உயிரிழந்தனர்.
கடினமான வானிலையிலும் ஒரு மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மீட்புப் படையினர் விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்து உடல்களை மீட்டுள்ளனர்.
முந்தைய இணைப்பு : ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான INRA உறுதிப்படுத்தியுள்ளது.
”ஈரானின் எட்டாவது ஜனாதிபதியான இப்ராஹிம் ரைசி, கிழக்கு அஜர்பைஜானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள வர்சகான் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அவர் மற்றும் அவருடன் பயணித்த அரச உயர் அதிகாரிகள் சென்ற ஹெலிகொப்டர் விபத்தில் வீரமரணமடைந்துள்ளார்” என INRA அறிக்கை வெளியிட்டுள்ளது.
சளைக்க முடியாத மற்றும் கடின உழைப்பாளி ஜனாதிபதி தனது தேசத்திற்கு சேவை செய்யும் பாதையில் இறுதி தியாகத்தை செய்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.