குழந்தையை மறந்து விட்டு சென்ற பெற்றோர்.. காருக்குள் மூச்சு திணறி உயிரிழந்த சோகம்!!

காருக்குள் குழந்தையை மறந்து தனியே விட்டு விட்டு பெற்றோர் கீழிறங்கிய நிலையில், காருக்குள்ளே மூச்சுத்திணறி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கடோலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் சாகர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் நேற்று இரவு திருமண விழாவுக்குச் சென்றுள்ளார். திருமண இடம் வந்ததும் மனைவியும் மூத்த மகளும் காரில் இருந்து இறங்கினர்.

தனது இரண்டாவது மகள் கோர்விகாவும் (வயது 3) இறங்கி விட்டதாக நினைத்து பிரதீப் காரை பார்க்கிங் பகுதிக்கு ஓட்டி சென்று காரை பூட்டிவிட்டு திரும்பி வந்தார்.

இரண்டு குழந்தைகளும் மனைவியுடன் இருப்பதாக நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார். நீண்ட நேரமாக அவர்களை சந்திக்கவில்லை. உறவினர்களை சந்திப்பதில் மும்முரமாக இருந்தார். அதேபோல், கணவருடன் இருப்பதாக நினைத்த கோர்விகாவின் மனைவி, வேறு பகுதியில் அமர்ந்து உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

சுமார் 2 மணி நேரம் கழித்து, கணவன்-மனைவி சந்தித்தனர். கோர்விகா எங்கே? ஒருவரையொருவர் விசாரித்ததில், குழந்தையை காணவில்லை என்பது தெரியவந்தது. குழந்தையை தேட ஆரம்பித்தனர். திருமண விழா நடக்கும் பகுதி முழுவதும் தேடிவிட்டு நேராக காருக்கு வந்தனர்.

காரைத் திறந்து பார்த்தபோது, குழந்தை மூச்சுத் திணறி அசையாமல் கிடந்தது. குழந்தை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு காருக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததை உணர்ந்த கணவன், மனைவி இருவரும் அலறி துடித்தனர். காடோலி போலீசார் நடத்திய விசாரணையில் மேற்கண்ட தகவல் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, தங்களின் தவறு காரணமாக குழந்தை இறந்ததால், குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாங்கள் விரும்பவில்லை என்றும், வழக்கு பதிவு செய்ய விரும்பவில்லை என்றும் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல சின்னத்திரை நடிகை!!

வாகன விபத்தில் சிக்கி பிரபல கன்னட மற்றும் தெலுங்கு சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் கடந்த ஞாயிற்றுகிழமை (12-05-2024) இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

ஐதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு தனது குடும்பத்தினருடன் காரில் திரும்பிக் கொண்டிருந்த போது பவித்ரா ஜெயராம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

பவித்ரா ஜெயராமின் வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் அவர்கள் பயணித்த கார், பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பவித்ராவின் மரணத்துக்கு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சாதாரணதரப் பரீட்சை எழுதிய மகனிடம் இருந்து தாயின் மரணத்தை மறைத்த தந்தை!!

காலியில் மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மறைத்த தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 12ம் திகதி உயிரிழந்த தாய் குடும்ப உறுப்பினர்களுடன் மதிய உணவுக்கு பின் ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளார்.

அப்போது திடீரென ஏற்பட்ட இருமல் காரணமாக அவர் மயங்கி விழுந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக கூறபொபடுகின்றது. காலி, கராப்பிட்டிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

தாய் இறந்தபோது, ​​அவரது மகனுக்கு க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிய இன்னும் 4 நாட்களே இருந நிலையில், தாயின் இறப்பைத் தாங்க முடியாமல் மகன் பரீட்சை எழுதமாட்டார் என்ற அச்சத்தில் தந்தை மற்றும் உறவினர்கள் மகனிடம் அதனை மறைத்துள்ளனர்.

இந்நிலையில் மகனின் பரீட்சை நிறைவடையும்வரை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த சடலம் நேற்று காலியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நகரம் ஒன்றின் முதல்வராக இலங்கை தமிழர் பதவியேற்பு!!

பிரித்தானிய (British) நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து (Sri Lanka) ஏதிலியாக சென்ற தமிழர் பதவியேற்றுள்ளார்.

தொழில் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் (Elango Elavalakan) என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.

“நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த பெரிய நகரத்தின் முதல்வராக இருப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று இளவழகன் கூறியுள்ளார்.

இவருக்கான வேட்புமனுவை சபையின் தலைவர் நீல் மெக்டொனால்ட் (Neil MacDonald) முன்மொழிந்துள்ளார்.

“போர் மற்றும் துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடிய ஒரு ஏதிலியின் இந்த அறிவிப்பு, ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கி இங்குள்ள சமூகத்திற்கு அவர் பங்களித்த ஒரு செய்தியை எடுத்துச்செல்லும்” என்று அவர் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்த பதவியேற்பின்போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் அதில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்து ஒருவர் முதல்வராக வருவது நகரத்தின் பெரும் பன்முகத்தன்மையையும் பன்முக கலாசாரத்தையும் காட்டுகிறது என்று நகர இந்து சமாசத்தின் தலைவரான சச்சின் கராலே கூறியுள்ளார்.

முன்னதாக இலங்கையை விட்டு வெளியேறிய இளவழகன் இந்தியா, உகண்டா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் பணிபுரிந்த பின்னர் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார்.

அவர் ஆரம்பத்தில் கிழக்கு லண்டனில் உள்ள இல்ஃபோர்டுக்கு (Ilford)) குடிபெயர்ந்ததோடு 2006இல் இப்ஸ்விச்சிற்குச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் இளவழகன் 2014இல் செயின்ட் ஜோன்ஸ் தொகுதிக்கான தொழில் கட்சி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒன்லைன் விளையாட்டால் பறிபோன 23 வயது இளைஞனின் உயிர்!!

சென்னையில் இளைஞர் ஒருவர், ஒன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொருக்குப்பேட்டை கே.கே.நகரைச் சேர்ந்த மருத்துவ கல்லாரி மாணவர் தனுஷ் (23). இவர் ஒன்லைன் ரம்மி விளையாடுவதில் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், தொடர்ச்சியாக அந்த விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார் தனுஷ். எனினும் அவர் அதனை கைவிடவில்லை.

இந்த நிலையில், தனுஷ் தனது தந்தையிடம் 24,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார், ஆனால் அவர் 4,000 ரூபாய் மட்டுமே பணம் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனையடுத்து தன் அறைக்கு சென்ற தனுஷ் கதவைப் பூட்டிக்கொண்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்காததால், பதறிய குடும்பத்தினர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு விரைந்த பொலிஸார் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது தனுஷ் மின்விசிறியில் தூக்கில் தொங்கியிருந்தது தெரிய வந்தது.

அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

வவுனியாவில் வலம் வந்த முள்ளிவாய்கால் நினைவு ஊர்தி : மக்கள் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி!!

முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவு தாங்கிய ஊர்தியானது இன்று (16.05) வவுனியாவிற்கு வருகைதந்த நிலையில் மக்கள் திரண்டு கண்ணீர் மல்க மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஆரம்பமாகிய முள்ளியவாய்கால் பேரவலத்தின் சாட்சியங்களை தாங்கிய ஊர்தியானது வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கு பயணித்து எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் நினைவுத் திடலை சென்றடையவுள்ளது.

இந்நிலையில் வவுனியாவிற்கு வருகைதந்த ஊர்த்திக்கு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தீபம், ஏற்றியும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். இதன்போது தாய்மார் கண்ணீர் மல்ல அஞ்சலி செலுத்தியதுடன் வீதியால் சென்ற பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச குற்றவியல் விசாரணை வேண்டும், தேசம் – சுயநிர்ணம்-இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டி வேண்டும் என்னும் வாசங்களை தாங்கியவாறும், போரின் வடுக்களை சுமந்த படங்களை தாங்கியவாறும் குறித்த ஊர்தி பவனி வந்தது.

தொடர்ந்து பொங்கு தமிழ் நினைவு தூபி, பண்டாரவன்னியன் சதுக்கம், பசார் வீதி, குருமன்காடு, தாண்டிக்குளம், தரணிக்குளம், ஈச்சங்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஊர்தி சென்ற நிலையில் அங்கு மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு!!

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போது நிறைவடைந்துள்ள சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் நான்கு மாதங்களின் பின்னர் வெளியிடப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருந்தில் பயணித்த இளம்பெண் திடீர் உயிரிழப்பு அதிர்ச்சியடைந்த பயணிகள்!!

தமிழக மாவட்ட கோவையில் இளம்பெண்ணொருவர் பேருந்தில் பயணித்தபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மகாலட்சுமி (23). விடுதியில் தங்கி படித்து வந்த இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்றும் குணமாகவில்லை. இதனால் தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு மகாலட்சுமி கிளம்பினார்.

ஆம்னி பேருந்தில் பயணித்த மகாலட்சுமி கோவை வந்தும் கீழே இறங்கவில்லை. அவருடன் வந்த நபர் எழுப்ப முயன்றபோது மகாலட்சுமி உயிரிழந்தது தெரிய வந்தது.

உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரின் உடல் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இரவு 11 மணியளவில் சென்னையில் பேருந்தில் ஏறிய மகாலட்சுமி, பெற்றோரை தொடர்புகொண்டு ஊருக்கு வந்துகொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

ஆனால் அவர் திடீரென்று உயிரிழந்துவிட்டார், மாரடைப்பு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்திருக்கலாம் என தெரிகிறது. எனினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் முழு விபரம் தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது.

அவரை கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணமே இல்லை.. இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்!!

பெங்களூருவில் வீட்டின் உரிமையாளரை கொலை செய்து தங்கநகையைத் திருடிய ரீல்ஸ் மோனிகா, போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணசந்திராவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா(36). கெங்கேரி புறநகர் சிவனபாளையத்தில் குருமூர்த்தி சலூன் கடை நடத்தி வந்தார். மே 10-ம் தேதி அவர் வேலைக்குச் சென்று விட்டார்.

வீட்டில் அவரது மனைவி திவ்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். அத்துடன் அவரது கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இக்கொலைச் சம்பவம் குறித்து கெங்கேரி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது திவ்யா வீட்டில் வாடகைக்கு குடியிருந்த மோனிகா மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்திய போது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

தனது காதலனுக்கு டாடா ஏஸ் வாகனம் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காக திவ்யாவை கொலை செய்து தங்கச்சங்கிலியை திருடியதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக டேட்டா என்ட்ரி வேலை செய்து வந்த மோனிகா சில மாதங்களுக்கு முன்பு தான், குருமூர்த்தி வீட்டில் அவர் வாடகைக்கு வந்துள்ளார். ரீல்ஸ் மோகம் கொண்ட மோனிகா, ஆடம்பரமாக செலவு செய்து வந்துள்ளார். இதற்காக அவருக்குப் பணமும் அதிகம் தேவைப்பட்டுள்ளது.

அத்துடன் காதலனுக்கு வாகனம் வாங்கித் தரவும் பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால் அவர் திவ்யா அணிந்திருந்த தங்கச்சங்கிலியை திருட முயற்சித்துள்ளார். இதற்காக திவ்யாவின் குழந்தையைப் பார்ப்பது போல வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

ஆனால், குளிக்கச் செல்லும் போது தங்கச்சங்கிலியை கழட்டி வைத்தால் திருடி விடுவது என்று மோனிகா தொடர்ந்து முயற்சி செய்துள்ளார். மே 10-ம் தேதி திவ்யா குளிக்கச் சென்ற போது அதைக் கண்காணித்து குளியலறைக்கு மோனிகா சென்றுள்ளார்.

ஆனால், தங்கச்சங்கிலியை திவ்யா கழட்டவில்லை. இதனால், அவரை பின்புறமாக கழுத்தைப் பிடித்து நெரித்துக் கொலை செய்து விட்டு தங்கச்சங்கிலியை மோனிகா திருடியுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,” மோனிகாவிடம் விசாரணை நடத்திய போது, ‘ நான் அவங்களைக் கொல்லணும்னு விரும்பல ஸார். என் காதலனுக்கு வாகனம் வாங்கித் தருவதற்காக தங்கச்செயினை திருடத்தான் சென்றேன்.

திவ்யாவை கொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. அவரை கொலை செய்வதற்கு முன் இரண்டு, மூன்று முறை அவரது தங்கச்செயினைத் திருட முயன்றேன். ஆனால், அந்த முயற்சி பலிக்கவில்லை.

திவ்யாவின் கணவர், மாமியார் வேலைக்குச் சென்ற பிறகு மே 10-ம் தேதி எப்படியும் தங்கச்செயினைத் திருடி விட வேண்டும் என்று முயற்சி செய்தேன்.

ஆனால், அவர் தங்கச்செயினை குளிக்கச் சென்ற போது கழட்டவில்லை. அதனால் அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டு செயினை திருடி விற்றேன்’ என்று கூறினார். இதையடுத்து அருகில் இருந்த நகைக்கடையில் இருந்து தங்கச்செயின் மீட்கப்பட்டுள்ளது என்றனர்.

ஆடம்பர வாழ்விற்காக பெண்ணைக் கொலை செய்து நகையை இளம்பெண் கொள்ளையடித்த சம்பவம், பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிரவைத்த ஒருதலைக்காதல்… இளம்பெண் ஓட ஓட விரட்டிக் கொலை!!

சிறு வயது முதலே தான் காதலித்து வந்த பெண், தன்னை காதலிக்காமல் வேறு ஒருவரை காதலிப்பது தெரியவந்ததால் அவரை கொலை செய்திருக்கிறார் ஒரு இளைஞர்.

பள்ளிக்காலம் முதலாக தான் காதலித்து வந்த இளம்பெண், தன் காதலை ஏற்காத விரக்தியில் அப்பெண்ணை ஓட ஓட விரட்டி இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹுப்பளியை சேர்ந்தவர் கிரிஷ் சாவந்த் (21). இவர் தனது பள்ளிக்காலம் முதலாகவே தனது வீட்டுக்கு அருகே வசிக்கும் அஞ்சலியை (20) ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பல முறை தனது காதலை அஞ்சலியிடம் கிரிஷ் தெரிவித்த போதும், அதை அவர் ஏற்காமல் இருந்துள்ளார்.

இதனிடையே, தற்போது கல்லூரியில் படித்து வரும் அஞ்சலி, தனது உடன் பயிலும் இளைஞரை காதலித்து வருவது கிரிஷுக்கு தெரியவந்தது. தான் பல ஆண்டுகளாக காதலை சொல்லியும் ஏற்காமல், இப்போது வேறு இளைஞரை அஞ்சலி காதலிக்கிறார் என்பதை கிரிஷால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு அஞ்சலி கல்லூரிக்கு போகும் போது, அவரை வழிமறித்த கிரிஷ், தன்னை ஒழுங்கு மரியாதையாக காதலிக்குமாறு மிரட்டியுள்ளார். அதற்கு அஞ்சலி, உன்னை பார்த்தால் எனக்கு காதல் வரவில்லை எனக் கூறி சென்றிருக்கிறார்.

இதனால் ஆத்திரமடைந்த கிரிஷ், இன்று அதிகாலை அஞ்சலி வீட்டுக்கு சென்ற கிரிஷ், அங்கிருந்த அஞ்சலியை தன்னிடம் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதனால் அவர் கத்திக் கொண்டே வெளியே ஓடி வந்தார்.

ஆனால், விடாலும் துரத்திய கிரிஷ், அஞ்சிலியை குத்திக் கொலை செய்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், தலைமறைவான கிரிஷ்ஷை தேடி வருகின்றனர்.

யாழில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : சந்தேகத்தில் கணவன் கைது!!

யாழ்ப்பாணம் தாளையடியில் பெண்ணொருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று (15.05.2024) குறித்த சந்தேக நபரை கைது செய்து மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுத்துறை வடக்கு தாளையடி பகுதியில் கடந்த 10ஆம் திகதி பெண் ஒருவர் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடற்றொழிலுக்கு சென்று அதிகாலை வீடு திரும்பியபோது, வீட்டின் கழிப்பறைக்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான முறையில் மனைவி சடலமாகக் கிடந்துள்ளார் என தெரிவித்து உயிரிழந்த பெண்ணின் கணவன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

அவரின் முறைப்பாட்டை அடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான 44 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்த பெண்ணுக்கும் அவரது கணவனுக்கும் அடிக்கடி முரண்பாடு ஏற்படுவது தெரியவந்துள்ள நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில் 52 வயதான பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரை இன்றையதினம் (16) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மனைவியை காப்பாற்ற ரஷ்யாவில் கடும் சிரமத்திற்கு ஆளான இலங்கை குடும்பஸ்தரின் கண்ணீர்க் கதை!!

ரஷ்யாவில் மனித கடத்தலில் சிக்கி கடும் பாதிப்புக்குள்ளான நபரொருவர் தொடர்பலான செய்தி குருநாகல் – கும்புக்கெட்ட பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

ரஷ்ய போர்க்களத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி, கடந்த 9ம் திகதி எரந்த சிந்தக தென்னகோன் என்ற குடும்பஸ்தர் இலங்கை திரும்பியுள்ளார்.

ரஷ்யாவில் வேறொரு வேலையில் ஈடுபட்டிருந்த வேளையில் ரஷ்ய கூலிப்படையில் இணைந்து போர்க்களத்தில் தலையில் துப்பாக்கிச்சூடுபட்டதாக அவர் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

ரஷ்யாவில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் வைத்தியசாலையில் இருந்து தப்பித்து நண்பர் ஊடாக இலங்கை வந்துள்ளார்.

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த தனது மனைவியின் அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்டுவதற்காக குறித்த நபர், ரஷ்ய கூலிப்படையில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இருப்பினும், அவர் நாடு திரும்புவதற்கு முன்பே அவரது மனைவி கடந்த மார்ச் மாதம் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மாணவி கடத்தல் : பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் : காதல் உறவு காரணமாம்!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிவிட்டு வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த 16 வயது மாணவி ஒருரை கடத்திச் செல்ல முயன்ற நான்கு சந்தேக நபர்கள் அலதெனிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமியை கடத்திச் செல்ல முயற்சிப்பதாக 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலையடுத்து உடனையாக செயல்பட்ட பொலிஸார் வேனுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்தேக நபர்களில் ஒருவர் முன்னாள் இராணுவ சிப்பாயொருவர் என்பதுடன் அவர் இந்த மாணவியுடன் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாகப் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் சகோதரர் இராணுவ சிப்பாயாகக் கடமையாற்றுபவர் என்பதுடன் சந்தேக நபரான முன்னாள் இராணுவ சிப்பாய் ,சிறுமியின் வீட்டிற்கு பல முறை சென்றபோது இருவரும் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை சந்தேக நபர் ஏற்கனமே திருமணம் முடித்தவர் எனச் சிறுமிக்குத் தெரியவந்ததையடுத்து சிறுமி அவரைத் தவிரித்து வந்துள்ள நிலையில் சிறுமியின் பெற்றோர் சிறுமியைக் குலுகம்மன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்க வைத்துள்ளனர்.

இதனையடுத்து முன்னாள் இராணுவ சிப்பாய் தனது நண்பர்களுடன் இணைந்து வேன் ஒன்றை வாடகைக்கு எடுத்து சிறுமியைக் கடத்திச் செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லைத்தீவில் பேசு பொருளாகியுள்ள தாயொருவரின் மகத்தான செயல்!!

தன்னுடைய பிள்ளைக்கு இருக்கும் பிரச்சினையில் இருந்து அவரை காத்துக்கொள்ள கோவிலுக்கு நேர்த்திக்கடன் வைத்து நீண்ட தூரம் (50 கிலோமீட்டர்) கால்நடையாக சென்ற தாயொருவர் பேசு பொருளாகியுள்ளார்.

தாய்ப்பாசம் தரணியில் மகத்துவமான ஒன்றாக இருப்பது மீண்டுமொரு முறை யாதார்த்தப்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்கப்பட்ட தங்கள் பிள்ளைகளுக்காக நித்தம் போராடிவரும் ஈழத் தாய்மார்களின் போராட்டம் தாய்ப்பாசத்தின் நீண்ட நெடிய தாகத்தினை எடுத்தியம்பியவாறு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பெற்ற பிள்ளைகளுக்காக வலிகளை சுமந்து சுகமாக எண்ணும் பெற்றோரை வயதான இறுதிக் காலங்களில் முதியோர் இல்லங்களில் தவிக்க விடுதல் கவலைக்குரிய விடயமாகும் என இத்தாயின் முயற்சி பற்றி பேசிய சமூகவிட ஆய்வாளர் வரதன் சுட்டிக் காட்டுவதும் நோக்கத்தக்கது.

மாங்குளத்தில் வசிக்கும் இவரின் முதல் நாள் பயணம், மாங்குளத்தில் இருந்து ஒட்டுசுட்டான் நோக்கிய பயணமாக அமைந்திருந்தது. ஒன்பதாம் கட்டை வரை பயணித்தவர் முதல் இரவை ஒரு கடையில் தங்கி நாளை கழித்து விட்டு இரண்டாம் நாள் தன் பயணத்தினை ஆரம்பித்து முள்ளியவளை வரை சென்றடைந்துள்ளார்.

வழித் துணைக்கு தன் பிள்ளைகள் வருவதாக குறிப்பிட்ட அந்த தாய் தன் மூன்றாம் நாள் பயணத்தின் மூலம் அளம்பில் ஆறாம் கட்டை முருகன் கோவிலைச் சென்றடைந்துள்ளார்.

அடுத்த நாளான 14.05.2024 அன்றைய நாளின் திருவிழா தங்களுடையது எனவும் அந்த நாளில் தன் பிள்ளைக்காக நேர்த்திக்கடனைச் செய்யவுள்ளததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாங்குளத்தில் இருந்து முள்ளியவளை தண்ணீரூற்று ஊடாக பயணித்துள்ளார் இந்த தாய். அதன் பின்னர் குமுழமுனை வீதியூடாக முறிப்புவரை சென்று உடுப்புக்குளம் ஊடாக முல்லைத்தீவு அளம்பில் வீதியை அடைந்து, அளம்பில் ஆறாம் கட்டை முருகன் கோவிலைச் சேருவதாக அவரது திட்டமிடல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வன்னியில் அதிகளவான வெப்பம் நிலவிவரும் இன்றைய காலப்பகுதியில் இது ஒரு தியாக உணர்வின் வெளிப்பாடு என அளம்பில் பகுதியைச் சேர்ந்த ஆன்மிக ஈடுபாட்டாளர் ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

நீண்ட பாரம்பரியமிக்க முருகன் கோவிலாக ஆறாம் கட்டை முருகன் கோவில் இருக்கின்றது.

முல்லைத்தீவில் உள்ள பழைமையான முருகன் ஆலயங்களில் இதுவும் ஒன்றென ஆலயம் சார்ந்த ஒருவரின் கருத்தாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

12 நாட்களைக் கொண்ட திருவிழாவினை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்தர்கள் தங்களுடைய பொறுப்பில் எடுத்து செய்துவருவதாகவும் மற்றொரு பக்தர் குறிப்பிட்டார்.

தன் பிள்ளைக்காக நடந்து சென்று நேர்த்திக்கடன் செய்துகொள்ளும் எண்ணத்தோடு செயற்பட்ட தாய் குறிப்பிடும் போது அளம்பில் கனேடியன் வீதியை பிறப்பிடமாகவும் திருமண வாழிடமாக மாங்குளத்தினையும் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தமையும் நோக்கத்தக்கது.

அளம்பில் கனேடியன் வீதிக்கு அருகில் ஆறாம் கட்டை முருகன் கோவில் இருக்கின்றது.

மடு மாதா கோவிலுக்கும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்நிற்கும் கால் நடையாக நடந்து சென்று நேர்த்திக்கடன்கள் செய்வது வழமையான போதும் அளம்பில் ஆறாம் கட்டை முருகன் கோவிலுக்கு இத்தகைய ஒரு நேர்த்திக்கடன் செய்தல் இது முதல் தடவையாக இருக்கும் என தான் எண்ணுவதாகவும் முருகன் ஆலய பக்தர் ஒருவர் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது.

மாங்குளத்தில் இருந்து மல்லாவி போகும் வழியில் ஒரு கிலோமீற்றரிலும் சற்றுக் கூடிய தூரத்தில் இருக்கும் தன் வீட்டில் இருந்து முல்லைத்தீவு அளம்பில் ஆறாம் கட்டை முருகன் கோவில் வரை கால் நடையாக சென்று நேர்த்திக்கடன் செய்துள்ளார்.

மதிய நேரத்தில் காபைற் வீதி வழியே வெறும் கால்களுடன் தாயொருவர் நடந்து செல்வதை கண்ணுற்று அவருக்கு உதவிடச் சென்ற போது தான் அவர் தன் நேர்த்திக்கடன் பற்றி பேசியிருந்ததாக சமூகவிட ஆய்வுகளில் ஆர்வம் காட்டிவரும் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறே தண்ணீரூற்று குமுழமுனை வீதியில் பயணித்த மற்றொரு பயணியும் தன் அனுபவத்தினை பகிர்ந்து கொண்டிருந்தார். பாதணிகள் இல்லாது வெய்யில் நேரத்தில் காபைற் பாதை வழியே நடந்து செல்லும் போது ஏற்படும் துயரத்தினை எண்ணி அவரை போகும் இடம் கூட்டிச் சென்று விடலாம் என தான் எண்ணியதாக குறித்த பயணி குறிப்பிட்டார்.

அந்த தாயாரைப் பார்க்கும் போது தனக்கு தன் தாயைப் பார்த்தது போன்ற உள்ளுணர்வு தூண்டப் பெற்றிருந்தது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெற்றோரை போற்றி வாழும் மனிதர்கள் இன்னமும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படுவதாக இந்த விடயம் தொடர்பில் கருத்துரைத்த ஒய்வுபெற்ற தமிழாசிரியர் ஒருவர் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டிருந்தார்.

தான் இப்போதும் தன் பெற்றோர் மீது அதிக மதிப்பும் மரியாதையும் கொண்டிருப்பதாகவும் அந்த இயல்பை தன் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுப்பதாகவும் அது பேரப்பிள்ளைகளுக்கும் பழக்கப்படுத்தப்படும் என தான் நம்புவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வயதான தன் பெற்றோருக்கு தேவையானவற்றை அவர்களது விருப்பு வெறுப்புக்கேற்ப செய்து கொடுப்பது தன் கடமையெனவும் அது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தமையும் இங்கே நோக்கத்தக்கது.

பெற்றோருக்கு மதிப்பளித்து முன்மாதிரியாக செயற்பட்டு வந்த சமூகம் ஒன்று முல்லைத்தீவு செம்மலையில் இருப்பதாக கவிஞர் நதுநசி குறிப்பிட்டிருந்தார்.

மூத்த ஈழ எழுத்தாளர்களில் ஒருவராக விளங்கும் மணலாறு விஜயனும் அவரது சகோதரர்களும் தங்கள் பெற்றோரை மதித்து முன்மாதிரியாக செயற்பட்டிருந்ததை தான் கண்கூடாக நடைமுறையில் பார்த்ததாகவும் அதனை தான் முன்மாதிரியாக கொண்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெற்றோர் தங்கள் வீட்டில் வாழ்ந்து வந்திருந்தனர். அவர்களது பிள்ளைகள் பெற்றோரின் வீட்டினைச் சூழவுள்ள செம்மலைக் கிராமத்தில் பரந்து வாழ்ந்திருந்தனர்.

ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் பெற்றோரின் வீட்டுக்கு பிள்ளைகள் சென்று அவர்களோடு ஆறுதலாக உரையாடி வீடு திரும்புவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அவ்வாறு செல்லும் போது பேரப்பிள்ளைகளையும் வருமக்களையும் அழைத்துச் செல்வதுண்டு என தன் அவதானத்தினை அவர் பகிர்ந்து கொண்டிருந்தார்.

பெற்றோரை அவர்கள் விரும்பும்படி விருப்பமான இடத்தில் வாழ விட்டு அவர்களுக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருப்பதே பிள்ளைகளின் பொறுப்பான நடத்தையாகும்.

இத்தகைய நடத்தையினை இப்போதும் செம்மலையின் பல குடும்பங்களில் அவதானிக்க முடிகின்றது. பெற்றோரை மதித்துப் போற்றும் பிள்ளைகளை அதிகம் கொண்ட கிராமம் செம்மலை காணப்படுகிறது.

தன் பிள்ளைக்காக நீண்ட தூரத்தினை கால்நடையாக நடந்து சென்றிருந்த அந்த அம்மாவின் கால்கள் கொப்பளம் போட்டிருந்ததை அவதானிக்க முடிந்திருந்தது.

தாயானவளுக்கு இந்த துயரம் சுகமானதாக இருந்திருக்கும். விரும்பி ஏற்று செய்யும் ஒன்று சுமையாக இருப்பதில்லை. அந்த செயல் நேர்த்திமிக்கதாக இருக்கும் என்பது அனுபவத்தின் உணர்த்தல் ஆகும்.

இலங்கையில் பல இடங்களிலும் முதியோர் இல்லங்கள் தோன்றி நிலைத்து தொடர்ந்து வருகின்றன. அங்கெல்லாம் வாழ்ந்து முடித்தவர்கள் தங்கள் இறுதிக் காலங்களை கழித்து வருகின்றனர். இவ்வுலக வாழ்வை முடிக்கும் அந்த இறுதி நொடிக்காக என விவரிக்கப்படும் முதியோர் இல்லங்களில் வாழும் பெற்றோர்களின் மனதின் வலி கனதியானது.

பிள்ளைகளோடு வயதான பெற்றோர்களும் சேர்ந்து ஒன்றாக வாழ்வதால் அவர்களிடம் இருந்து பேரப்பிள்ளைகள் அனுபவத்தினைக் கற்றுக் கொள்ள வயதான பெற்றோர்கள் நல்ல அனுபவப் புத்தகமாக அமைந்துவிடுவார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட்டால் முதியோர் இல்லங்கள் தேவையில்லாது போய்விடும் என்பது திண்ணம்.

முதியோர் இல்லங்களில் பெற்றோரை விட்டுச் செல்லும் பிள்ளைகளின் நடத்தைக்கோலம் பற்றி கவிஞரும் பெண்ணியல்வாதியுமான உடுவிலூர் கலாவும் விழிப்புணர்வுக் கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதும் இங்கே நோக்கத்தக்கது.

பிள்ளைகளுக்காக அளப்பரிய தியாகங்களைச் செய்யத் துணிந்த பெற்றோருக்கு அவர்களின் வயதான காலங்களில் அவர்களுக்கு உதவியாகவும் ஆறுதலாகவும் இருக்கக்கூடிய எதிர்கால சமூகத்தினை கட்டியெழுப்புதல் நல்லதொரு ஈழத்தமிழ் சமூகம் தோற்றம் பெற வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

நடுக்காட்டில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ள தாய் விடுத்துள்ள கோரிக்கை!!

ஹபரணை – புவக்பிட்டிய பிரதேசத்தில் உள்ள அடர்ந்த காட்டுப்பகுதியில் இளம் தாய் ஒருவர் கடந்த அன்னையர் தினத்திற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தம்புள்ளை வைத்தியசாலையில் மூன்று ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

இந்த தாய்க்கு 03 வயதுடைய மற்றுமொரு மகள் இருப்பதாகவும், இதற்கு முன்னர் இரண்டு இரட்டை மகன்கள் பிறந்து உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

ஹபரணை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய கிஹானி சுபேஷலா குமாரி என்ற தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த குழந்தைகளின் தந்தையான சஞ்சித் அசோக தயானந்தா விசேட தேவையுடையவராவார்.

தம்புள்ளையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறிய குடிசையில் நீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்றி இவர்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த குழந்தைகளின் எதிர்காலம் கருதி தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறும் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்னிலங்கையில் உயிரிழந்த பெண்ணை உயிர் பெறச்செய்த கிராம உத்தியோகத்தர்!!

உயிரிழந்த பெண் உயிருடன் இருப்பதாக ஆவணம் வழங்கிய கிராம அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தேக்கவத்தை கிராம உத்தியோக பிரிவில் கடமையாற்றும் 52 வயதான கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பெண் ஒருவர் விடுத்த கோரிக்கைக்கமைய, இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வேறொரு பிரிவில் கடமையாற்றும் போது உயிரிழந்த பெண் ஒருவரின் பெயரில் அவர் உயிருடன் இருப்பதாக குறித்த கிராம உத்தியோகத்தர், மௌலவி ஒருவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த கடிதத்தை பயன்படுத்தி களுத்துறை பிரதேசத்தில் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்றிற்கு போலி பத்திரம் தயாரித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், விசாரணையில், குறித்த பெண்ணை தனக்குத் தெரியாது எனவும் குறித்த பெண் கேட்டதையடுத்து இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டதாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.