தென்காசி அருகே மின்னல் தாக்கி 14 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த சுரண்டை அருகே குலையநேரி பகுதியைச் சேர்ந்த முருகன்.
இவரது மகன் சிவசக்தி (14). இந்த நிலையில் நேற்று சிவசக்தி பங்களா சுரண்டைக்கு தனது நண்பர்களை பார்ப்பதற்காக சென்றார். அப்போது பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
இதையடுத்து மழையில் நனையாமல் இருக்க சிறுவன் மரத்தடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து அங்கிருந்தவர்கள் சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுரண்டை போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து சுரண்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனைவியை மன்னா கத்தியால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் தலைமறைவாகியிருந்த கணவர், 12 வருடங்களின் பின் மாத்தறை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. 37 வயது பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தையடுத்து உயிரிழந்த பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், ஒரு வருடம் கழித்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றில் ஆஜராகாமல் தலைமறைவாகியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றில் ஆஜராகாத போதிலும் பலப்பிட்டி நீதிமன்றம் சந்தேக நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தலைமறைவாகியுள்ள நபர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், வெலிகம விஹாரையொன்றில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருத்தணி அருகே 10ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால், மண்ணெண்ணெய் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த மேல் பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி முரளி. இவரது மகள் குமாரி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார்.
நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் 187 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார். குறிப்பாக சமூக அறிவியல் பாடத்தில் அவர் 10 மதிப்பெண்கள் மட்டும் பெற்று தோல்வி அடைந்தார்.
இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். வீட்டில் யாரும் கவனிக்காத போது, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து குடித்துள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மாணவி குமாரி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பொதட்டூர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான்கு ஆண்டுகளாக காதலித்த பெண்ணை சாதியைக் காட்டி காதலன் திருமணம் செய்ய மறுத்ததார். இதனால் அந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த கொண்ட சம்பவம் கலபுர்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கலபுர்கியில் உள்ள காந்தி நகரைச்ச் சேர்ந்தவர் கிரண். கலபுர்கி புறநகர் பகுதியில் உள்ள யாலாலிங் காலனியைச் சேர்ந்தவர் புஷ்பா. இவர் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்தார்.
இந்த நிலையில் கிரணும், புஷ்பாவும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். புஷ்பா வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், இளைஞரின் காதலை அவரது வீட்டினர் ஏற்கவில்லை. ஆனாலும், புஷ்பாவுடன் கிரண் பழகி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கிரணிடம் புஷ்பா வலியுறுத்தி வந்தார். தனது குடும்பத்தினர் சாதியைக் காரணம் காட்டி திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால், எனக்கு திருமணமே வேண்டாம் என்று கிரண் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில், கிரணை சந்தித்த புஷ்பா, மீண்டும் திருமணத்திற்கு வலியுறுத்தியுள்ளார். ஆனால், சாதி பிரச்சினையை மீண்டும் கிரண் கூறியுள்ளார்.
இதனால் மனமுடைந்த புஷ்பா, வீட்டில் நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பல்கலைக்கழக காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து புஷ்பா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், புஷ்பா தற்கொலை விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாதியைக் காரணம் காட்டி திருமணம் செய்ய மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் கலபுர்கியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் பரீட்சை நேரம் முடிவடைவற்கு முன்னதாக மாணவர்களிடம் இருந்து விடைத்தாள்களை பெற்றுக் கொண்டமை தொடர்பில் பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் க.பொத.சாதாரணதரப் பரீட்சையின் முதல் நாள் சமய பாட பரீட்சையின் போது பரீட்சை நிறைவடைவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை மேற்பார்வையாளர் விடைத்தாள்களை பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், பரீட்சை நிலையம் ஒன்றில் உள்ள மாணவர்கள் சிலரிடமிருந்து இது தொடர்பில் வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமனைக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றிருந்தது.
குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வலயக் கல்விப் பணிமனை, பரீட்சை நிலையத்தில் மேற்பார்வையாளராக கடமையாற்றிய வவுனியா வடக்கு வலயத்தைச் சேர்ந்த ஆசிரிய ஆலோகர் ஒருவரை இடைநிறுத்தியுள்ளது.
மேலும், சம்பவத்தின் போது குறித்த நிலையத்தில் உதவி மேற்பார்வையாளராக கடமையாற்றியவரை மேற்பார்வையாளராக நியமித்துள்ளதுடன், புதிதாக உதவி மேற்பார்வையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்(Teaching Hospital Jaffna) குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10.05.2024) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11.05.2024) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சூரிய குடும்பத்திற்கு (Solar System) அருகில் பூமியை விட இரு மடங்கு பெரிய பூமியை ஒத்த கிரகமொன்றினை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.
சூரிய குடும்பத்திற்கு அப்பால், உயிரினங்கள் வாழக்கூடிய வேறு கிரகங்கள் தொடர்பில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், நமது சூரிய குடும்பத்திற்கு அருகிலேயே மற்றொரு பூமியை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த கிரகமானது நமது பூமியில் இருந்து சுமார் 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் அடர்ந்த வளிமண்டலத்துடன் இருப்பதாகவும் பூமியை விட 8 மடங்கு எடை கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கிரகத்திற்கு சூப்பர் எர்த் (super Earth) என்றும் 55 கேன்கிரி இ (55 Cancri e) என்றும் பெயர் சூட்டியுள்ள விஞ்ஞானிகள், இது ஒரு நட்சத்திர மண்டலத்திற்கு அருகில் மிகவும் ஆபத்தான முறையில் சுற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
நமது பூமி ஒருமுறை சுற்றிவர 24 மணி நேரம் ஆகும் நிலையில், விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்துள்ள சூப்பர் எர்த் வெறும் 18 மணி நேரத்தில் தனது சுற்றுவட்டப்பாதையை நிறைவு செய்வதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், சூப்பர் எர்த்தின் வளிமண்டலம் கார்பன் டை ஆக்ஸைடு அல்லது கார்பன் மோனாக்சைடு நிறைந்ததாக இருக்கலாம் என்றும், நீராவி மற்றும் சல்பர் டை ஆக்ஸைடு போன்ற பிற வாயுக்களை கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நமது பூமியைப் போலவே நிரந்தரமாக பகலிரவை கொண்டிருக்கும் இந்த கிரகத்தின் மேற்பரப்பில் மக்மா பெருங்கடல் சூழ்ந்திருந்தாலும், அதன் கொதிநிலை 4,200 டிகிரி பாரன்ஹீட் என்பதால், இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ வாய்ப்பு இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதும், அடர்த்தியான வளிமண்டலத்துடன் கூடிய இந்த கிரகத்தை கண்டுபிடித்திருப்பதன் மூலம், பால்வெளியில் இதுபோன்று பல்வேறு கிரகங்கள் இருப்பதற்கான சாத்தியங்களை ஆராய உதவியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், சூப்பர் எர்த் கிரகத்தை ஆராய்வதன் மூலம், நமது பூமி மற்றும் செவ்வாய் போன்ற கிரகங்களின் ஆரம்ப காலக்கட்டங்களை அறிந்து நுண்ணறிவு பெற உதவும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு – ஹோமாகம(Homagama) நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று (10.05.2024) இடம்பெற்றுள்ளது.
ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்ற நிலையில் மரங்களை கட்டிப்பிடித்து ஒரு வாலிபர் உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கானாவை சேர்ந்தவர் அபுபக்கர் தாஹிரு. 29 வயதான இவர் வனவியல் ஆர்வலர் ஆவார். இவர் ஒரு மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட இந்த சாதனை தொடர்பான வீடியோவை உலக கின்னஸ் சாதனை நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.
அதன்படி சராசரியாக ஒரு நிமிடத்திற்கு 19 மரங்களை கட்டிப்பிடித்துள்ளார். இந்த சாதனையானது டஸ்கெகி தேசிய வனப்பகுதியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் பகிரப்பட்ட இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 9 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலானது.
அபுபக்கரின் சாதனைக்காக சமூக ஊடக பயனர்கள் அவரை பாராட்டினர். சாதனை பற்றி அபுபக்கர் கூறுகையில், இந்த உலக சாதனையை அடைவது நம்ப முடியாத அளவுக்கு வெகுமதி அளிக்கிறது.
இது நமது சுற்றுச்சூழல் அமைப்பின் மரங்களின் முக்கிய பங்கை எடுத்து காட்டுவதற்கான ஒரு அர்த்தமுள்ள செயலாகும் என்றார்.
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உணவகத்துடன் கூடிய வெதுப்பகம் ஒன்றின் கழிவு நீரை சீரற்ற வகையில் வீதிக்கு வெளியேற்றிய உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுகப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
வவுனியா, புகையிரத நிலைய வீதி, வைரவபுளியங்குளத்தில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுடன் கூடிய வெதுப்பகத்தின் கழிவு நீரானது தாங்கி ஒன்றிற்கு சென்று அங்கிருந்து முறையான ஒழுங்கமைப்பு இன்றி வாய்கால் ஊடாக வீதிக்கு வந்துள்ளது.
இவ்வாறு தொடர்ச்சியாக வந்த நிலையில் அப் பகுதியில் துர்நாற்றம் வீசியதுடன், அருகில் வீதியோரமாக மரக்கறி வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதனையடுத்து மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் பல தடவை வெதுப்பக கழிவு நீரை வீதிக்கு விட வேண்டாம் எனக் கூறியும் அவர்கள் கவனம் செலுத்தாமையால் ஆத்திரமடைந்த மரக்கறி வியாபார நிலைய உரிமையாளர் குறித்த கழிவு நீரை அள்ளி வெதுப்பகம் முன்பாக ஊற்றியுள்ளதுடன், இது தொடர்பில் வவுனியா நகரசபை சுகாதார பரிசோதகர்களுக்கும் தெரியப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த சுகாதார பரிசோதகர்கள் வெதுப்பகத்தின் கழிவு நீர் முகாமைத்துவத்தை பார்வையிட்டதுடன், அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி குறித்த கழிவு நீர் முகாமைத்துவத்தை சீர் செய்து விட்டு வெதுப்பகத்தை திறக்குமாறு கூறி அதனை பூட்டினர்.
இதன்பின்னர், குறித்த கழிவு நீர் வெளியேற்றும் செயன்முறை சீர் செய்யப்பட்டதுடன், சுகாதார பரிசோதகர்களின் அனுமதியுடன் குறித்த வெதுப்பகம் மீளவும் திறக்கப்பட்டது.
ஐஸ் போதைப் பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்ட மூவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் நேற்று (10.05) தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் எச்எம்.ரிஸ்வி தலைமையிலான பொலிஸ் இரகசிய தகவலையடுத்து அவர்கள் கடந்த 28 ஆம் திகதி செட்டிகுளத்தில் வசிக்கும் 35 வயது இளைஞர் ஒருவரை 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
நீதிமன்ற அனுமதி பெற்று குறித்த இளைஞர் பொலிசாரால் தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் உக்குளாங்குளம், மில் வீதி பகுதியில் வைத்து செட்டிகுளத்தில் வசிக்கும் 36 வயதுடைய இளைஞரும் 12 இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இருவருக்கும் ஐஸ் போதைப் பொருளை விநியோகித்ததாக வவுனியா நகரப் பகுதியில் வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வரும் மதவுவைத்த குளத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன், அவருடைய வீட்டில் இருந்து ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த மூவரையும் வவுனியா பொலிசார் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
கனடாவில் இந்திய பெண் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் கணவருடன் வாழ்ந்துவந்த கனடாவில் கேரளப் பெண்ணொருவரே இவ்வாறு சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட கேரளப் பெண் டோனா சாஜா என்ற 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவர் உள்ளிட்ட இருவரும் எட்டு வருடங்களாக கனடாவில் கணக்காளர்களாகப் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று முன்தினம், அவர்கள் வாழ்ந்துவந்த வீடு பூட்டிக் கிடப்பதை கண்டு அயலவர்கள் பொலிஸாாருக்கு தகவலளித்துள்ளனர். இதனையடுத்து, வீட்டுக்குள் நுழைந்த பொலிஸாார் டோனா இறந்து கிடப்பதைக் கண்டுள்ளனர்.
இதன்போது, உயிரிழந்த பெண்ணின் கணவரை காணவில்லை எனவும், ஆகவே, அவரைத் தேடும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு மயிலாடுதுறையில் காதலனிடம் சண்டையிட்டுக்கொண்டு காதலி தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி என்பவரின் 24 வயதான மகன் ஆகாஷ்.
இவர், பூம்புகார் அருகே உள்ள மேலையூர் அரசு கலைக்கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு ஆண்டு படித்து வருகிறார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்சப்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த நாகப்பன் என்பவரின் 20 வயதான மகள் சிந்துஜா.
இவர், மயிலாடுதுறையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகி வந்ததாக மாணவி சிந்துஜா சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து காதலர்கள் இருவரும் நேற்று பூம்புகார் கடற்கரைக்கு சென்றுவிட்டு மீண்டும் மயிலாடுதுறைக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆகாஷ் பழகி வரும் வேறு பெண்ணிடம் எந்த தொடர்பும் வைத்துகொள்ளகூடாது என்று சிந்துஜா கூறியதற்கு ஆகாஷ் மறுப்பு தொவித்ததாக கூறப்படுகிறது.
அதனை அடுத்து மயிலாடுதுறை பாலக்கரை என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை திடீரென நிறுத்த சொன்ன சிந்துஜா, தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். தனது கண் முன்பு காதலி தீக்குளித்ததால் அதிர்ச்சி அடைந்த காதலன் ஆகாஷ் பதறித்துடித்தபடி அவரை காப்பாற்ற முயன்றார்.
அப்போது ஆகாஷ் மீதும் தீப்பற்றியது. இதில் இருவரும் பலத்த தீக்காயம் அடைந்து கீழே சரிந்துள்ளனர். இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்கள் இருவரையும் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆகாஷ் 60 சதவீத தீ காயங்களும், சிந்துஜா 40 சதவீதம் தீ காயங்களுடன் இருந்த நிலையில் இருவரையும் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.
அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் இருவரிடமும் மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் வாக்குமூலம் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இதுதொடர்பாக மயிலாடுதுறையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி திடீரென தீக்குளித்ததும், அவரை காப்பாற்ற முயன்றபோது காதலனும் தீக்காயம் அடைந்த சம்பவம் மயிலாடுதுறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளைஞரிடம் நூதன முறையில் பணத்தை பெற்று ஏமாற்றிய பெண் உள்பட மூன்று இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீப நாட்களாகவே வடமாநில கும்பல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திட்டம் போட்டு சதித்திட்டம் தீட்டி கொலை, கொள்ளை மற்றும் ஆன்லைன் மோசடியில் ஈடுபடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையரக பகுதிகளில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிப்பதும் பெரும் சவாலாக இருந்து வரும் வருகிறது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் அருண் (வயது 26). இவர் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வருகின்றார். கடந்த சில நாட்களாக அருண் ஆன்லைனில் வேலை தேடி வந்த நிலையில்.கடந்த மாதம் 31ம் தேதி இவரது செல்போன் எண்ணுக்கு லிங்க் ஒன்று வந்துள்ளது.
அதில் வேலை வாய்ப்பு குறித்து பதிவிட்டிருந்ததால் உடனே அருண் அந்த லிங்க்கை கிளிக் செய்துள்ளார். அப்போது அந்த லிங்க்கில் தங்களுக்கு வேலை வேண்டும் என்றால் தாங்கள் சொல்லும் டாஸ்க்கை நிறைவு செய்ய வேண்டும் என குறிப்பிட்டி இருந்தது.
இதனை நம்பிய அருண் டாஸ்க்கை செய்ய தொடங்கிய போது ஒவ்வொரு டாஸ்க்கும் ஒரு தொகையை செலுத்த வேண்டும் அப்போது தான் டாஸ்க்கின் இறுதி கட்டத்திற்கு செல்ல முடியும் என குறிப்பிட்டிருந்ததால் அருண் லிங்கில் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கில் சிறுக சிறுக 5 லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளார்.
பின்னர் அதில் குறிப்பிட்டது போல் எந்த வேலை வாய்ப்பும் கிடைக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அருண் இது குறித்து கடந்த 31ஆம் தேதி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அருண் செலுத்திய வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரணை நடத்தினர். பின்னர் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் செல்போன் எண்ணை வைத்து அவர்களது இருப்பிடத்தை கண்டுபிடித்த தனிப்படை போலீஸார் அங்கு சென்று பெண் உட்பட மூன்று பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர்கள் செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த நல்லம்பட்டி தேஜா (22) விஜய் (24), ஹைதராபாத்தை சேர்ந்த சரஸ்வதி (23) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்ட கும்பலுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இந்த மோசடியில் வட மாநிலத்தை சேர்ந்த கும்பல் ஒன்று மூளையாக செயல்பட்டதும், மேலும் வடமாநில கும்பல் இவர்களது வங்கி கணக்கில் பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து போலீஸார் மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 15 போலி ஏடிஎம் கார்டு, 3 செல்போன் மற்றும் 15 வங்கி புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய வடமாநில கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த நிலையில் அரும்பாக்கம் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாய்க்கடியால் அவதிப்பட்ட சிறுமி முதலில் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாயின் உரிமையாளர், குழந்தைக்காகும் முழு மருத்துவ செலவையும் தானே ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டார்.
அதன் அடிப்படையில் இருவரும் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவரே சிகிச்சைக்கு ஏற்பாடுகளை செய்தார். சிறுமி மே 6ம் தேதி அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து 3 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சிறுமிக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்வதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி ஆயிரம் விளக்கு பகுதியில் அப்போலோ மருத்துவர்கள் இன்று பிற்பகல் 2 மணிநேரம் பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்தனர்.
அதன் பின்னர் குழந்தை தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறது. சிறுமிக்கு ராபீஸ் நோய் தாக்குதல் வராமல் பாதுகாக்கப்பட்ட, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரம் வரை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறவும் மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன் மாநகராட்சி பூங்காவில் பணிபுரிபவரின் 5 வயது மகளை நாய் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. அச்சிறுமி தனியார் மருத்துவமனையில் மிக மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை ஆயிரம் விளக்கு மாதிரி பள்ளி சாலையில் மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணிபுரிபவர் ரகு .
இவரது மனைவி சோனியா மற்றும் ஐந்து வயது மகள் சுதக்ஷா உடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார். பூங்காவில் சோனியாவும் , மகளும் சைக்கிள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அதே பகுதியில் வசித்து வரும் புகழேந்தி தான் வளர்க்கும் இரண்டு நாய்களை அழைத்து வந்துள்ளார்.
அவருடைய 2 நாய்களும் சிறுமி சுதக்ஷாவை சுத்துப்போட்டு மாறி மாறி கடிக்கத் தொடங்கின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வந்த தாய் சோனியா நாய்களிடமிருந்து தனது மகளை காப்பாற்ற நினைத்தபோது அவரையும் நாய் கடித்து குதறிவிட்டது.
இதனையடுத்து சிறுமியை போராடி மீட்டு சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாயின் உரிமையாளர் புகழேந்தியை ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர் .
பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவியை வீடு புகுந்து வாலிபர் கழுத்தைத் துண்டித்துப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், குடகு மாவட்டம், மடிகேரி தாலுகாவிற்குட்பட்ட சோம்வார்பேட்டையில் உள்ள சுர்லாபி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி, முத்தாக்கியின் ஒரே மகள் மீனா(14).
இவர் சூர்லப்பிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மட்டும் படித்து வந்தார். பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மீனா தேர்ச்சி பெற்றிருந்தார். அவருக்குப் பள்ளியில் பரிசும் வழங்கப்பட்டது.
இந்த மகிழ்ச்சியில் வீட்டில் இருந்த மீனாவை ஓம்காரப்பா(30) என்ற வாலிபர் வீடு புகுந்து இழுத்துச் சென்றுள்ளார். பெற்றோர் முன்னிலையில் அவர் மீனாவை அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தலையைத் துண்டித்து வீசியுள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குடகு கூடுதல் எஸ்.பி- சுந்தர்ராஜ் விரைந்து சென்று கொலை குறித்து விசாரணை நடத்தினர். இதன்பின் மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சோம்வார்பேட்டை போலீஸார் அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மேலும், தடய அறிவியல் குழுவினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.
மேலும் எதற்காக இக்கொலை நடைபெற்றது என்று போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது மைனர் பெண்ணான மீனாவிற்கும், ஓம்காரப்பாவிற்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த சமூகநலத்துறை அதிகாரிகள் மீனாவின் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவருக்கு வயது 18 வயது பூர்த்தியாகவில்லை என்பது தெரிய வந்தது.
இதனால், 18 வயது நிரம்பிய பிறகே மீனாவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது பெற்றோரிடம் வலியுறுத்தியுள்ளனர். அதன்படி செய்வதாக மீனாவின் பெற்றோர் உறுதியளித்தனர். இதனால் சமூக நலத்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
தனது திருமண நிச்சயதார்த்தம் நின்று போன ஆத்திரத்தில் இருந்த ஓம்காரப்பா, சில மணி நேரங்களிலேயே மீனாவை கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாகியுள்ள அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மகிழ்ச்சியில் இருந்த மாணவியை தலையை துண்டித்து வாலிபர் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.